தமிழகம் கண்ட தலைசிறந்த வரலாற்றறிஞர்

0

-மேகலா இராமமூர்த்தி

தமிழக வரலாற்றின்மீது புத்தொளி பாய்ச்சி, இருண்டுகிடந்த பகுதிகளை வெளிச்சப்படுத்திய ஆராய்ச்சியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர், கும்பகோணத்துக்கு  அருகிலுள்ள திருப்புறம்பயத்தில் 1892ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள், வைத்தியலிங்கம் மீனாட்சி இணையருக்கு மகனாய்ப் பிறந்த சதாசிவ பண்டாரத்தார்.

தொடக்கக் கல்வியையும் நடுநிலைக் கல்வியையும் திருப்புறம்பயத்திலும் புளியஞ்சேரியிலும் பயின்றார் பண்டாரத்தார். இயல்பிலேயே தமக்கிருந்த தமிழ் ஈடுபாட்டின் காரணமாய்த் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தாமே முயன்று கற்று நல்ல புலமை பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போது, நற்றிணை உள்ளிட்ட சங்க நூல்களுக்குச் சிறந்த உரைவரைந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி சு. பாலசுப்பிரமணியப் பிள்ளை போன்ற தமிழறிஞர்களின் தொடர்பு சதாசிவ பண்டாரத்தார்க்குக் கிட்டியது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தமிழ் இலக்கியத்தில் மட்டுமன்றித் தமிழ்க் கல்வெட்டுத்துறையிலும் மிகுந்த புலமையும் ஈடுபாடும் கொண்டவர் என்பது குறிக்கத்தக்கது. அவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் பண்டாரத்தார்க்கு இலக்கியத்திலும் கல்வெட்டுத்துறையிலும் நல்ல ஈடுபாடு ஏற்பட்டது.

குடந்தை வாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 1917ஆம் ஆண்டு தலைமைத் தமிழாசிரியராய்ப் பொறுப்பேற்ற சதாசிவ பண்டாரத்தார், அங்கே 25 ஆண்டுகள் பணிபுரிந்து மாணாக்கர்களுக்கு நற்றமிழறிவை ஊட்டி வந்தார். அதன்பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனர் அரசர் அண்ணாமலையாரின் அழைப்பிற்கிணங்க, அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழாராய்ச்சித் துறையில் 1942 முதல் பணியாற்றத் தொடங்கினார். அப்பணி 1960 வரை நீடித்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தே ஆங்கு ஆராய்ச்சித்துறைத் தலைவராயிருந்த சிதம்பரநாதன் செட்டியாரின் விருப்பத்திற்கிணங்கத் தமிழிலக்கிய வரலாற்றை எழுதும் பெரும்பணியை மேற்கொண்டு கி.பி. 250 முதல் கி.பி. 600 வரையிலான காலக்கட்டத்தில் எழுந்த தமிழ்நூல்கள் குறித்து ஆராய்ந்து எழுதியுள்ளார் பண்டாரத்தார்.

தமிழிலக்கிய வரலாற்றைத் தொடர்ந்து விரிவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாகவும், தமிழிலக்கிய வரலாறு கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பாடமாக அப்போது இருந்தமையாலும் கி.பி. 13, 14, 15ஆம் நூற்றாண்டுகளில் படைக்கப்பட்ட தமிழிலக்கியங்களின் வரலாற்றையும் தாம் ஆய்ந்து எழுதியதாய்த் தம் நூற்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார் பண்டாரத்தார்.

மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான ’செந்தமிழ்’, கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடான ’தமிழ்ப்பொழில்’ ஆகிய இரண்டு திங்களிதழ்களிலும் சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்தன. ’பாண்டியர் வரலாறு’ என்ற நூல் முதலில் செந்தமிழிலும், தமிழ்ப்பொழிலிலும் தொடர்கட்டுரைகளாக வெளிவந்து பின் நூல்வடிவம் பெற்றதாகும்.

சதாசிவ பண்டாரத்தாரின் இலக்கிய ஆராய்ச்சி நூலின் வாயிலாய் நாம் அறியும் அரிய செய்திகள் பல. அவற்றில் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிட விரும்புகிறேன்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகத் திருக்குறள் இடம்பெற்றிருந்தபோதிலும் இந்நூல் கடைச்சங்க காலத்தின் இறுதிக்குச் சில நூற்றாண்டுகள் முன்பு எழுதப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில், திருக்குறள் கருத்துக்கள் பல சங்க நூல்களில் காணக் கிடைக்கின்றன.

”பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”
என்ற குறள் கருத்து,

முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்” என்று நற்றிணையில் இடம்பெற்றிருப்பதையும்,

”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
என்ற வள்ளுவர் வாய்மொழி,

ஆலத்தூர்கிழாரின் புறநானூற்றுப் பாடலில்,

”செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்றே
ஆயிழை கணவ”
என்று வந்திருப்பதையும் சுட்டிக்காட்டித் திருக்குறள் கடைச்சங்க கால நூலே என்று உறுதிபடத் தெரிவிக்கின்றார் பண்டாரத்தார்.

இவ்வாறே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இணைக்கப்பட்டுள்ள மற்றொரு நூலான நாலடியார், 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது சதாசிவ பண்டாரத்தாரின் கருத்தாகும்.  முத்தரையர் என்ற பட்டத்தோடு ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்களின் சிறப்பை நாலடியாரின் 200 மற்றும் 296ஆம் பாடல்கள் குறிப்பிடுகின்றன. முத்தரையர் பற்றிய குறிப்புகளை நாம் 8ஆம் நூற்றாண்டில்தான் அறியமுடிகின்றது; எனவே நாலடியார் 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகவே இருக்கமுடியும் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளோடு நிறுவுகின்றார் அவர்.

திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் வாழ்ந்தவர் என்பதையும் சான்றுகளுடன் மெய்ப்பிக்கின்றார் சதாசிவ பண்டாரத்தார். தில்லையம்பலத்தையும் பொன்னம்பலத்தையும் புகழ்ந்து பாடியுள்ளார் திருமூலர். தில்லையம்பலத்தில் ஆடவல்லானுக்குப் பொன்கூரை வேய்ந்த பல்லவ வேந்தன் சிம்மவர்மன், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினன். ஆதலால், இவனுடைய காலமே திருமூலர் காலமாகும். சைவ சித்தாந்தம் என்ற வடசொல்லை முதலில் தமிழில் பயன்படுத்தியவர் திருமூலரே ஆவார் என்று குறிப்பிடும் பண்டாரத்தார், பின்னர் இச்சொல்லைச் சமயக் குரவர்கள் தம் பாடல்களில் கையாண்டனர் என்கிறார்.

கடைச்சங்கத்தின் அழிவு எவ்வாறு நேர்ந்தது என்பதை ஆராய்ந்து சதாசிவ பண்டாரத்தார் முன்வைக்கும் கருத்துக்களாவன:

மதுரை மாநகரில் நடைபெற்றுவந்த கடைச்சங்கம் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அழிந்தமைக்குக் காரணம், பாண்டிய நாட்டில் ஏற்பட்ட பஞ்சம்தான் என்று இறையனார் அகப்பொருளுரையும், மணிமேகலைக் காப்பியத்தின் வரிகளும் தெரிவிக்கின்றன. அப்பஞ்சத்தினாலேயே பாண்டி நாட்டுப் புலவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று உயிர்வாழ நேர்ந்தது என்கின்றது இறையனார் அகப்பொருளுரை. ஆனால் பஞ்சம் ஏற்பட்டதால்தான் கடைச்சங்கம் வீழ்ச்சியுற்றது எனும் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இல்லை. கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டிய நாடு வலிகுன்றிக் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டது. அதேவேளை தொண்டைநாடு பல்லவர் ஆளுகைக்கு உட்பட்டது.

இவ்வாறு தமிழகம் தமிழரல்லாத அயலார் ஆட்சிக்கு உட்பட்டதால் தமிழும் தமிழ் மக்களும் பாதிப்புக்கும் வீழ்ச்சிக்கும் பல வகைகளில் ஆளாயினர். களப்பிரர் எழுச்சி, பாண்டிய நாட்டில் பல மாறுதல்களை உண்டுபண்ணிவிட்டது.  அவர்களுடைய பாலி மொழியும் பிராகிருத மொழியும் அரியேணையேறி ஆட்சிசெய்யத் தொடங்கின. இதன்விளைவாய்த் தமிழ்மொழி, தமிழ்க்கலைகள், தமிழர் நாகரிகம் ஆகியவை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தமையை வேள்விக்குடிச் செப்பேடுகள் வாயிலாய் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட களப்பிரர் எழுச்சியாலேயே கடைச்சங்கம் அழிந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பது சதாசிவ பண்டாரத்தார் ஆய்ந்துகண்ட முடிபாகும்.  [களப்பிரர் காலத்தை இருண்ட காலமென்று இயம்புவது பொருந்தாது; அது பொற்காலமே என்பதை நிறுவ நாம் அக்காலத்திய அறநூல்களைச் சான்றுகாட்டினாலும், புதிய பாவினங்கள் தோன்றின என்று தாழிசையையும் விருத்தத்தையும் பட்டியலிட்டாலும், களப்பிரர் கால நூல்கள், கருத்துச் செறிவிலோ மொழிவளத்திலோ, சங்க நூல்களுக்கு இணையாகாத எளிய நூல்களாகவே இருப்பது கண்கூடு. இஃது அக்காலத்தில் நிலவிய தமிழிலக்கிய வறட்சியைத் துலக்கமாய்ப் புலப்படுத்தவே செய்கின்றது.]

பண்டாரத்தாரின் குறிப்பிடத்தக்க நூலான பாண்டியர் வரலாறு கல்வெட்டுகள், செப்பேடுகள், தமிழிலக்கிய நூல்கள், பிற ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். கடைச்சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, கி.பி. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டிய நாட்டில் ஆட்சிபுரிந்த மன்னர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள இந்நூல் உதவுகின்றது. பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த மன்னர்களின் பெயர்கள், ஆட்சிக் காலம், ஆட்சி எல்லை, அரசியல் நிலை, மெய்க்கீர்த்தி என அனைத்தும் தெளிவாய்ப் வகுத்தும் பகுத்தும் இந்நூலில் உரைக்கப்பெற்றுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சோழர்களுக்கென்று தனித்த பீடும் பெருமையும் உண்டு. காவிரி புரக்கும் சோழநாட்டின் வற்றாப் பெருவளத்தைச் சங்கப்பாடல்கள் பலவும் வாயூறிப் பேசுகின்றன.

பல்லவர்களைத் தொடர்ந்து தமிழகத்தில் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆட்சியமைத்தவர்கள் பிற்காலச் சோழர்கள். இவர்களின் வரலாற்றை நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், மு. அருணாசலம் ஆகியோர் ஆராய்ந்து எழுதியிருக்கின்றனர்.

பிற்காலச் சோழர்களின் ஆட்சியை நிறுவிய விசயாலயச் சோழன் காலம் தொடங்கிச் சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த மூன்றாம் இராசேந்திர சோழனின் காலம் வரையிலான சோழர்களின் ஆட்சிமுறை, அரசர்கள் மேற்கொண்ட அரும்பணிகள், அவர்களிடம் அரசியல் அதிகாரிகளாய்ப் பணியாற்றியோர், அவ் அரசர்கள் ஈடுபட்ட போர்கள், சூட்டிக்கொண்ட விருதுப்பெயர்கள் என அனைத்தையும் தம்முடைய ’பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்ற நூலில் தக்க சான்றுகளோடு விளக்கியுள்ளார் சதாசிவ பண்டாரத்தார். இதற்காக, சோழர் காலத்தைச் சேர்ந்த சுமார் 8,000 கல்வெட்டுகளை ஊர் ஊராய்த் தேடிச்சென்று படித்தார்; அந்தத் தரவுகளின் அடிப்படையில் சோழர் சரித்திரத்தைத் தமிழில் எழுதி முடித்தார் என்று அறிகின்றோம். மூன்று தொகுதிகளாக எழுதப்பட்ட இந்நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

இந்நூலில் சோழர் ஆட்சிமுறை, சோழர்காலச் சமுதாயம் பற்றிப் பண்டாரத்தார் குறிப்பிட்டிருக்கும் சுவையான செய்திகளில் சில நம் கவனத்திற்கு…

சோழமன்னர்கள் தங்கள் ஆட்சியிலிருந்த பகுதிகளை மண்டலங்களாகவும் வளநாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரித்து ஆட்சிபுரிந்து வந்தனர். அரசியல் நிர்வாகத்திற்குத் துணைபுரிந்தவர்கள் ’உடன்கூட்டத்ததிகாரிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சோழ மன்னர்களின் ஆட்சி சிறப்பாக அமைந்ததற்குக் காரணம், ஊராட்சி மன்றங்களின் தன்னலமற்ற தொண்டேயாகும். ஊராட்சிகளை நடாத்துதற்கு நான்கு விதமான சபைகள் அன்று இருந்தன. அவை கிராம சபை, தேவதானத்துச் சபை, ஊர்ச் சபை, நகர சபை ஆகியன.

தங்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளின் விளைநிலங்களைக் கோல்கொண்டு அளந்து வரிவிதித்தனர் சோழ மன்னர்கள். நிலங்களை இவ்வாறு அளவிட்டு நிலவரி விதித்ததுபோல் மக்கட்தொகையினை அளவிட்டு அறிவதில் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை எனத் தெரிகின்றது.

வேந்தர்கள், குறுநில மன்னர்கள், செல்வந்தர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருந்தபோதினும், பொதுமக்கள் ஒருவனுக்கு ஒருத்தியாகவே வாழ்ந்துவந்தனர். உடன்கட்டை ஏறும் வழக்கமும்கூட உயர்குடியினரிடம் குறிப்பாக அரசர்குடிப் பெண்டிரிடம் இருந்ததே தவிர அது சமூக வழக்கமாய்ப் பின்பற்றப்படவில்லை என்று தெரிவிக்கின்றார் பண்டாரத்தார்.

பண்டாரத்தாரின் மற்றொரு வரலாற்று நூல், ’முதற்குலோத்துங்க சோழன்’ என்பதாகும். இந்நூலைப் பாராட்டிய தமிழ்த்தாத்தா உ.வே.சா., பின்வருமாறு குறிப்பிடுகின்றார்…

”கும்பகோணம் வாணாதுறை ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி சதாசிவ பண்டாரத்தார் இயற்றிய முதற்குலோத்துங்க சோழன் சரித்திரத்தை முற்றும் படித்துப் பார்த்தேன். இயற்றியவர் நெடுங்காலமாகச் சிலாசாசனங்கள், சங்கச் செய்யுட்கள் முதலியவற்றை ஆராய்ந்தவரென்பதை இது புலப்படுத்துகின்றது. தமிழ்மொழி இக்காலத்தில் பல துறைகளிலும் வளர்ச்சியுற்று வருகின்றதென்பதற்கு இந்நூலாசிரியரது கல்வி முறையையே ஓர் இலக்காகக் கூறலாம். தமிழ் அரசர்களுடைய சரித்திரங்களை அறிந்துகொள்வது இன்றியமையாதது ஆகையால், எளிய நடையில் நன்றாக முறைப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் பொதுவாக யாவருக்கும், சிறப்பாகப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும் மிகப் பயன்படுமென்று எண்ணுகின்றேன்” என்கிறார்.

அறிஞர் சதாசிவ பண்டாரத்தாரின் அயராத உழைப்பாலேயே நம் தமிழ்நாட்டு வரலாறு நன்கு விளக்கமுற்றது. இலக்கியங்களில் விளக்கம்பெறாத இடங்களையும், இலக்கியங்களின் காலத்தையும் அவர் கல்வெட்டுகளின் துணைகொண்டு விளக்கிக் காட்டினார். தமிழ்மொழியின்பால் அவருக்குக்கிருந்த ஈடுபாடு அவருடைய ஆராய்ச்சிகளில் தென்பட்டதென்றாலும் அவருடைய ஆராய்ச்சி நேர்மையை அது சற்றும் குலைத்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிப் பணிகளைச் சிறப்பிக்கும் வகையில், பேராசிரியர் கார்மேகக் கோனார், பண்டாரத்தார்க்கு ’ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்னும் பட்டத்தை மார்ச் 29, 1956இல் வழங்கினார்.

தம் வாழ்க்கையை முற்றாக ஆராய்ச்சிக்கும் எழுத்துக்குமே அளித்துவிட்ட சதாசிவ பண்டாரத்தார், 1960ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், தம்முடைய 67ஆம் அகவையில் சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை நகரில் காலமானார்.  

கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு அமைந்திருக்க வேண்டிய வரலாற்றறிவு, ஆராய்ச்சித்திறன் ஆகியவற்றோடு தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் பயிற்சியும், இடையறா முயற்சியும் கொண்டவராய்த் திகழ்ந்து,  காய்தல் உவத்தலின்றி உண்மைகளை மட்டுமே வரலாறாக ஆவணப்படுத்தியிருக்கும் சதாசிவ பண்டாரத்தார் போன்ற பேரறிஞர்களைத் தமிழக இளைஞர்களுக்கு இன்று யாரென்றே தெரியவில்லை என்பதுதான் வருந்தத்தக்க உண்மைநிலை!

இந்த அவலம் இனியும் நீடித்தல் கூடாது. நம் தமிழக வரலாற்றை – தமிழ்க்குடியின் பெருமையை அரிதின் முயன்று வெளிப்படுத்திய சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிப் பணிகள் வெளிச்சம் பெறவேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் பாடத்திட்டத்தில் அவருடைய வரலாற்று நூல்கள் இடம்பெற வேண்டும். பண்டாரத்தாரின் சொந்த ஊரான திருப்புறம்பயத்தில் அவருக்கோர் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். இச்செயல்கள் பண்டாரத்தாரின் மெய்வருத்தம் பாராப் பேருழைப்புக்கும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நாம் காட்டும் சிறிய கைம்மாறாய் அமையும்.

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, செனை – 600 113

2. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=880

3. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2017/dec/31/வரலாற்றுப்-பேரறிஞர்-திவை-சதாசிவப்-பண்டாரத்தார்-2836124.html

4. https://www.hindutamil.in/news/blogs/231349-10-2.html

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *