இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(150)
–சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள் …
150 மடல்கள், 150 வாரங்கள் இனிய உறவுகளான உங்களோடு என் மனக்கருத்துகளை மடல் வாயிலாக நான் பகிரத் தொடங்கி இத்தனை காலங்கள் ஓடிப் போயினவா?
ஏதோ நேற்றுதான் சகோதரி பவளாவுடன் ஆரம்பித்தது இம்மடலின் துவக்கம்; 150 வார காலங்களுக்குள் எத்தனை எத்தனை நிகழ்வுகள்? எப்படி எப்படி நடந்து முடிந்து போயின.
நீர்க்குமிழி போன்ற இந்த வாழ்க்கையில் நாம் காணும் எத்தனையோ வண்ணக் கனவுகள் கறுப்பு வெள்ளையாய் முடிந்து போயிருக்கின்றன. அதே சமயம் எத்தனையோ கறுப்பு வெள்ளையாக ஆரம்பித்தவைகள் வண்ண நினைவுகளாகவும் மிளிர்ந்திருக்கின்றன.
என் அண்ணனின் இளம் மைந்தனின் மறைவு, என் நல் நண்பனின் அகால மரணம், என் மனைவியின் சித்தப்பாவின் மறைவு, என் மனைவியின் தந்தை… என் அருமை மாமனாரின் மறைவு என உள்ளத்தை உருக்கும் துயரமான நிகழ்வுகள் ஒரு புறம் …
என் அருமை மைந்தனின் திருமணம், அதன் மூலம் மருமகளாக எமக்கு வாய்த்த ஒரு அன்பு மகள் என உள்ளத்தை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லக்கூடிய மகிழ்வான கணங்கள் மற்றொருபுறம் …
அப்பப்பா! இவ்வாழ்க்கை எனும் பயணத்தில் எத்தனையோ உணர்வுகளின் கூட்டும் நிகழ்வுகள்.
ஆம், இது ஒரு மகிழ்ச்சியான பயணம்தான். இது எங்கே எவ்விதம் தொடங்கும் என்றோ, எங்கே எப்படி முடியும் என்றோ கணித்துக் கூறக்கூடியவர் எவருமே இல்லை எனலாம்.
இத்தகைய வாழ்க்கையிலே அடுத்தொரு துயரமிகு செய்தியாக எனக்கு நேற்று ஒரு செய்தி காதுக்கு எட்டியது.
ஆமாம் 83 வயதான எனது ஒன்று விட்ட சகோதரரின் மறைவு !
என் தாயாரின் மூத்த சகோதரியின் தலைப்பிள்ளை மூத்த மைந்தன். எனது தாய்வழி உறவில் குடும்பத்தில் மூத்தவர் எனும் அந்தஸ்து பெற்றவர். நானோ அதே வழியில் அனைவர்க்கும் இளையவன் எனும் அந்தஸ்தைப் பெற்றவன்.
எனக்கும் அவருக்கும் ஏறத்தாழ 24 வயதுகள் வித்தியாசம்.
நான் குழந்தையாக இருந்த போதே அவர் லண்டனுக்கு மேற்படிப்புக்காகச் சென்று விட்டார்.
எனக்கு அறிவில் முதிர்ச்சி ஏற்படும் வரை அவரைப் பற்றி பெயரளவிலேயே கேள்வியுற்றிருந்தேன்.
பின்பு அவர் இலங்கைக்கு விடுமுறையில் வரும்போது தனது சித்தியான என் அன்னையிடம் அடிக்கடி வந்து விடுவார். என் அன்னையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.
இலங்கையிலே எனது வாலிப வயதுகளை வீணாக்கி விட்டு ஏதாவது ஒரு வகையில் வாழ்வில் முன்னேற வேன்டும் என்பதற்காக தாய்மண்ணில் கல்வியைத் தொலைத்தவன் மேல்நாட்டில் அதைத்தேடி லண்டன் செல்ல முற்பட்ட வேளையது…
அப்போது லண்டனில் மாணவனாக நுழைவதற்கு வேண்டிய தகமைகளில் ஒன்றாக லண்டனில் எமக்க்குத் தேவையான வசதிகளை நல்கி எம்மை வழிநடத்துவதற்கு ஒருவர் கடித மூலம் உறுதிமொழி கொடுக்க வேண்டும். அதை ஆங்கிலத்தில் “ஸ்பான்சர் லெட்டர் ” என்பார்கள்.
லண்டனுக்கு வந்த பின்பு நாம் ஏதாவது ஏடாகூடமாகச் செய்து மாட்டிக் கொண்டால் அதற்கு அக்கடிதம் கொடுத்தவரே பொறுப்பாவார்..
அதனால் பலர் இதற்குத் தயங்குவார்கள்.
ஆனால் என் ஒன்று விட்ட அண்ணனிடம் எனது தேவையை எனது அன்னை தெரியப்படுத்தியதும் எதுவித தயக்க்கமுமின்றி உடனடியாக எனது தேவையைப் பூர்த்தி செய்தவர் அவர்.
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிலையில் எடுக்கும் ஒரு தீர்மானம் அவனை கீழ்நிலைக்குத் தள்ளும் அல்லது மேல்நிலைக்குக் கொண்டு செல்லும்.
அத்தகையதோர் முக்கியமான சந்தியில் யார் எமக்குக் கை கொடுக்கிறார்களோ, எமது வாழ்க்கையின் மாற்றத்திற்கு முக்கிய காரணமானவர்களோ அவர்களை நாம் மறக்கக் கூடாது என்று என் தந்தை எனக்கு அடிக்கடி சொல்லும் ஒரு அறிவுரை எப்படியோ என் மனதில் தங்கி விட்டது.
அதனால் லண்டன் வந்ததும் அவருக்கு நான் ஒவ்வொரு முறை எனது மாணவ விசா அனுமதி புதுப்பிக்கப்பட்டதும் தொலைபேசியில் நன்றி சொல்வதுண்டு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவப் பெண்மணியே எனது அண்ணியாவார். என் அண்ணனுக்கேற்ற அருமையான பண்புகள் அனைத்தையும் அண்ணியும் கொண்டிருந்தார்.
இலண்டன் மாணவ வாழ்க்கை என்பது நான் வந்த காலகட்டங்களில் மிகவும் சிரமான ஒன்று. கல்லூரிக்குச் சென்று படிப்பது மட்டுமன்றி எமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஒய்வுள்ள நேரங்கள் அனைத்தும் ஏதாவது ஓரிடத்தில் பகுதி நேர ஊழியம் செய்ய வேண்டியது அக்காலத்தின் கட்டாயம்.
இது எனக்கு மட்டுமல்ல அக்காலகட்டத்தில் இங்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான என் தாய்நாட்டுச் சகோதர, சகோதரிகளுக்கும் உள்ளான நிலையே.
அதனால் எனது அண்ணனுடனான தொலைபேசித் தொடர்பு கூட எப்போதாவது ஒருமுறைதான் நிகழும்.
இந்நிலை மாறியது என் திருமணத்தின் பின்னால். நான் திருமணம் புரிந்ததும் அவருடன் ஒருநாள் பேசும் போது நான் அவருடன் தொடர்பு கொள்வது எப்போதாவது என்பது பற்றி மிகவும் கடிந்து கொண்டார்.
அப்போதுதான் எனது போக்கின் தவறு புரிந்தது. அது மட்டுமல்ல அப்போது என் தவறை அழகாகச் சுட்டிக்காட்ட என் மனைவி என் கூட இருந்தது எனது புரிந்துணர்வை கூட்டியது.
அதன் பின்னால் அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தேன். வைத்தியரான அவருடன் ஏதாவது வைத்திய சம்பந்தமான பிரச்சனை இருந்தால் கலந்துரையாடுவேன் மிகவும் அன்பாக அறிவுரைகள் வழங்குவார்.
எல்லோருடனும் மிகவும் அன்பாகப் பழகும் சுபாவம் படைத்த என் மனைவியின் மீது என் அண்ணனும், அண்ணியும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.
இலண்டனில் தங்கியிருந்த என் பெற்றோர் உடல்நிலை தளர்ந்திருக்கும் வேளையில் தன்னால் முடிந்த வேளைகளில் அவர்களை வந்து பார்ப்பார்.
என் மகன் டாக்டராகப் பட்டம் பெற்றதும் நானும் என் மனைவியும் அவனை அழைத்துச் சென்று அண்ணனிடமும், அண்ணியிடமும் ஆசீர்வாதம் பெற்றோம்.
அப்போது தனது வைத்தியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த அவர் தன்னிடமிருந்த வைத்திய சம்பந்தமான நூலை என் மகனுக்குக் கொடுத்து ஒரு நல்ல டாக்டாராக பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை தனது நாற்பது வருடகால சேவையின் அனுபவங்களைக் கூறி விளக்கியது இன்னும் என் மனதில் நிலை கொண்டுள்ளது.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னனதாக தனது மனைவியை புற்றுநோய்க்கு பலி கொடுத்த அவரின் உடல்நிலை அதன் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைந்து வந்தது.
எப்போதும் தானே தனது தேவைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் இங்கிலாந்தில் ரெடிங் எனும் இடத்திலுள்ள வைத்தியசாலையில் இறைபதமடைந்தார்.
அவரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.
அன்புச் சகோதரனே !
சக உதிரத்தில் உதிக்கவில்லை
சகோதரனாக மிளிர்ந்தாய்
என் வாழ்க்கைத் தோட்டத்தில்
மலர்ந்த செடிகளுக்கு நீயும்
நீர் வார்த்திருக்கிறாய் என்பதுவே
யதார்த்தமான உண்மை
உண்மை, உழைப்பு, நேர்மை
எனும் பொறுப்பான ஆயுதங்களுடன்
வாழ்க்கை எனும் களத்தில்
அகவைகள் எண்பத்து மூன்று
ஆற்றியது ஒரு போராட்டமே
மூத்தவனாய் நீ சென்ற
அடிகளில் தொடர்ந்து
இளையவன் நானும் செல்ல
தொடர்ந்து ஆசிகள் அளிப்பாய்
ஞானமாய் உதித்த உன் சொற்கள்
ஞானேஸ்வரன் உனை எனக்கு என்றும்
ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும்
வைத்தியனாய் நீ ஆற்றிய தொண்டு
வையத்தில் தமிழனாய் உனை என்றும்
தலைநிமிர்த்தி வைக்கும்
என் அன்பு ஞானேஸ் அண்ணா
என்றும் எப்போது நல்லறிவு வேண்டுமெனில்
உன்னுடன் ஒரு உரையாடல் போதுமே !
உள்ளத்தில் அமைதி பொங்குமே !
அன்னம்மா ! அன்னம்மா என்றெனது அன்னையை
உன் சிற்றன்னையை அன்புடன் நீ விளிக்கும்
சொற்களை இனி எப்போது
என் செவி மடுக்கும்?
வந்தவர் எல்லாம் செல்வது நியதி
இருப்பினும் சிலரின் இழப்பு
நெஞ்சினில் நீங்காத வடுவை
நீக்கமற நிறுத்தி விடும்.
அவர்களில் என் அண்ணா
நீயும் ஒருவனென்பேன்.
உன் ஆத்மசாந்திக்காய்
கண்ணீர் அஞ்சலிகளோடு. . . .
என் இனிய உறவுகள் உள்ளத்தை உருக்கும் துயரத்தை இம்மடல் வாயிலாக உங்கள் முன்றலில் இறக்கி வைத்து இளைப்பாற சந்தர்ப்பமளித்த உங்களுக்கும் என் இனிய வல்லமை ஆசிரியர் குழுவிற்கும் எனது பணிவன்புடன் கூடிய தாழ்மையான நன்றிகள்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
அன்பிற்கினிய சகோதரர் சக்தி சக்திதாசன் அவர்களே….
எழுத்துக்கள் சொல்கின்றன
இழப்பின் வலியை!
வாழ்வின் நிலையில்
வருவதும் போவதும்
கடந்திருக்க…..
வார்தைகளும் வலி சுமக்கின்றன சில வேளைகளில்!
அன்னாரை இழந்து வாடும் உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
அன்புடன்
சுரேஜமீ
சக்திதாசன் அவர்களே வணக்கம். உங்கள் சகோதரர் ஞானேஸ்வரரின் பிரிவிலும் உங்கள் தமிழ் பற்றும், உங்கள் மகனுக்கு திரு ஞானேஸ்வரர் விட்டு சென்ற ஞானோபதேசம், அவர் மகன் மூலமும் வாழையடி வாழையாக வாழ்ந்து கொண்டேயிருக்கும், அது இங்கிருந்தாலும் இங்கிலாந்திருந்தாலும், எங்கிருந்தாலும். உங்களின் நன்றி உணர்வும், பாசமும், தமிழும் ததும்பி விளையாடுவதை ரசிப்பது மட்டுமில்லை நானும் தமிழாற்றலில் மோகம் கொண்டேன். எனது கதை கிடைத்திருக்கும், படித்திருப்பீர்களென நம்புகிறேன். தினம் தினம் புதிது புதிதாய் கவிதைகளை சேர்த்து கொண்டே இருக்கிறேன். இன்று காலை 5.30 மணிக்கு கூட.
`நீங்கள் தமிழ் பத்திரிகை நடத்துகிறீர்களா? அப்படி எனில் அதில் பதிப்பிக்கவும் தயக்கமில்லை எனில்.
மைதிலி இடத்தும், கார்த்திக் இடத்தும், அன்பு மகள் பூஜாவிடமும் எங்களின் அன்பு கலந்த விசாரிப்பை பகிரவும்.
நன்றி, வணக்கம்.
அன்புடன் நாகராஜன்.