Blog

  • கதையும் மொழிதலும் – 7:  சங்கர ராமின் ‘தனிப்பிறவி’

    கதையும் மொழிதலும் – 7: சங்கர ராமின் ‘தனிப்பிறவி’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    “உழைப்பும் வறுமையும் ஒன்றிணையும் பொழுது அன்பும் கருணையும் அழையா விருந்தாளியாக நெஞ்சம் புகுந்து உள்ளம் உணர்த்தி வினை புரிகின்றன”

    தொடக்கக்கால தமிழ்ச் சிறுகதை முயற்சிகளை உற்றுநோக்கும் போது சங்கர ராமின் எழுத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத் தனது ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர். இவரின் சிறுகதைப் பங்களிப்பும் முயற்சிகளும் எண்ணத்தக்கவையே. இதனைக் க.நா.சு. இவ்வாறு பதிவு செய்கிறார். “நாவலாசிரியராகப் பெயர் பெற்ற சங்கர ராம், பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இன்று விமர்சன ரீதியாக எனக்குத் தோன்றுவது, அவர் சிறுகதையில் சாதித்த அளவுக்கு நாவல்களில் சாதிக்கவில்லை என்பதுதான். இதற்குக் காரணம் தேடிக்கொண்டு வெகுதூரம் போக வேண்டியதில்லை. மண்ணாசைக்குப் பின்னால் வந்த அவர் நாவல்கள் எல்லாமே தொடர்கதைகளாக வந்தவை தான். பத்திரிக்கை தேவையையும் பணத்தேவையையும் காரணமாகக் கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள் உள்ளே உள்ள உந்துதலால் எழுதப்பட்டவை. அவர் முதல் முதலில் எழுதிய நூலும் ஒரு சிறுகதைத் தொகுப்புத் தான்” என்ற அடிப்படையிலும் சங்கர ராமின் சிறுகதைகளை இங்கே எண்ணிப் பார்க்கத் தேவை எழுந்துள்ளது.

    ஆனந்த விகடன் 1964ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளிவந்த இவரின் கதை ‘தனிப்பிறவி’. நேரடிக் கதை மொழியில் எழுதப்பட்ட இக்கதை பலவிதங்களில் சிறப்புகளைக் கொண்டது. காந்தியச் சிந்தனையும் சுதந்திரப் போராட்ட உணர்வும் தனிமனித ஒழுக்கமும் மேலோங்கிய காலக்கட்டத்தின் மனப்போக்கைக் கொண்டவர் இவர். கிராம வாழ்க்கையும் நகர வாழ்க்கையும் சந்திக்கும் வாழ்வாதாரப் புள்ளியில் இக்கதை நகர்ந்து செல்கிறது.

    மரம் ஏறும் தொழில் செய்து வந்த ஒரு குடும்பத்தின் பொருளாதாரப் போராட்டமே இக்கதை. கிராமங்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை, நகரங்களைச் சார்ந்து மாற்றப்படும் போக்கை மையமாகக்கொண்டு பின்னப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புக்கு உள்ளான ஒரு குடும்பம் வளர்ந்து வரும் நகரமயமாக்கலின் ஒருவித சூழலில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறது. நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தென்னை மரங்கள் இருப்பதும் அதனை ஒழுங்குபடுத்த ஏற்படும் தேவையும் இவனுக்கு ஒரு வாழ்வியல் இருப்பைத் தருகிறது. இதைச் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்.

    அன்றாடம் கிடைக்கும் கூலியை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறான். இவனின் வாழ்க்கைநெறி, இங்கே சிந்திக்கத்தக்கது. உழைத்து வாழ வேண்டும், தன்மானத்துடன் இருக்க வேண்டும், உதவியைக் கேட்டுப் பெறக் கூடாது என்ற ஏழ்மையின் இலட்சியவாதச் சிறப்புகள் இவனிடம் காணப்படுகின்றன.

    ஒருநாள் உழைப்பின் கூலியாக ஐந்து ரூபாய் கிடைக்கிறது. இதனை எடுத்துக்கொண்டு களைப்புடன் மனைவியைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். ‘இன்று ஓரளவு வருமானம் கிடைத்துள்ளது. ரேஷன் கடையில் புழுங்கலரிசி போடுகிறார்கள். வாங்கி வந்துவிடு’ என்று கூறுகிறான். இதனைக் கேட்ட மனைவி உடனே, கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து வேகமாகக்  கிளம்புகிறாள். நடந்து சென்றால் நேரமாகும் என்பதால் பேருந்தில் சென்று ரேஷன்  கடையை அடைகிறார்.

    கடையில் நின்று அரிசி வாங்கும் போது அவள் வைத்திருந்த ஐந்து ரூபாய் காணாமல் போய்விட்டது தெரிகிறது. கண்களில் கண்ணீருடன் அருகில் இருப்பவர்களிடம் இதனைக் கூறுகிறார். இவளின் பரிதாபத்தைக் கண்டு அனைவரும் ஆறுதல் கூறுகின்றனர். ஆனால் இவளது மனம் வீட்டில் கணவனுக்கு என்ன பதில் சொல்வது என்று எண்ணுகிறது. ‘கடின உழைப்பில் பெற்ற கூலியை இப்படி கவனமில்லாமல் தொலைத்துவிட்டோமே’ என்று எண்ணும்போது, அவளது மனம் வேதனை அடைகிறது. வருகின்ற காலங்களில் வயிறு நிறைய சாப்பிடலாம் என்று எண்ணிய எண்ணத்தில் இடி விழுந்தது போல ஐந்து ரூபாய் காணாமல் போய்விட்டது. அரிசி இல்லாமல் வீட்டிற்குச் செல்வதை நினைத்துத் தயங்கி நிற்கிறார். இவளின் துன்பத்தைக் கண்ட பெண்கள் அனைவரும் தங்கள் அரிசியில் இருந்து ஒரு பகுதியை இவளுக்குத் தந்துவிடலாம் என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் இதனைக் கணவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதால் அவர்களின் உதவியை ஏற்க மறுத்துவிடுகிறாள்.

    இதனைக் கேட்டு மற்ற பெண்கள் வியந்து விடுகிறார்கள். அந்த வரிசையில் ரேஷன் கடையில் பொருள் வாங்கக் காத்திருக்கும் நண்பர்கள் இருவர், இதனைக் கண்டு அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் நேரடியாகக் கொடுத்தால் கண்டிப்பாக இவள் வாங்க மாட்டாள் ஆகையால் ஏதேனும் வேறு வகையில் உதவ எண்ணினார்கள். இதன்மூலம் அவளிடம் பேச்சுக் கொடுத்து நடந்தவற்றைக் கேட்டறிந்தனர். பின்னர் நண்பர்களில் ஒருவன் அவளிடம் கூறுகிறான், ‘உன்னிடம் ஐந்து ரூபாய் திருடிவிட்டுப் போனவனை எனக்கு நன்றாகத் தெரியும், அவனிடம் நான் அந்த ஐந்து ரூபாயைக் கேட்டு வாங்கிக்கொள்கிறேன். இதோ என்னிடம் உள்ள வாரக் கூலியிலிருந்து ஐந்து ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறுகிறான்.

    அவளுக்கு மனது சமாதானம் அடைந்தாலும் அவனிடம் அவள் ‘உங்கள் பணத்தைத் தராமல் போய்விட்டால் என்ன ஆகும்’ என்று கேட்கிறாள். அவளின் மன ஓட்டத்தைக் கணித்துவிட்டு, ‘அவன் பாவம் ஏதோ தெரியாமல் செய்துவிட்டான், அவனை மன்னித்து விடவேண்டும் அவன் தராமல் இருக்கமாட்டான், இல்லை என்றால் அவர் ஜெயிலுக்குப் போக வேண்டும் எனவே கண்டிப்பாகத் தந்து விடுவான்’ என்று கூறி, அவளிடம் ஐந்து ரூபாயைத் தந்து அரிசி வாங்க சொல்கிறான். அவளும் கண்களைத் துடைத்துக்கொண்டு அரிசியை வாங்கி நன்றியுடன் பார்த்துக்கொண்டே செல்கிறாள்.

    நண்பனின் செயலைக் கண்டு வியந்து பாராட்டுகிறான். ‘எப்படி நீ இவ்வாறு சிந்தனை செய்தாய்’ என்று கேட்கிறார். அதற்கு ‘மற்றவர்கள் அரிசி தருவதாகக் கூறியும் மறுத்துவிட்டவள் பணம் தருவதாகச் சொன்னால் கேட்க மாட்டாள். அதனால் இப்படி ஒரு கதையைச் சொல்லி அவளுக்கு உதவி செய்தேன்’ என்றான். உடனே அவனது நண்பன் நீ மற்றவர்களைவிட ‘தனிப்பிறவி’டா என்று பாராட்டுகிறான். இவ்வாறு கதை முடிகிறது.

    வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும் என்ற சிந்தனை கதை முழுவதும் வந்து போகிறது. மக்கள் உழைக்கத் தயாராக இருந்த போதிலும் அவர்களின் உழைப்பு இங்கே நிலையற்றதாகப் போய்விடுகிறது. மனிதச் சாரம் மக்கள் மனத்திலிருந்து நீங்கி, பணத்தின் முக்கியத்துவமும் பணமதிப்புமே மனித மதிப்பு என்ற புதிய வாழ்வியல் கொள்கை மக்களை எவ்வாறு திக்குமுக்காட செய்கிறது என்பதை நேரடிக் கதைகூறல் மூலமாகக் கூறிச் செல்கிறார். தொடக்கக் காலத்தில் கதையின் மையப் பாத்திரங்கள் பெயரையோ, குணநலன்களையோ கொண்டு கதையின் தலைப்பு அமையும். ஆனால் இக்கதையில் இடையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் செயல்பாடுகளைக் கொண்டு கதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார் இவர்.

    அதேபோல கதைக் கட்டமைப்பிலும் கதை தொடக்கத்தில் வரும் முதன்மைக் கதாபாத்திரங்களைத் தாண்டி, பிறகு வரும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமும் கதையின் மையத் தன்மையும் கொடுக்கப்பட்டுக் கதை நிறைவடைவது புதிய அணுகுமுறையாகும். எளிமையான சொற்கள், நேர்த்தியான கதைப்போக்கு, வாழ்க்கையின் இருபெரும் கூறுகளை முன்வைத்தல், சரிக்கும் தவறுக்குமான மென்மையான பகை, இயலாமையின் உச்ச கழிவிரக்கம், கருணையின் அவசியம், கண்ணியத்தின் இயல்பு என்று கதை நகர்ந்து செல்கிறது.

    நீண்ட நிலவுடைமைச் சமூகத்தின் அனைத்து உறுப்புகளும் இல்லாமல் போவதும் தனக்குத் தொடர்பில்லாத வேறு ஒரு நகரச் சமூகம் தன்னைப் பொருட்படுத்தாமல் நகர்ந்து தன்னை நிர்க்கதியாக நிறுத்துவதும் பணமே வாழ்வியல் தத்துவம் என்ற உள்ளுணர்வும் அதனை நோக்கிய வாழ்க்கைப்போக்கும் இவர் கதைகளில் மையமாக விளங்குகின்றன. தனிப்பிறவியும் அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றே. இன்றைக்கும் இவரின் கதைகளைத் தேடினாலும் கிடைக்காத அவலமே தொடர்கிறது. பேராசிரியர் பெருமாள் முருகனை நெறியாளராகக் கொண்டு ராஜசேகர் என்ற ஆய்வாளர் இவரின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளது இவருக்கான முக்கியத்துவத்தை உணர உதவக்கூடும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 78

    பழகத் தெரிய வேணும் – 78

    நிர்மலா ராகவன்

    தவறுகள் பலவிதம்

    எல்லாரும்தான் தவறு செய்கிறார்கள். ஆனால், ஒரு வித்தியாசம். ஒருசிலருக்குத்தான் அவற்றிலிருந்து கற்கும் துணிச்சல் உண்டு.

    பிறரோ, தவறு செய்வது தம் தோல்வியைக் குறிக்கும் என்று நாணுவார்கள். அதனாலேயே வெற்றி அவர்களைவிட்டு விலகிப் போய்விடும்.

    கதை

    ஆங்கிலத்தில் சிறுகதைப்போட்டி ஒன்று நடந்தது.

    “நீங்கள் கலந்துகொள்ளவில்லையா?” என்று கேட்டாள் என் சக ஆசிரியை. (அதற்குமுன், அதேபோன்ற வேறொரு போட்டியில் நான் பரிசு வாங்கி, எல்லா மொழி பத்திரிகைகளிலும் என் பெயர் வெளியானது என் அந்தஸ்தை உயர்த்தியிருந்தது).

    என் பதில் அலட்சியமாக வந்தது: “கலந்துகொண்டேன். பரிசு கிடைக்கவில்லை”.

    பக்கத்தில் அமர்ந்திருந்தவள் விழிகள் விரிய, சற்று அதிர்ச்சி அடைந்தாற்போல் இருந்தது, `இதையெல்லாம் ஒப்புக்கொள்வார்களா!’ என்பதுபோல்.

    வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால்தான் அமைதி நிலைக்கும். தொடர்ந்து வெற்றிகள் கிடைக்கும்.

    தவறு செய்யலாமா?

    பள்ளியில் படிக்கையில், தவறான விடைக்கு, `பிழைதிருத்தம்’ என்று மூன்று முறை சரியான பதிலை எழுத வைப்பார்கள்.

    அதிலும் தவறா?

    ஐந்து முறை!

    செய்த தப்பையே திரும்பத் திரும்பச் செய்வது அறிவீனம் என்று மறைமுகமாக உணர்த்தும் வழி இது.

    தவறே செய்யாமல் இருக்கத்தான் யாரால் முடியும்? தவறு செய்ய அஞ்சுவதுதான் தவறு.

    நமக்கு எல்லாமே தெரிந்திருந்தால், அதன்பின், கற்க என்ன இருக்கிறது!

    கதை

    நான்கு வயதுச் சிறுவனான குகனுக்குத் தாய் பாடம் சொல்லிக்கொடுக்க, அவன் பென்சிலால் எழுத ஆரம்பித்தான்.

    “இது இப்படி இருக்கவேண்டும். ரப்பரால் அழித்துவிட்டுத் திரும்பவும் எழுது!” என்று அம்மா சொல்ல, அழ ஆரம்பித்தான்.

    தான் ஒரு தப்பு செய்வதா!

    `புத்திசாலி!’ என்று குடும்பத்தில் எல்லாரும் புகழ்ந்ததைக் கேட்டு வளர்ந்த பிள்ளை ஆயிற்றே!

    அறியாமையால் பிழை செய்ய நேர்ந்தால், அதற்காக வருத்தமோ, வெட்கமோ அநாவசியம் என்று புரிந்தவள் அத்தாய்.

    ஆகவே, மகன் ஏற்கும் விதத்தில் கூறினாள்: “பென்சிலையும் ரப்பரையும் காசு கொடுத்து, கடையில்தானே வாங்குகிறோம்? அந்தக் கடைக்காரர் அப்பாமாதிரி ஆபீஸ் போகமாட்டார். நாம்ப வாங்கினாதான் அவருக்குக் காசு கிடைக்கும். அவருடைய குழந்தைகள் சாப்பிட முடியும்”.

    அவனைப்போன்ற குழந்தைகளின் நலனுக்காக என்று அவள் ஒப்பிட்டது குகனுக்குப் புரிந்தது.

    அதன்பின்னரும் தப்புத் தப்பாக எழுதி, அழிக்க நேர்ந்தது. அதற்காக அவன் வருந்தவில்லை. கவனமாக இருக்கப் பழகிக்கொண்டான்.

    வளர்ந்தபின்னர், நல்ல காரியங்களில் சிறக்க இக்குணம் உதவியது.

    எப்போதாவது தவறு செய்தாலும், அளவுக்கு அதிகமாக அவன் வருந்தவோ, வெட்கவோ இல்லை. உடனுக்குடன் திருத்திக்கொண்டான்.

    இக்குணத்தால் வாழ்க்கையில் உபயோகமானவற்றை அவனிடமிருந்து பிறர் கற்க முடிந்தது.

    தவறு செய்வது மனிதனின் இயற்கை!

    இந்தத் தாரக மந்திரத்தை சிலர் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள்.

    ஒவ்வொரு முறையும் கணக்குப் பரீட்சையில் நிறைய பிழைகள் செய்துவிட்டு, “அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன்!” என்று, மிதப்புடன் தோள்களைக் குலுக்கிக்கொள்வார்கள் என் மாணவிகளில் சிலர்.

    ஒவ்வொரு முறையும் செய்த தப்பையே செய்துகொண்டிருந்தால், அது கவனக்குறைவு, அலட்சியம்.

    இப்படிச் செய்தால் என்ன?

    செய்வது `தவறு’ என்று தெரிந்தே செய்பவர்கள் பலர். `கலிகாலம்!’ என்றோ, அவர்களால் நமக்கும் ஏதோ ஆதாயம் கிடைக்கிறதே என்றோ, பிறர் ஏற்றாலும், விளைவு வினையாகத்தான் முடியும்.

    கதை (அண்மையில் படித்தது)

    லண்டனில் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் படித்துக்கொண்டிருந்த இளைஞன் அவன்.

    சிங்கப்பூரில் உள்ள பொதுக்கழிப்பறை ஒன்றில் காமெரா வைத்து, இளம்பெண்களைப் படமெடுத்தான். ஓரிரு முறை அப்படிச் செய்தும், மாட்டிக்கொள்ளாது போனதில் துணிச்சல் அதிகரித்தது.

    ஏழாவது முறை பிடிபட, குற்றத்தை ஒத்துக்கொண்டான். ஒவ்வொரு குற்றத்திற்கும் ஓராண்டு சிறைத்தண்டனை, அபராதம்.

    சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்வது அறிவீனம் – அது எவ்வளவுதான் கிளர்ச்சி ஊட்டுவதாக அமைந்தாலும். அறிவாளியான அவன் இதை ஏனோ உணராமல் போனான்!

    புத்தி தீய வழியில் போனதால், அவனுடைய கல்வி, எதிர்காலம் இரண்டுமே பாழ்.

    பழிக்குப் பழி!

    வீம்புடன், பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் தமது வாழ்க்கையுடன், பிறருடையதையும் வீணாக்கிவிடுவார்கள்.

    கதை

    இளம் மனைவி தனக்குத் துரோகம் செய்துவிட்டதை மன்னிக்கவோ, மறக்கவோ முடியவில்லை மாதுவால்.

    தன்னைப்போலவே அவளும் நோகவேண்டும், அதுதான் அவளுக்குப் பாடம் கற்பிக்கும் வழி என்று கருதி, அவளுக்குத் தெரிந்தே பிற பெண்களுடன் உறவுபூண்டான்.

    எத்தனை வயதாகியும், அவனுடைய ஆத்திரம் அடங்கவில்லை. மனைவிபோல் இல்லாத, உலகம் தெரியாத பெண்களை மயக்குவதைக் கலையாகக் கற்றான்.

    அந்த நடத்தையால் சமூகத்தில் அவனுக்கு இருந்த மதிப்பு அறவே குலைந்தது. உறவினர்கள் அவனைத் தவிர்த்தார்கள்.

    தன் தீய நடத்தைக்கு ஒரு காரணம் கற்பித்தான்: `எனக்கு மனைவி சரியில்லை!’

    ஒரு பிழையை இன்னொன்றால் சரிசெய்ய முடியுமா?

    தெரியாமல் பிழை

    தெரியாமல் செய்த தவற்றுக்காக, தன்னையே வருத்திக்கொள்வதால் என்ன பயன்?

    கதை

    அந்த வீட்டுக்கூரைமேல் இருந்த கூட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டது ஒரு குருவிக்குஞ்சு.

    அதை மிதித்துவிட்ட சிறுமி லதா, தன் அஜாக்கிரதையால் ஓர் உயிர் போய்விட்டதே என்று அழ ஆரம்பித்தாள்.

    `நடந்தது உன் தப்பு இல்லை,’ என்று தாய் எத்தனைதான் சமாதானப்படுத்தியும், அவள் மனம் அடங்கவில்லை.

    அதன்பின், இறந்த எந்த பிராணியைக் கண்டாலும், தான் செய்த `குற்றம்’ நினைவில் எழ, பயம், அழுகை.

    பெரியவளாகி, நன்கு படித்து, வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தபோதும், `தாய்க்குருவி என்னைச் சபித்துவிட்டது!’ என்பாள். என்றோ எழுந்த சோகமும், குற்ற உணர்வும் மறையவேயில்லை. அவற்றைப் போக்க என்னென்னவோ மருந்துகள்!

    தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவற்றுக்காக நம்மையே தண்டித்துக்கொள்ளாது, மன்னிக்க வேண்டுவது அவசியம். இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி பறிபோய்விடும்.

    ஆண்-பெண் உறவில் வெற்றி, தோல்வி

    கதை

    ஏழையாக இருந்தாலும், சந்திரன் அறிவாளி. பணக்காரர் ஒருவர் தன் மகளை அவனுக்கு மணமுடித்து, மேற்படிப்புக்கும் உதவினார்.

    கணவனை விலைக்கு வாங்கிவிட்ட பெருமிதம் அவன் மனைவி தாராவிற்கு. பலர் முன்னிலையில் அவனை அவமதிப்பதை வழக்கமாக்கிக்கொண்டாள்.

    `மாறுவாள்,’ என்ற நம்பிக்கையுடன், முதலில் பொறுத்துப்போன சந்திரன் சில வருடங்கள் கழிந்ததும் அவளை விவாகரத்து செய்தான்.

    அழகிலும், பொருளாதாரத்திலும் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருந்த பெண்ணை மணந்தது தான் செய்த தவறு என்று தோன்றிப்போக, தாராவைப்போல் இல்லாத ஒரு பெண்ணைக் காதலித்து மணந்தான்.

    “குண்டாக இருக்கிறாளே!” என்று நண்பர்கள் ஆச்சரியப்பட்டு, முகத்தைச் சுளித்தார்கள்.

    சந்திரன் சிரித்துக்கொண்டான்.

    தான் தேடி, மணந்த பெண் குண்டுதான். ஆனால், அன்பானவள். எல்லாவிதத்திலும் அவனுக்குப் பக்கபலமாக இருந்தாள்.

    பெண்கள் காதல் தோல்வியை அவ்வளவு எளிதாக ஏற்பதில்லை.

    கதை

    முப்பது வயதுக்கு மேலாகியும் திருமணமாகாமல் இருந்தாள் என் சக ஆசிரியை வித்யா.

    `இவ்வளவு அழகான பெண்ணை ஆண்கள் எப்படி விட்டுவைத்திருக்கிறார்கள்!’ என்ற ஆச்சரியம் எனக்குள் எழ, அவளிடமே கேட்டேன்.

    “ஆண்களை நம்பவே பயமாக இருக்கிறது,” என்றாள் வித்யா. ஒருவனைக் காதலித்து, அவன் ஏமாற்றிவிட்டதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தாள், தான்தான் குற்றம் புரிந்ததுபோல்.

    “அவனைப்போல் பகட்டாகவோ, கலகலப்பாக இல்லாது, அமைதியாக, ஆழமாக இருக்கும் ஒருவர் உனக்கு வாய்ப்பார். அந்த வாழ்க்கையிலேயே நிறைவு கிடைத்துவிடும், பார்!” என்றேன், ஆறுதலாக.

    தவறு செய்தால் என்ன?

    அதையே திரும்பத் திரும்பச் செய்யாமல் இருப்பதுதானே புத்திசாலித்தனம்!

    Share
  • அழைப்பிதழ் – நல்லாசிரியர் சி. நல்லதம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு

    அழைப்பிதழ் – நல்லாசிரியர் சி. நல்லதம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு

    சென்னை பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் மாணவரும் ஆய்வாளரும் மற்றும் விருந்துநிலை விரிவுரையாளருமாய்ப் பணியாற்றியவர் முனைவர் சி. நல்லதம்பி. இவர் பின்னர் ஆத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றினார். சமீபத்தில் மறைந்த அவரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது மாணவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இணைந்து நல்லாசிரியர் சி. நல்லதம்பி அறக்கட்டளையை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நிறுவியுள்ளனர். இதன் முதல் உரையை பேரா இ. முத்தையா அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

    பேரா. இ. முத்தையா பற்றி

    பேராசிரியர். இ. முத்தையா மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் மேனாள் பேராசிரியரியராக பணியாற்றினார். தமிழ் இலக்கணம், மொழியியல், நாட்டுப்புறவியல், மானுடவியல், வெகுஜனப் பண்பாடு, நிகழ்த்துக்கலைகள், நவீன திரைப்பட அவதானிப்புகள் முதலான பல்வேறு விதமான கோட்பாட்டுத்துவ பின்புலத்தி்ல் இருந்து பணி செய்து வருபவர்.

    இவர் எழுதிய சில நூல்கள்

    1. தமிழர் பண்பாட்டு வெளியில் நிகழ்த்துகலைகளும் உலக நோக்கும்
    2. அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள்
    3. பழந்தமிழ் பண்பாட்டு வெளிகளின் அரசியல்.
    4. இலக்கணமும் மொழியியலும்…
    5. இசையின் அதிகார முகங்கள்.

    உரையை பற்றி

    நிகழ்த்துதல் என்பது மனிதரின் மொழிசார் நடத்தை முறை. நிகழ்த்துநர், பங்கேற்பாளர், வாய்மொழி அல்லது பேச்சு மொழி, உடல்மொழி, மெய்ப்பாடு, இடம், காலம், பண்பாட்டுச் சூழல்  ஆகியவற்றின் சேர்க்கையான நிகழ்த்துதற் சூழல் என அனைத்தின் கலவையே நிகழ்த்துதல். இத்தகைய நிகழ்த்துதலின் மெய்யியலைத் தொல்காப்பியர் கட்டமைத்துள்ள முறையை விவாதிப்பதே உரையின் நோக்கம்.

    மொழியியல் ஆய்வுப் போக்குகள் சமூகப் பண்பாட்டுச் சூழல், அரசியல் நிலைமைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப மாறி வந்திருக்கின்றன. புளூம்பீல்டு (Leonard Bloomfield) என்பாரின்  அமைப்பியல் மொழியியலிலிருந்து தொடங்கி மொழியின் மெய்யியல் ஆய்வு வரை பல்வேறு பரிமாணங்களில் மொழியியல் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. மெய்யியல் திருப்பம் (Philosophic Turn) என்பது மானிடவியல் ஆய்வாளர் மாலினோஸ்கியின் சூழல்சார் பொருண்மையியல் (Pragmatics) ஆய்வு முறையால் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மொழியியல் ஆய்வு மெய்யியல் சாலையில் பயணத்தைத் தொடங்கியது. ஜெ.எல்.ஆஸ்டினின் “பேச்சுச்  செயல் கோட்பாடு”( Speech Act Theory / Performative Analysis), ஹைச்.பி.கிரைஸின் “உரையாடல் உள்ளுறைக் கோட்பாடு” (Conversational Implicature Theory), பிரிஜ் (Frege), ரஸ்ஸல் (Russel), கார்னாப் (Carnap) போன்றோரின் “அளவையியல் மொழியியல்”  (Logical Linguistics)  என மொழியியல் ஆய்வு மெய்யியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க மெய்யியல் ஆய்வாளர்கள் பலர் மொழியியலை நோக்கி வந்தனர். இவர்களுள் விட்ஜென்ஸ்டின், ஹேபர்மாஸ் (Communicative Action Theory) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். விட்ஜென்ஸ்டின் ஆய்வினை மெய்யியல் ஆய்வாளர்கள் மொழியியல் திருப்பம் (Linguistic Turn) எனக் குறிப்பிடுவர்.

    மேற்குறிப்பிட்ட மொழியியல் மெய்யியலார், மெய்யியல் மொழியியலார் ஆகியோரைத் தொல்காப்பியரோடு ஒப்பிடும்போது அனைவரின் கருத்துக்களிலிருந்து தொல்காப்பியர் வேறுபடுவதை அறியலாம். அவர் நிகழ்த்துதல் மெய்யியலைக் கட்டமைத்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். அத்தகைய மெய்யியலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதே உரையின் நோக்கம்.

    Share
  • கத்தரிக்காய், வெண்டைக்காய் அறுவடை

    கத்தரிக்காய், வெண்டைக்காய் அறுவடை

    இன்று நம் மாடித் தோட்டத்தில் கத்தரிக்காய், நட்சத்திர வெண்டை (ஸ்டார் வெண்டை) ஆகியவற்றை அறுவடை செய்தோம். எங்கள் மகன் ஹரி நாராயணன், இதில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 139 (நின்ற)

    சேக்கிழார் பாடல் நயம் – 139 (நின்ற)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு 

    பெருமான் மேலும் கூறினார்,’’ மலைமேல் வந்து திண்ணன் செய்யும் பூசைக்கு முன் என்மேல் அந்தணர் தூவ  விழுந்து அரும்பும் மெல்லிய மலர்களை நீக்குவதற்காக, விருப்பமாகிய வெள்ளம் வாய்க்கால் ஆனது போல் என்மேல் அவன் வைத்த  செருப்புடைய சிற்றடி, அவனது குழந்தைப்  பருவத்தின் சிவந்த அடியைவிடச்  சிறப்புற இருந்தது! அன்பே உருவான அவன் சிறுவாயாகிய அமுத கலசத்தில் பொங்கிய எச்சில் நீராகிய அபிடேக நீர்,  சிறந்த ஜானு என்ற முனிவரின் வாயில் புகுந்து காது வழியாக வழிந்த ஜானவி என்ற நதியாகி, என் ஜடாமுடியில் தங்கியகங்கையை விடவும், எனக்குப் புனிதமானது! அவ்வேடனது பக்தியே மலராகி விரிந்ததுபோல் அவன் தூவிய செம்மையான மலர்கள் தேவர்களின் பூமாலையை விட உயர்ந்தவை! அவன் எனக்கிடும் ஊன் உணவு  வெந்து, பக்குவம் ஆகிவிட்டதா என உண்டு பார்த்து இட்ட படையல் எனக்கு மிக இனியவை! அவன் என் முன்னே நின்று கூறும் என்னைமட்டுமறிந்த,  அறியாமை மிக்க  மொழிகள்,வேதியரும் முனிவர்களும் துதிக்கும் ஞானம் மிக்க வேத தோத்திரங்களை விட  நல்லவை!

    வேதியரே, உமக்கு  அவன் செயல்களை நான் காட்டுகிறேன்; அப்போது அவனுடைய பக்தியின் சிறப்பை நேரில் கண்டறிவாய்! உன் மனக்கவலை தீரும்! ‘’ என்று வேதியரின் கனவில் கூறி மறைந்தார்!

    இரவெல்லாம் துயிலாமல் இருந்த வேதியர் வியப்பும் அச்சமும் கொண்டு,காலையில் கதிரவன் உதிக்கும்போதே, எழுந்து குளித்து, பூசைப் பொருள்களுடன்  மலைமேல் ஏறி, மரபுப்படி பூசை செய்தபின் சிவன் பின்னே மறைந்து நின்றார்!

    அன்று திண்ணனார் ஆறாம் நாளில்  வேட்டையாடி ஊன் அமுதும் , மஞ்சுநாத் புனித நீரும் , மலர்களும் கொண்டு  பூசைக்கு வந்தார். அப்போது அவர்முன் பறவைகள் சிந்திய இரத்த அடையாளம்  தீய சகுனம் உண்டாக்கிற்று‘’ ஐயோ, என் அப்பனுக்கு  என்ன ஆயிற்றோ? என்றெண்ணி ஓடோடி வந்தார்!  அப்போது, சிவபிரான் , திண்ணனாரின் அன்பினை வேதியருக்குக் காட்டத் திருவுளங்கொண்டார்! அவர் தம் வலக்கண்ணில் கண்டோர் துணுக்கம் அடையும் வண்ணம் இரத்தம் பெருகிப் பாய்ந்தது! அதைக் கண்ட வேடுவர் விரைந்தோடி வந்தார்!

    இறைவன் கண்ணில் இரத்தத்தைக் கண்ட வேடர் மயங்கினார்; வாயிலிருந்த பொன்முகலி நீர் சிந்தியது; கையிலிருந்த ஊனுணவு வில்லுடன் வீழ்ந்தது; தம் தலைமேல் சூடியிருந்த மலர்கள் எங்கும் வீழ, அவர் பதறி வீழ்ந்தார்!

    எழுந்து சென்று இரத்தத்தைத் துடைத்தார், ஆனாலும்அது  பொங்கியது! என்ன  செய்வதென்று அறியாமல் திகைத்தார்; இதனை யார் செய்திருப்பார்? என்று எழுந்து  திக்கிலும் தேடினார்; கையில் வில்லை எடுத்தார்; ஓரம்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ‘’இந்தமலையில் எனக்கு எதிரியாக வெல்லும் மறவர் உளரோ? விலங்குகளில் சிங்கம்  போன்ற கொடியவை இப்படிச் செய்தனவோ? அறியேன்.’’ என்று நீண்ட மலைச் சாரலெங்கும் தேடினார். எங்கும் புதிய வேடரைக் காணவில்லை. எங்கும் தீய விலங்குகளைக்  காணவில்லை. எங்கு தேடியும் காணாமல் மீண்டும் இறைவரிடம் வந்து, பெருத்த வருத்தத்துடன் அவர் திருவடி பற்றிக் கண்ணீர் பெருக்கிக் கதறினார்.

    ‘’இப்படிப் பாவிநான்  பார்க்கும் படி பரமனுக்கு வந்த தீங்கு யாதோ? உயிரினும் இனிய எங்கள் அத்தனுக்கு வந்த தீங்கு எதுவோ? அடைந்தவர் பிரியவியலாத குற்றமற்ற இறைவனுக்கு என்ன வந்ததோ? என்ன செய்வதென்று அறிந்து கொள்ள இயலவில்லை.

    எம் இறைவனுக்குத் தீங்கு செய்தவரை எங்கும் காணேன்; வேடர் குலத்தினர் புண்ணுக்கு மருந்து செய்யும் முறைகளை இப்போதே பொய் அறிந்து செய்து கொண்டு வருவேன்’’  என்று ஓடினார் .  தம் கூட்டத்திலிருந்து பிரிந்த காளை  போன்று அருகேயிருந்த காடுகளில் அச்சத்துடன் திரிந்தார்; ஆங்காங்கே இருந்த மூலிகைகளை எடுத்துக் கொண்டோடி வந்து கசக்கி  இறைவன் கண்ணில் பிழிந்தார்; அந்த மருந்தாலும் கடவுளின் கண்ணின் இரத்தம் குறையாதது கண்டு இனி என்ன செய்வது? என்று சிந்தித்தார்; ‘’ஓ! ஊனுக்கு ஊனை  வைத்தால்  உற்ற நோய் தீர்க்கும்! ‘’ என்பார்களே! அதற்கேற்ப இனி உடனே புண்ணான இறைவன்  கண்ணுக்கு மாற்றாக என் கண்ணைத் தோண்டி அப்பினால் இரத்தம் குறைந்து நோய் தீரும்! என்றெண்ணி, விரைந்து எழுந்து தம் ஒருகண்ணை அம்பினால் தோண்டி எடுத்து இறைவன் திருக்கண்ணில்  அப்பினார்! இங்கு சேக்கிழார் பாடுகிறார்;

    பாடல்

    நின்ற செங் குருதி கண்டார்; நிலத்தின் நின்று ஏறப் பாய்ந்தார்;
    குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
    ‘நன்று நான் செய்த இந்த மதி’ என நகையும் தோன்ற,
    ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்.

    பொருள்

    குருதிநின்றதைக் கண்டார்; அந்தப்பெரு மகிழ்ச்சியினாலே நிலத்தினின்று உயரப்பாய்ந்து குதித்தார்; மலை போல வளர்ந்த தமது தோள்களைக் கொட்டினார்; கூத்தும் ஆடி “நான் செய்த இந்த மதி – யோசனை – மிக நன்று” என்று சிரிப்புத் தோன்றப் பொருந்தியகளிப்பினாலே உன்மத்தர் போன்ற நிலையில் மிக்கவராயினர்.

    விளக்கம்

    குருதி வெளிவராத நிலைமையைக் கண்டாராதலின் செங்குருதி நின்றது கண்டார்; மகிழ்ச்சியில் துள்ளினார்.

    நிலத்தினின்று ஏறப்பாய்ந்தார் – இங்குக் கூறிய ஏறப்பாய்தல், தோள்கொட்டுதல், கூத்தாடுதல், நகை தோன்றுதல், உன்மத்தர் போலாதல் எனுமிவை பெருமகிழ்ச்சியால் வெளிப்படக்காணும் உடற்செயல்கள். முன் குருதி கண்டபோது மனமும் மெய்யும் மொழியும் முடங்கி மயங்கிச் சோர்ந்து

    நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார் . குருதி நிற்கக்கண்ட இப்போது அவை தழைக்கத் தாமும் நின்று ஏறப்பாய்ந்தார். ஏறப்பாய்தல் – நின்ற இடத்தினின்றும் உயரக் கிளம்பிக் குதித்தல்.

    குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் – வளர்ந்த – குருதி கண்டபோது கையிற் சிலையுடன் ஊனும் சிதறிவீழ்த்தித் தோள்கள் மெலிந்தன; குருதி நிற்கக் காணலும் அம்மகிழ்ச்சி மிகவே அவை குன்று போல வளர்ச்சிபெற்றன!. நாயகனைப் பிரிந்த சோகத்தால் நாயகிக்கு உடல் மெலிந்து கைவளை கழலுதலும் அவனைக் கூடியவழி உடல் பூரித்துக் கைவளை உடைதலும் முதலியனவாக அகப்பொருள்  நூ ல்களிற் பேசப்படும் நிலைகளி னியல்பை இங்கு பொருத்திப் பார்க்க.

    கூத்தும் ஆடி  என்ற தொடர்  தம்மை மறந்து கூத்தாடுதல்,  மிக்க மகிழ்ச்சியின் விளைவு என்பதைக் குறித்ததது.

    “கும்பிடுதலும், தட்டமிடுதலும், கூத்தாடுதலும்
    உவகை மிகுதியில் நிகழும் மெய்ப்பாடு”

    என்ற சிவஞான சித்தியார் பாடலின்  பொழிப்புரையும் காண்க.

    “ஆசையொடு மரனடியா ரடியாரை

    யடைந்திட் டவர்கரும முன்கரும மாகச் செய்து” என்ற ஞான சாத்திரத் திருவாக்கிற் கண்டவாறு இங்குத் திண்ணனார் அரனையே யணைந்தனர்; அரனை ஆசையொடும் அடைந்தார்; அவர் கருமந் தன் கருமமாகச் செய்தார்; அவர் பிரேரணையாகிய அருண்ஞானக் குறியின்நின்று தம்மை மறந்து அவரையே கும்பிட்டு அருச்சித்தார்; இங்கு அவரது நோய்தீரக் கண்டபோது உவகையினாற் கூத்தும் ஆடினர்; சீவன் முத்த நிலையாகிய பரம உபசாந்தம்  இது,  என்பது க. சதாசிவ செட்டியார் உரைக் குறிப்பு. என் அறிவு நன்று என்று தம்மையே மெச்சிக்கொண்டார்

    ஒன்றியகளிப்பினாலே உன்மத்தர் போல – பொருந்திய முன்னிருந்த சோகமும் கவலையும் நீங்க இப்போது வந்து சேர்ந்த. களிப்பினாலே உன்மத்தர் போலாகுதல், மதமிகுந்தபோது உளதாம் உட்கரண புறக்கரணநிலை. மத்தம் – மதத்தாலாகும் நிலை.  இந்நிலையின் மெய்ப்பாடுகளின் மிகுதியுடையராயினார்.

    தாம் செய்த அபூர்வமான செயலால் விளைந்த நன்மையைக்  கண்ட திண்ணனாரின் மகிழ்ச்சிக் கூத்தினை இப்பாடல் குறித்து நம்மையும் மகிழ்விக்கிறது!

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 9 | ஒரு மீட்டர் சிரிப்பு

    சிரிப்பு யோகா – பயிற்சி 9 | ஒரு மீட்டர் சிரிப்பு

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் ஒன்பதாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இந்த ஒரு மீட்டர் சிரிப்புப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வர, தூக்கமின்மையால் ஏற்படும் களைப்பு நீங்கும். இதை ஒரு முறை செய்தால், அரை மணி நேரம் தூங்கினால் பெறக்கூடிய ஆற்றல் கிடைக்கும். அளந்து சிரிக்கலாம், வாங்க.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அமெரிக்காவில் வீட்டுத் தோட்டம்

    அமெரிக்காவில் வீட்டுத் தோட்டம்

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வாழ்ந்து வரும் திருமதி லட்சுமி அவர்களின் அழகிய வீட்டுத் தோட்டம் இதோ. தொட்டியிலேயே வாழை மரம் வளர்க்க முடியும் எனக் காட்டியிருக்கிறார். இந்தக் கண்கவர் தோட்டத்தைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழகம் கண்ட தலைசிறந்த வரலாற்றறிஞர்

    தமிழகம் கண்ட தலைசிறந்த வரலாற்றறிஞர்

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழக வரலாற்றின்மீது புத்தொளி பாய்ச்சி, இருண்டுகிடந்த பகுதிகளை வெளிச்சப்படுத்திய ஆராய்ச்சியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர், கும்பகோணத்துக்கு  அருகிலுள்ள திருப்புறம்பயத்தில் 1892ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள், வைத்தியலிங்கம் மீனாட்சி இணையருக்கு மகனாய்ப் பிறந்த சதாசிவ பண்டாரத்தார்.

    தொடக்கக் கல்வியையும் நடுநிலைக் கல்வியையும் திருப்புறம்பயத்திலும் புளியஞ்சேரியிலும் பயின்றார் பண்டாரத்தார். இயல்பிலேயே தமக்கிருந்த தமிழ் ஈடுபாட்டின் காரணமாய்த் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தாமே முயன்று கற்று நல்ல புலமை பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போது, நற்றிணை உள்ளிட்ட சங்க நூல்களுக்குச் சிறந்த உரைவரைந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி சு. பாலசுப்பிரமணியப் பிள்ளை போன்ற தமிழறிஞர்களின் தொடர்பு சதாசிவ பண்டாரத்தார்க்குக் கிட்டியது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தமிழ் இலக்கியத்தில் மட்டுமன்றித் தமிழ்க் கல்வெட்டுத்துறையிலும் மிகுந்த புலமையும் ஈடுபாடும் கொண்டவர் என்பது குறிக்கத்தக்கது. அவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் பண்டாரத்தார்க்கு இலக்கியத்திலும் கல்வெட்டுத்துறையிலும் நல்ல ஈடுபாடு ஏற்பட்டது.

    குடந்தை வாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 1917ஆம் ஆண்டு தலைமைத் தமிழாசிரியராய்ப் பொறுப்பேற்ற சதாசிவ பண்டாரத்தார், அங்கே 25 ஆண்டுகள் பணிபுரிந்து மாணாக்கர்களுக்கு நற்றமிழறிவை ஊட்டி வந்தார். அதன்பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனர் அரசர் அண்ணாமலையாரின் அழைப்பிற்கிணங்க, அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழாராய்ச்சித் துறையில் 1942 முதல் பணியாற்றத் தொடங்கினார். அப்பணி 1960 வரை நீடித்தது.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தே ஆங்கு ஆராய்ச்சித்துறைத் தலைவராயிருந்த சிதம்பரநாதன் செட்டியாரின் விருப்பத்திற்கிணங்கத் தமிழிலக்கிய வரலாற்றை எழுதும் பெரும்பணியை மேற்கொண்டு கி.பி. 250 முதல் கி.பி. 600 வரையிலான காலக்கட்டத்தில் எழுந்த தமிழ்நூல்கள் குறித்து ஆராய்ந்து எழுதியுள்ளார் பண்டாரத்தார்.

    தமிழிலக்கிய வரலாற்றைத் தொடர்ந்து விரிவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாகவும், தமிழிலக்கிய வரலாறு கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பாடமாக அப்போது இருந்தமையாலும் கி.பி. 13, 14, 15ஆம் நூற்றாண்டுகளில் படைக்கப்பட்ட தமிழிலக்கியங்களின் வரலாற்றையும் தாம் ஆய்ந்து எழுதியதாய்த் தம் நூற்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார் பண்டாரத்தார்.

    மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான ’செந்தமிழ்’, கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடான ’தமிழ்ப்பொழில்’ ஆகிய இரண்டு திங்களிதழ்களிலும் சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்தன. ’பாண்டியர் வரலாறு’ என்ற நூல் முதலில் செந்தமிழிலும், தமிழ்ப்பொழிலிலும் தொடர்கட்டுரைகளாக வெளிவந்து பின் நூல்வடிவம் பெற்றதாகும்.

    சதாசிவ பண்டாரத்தாரின் இலக்கிய ஆராய்ச்சி நூலின் வாயிலாய் நாம் அறியும் அரிய செய்திகள் பல. அவற்றில் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிட விரும்புகிறேன்.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகத் திருக்குறள் இடம்பெற்றிருந்தபோதிலும் இந்நூல் கடைச்சங்க காலத்தின் இறுதிக்குச் சில நூற்றாண்டுகள் முன்பு எழுதப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில், திருக்குறள் கருத்துக்கள் பல சங்க நூல்களில் காணக் கிடைக்கின்றன.

    ”பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்”
    என்ற குறள் கருத்து,

    முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்” என்று நற்றிணையில் இடம்பெற்றிருப்பதையும்,

    ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
    என்ற வள்ளுவர் வாய்மொழி,

    ஆலத்தூர்கிழாரின் புறநானூற்றுப் பாடலில்,

    ”செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்றே
    ஆயிழை கணவ”
    என்று வந்திருப்பதையும் சுட்டிக்காட்டித் திருக்குறள் கடைச்சங்க கால நூலே என்று உறுதிபடத் தெரிவிக்கின்றார் பண்டாரத்தார்.

    இவ்வாறே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இணைக்கப்பட்டுள்ள மற்றொரு நூலான நாலடியார், 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது சதாசிவ பண்டாரத்தாரின் கருத்தாகும்.  முத்தரையர் என்ற பட்டத்தோடு ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்களின் சிறப்பை நாலடியாரின் 200 மற்றும் 296ஆம் பாடல்கள் குறிப்பிடுகின்றன. முத்தரையர் பற்றிய குறிப்புகளை நாம் 8ஆம் நூற்றாண்டில்தான் அறியமுடிகின்றது; எனவே நாலடியார் 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகவே இருக்கமுடியும் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளோடு நிறுவுகின்றார் அவர்.

    திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் வாழ்ந்தவர் என்பதையும் சான்றுகளுடன் மெய்ப்பிக்கின்றார் சதாசிவ பண்டாரத்தார். தில்லையம்பலத்தையும் பொன்னம்பலத்தையும் புகழ்ந்து பாடியுள்ளார் திருமூலர். தில்லையம்பலத்தில் ஆடவல்லானுக்குப் பொன்கூரை வேய்ந்த பல்லவ வேந்தன் சிம்மவர்மன், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினன். ஆதலால், இவனுடைய காலமே திருமூலர் காலமாகும். சைவ சித்தாந்தம் என்ற வடசொல்லை முதலில் தமிழில் பயன்படுத்தியவர் திருமூலரே ஆவார் என்று குறிப்பிடும் பண்டாரத்தார், பின்னர் இச்சொல்லைச் சமயக் குரவர்கள் தம் பாடல்களில் கையாண்டனர் என்கிறார்.

    கடைச்சங்கத்தின் அழிவு எவ்வாறு நேர்ந்தது என்பதை ஆராய்ந்து சதாசிவ பண்டாரத்தார் முன்வைக்கும் கருத்துக்களாவன:

    மதுரை மாநகரில் நடைபெற்றுவந்த கடைச்சங்கம் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அழிந்தமைக்குக் காரணம், பாண்டிய நாட்டில் ஏற்பட்ட பஞ்சம்தான் என்று இறையனார் அகப்பொருளுரையும், மணிமேகலைக் காப்பியத்தின் வரிகளும் தெரிவிக்கின்றன. அப்பஞ்சத்தினாலேயே பாண்டி நாட்டுப் புலவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று உயிர்வாழ நேர்ந்தது என்கின்றது இறையனார் அகப்பொருளுரை. ஆனால் பஞ்சம் ஏற்பட்டதால்தான் கடைச்சங்கம் வீழ்ச்சியுற்றது எனும் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இல்லை. கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டிய நாடு வலிகுன்றிக் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டது. அதேவேளை தொண்டைநாடு பல்லவர் ஆளுகைக்கு உட்பட்டது.

    இவ்வாறு தமிழகம் தமிழரல்லாத அயலார் ஆட்சிக்கு உட்பட்டதால் தமிழும் தமிழ் மக்களும் பாதிப்புக்கும் வீழ்ச்சிக்கும் பல வகைகளில் ஆளாயினர். களப்பிரர் எழுச்சி, பாண்டிய நாட்டில் பல மாறுதல்களை உண்டுபண்ணிவிட்டது.  அவர்களுடைய பாலி மொழியும் பிராகிருத மொழியும் அரியேணையேறி ஆட்சிசெய்யத் தொடங்கின. இதன்விளைவாய்த் தமிழ்மொழி, தமிழ்க்கலைகள், தமிழர் நாகரிகம் ஆகியவை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தமையை வேள்விக்குடிச் செப்பேடுகள் வாயிலாய் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட களப்பிரர் எழுச்சியாலேயே கடைச்சங்கம் அழிந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பது சதாசிவ பண்டாரத்தார் ஆய்ந்துகண்ட முடிபாகும்.  [களப்பிரர் காலத்தை இருண்ட காலமென்று இயம்புவது பொருந்தாது; அது பொற்காலமே என்பதை நிறுவ நாம் அக்காலத்திய அறநூல்களைச் சான்றுகாட்டினாலும், புதிய பாவினங்கள் தோன்றின என்று தாழிசையையும் விருத்தத்தையும் பட்டியலிட்டாலும், களப்பிரர் கால நூல்கள், கருத்துச் செறிவிலோ மொழிவளத்திலோ, சங்க நூல்களுக்கு இணையாகாத எளிய நூல்களாகவே இருப்பது கண்கூடு. இஃது அக்காலத்தில் நிலவிய தமிழிலக்கிய வறட்சியைத் துலக்கமாய்ப் புலப்படுத்தவே செய்கின்றது.]

    பண்டாரத்தாரின் குறிப்பிடத்தக்க நூலான பாண்டியர் வரலாறு கல்வெட்டுகள், செப்பேடுகள், தமிழிலக்கிய நூல்கள், பிற ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். கடைச்சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, கி.பி. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டிய நாட்டில் ஆட்சிபுரிந்த மன்னர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள இந்நூல் உதவுகின்றது. பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த மன்னர்களின் பெயர்கள், ஆட்சிக் காலம், ஆட்சி எல்லை, அரசியல் நிலை, மெய்க்கீர்த்தி என அனைத்தும் தெளிவாய்ப் வகுத்தும் பகுத்தும் இந்நூலில் உரைக்கப்பெற்றுள்ளன.

    தமிழகத்தைப் பொறுத்தவரை, சோழர்களுக்கென்று தனித்த பீடும் பெருமையும் உண்டு. காவிரி புரக்கும் சோழநாட்டின் வற்றாப் பெருவளத்தைச் சங்கப்பாடல்கள் பலவும் வாயூறிப் பேசுகின்றன.

    பல்லவர்களைத் தொடர்ந்து தமிழகத்தில் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆட்சியமைத்தவர்கள் பிற்காலச் சோழர்கள். இவர்களின் வரலாற்றை நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், மு. அருணாசலம் ஆகியோர் ஆராய்ந்து எழுதியிருக்கின்றனர்.

    பிற்காலச் சோழர்களின் ஆட்சியை நிறுவிய விசயாலயச் சோழன் காலம் தொடங்கிச் சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த மூன்றாம் இராசேந்திர சோழனின் காலம் வரையிலான சோழர்களின் ஆட்சிமுறை, அரசர்கள் மேற்கொண்ட அரும்பணிகள், அவர்களிடம் அரசியல் அதிகாரிகளாய்ப் பணியாற்றியோர், அவ் அரசர்கள் ஈடுபட்ட போர்கள், சூட்டிக்கொண்ட விருதுப்பெயர்கள் என அனைத்தையும் தம்முடைய ’பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்ற நூலில் தக்க சான்றுகளோடு விளக்கியுள்ளார் சதாசிவ பண்டாரத்தார். இதற்காக, சோழர் காலத்தைச் சேர்ந்த சுமார் 8,000 கல்வெட்டுகளை ஊர் ஊராய்த் தேடிச்சென்று படித்தார்; அந்தத் தரவுகளின் அடிப்படையில் சோழர் சரித்திரத்தைத் தமிழில் எழுதி முடித்தார் என்று அறிகின்றோம். மூன்று தொகுதிகளாக எழுதப்பட்ட இந்நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

    இந்நூலில் சோழர் ஆட்சிமுறை, சோழர்காலச் சமுதாயம் பற்றிப் பண்டாரத்தார் குறிப்பிட்டிருக்கும் சுவையான செய்திகளில் சில நம் கவனத்திற்கு…

    சோழமன்னர்கள் தங்கள் ஆட்சியிலிருந்த பகுதிகளை மண்டலங்களாகவும் வளநாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரித்து ஆட்சிபுரிந்து வந்தனர். அரசியல் நிர்வாகத்திற்குத் துணைபுரிந்தவர்கள் ’உடன்கூட்டத்ததிகாரிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சோழ மன்னர்களின் ஆட்சி சிறப்பாக அமைந்ததற்குக் காரணம், ஊராட்சி மன்றங்களின் தன்னலமற்ற தொண்டேயாகும். ஊராட்சிகளை நடாத்துதற்கு நான்கு விதமான சபைகள் அன்று இருந்தன. அவை கிராம சபை, தேவதானத்துச் சபை, ஊர்ச் சபை, நகர சபை ஆகியன.

    தங்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளின் விளைநிலங்களைக் கோல்கொண்டு அளந்து வரிவிதித்தனர் சோழ மன்னர்கள். நிலங்களை இவ்வாறு அளவிட்டு நிலவரி விதித்ததுபோல் மக்கட்தொகையினை அளவிட்டு அறிவதில் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை எனத் தெரிகின்றது.

    வேந்தர்கள், குறுநில மன்னர்கள், செல்வந்தர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருந்தபோதினும், பொதுமக்கள் ஒருவனுக்கு ஒருத்தியாகவே வாழ்ந்துவந்தனர். உடன்கட்டை ஏறும் வழக்கமும்கூட உயர்குடியினரிடம் குறிப்பாக அரசர்குடிப் பெண்டிரிடம் இருந்ததே தவிர அது சமூக வழக்கமாய்ப் பின்பற்றப்படவில்லை என்று தெரிவிக்கின்றார் பண்டாரத்தார்.

    பண்டாரத்தாரின் மற்றொரு வரலாற்று நூல், ’முதற்குலோத்துங்க சோழன்’ என்பதாகும். இந்நூலைப் பாராட்டிய தமிழ்த்தாத்தா உ.வே.சா., பின்வருமாறு குறிப்பிடுகின்றார்…

    ”கும்பகோணம் வாணாதுறை ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி சதாசிவ பண்டாரத்தார் இயற்றிய முதற்குலோத்துங்க சோழன் சரித்திரத்தை முற்றும் படித்துப் பார்த்தேன். இயற்றியவர் நெடுங்காலமாகச் சிலாசாசனங்கள், சங்கச் செய்யுட்கள் முதலியவற்றை ஆராய்ந்தவரென்பதை இது புலப்படுத்துகின்றது. தமிழ்மொழி இக்காலத்தில் பல துறைகளிலும் வளர்ச்சியுற்று வருகின்றதென்பதற்கு இந்நூலாசிரியரது கல்வி முறையையே ஓர் இலக்காகக் கூறலாம். தமிழ் அரசர்களுடைய சரித்திரங்களை அறிந்துகொள்வது இன்றியமையாதது ஆகையால், எளிய நடையில் நன்றாக முறைப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் பொதுவாக யாவருக்கும், சிறப்பாகப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும் மிகப் பயன்படுமென்று எண்ணுகின்றேன்” என்கிறார்.

    அறிஞர் சதாசிவ பண்டாரத்தாரின் அயராத உழைப்பாலேயே நம் தமிழ்நாட்டு வரலாறு நன்கு விளக்கமுற்றது. இலக்கியங்களில் விளக்கம்பெறாத இடங்களையும், இலக்கியங்களின் காலத்தையும் அவர் கல்வெட்டுகளின் துணைகொண்டு விளக்கிக் காட்டினார். தமிழ்மொழியின்பால் அவருக்குக்கிருந்த ஈடுபாடு அவருடைய ஆராய்ச்சிகளில் தென்பட்டதென்றாலும் அவருடைய ஆராய்ச்சி நேர்மையை அது சற்றும் குலைத்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிப் பணிகளைச் சிறப்பிக்கும் வகையில், பேராசிரியர் கார்மேகக் கோனார், பண்டாரத்தார்க்கு ’ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்னும் பட்டத்தை மார்ச் 29, 1956இல் வழங்கினார்.

    தம் வாழ்க்கையை முற்றாக ஆராய்ச்சிக்கும் எழுத்துக்குமே அளித்துவிட்ட சதாசிவ பண்டாரத்தார், 1960ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், தம்முடைய 67ஆம் அகவையில் சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை நகரில் காலமானார்.  

    கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு அமைந்திருக்க வேண்டிய வரலாற்றறிவு, ஆராய்ச்சித்திறன் ஆகியவற்றோடு தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் பயிற்சியும், இடையறா முயற்சியும் கொண்டவராய்த் திகழ்ந்து,  காய்தல் உவத்தலின்றி உண்மைகளை மட்டுமே வரலாறாக ஆவணப்படுத்தியிருக்கும் சதாசிவ பண்டாரத்தார் போன்ற பேரறிஞர்களைத் தமிழக இளைஞர்களுக்கு இன்று யாரென்றே தெரியவில்லை என்பதுதான் வருந்தத்தக்க உண்மைநிலை!

    இந்த அவலம் இனியும் நீடித்தல் கூடாது. நம் தமிழக வரலாற்றை – தமிழ்க்குடியின் பெருமையை அரிதின் முயன்று வெளிப்படுத்திய சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிப் பணிகள் வெளிச்சம் பெறவேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் பாடத்திட்டத்தில் அவருடைய வரலாற்று நூல்கள் இடம்பெற வேண்டும். பண்டாரத்தாரின் சொந்த ஊரான திருப்புறம்பயத்தில் அவருக்கோர் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். இச்செயல்கள் பண்டாரத்தாரின் மெய்வருத்தம் பாராப் பேருழைப்புக்கும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நாம் காட்டும் சிறிய கைம்மாறாய் அமையும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, செனை – 600 113

    2. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=880

    3. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2017/dec/31/வரலாற்றுப்-பேரறிஞர்-திவை-சதாசிவப்-பண்டாரத்தார்-2836124.html

    4. https://www.hindutamil.in/news/blogs/231349-10-2.html

     

     

    Share
  • மொபைலில் கேரம் விளையாடுவது எப்படி?

    மொபைலில் கேரம் விளையாடுவது எப்படி?

    மொபைலில் கேரம் விளையாடுவது எப்படி? இதோ, செயல்முறை விளக்கம் வழங்குகிறார், சுதா மாதவன். நீங்களும் விளையாடிப் பாருங்க, உங்க அனுபவத்தை எங்களுக்குச் சொல்லுங்க.

    படத்துக்கு நன்றி: விக்கிமீடியா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெல்ஜியம்டா

    பெல்ஜியம்டா

    பாஸ்கர்

    அது ஒரு ஆறடி முகக் கண்ணாடி
    பெல்ஜியம்டா என்பார் தாத்தா சில சமயம்
    கப்பல்ல வந்ததுடா  என்பார் அப்பா

    நாராயணா என நின்றவாறு வீழ்ந்தார் தாத்தா ஓர் நாள்
    அப்பா நின்று அரைக்கால் சட்டையோடு தலை சீவுவார்
    கிருதாவை அளவு பார்த்து, தானே சிரித்துக்கொள்வார்
    கை நடுக்கத்திலும் கடைசி வரை அவரே சவரம் செய்தார்

    ரெமி பவுடரை வயிற்றில் கொட்டிக்கொள்வது வேடிக்கை
    நானும் கூட என் அழகை அவ்வப்போது  ரசிப்பேன்
    பாதரசம் போனதனால் பார்ப்போர் பொலிவிழந்தனர்
    கண்ணாடியில் கறைகள் பட்டு யாரும்  சீந்தவில்லை
    யுவதியைக் கூட ஒரு முறை அது அழகாகக் காட்டவில்லை

    ஓர் நாள் அதில் நான் டர்பன்  தாத்தா போல் தெரிந்தேன்
    மறுநாள் கண்ணாடியில் சட்டையில்லாத அப்பா வந்தார்
    பக்கத்து வீட்டுக் காயத்ரியும் அவ்வப்போது வருவாள்

    பழைய சாமான்காரன் இது போலக்  கிடைக்காதென்றான்
    நேற்று அதுவே நின்றாவாறே விழுந்து உடைந்தது
    இப்போது எல்லாத் துகள்களிலும் என் முகம் தெரிகிறது
    பெல்ஜியம்டா சீமா என்ற தாத்தாவின் குரல் கேட்கிறது.

    Share
  • லண்டன் உயிரியல் பூங்காவின் உள்ளே

    லண்டன் உயிரியல் பூங்காவின் உள்ளே

    லண்டன் உயிரியல் பூங்காவின் உள்ளே சுற்றிப் பார்க்கலாம், வாங்க.

    London Zoo is the world’s oldest scientific zoo. It was opened in London on 27 April 1828, and was originally intended to be used as a collection for scientific study. In 1831 or 1832, the animals of the Tower of London menagerie were transferred to the zoo’s collection. It was opened to the public in 1847. Today, it houses a collection of 673 species of animals, with 19,289 individuals, making it one of the largest collections in the United Kingdom. The zoo is sometimes called Regent’s Zoo. It is managed under the aegis of the Zoological Society of London (established in 1826) (Wiki).

    Video by Navya.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமா?

    வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமா?

    வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமா? எப்படி? சிரிக்கும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? ஏன் சிரிக்க வேண்டும்? எப்படிச் சிரிக்க வேண்டும்? நுணுக்கமாக விளக்குகிறார் ஹாஹோ சிரிப்பானந்தா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 3

    ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 3

    எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத் திறமை படைத்த ஜெயந்தி சங்கர், வீணை வாசிக்கவும் கற்றுள்ளார். புகழ்பெற்ற காரைக்குடி சகோதரர்களின் பெண்வயிற்றுப் பெயர்த்தியான வீணை விதூஷி, காரைக்குடி ஜெயலஷ்மி சுகுமார் அவர்களிடம் சிங்கப்பூரில் 2010-2013 காலக்கட்டத்தில் வீணையிசை பயின்றார். இந்தப் பாடலை 2010-11ஆம் ஆண்டில் வாசித்தார். “என் வாசிப்பில், இனிமையாக, சரியாக இருப்பவை என் மதிப்பிற்குரிய ஆசிரியரின் ஆசிகள். அந்தப் பெருமை அவரையே சேரும். அல்லாதன எல்லாம் என்னைச் சேரும். அதற்காக அவரிடமும் கேட்பவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ஜெயந்தி சங்கர்.

    இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    கம்பீரநாட்டை ஜதிஸ்வரம்
    ராகம்: கம்பீரநாட்டை
    தாளம்: ஆதி
    ஆசிரியர்: வீணை விதூஷி காரைக்குடி ஜெயலஷ்மி சுகுமார், சிங்கப்பூர்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புத்தக மதிப்புரை : Astrophysics for People in a Hurry

    புத்தக மதிப்புரை : Astrophysics for People in a Hurry

    முனைவர் நடராஜன் ஸ்ரீதர்
    ஆற்றல் அறிவியல் துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி
    natarajangravity@gmail.com

    Astrophysics for People in a Hurry என்ற புத்தகம் (தமிழில்  அவசரமாய் செல்வோருக்கு வான இயற்பியல்  என்று சொல்லலாம்) மிகப்பெரும் இயற்பியலாளர் நீல் டீகிரீஸ் டைசன் என்பாரால் எழுதப்பட்டுள்ளது. புத்தகம் வானியல் குறித்த பல்வேறு விஷயங்களை அலசுகிறது. பிரபஞ்சத்தின் முதல் நிமிடங்கள், விண்மீன்கள், விண்மீன் கூட்டங்கள், கோள்கள், வானத்திலுள்ள வேதியியல் மூலக்கூறுகள் ஆகியவற்றைப் பற்றி இந்நூல் விரிவாக அலசுகிறது.

    இப்புத்தகத்தில் என்னென்ன விஷயங்கள் அலசப்பட்டுள்ளது என்பது குறித்து இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

    காமா கதிர்கள் முதல் ரேடியோ அலைகள் ஈறாக ஒட்டுமொத்த மின்காநத அலைகளைப் பற்றி மிக விரிவாக விளக்குகிறார் டைசன். எந்தெந்த அலை நீளங்களைக் கொண்டு எந்தெந்த வானியற்பியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பதைக் குறித்தும் தெளிவுற விளக்குகிறார். உதாரணமாக மைக்ரோ அலைகளைக் கொண்டு பிரபஞ்சத்தின் பின்புல  வெப்பநிலையைக் கணக்கிடலாம் என்றும், ரேடியோ அலைகளைக் கொண்டு துடிப்பு விண்மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் எனவும் விரிவாக விளக்குகிறார். நமது கண்கள் எவ்வகையான ஒளிகளைத் தெரிந்துகொள்ளும் மற்றும் நாம் கண்ணால் காணும் ஒளிகளைத் தவிர பிரபஞ்சம் எந்த அளவு மின்காந்த அலைகளால்

    நிரப்பப்பட்டுள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய முறையில் விளக்கியுள்ளார்  டைசன்.

    இந்நூலின்  முதல் அத்தியாயம் பிரபஞ்சம் தோன்றிய ஆரம்ப நிமிடங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது. முதல் மூன்று நிமிடங்களில் பிரபஞ்சம் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதில்  ஆரம்பித்து பூமியின் உருவாக்கம் வரை முதல் அத்தியாயம் தெளிவாக விளக்குகிறது. முதல் எலக்ட்ரான் தோன்றியதிலிருந்து பிரபஞ்சத்தில் இன்றைய நிலை வரை சற்று விரிவாகவே அலசுகிறது முதல் அத்தியாயம்.

    இரண்டாவது அத்தியாயம் பூமியைப் பற்றி விளக்குகிறது. பூமியில் உள்ள சிறப்புமிக்கத் தனிமங்கள் மற்றும் பூமியிலிருந்து நாம் செய்த சாதனைகள், விண்வெளிப் பயணத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து விவரிக்கிறார் டைசன்.  நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே உள்ள வெளியைப் பற்றி மிக விரிவாகப் பின்வரும் அத்தியாயங்களில் விளக்குகிறார்.  மேலும் நட்சத்திரக் கூட்டங்களின் இயக்கங்கள் பற்றியும் மற்றும் அவற்றின் வடிவங்கள் பற்றியும் தெளிவாக அந்தந்த அத்தியாயத்தில் விளக்குகிறார்.

    பல விந்தையான செய்திகளையும் இந்த புத்தகத்தில் அள்ளித் தெளிக்கிறார். உதாரணமாக பிரபஞ்ச பின்புல வெப்ப நிலையைக் கண்டறிய செய்யப்பட்ட ஆய்வில் ஆரம்பகட்டத்தில் ஒரு சில குறிப்பிட்ட மாற்றங்கள் அதன் தரவுகளில் கிடைத்தனவாம். இது பெல் ஆய்வுகூடத்தில் நிகழ்ந்தது. இதை ஆரம்பத்தில் கண்டறிந்த பொறியிலாளர்கள் மீண்டும் மீண்டும் இவ்வகையான தரவு மாறுதல்கள் இருப்பதைக் கண்டறிந்தனராம்.  அது  என்னவென்று தேடிப் பார்த்தபோது அந்த அலைவாங்கியில் புறாவின் எச்சங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம். அதுவே அந்த தரவுகளில் சில மாறுதல்களை கொடுத்தது என்றும் அவர் விந்தையாக சில வரலாற்றுத் தகவல்களை தெரிவிக்கிறார்.

    இந்த பிரபஞ்சத்தின் விந்தையான விஷயங்களில் ஒன்று டார்க் மேட்டர் என்று அழைக்கப்படக்கூடிய இருள் பொருள்.  இதன் கண்டுபிடிப்பு  மற்றும் இது எவ்வாறு ஈர்ப்பியல் ரீதியாக விண்மீன் பேரடைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் குறித்தும் அத்தியாயம் ஐந்தில் விவரிக்கிறார் டைசன். இருள் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட விந்தையான வரலாற்றுச் செய்தியையும் விளக்குகிறார்.

    எந்தெந்தத் தனிமங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறித்து விரிவாக அலசுகிறார் நீல் டிகிரீஸ் டைசன். பூமிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் தனிமம் என்பது ஹீலியம் எனத் தெரிவிக்கிறார். ஐன்ஸ்டைனின் பெயரில் கூட ஒரு தனிமம் இருக்கிறதாம். மேலும் எவ்வாறு இத்தகைய தனிமங்கள் பூமிக்கு வந்திருக்கக் கூடும் என்பதையும் அவர் தெரிவிக்கிறார். பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் நிறைந்திருந்தாலும் எவ்வாறு பூமியில் இத்தகைய அதிகமான உலோகங்கள் செறிந்துள்ளன என்ற கேள்விக்கு பதிலாக இவையெல்லாம் நட்சத்திரங்களின் வெடிப்பிலிருந்து வந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கிறார். கதிரியக்கத் தனிமங்களின் விசித்திரமான பண்புகளையும் டைசன் இப்புத்தகத்தில் பட்டியலிடுகிறார்.

    ஐன்ஸ்டைன் தனது புலக் கொள்கையை வெளியிட்ட பிறகு அவர் தனது தத்துவத்தில் உள்ள மிகப்பெரும் தவறு என்று குறிப்பிட்ட பிரபஞ்சவியல் மாறிலி எவ்வாறு தற்போது இருள் ஆற்றலாக ஆய்வாளர்களால் விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்று அத்தியாயம் ஆறில் விரிவாக எழுதுகிறார். இருள் ஆற்றல் மற்றும் பிரபஞ்சத்தின் விரிவு ஆகியவற்றை அலசுகிறது இந்த அத்தியாயம்.  எவ்வாறு நெபுலாக்களைக் கொண்டு பிரபஞ்சம் விரிவடைவதையும் மற்றும் இருள் ஆற்றலின் இருப்பு குறித்தும் விளக்கம் தரப்படுகிறது என்பதை இந்த அத்தியாயம் மிக விரிவாகவே விளக்குகிறது.

    ஒன்று தெரியுமா நீல் டிகிரீஸ் டைசனின் பெயரில் எரிகல் ஒன்று உள்ளது. 2000மாவது ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு எரிகல்லுக்கு 13123-டைசன் என்று நீல் டிகிரீஸ் டைசனின் பெருமைகளைப் பறைசாற்றும் விதமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    நாம் வேற்றுக்கிரக உயிரினங்களை அறிவியலின் வளர்ச்சியின் நீட்சியாகத் தேடி வருகிறோம். வேற்றுகிரகத்தில் ஏதாவது உயிர் இருக்குமா அல்லது வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்திருப்பார்களா என்பது போன்ற கேள்விகளை முன்னிறுத்தி அறிவியல்  தமது தேடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.  இந்நூலின் பத்தாவது அத்தியாயத்தில் அத்தகைய தேடல் குறித்தும்

    டைசன் விளக்குகிறார். வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியானவை என்பதை எவ்வாறு கண்டறிவது என்றும் மேலும் எத்தகைய அறிவியலை அடிப்படையாகக் கொண்டு வேற்று கிரகங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம் என்பது குறித்தும் விரிவாக எழுதுகிறார் டைசன். உதாரணமாக ஒரு  நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கிரகத்தைக் கண்டறிய, அதன் பிரகாசம் குறைவதை வைத்து கணக்கீடுகள் செய்து ஒரு கிரகத்தில் இயங்கியலைக் கணக்கிட முடியும் என்று தெரிவிக்கிறார். மேலும் ஒரு கிரகத்தில் பட்டு பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டு அக்கிரகத்தின் என்னென்ன வேதியல் மூலக்கூறுகள் இருக்கக்கூடும் என்பதையும் விரிவாக விளக்குகிறார். இவையெல்லாம் வைத்து ஒரு வேளை அறிவார்ந்த வேற்று கிரக உயிரினங்கள் பூமியைத் தேடினால் அவைகள் பூமியை எந்தெந்த வகையில் பூமியின் இருப்பைக் கணக்கிட முடியும் என்பதையும் டைசன் மிக விரிவாக விளக்குகிறார். வேற்றுக்கிரக உயிரினங்களின் பார்வையில் பூமியை ஒரு அறிவார்ந்த உயிரினங்கள் வாழும் கோளாகக் கணக்கிட்டு அதன் இருப்பிடத்தைப் பற்றி விளக்குகிறார்.

    இப்புத்தகத்தின் பதினோராவது அத்தியாயத்தில் உலகில் சமநிலையற்றத் தன்மையை விவரிக்கிறார். நாமெல்லாம் வானத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போது பூமியில் பல்வேறு குழப்பமான சூழல்கள் நிகழ்கின்றன என்பதை அவர் மறுக்கவில்லை. சமூக வாழ்வில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் அவர் கடுமையாகச் சாடுகிறார்.

    இந்த அற்புதமான புத்தகம் அறிவியலை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளவும் மற்றும் பிரபஞ்சவியலின் வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள்.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 26

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 26

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமத்திலும் புதுமை தேக்கும் உத்தி

    முன்னுரை

    கவிதையில் கருத்து ஒன்றினைத் தவிர மற்ற எல்லாமே அதனை வெளிப்படுத்தும் உத்திகளே! கவிதையின் வெற்றி அதன் உத்தியில்! பொருளுக்கேற்ற யாப்பு என்பதும் யாப்புக்கேற்ற சந்தம் அல்லது சீர் என்பதும் அவற்றோடு கூடிய கற்பனை என்பதும் உத்திகளே. இவற்றுக்கெல்லாம் மேலாக நிற்பது உவமம். கருத்துப் புலப்பாட்டுக் கருவியாக விளங்கும் இந்த உவமமே கவிதையின் நிலைத்த வெற்றிக்குத் தலையாய காரணமாக அமைகிறது.  அதனால்தான் சங்கக்காலத்தில் தொடங்கித் தற்காலம் வரை கவிதைகள் உவமங்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. சில பொழுதுகளில் படைப்பாளனின் தனித்திறனை எடைபோடுவதற்கும் இந்த உவமங்கள் எடைக்கற்களாக இருக்கின்றன. மரபு சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்ட காலத்தில் கூட உவமங்களில் புதுமை தேக்கும் முயற்சி நடந்திருக்கிறது. இது பற்றிய விளக்கத்தைச் சில எடுத்துக்காட்டுக்கள் வழி இக்கட்டுரை ஆராய்கிறது.

    உவமப் பயன்பாட்டில் உற்றுநோக்கலின் பங்கு

    பொருளை ஒப்பிட்டுக் காட்சிப்படுத்துவதும் கருத்துக்கு விளக்கமளிப்பதுமே உவமத்தின் தலையாய பணி என்பது உண்மையே. ஆனால் அத்தகைய ஒப்பீடுகளை மேலேழுந்தவாரியாகச் செய்துவிட இயலாது. செய்தால் உவமம் அழகு பெறாது ஆழங்கால் பட்டு நிற்காது காலங்காலாமாகப் பெண்ணின் முகத்துக்குத் தாமரையை ஒப்பிட்டு வந்ததால் தாமரைக்கும் பெருமையில்லை. பெண்ணின் முகத்துக்கும் பெருமையில்லை. இதனை உணர்ந்த கம்பன் தாமரையை ஆணாகிய இராமனுக்கு ஒப்பிட்டுக் காட்டியதை இங்கு நினைவுகூரலாம். ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’ என்பது கம்பன் தமிழ். சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை என்பது இல்பொருள். சித்திரத்துத் தாமரை மலர்வது உண்டா? நீர்த்தாமரையை உவமிக்க மனமில்லாத கம்பன் இப்படி எழுதிக்காட்டுகிறான். முல்லை போன்ற பற்கள் என்னும் மரபுவழி உவமக் கோட்பாட்டைத் தற்காலக் கவிஞர் ஒருவர் தமது கவிதையில் ‘நடுகற் பற்கள்’ என்று வண்ணனை செய்திருக்கிறார். நாட்டுப்புறப்பாடல்களில் ‘புளியங்கொட்டை’ பல்லுக்கு உவமமாக்கப்பட்டிருப்பதும் மண்வெட்டியை உவமமாக்கியிருப்பதும் உண்மையே. என்றாலும் நடுகற்களை உவமமாக்கியிருப்பது  படைப்பாளனுடைய வரலாற்றுணர்வையும் புதுமை தேக்கும் உணர்ச்சியையும் ஒருசேரக் காட்டுவதாக உள்ளது. பொன்விலங்கு என்னும் நாவலில் பெண்ணின் கூந்தலுக்குக் ‘குலை குலையாய்த் தொங்கும் திராட்சைக் கொத்துக்களின் தொகுதியை’ நா.பார்த்தசாரதி உவமமாக்கியிருப்பார். இதனால் பரவலான உற்று நோக்கலும் ஆழமான சிந்தனையிலும் ஈடுபட்டாலேயொழிய உவமச் சித்திரிப்பில் நிலையான வெற்றியினைப் பெறமுடியாது என்பது புலனாகும்.

    பழைமைக்குள் புதுமை

    தவளை மேட்டுக்கு இழுக்கிறது. மீன் தண்ணீருக்குள் இழுக்கிறது என்பது அனைவரும் அறிந்ததொரு சொலவடை. ஒரு சிக்கலில் அல்லது சூழலில் ஒரு முடிவுக்கு வராமல் தவிக்கின்ற ஒருவனை அல்லது அவனுடைய மனநிலையை இப்படிச் சித்திரித்திருக்கிறார்கள். மக்கள் வாழ்வியலே இலக்கியத்திற்கும் அவர்களின் மொழிவழக்கே இலக்கணத்திற்கும் அடிப்படையாதலின் இந்தக் கருத்தியல் இலக்கியங்களில் பலவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலா வந்த மன்னனைக் காணத் துடிக்கிறாள் தலைவி. ஆண்மகனைத் தானாகக் காணச் செல்ல அவள் நாணம் தடையாகிறது. பருவத்தின் தூண்டுதலால் மனம் மீளவும் வாசல் நோக்கி அவளைச் செலுத்துகிறது. ஆசை முன்னுக்குத் தள்ள நாணம் பின்னுக்குத் தள்ள அவள் துடிப்பதை,

    “நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
    காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற —- யாமத்[து
    இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு போலத்
    திரிதரும் பேரும்என் நெஞ்சு”

    என்னும் பாடல் (முத்தொள்ளாயிரம்) இருதலைக்கொள்ளி எறும்பின் துடிப்புக்கு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறது. இந்த உவமத்தை மணிவாசகப் பெருமான்,

    “இருதலைக் கொள்ளியின் உள்எறும்[பு] ஒத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்”

    என்னும் திருவாசகம் “உன்னை நாடி உய்வதா? உலகியல் தோய்ந்து மாள்வதா எனத் தன் மனம் ஒரு நிலையில் நில்லாததை மணிவாசகப் பெருமான் இந்த உவமத்தால் விளக்குகிறது.

    “இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பேபோல்
    உருகா நிற்கும் என்னுள்ளம் ஊழி முதல்வா!”

    என்று திவ்யப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வாரும் இதே உவமத்தைப் பயன்படுத்தப் பாடியிருப்பதைக் காணலாம். மேலே காட்டியவையெல்லாம் பிற்கால இலக்கியங்கள். ஆனால் சங்க இலக்கியமான அகநானூற்றிலும் இதே உவமம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் வியப்பான செய்தி. மக்கள் வழக்கின் தீவிரத் தாக்குதலுக்கு இலக்கியம் உள்ளான காலக்கட்டம் அது.

    பொருள் தேடும் முயற்சியால் எழுந்த தலைவனின் ஆண்மை “பொருள் தேடப் போவோம் வா” என்று முனைகின்றது. தலைவியின் மீது கொண்டுள்ள காதலோ தடுக்கின்றது. ஆண்மை முந்துற ஆசை பிந்துறும் நிலைமை. அவன் மனமோ இப்போது இடைப்பட்ட நிலையில் போவதும் வருவதுமாக ஊசலாடுகிறது. நரைமுடி நெட்டையார் எனும் புலவர் இதைப் பாடியுள்ளார்.

    “ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
    கவைபடும் நெஞ்சம் கட்க ணகைய
    இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி”

    என்பன அப்பாடல் அடிகளாகும். சங்கக் காலத்திலிருந்து “இருதலைக்கொள்ளி எறும்பென்னும்” உவமை எல்லாப் புலவர்களையும் கவர்ந்து எடுத்தாளச் செய்திருக்கிறது.

    சங்கச் சான்றோர்கள் இந்த உற்று நோக்கலில் தனித்து விளங்குகிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் அகப்புறத்தை நன்கு உற்றுநோக்கியே வாழ்ந்தவர்கள் ஆதலின் ஒரு நிகழ்வைக் கவிதையாகக் காட்சிப்படுத்துகிறபோது உவமம் என்பது தானாக அமைந்துவிடுகிறது. பொருளையோ கருத்துக்களையோ கைவசம் வைத்துக் கொண்டு அதற்குப் பொருத்தமான உவமத்தைத் தேடும் பழக்கம் அவர்களிடம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. இந்தப் பின்புலத்தில்  எறும்புக்குப் பதிலாக இற்றுப்போன கயிற்றை உவமமாக்கிய ஒரு தலைவியைக் காணலாம்.

    திண்டாடும் உயிரும் தேய்புரி பழங்கயிறும்

    பொருள்வயிற் பிரிய எண்ணம் கொண்ட தலைமகன் அதாவது குடும்பத்தலைவன் அவனது பிரிவை ஆற்றாது அரற்றிய தலைவியைத் தேற்றிப் பிரிகிறான். பிரிந்து வினைசெய்பவன் மனைவியைப் பற்றிய நினைவு மேலோங்கி அறிவழிந்த நிலையில் அலைக்கழிக்கப்படுகிறான் மற்றொருபக்கம். வினையைக் குறைவுபடச் செய்து தலைமகள் பற்றிய காதல் மீதுறத் திரும்புவானாயின் அது ஆண்மகற்கு அறமாகாததோடு இளிவரல் பயக்கும் என்பதையும் உணர்கிறான்.  நெஞ்சமும் அறிவும் நிகழ்த்தும் இந்தப் போரில் தலைமகனுடைய உயிர் தள்ளாடும் நிலைக்குத்தான் சங்கச் சான்றோர் ஒருவர் புதுமையானதோர் உவமத்தைப் பயன்படுத்திக் காட்டியிருக்கிறார். இந்த உவமத்தை அனுபவிக்க வேண்டுமானால் பாட்டின் பல பொருட்பகுப்புக்களையும் தனித்தனியாகக் கற்றுணரவேண்டும்.

    நெஞ்சு சொல்கிறது இப்படி!

    “புறத்தாழ்பு இருண்ட கூந்தல் போதில்
    நிறங்கிளர் ஈரிதழ் பொலிந்த உண்கண்
    உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்
    செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும் (தலைவனின்) நெஞ்சம்!”

    அறிவு என்ன சொல்கிறது?

    “செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
    எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
    உறுதி தூக்கத் தூங்கி அறிவே
    சிறு நனி விரையல் என்னும்!”

    ஆயிடை (இவற்றுக்கிடையே)

    “ஒளிறேந்து மருப்பின் களிறுமாறு பற்றிய
    தேய்புரி பழங்கயிறு போல
    வீவது கொல் என் வருந்திய உயிரே!”

    பாட்டின் பொருள்முறைக் கட்டுமானம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது பாருங்கள்! நெஞ்சு செய்யும் கொடுமை இது!. அறிவு காட்டும் தடம் இது! இரண்டுக்கும் நடுவே வதைபடும் என் உயரின் நிலை இது! முதலில் தலைவியிடம் தலைவனுடைய மனம் செல்வதற்கேதுவான அவளுடைய எழில் வண்ணனை செய்யப்படுகிறது. வினையே ஆடவர்க்கு உயிராதலின் அறிவு தலைவி பால் கொண்ட காதல் பற்றிய சிந்தனையை வரையறை செய்து அவனைத் தடுப்பது அடுத்த நான்கு வரிகளில். ‘ஆயிடை’ என்னும் சொல் வழி இரண்டையும் இணைக்கும் புலவர், நைந்து போன தலைவன் உயிரைத் தேய்ந்து போன பழங்கயிற்றுக்கும், அறிவையும் நெஞ்சையும் வலிமையான இரண்டு களிறுகளுக்கும் உவமமாக்கிய திறன் இறுதியில்!

