பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே
ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே
விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா
கட்டங்கம் வெல் கொடி கொண்டானும் கொண்டானே
விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டியுழி
பொருள் விளக்கம்:
மனமொத்த அன்பு கொண்ட உமையவளை தன்னுடைய ஒரு பகுதியாக, கட்வங்கத்தடி கொண்டு பகையழித்து வெற்றிக்கொடி நாட்டும் சிவனும் கொண்டான். (அதுபோல,) தனது உடலை விட்டு நீங்காது உடலுடன் முற்றுமாக இணைந்துவிட்டவரைப் போன்றே தனது நட்புக்குரியவரைக் கருதி அன்புடையவர் நட்பு பாராட்டுவர்.
பழமொழி சொல்லும் பாடம்: அன்புடையவரின் நட்பின் திறமானது, தான் வேறு நண்பர் வேறென்ற எண்ணம் இல்லாததாக, நண்பரது வாழ்வின் இன்பதுன்பங்களை தன்னுடையதாகவேக் கருதும் சிறந்த நட்பாக இருக்கும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (குறள்: 788)
நழுவும் ஆடையைத் தடுத்து மானம் காக்க உதவும் கை போல, நண்பருக்கு வந்த துன்பத்தை தனதாகக் கருதி உதவச் செல்வதே நட்பென வள்ளுவர் கூறிய நட்பின் திறம் இப்பழமொழி கூறும் கருத்துடன் பொருந்துகின்றது.