அழைப்பிதழ் – நல்லாசிரியர் சி. நல்லதம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு

0

சென்னை பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் மாணவரும் ஆய்வாளரும் மற்றும் விருந்துநிலை விரிவுரையாளருமாய்ப் பணியாற்றியவர் முனைவர் சி. நல்லதம்பி. இவர் பின்னர் ஆத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றினார். சமீபத்தில் மறைந்த அவரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது மாணவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இணைந்து நல்லாசிரியர் சி. நல்லதம்பி அறக்கட்டளையை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நிறுவியுள்ளனர். இதன் முதல் உரையை பேரா இ. முத்தையா அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

பேரா. இ. முத்தையா பற்றி

பேராசிரியர். இ. முத்தையா மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் மேனாள் பேராசிரியரியராக பணியாற்றினார். தமிழ் இலக்கணம், மொழியியல், நாட்டுப்புறவியல், மானுடவியல், வெகுஜனப் பண்பாடு, நிகழ்த்துக்கலைகள், நவீன திரைப்பட அவதானிப்புகள் முதலான பல்வேறு விதமான கோட்பாட்டுத்துவ பின்புலத்தி்ல் இருந்து பணி செய்து வருபவர்.

இவர் எழுதிய சில நூல்கள்

  1. தமிழர் பண்பாட்டு வெளியில் நிகழ்த்துகலைகளும் உலக நோக்கும்
  2. அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள்
  3. பழந்தமிழ் பண்பாட்டு வெளிகளின் அரசியல்.
  4. இலக்கணமும் மொழியியலும்…
  5. இசையின் அதிகார முகங்கள்.

உரையை பற்றி

நிகழ்த்துதல் என்பது மனிதரின் மொழிசார் நடத்தை முறை. நிகழ்த்துநர், பங்கேற்பாளர், வாய்மொழி அல்லது பேச்சு மொழி, உடல்மொழி, மெய்ப்பாடு, இடம், காலம், பண்பாட்டுச் சூழல்  ஆகியவற்றின் சேர்க்கையான நிகழ்த்துதற் சூழல் என அனைத்தின் கலவையே நிகழ்த்துதல். இத்தகைய நிகழ்த்துதலின் மெய்யியலைத் தொல்காப்பியர் கட்டமைத்துள்ள முறையை விவாதிப்பதே உரையின் நோக்கம்.

மொழியியல் ஆய்வுப் போக்குகள் சமூகப் பண்பாட்டுச் சூழல், அரசியல் நிலைமைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப மாறி வந்திருக்கின்றன. புளூம்பீல்டு (Leonard Bloomfield) என்பாரின்  அமைப்பியல் மொழியியலிலிருந்து தொடங்கி மொழியின் மெய்யியல் ஆய்வு வரை பல்வேறு பரிமாணங்களில் மொழியியல் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. மெய்யியல் திருப்பம் (Philosophic Turn) என்பது மானிடவியல் ஆய்வாளர் மாலினோஸ்கியின் சூழல்சார் பொருண்மையியல் (Pragmatics) ஆய்வு முறையால் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மொழியியல் ஆய்வு மெய்யியல் சாலையில் பயணத்தைத் தொடங்கியது. ஜெ.எல்.ஆஸ்டினின் “பேச்சுச்  செயல் கோட்பாடு”( Speech Act Theory / Performative Analysis), ஹைச்.பி.கிரைஸின் “உரையாடல் உள்ளுறைக் கோட்பாடு” (Conversational Implicature Theory), பிரிஜ் (Frege), ரஸ்ஸல் (Russel), கார்னாப் (Carnap) போன்றோரின் “அளவையியல் மொழியியல்”  (Logical Linguistics)  என மொழியியல் ஆய்வு மெய்யியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க மெய்யியல் ஆய்வாளர்கள் பலர் மொழியியலை நோக்கி வந்தனர். இவர்களுள் விட்ஜென்ஸ்டின், ஹேபர்மாஸ் (Communicative Action Theory) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். விட்ஜென்ஸ்டின் ஆய்வினை மெய்யியல் ஆய்வாளர்கள் மொழியியல் திருப்பம் (Linguistic Turn) எனக் குறிப்பிடுவர்.

மேற்குறிப்பிட்ட மொழியியல் மெய்யியலார், மெய்யியல் மொழியியலார் ஆகியோரைத் தொல்காப்பியரோடு ஒப்பிடும்போது அனைவரின் கருத்துக்களிலிருந்து தொல்காப்பியர் வேறுபடுவதை அறியலாம். அவர் நிகழ்த்துதல் மெய்யியலைக் கட்டமைத்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். அத்தகைய மெய்யியலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதே உரையின் நோக்கம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *