பழமொழி கூறும் பாடம்

தேமொழி.

பழமொழி:  திங்களை நாய்குரைத் தற்று

 

நெறியால் உணராது நீர்மையும் இன்றி
சிறியார் எளியரால் என்று – பெரியாரைத்
தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
திங்களை நாய்குரைத் தற்று.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 

பதம் பிரித்து:
நெறியால் உணராது நீர்மையும் இன்றி
சிறியார் எளியரால் என்று பெரியாரை
தங்கள் நேர் வைத்து தகவு அல்ல கூறுதல்
திங்களை நாய் குரைத்து அற்று

பொருள் விளக்கம்:
உலகநெறிமுறை வழி அறிந்து கொள்ளாது, தகுதியும் இல்லாத அறிவற்ற சிறியோர், எளிமையாகத் தோற்றமளிக்கும் அறிவுடைய பெரியோரை தங்களையும்விடத் தாழ்மையானவர் எனக் கருதிக்கொண்டு, தங்கள் முன் அவர்களை இருக்கச் செய்து தகுதியற்ற சொற்களைக் கூறுவது, தண்ணொளி வீசும் நிலவை நாய் இளக்காரமாக நினைத்து அதனை நோக்கிக் குரைப்பதைப் போன்ற செய்கையாகும்.

பழமொழி சொல்லும் பாடம்: பெரியோரை எளியோராக நினைத்து தகுதியற்ற வார்த்தைகளைச் சொல்லும் கீழோரால் பெரியோர் புகழ் மங்குவதைவிட, அவ்வாறு பேசும் சிறியோரது அறியாமையையே வெளிப்படும்.

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். (குறள்: 97)

பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொற்கள், அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும் என வள்ளுவர் குறிப்பதை உணர்பவர், தனது தகுதியைத் தாழ்த்திவிடும் தகாத சொற்களை உரைக்க விரும்பமாட்டார்கள்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *