Blog

  • புறநானூற்றில் பொருள்வேறுபாடு!

    புலவர் இரா. இராமமூர்த்தி.

     

    சங்ககால இலக்கியங்களுள் அறிஞர் பலரின் உள்ளம் கவர்ந்த பாடல் ஒன்று உண்டு! அது வாகைத்திணையின், துறையாகிய ‘மூதின் முல்லை’ யைச் சார்ந்தது! புறநானூற்றின் 191, 279, 288, 306, 308, 312 ஆகிய எண்ணுடைய பாடல்கள் , மூதின்முல்லை என்ற துறையைச் சார்ந்தவை! இவற்றுள் 279-ஆம் பாடலில் பழங்குடியில் பிறந்த பெண்ணின் வீரம் மிக்க பேருள்ளம் வெளிப் படுகிறது!

    அந்தப் பாடலில் பலநாள் நடைபெற்ற ஒரு போரைப் பற்றிய நிகழ்வுகள் குறிக்கப் பெற்றுள்ளன! அனைவரும் அறிந்து போற்றிய பாடல்தான் அது! இப்பாடலை, அக்காலச் சான்றோர்கள், பாண்டித்துரைத் தேவர், மு. இராகவையங்கார், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதி போன்றோர் மிகவும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அப்பாடலின் சிறப்பை உணர்ந்த ஐயனாரிதனார் தம் புறப்பொருள் வெண்பா மாலையில்,

    ”வந்த படைநோனாள் வாயின் முலை பறித்து
    வெந்திற லெஃக மிறைக் கொளீஇ – முந்தை
    முதல்வர்கல் தான்காட்டி மூதின் மடவாள்
    புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு! ” (பு.வெ.மா.175)

    என்று மூதின்முல்லைத் துறைக்கு இலக்கணம் வரைந்துள்ளார்! இதனைத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் வெட்சித் திணைத் துறைகளுள் ‘மறங்கடை கூட்டிய மகளிர் நிலை கூறியதற்கும், ‘வாள்வாய்த்துக் கவிழ்தல் என்பதற்கும் மேற்கோள் – என்று குறித்துள்ளார்!

    tamil-sangam-war

    அப்புகழ் பெற்ற பாடல்:-
    பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்
    திணை: வாகை துறை: மூதின் முல்லை

    கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
    மூதின் மகளிர் ஆதல் தகுமே;
    மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
    யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
    நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன், 5
    பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
    இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
    வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
    பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
    ஒருமகன் அல்லது இல்லோள், 10
    செருமுக நோக்கிச் செல்க என விடுமே!

    இப்பாடலுக்கு பழங்காலத்தில் புறநானூற்று உரையாசிரியர் ஒருவகைப் பொருள் உரைத்தனர்! டாக்டர். உ.வே. சா. பதிப்பில், ‘மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை யானை எறிந்து, காலத்து ஒழிந்தனனே” என்ற தொடருக்கு, ‘நேற்றைய முன் நாள் நடந்த போருக்குச் சென்ற இவள் தமையன், யானையுடன் போராடிப் போர்க்களத்தில் மாண்டனன்’ என்ற பொருள் உள்ளது! அடுத்து, ‘நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், பெருநிரை விலக்கி, ஆண்டுப் பட்டனனே ‘ என்ற தொடருக்கு , ”நேற்று நடந்த போரில் இவள் கணவன் பெரிய குதிரைப்படைகளை விலகியோடச் செய்து, அப்போர்க்களத்திலேயே உயிரிழந்தான்”என்ற பொருள் உள்ளது! ‘

    அடுத்த பாடலடிகளுக்கு – ‘தன் அண்ணனையும் கணவனையும் இழந்த அப்பெண், இன்றும் போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டாள்! மிகவும் விருப்பம் கொண்டாள்! போர்க்களத்துக்கு யாரை அனுப்புவது? என்றெண்ணி மயங்கினாள்! தனக்காதரவாகத் தான் பெற்ற ஒரேஒரு மகன்மட்டுமே உள்ளான் என்பதையும் எண்ணி மயங்கினாள்! அந்தச் சிறுமகனையும் எண்ணெய் பூசித் தலைவாரி, வெள்ளைநிற ஆடை அணிவித்து, வேலைக் கையில் கொடுத்துப் ”போர்முனை நோக்கிப் போ” என்று கூறினாளாம் என்னே அவள் வீரம்!

    அக்காலப் பெண்டிர் திருமணம் ஆனபின் கணவனுடன் அவன் இல்லத்தில்தான் வாழ்வாள் என்பதற்க்குச் சங்க இலக்கியங்களில் ஆதாரங்கள் பல உள்ளன! பிறந்த வீட்டில் பொற்கிண்ணத்தில், பாற்சோறு பிசைந்து ஊட்டும் செவிலியைப் புறக்கணித்து, பொற்சிலம்பு கலகலக்க ஓடோடிச் சென்று அவள் பெற்றோரின் ஏவல்களை மறுத்து விளையாடிய சிறுவிளையாட்டி அவள்! செல்வவளம் மிக்க வீட்டில் பிறந்த அப்பெண், திருமணம் ஆனா பிறகு தன் புகுந்த வீட்டில் எவ்வாறு வாழ்கிறாள் என்று பார்த்து வருமாறு செவிலித்தாயைப் பெற்றதாய் அனுப்புகிறாள்! அவளோ, பெண்ணின் புகுந்த வீட்டில் அப்பெண் குடும்பம் நடத்தும் சிறப்பைப் பெரிதும் பாராட்டுகிறாள். கணவனின் குடும்பத்தின் வறுமையை ஏற்றுக்கொண்டு, தன் பிறந்த வீட்டின் செல்வவளத்தைச் சிறிதும் கருதாமல் ஒருவேளை பட்டினியும், மறு வேளை சிறிதே உணவும் உண்டு வறுமையை ஏற்று வாழும் மெல்லிய மன வலிமையை உடையவளாய் அன்பும், இன்பமும் பொங்கும் இன்முகத்துடன் வாழ்கிறாள்!’

    இது நற்றிணையில் அமைந்த”பிரசங்கலந்த” எனத்தொடங்கும் 110-ஆம் பாடலின் பொருள். இப்பாடலில் செவிலி ,
    ”ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி
    அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்?” என்று வியந்து போகிறாள்!

    ”கொண்ட கணவன் குடி வறனுற்றெனக்
    கொடுத்ததந்தை கொழுஞ்சோ றுன்னாள்,
    ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
    பொழுதுமறுத் துண்ணும் சிறு மதுகையளே!”
    என்ற செவிலியின் கூற்றில் பெண்மனத்தின் திண்மை பெரிதும் பாராட்டப் படுகிறது! இதனால் திருமணம் ஆனபின்னர் எல்லாப் பெண்டிரும் புகுந்த வீட்டிலேதான் வாழ்ந்தனர் என்பது புலனாகின்றது. புகுந்த வீட்டில் மாமனார், மைத்துனர், கணவன் , மகன் என்ற ஆண் உறவினர்கள் மட்டுமே இருப்பார். மகனைப் பெற்ற தாயின் இல்லத்தில் போருக்குச் செல்லும் ஆடவர்கள் மாமனார், கணவனின் தமையன், கணவன், மகன் ஆகியோரே யாவர்!

    ஆதலால், இப்புறநானூற்றுப் பாடலில் ” மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை ” என்ற தொடரில் தன்னை என்பது, அவள் மாமனார், அல்லது கணவனுக்கு அண்ணனையே குறிக்கும் ஆதலால் இவள் தந்தை என்பதும், அண்ணன் என்பதும் நடை முறைக்குப் பொருந்தாத பொருளாகும் ஆகவே இவள் தன்னை என்பது மாமனாரையே குறிக்கும் அடுத்து இவள் கொழுநன் என்பது இவள் கணவனைக் குறிக்கும் என்பது பொருத்தமே. இவளை, ஆண் துணையாக ஒருமகன் அல்லது இல்லோள் என்று ஒக்கூர் மாசத்தியார் பாடுகிறார். இவள் அந்த ஒரும் சிறு மகனையும் போர்க்களம் நோக்கிச் செல்க என அனுப்புவதால் , இவள் பண்டைய வீரக்குடிவழிவந்த பெண் என்பதைக் குறிக்கிறது . இதனையே மாசாத்தியார், ”மூதின் மகளிர் ஆதல் தகுமே !” என்று பாராட்டுகிறார்!

    இதனால் பிறந்தவீடும் புகுந்த வீடும் வீரம் மிக்க பெண்களைப் பெற்றவை என்பது மரபின் சிறப்பைப் புலப்படுத்துகிறது! இப்பாடலுக்குப் பொருள் கொண்டவர்கள் சற்றே மாறுபட்ட பொருள் கூறினர் என்பதை ஆய்ந்து பார்த்தால் புலனாகும்!

     

     

     

     

    திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ஆலந்தூர், சென்னை 600 016

     

    Share
  • எப்படிச் சாத்தியம்?

    -கனவு திறவோன்

    சிரித்துப் பேசியிருக்கிறோம்
    அழுது பேசியிருக்கிறோம்
    கடிந்து பேசியிருக்கிறோம்
    அடித்துப் பேசியிருக்கிறோம்

    அணைத்துப் பேசியிருக்கிறோம்
    பிணைந்து பேசியிருக்கிறோம்
    ஃபோனில் பேசியிருக்கிறோம்
    வாட்ஸ் அப்பில் பேசியிருக்கிறோம்

    ஃபேஸ்புக்கில் பேசியிருக்கிறோம்
    கண்களால் பேசியிருக்கிறோம்
    பார்த்துப் பேசியிருக்கிறோம்
    பார்க்காமல் பேசியிருக்கிறோம்

    பார்க்கில் பேசியிருக்கிறோம்
    பீச்சில் பேசியிருக்கிறோம்
    ஆடிப் பேசியிருக்கிறோம்
    பாடிப் பேசியிருக்கிறோம்

    நடந்து பேசியிருக்கிறோம்
    கடந்து பேசியிருக்கிறோம்
    போகிற போக்கில் பேசியிருக்கிறோம்
    மௌனமாய்ப் பேசியிருக்கிறோம்

    செய்கையில் பேசியிருக்கிறோம்
    ஏன்?
    பேசாமலும் பேசியிருக்கிறோம்
    இப்போது
    “பேசாமல் போ!” என்கிறாய்
    எப்படிப் போவேன்?

     

    Share
  • ஓலைத்துடிப்புகள் (5)

    கவிஞர் ருத்ரா

    oolaisuvadi

    “கடவுள் வழங்கு கையறு கங்குல்”

    மேலே கண்ட சொற்றொடர் கொண்டிருக்கும் பொருள் அகலமானது ஆழமானது. இயற்கையில் உள்ள மறைபொருள் அவ்வப்போது அந்தந்தக் காட்சிகளில் உணர்த்தும் இயல்புகள் மனித சிந்தனையில் கடந்து உள் செல்லும்; நிற்கும். கடவுள் என்ற சொல் தெய்வம் என்று பொருள் படுவதைவிட இத்தகைய நுண்மை நோக்கிய இயற்கை உணர்வுகள் வெளிப்படுவதை சங்கச் செய்யுட்களில் நிறையவே காணலாம்.

    இருப்பினும் “ஓதல் அந்தணர் வேதம் பாட”என்ற வரிகளோடு பொறுத்திப்பார்க்கும்போது சங்கத் தமிழ்ப்புலவர்களின் மெய்யறிவும் இறை உள்ளுணர்வும் எத்துணை நுண்மாண் நுழைபுலம் கொண்டிருக்கிறது என்று புலப்படும்.

    பிறமம் அதாவது முதல் பிறப்பும் அந்த முதல் அண்டப் பொருளும் என்ன? என்ற கேள்விகளில் தான் வேதாந்தம் இன்னும்
    இறுதியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க இயலாமலும் அல்லது வைக்காமலேயே அதைத் தேடிக்கொண்டிரு என்ற உட்குறிப்பில் அப்படியே சிந்தித்துக்கொண்டிரு என்றும் இருப்பதாக நாம் கொள்ளலாம். எனவே ஊர்மக்கள் ஒட்டுமொத்தமாய் தூங்கிக்கிடக்கும் அந்த இரவு தான் கடவுள் நிலை என்பதும் தத்துவ வல்லுனர்கள் கூறும் அந்த “வெறுமை” நிலை தான் கடவுள் தன்மையைக்காட்டும் நிலை என்றும் நாம் புரிந்து கொள்கிறோம். கையறு நிலை என்பது மிக மிக ஆழமான அருமையான சொல்.கடவுள் திட உருவமாய் நம் முன் தோன்றி அருளும் வலிமையில்லாத ஒரு “நிழல் இருள்” தோற்றமே நம் ஆழ்துயில் நிலையில் இருப்பது. இதில் பலப்பல வண்ணங்கள் காட்டும் தோற்ற மயக்கமே (ஹாலுசினேஷன்) கடவுள் எனும் கருத்தோட்டமாக இருக்கிறது. இதை வெளிப்படுத்திய ஓதல் ஆந்தையார் என்ற புலவரும் “ஓதல்” தொழில் செய்பவராக இருக்கலாம். (ஆதனின் தந்தையார் அல்லது ஆதனை தந்தையாகக் கொண்டிருப்பவர் என்றும் நாம் கொள்ளலாம்) ஓதல் புரியும் ஆதனின் தந்தையே இப்புலவர் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஓதல் ஓதம்… இதுவே வேதம் ஆகியிருக்குமோ?

    தமிழ் நாட்டின் தற்போதைய ஓதுவார்கள் அந்த “ஓதல் ஆந்தையாரின்” சுவடு பற்றியவர்களாக இருக்கலாம்.

    சரி.போகட்டும்.இப்போது “தலைவி” தலைவனோடு களவு (காதல்) இழைந்ததில் ஊர்ப்பழியாகி அந்த சுடுசொற்கள் (அலர்) அவளை மிகவும் துயர் உறச்செய்து பொறுக்க முடியாத நிலையில் நள்ளிரவில் வானத்தை உற்று நோக்குகிறாள்.வானம் ஒளியை அடையாது அல்லது மறைக்கப்பட்டு வலிமையற்ற(கையறு நிலையில்) ஒரு இருள் பிண்டமாக ஒரு “உருவெளி மயக்கப் பிழம்பாக”ப் பார்க்கிறாள். இதை கடவுள் என்பது ஒரு வழக்கம் என்கிறாற்போல் இச்சொல் வழங்கப்படுகிறது.இந்தப் பின்னணியில் நம் சங்கதமிழ்ச்சுவடிகளில் அதிர்ந்து கிடக்கும் ஒரு வகைத் துடிப்புகளையே இப்போது இயற்றியிருக்கிறேன்.

    பாடல் இதோ. பொழிப்புரை தொடரும். 

    கடவுள் வழங்கு கையறு கங்குல் 

    வேங்கை கொழுவிய திண்கான் குறியில்
    வேங்கை மார்பன் அன்றொரு திங்களில்
    தழீஇத் தந்த தண்சிறை நடுக்கம்
    ஊன் உருக்கி என்பு முறுக்கிய நெடுமலைப்
    பாம்பாய் ஆவி சுற்றி அடுபிணி செய்யும்.
    செருந்தி தாழ அந்துறை சினைப்பூ
    செயிர்த்தன்ன பயிர்க்கும் விழிபொத்தி.
    ஆங்கவன் நோக்கின் நாணிரைக் கொளீஇ
    துடீஇய துடீஇய நீள் இரவு கொல்லும்.
    கல் கனை செல்வன் காறி உமிழ்ந்தாங்கு
    புல்லிய ஊரின் பிணித்த தெருக்கூடல்
    அலரி படர்ந்து அறுவலி கூட்டும்.
    கரும்பு பிழி எந்திரம் வாய்படு நிலையின்
    நையக்கொண்டு துவல்பட வீழும்.
    தில்லை தழுவுநர் முள் கொல் நோதல்
    அன்ன அலரின் புண் படுத்தாங்கு
    அவியும் வாழும் புல்லென செத்து.
    “கடவள் வழங்கு கையறு கங்குல்”
    ஓதல் அந்தணர் சொல்லில் ஊழ்க்க‌
    பிணியா நின்று பிறள்தல் போலும்
    என் உடம்பொடு அவன் ஆருயிர் ஒக்கும்.
    திதலை அன்ன நிழற்பொறி படர்ந்த
    வெள்நெடு வானம் கறை கண்டாங்கு
    அலரி மூசும் அழல் வெங்காட்டின்
    அலைபடு புள்ளென‌ அழியும் என்கவினே.
    எக்கர் ஞாழல் குவி இணர் உகுக்கும்
    தாதுண் தும்பியும் அலர் ஒலி வெரிக்கும்.
    குவவு மணற் குடுமி கோவை தோறும்
    குருகு உடை ஓமை ஓடு கிடந்தன்ன‌
    எவ்வம் படர்க்கும் எரி ஒலி அலரே.

    ================================================

    Share
  • மகன் தினம்!

    -கனவு திறவோன்

    அடிக்கடி வருகிறார்கள்
    டாக்டரும்
    வக்கீலும்
    மத்தியஸ்தரும்
    அக்காக் குருவியும்
    மழையும்
    வெயிலும்
    காற்றும்
    காப்பகத்தில் இருக்கும்
    அம்மாவைப் பார்க்க!

    மாதத்திற்கு ஒருமுறை
    மணியார்டர் தரும்
    தபால்காரரும்
    வருகிறார்
    கடைசி வரை
    மகன் மட்டும் வரவில்லை!

    *******

    அம்மா உயிரோடு இருக்கும் போது
    ஆதரவற்றோர் விடுதியிலும்
    செத்தபிறகு
    கங்கைக் கரையிலும்
    அன்னையர் தினம்
    அனுசரிக்கும் மகன்!

    **************

    ஆ சிரமத்தில்
    இருந்த தாயைப்
    பார்க்கத் தனயன் வந்தான்
    கைகளைப் பிடித்துக் கன்னத்தில் ஒற்றியவள்
    கண்களிலிருந்து வழிந்த நீர்
    ப்ரைலி மொழியில் எழுதியது…
    ‘மகன் தினம்’ என்று ஒன்றிருந்தால்
    அன்றாவது ஒரு நாள்
    உன்னைப் பார்க்க
    உன் வீட்டிற்கு வரலாமே?!

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (14)

    வையவன்

    “எங்கே கூட்டிக்கிட்டுப் போறே?”
    “பேசாம வாயேன்”
    அவர்கள் ராயப்பேட்டையில் பஸ் ஏறி எலியட்ஸ் ரோட் ஸ்டாப்பிங்கில் இறங்கி ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தனர்.
    குவார்ட்டர்ஸுக்குப் போய்ப் பார்த்தான் சிவா. பிரீதா இல்லை. கதவு பூட்டியிருந்தது. பக்கத்தில் கேட்டான்.

    “டே ஷிப்ட்!”
    “எப்ப முடியும்?”
    “மாலை ஆறு மணி.”

    “அஞ்சு மணிக்குள்ளாரே கொழந்தைங்க எல்லாம் ஸ்கூல்லேருந்து திரும்பி வந்துடும்” என்று கவலையோடு சொன்னாள் திஷ்யா.

    இவள் தான் செத்துப் போவதாகச் சொன்னவள் என்று நினைத்தான் சிவா. அசந்தர்ப்பமாக அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதை திஷ்யா பார்த்து விட்டாள்.

    நர்ஸிங் ஹோமுக்குப் போகும் பாதையில் அவனை அவள் தொடர்ந்தவாறே கேட்டாள்.
    “என்ன சிரிப்பு?”
    “வீட்டைப் பூட்டினியா?” என்று பேச்சை மாற்றினான்.
    “இந்த ‘டெக்னிக்’ வேண்டாம். நீ எதுக்கு சிரிச்சே?”
    அவன் பதிலளிக்கவில்லை.

    “இவதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாகப்போறேன்னு சொன்னவண்ணு நெனச்சியாக்கும்?”
    “அபாண்டம்”
    “செத்துட்டா கவலையில்லே. உயிரோட உள்ள வரைக்கும் உண்டு. போகட்டும். அந்த நர்ஸ்கிட்டே நீ என்ன கேக்கப்போறே? ஐடியாவா?”

    “எக்ஸாக்ட்லி”
    “ஒனக்குன்னு ஒரு ஐடியாவும் தோணலியா?”
    “நீ மேஜராயிட்டியா?”

    “ஏன், திருநீர்மலையிலே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கறியா?”
    “அதுக்கில்லே; ஒன்னை கடத்திக்கிட்டுப் போனதா ஒங்கப்பா போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்திடப் போறாரு.”
    “கவலைப்படாதே முந்தா நாளு எனக்கு பதினெட்டு முடிஞ்சு போச்சு. அந்த அளவுக்கு அவர் போகமாட்டார். ஒன் ஐடியா என்ன.. அதைச் சொல்லு.”
    “அதான் யோசிக்கிறேன்.”

    “சிவா, நான் எனக்கு ஒரு பிரச்னையா இருந்தது போயி ஒனக்கு ஒரு பிரச்னையாயிட்டனா?”
    சிவாவுக்கு அந்த நிராதரவில் மனசு விண்டு போயிற்று.

    “இந்த மாதிரி பேசாதே!” என்று வருத்தமாய்ச் சொன்னான். திஷ்யா மௌனமாய் விட்டாள்.

    ரிசப்ஷனில் அவர்களை நிற்க வைத்தாள் ரிசப்ஷனிஸ்ட். ஃபோனை எடுத்து நர்ஸிங்ஹோமின் உள்ளே எங்கோ பேசினாள்.
    “யார் வேணும்?”
    “நர்ஸ் பிரீதா.”

    “ப்ளீஸ் வெய்ட் தேர்” எதிரிலிருந்த பெஞ்சை சுட்டிக்காட்டினாள்.

    லாமினெட் வழவழப்பு மின்னிய அகலமான பெஞ்சில், மின் விசிறியும் சுற்றியிருந்த மர நிழலும் தந்த குளிர்ச்சியில் அவர்கள் உட்கார்ந்தபோது மனசு சற்று ஓய்ந்தது.

    பத்து நிமிஷத்தில் பிரீதா வந்தாள். நர்ஸ் உடையில் தலைக்கு ஹுட் வைத்து மலர்ந்து சிரித்துவரும் அவளைக் கண்டதும் ஒரு தேவதையைக் கண்ட ஆஸ்வாசமாக இருந்தது.

    “ப்ராப்ளமாணோ?”
    காலையில் தானே சொல்லியனுப்பினேன் என்ற தொனியில் சிரித்துக் கொண்டே கேட்டாள்.
    “தனியாப் பேசணும்” என்றான் சிவா.

    பிரீதா ரிஸ்ட்வாட்சைப் பார்த்தாள்.
    பெஞ்சில் உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் திஷ்யா நெளிந்தாள்.
    பிரீதா ரிஸப்ஷனிஸ்டை நெருங்கி “மேரி வந்நோ?” என்று கேட்டாள்.

    “ஓ… ஷி கேம் ஜஸ்ட் ஹாஃப் அன் அவர் அகோ.”
    “கனெக்ஷன் தரூ.”
    போனில் அந்த மேரி உடனே கிடைத்தாள்.

    “ஞானாணு ப்ரீத. எனிக்கொரு அர்ஜண்ட்ஜோலி. கேட்டோ. ரிலீவ் மீ ஃபர் ஹாஃப் அன் அவர், ஐயே நாட்டி! கஸ்ட் வன்னதா! ஷ்யூர்… இன்ஃபார்ம் தி சீஃப் ஐ’ல் மேனேஜ்.”
    பிரீதா போனை வைத்தாள்.

    “போகாம்.”
    அசோகமர நிழல் படர்ந்த சிமெண்ட் பெஞ்சு ஒன்று வெளியே காலியாக இருந்தது. மூவரும் அதில் போய் உட்கார்ந்தனர்.
    “ஒய் திஷ்யா ஈஸ் டல்?” என்று பிரீதா ஆரம்பித்தாள். திஷ்யா சிரிக்க முயன்றாள். சிவா மளமளவென்று விஷயத்தைச் சொன்னான்.

    “இவளுடைய அப்பா இவ சினிமாவிலே நடிக்கணும்னு கம்பெல் பண்றார். இவளுக்கு இஷ்டமில்லே. இன்னிக்கு ஸ்கிரீன் டெஸ்ட். வீட்டுக்கு வண்டி வர்றதா இருந்தது. இவ ஒர்க்ஷாப்புக்கு என்னை வரச்சொல்லி ஆள் அனுப்பினா. போனேன். அங்கிருந்து நேரா இங்கே வர்றோம்.”

    பிரீதா ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கேட்டாள்.
    “சினிமாவிலே ஆக்ட் பண்ண இஷ்டமில்லே! வாட் எ குட் கர்ல்!” பிரீதா சிலாகித்தாள்.

    “இதைச் சொல்ல ஈ காலத்திலே ஒரு மனோ திடம் வேணும்” என்று மலையாளத் தமிழில் சொன்னாள்.
    “அப்பா ரொம்ப கம்பெல் பண்றார். ஹி ஈஸ் மேட் ஆஃப்டர் மனி.”
    பிரீதா பெருமூச்சு விட்டாள்.

    “அவர்கிட்டே…” என்று அவள் பேச ஆரம்பிக்கும் முன் சிவா குறுக்கிட்டான்.
    “பேசிப் பார்த்துட்டேன். ஷி வில் டைன்னு கூடச் சொன்னேன்.

    அவர் அசையறதா தெரியலே!”
    திஷ்யா உதட்டைக் கடித்துத் தலை குனிந்தாள்.

    “நீ வீட்டை விட்டு வரான் தயாரோ?” என்று தடுமாறும் தமிழில் கேட்டாள். திஷ்யா இந்தக் கேள்வி தனக்கு என்று உணர்ந்து நிமிர்ந்தாள்.

    “எப்படி?”
    “என்னோட வந்து இரு.”
    “தெரியாமயா… திருட்டுத் தனமாவா…”
    “நோ. நீ வந்துடு. நான் அவர்கிட்டே போய்ப் பேசிக்கறேன்.”

    திஷ்யா தயங்கினாள்.
    “நாட் ஃபர் எவர். அவருடைய தவறு அவருக்குப் புரியற வரை.”

    “கொழந்தைகளுக்கெல்லாம் யார் சமைப்பாங்க? வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க? சிவா அவளுக்குப் பிரதிநிதியாகக் கேட்டான்.

    “இவ சினிமாவிலே ஆக்ட் பண்ண சம்மதிச்சிருந்தா வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க?”
    திஷ்யா அந்தக் கேள்வியில் இருந்த நியாயத்தை உணர்ந்தாள்.

    “இவ இல்லேன்னா அந்த வீடு என்னவாகும்னு அவருக்குத் தெரியணும். லெட்ஸ் டு ஒன் திங். இவங்க ரிலேடிவ்ஸ் யாரும் கிட்டே இல்லியா?”
    “வியாசர்பாடியிலே சித்தி இருக்காங்க. அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க. பெங்களூர்லே அத்தை இருக்காங்க. அங்கே வீடு சின்னது. எல்லாரும் அங்கே போக முடியாது” என்றாள் திஷ்யா.

    “நான் சொல்ல வந்தது அது இல்லே. அவங்க எல்லோரும் என் க்வார்ட்டர்ஸுக்கு வரட்டுமே!”
    சிவா திஷ்யாவைப் பார்த்தான்.

    “இட்ஸ் டூ மச் ஃபர் யூ” என்று திஷ்யா சொன்னாள். அப்படி வரட்டுமே என்று சொன்ன வார்த்தைக்கே அவள் மனசிலவ் நன்றி நிரம்பிவிட்டது. பிரீதா மீது வைத்திருந்த ஓரிரு தப்பபிப்ராயங்களும் அதில் மூழ்கிப் போயின.

    ‘பட் திஸ் ஈஸ் மோர் தான் டூ மச் ஃபர் எ கர்ல்M!”
    சிவாவைப் பார்த்து சிரித்து கொண்டே பிரீதா தொடர்ந்தாள்.

    “இந்த ஆண்களுக்கு விக்கிறதுக்கு பெண்ணைத் தவிர இப்ப வேற எதுவும் கெடைக்கலே.”
    “எல்லா ஆண்களுக்குமல்ல” என்று உஷ்ணமாக மறுத்தான் சிவா.

    “ஆல் அஃப் யூ அட்மிட் இட்! ஒய் காண்ட் சம் ஒன் ஃபைட் இட்? ஏன் ஒர்த்தர் கூட இதுக்குப் போராடலே.”
    “அதான் வந்திருக்கேன்.”

    “இன்னிக்கு சாயங்காலமா நான் வீட்டுக்கு வர்றேன். நீயும் நானும் அவர்கிட்டே பேசுவோம். இப்ப இவ நம்ம க்வார்ட்டஸ்ல இருக்கட்டும். அவர் பிடிவாதம் பிடிச்சா கொழந்தைகளை இவ போயி அழைச்சிட்டு வரட்டும்.”
    திஷ்யா குறுக்கிட்டாள்.

    “இல்லே. நான் வீட்டுக்குப் போறேன். நீங்க ரெண்டு பேரும் சாயங்காலம் வாங்க. பேசிப்பாருங்க. ஒத்துக்கலேன்னா கௌம்பி வர்றேன்” என்று நிறுத்தினாள் சிவாவைப் பார்த்து.
    “நல்லது” என்றான் சிவா.

    “ஐ அக்சப்ட். நானும் சிவாவும் சாயங்காலம் வர்றோம்.”
    சிவா எழுந்தான்.

    “நானும் வர்றேன். லெட்ஸ் ஹாவ் எ கூல்டிரிங்க்” என்று அவர்களை வழியனுப்ப வந்தாள் பிரீதா.
    பஸ்ஸில் வரும்போது திஷ்யா கேட்டாள்.

    “ஏன் நீ இங்கே போகப் போறோம்னு மொதல்லே சொல்லலே?”
    “சொல்லியிருந்தா ஒனக்குப் பிடிச்சிருக்காது. நீ அந்த பிரீதாவை அநாவசியமா வெறுத்தே!”
    “சீச்சீ… அவ நல்லவள்.”

    தொடரும்

    Share
  • கூலித்தொழிலாளி !

    -பா. ராஜசேகர்

    மூட்டையை
    முதுகில் தூக்க,
    துயரங்கள்
    மனதை தாக்க
    உயரத்துச்
    சூரியனும்
    உதிரத்தைச்
    சூடாக்கும்!

    எளிதாக்கும்
    பசிமயக்கம்
    இதயத்தைச்
    சோர்வாக்கும்!

    உச்சி வெயில்
    வேளையிலும்
    கும்மிருட்டைக்
    கண்பார்க்கும்!

    தள்ளாடும்
    கால்கள் கூட
    வீரத்தை
    வேவு பார்க்கும்!

    ஆடி ஓடி
    உழைத்த காலம்
    மேலோங்கிப்
    போனதய்யா!

    இளமையிலே
    சிறுகச் சேர்த்துக்
    குஞ்சுகளைப்
    பறக்க வைத்து

    இறக்கை கட்டும்
    காலம் இப்போ
    குஞ்சுகளும்
    பறந்து போச்சு!

    இளமை
    மறைஞ்சு போச்சு!
    வாழ்க்கையோ
    கவலையாச்சு!

    சொந்தம்தான்
    போனதென்பேன்
    நம்பிக்கை
    போகவில்லை!

    தன்கையே
    தனக்குதவி!
    தன்னம்பிக்கை
    உதவலாச்சு!

     

    Share
  • எகிப்திய நீதிமன்றங்களும் இந்திய நீதிமன்றங்களும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    எகிப்தில் 1952 வரை மன்னராட்சி இருந்தது.  மன்னராட்சி என்றால் ஒரு மன்னர் இருந்தாலும் அவர் பிரிட்டனின் மேற்பார்வையில்தான் நாட்டை ஆண்டுவந்தார்.  பிரிட்டனை எதிர்த்துப் போராடி 1952-இல் எகிப்து சுதந்திரம் அடைந்தது.  இராணுவ ஜெனரல்களான முகம்மது நயிப், நாசர், சதாத், முபாரக் என்று பலர் ஜனாதிபதியாக எகிப்தை ஆண்டனர்.  1978-இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற முபாரக் 29 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதி பதவியில் அமர்ந்து பல விதமாகச் சொத்து சேர்த்துப் பின் தன் மூத்த மகனையே தனக்குப் பிறகு பதவியில் அமர்த்த முடிவுசெய்தார்.  அதுவரை அவரது ஆட்சியைச் சகித்துக்கொண்டிருந்த எகிப்து மக்கள் அவரை எதிர்த்துப் புரட்சி செய்தனர்.  2011 ஜனவரியில் ஆரம்பித்த இந்தப் புரட்சி மூலம் முபாரக் பதவியிலிருந்து இறக்கப்பட்டு ஒரு வழியாக எகிப்து மக்களுக்கு அவருடைய பிடியிலிருந்து விடுதலை கிடைத்தது.  இந்த மக்கள் புரட்சிக்கு இராணுவம் மிகவும் துணைபுரிந்தது.  மக்களை முபாரக்கின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதை விட முபாரக் தங்களுக்கு இசைவாக நடந்துகொள்ளவில்லை என்பதுதான் ராணுவம் மக்களின் இந்தப் புரட்சிக்கு உதவியதற்கு முக்கிய காரணம்.  ஆறு மாதங்கள் இராணுவம் முபாரக்கின் உதவி ஜனாதிபதியை பதவியில் அமர்த்திக்கொண்டு ஆட்சி நடத்தியது.  உலகத்தின் கண்களுக்கு எகிப்தில் ஜனநாயக அரசு நடக்கிறது என்று காட்டுவதற்காகத் தேர்தலை நடத்தினர் ராணுவ அதிகாரிகள்.  முஸ்லீம் பிரதர்ஹுடைச் சேர்ந்த மோர்ஸிக்கு நல்ல மெஜாரிட்டி கிடைத்து அவர் பதவிக்கு வருவார் என்று ராணுவம் நினைக்கவில்லை.  மேலும் மோர்ஸி ராணுவத்தின் அரசியல் தலையீட்டை ஒத்துக்கொள்ளவில்லை.  அதனால் அவரை ராணுவம் பதவியிலிருந்து இறக்கியதோடு அவர் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவருக்கு இப்போது மரண தண்டனையும் கொடுத்திருக்கிறது.

    எகிப்து நீதிமன்றங்கள் யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தகுந்த மாதிரியான தீர்ப்புகள் வழங்கி வருகின்றன.  முபாரக் பதவியில் இருந்தபோது அவர் சொல்வதைத்தான் கேட்டன.  அப்போது முபாரக்கால் மோர்ஸி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  முபாரக்கைப் பதவியிலிருந்து இறக்கி மோர்ஸி ஜனாதிபதி பதவி ஏற்றவுடன் மோர்ஸி அரசு அவரைக் குற்றவாளி என்று தீர்மானித்து நீதிமன்றத்தில் கூண்டுக்குள் வைத்து அவர் மீதுள்ள வழக்குகளை விசாரித்து அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.  அவர் பதவியில் இருந்தபோது அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அதே நீதிமன்றம் அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டதும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது.

    இப்போது மோர்ஸியை ராணுவம் பதவியிலிருந்து இறக்கி அவர் மீது பல குற்றங்களைச் சுமத்தி அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது.  எகிப்தில் யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்கள் சொல்படிதான் நீதிமன்றம் நடப்பதாகத் தெரிகிறது.  மோர்ஸி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை எகிப்து உண்மையான ஜனநாயக நாடு அல்ல.  முபாரக் தேர்தல் நடத்தினாலும் அவர்தான் 90 சதவிகிதத்திற்கு மேல் ஓட்டுக்கள் வாங்கி ஜெயித்துக்கொண்டிருந்தார்.  மோர்ஸிதான் முதல் முதலாக உருப்படியான தேர்தல் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவரை ராணுவம் தன் இழுப்புக்கு வளைக்க முயன்றது.  அதற்கு அவர் ஒத்துழைக்காததால் அவரைப் பதவியிலிருந்து இறக்கியதும் அல்லாமல் குற்றவாளியாக்கி தூக்குத் தனடனையும் கொடுத்திருக்கிறது.  எகிப்தாவது ராணுவத்தின் கீழ் செயல்படுகிறது.  இந்தியாவிலும் அல்லவா பதவியில் இருப்பவர்கள் சொல்வதன்படி நீதிமன்றம் நடக்கிறது.

