Blog

  • ஒரு குடைக்கீழ்

    இசைக்கவி ரமணன்

    trees cityscapes rain houses couple leonid afremov artwork parks umbrellas rivers_www.wallpaperhi.com_55

    மழையின் இழைகள் ஒன்றுக்கொன்று
    பேசிக்கொண்ட ரகசியங்களை
    மவுனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மரங்கள்
    இலைகளின் நுனிவரை எழுதிவைத்துக் கொண்டன

    நனைந்த இரவின் கருத்த தெருவில்
    அளைந்த கால்களுடன்
    பிணைந்த விரல்களுடன்
    இணைந்து ஒசிந்த தேகங்களுடன்
    இடையறாத தாகங்களுடன்
    நீயும் நானும்

    ஒரு குடைக்கீழ் கலந்த
    இரண்டு இதயங்களின்
    கொஞ்சலில் கொஞ்சம்
    உறக்கம் கலைந்து துணுக்குற்றன
    ஒற்றைக் காலில் கண்களை இறுக
    மூடி நின்ற மைனாக்கள்

    இங்குமங்கும் பார்த்த மரங்கள்
    இனிமேல் தாங்க முடியாதென்று
    இவர்கள்தான் சரியென்று
    இலைகளிலிருந்து ரகசியங்களை
    மல்லிகை மொட்டுக்கள் போல்
    குடையின் மீது கவிழ்த்தன
    ஒன்றிரண்டு மஞ்சள் மலர்களும்
    ஒட்டிக்கொண்டுதான் வந்தன

    குடைக்குக் கீழே நமது ரகசியங்கள்
    குடைக்கு மேலே மழையின்
    மரம்நனைந்த இலைசுமந்த ரகசியங்கள்

    ரகசியங்களும் ரகசியங்களும்
    சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும்?

    நீயும் நானும் சந்தித்தது போல்தான்
    இருக்குமென்று பேசிக்கொண்டார்கள்
    பாதி நிலா பளபளக்கும்
    பாதையோரக் குளக்கரை அருகே
    பாதிக் கலவியில் நம்மைப் பார்த்துப்
    பதறி வியந்த கந்தர்வர்கள்

    இரண்டில் ஒன்றாய்
    ஒன்றே இரண்டிலுமாய்
    மாறாமல் மாறி மாறி
    மாயமாய்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    மீண்டும் உரலிழுத்து, மாமருதம் சாய்த்தரவத்,
    தாண்டவம் ஆடித், தயிருண்டு, -வேண்டிய,
    ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
    யாதவா கோடிட்(டு) எழுது ….கிரேசி மோகன்….

    Share
  • மிதப்பதும் கனப்பதும்

    இசைக்கவி ரமணன்

    desktop-backgrounds-1920x1080-butterfly
    எல்லோரும் மிதக்கிறோம்
    எல்லைகள் விண்டுபோய் தொல்லைகள் இல்லாத
    ஏகாந்த வானத்தில் மேகத்தின் பிஞ்சுபோல்
    எல்லோரும் மிதக்கிறோம்

    இதமான வார்த்தைகள் கேட்கும்போதும்
    இதயத்தில் வீணைகள் மீட்டும்போதும், ஒரு
    மிதமான மதுவூற்றி ஏற்றும்போதும், சில
    மின்னல்கள் மழலைகள் பேசும்போதும், ஒரு
    கதைபேச வந்துகதை கேட்கும்போதும், மனம்
    காதலெனும் கோப்பையில் ததும்பும்போதும், பல
    விதமாக அவள்விரல்கள் மருவும்போதும், சிறு
    விதையொன்று நடுநெஞ்சில் விழிக்கும்போதும்

    தாள்விட்ட வார்த்தைகள் சொல்லாமலே, வந்து
    தழுவிடும் தருணத்தின் தரிசனத்தில், பல
    நாள்பட்ட கனவொன்று மறந்தபின்னே, ஒரு
    நனவுக்குள் இமைக்கின்ற கரிசனத்தில்
    தோள்தொட்ட தாரென்று திரும்பும்போது, ஒரு
    சொர்க்கமே தோழியாய்ச் சிரிக்கும்போது
    கோள்தொட்டு வந்த என் கொஞ்சல்களில், ஒன்றைக்
    கொத்துமல ராயவள் முகரும்போது

    எல்லோரும் மிதக்கிறோம்
    எல்லைகள் விண்டுபோய் தொல்லைகள் இல்லாத
    ஏகாந்த வானத்தில் மேகத்தின் பிஞ்சுபோல்
    எல்லோரும் மிதக்கிறோம்

    (2)

    எல்லோரும் கனக்கிறோம்
    யாருமே நம்மை இழக்காத போதும்
    யாரையோ மெளனமாய் நாம் இழக்கும் போதும்
    எல்லோரும் கனக்கிறோம்
    சொன்னசொல் நில்லாமல் குடையும்போதும்
    சொல்லாத சொல்லொன்று சுடும்போதிலும்
    இன்னவிதம் தொடருமென நினைத்ததெல்லாம், ஓர்
    இழைமாறி இருள்நெஞ்சில் படரும்போதும்
    நின்றதரை காலடியில் அதிரும்போதும், ஓடும்
    நிழல்நின்று பரிகாசம் செய்யும்போதும்
    சென்றகணம் மீளுமா? அதைமறந்து, மனம்
    தெருவோரப் பிச்சைபோல் கெஞ்சும் போதும்

    அலைபோலத் துன்பங்கள் வீடுவந்து, உயிரை
    அள்ளாமல் நகைசெய்து விலகும்போதும்
    சிலைகளின் சிதிலம்போல் கிடந்ததெல்லாம், ஒரு
    சீற்றத்தில் வாளேந்திப் பாயும்போதும்
    மலைதேடிப் பாய்ந்துவரும் மழைகளெல்லாம், ஏனோ
    மத்தியில் வெய்யிலில் காயும்போதும், ஒரு
    நிலையறிய மாட்டாத நிலையொன்றுதான், இங்கு
    நிஜமென்று தலையின்றி ஆடும்போதும்

    எல்லோரும் கனக்கிறோம்
    யாருமே நம்மை இழக்காத போதும்
    யாரையோ மெளனமாய் நாம் இழக்கும் போதும்
    எல்லோரும் கனக்கிறோம்

    (3)

    நாமே நமக்குச் சுமையானால்
    நரகம் அதுபோல் வேறில்லை
    நாமே நமக்குச் சுவையானால், அந்
    நலமே சொர்க்கம் வேறில்லை

    சிலநேரம் தனிமையே இனிமைதரும், அதுவே
    சிலநேரம் தவிடுபொடியாய் ஆக்கிடும்
    பலவேறு பறவைகள் வாழ்ந்தகூடு, மரம்
    தீப்பற்றும் போதுசுடு காடாகிடும்
    நிலையான நிலையொன்று வாழ்விலில்லை, இந்த
    நிஜம்கண்ட நெஞ்சுயர்ந்து தாழ்வதில்லை
    அலைகளை வேடிக்கை பார்த்தபடியே, படகில்
    அசையாமல் செல்வதே நமதுவேலை

    கண்முன்பு காண்பதோ கால்பங்குதான், இன்னும்
    கருவுள் மிதப்பதோ பெரும்பங்குதான்
    அண்டத்தைப் பிண்டத்தில் கொண்டாடுவோம், இந்த
    அல்லலும் இன்பமும் நம் எல்லைகளா?
    அண்டங்கள் யாவையும் சுமையின்றியே, நாம்
    அகமென்னும் துளையினில் ஏந்தும்போது
    திண்ணையெது பெருவானம் காலை நீட்ட?
    எங்கமிழ? எங்குபோய் நாம் மிதக்க?

    நாம்யார் எனநாம் அறிந்திடவே
    நம்முன் வாழ்க்கை விரிகிறது
    நாம்யார் என்நாம் அறிகையிலே
    வாழ்க்கை நம்மில் மிதக்கிறது!

    22.10.2014 / புதன் / 19.27

    Share
  • அன்பான தீபாவளி வாழ்த்துகள்

    சக்தி சக்திதாசன்.

    diwali-114v

     

     

    ஒளிரும் தீப ஒளியில்

    கருகும் தீய எண்ணங்கள்

    மிளிரும் இந்த வேளையில்

    பொழியும் ஆனந்த உணர்வுகள்

    விடியும் பொழுதோடு ஒரு

    வெளிச்சப் பொழுதென

    மலரும் தீபாவளி அதனோடு

    புலரட்டும் பொன்னான காலம்

    தேசத்தின் காவலில் நின்று

    நேசத்தின் வாயிலைத் திறந்து

    பாசத்தின் முகத்திரை கொண்டு

    வீசட்டும் வாழ்த்துகள் இன்று

    இருளைக் கலைத்திடும் நேரம்

    ஒளியை ஈந்திடும் காலம்

    இல்லங்கள் தோறும் ஏற்றிடும்

    உள்ளங்கள் மலர்ந்திடும் தீபங்கள்

    கொடுமைகள் அழிந்திடவும் எங்கும்

    அஹிம்சைகள் தழைத்திடவும்

    புரிந்திடும் அர்த்தங்கள் கொண்டு

    எரியட்டும் தீபங்கள் இன்று

    இருப்பவர் உள்ளங்கள் எல்லாம்

    இரக்கத்தை மனதினில் ஏற்றி

    இல்லாதோர் இல்லங்கள் தோறும்

    இன்பத்தை இரந்திட வேண்டும்

    வளமான வாழ்க்கையைக் கண்டோர்

    வழங்கட்டும் கருணையை ஒளியுடன்

    வருமிந்த தீபாவளித் திருநாள்

    விளம்பட்டும் பொதுநலக் கருத்தை

    அன்பினிய இதயங்கள் அனைத்திற்கும்

    அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்

    அணையாது என்னுள்ளத்து தீபம்

    அதுதானே மாறாத நேசம்

     

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்  குடும்பம்

     

     

    Share
  • தீபாவளி மருந்து

    விசாலம்.

     

    தீபாவளி அன்று பட்சணங்களுக்குப் பிறகு கொடுக்கப்படும் தீபாவளி லேகியம். ஆஹா, அருமை அதன் மணமும் அதன் பலனும் சொல்ல அளவில்லை. அந்த மருந்துக்காக ஒரு கவிதை …
    லேகியம்
    மருந்து அது அருமருந்து,
    தீபாவளியில் ஒரு தனி மருந்து ,
    ஆயுர்வேதக் கடைச் சரக்காம்,
    அதற்கென்று ஒரு தனி சிறப்பாம்
    சுக்கு மிளகு திப்பிலியாம்
    ஆயுர்வேத மூவேந்தர்களாம் ,
    ஓமமும் கூடச் சேர்ந்துவிடும்
    அம்மியில் எல்லாம் அரைந்துவிடும்
    உருளியில் கிளற பட்டுவிடும்
    வெல்லமும் சேர்ந்து கலந்துவிடும்
    வெண்ணெய் சேர்ந்து பளபளக்கும்
    கிளறக் கிளற மணம் பரப்பும்
    ஆஹா அருமை லேகியம் தயார்
    நெய்யும் மேலே வருவதைப்பார்
    தீபாவளி லேகியம் நம் கைவசம்
    ஏன் கவலை, பட்சணம் உன்வசம்
    தேன் கலர் லேகியம் அமிருதம் தான்
    லேகியத்துடன் தீபாவளி குதூகலம்தான்

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://sashiga.blogspot.com/2014/10/deepvali-legiyam-deepawali-recipes.html

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    KESHAV TOP-ANGLE திருமால் சூப்பர்….
    ———————————————————————–

    crazy

    ’’நூல்எண்எண் பாரதி நாயகன் நாபியில்,
    தாள்முன்னம் கோலத் திருமகள், -மால்வண்ணம்,
    மேல்வண்ண மாய்த்தந்தோய், மெய்மறந்தேன், நந்தகி,
    வாள்மின்னும் தீபா வளிக்கு’’….கிரேசி மோகன்….

    TOP-ANGLE-சொன்னது சு.இரவி….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    மைகொண்ட கண்ணாள், மகாலஷ்மி கொஞ்சிடும்,
    வைகுண்ட வாசியவன் வாசுதேவன், -பொய்கொண்ட,
    பூமியைப் பாராமல், பொய்யுறக்கம் போடுகிறான்,
    சாமிக்கு சுப்ரபாதம் சொல்”….கிரேசி மோகன்….

    Share
  • நாடோடியும், நான்-ரெசிடண்ட் இந்தியனும்

    மாதவன் இளங்கோ

    என்னைப் பற்றிச் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. இந்தியாவின் ஏதோவொரு கிராமத்தில் பிறந்து,  நகரத்திற்கு இடம்பெயர்ந்து, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, உலகின் ஒரு கால்பகுதியேனும் சுற்றிவிட்டு தற்போது ஐரோப்பாவின் ஹாலந்து நாட்டின் மாஸ்ட்ரிக்ட் எனும் நகரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஒரு என்.ஆர்.ஐ ஆசாமி.

    விடிந்தால் தீபாவளி. ஆனால், மறுநாள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால், முந்தைய நாள் மாலையே நகரிலும், நகருக்கு வெளியிலும் இருக்கும் இந்திய  நண்பர்கள் சிலரின் வீடுகளுக்கு மனைவி, மகன்கள் சகிதம் சென்று, வாழ்த்துக்களையும் இனிப்பு பதார்த்தங்களையும் வழங்கி, ஒவ்வொரு வீட்டிலும் சிறிது நேரம் அளவளாவிவிட்டு, மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த போது மணி பத்து.

    பால்கனிக்கு சென்று நின்றேன். அங்கே பல வண்ண வானவேடிக்கைகளில்லை. கண்கவர் மத்தாப்பூக்கள் உண்டாக்கும் வளையங்களைக் காண முடியவில்லை. வெடிச்சத்தம் சிறிதும் இல்லை. அமைதி, எங்கும் அமைதி. காதைச் செவிடாக்கும் அமைதி!  தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடக் கூட்டம் இல்லை. அந்த விறுவிறுப்பும், பரபரப்பும் இல்லை. ஆர்பாட்டங்கள் இல்லவே இல்லை! அட, இது இந்தியாவே இல்லை!

    ஒருவித ஏக்கத்தோடும், வெறுமையோடும் எனது அறைக்குச் சென்று, ஹீட்டரை பொருத்திவிட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினேன். பக்கத்து அறையில் என் மனைவி யூட்யூபில் சரவெடி காணொளிகளைக் காட்டி, தீபாவளி பற்றி என் பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. அவ்வளவுதான், என் மனம் கிட்டத்தட்ட ஒரு இருபது தீபாவளிகள் பின்னோக்கி, மின்னல் வேகத்தில் பாய்ந்து பயணித்தது.

    அப்போதெல்லாம் நாங்கள் தீபாவளி கொண்டாடியதில்லை. இப்போதும்  அப்படித்தான் – என் ஊருக்குச் சென்றால் தீபாவளி கொண்டாடுவதில்லை.

    என் தந்தை ஒரு தீபாவளியன்றுதான் அவருடைய தாயாரையும், சகோதரர்களையும், அந்த சமயத்தில் பரவிய ஒரு வகையான விஷக்காய்ச்சலுக்குப்  பறிகொடுத்துவிட்டார் என்றும், அன்றிலிருந்து அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை என்றும் என் தாயார் சொல்லிக் கேட்டிருக்கிறோம் நானும் என் தம்பியும். ஆகையால் அந்த நாளில், பெரும்பாலும் அவர் மௌனமாகவோ அல்லது தியான நிலையிலோ தான் இருப்பார்.

    இது எங்களுக்குத் தெரிந்த நாளிலிருந்து, அவரது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் நாங்களும் தீபாவளி கொண்டாட விரும்பியதில்லை – கொண்டாடியதில்லை. “பட்டாசு வேண்டும்! புத்தாடை வேண்டும்!” என்று நானோ, என் தம்பியோ கேட்டதே இல்லை. இந்தியாவில் பண்டிகைகளுக்கா பஞ்சம்? தீபாவளிக்குப் பதிலாக வேறு எதையாவது கொண்டாடிவிட வேண்டியதுதான்.

    இருந்தாலும், நாங்கள் சிறுவர்களாதலால், மற்ற சிறுவர்கள் சரவெடிகள் வெடிப்பதையும், மத்தாப்பூக்கள் கொளுத்துவதையும் பார்க்கும்போது மனம் “நமக்கும் கிடைக்காதா?” என்று ஏங்குவதை தவிர்க்க முடிந்ததில்லை. “பரவாயில்லை, மத்தாப்பூ மட்டுமாவது வாங்கலாமே? என்ன ஆகிவிடப்போகிறது?” என்று எனக்கு மனது மாறினாலும், “வேண்டாம்!,” என்று மறுத்துவிடுவான் என் தம்பி. அந்தச் சிறுவயதிலேயே அவன் கொண்டிருந்த  நேர்மையும், பெருந்தன்மையும், புரிதலும் ஆச்சர்யமானவை தான். ‘குழந்தைகள் பாவம் விளையாடிவிட்டுப் போகட்டும்’ என்கிற பெருந்தன்மை பெரிய மனிதர்களுக்கே இல்லாதபோது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நினைக்கும் மழலையின் பெருந்தன்மை போற்றுதலுக்குரியதல்லவா?

    தீபாவளி நாளன்று நாங்கள் நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது வழக்கம். எங்கள் எதிர் வீட்டு நண்பன் வாசு வண்ண வண்ண வெடிகளாய் வெடித்து மகிழ்வதை நாங்கள் இருவரும் மாடிப்படியில் அமர்ந்து பார்த்து ரசிப்போம்.

    அதற்கு பின்னால் நாங்கள் செய்ததை இன்று நினைத்தால் இன்றுகூட எனக்கு சிரிப்பு வருகிறது.

    என் பக்கத்து வீட்டு நண்பன் சரவணன், “நீங்க வெடிக்கலையா….? ஏ…ன்? எதற்கு…?” என்று ராகத்தோடு கேட்டுப் பாடாய்ப் படுத்தி எடுத்துவிடுவான். அதனால், அவன் எழுவதற்கு முன்னரே, எதிர்வீட்டு வாசலில் இருக்கும் வெடித்த காகிதக் குவியல்களையெல்லாம் அள்ளி எடுத்து வந்து எங்கள் வீட்டு வாசலில் போட்டு விடுவோம்.

    பட்டாசு வெடிப்பதை  விட, இந்த விளையாட்டு தான் எங்களுக்கு சுவாரஸ்யமாகவும், பேரானந்தம் தருவதாகவும் இருந்தது.

    விடிந்ததும் நம் பக்கத்து வீட்டு நண்பர் சரவெடி கிளப்புவார். வழக்கம் போல வந்து கேள்விக்கணைகளை தொடுப்பார். “அதெல்லாம் நாலு மணிக்கே ஆயிடுத்து!” என்று ஒரு கதையை அள்ளி விட்டுவிடுவோம். அவனும் அதை நம்பி சரவெடியில் மீண்டும் மும்முரமாக இறங்கி விடுவான்.

    அப்போது என் மனதை மிகவும் கவர்ந்த இன்னொரு விஷயம் ஒன்று உண்டு. தெருவில் சரவெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தால் போதும், குறவர் இனச் சிறுவர் கூட்டம் ஒன்று எங்கிருந்தாலும் ஓடி வந்து, சரவெடியை கண்டுகளித்து ஆர்ப்பாட்டம் போடும். ஒரு நீண்ட சரவெடியை கொளுத்தும் போது, எல்லா வெடிகளும் வெடிக்காது, ஒன்றிரண்டு வெடிகள் தப்பிப் போயிருக்கும். சரவெடி ஓய்ந்ததும், அந்தச் சிறுவர்கள் தப்பியவற்றையெல்லாம் தேடியலைந்து பொறுக்கியெடுத்து வெடித்து மகிழ்வார்கள். அதிலும் பார்த்தீர்களேயானால், அவர்கள் பொறுக்கியெடுத்த வெடிகள் பலவற்றில் திரிகளே இருக்காது. இருந்தாலும் விடாமல் அவற்றையெல்லாம் பிய்த்தெடுத்து, உள்ளிருக்கும் மருந்தையெல்லாம் சேகரம் செய்து கொண்டு போய் மொத்தமாகக்  கொளுத்தி விட்டு ஆட்டம் போடுவார்கள்.

    அவர்கள் என்னவோ இதையெல்லாம் குதூகலத்தோடு செய்து கொண்டிருந்தாலும், அவ்வாறு அவர்கள் தேடித்திரிவதைப் பார்க்கப் பரிதாபமாகவும், சிறிது விந்தையாகவும் கூட இருக்கும். எனக்கும் அவர்களைப்போலவே பட்டாசு கிடையாது தான். ஆனால், அது போதாமையினாலோ, இல்லாமையினாலோ அல்ல என்கிற புரிதல் எனக்கு இருந்தது. அவர்களுக்குத் தருவதற்காகவாவது கொஞ்சம் பட்டாசு வாங்கினால் நன்றாக இருக்குமே என்று மட்டும் நினைத்துக் கொள்வேன்.

    அந்தக் கூட்டத்திலிருந்து நான் கண்டெடுத்த ஒரு நண்பன் தான் – ‘குகன்’. அவனை இன்று நினைத்தாலும் என் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொள்கிறது. மேமாத சென்னையில் நான்கு மணிநேரம் பைக்கில் அலைந்துவிட்டு, திடீரென குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தால் எதிர்கொள்ளும் குளிர்ச்சியை என்னால் உணரமுடிகிறது. மகிழ்ச்சி என் மனதை நிறைக்கிறது.

    அவர்களுடைய வாழ்க்கைமுறை எவ்வளவு  வித்தியாசமானது என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. பேச்சுவழக்கில் அவர்களை நாம் “குருவிக்காரங்க” என்று அழைப்போம். அது குகனுக்குப் பொருத்தமான ஒரு பெயர்தான். அவன் ஒரு பறவை; எந்தக் கவலையும் இன்றி, சிட்டுக்குருவியைப்போல் எப்போதும் ஆனந்தமாக  சிறகடித்துப் பறக்கும் ஒரு ‘சுதந்திரப் பறவை’.

    என்னுடைய வாழ்க்கையும்  ‘கொஞ்சம்’ சுதந்திரமானது தான். மாலை நான்கு மணிக்கு பள்ளி விட்டால், நான்கு பதினைந்திற்குள் வீட்டில் இருக்க வேண்டும். என் சுதந்திரம் அந்த அளவில் இருந்தது.

    அவன் எனக்கு நண்பனான பின், நான் நிறையவே மாறிவிட்டிருந்தேன். அவனோடு வேட்டையாடச் சென்றேன், தெருவில் கில்லி, கோலி எல்லாம் விளையாட ஆரம்பித்தேன். அவன் கூடாரத்திலெல்லாம் (அதுதான் வீடே!) பலமுறை அவனுடன் அமர்ந்து  உணவருந்தி மகிழ்ந்திருக்கிறேன். கூடாரத்தைப் பற்றி அங்கு யாருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்போது சென்றாலும் அங்கே ஆனந்தம், ஆர்ப்பாட்டம் தான். எங்கள் வீட்டில் அதற்கு நேர்மாறாக எப்போதும் ஒரு ‘பின் டிராப் சைலன்ஸ்’ இருந்தாக வேண்டும்.

    அந்தக் கூடாரத்தைப் பற்றியும், அந்த வாழ்க்கை முறையைப் பற்றியும் எழுதினால் நிச்சயமாக இந்தக் கதை ஒரு குறுநாவலாகிவிடும். அவன் செய்வதையெல்லாம் அப்படி ரசித்திருக்கிறேன்.

    அவனை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆரம்பத்தில் ஏனோ என் தாயார் அதை விரும்பவில்லை. அவனையும் எங்களுக்குச் சமமாக  நடத்தவேண்டும் என்று அவனது அங்கீகாரத்திற்காக வீட்டில் ஒரு பெரிய யுத்தமே நடத்தினேன். அது வேலைக்கு ஆகாததால் பிறகு, காந்திய வழியில் உண்ணாவிரதமெல்லாம் இருந்ததுண்டு. வெகு விரைவில் அவன் கிட்டத்தட்ட எங்கள் வீட்டில் ஒருவனாகவே மாறிவிட்டிருந்தான். எல்லோருக்கும் அவனைப் பிடித்துப்போய் விட்டது.

    அவனோடு சேர்ந்து நான் கோலி விளையாடியது மாறி, அவன் எங்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். அவ்வளவு ஏன்? அந்த சமயத்தில் பிரபலமான பாக்மான், பாராட்ரூப்பர், பிரின்ஸ் ஆப் பெர்ஷியா போன்ற விளையாட்டுகளெல்லாம் கூட, எங்கள் வீட்டு கணிப்பொறியில் விளையாட ஆரம்பித்தான்.

    பள்ளிப்படிப்பை நிறுத்தியிருந்த அவன், என் தந்தையின் உதவியோடு ஒரு பள்ளியில் சேர்ந்து படிக்கவும் ஆரம்பித்தான். அந்த வயதிலேயே எனக்கு தெரிந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். எதைச் சொன்னாலும் அப்படியே ‘பற்றிக்கொள்ளும் அவனது திறம்’ என்னை வியக்க வைக்கும்.

    அந்தப் பறவை மெதுவாக எங்கள் கூண்டுக்குள் அது அறியாமலேயே சிக்கிக் கொள்ள ஆரம்பித்தாலும், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

    ஒரு சமயத்தில் அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளால், அவர்களின் கூடாரங்களெல்லாம் அகற்றப்பட்டன. சிறகடித்து பறக்கும் சுதந்திரப் பறவைகளின் வாழ்க்கை என்று நான் கருதிய அந்த நாடோடிகளின் வாழ்க்கையில் இருந்த சிரமங்களும், சிக்கல்களும், அப்போது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.

    நாமெல்லாம் இன்று வைபை (Wi-fi) சமிக்ஞைகள் சில நொடிகள் வரவில்லையென்றால் கூட பொறுமையிழந்துவிடுகிறோம். ஆனால்,  படுக்கைகளையும், பொருட்களையும், மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு இடம்பெயர்ந்து போய்க்கொண்டிருந்த அந்த நாடோடிக் கூட்டத்தின் வாழ்க்கையை நினைத்து அன்றிரவு அழுதது இன்றும் நினைவிலிருக்கிறது.

    தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு, தலையில் இருந்த மூட்டையை ஒரு கையில் பிடித்துகொண்டு, மறுகையை என்னை நோக்கி அசைத்தவாறு, ‘வெளிநாட்டுக்குச் செல்வது’ போன்று மகிழ்ச்சியோடு  சிரித்துக்கொண்டே அவன் சென்ற அந்தக் காட்சி உண்மையில் என்னுள் உறைந்து போயிருக்கிறது.

    அதன் பிறகு, அவனைச் சந்திக்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை. இடம்பெயர்ந்து போனது என்னவோ என் நண்பன் தானே ஒழிய, எங்கள் நட்போ அல்லது அந்த நட்பின் மூலம் கிடைத்த அனுபவமோ அல்ல.

    என் மனவெளியில் அடிக்கடி உலவிக்கொண்டிருக்கும் அத்தினங்களின் நினைவுகளைப் பதிவுசெய்து, உங்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், இந்த நட்பும், அனுபவமும் சாஸ்வதம் பெற்றுவிடும் என்று நம்புகிறேன். அதேபோல, இரைச்சல் நிறைந்த இன்றைய வாழ்க்கை சூழலில், இதுபோன்ற குளிர்ச்சியான நினைவுகள் மனதிற்கு சிறிதளவேனும் இதமும், இனிமையும் தரும் என்றும் நம்புகிறேன். இன்றைக்கு அது போன்ற ஒரு நட்போ அல்லது எனக்கு அப்போதிருந்த மனநிலையோ கோடி கொடுத்தாலும் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

    அவன் நிச்சயம் எங்கோ இருக்கிறான். ஆனால் அவனை மீண்டும் சந்திப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். ஒருவேளை நீங்கள் அவனை சந்திக்க நேர்ந்தாலும், அது சாத்தியம்!

    இருப்பினும், உங்களுக்கு ஒரு கோரிக்கை!

    ஒருவேளை நீங்கள் அவனை சந்திக்க நேர்ந்தால்.. சந்திக்க நேர்ந்தால்..

    ‘என்னைப் பற்றி அவனிடம் தயவுசெய்து எதுவும் கூறி விடாதீர்கள்!’

    அதுவும் இந்த பாழாய்ப் போன உலகத்தில், ‘கார் எப்போ வாங்குற? கார் எப்போ வாங்குற’ என்று திரும்பத் திரும்ப கேட்டு உயிரெடுத்த உடன்பணிபுரிபவர்களின் வாயடைக்க கடனுக்கு கார் வாங்கி, ‘நீ வீடு இல்லாமல் இருப்பது எனக்கு அவமானம்’ என்று கூறிய தந்தையின் கௌரவத்திற்காக கடனுக்கு வீடு வாங்கி, மேலும் காதணி, நிச்சயதார்த்தம், திருமணம் என்று பல விழாக்களில் சொந்தங்கள் முகத்தைத் தூக்கி மும்பையில் வைப்பதை காணச் சகிக்காமல், அவர்களோடு பெருமையுடனும் புன்னைகையுடனும் மேடையில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, கடன் அட்டை உபயோகித்து தங்க நகைகள், துணிமணிகளெல்லாம் வாங்கி, பொறுப்போடு நான்காம் தேதிக்குள் அத்தனை தவணைகளையும் கட்டி, எஞ்சியிருந்த காசில் வீட்டுக்கு மளிகைப்பொருட்கள் வாங்கி, பிள்ளைகளுக்கு பொம்மைகள், எனக்குப் புத்தகங்கள் வாங்கி மாத கடைசியில் கையில் காசில்லாமல் கஷ்டப்பட்டு, நண்பர்களிடமும் கடன் வாங்கி, கடன் பட்டியல் கூட்டுத்தொடராகவும், கடன் பணம் பெருக்குத்தொடராகவும் வளர்ந்து, மன அழுத்தத்துக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி, வெறுத்துப்போய் ஒரு நாடோடி போல் மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு வெளிநாடு ஓடிவந்து, ‘எங்கள் வேலையைப்  பறித்துக்கொள்ள வந்த களவாணிகளே!’ என்பது போன்ற பார்வையை வீசிய அந்நியர்களின் (உண்மையில் நாங்கள் தான் இங்கு அந்நியர்கள்!) எதிர்ப்பைச் சுமந்து, கடின உழைப்பாலும், தாய்நாடு தந்த அறிவாலும் அவர்களின் நம்பகத்தன்மையைப் பெற்று, சிறிது சிறிதாக அவர்களில் ஒருவனாகி,

    (மூச்சு வாங்குகிறது… இரண்டு நிமிடங்கள் பொறுத்துக்கொள்ளவும்..)

    சரி. இப்படி ஆறு வருடமாக கைகட்டி, வாய்கட்டி, செலவு பண்ணாமல் சேர்த்து வைத்து, இந்திய ரூபாய் வீழ்ச்சியடைகிற நாளை எதிர்நோக்கிக் காத்திருந்து, இந்தியாவிற்கு சிறிது சிறிதாக பணத்தை அனுப்பி, அங்கு வந்து வீட்டுக்கடனை அடைத்து, நிம்மதியாக தெருவோர தேநீர் கடையில் ஒரு சனிக்கிழமை தேநீர் பருகும்போது, ‘வீட்டு விலையெல்லாம் இந்த என்.ஆர்.ஐ நாய்களால ஏறி போயிடுச்சு’ என்று தேநீர் கடையில் தினசரி படிக்கும் மேதைகளிடம் பட்டம் பெற்று, வீட்டுக்கடனை முழுவதுமாக அடைத்து எஞ்சிய தொகையில் நிலம் வாங்க விரும்பி, என் பெற்றோர் ‘திஸ் இஸ் மை சன் ப்ரம் அப்ராட்’ என்று வீண்பெருமையடித்துக்கொண்டு அறிமுகப்படுத்தியதால், இருபது கோடி மதிப்புள்ள நிலத்தை ஏஜெண்ட் காட்ட, ‘நான் அந்த மாதிரி என்.ஆர்.ஐ இல்லைங்க, வேற மாதிரி. இந்தியாவில் இருக்கற எல்லாரும் எப்படி அனில் அம்பானி இல்லையோ, அதேபோல் வெளிநாட்டுல இருக்கற எல்லா இந்தியனும் லக்ஷ்மி மிட்டலும் இல்லை. நான் ஒரு நார்மல் மிடில் கிளாஸ் என்.ஆர்.ஐ!’ என்று எடுத்துச் சொல்லி அவரது மேலும் கீழும் பார்வையை தர்மசங்கடத்துடன் வாங்கி,

    உதவி என்று வந்த உறவுகாரனுக்கு ஆயிரம் ரூபாய் தந்து, ‘வெளிநாட்டுல கோடிக்கணக்குல சம்பாதிக்கிறான், பிச்ச காச தர்றான் பாரு பரதேசி’ என்கிற பட்டத்தையும் பெற்று, இன்னும் ‘திமிர் புடிச்சவன்’, ‘கஞ்சன்’, ‘கர்வி’, அதிமேதாவி, ‘நாட்டுப்பற்று இல்லாதவன்’ என்று எனக்கு முற்றிலும் பொருந்தாத அத்தனை அடைமொழிகளையும் தாங்கி,

    இறுதியாக இன்றைக்கு பழைய வாழ்க்கையை நினைத்து, உண்மையான அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி தயவு செய்து குகனிடம் கூறி விடாதீர்கள்.

    அவன் என் நிலைமையை நினைத்து மிகவும் வருத்தப்படுவான். இன்னும் சொல்லப்போனால், இதெல்லாம் அவனுக்குப் புரியவும் புரியாது.

    அவன் ஒரு பறவை.

    யாரையும் வேதனைக்கும் உட்படுத்தாமல், எந்தக் கவலையும் இன்றி, யாருக்காகவும் இல்லாமல், அவனுக்காகவே வாழ்ந்து, எப்போதும் ஆனந்தமாக சிட்டுக்குருவியைப் போல் சிறகடித்துப் பறக்கும் ஒரு சுதந்திரப் பறவை.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     
    கேசவ் ,பகவான் ரமணர் இது போலத்தான் பசு லஷ்மிக்கு கரஸ்பரிஸ தீக்‌ஷை அளித்தார், அதன் அந்திம நேரத்தில்….

    crazy

    ‘ஆனை முகமேறி, ஆயர் கொழுந்தவன்,
    தூணை நிகர்த்த துதிக்கையை, -சோணை,
    மகரிஷி போல, சுகமாய்த் தடவி,
    அகருசி ‘நானை’ அளிப்பு’….கிரேசி மோகன்….

    Share
  • எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மறைந்தார்

    எஸ் வி வேணுகோபாலன்.

     

    ராஜம் கிருஷ்ணன் அவர்கள் முகத்தைக் கடைசியாகப் பார்க்கச் சென்றேன்…

    rajam_krishnan_photo_bbc_courtesy

    மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

    மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில்தான் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது பிரிவு நிகழ்ந்தபோது, மருத்துவர் எஸ் மல்லிகேசன் அவர்கள் மிகவும் நொறுங்கிப் போயிருக்கிறார். அத்தனை நெகிழ்ச்சியான அன்பு வளையத்திற்குள் தமது இறுதிக் காலத்தை நிறைவு செய்து மறைந்திருக்கிறார் ராஜம்.

    நேற்று இரவு சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, எட்டு மணிக்குப் போய்ச் சேர்ந்தபோது, அற்புத மனுஷி அவர்களது முகத்தைக் கடைசியாகப் பார்க்க இயலும் என்ற நம்பிக்கை கொஞ்சம் தளர்ந்துவிட்டிருந்தது.

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி இரா தெ முத்து அவர்கள் நேற்று பிற்பகல் சொல்லியிருந்தார், புற நோயாளிகள் பிரிவில் தலைமை மருத்துவர் மல்லிகேசன் அவர்களைச் சந்தித்தால், ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய உதவுவார் என்று. புறப்படுமுன் தீக்கதிர் தோழர் கவாஸ்கர் அவர்களிடம் கேட்டபோது, ஜி பிளாக் செல்லவும் என்று அவரும் அலைபேசியில் வழிகாட்டி இருந்தார்.

    நான் சென்ற சமயம், புறநோயாளிகள் பகுதியின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தன. நேரம் கடந்துவிட்டிருந்தது. ஜி பிளாக்கின் மையப் பகுதியில் எனக்கு உடனே சென்று கேட்க தோன்றிய இடம், செவிலியர் அறை. அங்கேதான் அந்த நேயமிக்க செவிலியர் ஜெயஸ்ரீ அவர்களைச் சந்தித்தேன். மிகச் சுருக்கமாக எனது வேண்டுகோளை நான்கு சொற்களில் தெரிவித்தேன். ஹாலில் அமர்ந்திருங்கள், சார் கிட்ட பேசிவிட்டு சொல்றோம் என்றார்.

    நான் வந்து உட்கார்ந்த அடுத்த நிமிடத்தில் அவர் என்னை நோக்கி நடந்துவந்தபோது நான் அந்த நொடியின் நூற்றில் ஒரு பங்கு அளவிற்குள் குழப்பத்தில் தவித்தேன். ஆனால், அவர், “வாங்க போய்ப் பார்க்கலாம், சார் பர்மிஷன் கொடுத்திட்டாங்க” என்றார்.

    அந்தப் பிரிவிலிருந்து வெளியே வந்து ஒரு திருப்பத்திற்குப் பிறகு சிறிய நடை நடந்தால் மார்ச்சுவரி பகுதி வருகிறது. அந்த கால, இட இடைவெளிக்குள் எனக்குத் தெரிந்த ராஜம் கிருஷ்ணன் அவர்களது ஆளுமை குறித்து அவரோடு பகிர்ந்து கொண்டே நடந்தேன். நாளை அல்லது மறுநாள் வந்தாலும் வேறு யாரும் பார்க்க முடியுமா என்று கேட்டேன்…உறவினர், தெரிந்தவர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் காலை ஒன்பது மணிக்குமேல் மாலை 5 அல்லது 6 மணிக்குமுன் வந்தால் நிச்சயம் மல்லிகேசன் சாரை சந்தித்தாலே போதும், உடனே அனுமதி கிடைத்துவிடும். சென்று பார்க்கலாம் என்றார் ஜெயஸ்ரீ. இன்னும் மூன்று மாதங்கள் வரை உடலை ஆராய்ச்சிக்குக் கொடுக்குமுன் பார்க்கலாம் என்றும் சொன்னார்.

    ‘மேஸ்திரி கிட்ட சொல்லி இருக்கோம், அவர்தான் வந்து காண்பிக்கவேண்டும், கொஞ்சம் உள்ளே காத்திருங்கள்’ என்று வேறோர் அறையைத் திறந்து உட்காரச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களுக்குள் திருப்பால் வந்துவிட்டார்.

    பிறகு குளிர்பதனம் செய்யப்பட்டிருந்த அறைக்குள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த உடல்கள் இருந்த ஓர் இழுவறைக்குள் புத்தம்புதிதாகச் சூட்டப்பட்டிருந்த பெரிய மலர்மாலையை அணிந்தவண்ணம் ராஜம் கிருஷ்ணன் உடலைப் பார்த்தேன்…மிகப் பெரும் வரலாறு ஒன்றை அந்தச் சிறு பெட்டி தன்னுள் எப்படி வாங்கி வைத்திருக்கிறது என்று ஒரு கணம் பார்க்கையில் சற்று மனம் நெகிழ்ந்துபோனேன்.

    உப்பளம் தொழிலாளர் கதையை எழுதிய எழுத்தாளர், பாரதியை அப்படியே உள்வாங்கிக் கொண்டாடிய பெண்மணி, விவசாயிகள் எழுச்சியை, சாதாரண மக்கள் வாழ்க்கையை வாசக பெருந்திரளுக்குப் படைத்த மகத்தான எளிய மனுஷி உறக்கத்தில் இருப்பதுபோல் ஒரு பட்டுச் சொப்புக் குழந்தை போல் தெரிந்தார் அந்த இழுவறையில். நான் தலையசைத்ததும் அந்த இழுவறை மூடப்பட்டது. ஒரு சிறிய தீப்பெட்டியை மூடியதும், அப்பாவி போல தீக்குச்சிகள் உள்ளே மறைந்துவிடுவது மாதிரி அந்தப் பேருடல் அந்த அறைக்குள் ஒளிந்து கொண்டு கண்ணகன்றது.

    தாளமாட்டாத உணர்வுகளின் விளிம்பில், திருப்பால் அவர்களது கைகளில் என் கண்களைப் பொத்திக் கொண்டு கொஞ்சம் மீள நினைத்தேன். இரு கரம் கூப்பி ஜெயஸ்ரீ அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்…இந்த மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் அனைவருக்கும் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என்றேன். ஒரு குழந்தையைப் போலத்தான் எல்லோரையும் பார்த்துக் கொள்கிறோம் சார் என்றார் ஜெயஸ்ரீ.

    மருத்துவர் எஸ் மல்லிகேசன் அவர்கள் எப்படி நேரப்படி உணவு, மருந்து கொடுக்கப்படுவதை உறுதி செய்து கொண்டே இருப்பார், முக்கிய தினங்களில் தமது இல்லத்திலிருந்து உணவு எடுத்துக் கொண்டுவந்து ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு உண்ணக் கொடுப்பார், முந்தைய இரவு இப்படி நேரும் என்று எதிர்பாராது கலங்கிப் போனார் என்பதை அறிந்து மேலும் நெகிழ்ந்தேன்….

    ராஜம் கிருஷ்ணன் மிக உயர்ந்த மனிதர் என்றேன்….” நான் அந்த அம்மாவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன் சார்” என்றார் திருப்பால்.

    தனது எழுத்துக்களைக் கூட நாட்டுடைமை ஆக்கிவிடவேண்டும் என்று எப்போதோ வேண்டுகோள் வைத்தவர் என்றேன்…

    “ஆமாம் சார், ஒரு பேப்பர் பேனா போதும் அவங்களுக்கு, எழுதிக் கொண்டே இருப்பாங்க எதையோ” என்றார் திருப்பால். பாட்டி, பாட்டி என்று கொண்டாடி இருக்கின்றனர் ஊழியர்கள் அவரை. மிகச் சாதாரண உழைப்பாளி மக்களுக்காத் தான் எழுதினர் அவர் என்றேன் நான். இன்னும் யாராவது வருவாங்களா சார் என்று திருப்பால் கேட்டார். வாய்ப்பில்லை என்றேன். நாளைக்குக் கூட வரலாம் சார். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் வரை பார்க்க முடியும் என்று சொன்னார்கள்.

    இருவருக்கும் மீண்டும் வணக்கமும், நன்றியும் தெரிவித்தபடி வேகமாக நடக்கத் தொடங்கினேன். எனக்கு முன்பாக இரவு நீண்டிருந்தது நடைபாதையில். ஆனாலும், மருத்துவமனையின் அறைகளில் இருந்து வெளிச்சம் சிந்திக் கொண்டுதான் இருந்தது….மருத்துவமனை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த ஓர் இளம்பெண் எதிரே டார்ச் விளக்கு ஒன்றை ஏந்தியபடி கடந்து சென்றார் என்னை.

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/10/141021_rajamkrishnan

    Share
  • மலர்ந்திடுமே தீபாவளி!

           -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

           தீபாவளி என்றால்
           தித்திப்பு மனதில் வரும்
           தெருவெங்கும் மக்களெலாம்                deepavali
           பெருமகிழ்வு கொண்டிடுவார்!

           கோபங்களைத்  தவிர்த்து
           குற்றங்களை மறந்து
           தீபமிட்டு வழிபட்டு
           சிறப்புடனே மகிழ்ந்து நிற்பார்!

           அடக்கி ஒடுக்கி நின்று
           ஆணவத்தின் தலை ஏறி
           அமைதியைக் குலைப்பதிலே
           ஆருக்கு என்ன பயன்?

            மற்றவரை வாழவிட்டு
            வம்புதும்பு தனையொதுக்கி
            நற்கருணை யோடிருந்தால்
            நலந்தானே யாவருக்கும்?

            இக்கருத்தை உள்ளடக்கி
            எங்கள் தீபாவளியுளதை
            எல்லோரும் மனதிற்கொளின்
            இனித்திடுமே தீபாவளி!

            ஏழ்மை நிலை ஒழியவேண்டும்
            இரக்ககுணம் ஓங்கவேண்டும்
            தாழ்வுமனம் ஓடவேண்டும்
            தலைநிமிர்ந்து வாழவேண்டும்!

            ஊழ்வினையை நம்பிநம்பி
            ஒதுங்கிநாம் நின்றிடாமல்
            வாழும் மனம் வந்துவிடின்
            மலரும் நல்ல தீபாவளி!

             பட்சணமும் செய்ய வேண்டும்
             பட்டாசும் வெடிக்க வேண்டும்
             கஷ்டமின்றி வாழ நாங்கள்
             கடவுளிடம் வேண்ட வேண்டும்!

             இஷ்டமுடன் யாவரையும்
             ஏற்று நிற்கும் மனமும்வேண்டும்
             துஷ்டரையும் துணிவுகொண்டு
             தூயராக்க முயலவேண்டும்!

             மட்டில்லா மகிழ்ச்சி என்றும்
             வந்துகொண்டே இருந்துவிடின்
             வாழுகின்ற நாட்களெல்லாம்
             மலர்ந்திடுமே தீபாவளி!

             பெண்ணடிமை போகவேண்டும்
             பெண்பிறந்தால் போற்றவேண்டும்
             மண்ணிலவர் நல்லவண்ணம்
             வாழும்நிலை வளரவேண்டும்!

             உண்ணுகின்ற உணவுமுதல்
             ஊற்றெடுக்கும் ஆறுவரை
             பெண்ணாகப் போற்றுகிறோம்
             பிறகுதான் தூற்றுகிறோம்!

             மனக்கதவைத் திறவுங்கள்
             மங்கையரை மதியுங்கள்
             மங்கையர்கள் மகிழ்ந்திட்டால்
             மலர்ந்திடும் நற்தீபாவளி!

             மஞ்சளொடு குங்குமமும்
             மல்லிகையும் அலங்கரிக்க
             மங்களமாய் பெண்கள்வரின்
             மலர்ந்திடுமே தீபாவளி!

            பெண்ணவளின் பெருமையினைப்
            பேணிவிடும் வேளையிலே
            மண்ணுலகில் தீபாவளி
            மலர்ந்திடுமே நாளெல்லாம்!

    Share
  • நனைந்த சூரியன்!

    தமிழ்த்தேனீ

    ஆடியிலே காற்றடிக்கும்
    அம்மியையே பறக்க வைக்கும்
    புரட்டாசியில் பொன்னுருகக் காய்ந்து          suninrain
    மண்ணுருகப் பெய்யும் என்றெல்லாம்
    எதிர்பார்த்துப் பொய்த்த மழை
    மானாடி மயிலாடி மற்றவைகள்
    தானாடிக் காத்திருந்து காத்திருந்து
    ஏமாற்றம் தந்த மழை
    இயல்பான சுழற்சியினால்
    இயற்கையின் எழுச்சியினால்
    திரண்டெழுந்த கார்முகிலின்
    கருணையினால் ஐப்பசியில் அடை
    அடையாய் அடர்ந்து பெய்த மழை
    காரணமாய் ஆதவனே நனைந்தான்
    ஐப்பசியின் அடை மழையில்
    ஆதவனே நனைந்தான்!

    உதய சூரியனோ மறையும்
    சூரியனோ உலகிலே உண்டோ?
    ப்ரபஞ்சம் சுழலுவதால் தோன்றி
    மறைவதுபோல் மாயம்           
    காட்டுகிறார் சூரியனும் சந்திரனும்!

    ஆதவனே நீராடும் ஐப்பசியில்
    மானிடரே நாமும்தான்
    தீபாவளித் திருநாளில்
    கங்கையின் புனித நீரால்
    நீராடி மகிழ்ச்சியில் நனைவோமே!
    நாருசிக்கும் பலகாரம்
    அருந்தியே மகிழ்வோமே!

    ஒரு வருடம் காய்ந்த சூரியன்
    ஒரு நாளில் நனைந்தான்
    சூழ்நிலையின் குளிராலே
    நடுநடுங்கும் சூரியனும்
    குளிர்காயத் தீபங்கள் ஏற்றியே
    ஒளியும் ஒலியும் காண…
    நம் நாட்டுப் பட்டாசும் மத்தாப்பூ
    புஸ்வாணம் ஏற்றியே மகிழ்வோமே!

    விண்முட்டும் ராக்கெட்டு இங்கிருந்தே
    விட்டு அத்துணை கிரகங்களையும்
    ஆராய்ந்தே அங்கிருக்கும் ரகசியங்கள்
    அதிசயங்கள் இங்கிருந்தே அறிவோமே!

    சூரியனே நனைந்தான் நாமும்
    தான் நனைந்தோம் கூட உள்ள
    மக்களும் நனைந்தாரே
    அவருக்கும் குளிர்தானே
    நாமெடுக்கும் ஆடைகள்
    விதவிதமாய்ப் பலகாரம்
    குளிர் நீக்கும் பட்டாசு
    அத்தனையும் மொத்தமாய்
    ஓரிடத்தில் குவித்து வைத்து
    ஒன்றாக எரியவிட்டால்
    உலகமே வெடிந்து போகும்

    வாங்கி வந்த அத்தனையும்
    பங்கு போட்டுப் பிரித்தெடுத்து
    அவருக்கும் அளித்தால் மகிழ்வாரே
    அவர் மகிழ்ந்து புன்னகைத்தால்
    அகிலமும் ஒளி பெறுமே!

     

    Share
  • பெரியார் என்ன செய்தார்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சென்ற வாரம் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பலருக்குப் பெரியாரைப் பற்றி நல்ல புரிதல் இல்லை போல் தெரிகிறது. முடிந்த அளவு பெரியாரைப் பற்றிய சரியான கணிப்பைக் கொடுக்க முனைந்ததின் விளைவே இந்தக் கட்டுரை. பெரியாரைப் பற்றி ஒன்றும் தெரியாத இளம்தலைமுறையினருக்கு ஒரு முன்னுரையாக அமையும்.

    பெரியார் என்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1879-இல் ஈரோட்டில் ஒரு பணக்கார வணிகரின் மகனாகப் பிறந்தார். அவருடைய சிறு வயதில் வைஷ்ணவப் புரோகிதர்கள் சிலர் அவர் வீட்டிற்கு வந்து சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லிவிட்டு அவருடைய தந்தையின் விருந்தோம்பலை அனுபவித்துவிட்டுச் சென்றனர். அப்போதிலிருந்து பெரியார் பிராமணர்களுக்கு ஏன் இத்தனை உபசாரம், ஏன் இத்தனை மதிப்பு என்று எண்ண ஆரம்பித்தார். அவர்கள் செய்தது அத்தனை பெரிய காரியமா என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போதே பிராமண எதிர்ப்பு அவர் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது. வயது வந்தபிறகு ஒரு முறை காசிக்குச் சென்றபோது பிராமணர்களுக்கு உணவளித்த இடத்தில் இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்ற காரணத்திற்காக இவருக்கு உணவு வழங்கப்படவில்லை. அன்றிலிருந்து சமூகத்தில் ஏன் பிராமணர்களுக்கு உயர்ந்த இடம் என்று ஆராய ஆரம்பித்தார்.

    பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கலந்துகொண்டார். சேரன்மாதேவியில் இருந்த குருகுலப்பள்ளியில் பிராமண மாணவர்களுக்கும் பிராமணரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்டதை எதிர்த்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பெரியார் பிராமணரல்லாத ஒருவரை ஆதரித்தார். ஆனால் காங்கிரஸில் இருந்த பல பிராமண வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரித்த பிராமணர் ஒருவர் வெற்றி பெற்றார். அப்போது காங்கிரஸில் பிராமணரல்லாதவர்களின் செல்வாக்கு ஒரு போதும் ஏற்படப் போவதில்லை என்று முடிவுசெய்து காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

    சமூகத்தில் மிகுந்த ஏற்றத்தாழ்வு இருப்பதையும் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதையும் உணர்ந்து எல்லோரும் சமம் என்ற உண்மையையும் எல்லோருக்கும் சுயமரியாதை வேண்டும் என்பதையும் தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார். ஆண்டாண்டு காலங்களாக சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை பிராமணர்கள் மட்டுமே படித்து இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே அவர்கள் தரகராக இருப்பதை எதிர்த்தார். மதத்தின் பெயரால் – கடவுளுக்கு மிக அருகில் பிராமணர்கள்தான் இருக்கிறார்கள் என்று பலரையும் எண்ணவைத்து – பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அதை மாற்ற முயன்றார். இதைத்தான் பிராமண எதிர்ப்பு என்று இன்றும் பலர் எண்ணுகின்றனர். மதத்தின் பெயரால் பிராமணர்கள் மக்களிடம் மூட நம்பிக்கைகளை வளர்த்ததால் இந்து மத எதிர்ப்பை ஆரம்பித்தார். மூட நம்பிக்கைகளில் ஒன்று பிராமணர்களுக்குத் தானம் செய்து தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் தேடலாம் என்பது. வாழ்க்கையில் எல்லா அட்டூழியங்களும் புரிந்துவிட்டு கோவிலில் காணிக்கை செலுத்தி இறைவனை ஏமாற்றிவிடலாம் என்பது இன்னொன்று.

    காலனீய காலத்தில் அரசுப் பதவிகளிலும் சட்டம், கணக்கு, மருத்துவம் போன்ற உயர் தொழில்களிலும் சிறுபான்மையராக இருந்த பிராமணர்களே ஆதிக்கம் செலுத்திய நிலை மாறி பெரும்பான்மையோருக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்றும் நினைத்தார். ஜாதிகளில் ஏற்றத் தாழ்வு இருந்ததால் ஜாதி ஒழிப்பையும் தன் கொள்கைகளில் சேர்த்துக்கொண்டார். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒரு பிராமணரே கூறியதைப் போல்தான் பெரியாரும் ஜாதிகளை ஒழிக்க முயன்றார். பெரியாரின் பிராமண எதிர்ப்பு, மத ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்பவை இப்படிப் பிறந்தவைதான்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும் என்பது பெரியாரின் கொள்கைகளில் ஒன்று. கீழ் ஜாதியைச் சேர்ந்தவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு அடிபணிய வேண்டியதில்லை. ஏனென்றால் எல்லோரும் பிறப்பில் சமம். மூடப் பழக்க வழக்கங்களை மக்கள் மனத்திலிருந்து அகற்றுவதற்கு மிகவும் முயன்றார்.

    எல்லோரும் சமம் என்று கூறியபோது பெண்களும் ஆண்களுக்குச் சமம் என்றார். விதவை மறுமணம், பெண்கல்வி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

    சமூகத்தில் ஒரு சாரார் தாழ்ந்த நிலையிலும் ஒரு சாரார் உயர்ந்த நிலையிலும் இருக்கும் அவலத்தை மாற்றிச் சமூக நீதி ஏற்பட்ட பிறகுதான் அரசியல் சுதந்திரம் வேண்டும் என்று நினைத்ததால்தான் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் முன் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார். ஏற்கனவே உயர்ந்த பதவிகளில் இருந்த பிராமணர்கள் பிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நீட்டித்துக்கொள்வார்கள் என்று பயந்துதான் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய நாளைத் துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்றார். இது சரியோ தவறோ; இது சமூக நீதிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டும். எப்போதுமே பிரிட்டிஷார் இந்தியர்களை ஆண்டுகொண்டிருக்க வேண்டும் என்பது அவர் நோக்கமல்ல.

    அரசியலில் ஈடுபட்டு பணம் நிறைய சம்பாதித்து அரசியல் அதிகாரத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்று அவர் ஒரு போதும் நினைக்கவில்லை. மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைய வேண்டும், பிராமண ஆதிக்கத்தையும் அதற்கு ஆதாரமாக உள்ள மதத்தையும் ஒழிக்க வேண்டும், ஜாதிகள் ஒழிய வேண்டும், சமூகத்தில் எல்லோருக்கும் சம உரிமைகள், சம வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பவையே பெரியாரின் கொள்கைகளின் அடிப்படை.

    Share
  • தித்திக்கும் தீபாவளி!

    -ரா.பார்த்தசாரதி

    diwali

     

     

     

     

     

     

     

     

     

    மக்களுக்கு  மகிழ்ச்சியும் ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை
    எல்லோரும்  ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை
    வாழ்த்துகளை நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளிப் பண்டிகை
    சந்தோஷமும் உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

    விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்துக் குளித்து
    மகிழ்வுடனே புத்தாடை உடுத்தி இனிப்பினைப் பகிர்ந்து
    பெரியவர்களிடம் வாழ்த்தும் நல்லாசியும் பெற்று
    ஊர் எங்கும்  ஒன்றாய்க் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

    நாட்டில் உள்ளவர்கள் பலவிதமாய்க் கொண்டாடும் தீபாவளி
    வடக்கே விளக்கு பூஜை எனக் கொண்டாடும் தீபாவளி
    இல்லத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி
    புன்சிரிப்புடன் மன நிறைவாய் வாழ்த்துப் பெறும் தீபாவளி !

    வெடியும் சரமும் மத்தாப்பும் கையில் ஏந்துவோமே
    வெடியின் சப்தமும் சித்திரப் பூப்போல சிதறும் மத்தாப்பினைக் காண்போமே!
    மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே
    சங்கு சக்கரம் புஸ்வாணப்  பூக்களின் சிதறலைக் கண்டு களிப்போமே!

    அசுரன்  நினைவாக நாம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுகின்றோம்
    மனித உருவில் உள்ள அசுரர்களை அழிக்க நாம் திட்டமிடுவோம்!
    பார்வையற்றவர்கள் விடுதிக்கும் முதியோர் இல்லத்திற்கும் செல்வோமே
    அவர்களுடன் இனிப்பினைப் பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    கன்னிப்பெண் ராதைகைத் தாம்பால் கட்டுண்டு,
    பின்னிப் பிணைந்த கண்ணனவன் -முன்னம்
    உரலிழுத்த ந்யாபகம் உந்த உருள
    மருள முழித்தனள் மாது’’….கிரேசி மோகன்….

    கண்ணிநுண் தாம்புக்கும் கட்டுண்டோன், கன்னிப்பெண் ராதைக்கும் கட்டுண்டோன்….

    Share