    இருதலைக் கொள்ளி எறும்பு என்னும் மரபு சார் உவமத்திலிருந்து விலகிப் புதுமை தேக்கும் உவமமாகப் பொலிகிறது. கயிற்றைக் கருவி கொண்டு அறுக்காது ஈர்த்த வழி அது புரிபுரியாய் நெக்குற்று அறுபடுவது பற்றித் ‘தேய்புரி பழங்கயிறு’ என்றும், அதன் வலிமையும் உறுதியும் குறைந்த நிலையை உணர்த்துவதற்குப் பழங்கயிறு என்றும் கூறிய நுட்பம் உணர்க. பிரிதலும் இருத்தலும் இரங்கலுமாகிய உரிப்பொருள் பெரும்பாலும் தலைவி பற்றிய புலனெறிவழக்கிற்கே உரியதாயினும் மிக மிக நுட்பமாகத் தலைவனது மனத்து வேதனையை உவம வாயிலாகப் பதிவிட்டிருக்கும் சங்க இலக்கியத்தின் நுட்பம் தற்கால எந்தத் திறனாய்வுக் கொள்கைக்கும் அடங்காதது!

    வினைமுடித்தன்ன இனியோள்

    புறஅழகினால் ஒரு பெண் ஆணைக் கவர்வதற்கும் பண்புகளால் அவன் நெஞ்சில் இடம்பெறுவதற்கும் வேறுபாடு உண்டு. இது பெண்ணுக்கும் பொருந்தும். தொல்காப்பியர் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பண்புகளின் தொகுதியாகவே பெண்ணைப் பார்த்திருக்கிறார். ஆணுக்கும் பெருமையையும் உரனையும் இலக்கணமாக வரையறை செய்திருக்கிறார். அத்தகைய ‘பண்புத்தொகையான ஒருத்தியை மணமுடித்து வாழும் தலைவன், பொருள்வயிற் பிரிகிறான். பிரிந்தவன் திரும்புகிறான். திரும்பியவன் மனைவியோடு மகிழ்கிறான். மகிழ்ச்சியினால் வினையை மறக்கிறான். அப்போது அவன் நெஞ்சு அவனுக்கு நினைவூட்டுகிறது.

    “இப்படியே இருந்துவிட்டால் இல்லறம் சிறப்பது எப்படி? என்று. நெஞ்சு கூற, அந்த நெஞ்சிற்குத் தலைவன் இயலாமையை அதாவது முன்னர்ச் சென்றபோது அவன் உள்ளம் எண்ணியதை அந்த உள்ளத்திடமே வெளிப்படுத்துகின்றான்.

    “”நெஞ்சே! நீ எனக்கு நினைவூட்டுவது சரியே! ஆனால் சென்றமுறை சென்ற பொது நான் என்ன எண்ணினேன் என்பதை நீ மறந்துவிட்டாயா? வினைமுடிக்க சென்ற நான் அவ்வினை முடிந்ததால் உண்டான இன்பத்தைப் போன்றவளான என் மனைவி, மாலைநேரமாகிய இந்நேரத்தில் விளக்கேற்றிக் காத்திருப்பாளே” என நான் நினைத்தேனே? இந்த முறையும் சென்றால் அப்படித்தானே நினைப்பேன்?”

    என வருந்துவதாக இளங்கீரனார் என்ற புலவர் தலைவனாக மாறி எழுதிக்காட்டுகிறார்.

    “உள்ளினென் அல்லனோ யானே உள்ளிய
    வினை முடித்தன்ன இனியோள்
    மனைமாண் சுடரொடு படர்பொழுதெனவே”

    இந்தப் பாட்டில் தலைவியின் இனிமைக்கு ‘வினை முடித்த இனிமை’யை உவமமாக்கியிருக்கிறார் புலவர். அகம் என்பது காட்டாலாகாப் பொருளாகலானும் உணர்ந்து அனுபவித்தவரே மீளவும் உணரமுடியாதலானும் இவ்வாறு உவமிப்பது பொருத்தமே!.

    இங்கே தலைமகன் தலைமகளை இவ்வாறு எண்ணினான். மற்றொரு பாட்டில் தலைவியின் துன்பத்தை உணர்ந்த தோழி சொல்கிறாள்,

    “கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு”

    தலைவனோடு மகிழலாமாம். இது தோழியின் கூற்று. நல்ல கலன். அதாவது பொற்பாத்திரம். அது தொலைந்து போனது. திடீரென ஒரு நாள் எதிர்பாராச் சூழலில் அது கிட்டியது. கிட்டிய அந்த நேரத்தில் என்ன மகிழ்ச்சி உண்டாகுமோ அதனைப் போல இனியவன் தலைவன் அவனைச் சேர்ந்து மகிழலாம் என்பது கருத்து. இதே கருத்தமைந்த பாடலை உரையாசிரியர் இளம்பூரணர் மெய்ப்பாட்டியல் நூற்பா ஒன்றில் ‘இன்புறல்’ என்னும் சொல்லுக்கான பொருள் விளக்கத்தில் எடுத்துக்காட்டுகிறார்.

    “விட்டகன்று உறைந்த நட்டோர்க் கண்ட
    நாளினும் இனிய நல்லாள்”

    நெருங்கிப் பழகியவர் பிரிந்து “வேறிடத்திற்குச் சென்று திரும்ப மாட்டார் இனி சென்ற இடத்திலேயே கழிப்பார் என நினைக்கப்பட்ட அந்தப் பழைய நண்பரை எதிர்பாராச் சூழலில் கண்ட பொழுது எப்படி இனிக்குமோ அப்படி இனிப்பாளாம் தலைவி! என்ன அருமையான உவமம்? ‘இன்புறல்’ என்பதற்கு நட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதொரு மனநிகழ்ச்சி போல்வது என்று இளம்பூரணர் தரும் உரைவிளக்கம் கோடி பெறும்.

    நெருப்புத்தான் சுடும் என்பதில்லை. ஆற்றல் மிக்க கவிஞர்களுக்கு  எல்லாம் சுடும். எல்லாம் குளிரும். காரணம் வழக்கு. உலகியல் வழக்கில் மக்கள் பயன்படுத்தும் மொழிகளும் கற்பனைகளும் படைப்பாளனைப் பாதிக்கின்றன. அப்படிப் பாதித்தால்தான் அவன் படைப்பாளன். ‘நாவினால் சுட்டவடு நெஞ்சில் ஆறாது கிடக்கும்’ என்று திருவள்ளுவர் பாடுகிறார். ‘செயலுக்கும் சொல்லுக்கும் வேறுபட்டார் நட்பை எண்ணிப் பார்த்தால் எண்ணுகிற உள்ளமும் சுடும்’ என்றும் அவர் கூறுகிறார். மனுநீதிச் சோழனின் ‘நெஞ்சு சுட்டதாக’ இளங்கோவடிகள் பாடுகிறார். இத்தகைய உணர்வுகளின் அடர்த்தியான வெளிப்பாடே உவமங்களாக அமைந்திருக்க வேண்டும். இவ்வாறு அருவப் பொருளை வினைமுதலாக்கி உவமிக்கும் உவமக் கோட்பாடு தமிழுக்கே உரியது என்க.

    எய்கணை நீழல்

    ‘இளமை நில்லாது யாக்கை நிலையாது வளமையோ செல்வமோ நலம் ஒன்றும் தாராது’ என்ற பாடல் வரிகளைச் சீர்காழி குரலில் கெவிமடுக்காதவர் குறைவு. அவற்றின் நிலையாமையைப் பாடிய கவிஞர்கள் பல்வேறு உவமங்களால் தமது கருத்தினை விளக்கியிருக்கிறார்கள்.

    ‘“செல்வம் சகடக்கால் போல வரும்’

    என்று சக்கரத்தை உவமம் சொன்னார்கள். ‘உய்த்து ஈட்டும் தேனீக் கரி’ தான் சேர்த்து வைத்த தேனை இழக்கும் தேனீக்களை உவமமாக்கினார்கள்.

    ‘பனிபடு சோலை பயன்மரமெல்லாம்
    கனியுதிர்ந்து வீழ்ந்தற்று இளமை”

    என உதிர்கின்ற கனிகொண்டு விளக்கினார்கள்.

    “‘முற்றியிருந்த கனியொழிய தீ வளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு’’

    என நாளை செய்து கொள்ளலாம் என்னும் சோம்பல் நினைப்புக்கு, அடிக்கின்ற காற்றில் கனி நிலைக்க, காய் உதிர்ந்துவிடும் என உவமத்தால் எச்சரித்திருக்கிறார்கள்.

    ‘சேக்கை மரன் ஒழிய சேண் நீங்கும் புள்போல’

    செல்வம் அழியும். என்றார்கள்.

    ‘மலையாடு மஞ்சுபோல்’

    தேடுகிற செல்வம் தேய்ந்து போகும் என இயற்கையோடு இயைந்து விளக்கினார்கள். இப்படி இளமை, யாக்கை, செல்வம் என்பனவற்றின் நிலையாமையை விளக்கியதன் நோக்கம் அவற்றின் படைப்பு நோக்கத்தைக் குறித்த காலத்தில் குறித்தநேரத்தில் அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே. இந்த நிலையாமையை விளக்குதற்காகச் சான்றோர் ஒருவர் பயன்படுத்தியிருக்கும் உவமம்,

    ‘வைகல் தோறும் இன்பமும் இளமையும்
    எய்கணை நீழலின் கழியும்’

    என்பது தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தற்காலை கூறிய உவமம். பொருளின் நோக்கம் இளமைக்காலத்தில் இன்பம் அனுபவிப்பது.  இவ்வின்பத்திற்கு அடிப்படையான இளமை ஒவ்வொரு நாளும் கழிவதற்குத்தான் எய்யப்பட்ட அம்பின் நிழலை உவமமாக்கியிருக்கிறார் புலவர். கணைக்கு நிழல் உண்டென்றாலும் அது செல்லும் விரைவின் காரணமாகக் கட்புலனாகாது என்பது அறிக. இல்வாழ்க்கைக்கண் பெறற்குரியன அதற்குரிய செவ்வியான இளமை. ஆயினும் அவை கணந்தோறும் காலத்தால் குறைக்கப்படுவது உலகியல். பொருள் வேட்கையால் பிணிப்புண்டு நாளும் அதனை ஈட்டலும் காத்தலுமாகிய செயல்வகையே நினைந்து ஒழுகுவாருடைய வாழ்வின்கண் பொருட்பயனாகிய இன்ப நுகர்ச்சி தக்க இடம் பெறாது என்பது கருத்து. செல்வத்திற்கும் இளமைக்கும் உள்ள வேறுபாடு யாதெனின் செல்வம் இருந்து அழியும். இளமை இருக்கும்போதே அழியும். இதற்கு எய்கணை என வினைத்தொகையால் சுட்டியது அதுபற்றி என்க.

    நிறைவுரை

    ஒரு நாட்டுச் சட்டங்கள் இன்னொரு நாட்டுக்குப் பொருந்தாது. அதுபோலவே ஒரு காலத்துச் சட்டங்கள் இன்னொரு காலத்துக்குப் பொருந்தாது. இந்த வரையறை இலக்கியத் திறனாய்வுக்கும் பொருந்தும். ஒரு நாட்டு இலக்கியங்களுக்கான திறனாய்வுக் கொள்கை வேறுபட்ட மரபு சார்ந்த மற்றொரு மொழி இலக்கியங்களைத் திறனாய்வு செய்யப் பயன்படுத்துவது நெறியன்று. தமிழ்நாட்டு இரண்டாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்தை இங்கிலாந்து நாட்டு இருபதாம் நூற்றாண்டு ஏ.சி.பிராட்லேயின் திறனாய்வுக் கொள்கையைக் கொண்டு அளவிடுவது அல்லது மதிப்பிடுவது நேரியதன்று. பயனும் விளையாது. தமிழ் இலக்கியங்களில் உவமப் பயன்பாட்டின் கோட்பாடுகளும் கொள்கைகளும் தனித்துவம் மிக்கவை. வாழ்வியல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. நுட்பமான இயற்கை உற்றுநோக்கலைக் களமாகக் கொண்டவை. கவிதை வெற்றிக்குத் தலையாய உத்தியாகக் கருதப்படுபவை. மேற்கண்ட பகுதிகள் இதனை ஓரளவு புலப்படுத்தியிருக்கக் கூடும்.

    (தொடரும்…)

    Share