    ஜெயலலிதா வழக்கில் சிறப்பு நீதிமன்றம் எல்லா ஆதாரங்களையும் சிறப்பாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியது.  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது அரசியல் தலைவர்கள் தலையீட்டால் அந்தத் தீர்ப்பிற்கு நேர் எதிர்மாறான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது.  அரசு வழக்கறிஞருக்கு அவர் கருத்தை வெளியிட ஒரே நாள் ஒரு நாள் அவகாசம்தான் கொடுக்கப்பட்டது.  அதையும் எழுத்து மூலமாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் வழங்கப்பட்டது.  அப்படியும் அவருடைய எந்த வாதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.  இதில் வருமானம் பற்றிய கூட்டலில் தவறு வேறு.  இந்த அடிப்படையில் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உயர் நீதிமன்றம்.  அரசியல் தலையீடு இல்லாமல் யாரும் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்க முடியாது.  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும் மோதிதான் பதவியில் இருந்தார்.  ஆனால் இரண்டாவது தீர்ப்பு வந்தபோது தலைமை மாறவில்லை என்றாலும் நிலைமை மாறிவிட்டது.  இப்போது நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற, எதிர்க் கட்சிகளின் ஆதரவில்லாத சட்டங்களை, நிறைவேற்றுவதற்கு மோதிக்கு ஜெயலலிதாவின் உதவி தேவைப்படுகிறது.  மோதி பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே ‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘மோதி ஒரு சிறந்த அரசியல்வாதி;  நீதித்துறையில் தலையிடுவதே இல்லை’ என்று கூறினார்.  ஊழலை ஒழிப்பதாகக் கூறிப் பதவிக்கு வருபவர்கள் பின்னால் அரசியல் ஆதாயத்திற்காக  மகாஊழல் புரிந்தவர்களுக்குத் துணை போகிறார்கள்.  வருமானம் பற்றிய கூட்டலில் தவறு இருப்பதை வெகு எளிதாகக் காட்டி மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்டலாம்.  ஏனோ கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதில் தயக்கம் காட்டுகிறது.  இதிலும் அரசியல் .விளையாடுகிறது போலும்.

    எகிப்து போன்ற சர்வாதிகார அல்லது ராணுவ ஆட்சி நடக்கும் நாடுகளில் நீதிமன்றங்கள் தன்னிச்சையாகச் செயல்படாமல் அரசியல்வாதிகளின் ஆணையை ஏற்று நடக்கலாம்.  ஆனால் ஜனநாயக நாடாகத் தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும் இந்தியாவிலுமா நீதித்துறை இப்படி நடக்க வேண்டும்?

    இறைவனே!  இந்தியாவிற்கு விமோசனமே இல்லையா?  இருக்கிறது என்றால் எப்போது?

    Share
  • தேகமும் யோகமும்- பகுதி-8…

     உங்களுக்கு உறுதுணையாக ஒரு யோக நூல்

    கவியோகி வேதம்

    yoga

                ,’யோகம்’-என்பது ஒரு பரவச நிலை.!யோகம் என்பது ஒரு வைகறைக்குளிர்ச்சி!சூரிய ஒளியில் குளிக்கும் காலைப் பறவைகளின் சிறகு விரிந்தநிலை!ஆம்! பூமியை உதைத்து வேகம் எடுக்கும் அதிர்ஷ்ட விமான நிலையே யோகம்.பிரபஞ்சத்தை விழுங்கிக் கொண்டே இங்கேயே சொர்க்கம்காணும் ஆநந்த ஆவிநிலையும் யோகம்தான். புரிகிறதா? யோகம் சித்தியானபிறகு உங்கள் உள்ளே ஸ்புரிக்கும் .கள்ளினும் செம்மாந்த நிலை அது!.கவிதையுள் முக்குளிக்கும் விதிர்விதிர்க்கும் களிப்பு நிலை அது!

                    பேரானந்தச் சொட்டு உங்கள் மூளைக்குள் விழுந்தால் நீங்களும் யோகத்தில் நீந்தலாம்! புதிய அமுதம் மாந்தலாம்! பிறர்க்கும் உதவலாம்.எந்த நோயையும் நீங்களே தீர்க்கலாம்.சித்திகளை ஏந்தலாம்!ஏன்?..தெய்வீகத் தன்மையைஉங்கள் கண்ணுக்குள், நரம்புக்குள்,ஏன்? உடலுக்குள்ளேயே அருந்தலாம்!புரிகிறதா? இதுதான் யோகம். இவ்வளவுதான் யோகம்!

                   ..கடினமே இல்லை.முயன்று முயன்று அந்தப் பரவசத்தில் முங்கத் தயாராகுங்கள்!  என்ன!உங்களுக்கு அந்த யோக வழியைக்காட்ட  ஒருநல்ல ஆசான் தான் தேவை. முயலுங்கள். தினசரி உங்களுக்குத் தெரிந்த மூச்சுப்பயிற்சி, அல்லது காயத்ரியுடன் சேர்ந்து கனிந்த பிராணாயாமம் ஒரு முப்பது எண்ணம் செய்து பாருங்களேன்! அட்டகாசமான ஒருமைப்பாடுதான் இதற்கு முக்கியத் தேவை.. கொஞ்சம் யோகாசனமும் செய்யுங்கள். அது உங்கள் நரம்புகளை ஒரு யோக நிலைக்குத் தயார்ப்படுத்தும். உடம்பும் உஷ்னம் ஆகாது. அதற்காகக் கன்னாபின்னா என்று செய்யாதீர்கள். காஞ்சி மகா முனிவரே , ‘அட! யோகமா? செய்வீர்! ஆயின் ஒரு குருவைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு அவர் மூலமே தினசரி அவர் சொல்படி நிதானமாகச் செய்வீர் , உடல் உஷ்ணம் ஆகாதபடி..’என உபதேசித்திருக்கின்றார்.

      உதாரணத்திற்கு, இந்த யோகம்திருவல்லிக்கேணியில்  1960களில்  வசித்த ‘சித்தேஸ்வர்’ என்னும் ,யோகிக்கு எளிதில் கைவந்தது. அவர் குரு மூலமாக.

     தீவிரமாக அவர் முதலில் நம் பிள்ளையாரைத்தான் தீவிரமாக உபாசனை செய்தார். அந்த தும்பிக்கைக் கடவுள் ஆச்சர்யமாக அவரது யோக உடலுக்குள் புகுந்துகொண்டு நான் சொன்னபடி எழுது ‘உலக மக்களுக்காக  யோகப்பயிற்சிகளின் மொத்த வடிவையும், செய்முறைகளையும் உனக்குத் தொகுத்துத் தருகின்றேன் ‘ என்று சொல்லி அவரை நடுராத்திரியில் எழுப்பி எழுத  வைத்தார் .. முதலில் அந்த யோகப் பெருங்கனலின் துளி வீச்சை உள் வாங்கிக் கொண்டார்இந்த ஞானி.,..இந்தத் திருவல்லிக்கேணி யோகி!.

    தான் அடைந்த பெரும் சொத்தைத்,தான் எவ்வாறு தன் புத்தியில் தேக்கி,உடம்பில் உருவேற்றிப் ‘பூரணநிலை’தனை அடைந்தாரோ,அந்த ஞானக்கல்வியைப்பிறர்க்கும் உபதேசிக்கத் துணிந்தார் தன் அற்புதச்சீடர் “விஜயகுமார்’ மூலமாக!

                  ..மனிதனின் நிலை எவ்வாறு யோகம் மூலம்(தொடர்ந்து பயிற்சி பெற்றால்)படிப்படியாக தெய்வ நிலை அடைகிறது என்பதைத் தன் அனுபவம் வழியே சொற்களாக,புரிகிற சிறு சிறு பூங்காப் பாதையாக விவரிக்கிறார் சுவாமி, யோகிசித்தேஸ்வரர் ‘ யோகமும் மனிதனின் நிலையும்’ என்ற  ஒரு புத்தகம் மூலம்..இது திருவல்லிக்கேணியில் உள்ள எல்லா புத்தகக் கடையிலும் கிடைக்கும்.

                  ..தன் குரு சொன்னதை அவ்வப்போது உரைகளாகத் தொகுத்து,தெளிவான தலைப்புகளாகப் பிரித்து நமக்குத் தருகிறார்  அவர். நடை கொஞ்சம்  எளிமையும் கடினமும்(சம்ஸ்க்ருத) கலந்து இருந்தாலும் யான் சொன்னதுபோல் நிச்சயம் நாமும் யோகம் பயில வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு, தினசரி சாதனை செய்பவர்க்கு இந்நூல்  பயன்படும். .

                  ..யோகத்தின் அடிப்படைத் தத்துவம் என்ன?தேகத்தின் உணர்வுத் தத்துவம் எப்படி மேன்மேல் யோகத்தின் பிடிக்குள் அகப்படுகிறது,பரவச நிலையில் “உள் ஆழ்ந்த மனித மூளை எவ்வாறு செயல்படுகிறது?எப்படி “சித்திகளை’  விளைவிக்க முனைகிறது,ஒவ்வொரு சொல்லும் எவ்வாறு “அருள்வாக்காக” மாறுகிறது,அதன்மூலம் கைவரப்பெற்ற உள்ளங்கையின் ஆன்மசக்தி எவ்வாறு பிறமாந்தரின் எல்லா நோய்களையும் தீர்க்கவல்லதாக மாறுகிறது என்றெல்லாம் படிப்படியாக,அழகாக,தெளிவாக  இந்த நூல் மூலம் நீங்கள் அறியலாம்..வாழ்க இந்த அற்புத யோக நூல்!.

     உங்களுக்கு ஒரு நல்ல குரு கிட்டினாலும், அவர் தனது ஆன்மிக சக்திகளை உங்கள் உள்ளே பாய்ச்சி உங்களை யோகத்துக்குத் தயார் படுத்தினாலும் படித்து அறிய, சாதனை செய்ய உறுதுணையாக ஒரு யோக நூல் தேவை என்பதற்காக இந்த ரகசியம் சொன்னேன். நிச்சயம் இதைப்  படிக்கவும். யோகத்திற்கும் தியானத்திற்கும் தயார் ஆகுங்கள்.

     தொடரும்

    Share
  • காதல் நாற்பது – 38

    ajay

    முதலில் தந்த முத்தங்கள்

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    முதன்முறை அவர் முத்தமிட்டது

    ழுதிச் செல்லும்

    இந்தக் கை விரல்களை

    மட்டுமே !

    அதன்பின் மிக்கத் தூய்மை யாகி

    வெண்மை ஆனது

    அந்தக் கரம் !

    மெதுவாய் வரவேற்பேன்

    பிறரது வாழ்த்துகளை.

    தேவதையர் அசரீரி எழும்போது

    “ஆதரிப்பு நிரலில்”

    எழுதி வைப்பேன் உடனே !

    முதல் முத்தத்தைக் காட்டிலும்

    பளிச்செனத் தெரியும்

    மோதிர மொன்றை

    இங்கு நான் அணிய முடியாது

    பழுப்பு நிறக் கற்களில் !

    இரண்டாம் முத்தமிட வந்தது

    எனது நெற்றியில்,

    தவறிப் போய்

    பாதி நெற்றியில் விழாமல்

    பாதிக் கூந்தலில் பட்டது !

    அத்தகைய பரிசுக்கும் அப்பாற் பட்டது

    காதலின் புனிதம் !

    அதுவே

    காதலுக் குரிய கிரீடம் !

    புனிதச் சுவையோடு அளித்த

    மூன்றாவது முத்தம் என்

    மூடிய உதட்டிலே !

    முழுமை யாகப் பதிந்தது அது

    பழுப்பு நிறத்தில் !

    அந்த நாள் முதல் கூறினேன்

    பெருமித மோடு

    “என் காதல் அது !

    எனக்கே உரியது அது !”

    ************

    Poem -38

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    First time he kissed me, he but only kissed

    The fingers of this hand wherewith I write;

    And ever since, it grew more clean and white,

    Slow to world-greetings, quick with its “Oh, list,”

    When the angels speak. A ring of amethyst

    I could not wear here, plainer to my sight,

    Than that first kiss. The second passed in height

    The first, and sought the forehead, and half missed,

    Half falling on the hair. O beyond meed!

    That was the chrism of love, which love’s own crown,

    With sanctifying sweetness, did precede.

    The third upon my lips was folded down

    In perfect, purple state; since when, indeed,

    I have been proud and said, “My love, my own.”

    **********

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ

    மானம்போய் வாழும் நிலைவேண்டார் மாந்தர்
    மனமேகும் என்றும் திருக்குறளை – போகும்
    நிலம்யாவும் சொல்லும் மறையொத்த நீதியும்      valluvar
    நேர்நின்று வெற்றி காண!

    கூட்டல் அறிந்து போக்கும் கழித்தலும்
    வேட்டல் பெருக்கி வாழ்தல் வகுக்கும்
    யாத்தல் திருக்குறளைப் போற்றிட – வந்திடும்
    சேர்த்தல் நிலைக்கும் மேல்!

    தெய்வம் மறுத்தாலும் தேடின வந்திடுமே
    செய்யும் வினையாவும் வள்ளுவம் ஏகிட
    பெய்யும் மழையொப்பத் தானாய் வரும்நலம்
    மெய்யிது காண்பீர் பணிந்து!

    வையத்து நோயெலாம் உள்ளத்தின் பாவமாம்
    எண்ணத்தில் போரிடும் தூயவை வென்றிட
    ஏற்றத்தில் வைத்துத் திருக்குறள் பற்றிட
    தோன்றும் புகழுடை வாழ்வு!

    தர்மமும் தானமும் பற்றிட வாழ்வினில்
    பெற்றவர் உற்றவர் நன்மையும் கண்டிடத்
    தூயநற் சிந்தனை தூண்டிடும் நல்லதை
    வள்ளுவம் வழிநின்று செய்!

     

    Share
  • கருக்கல்

    மாதவன்.

     

    செல்வி பட்டென்று விழித்துக் கொண்டபோது வாசலில் மெல்லியகுரல் கேட்டது.

    “இந்தா புள்ள செலுவி”

    அது சரசுவின் கிசுகிசுப்பான குரல். செல்வி மெல்ல எழுந்துசென்று கதவைத் திறந்து தலைநீட்டினாள்.

    “தோ ஒரும்சம் சரசு. இப்பம் வந்திடறேன்”

    என்று கூறியபடி செல்வி கலைந்திருந்த தனது புடவையை சரிசெய்துகொண்டாள். தலைமுடியைச் சுருட்டிக் கொண்டையிட்டபடி எரவாணத்தில் சொருகியிருந்த டார்ச் லைட்டை உருவி கையிலெடுத்துக்கொண்டாள். படுக்கையில் சின்ராசு வாய்பிளந்து தூங்கிக்கொண்டிருந்தான். இரவு அவன் செய்த சேட்டைகள் நினைவுக்கு வந்து சிரிப்பையும் வெட்கத்தையும் ஒருங்கே கொடுத்தது.

    டவுன் மார்க்கெட்டில் லோடு வண்டி ஓட்டுகிறான். எங்கோ தொலைவிற்கு சென்று இரவு ஒருமணிக்குத்தான் வீடுவந்தான்.

    “ஏம்யா, சொந்தமா வண்டி வாங்கி ஓட்டுனா இன்னுங்கொஞ்சம் கூட காசு வருமில்லை”?

    “ம்… வரும். ஒங்கப்பாரு கரட்டான்டிபட்டியில ஊரு தலைவருதான? வரையில ஒரு வண்டியயும் கூடவே வாங்கியாந்துருக்கலாம்ல”?

    “அது சரி. ஒமக்கு என்னிய கட்டிக்குடுத்ததே பெருசாம்”

    “பார்ரா.. ஏனாம் ? அப்புடி எதுல புள்ள ஒனக்கு கொறவெச்சிருக்குறேன்னு கேக்குறேன்”? என்றபடி முரட்டுத்தனமாக முயங்கினான் பிரியத்தைப்போலவே வாய்ப்பேச்சும் அதிகம் அவனுக்கு.

    எழுப்பி சொல்லாமல் சென்றால் காலையில் கன்னாப்பின்னாவென கத்துவான். ஆனால் செல்விக்கு தூங்குபவர்களை எழுப்புவதே பிடிக்காது.

    மெல்லப் படியிறங்கி, ஓசையின்றி கதவைச்சாத்தினாள். வீட்டையொட்டிய சந்தில் சரசுவும் குஞ்சக்காவும் நின்றுகொண்டிருந்தார்கள்.

    “ஏம்புள்ள வெரசா வரதில்ல. வெடிஞ்சுப்புடுச்சின்னா ஆருக்கு கஷ்டம்” என்று கடிந்துகொண்டாள் குஞ்சக்கா.

    “இல்லக்கா… ராத்திரி அவுரு வர லேட்டாயிருச்சா ? கொஞ்சம் அசத்திப்புடுச்சிக்கா”…

    “ஆமாம்போ”… என்றபடி சலித்துக்கொண்டே அவள் முன்னால் செல்ல சரசுவும் செல்வியும் பின்தொடர்ந்தார்கள்.

    குஞ்சக்காள் கணவன் கத்தாரில் இருக்கிறான். நாலைந்து வருடத்திற்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவான். அந்த சமயங்களிலெல்லாம் குஞ்சக்காவின் தலையில் கிரீடம் ஏறிக்கொள்ளும். மற்ற நாட்களில் சிடுசிடுவென இருப்பவள் கணவன் லீவில் வந்திருக்கும் நேரத்தில்மட்டும் அத்தனை மகிழ்ச்சியாக பேசிச்சிரிப்பாள். அவள் வீட்டில் கறிக்குழம்பு மணப்பதெல்லாம் அந்த சமயங்களில் மட்டும்தானென்று சரசு சொல்லிக் கேட்டிருக்கிறாள்.

    சரசு கேட்டாள், “என்ன புள்ள ராமுச்சூடும் அண்ணன் தூங்கவிடலியாக்கும்?”

    “ச்சீ நிப்பாட்டுடீ. எல்லாத்துக்கும் உண்டானதுதான. நாளைக்கி நீ கட்டிகிட்டூ போயி மட்டும் வேற என்னத்தை செய்யப்போறியாம்?”

    “அதெல்லாம நடக்குறப்ப பாத்துக்கலாஞ் செலுவி. என் தேங்காப்பல்லுக்குன்னு எவனாச்சும் மாங்காப்பல்லு கெடைக்காமலா போயிருவான்” என்று கூறிய சரசுவின் வார்த்தைகளில் வருத்தமிருந்தது.

    சரசுவிற்கு முன்பற்கள் எந்தி வாய் மூடமுடியாதபடி இருக்கும். நன்றாக இருந்தாலே சொல்லத்தேவையில்லை. எத்தனையோ இடம் வந்துபோயிற்று. ஒன்றும் தகையவில்லை. சரசுவிற்கு என்ன பதில்சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நடந்தாள் செல்வி.

    “வெரசா வாங்கடீ வாளக்கொமரிங்களா”, என்று முன்னால் சென்ற குஞ்சக்கா நின்று இவர்களை விரட்ட இருவரும் வேகமாக நடக்கத்துவங்கினார்கள்.

    மண்டபத்தில் விடிவிளக்கு எரிந்துகொண்டிருந்த பிள்ளையார் கோவில் கடந்து பாயம்மாவீட்டுச் சந்துநுழைந்தபோது சனியன்பிடித்த நாய் ஒன்று விடாமல் குரைத்தது. ஒன்று தொடங்கியதும் தொடர்ந்து பக்கத்துத்தெரு நாய்களும் சேர்ந்துகொண்டு சகட்டுமேனிக்கு குரைக்கத்தொடங்கின.

    சரசு முன்னால் நகர்ந்து “டேய்.. டேய்.. ச்சும்மாயிரு. ஆளுதெரியாதா ஒனக்கு” என்று குரல்கொடுக்க அது சற்றே அச்சத்துடன்வந்து சரசுவை முகர்ந்துவிட்டு நகர்ந்தது. வீட்டிற்குள்ளிருந்து பாயம்மாள் முனகினாள்.

    “யாருலே அது?”

    “நாந்தான் பாயம்மோவ், சரசு” அதன்பிறகு பாயம்மாவிடமிருந்து பதில் வரவில்லை.

    ஊர்நடுவே பஸ்டாப்பை ஒட்டிய அமைதிவழியும் ஆலமர மேடையில் யாரோ ஒன்றிரண்டு வயசாளிகள் உறக்கம்வராமல் புரண்டுகொண்டிருந்தார்கள். அதுவரை பிரச்சனையில்லை. தெருவிளக்கு வெளிச்சம் இருக்கும். மேடையை தான்டிவிட்டால் கும்மிருட்டுத்தான். இருளை தொட்டதும் குஞ்சக்கா தனது டார்ச் விளக்கை ஒளிரச்செய்தாள். செல்வியும் சரசுவும் கூடவே.

    இருளில் நின்றிருந்த பள்ளிக்கூடத்தை கடக்கும்போது மைதானத்தின் மரங்கள் காற்றில் அசைந்தது உடலில் நடுக்கத்தைக் கொடுத்தது.

    சட்டென்று கருவேலம்புதரிலிருந்து எதுவோ வேகமாக ஓடியது. செல்விக்கு குலைநடுங்கியது. அவளுக்கு இதெல்லாம் புதிது. அவள் புதூருக்கு திருமணமாகி வந்தே ஒருமாதம்தான் ஆகிறது. இந்த ஒருமாதமும் இதே அவஸ்தைதான். அதுவும் வந்த முதல்வாரத்தில் விருந்துச்சோறு தின்று வயிறு காற்றடைந்து கெட்டுக்கிடந்தது. இரவாகி பொழுது விழும்வரை நரகமாகக் கழிந்த நாட்கள் அவை.

    அவள் பிறந்த ஊரான கரட்டான்டிபட்டியில் இத்தனை பிரச்சனைகள் இல்லை. அங்கே சிறிய மலை ஒன்று இருப்பதால் அதன் பின்புறம் மறைவாக ஒதுங்குவது மிகப்பெரிய சவுகரியமாக இருந்தது. விடியும் வரை ஆண்கள் யாரும் மலைப்பக்கம் வரமாட்டார்கள்.

    குஞ்சக்கா ஓரிடத்தில் சற்று நின்றாள். சரசுவும் செல்வியும் அவளருகே சென்று சேர்ந்துகொண்டார்கள்.

    “என்னாச்சுக்கா”

    “ஒன்னுமில்ல புள்ளைங்களா.. சாரை ஒன்னு குறுக்கால போச்சு. அதான் சித்த நின்னேன்”

    “எங்க எங்க”? என்று சரசு துள்ளினாள்.

    “ந்தா.. சார ஒன்னுஞ்செய்யாதுன்னு எத்தன வாட்டி சொல்லிருக்குறேன். குதிக்காம வாடி. அசலூருக்காரிகூட அலுங்காம வாரா. உள்ளூருக்காரிக்கு என்ன நோப்பாளம் வந்துச்சின்னு கேக்குறேன்.”

    வாய்க்கால் பாலம் கடந்து அடைந்த தார்சாலையில் குளிர்ச்சி பூசியிருந்தது. அங்கங்கே தலையில் வெளிச்சப்புள்ளி சுமந்து அலைந்துகொண்டிருந்தன மினுக்கட்டாம் பூச்சிகள். பக்கத்து ஊரான பாலையூர் மசூதியிலிருந்து பாங்கொலி சன்னமாக கேட்டது. இன்று தாமதமாகிவிட்டது. வழக்கமாக திரும்பிச்செல்லும்போதுதான் இந்த பாங்கொலியை கேட்கநேரும். தூரத்தில் பைப்பாஸ் ரோட்டில் லாரிகள் விரையும் சப்தம் கேட்டது. சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துக்கொண்டு சாலையோரமாக ஆளுக்கொரு பக்கமாக மூவரும் …

    செல்விக்கு அழவேண்டும்போலிருந்தது. சின்ராசிடம் ஜாடைமாடையாக சொல்லியாயிற்று. புரிகிறாமாதிரி தெரியவில்லை. மாமியார் ஒரேவரியில் முடித்துக்கொண்டாள்.

    “இந்த ஊருக்கு நா வாக்கப்பட்டு வந்து எத்தன வருசமாச்சுன்னு ஒனக்குத்தெரியுமா ? இன்னிவரை எனக்கு அதான். நம்மூரு பொம்பளைங்க எல்லாத்துக்கும் அதேதான். இல்ல நீதா சமீந்தாரு ஊட்லயிருந்து வந்தியோ?”

    அவள் கூறியதும் உண்மைதான். ஊரில் ஒன்றிரண்டு மச்சுவீட்டில்தான் கழிவறைகள் இருக்கிறது. மற்றெல்லோருக்கும் இப்படிப் பொதுவெளிதான்.

    குஞ்சக்கா ஒருமுறை சொன்னாள்.

    “கவர்மென்டுல கட்டடம் கட்டியுட்ருக்காங்க புள்ள. கூறில்லாத பயலுவ. ஊர் எல்லையில சுடுகாட்டுல கொண்டுபோயில்ல கட்டிவச்சிருக்கானுங்க. வெடிஞ்சும் வெடியமின்ன பொம்பளையாளுங்க எப்புடிப் போவாங்கன்னு யோசன வேணுமா இல்லியா ? என்னையெல்லாம் இந்த ஊரே வாயாடின்னுதான் பேசும். ஆனா அதுக்காவ பேயிபிசாசுங்ககூடபோயி என்னத்தை வாயாட ? பத்தாததுக்கு எளந்தாரிப்பயலுவ எல்லாரும் அங்க இருந்த தண்ணிக்கொழாயையெல்லாம் ஒடச்சு எடைக்கி போட்டு சாராயம் குடிச்சுப்புடுச்சிங்க.”

    சரசுவிற்கு முடிந்திருக்கவேண்டும். எழுந்து நின்றுகொண்டு சுற்றிலும் பார்த்தபடியிருந்தாள். திடீரென பளாரென்று ஹெட்லைட் வெளிச்சமும் பெரிய ஹாரன் சவுன்டுமாக செவலூர் செல்லும் முதல் பஸ் வந்தது.

    செல்வியும் குஞ்சக்காவும் அவசரமாக எழுந்து சாலையின் விளிம்பில் நின்றுகொண்டார்கள். ஹாரன் அளவிற்கு வேகமில்லாமல் நிதானமாக வந்தது பஸ்.

    டீசல் வாசனையும் வெளிச்சமும் ஜன்னல் தலைகளுமாக அது கடந்தபின் மறுபடி சூழ்ந்த இருள் முன்னைவிடக் கருமையாக இருந்தது. செல்விக்கு ஜன்னல் தலைகளைக் கண்டு அவமானம் பிடுங்கியது. வானத்தில் இப்போது நட்சத்திரங்கள் மறையத்தொடங்கின.

    சரசு அவசரமாக கீச்சுக்குரலில் கத்தினாள்.

    “யக்கா யக்கா ஆளுக வராங்க.”

    பட்டென்று மறுபடி எழுந்துகொண்டார்கள். நல்லவேளை சப்பாணிதான் இரண்டு மாட்டை வயலுக்கு ஓட்டிசென்றான். இவர்களை கடக்கும்போது மாட்டின் கழுத்துமணி ஓசைஅதிகமாக கேட்டது.

    காலை ஒருபக்கமாக இழுந்தபடி இவர்களைப்பார்த்தும் பாராததுபோல ட்ரோய் ட்ரோய் என்று மாடுகளை ஓட்டிச்சென்றான். அவன் தலைமறையும்வரை அடிவயிற்றுச் சங்கடத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆண்களுக்கு பிரச்சனையில்லை. விடிந்தபிறகுகூட கம்மாயி பக்கம் ஒதுங்கிவிட்டு தம்புரான் கேணி பம்புசெட்டிலோ கம்மாயித்தண்ணியிலோ கழுவிக்கொண்டு வீடுசேர்ந்துவிடுவார்கள்.

    பெண்களெல்லாம் கம்மாயிபக்கம் செல்லமுடியாது. அங்கிருக்கும் தீமரம்தான் காரணம். போனவாரம் சுப்பன் அதனடியில்தான் ரத்தம்கக்கி இறந்துகிடந்தான். டாக்டர் மாரடைப்பு என்றார். ஆனால் ஊருக்குள் கருப்பு அடித்துவிட்டதாகத்தான் பேசிக்கொண்டார்கள். சப்பாணி கண்ணைவிட்டு மறைய மறுபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொண்டார்கள்.

    இது ஒரு இம்சை. சிலநாட்களில் சுலபத்தில் வெளியேறாது. நம் சங்கடங்களெல்லாம் அதற்கெப்படித் தெரியும் ? ஆனால் உந்துதல் இருந்தாலும் இல்லாவிட்டால் உட்கார்ந்துவிட்டுத்தான் போகவேண்டும். இந்த கருக்கலை விட்டால்மறுபடி இரவுதான் சந்தர்ப்பம் வாய்க்கும். நடுவில் வயிறு சங்கடம் செய்தால்தான் நிரம்பச்சிரமம். கொள்ளை படல் மறைவில் மூத்திரம்போகத்தான் சாத்தியம்.

    இதுமாதிரியான நேரங்களில் சின்ராசு செல்வியின் முகம் பார்ப்பதை தவிர்த்துவிடுவான்.

    “கோவிச்சுக்காத புள்ள. இருக்குறதே பொறம்போக்கு குடிசை. கக்கூசு எல்லாம் கட்டமுடியாது. டவுனுல வீடு பார்த்துக்கிட்ருக்குறேன். கொஞ்சநாளிக்கி அட்சசு பண்ணிக்க செலுவி” என்று உறுதியாக சொல்லிவிட்டான்.

    சின்ராசு நல்லவன். இவள்மீது மிகுந்த பிரியமுள்ளவன். தினசரி வரும்போது டவுனிலிருந்து இவளுக்குப் பிடித்த காராச்சேவு எல்லாம் வாங்கிவந்த்து தருவான். ஆரம்பத்தில் செல்விக்கு தன் அப்பாமீதுதான் கோபமாக வந்தது. வெளிவாசல் போகக்கூட சாத்தியமில்லாத ஊரில் கட்டிக்கொடுத்துவிட்டாரே என்று.

    சரசு ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்தது.

    “வெய்யக்காலத்துல தொல்லயில்ல செலுவி. மழக்காலந்தான் ரெம்பக்கஷ்டம். மேல மழத்தூத்தும். கீழச் சேறு வளுக்கும். பூச்சிங்களா ஊறிட்டுத்திரியும். தேளுக்கும் பூராணுக்கும் தப்பிச்சி ஒக்காந்து எந்திரிச்சி போவுறதுக்குள்ள பாதி உசுரு போயிரும்”

    செவலூர் பஸ் மறுபடி அதே ஹாரன் சத்தமும் லைட் வெளிச்சமுமாக ஊரிலிருந்து திரும்பியபோது மீண்டும் எழுந்துகொண்டார்கள். குஞ்சக்கா கெட்டவார்த்தை ஒன்றைச் சொல்லி காறித்துப்பினாள்.

    பஸ் வேகமாக கடந்துசென்றபின்பு டாட்டா எஸு ஒன்றும் எதிர்ப்புறமாக ஊர்நோக்கிச்சென்றது. வானில் மெல்ல வெளிச்சம் வரத்தொடங்கிவிட்டது. குஞ்சக்கா கேட்டாள்.

    “முடிஞ்சிருச்சா செலுவி. கெளக்கு வெளுத்துட்டு. ஜனம்மெல்லாம் வர ஆரம்பிச்சிரும் வெரசாக் கெளம்பு” என்று எச்சரித்தபடி எழுந்து நின்றுகொண்டாள்.

    சரசுவும் குஞ்சக்காளும் நிற்க தான் மட்டும் உட்கார்ந்திருக்க என்னமோ போலிருந்தது செல்விக்கு. அவளும் மெல்ல எழுந்துகொண்டாள். மறுபடி வந்த வழியில் நடந்தபோது ஊர் விழித்துக்கொண்டுவிட்டது. ஆலமர மேடையில் நாலைந்துபேர் வாயில் ஆலங்குச்சியை மென்றபடி உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். மரத்தின்மேல் கணக்குவழக்கின்றி கிளிகள் கத்தியபடி பறந்துகொண்டிருந்தன. டாட்டா ஏஸில் ஆறுமுகஞ்செட்டியார் தக்காளி கூடைகளை ஏற்றிக்கொண்டிருந்தார்.

    மேலத்தெருவில் ஊர்த்தலைவர் வீட்டு காரின் முன் கண்ணாடியில் பனிபடர்ந்து நீர்க்கோடுகளாக வழிந்திருந்தன. பிள்ளையார்கோவில் சிமெண்ட்டுத்தரை கழுவப்பட்டு ஈரமாக இருந்தது. பாயம்மாள் சந்தில் அந்த நாய் சாதுவாக படுத்துக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் முன்பு ஆக்கிரோஷமாக குரைத்தது அதுதான் என்று சொன்னால் யாராலும் நம்பமுடியாது.

    வீட்டிற்கும் முன்பாக சந்தில் சின்ராசு மினிடோரைத் துடைத்தபடி நின்றுகொண்டிருந்தான். செல்வியை பார்த்து சங்கடமாக ஒரு புன்னகை செய்தான். செல்வி கொள்ளைக்குச்சென்று இரண்டு சொம்பு தண்ணீர் விட்டுக்கொண்டு அடுப்பை பற்றவைத்து டீ போட்டு கொண்டுவந்து சின்ராசிடம் கொடுத்தாள். சின்ராசு டீயை வாங்கிக்கொண்டு அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

    இந்த பிரியத்திற்காக எதைவேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ளலாமென்று தோன்றியது அவளுக்கு. வீடுகளில் எப் எம் ரேடியோக்கள் அலறத்தொடங்கின. கிராமங்களின் வளர்ச்சி மேம்பாட்டிற்கான புதிய திட்டமொன்றிற்கு பிரதமர் 200 கோடி ஒதுக்கியிருப்பதாக ரேடியோச் செய்திகள் தெரிவித்தன.

    Share
  • எனக்காக மரித்தவன்

    கனவு திறவோன்.

    ‘அப்பா அப்பா எழுந்திருங்கப்பா என்னப்பா ஆச்சு… ஐயோ அசையவே மாட்டேங்குறாரே’ என்று ஓலமிட்டு அழுகிறாள் என் மனைவி. கல்யாணம் கட்டியது முதல் ‘மாமா’ என்று தான் அவள் என்னைக் கூப்பிடுவாள். ஆனால், அவள் அப்பா போன வருடம் இறந்ததிலிருந்து என்னை ‘அப்பா’ என்று கூப்பிட ஆரம்பித்தாள். நான் ஓரமாக அந்த அறையின் மூலையில் பீரோவுக்கு அருகில் நிழலாய் நின்று கொண்டிருகிறேன். என் பிள்ளைகள் கட்டிலில் மல்லாந்து கிடக்கும் என் உடலையும் என் மனைவியையும் மாறி மாறி அதிர்ச்சியாய்ப் பார்க்கிறார்கள்.

    ‘குமுதன் பக்கத்து வீட்டு அங்கிள கூப்பிடேன்…’

    என் முதல் மகன், குமுதன் வாசலை நோக்கி ஓடுகிறான். நான் அவனைத் தடுக்க நினைக்கிறேன். அஃது இப்போது முடியாதல்லவா. கையாலாகாதவனாய் கடிவாளம் போட்டுக் கொண்டேன்.

    பக்கத்து வீட்டு நண்பர் சாமிநாதன் பதட்டத்துடன் குமுதனுக்கு முன்னால் ஓடி வருகிறார்.

    ஆர்வமாக எட்டிப் பார்க்கிறேன். என்ன நடக்கப் போகிறது?

    ‘கட்… ராஜன் ஸார்… நீங்க பிரேமுக்குள்ள வர்றீங்க… கொஞ்சம் பின்னாலப் போங்க அல்லது இங்க வந்திடுங்க…’

    டைரெக்டர் மைக்கில் கத்தினார்.

    நிகழ்வில் ஒன்றி இரண்டு எட்டு முன்னால் வந்திருந்ததை அப்போது தான் உணர்ந்தேன்.

    ‘இன்னொரு ஷாட் போகணுமா?’

    ‘இல்ல ஸார் சீன் சூப்பரா வந்திருக்கு… நீங்களே நடிச்சிருக்கலாம்… டூப் போட்டதால… ஒர் ஆங்கிள்ல தான் கேமரா வைக்க முடிஞ்சுது அதுவும் லாங் ஷாட்டுல…’ என்று அலுத்துக் கொண்டார் டைரக்டர்.

    இப்படித்தான் பல நேரங்களில் டூப்பாய் மனிதர்கள் மரிக்கிறார்கள்.

    Share
  • ஒன்று எங்கள் ஜாதியே …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    ஒன்று எங்கள் ஜாதியே

     

    ஒன்று எங்கள் ஜாதியே …

    ஏனைய கவிஞர்களிலிருந்து கண்ணதாசன் வேறுபட்டு தனித்துவமாக தெரிவது ஏன் தெரியுமா? கருப்பொருளை … கதையின் உட்கருத்தை உள்வாங்கி… உரிய வார்த்தைகளை பல்லவியில் தொட்டு… ஒவ்வொரு வரியிலும் அதன் சாரத்தையிட்டு மகத்துவம் காண்பிக்கிறார் பாருங்கள்.

    ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
    உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

    சாதிஎனும் நோயால் சமுதாயம் அவதிப்படும் நிலையில்… அனைவரையும் ஒருமிக்க கவிஞர் கையிலெடுக்கும் ஆயுதம் உழைப்பு ஒன்றுதான்… உழைக்கின்ற அனைவருமே ஒருவர் பெற்ற மக்களே என்று நீதி கூறி நிலை நிறுத்துகிறார்.

    வெள்ளை மனிதன் வேர்வையும்
    கருப்பு மனிதன் கண்ணீரும்
    உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே

    இரத்தம் எல்லோருக்கும் சிவப்பு என்பது போல… உழைப்பால் வருகின்ற வியர்வையும் ஒன்றுதானே… ஏழ்மை பணக்காரன் என்கிற வர்க்க பேதத்தால் பிரிந்து கிடக்கும் இரண்டு துருவங்களையும் இணைக்கின்ற அருமையான சிந்தனை…

    ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்
    அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
    மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான்

    நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
    இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
    வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆள போகிறான்

    ஒரு திரைப்பாடலாசிரியன் சொல்கின்ற கருத்துக்களா இவை… அல்ல… அல்ல… ஒரு வகுப்பு ஆசிரியர் சொல்லும் கருத்து முத்துக்கள். இவற்றையெல்லாம் கொட்டிவைத்து அறிவியலின் அரிச்சுவடி எழுதிவைக்க… அனைத்து வரிகளுமே அற்புத ரகம்தானே…

    மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
    மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே
    எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே

    கல்லில் வீடு கட்டித்தந்து எங்கள் கைகளே
    கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே
    இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே

    முடியாட்சிக்கு முடிவு கட்டி … மக்களாட்சிக்கு வரவேற்பு தந்து இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்க… நம்மை நாமே ஆள்வது என்கிற சமத்துவ சமுதாய ஆட்சிக்கு அடிகோலும் வரிகள்… இது தவிர… தான் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்கு … அதன் திட்டங்களை பாடல் வரிமூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையை எத்தனை நேர்த்தியாக கையாள்கிறார் பாருங்கள்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல்களுக்கே உரித்தான அனைத்து அம்சங்களும் கண்ணதாசன் வரிகளில் நிறைக்க… மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்க வளமையான தம் குரல்களால் வாரிக்கொடுத்திருக்கிறார்கள்…டி எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி.

    கவியரசே உன் பாணியில் சொன்னால் … மானுட இனமெல்லாம் ஒரு ஜாதியே!!

    அஹா ஆஆஆஆஆஆஆ அஹா ஆஆஆஆஆஆஆ
    ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ

    ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
    உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
    ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
    உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

    வெள்ளை மனிதன் வேர்வையும்
    கருப்பு மனிதன் கண்ணீரும்
    உப்பு நீரின் வடிவிலே
    ஒன்று சேரும் கடலிலே

    ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
    உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
    உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

    ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
    அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான்
    மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கிப் பொன்னைத் தேடினான்
    நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
    இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான்
    வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
    வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்

    ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
    உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
    உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

    மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
    மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
    எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
    கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
    கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
    இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
    இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே

    ஆஆஆ ஆஆஆ அஹ்ஹா அஹஹா லலலா லலலா லலலா லலலா

    ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
    உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
    உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

     

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    பாடல்: ஒன்று எங்கள் ஜாதியே
    படம்: பணக்காரக் குடும்பம் (1964)
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
    காணொளி: https://www.youtube.com/watch?v=XmSJf2NVz5g

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    https://www.youtube.com/watch?v=XmSJf2NVz5g

    Share
  • திருவாஞ்சியம்

    பவள சங்கரி

    தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம்
    முல்லை வனம் கூடல் முதுகுன்றம் நெல்லைகளர்
    காஞ்சி கழுக்குன்றம் மறைக்காடு அருணை காளத்தி
    வாஞ்சியம் என முத்தி வரும்.

    avanji

    நம் தென் இந்தியாவில் திரும்பிய புறமெல்லாம் எண்ணற்ற திருத்தலங்கள் இருப்பதை நாமறிவோம். ஆனால், தர்மராசர், நீதிமான் என்று போற்றப்படுகிற, செல்வந்தன், வறியவன், ஞானி, அஞ்ஞானி என்ற பாரபட்சம் ஏதுமின்றி அவரவர் விதியை முடித்து வைப்பவர் எமதர்மராசர் என்ற இவருக்கென்று தனியொரு ஆலயம் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வகையில் இக்கோவில் மிகவும் தனிப்பட்ட ஒரு கோவில். திருவாரூர் மாவட்டத்தில், முடிகொண்டான் மற்றும் புத்தாரு எனும் ஆறுகளுக்கிடையே எழும்பியிருக்கும் திருவாஞ்சியம் எனும் இத்திருத்தலத்தில்தான் எமதர்மராசருக்கான தனிப்பட்ட ஆலயம் அமைந்துள்ளது. சிவபெருமானார், அன்னை பார்வதி தேவியாரிடம், காசியைக்காட்டிலும் மிகச் சிறந்த தலமான ‘திருவாஞ்சியம்’ தாம் மிகவும் விரும்பி உறையும் திருத்தலம் என்று சொல்லியிருக்கிறார். வாரனாசிக்கு ஈடாகக் கருதப்படும் ஆறு புனிதமான தலங்கள், காவிரிக் கரையில் அமைந்துள்ள திருவெண்காடு, திருவையாரு, சாயாவனம், மாயூரம், திருவிடைமருதூர் மற்றும் திருவாஞ்சியம் என்பதாம். இவையனைத்திலும் திருவாஞ்சியம் தனிச்சிறப்பு பெற்றதாம்.

    ShriVanjiyam

    ‘திருவாஞ்சியம்’ என்ற இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள லிங்க வடிவம், சுயம்புவாகத் தோன்றிய, உலகிலேயே மிகப்பழமையான 64 ஆலயங்களில் ஒன்று. திருவாஞ்சிய நாதரின் பெயர் சொன்னாலே முக்தி கிடைக்கும் என்ற அளவில் காசி திருத்தலத்தைக்காட்டிலும் 1000 மடங்கு மகிமை வாய்ந்ததாம் இத்தலம். காவேரி நதியின் தென்புறம் அமைந்த தலங்களுள் திருவாஞ்சியம் 70 வது தலம் என்று திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலயம், சோழர் காலத்தில் இராச கம்பீர சதுர்வேதி மங்களம் என அழைக்கப்பட்டுள்ளது. திருவாஞ்சியத்தில் ஒரு கணமேனும் வசித்தாலோ அன்றி நினைத்தாலோ, ஐயனின் திருநாமத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்தாலோ பாவம் நீங்கி முக்தி பெறலாம் என்றும் இதனை ‘பூ கைலாயம்’ என்றும் அகத்திய முனிவர் உரைக்கிறார். அந்த வகையில் திருவாஞ்சியம் ஈடு இணையற்ற ஒரு ஆலயம் என்று புராணங்கள் உரைக்கின்றன. மகாலட்சுமியை அடைய விரும்பி திருமால் தவம் இருந்ததால் இத்தலம் திருவாஞ்சியம் என்று பெயர் பெற்றுள்ளது. பிரமன், திருமால், சூரிய பகவான், தேவர்கள் என அனைவரும் சிவனருள் பெற்ற சிறப்பான தலம் இது. சந்தன மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் கந்தாரண்யம் என வழங்கப்படுகிறது.

    அமைவிடம்: திருவாஞ்சியம் எனும் இப்புண்ணியத்தலம், தமிழகத்தில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து 31 கி.மீ தொலைவில் நன்னிலம் வழியாக செல்ல வேண்டும். நன்னிலம் இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

    avana

    மூலவர் : திரு வாஞ்சிநாத சுவாமி (சுயம்புலிங்கம்)
    அன்னை: திரு மங்களாம்பிகை – மருவார்குழலி
    தலவிருட்சம் ; சந்தன மரம்
    தீர்த்தம் ; குப்தகங்கை, எம தீர்த்தம்
    விசேச மூர்த்தங்கள் ; எமதர்மராசர், சித்ரகுப்தர், யோக பைரவர் (அமர்ந்த திருக்கோலம்) மகாலட்சுமி, மகிசாசுரமர்த்தினி, ராகு, கேது.
    பாடல் : நாயன்மார்கள் நால்வராலும் பாடல் பெற்றதோடு, அருணகிரிநாதர், இராமலிங்க சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், கோவை சிவராம பிள்ளை ஆகியோரும் பாடியுள்ளனர்.
    காலம்: நான்கு யுகங்களிலும் சிறப்புப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

    avanjiya

    திருவாஞ்சியத்தில் நான்கு வீதிகளுடன், கிழக்கு திசையை நோக்கி 110 அடி உயர ஐந்து நிலை ராசகோபுரம் அமைந்துள்ளது. இராச கோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன், கங்கை பிரகாரத்தில் வடபுறம் குப்த கங்கையும், கரையில் கங்கைக்கரை விநாயகரும், தென்புறத்தில் அக்னி மூலையில் எமதர்மராசர் மற்றும் சித்ரகுப்தர் அமர்ந்த திருக்கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கின்றனர்.

    aku

    ஆலயத்தின் இரண்டாம் கோபுர நுழைவாயிலில் இடது புறம் அபயங்கர விக்னேசுவரரும், வலது புறம் பாலமுருகனும், இரண்டாம் பிரகாரத்தில் இடது புறம் நட்டுவன் விநாயகர், வலது புறம் அருள்மிகு மங்களாம்பிகையும் எழுந்தருளியுள்ளனர். இடது புறம் மடப்பள்ளியும், வலதுபுறம் பள்ளியறையும் அமைந்துள்ளது. இரண்டாம் பகுதியில் கொடி மரம், பலிபீடம், நந்திகேசுரர் அலங்கார மண்டபம் அமைந்துள்ளது.

    avi

    ஆலயத்தின் மூன்றாம் கோபுர வாயிலில் இரட்டை விநாயகர், அதிகார நந்தி, மூன்றாம் பகுதியில் நர்த்தன மண்டபத்தில் ஒரு நந்தியும், மகா மண்டபத்தில் துவாரபாலகர்கள் மற்றும் கருவறையில் திருவாஞ்சிநாதரும் அருள்பாலிக்கின்றனர். சுவாமியின் வலது புறம் சோமாசுகந்தர் சந்நிதியும், முகப்பில் வெண்ணெய் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். உட்பிரகாரத்தில் தென்திசை நோக்கியவாறு தட்சிணாமூர்த்தியும், கிழக்கு நோக்கி காசி விசுவநாதர் சந்நிதியும், திருமாலப்பத்தியில் 63 நாயன்மார்களும், ஒன்பது தொகையடியார்களுடன், உமாமகேசுவரரும் காட்சியளிக்கின்றனர். மேற்கு உள்பிரகார நிருதி மூலையில் சந்திரமௌலீசுவரர், கன்னிமூலை கணபதி, சட்டநாதர், மீனாட்சி சொக்கநாதர், வள்ளி தெய்வானையுடன் சண்முகர், மகாலட்சுமியும் தனித்தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.

    வடக்கு உட்பிரகாரத்தில் தென் திசை நோக்கி சனி பகவானும், பஞ்சலிங்கங்கள், துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.

    DSC_0042[1]

    உள்வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுரரும், கிழக்கு நோக்கி மகிசாசுரமர்த்தினியும், சூரியன், சந்திரன், யோக நிலையில் பைரவர், இராகு, கேது சந்நிதியும், தெற்கு முகமாக ஆடல் அரங்குடன் அற்புதமான திருமேனியுடன் நடராசப் பெருமான் அருள்பாலிக்கின்றார்.

    இரண்டாம் சுற்றுப் பிரகாரத்தில் யாகசாலையும், மங்கள நாயகி அம்மன் சந்நிதியும் , மேற்கு கங்கை பிரகாரத்தில் கருவருத்தான் சந்நிதியும் அமைந்துள்ளன. அதாவது, 3 கோபுரம், 3 கட்டு சுற்றுச்சுவர்களுடன் 5.73 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இத்தலம்.

    கட்டிடக் கலை : இந்த ஆலயம் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டு திராவிட கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1120 அடி நீளமும், 640 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட பெரிய மதிற்சுவர், 558 அடி நீளம், 320 அடி அகலம், 30 அடி உயரம் கொண்ட உள் மதிற்சுவர், மூன்று கோபுரம், மூன்று பிரகாரங்களுடன் அமைந்து தூல, சூக்கும காரணம் எனும் மூவகை சரீரங்களை விளக்கும் கோயில்களுள் ஒன்றாகும்.

    DSC_0034[1]

    மேல் கோபுரத்தில் எண்கோண விமான அமைப்பும், ஐந்து தளங்களும் கொண்டாதாக உள்ளது. அர்த்த மண்டபம் 38 க்கு 29 என்ற அளவில் 10 தூண்களுடன் அமைந்துள்ளது. முதல் திருச்சுற்றில் 63 நாயன்மார்களும், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனீசுவரர், அட்டலிங்கங்கட்கு துணை கோட்டங்களும், இரண்டாம் திருச்சுற்றில் 109 அடி நீளம், 27 அடி அகல திறந்த வெளி மண்டபமும், மூன்றாம் திருச் சுற்றில் 440 அடி நீளம், 168 அடி நீளம் கொண்ட குப்தகங்கை எனும் திருக்குளமும், எமதர்மருக்கு ஏகதள விமானத்துடன் தனி சந்நிதியும் அமைந்துள்ளது. ஐந்து நிலைகளுடன், 110 அடி உயரம் உள்ள இராச கோபுரம் ஐம்பொறி தத்துவத்தை உணர்த்தக்கூடியது. பிற்கால சோழர் கட்டிடக் கலைக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    தட்சிணாமூர்த்தி திருமேனி கி.பி. 10ம் நூற்றாண்டு , பால சுப்பிரமணியர் 15, 16ம் நூற்றாண்டு மற்றும் துர்க்கை 13ம் நூற்றாண்டான, குலோத்துங்கன் கால சிற்பக்கலையைச் சார்ந்தது. ஆடல் வல்லான் நடராசப் பெருமானார் 108 சுவாலைகளுடன் 51 புள்ளிகளில் திருவாட்சியுடன் பஞ்ச உலோகத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றார்.

    சுயம்புவாகத் தோன்றியுள்ள இச்சிவலிங்கம், பிரளய காலத்தில் தேயு வடிவாகவும், கிருத யுகத்தில் இரத்தினமயமாகவும், திரேதாயுகத்தில் பொன்மயமாகவும், துவாபரயுகத்தில் வெள்ளிமயமாகவும், கலியுகத்தில் கல்மயமாகவும் காட்சியளிப்பதாக சாம்போபுராணம் திருவாஞ்சிய லிங்க மகிமை வருணனை 14ம் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றது.

    amman

    மருவார்குழலி என்று அழைக்கப்படும் அம்பிகையை, “மருவார்குழலே திருவாஞ்சை வாழ்வே வருக வருகவே” என பிள்ளைத்தமிழ் பாடுகிறது. அன்னை தானே மனம் விரும்பி இத்திருத்தலத்தில் விசுவேசுவரருடன் வாழ வந்ததால் வாழ வந்த நாயகி எனவும் கல்யாணி எனவும் போற்றப்படுகிறார். அன்னையே மாலை நேரத்தில் வெண்பட்டு உடுத்தி கலைவாணியாகக் காட்சியளிப்பதால் இவரை வணங்கினால் கல்வியும், செல்வமும், புகழும் மேம்படும் என்பது திண்ணம் என்கிறது சாம்போபுராணம்.

    கிருதாயுகத்தில் திருமாலிடம் கோபம் கொண்டு இலக்குமி தேவி மறைந்துவிட, தேவியார் இன்றி வாடிய திருமால் கண்ணபிரான் பல காலம் திருவாஞ்சியத்தில் பூசை செய்ய, அனைத்து தேவர்களும் சிவபெருமானை துதிக்க சிவபெருமானார் இலக்குமி தேவியின் கோபத்தை தீர்த்து, திருமாலுடன் சேர்த்து வைக்கிறார். இதனால் இத்திருத்தலம் திருவிழைந்ததென்று பொருள்படும் திருவாஞ்சியம் என்றாயிற்று. கண்ணனும், இலக்குமியும் நீராடிய திருக்குளம் கிருதயுகத்தில் மிகத்தூய புண்ணிய புசுகரணியென வழங்கலாயிற்று. அகலிகை, இந்திரன் சாபம் நீங்கிய வரலாறு போன்ற பல புராணக்கதைகள் வழங்கப்படுகின்றன.

    DSC_0039[1]

    ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களும் தனித்தனி மூர்த்தியாக, இணைந்து வீற்றிருந்து அருள்பாலிப்பதால், இரு கிரகத்திற்குரிய பரிகாரங்களையும் இங்கு செய்யலாம். இந்த அமைப்பு சண்ட ராகு என்றழைக்கப்படுகிறது.

    Yama

    திருவாஞ்சியத் திருத்தலத்தில் பைரவர் தனது கோலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் யோக பைரவராக மேற்கு பார்த்து அமர்ந்த நிலையில் யோக பைரவராக காட்சியளிக்கின்றார். சனீசுவர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர்.

    தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருத்தலம், 400 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலமும், பல கட்டளைகளும் கொண்டது. இங்கு தினசரி ஆறுகால பூசையும், செவ்வாய் கிழமைகளில் இராகு காலத்தில் துர்கா பூசை, ஆடிப் பூரம் 10 நாட்கள் உற்சவம், ஐப்பசி அன்னாபிசேகம், சூரசம்காரம், மாசி மகம் என அனைத்து உற்சவங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆலயம் காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    சமயக்குரவர்களில் நால்வர் என வழங்கும் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடப்பெற்ற வெகு சிலவேயான தலங்களில் சிறந்து விளங்குவது திருவாஞ்சியம்.

    DSC_0036[1]

    திருவாஞ்சியம் – 2-ம் திருமுறை

    வன்னி கொன்றை மதமத்த மெருக்கொடு கூவிளம்
    பொன்னி யன்றசடை யிற்பெ லி வித்த புராணனார்

    தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
    என்னை யாளுடை யானிட வுகந்ததே;
    (1)
    தென்றறுன் றும்பொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
    தென்று நின்றவிறையானை யுணர்ந்தபடி யேத்தவால்
    நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
    ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.

    திரு ஞான சம்பந்தர்

    படையும் பூதமும் பாம்பும் புல்வாய்அதள்-
    உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்,
    புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம்
    அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே

    பறப்பையும் பசுவும் படுத்துப் பல-
    திறக்கவும்(ம்) உடையோர் திகழும் பதி,
    கறைப் பிறைச் சடைக் கண்ணுதல் சேர்தரு
    சிறப்பு உடை, திரு வாஞ்சியம் சேர்மினே!

    புற்றில் ஆடு அரவோடு புனல் மதி
    தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி,
    சுற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம்
    பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே.

    அங்கம்ஆறும் அருமறைநான்குஉடன்
    தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்,
    செங்கண் மால இடம் ஆர், திரு வாஞ்சியம்
    தங்குவார் நம் அமரர்க்கு அமரரே.

    நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை
    ஆறு சூடும் அடிகள் உறை பதி,
    மாறுதான் ஒருங்கும் வயல், வாஞ்சியம்
    தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே.

    அற்றுப் பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு
    உற்ற நல்-துணை ஆவான் உறை பதி,
    தெற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம்
    கற்றுச் சேர்பசவர்க்குக் கருத்து ஆவதே.

    அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
    திருத்தும் சேவடியான் திகழும் நகர்,
    ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம்
    அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.
    திருநாவுக்கரசர்

    7.76 திருவாஞ்சியம்
    பியந்தைக்காந்தாரம் – சுந்தரமூர்த்தி நாயனார்

    1 பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு
    மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்;
    திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
    ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.

    2 தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென, இடி குரல் வெருவிச்
    செறுவில் வாளைகள் ஓட, செங்கயல் பங்கயத்து ஒதுங்க,
    கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்
    மறு இலாத வெண்நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே.

    3 தூர்த்தர் மூ எயில் எய்து, சுடு நுனைப் பகழி அது ஒன்றால்,
    பார்த்தனார் திரள் தோள் மேல் பல்-நுனைப் பகழிகள் பாய்ச்சி,
    தீர்த்தம் ஆம் மலர்ப் பொய்கைத் திகழ் திரு வாஞ்சியத்து அடிகள்
    சாத்து மா மணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே.

    4 சள்ளை வெள்ளை அம் குருகுதான் அது ஆம் எனக் கருதி,
    வள்ளை வெண் மலர் அஞ்சி, மறுகி, ஓர் வாளையின் வாயில்
    துள்ளு தெள்ளும் நீர்ப் பொய்கைத் துறை மல்கு வாஞ்சியத்து அடிகள்
    வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர், தாமே.

    5 மை கொள் கண்டர், எண்தோளர், மலை மகள் உடன் உறை வாழ்க்கைக்
    கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்,
    கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்,
    பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே?
    உரை

    6 கரந்தை கூவிள மாலை கடி மலர்க் கொன்றையும் சூடி,
    பரந்த பாரிடம் சூழ, வருவர், எம் பரமர், தம் பரிசால்;
    திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
    மருந்தனார், அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே.

    7 அருவி பாய்தரு கழனி, அலர் தரு குவளை அம் கண்ணார்,
    குருவி ஆய் கிளி சேர்ப்ப, குருகு இனம் இரிதரு கிடங்கின்
    பரு வரால் குதி கொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும்
    இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.

    8 களங்கள் ஆர் தரு கழனி அளி தரக் களி தரு வண்டு
    உளங்கள் ஆர் கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி,
    குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில், வாஞ்சியத்து அடிகள்
    விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே.

    9 வாழை இன் கனி தானும், மது விம்மி, வருக்கை இன் சுளையும்,
    கூழை வானரம் தம்மில், “கூறு இது சிறிது” எனக் குழறி,
    தாழை வாழை அம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள்,
    ஏழை பாகனை அல்லால் இறை எனக் கருதுதல் இலமே.
    உரை

    10 செந்நெல் அங்கு அலங்(கு) கழனித் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
    இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறைகழல் பரவும்
    பொன் அலங்கல் நல் மாடப் பொழில் அணி நாவல் ஆரூரன்
    பன் அலங்கல் நல் மாலை பாடுமின், பத்தர் உளீரே!

    திருவாஞ்சியம்

    இத்தலத்தில் மயிலின் முகம் பெருமானின் இடப்பாகம் உள்ளதால்
    அசுரமயில் எனப்படுகிறது

    அருணகிரிநாதர்

    தனதாந்த தத்த தனதன
    தனதாந்த தத்த தனதன
    தனதாந்த தத்த தனதன தனதான

    இபமாந்தர் சக்ர பதிசெறி
    படையாண்டு சக்ர வரிசைக
    ளிடவாழ்ந்து திக்கு விசயம ணரசாகி
    இறுமாந்து வட்ட வணைமிசை
    விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
    யெழிலார்ந்த பட்டி வகைபரி மளலேபந்
    தபனாங்க ரத்த வணிகல
    னிவைசேர்ந்த விச்சு வடிவது
    தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு வியபோது
    தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
    பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
    தனவாஞ்சை மிக்கு னடிதொழ நினையாரே
    உபசாந்த சித்த குருகுல
    பவபாண்ட வர்க்கு வரதன்மை
    யுருவோன்ப்ர சித்த நெடியவன் ரிஷிகேசன்
    உலகீன்ற பச்சை யுமையணன்
    வடவேங்க டத்தி லுறைபவ
    னுயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே
    த்ரிபுராந்த கற்கு வரசுத
    ரதிகாந்தன் மைத்து னமுருக
    திறல்பூண்ட சுப்ர மணியஷண் முகவேலா
    திரைபாய்ந்த பத்ம தடவய
    லியில்வேந்த முத்தி யருள்தரு
    திருவாஞ்சி யத்தி லமரர்கள் பெருமாளே.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”ஆழியில் தூங்கியொரு நாழி முழித்துலகை
    ஊழியி லுண்டு களைத்தவா -வாழிநீ
    உன்னை நினைந்து ருகியுறங்கு மென்னைநீ
    உன்கனவில் காண உறங்கு”….கிரேசி மோகன்….

    Share