இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(149)
–சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே!
இனிய வணக்கங்கள்.
அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடி வந்து விட்ட அடுத்ததொரு வாரம், கைவிரல்களின் அசைவினால் உள்ளத்தின் உணர்வுகளை மடல் மூலம் கொட்டித் தீர்க்கும் அவா. ஆமாம் இவ்வார மடலுடன் மீண்டும் உங்களோடு உறவாடுகிறேன்.
கடந்தவாரம் இங்கிலாந்திலே ஒரு முக்கியமான வாரம். ஆமாம், தேர்தலும் அதன் முடிவின் படி இனிவரும் ஐந்து வருட காலத்திற்கு யார் இந்த இங்கிலாந்தில் அரசாட்சி எனும் தேரை ஓட்டிச் செல்லப் போகிறார்கள் என்னும் கேள்விக்கு விடை பகிறப்பட்ட வாரம்.
சுருக்கமாகச் சொன்னால் இங்கிலாந்து பாராளுமன்றத்திலே 650 பாரளுமன்ற உறுப்பினர்கள். இங்கிலாந்து சட்ட விதிகளின் படி ஒரு கட்சிக்கு அரசமைக்கும் உரிமை அது தேர்தலில் 326 ஆசனங்களைக் கைப்பற்றினால் தான் கிடைக்கிறது.
கடந்த தேர்தலில் இங்கிலாந்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியோ அன்றி லேபர் கட்சியோ இந்த 326 ஆசங்கள் எனும் பலத்தை பெற்றிருக்கவில்லை. விளைவு கூட்டரசாங்கம் அமைப்பதன் மூலம் தான் இந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி அமைக்கக்கூடிய நிலமை இருந்தது.
இவற்றில் கன்சர்வேடிவ் கட்சிதான் அதிக இடங்களைப் பெற்றிருந்தது எனவே மூன்றாவதாக 50 க்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி இருந்த லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியுடன் இணைந்து கன்சர்வேடிவ் கட்சி கூட்டரசாங்கம் அமைத்தது. டேவிட் கேமரன் பிரதம மந்திரியானர். லிபரல் டெமாக்கிரட்ஸ் தலைவரான நிக் கிளேஹ் பிரதிப் பிரதமரானார்.
அது பழையகதை சரி இனி இந்த 2015 புதுக்கதைக்கு வருவோம் …
தேர்தல் தினமான மே 7ம் தேதி வரை எடுக்கப்பட்ட பொதுக் கருத்துக் கணிப்புகள், மற்றும் ஊடகங்கள், பிரபல அரசியல் அவதானிகள் அனைவருமே இத்தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் இம்முறையும் நிச்சயம் கூட்டரசாங்கம் தான் அமையும் என்று அடித்துக் கூறினர். சரி கூட்டரசாங்கம் எனில் யார் யாருடன் கூட்டரசாங்கம் அமைக்கப் போகிறார்கள் எனும் கேள்வி அனைவருடைய மனங்களிலும் தொக்கியிருந்தது.
பிரதான கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தான் பெரும்பான்மை பலமிக்க கட்சிகளாகும் இவர்களுடன் யார் சேரப் போகிறார்கள்?
அடுத்து அனைவருக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை இதுநாள்வரை லேபர் கட்சியின் கோட்டையாக விளங்கிய ஸ்காட்லாந்து இம்முறை முற்று முழுவதுமாக ஸ்காட்லாந்துக்கு தனிநாடு கோரி நிற்கும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் வசமாகி விடும் என்பதே!
அக்கட்சியின் தலைவரோ திரும்பத் திரும்ப இனியும் இங்கிலாந்தில் டேவிட் கேமரன் ஆட்சி அமைய விடக்கூடாது நாம் லேபர் கட்சியுடன் இணைந்து அரசமைப்போம் என்று பகிரங்கமாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.
அடித்தது அதிர்ஷ்டம் கன்சர்வேடிவ் கட்சிக்கு, பிடித்துக் கொண்டது தன் வாதத்தை. “மக்களே நீங்கள் லேபர் கட்சிக்கு வாக்களித்தால் பின் வாசல் வழியே ஸ்காட்லாந்து தேசிய கட்சியை அரச கதிரையில் அமர்த்திவிடுவீர்கள். லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் ஸ்காட்லாந்து தேசியவாதிகளின் கைப்பாவையாகி விடுவார் விளைவு ஐக்கிய இராச்சியம் துண்டாடப்பட்டு விடும்” என்பதைத் தாரக மந்திரமாக்கி அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தமக்குச் சாதகமான ஊடகங்களிலும் ஊதத் தொடங்கினார்கள்.
ஏற்கனவே ஸ்காட்லாந்து பிரிந்து போவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு நடந்ததால் குழம்பிப் போயிருந்த மக்கள் மனதில் பீதி உருவாகத் தொடங்கியது. கன்சர்வேடிவ் கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைத்ததால் ஏற்கனவே தமது செல்வாக்கை முற்றாக இழந்திருந்தனர் லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியினர்.
யூகிப் எனும் இங்கிலாந்து விடுதலைக் கட்சியினருக்கு வாக்களித்தால் மீண்டும் டேவிட் கேமரனின் ஆட்சி அமையும். பொதுநலத்துறைகளின் மீதான நிதிக்குறைப்பின் மூலம் அடிமட்டத் தொழிலாளர்களே பாதிக்கப் படுவார்கள். கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் முதலாளிகள் தமது பணப்பலத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் நிறுவனங்களுக்கு விலை போய்விடும் போன்ற வாதங்களை லேபர் கட்சியினர் முன் வைத்தனர். அதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை முற்று முழுதாகச் சிதைத்தவர்கள் பழைய லேபர் கட்சியினரே, நாட்டின் பொருளாதாரம் சீராகி வரும் வேளையில் மீண்டும் லேபர் கட்சியிடம் பொறுப்பைக் கொடுத்து நாட்டின் வளர்ச்சியைப் பின் தள்ளப் போகிறீர்களா ? என்றனர் கன்சர்வேடிவ் கட்சியினர்.
யூகிப் எனும் கட்சியினரின் ஆதரவுப் பெருக்கத்துக்குக் காரணம் மக்களுக்கு ஐரோப்பிய யூனியனின் மீது இருந்த சந்தேகமே. இச்சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. இவ்வதிகரிப்பு மக்கள் மனதில் நியாயமானதொரு பீதியைக் கிளப்பி விட்டிருந்தது. இப்படியான சூழல்களுக்கு மத்தியில் ஒருவாறு மே 7ம் திகதி தேர்தல் நடந்து முடிந்தது.
முடிவு!!!
யாருமே எதிர்பார்க்காத வகையில் டேவிட் கேமரனின் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 332 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையமைத்து விட்டது. பொதுக்கருத்துக் கணிப்பு நிறுவனங்கள், அரசியல் அவதானிகள், ஊடகங்கள் அனைவரின் முகங்களிலும் அளவற்ற அசடு வழிந்தது.
லேபர் கட்சி எதிர்பார்ப்புகளுக்கு முற்றும் மாறாக மோசமான தோல்வியைத் தழுவியது.
லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த பாராளுமன்றத்தில் 50 க்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில் இத்தேர்தலில் எட்டே எட்டு ஆசனங்களை மட்டுமே கைப்பற்றி படு தோல்வியடைந்தது. இக்கட்சியின் பல முன்னணித் தலைவர்கள் தோல்வியடைந்தனர்.
ஸ்காட்லாந்து தேசிய கட்சியினர் அங்கு போட்டியிட்ட 59 ஆசனங்களில் 56 ஆசனங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டினர்.
யூகிப் எனும் கட்சியினர் எதிர்பார்ப்புக்கு முரணாக ஒரேயொரு ஆசனத்தை மட்டும் கைப்பற்றினர்.
விளைவு !!!
2015ம் ஆண்டு இங்கிலாந்துத் தேர்தல் மூன்று கட்சித் தலைவர்களைக் காவு கொண்டு விட்டது. ஆமாம் லேபர் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் , லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சித் தலைவர் நிக் கிளெஹ் , யூகிப் தலைவர் நைஜல் ப்ராஜ் ஆகிய மூவரும் சடுதியாக தாம் தமது கட்சியின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்தார்கள்.
சரி அரசியல் அறிவில் பூஜ்ஜியமான இந்தப் பாமரனின் கணிப்பில் இத்தேர்தல் முடிவுகளின் காரணம் ?
கன்சர்சேடிவ் கட்சியின் வெற்றிக்கு …
இவர்கள் தமது தேர்தல் பிரசாரத்தை மிகவும் புத்திசாலித்தனமாக முன்னெடுத்தார்கள்
லேபர் கட்சியினர் அரசமைக்க ஒரேவழி ஸ்காட்லாந்து பிரிவினைவாதிகளுடன் சேர்ந்த கூட்டரசாங்கமே எனும் வாதத்தில் வெற்றி கண்டார்கள்
அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்தின் பொருளாதாரச் சூழல் தேர்தல் சமயத்தில் இவர்களுக்கு ஆதரவாக இருந்தமை
லேபர் கட்சியின் தோல்விக்கு …
இக்கட்சியின் தலைவரான எட் மில்லிபாண்ட் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை
இக்கட்சி தன்னை இடதுசாரிக் கொள்கைகளின் வழி இழுத்துச் சென்றமை
இக்கட்சி சிறு தொழில் செய்வோரையும், நாட்டில் செல்வத்தை ஈட்டும் தொழிலதிபர்களையும் எதிர்ப்பது போன்றதோர் உணர்வை எழுப்பியமை.
ஸ்காட்லாந்தில் கடந்த தேர்தலில் முப்பதுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றிய இவர்கள் இப்போது ஒரு ஆசனத்தைக் கைப்பற்றுவது கூட சந்தேகம் எனும் எண்ணம் மக்களிடையே வலுப்பெற்றது
லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியின் தோல்விக்கு …
கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாணவர்கள் சர்வகலாசாலை செல்கையில் செலுத்தும் கட்டணத்தை அறவே ஒழிப்பது என்று அறிவித்து விட்டு பின்பு கூட்டரசாங்கத்தில் இணைந்ததும் அதை அப்படியே கைவிட்டதும்
அடிப்படையில் இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த இவர்கள் 2010 தேர்தலின் பின்னால் முழு வலதுசாரிகளான கன்சர்வேடிவ் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்தது இவர்களின் பல ஆதரவாளர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இவர்களது பிரசாரத்தில் கடந்த கூட்டரசாங்கத்தின் வெற்றி பெற்ற நடவடிக்கைகளில் தங்களுக்குரிய பங்கைச் சரிவர மக்களுக்கு விளக்காமல் விட்டது.
ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் வெற்றி அனைவரும் எதிர்பார்த்தது போலவே மைந்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஸ்காட்லாந்து பிரிந்து போவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு ஸ்காட்லாந்து மக்களிடையே தேசியவாத உணர்ச்சியை உசுப்பி விட்டதே இவர்களது அதீத வளர்ச்சிக்குக் காரணம் எனலாம்.
யூகிப் எனும் கட்சியின் நிலை அவர்களுக்கு ஓரளவு வெற்றி என்றுதான் கூற வேண்டும். ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றி இருந்தாலும் நாடளாவிய ரீதியில் ஏறத்தாழ இவர்களுக்கு நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
இது இப்போது ஒரு புது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.
இரண்டு இலட்சத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற ஸ்காட்லாந்து தேசிய கட்சி 56 ஆசனங்களைப் பெற்றுள்ளன, ஆனால் அதேநேரம் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற யூகிப் ஒரேயொரு ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளது. இது பலரை விகிதாசார முறையில் ஆசனங்கள் பிரித்தளிக்கப்பட வேண்டும் எனும் கோஷத்தை முன்வைக்கப் பண்ணியுள்ளது.
அடுத்து வரும் ஐந்து வருட காலங்கள் நம் பிரதமர் டேவிட் கேமரன் எமை எங்கே கொண்டு செல்லப்போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமோ ?
“மக்கள் குரலே மகேசன் குரல் ” எனும் கோட்பாட்டை பல அரசியல்வாதிகள் மறந்து போய்விடுகிறார்களோ ?
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan