Blog

  • கவிஞர் புவியரசு – உலகின் ஆன்மாவைத் தமிழில் மொழி பெயர்த்தவர்

    கவிஞர் புவியரசு – உலகின் ஆன்மாவைத் தமிழில் மொழி பெயர்த்தவர்

    முனைவர் நா. சியாமளா
    உதவிப் பேராசிரியர் 
    தமிழ்ப் படைப்பாக்கத்துறை 
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, சரவணம்பட்டி கோயம்புத்தூர் -49.
    தொடர்பு எண் -9159033963

    உலக இலக்கியத்தின் கதவைத் திறந்து
    தமிழின் கையைப் பிடித்து
    “வா… உனக்கும் இந்த உலகம் சொந்தம்”
    என்று அழைத்துச் சென்ற
    அந்தத் தந்தை…
    இன்று இல்லை.

    ஷேக்ஸ்பியர் இறந்தபோது
    ஆங்கிலம் அழுதிருக்கும்.
    தாகூர் மறைந்தபோது
    வங்கம் அழுதிருக்கும்.
    ஆனால்…
    இன்று
    கலீல் ஜிப்ரானும்,
    உமர்கய்யாமும்,
    தாஸ்தோவ்ஸ்கியும்,
    ஓஷோவும் கூட
    தமிழில் அழுகிறார்கள்.
    ஏனெனில்…
    அவர்களைத் தமிழில்
    மீண்டும் பிறக்க வைத்தவர்
    இன்று கண் மூடியிருக்கிறார்.

    “தலைவனை நம்பாதே…
    தத்துவத்தை நம்பு…”
    என்று சொல்லிவிட்டு
    தன் வாழ்நாளையே
    அந்த ஒரு வாக்கியத்திற்கு
    சாட்சியாக்கி வாழ்ந்தவர்.

    புத்தகங்களை
    மொழிபெயர்ப்பவர்கள் பலர்.
    ஆனால்…
    ஒரு மொழியின் ஆன்மாவை
    இன்னொரு மொழியில்
    உயிரோடு உலவவிட்டவர்கள்
    எத்தனை பேர்?
    அந்த அரிய வரிசையில்
    தலைநிமிர்ந்து நின்றவர்.
    புவியரசு.

    இன்று…
    வானம்பாடி
    ஒரு கவிஞனை இழக்கவில்லை.
    தன் வானத்தையே இழந்துவிட்டது.
    தமிழ்
    ஓர் எழுத்தாளரை இழக்கவில்லை.
    தன் மொழிபெயர்க்க முடியாத
    ஒரு சொல்லை இழந்துவிட்டது.

    நூலகங்களில்
    இனி உங்கள் புத்தகங்கள் இருக்கும்.
    ஆனால்…
    அவற்றின் பக்கங்களைத் திருப்பும் போது
    எங்கோ ஒரு பக்கம்
    கண்ணீரால் நனைந்து கொண்டே இருக்கும்.
    உங்கள் நாற்காலி வெற்றிடமாகலாம்.
    உங்கள் பேனா நின்றுபோகலாம்.
    ஆனால்…
    உங்கள் எழுத்தால்
    விழித்துக் கொண்ட மனங்கள்
    ஒருபோதும் உறங்காது.

    புவியரசே.!
    நீங்கள் மறைந்துவிட்டீர்கள் என்று
    எழுத என் கை நடுங்குகிறது.
    ஏனெனில்…
    உங்களைப் போன்றவர்கள்
    மரணிப்பதில்லை.
    ஒருநாள்…
    தமிழ் ,உலக இலக்கியத்தை வாசிக்கும் வரை…
    ஓர் இளைஞன்
    தாஸ்தோவ்ஸ்கியை முதன்முதலாக தமிழில் படிக்கும் வரை…
    ஒரு பெண்
    ஜிப்ரானின் வரிகளில்
    தன் கண்ணீரைக் கண்டுபிடிக்கும் வரை
    ஒரு வாசகன்
    ஓஷோவின் அமைதியைத்
    தமிழில் உணரும் வரை…
    நீங்கள்…
    இறந்தவர்களின் பட்டியலில் இல்லை.
    தமிழின் இதயத் துடிப்பில் இருக்கிறீர்கள்.

    போய் வாருங்கள் புவியரசே!
    உங்களைத் தோளில் சுமப்பது
    சில மனிதர்கள் மட்டும்தான்.
    ஆனால்…
    உங்கள் சொற்களைச் சுமந்து
    இனி நடக்கப் போவது…
    ஒரு முழு தமிழினம்.

    [குறிப்பு: மறைந்த வானம்பாடிக் கவிஞர் புவியரசு ஐயாவிற்காக எழுதப்பட்ட புகழஞ்சலிக் கவிதை.]

    Share
  • மலரும் மாலையும்!

    மலரும் மாலையும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    காலையிலும் மலர்வேன் மாலையிலும் மலர்வேன்
    கவலையின்றி இருப்பேன் களிப்பதனைக் கொடுப்பேன்
    நாரெடுத்து என்னைக் கட்டிடுவார் மனத்தில்
    நானெடுப்பேன் அப்போ மாலையெனும் பெயரை

    மலர்மாலை சூட்டி மகிழ்ந்தாள் ஓர்மங்கை
    மாலவனும் அதனை வாஞ்சையுடன் ஏற்றான்
    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாகினாள்
    கொண்டாடி மகிழுந்திடும் கோதை நாச்சியார்

    பூமாலை புனைந்தேத்தப் புகன்றார் நம்மப்பர்
    பாமாலை பூமாலை பரமனுக்குச் சாற்றினார்
    ஆழ்வார்கள் அடியார்கள் அனைவருமே கரமேந்தி
    பூமாலை கட்டினார் புனிதமுடன் சாற்றினார்

    மலரிறைவன் மாவடியைத் தொழுதபடி இருக்கும்
    மலர்மாலை மாயிறையின் மார்பினையே தழுவும்
    மாயிறையின் மாவடியும் மாண்புநிறை மார்ப்பும்
    மலருக்கும் மாலைக்கும் வாய்த்த பெருவரமே

    பூக்கொண்டு தொழுதால் வாக்குண்டு நல்மனமுண்டு
    மாமலராள் நோக்குண்டு மேனியும் நுடங்காதென்றும்
    மூதாட்டி அவ்வையார் மொழிந்திட்டார் பூச்சிறப்பை
    பூவெடுத்துச் சாற்றுவோம் பூமாலை சூட்டுவோம்

    மண்ணுலகில் வாழ்வாரின் வாழ்வெல்லாம் பூவிருக்கும்
    மங்கலத்தில் பூவிருக்கும் அமங்கலத்தில் வந்திருக்கும்
    தொட்டிலும் இருக்கும் கட்டிலிலும் இருக்கும்
    சுடுகாடு வரைக்கும் தொடர்ந்துவிடும் பூமாலை

    வெற்றியிலும் மாலைவரும் விழாவினிலும் மாலைவரும்
    சுற்றிநின்று வாழ்த்திடுவார் கரங்களிலும்  மலரிருக்கும்
    மலராலே பிறக்கின்ற மலர்மாலை மகத்துவத்தை
    மாநிலத்தில் வாழ்வார்கள் மனமிருத்த வேண்டுகிறேன்!

    Share
  • ஆதிகால தெய்வ வழிபாடு!

    தமிழ்க்கடவுளான முருகன் மலைத் தெய்வம் என்று போற்றப்படுபவன். ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் போற்றி படைக்கப்பட்டிருக்கலாம் என்பர்.

     


    வேலன் வெறியாடல், குன்றக்குரவை, வெறியாட்டு என்பன சிறப்பிடம் பெற்றன. இவ்விழாக்களின் போது ஆட்டைப் பலியிட்டு, முருகனுக்கு உகந்த பண்டங்களான தேன், திணைமாவு போன்றவற்றைப் படைத்து ஆடிப்பாடி வழிபட்டனர். இவற்றை மரபு சார் வழிபாட்டு முறைமைகள் எனக்கொள்ளலாம். ஆதி காலந்தொட்டு முருகன் என்பவன் மலை நிலத்துக்குரிய தெய்வமாகவும் தமிழ் கடவுளாகவும் வழிபடப்பட்டுள்ளான். அதே பண்புகளுடன் இன்றைய கலியுகத்திலும் சர்வதேசக் கடவுளாகத் தமிழ்க் கடவுளாக முருகன் திகழ்கின்றான்.

     கி.மு. 300 வாக்கில் எழுதப்பட்ட தொல்காப்பியம் முருகனைச் சேயோன் என அழைத்து, அவனைக் குறிஞ்சி நிலக் கடவுளாகச் சுட்டுகிறது. சேயோன் (சேய் = மகன்) மிக வலிமையான கொற்றவை எனும் தெய்வத்தின் மகனாகக் கருதப்பட்டு வருகிறான். முருகன் ஒரு குழுமத்தின் தலைவனாக இருந்து பெரும் வெற்றிகளை ஈட்டித் தெய்வத்தன்மைக்கு உயர்த்தப்பட்டு நாளடைவில் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கலாம். சமூக அடிப்படையில் மலையைத்
    தெய்வமாகவும் முருகனை மலைவாழ் இறையாகவும் வழிபட்டிருக்கலாம் என்றும் கருத முடிகின்றது. மக்களின் வாழ்வு முதன்முதற் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது அறிஞர் கருத்து.
    விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ; என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகின்றார்.

     ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் படைக்கப்பட்டிருக்கலாம் என்பர். ’குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பது மக்களின் நம்பிக்கை. குறிஞ்சிப் பகுதிவாழ் குமரனே முருகன் என்பது மானுடவியலாளரின் ஆய்வாளர்களின் கருத்து. இதன் அடிப்படையில் இவனே தலைவனாய் இருந்து காப்பவன்!

     பன்னிருதோள்களும், பன்னிரு உயிர்கள் பதினெட்டுக் கரங்களும் பதினெட்டு மெய்கள். ஆறு முகங்களும் ஆறு இன எழுத்துகள். அவனது கூரிய வடிவேல் ஆயுத எழுத்து. ;முருகு; என்ற சொல்லில் ;மு; மெல்லினம் ;ரு; இடையினம் ;கு; வல்லினம் என்ற சுவையான தகவல்களையும் வழங்குகின்றனர் தமிழறிஞர்கள். இவனே தமிழ்க் கடவுள். முருகு என்பதன் பொருள் அழகு. அழகானவன் முருகன்!

     மயிலில் முருகன் ஏறியதற்கு கூறப்படும் ஒரு காரணம்: மவுரியர் என்பதன் பொருள் மயில். மவுரியர்களின் சின்னம், மயில். ஆக மவுரியர்கள் முருகனை மயில் மேல் ஏற்றியதில் வியப்பு இல்லை. மவுரியர்களுக்குப் பின் வந்த குசான மன்னர்களான குப்தர்கள் காலத்திலும் முருக வழிபாடு, வட இந்தியாவில் பிரதானமாக இருந்தது.

     கிபி 150ஆம் ஆண்டு காலகட்டத்தில் குசான மன்னன், குவிசகன் அச்சிட்ட தங்க நாணயத்தில், ;ஸ்கந்த கொமானோ பிசாகோ; (விசாகோ) என கந்தனும், வேலேந்திய விசாகனும் இரட்டைக்
    கடவுளராக நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. ஆக கந்தனின் ஒரு வடிவமே விசாகன் அல்லது தனித் தெய்வமாக வழிபடப்பட்டு பின்னாளில் கந்தனுடன் இணைந்த வடிவமாக விசாகனைக்
    கொள்ளலாம். குப்தர் அரசவைப் புலவரான காளிதாசனின், குமார சம்பவம், முருகனின் வரலாறை நூலாக எழுதி அவனுக்கு அழியாப் புகழ் தேடிக் கொடுத்தான். ஆக இவர்கள் காலத்திற்கு முந்தைய காலத்தின் வரலாறுகளையும் சேர்த்தே காவியம் படைத்திருப்பார்கள்
    என்பது தெளிவு.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 39

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறப்புலி நாயனார்

    “சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனாரால் போற்றப்படுகின்ற சிறப்புலி நாயனார் காவிரியாறு பாய்ந்தோடும் சோழ நாட்டின் பழமையான திருவாக்கூர் திருத்தலத்தில் வேதம் போற்றும் அந்தணர் மரபில் அவதரித்தவர்.  சேக்கிழார் பெருமானால் வள்ளலார் என்று போற்றிப் புகழப்படும் மிகச் சிறந்த வள்ளன்மையுடன் விளங்கிய சிறப்புலியார் தன்னிடம் உள்ளதனைத்தும் சிவபெருமான் அளித்தது என்று எண்ணி அடியவர்கள் கேட்கும் முன்னமே அவர்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளித்து மகிழ்பவர்.

    பொன்னி நீர் நாட்டின் நீடும்

      பொற்பதி புவனத்து உள்ளோர்

    இன்மையால் இரந்து சென்றோர்க்கு

      இல்லை என்னாதே ஈயும்

    தன்மையார் என்று நன்மை

      சார்ந்த வேதியரைச் சண்பை

    மன்னனார் அருளிச்செய்த மறைத்

      திருவாக்கூர் ஆக்கூர்

    சிவனடியார்களை உபசரிப்பதைத் தவிர வேறு சிந்தனையும் பற்றும் அற்றவராக இருந்தார். இளவயதிலிருந்தே சிவபெருமான் மீது அதீத பக்தியும் அன்பும் கொண்டிருந்தவர், அன்றாடம் ஐந்தெழுத்து மந்திரத்தை முக்காலமும் நியமமாக ஓதி வேள்விகளைச் சிவாகம முறைப்படி நடத்தியும் மகிழ்வுற்றார். திருவாக்கூர் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீசுவரை அனுதினமும் வழிபட்டு வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். இடியின் ஓசையையும் மூழ்கடிக்கும் வேதங்களின் ஒலியால் நிறைந்திருந்த திருவாக்கூர் நகரம்,  மாயவரத்திலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

    சிவனடியார்களின் மீது பேரன்பு கொண்ட சிறப்புலி நாயனார் நீறணிந்த அடியார்களைக் கண்டதும் அன்புடன் அவர்களை வணங்கி திருவமுது படைத்து மகிழ்வார். ஈடு இணையற்ற அன்பினாலும் விருந்தோம்பலினாலும் மக்களால் பெரிதும் போற்றப்படார்.

    இறையருளால் ஒரு சமயம், சிறப்புலி நாயனார் ஆயிரம் அடியார்களுக்கு திருவமுது படைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது அடியார்கள் வந்துவிட்ட நிலையில், இன்னும் ஒரு அடியார் வரவேண்டுமே என மன வேதனை அடைந்தார். திருவாக்கூரில் கோவில் கொண்டிருக்கும் தான்தோன்றிநாதரை மனமுருக வேண்டியபோது, சிவபெருமான் தாமே சிவனடியார் வேடம் பூண்டு சிறப்புலி நாயனாரின் இல்லத்தில் நடக்கும் திருவமுதை ஏற்க வந்தார். அவரை பேரன்புடன் வரவேற்று  திருவமுது செய்வித்த சிறப்புலியாருக்கு மட்டுமின்றி சிவபெருமான் அங்கிருந்தோர் அனைவருக்கும் திருக்காட்சி அருளினார். இதனால் திருவாக்கூர் தான்தோன்றீசுவரருக்கு “ஆயிரத்தில் ஒருவர்” என்ற திருப்பெயரும் உண்டு. சிவனடியார் திருத்தொண்டில் சிறந்து விளங்கிய சிறப்புலி நாயனார் இறுதியில் பேரின்பமான வீடுபேற்றினை அடைந்தார்.

    திருவாக்கூர் கோயில் மகாமண்டபத்தில் சிறப்புலி நாயனாருக்குத் தனி சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு நோக்கிய நிலையில் சிறப்புலி நாயனாருக்கு திருக்காட்சி அளித்த மூர்த்தியாகிய ஆயிரத்தில் ஒருவர் சன்னிதியும் உள்ளது.

    சிறப்புலி நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

    உலகிலேயே சிறந்தது ஈதல் எனும் அறம் என்பார் ஔவை. கொடுப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், கொடுக்க மனம் இல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் ஔவையார் விளக்குகிறார். அடியவர்கள் எப்போதும் தன்னால் இயன்றவரை அனைவருக்கும் உதவுபவர்கள். தங்கள் உடைமைகளையும், தங்களையுமே பிறருக்காக அளித்து மகிழும் வள்ளன்மை கொண்டவர்கள். சிறப்புலி நாயனாரும் அடியவரிடத்திலும் ஆண்டவனிடத்திலும் அளவிட முடியாத பக்தியுடன் பலத் திருத்தொண்டுகள் புரிந்தார். பக்தியில் முதற்படி தம்மிடம் உள்ளதை பிறருக்கு மனமுவந்து கொடுப்பது என்பதற்கு ஆதாரமாக சிறப்புலியார் தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லாம் மாரி போல வாரி வழங்கும் தன்மையுடையவராக இருந்தார்.

    ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த

      போது அடியில் தாழ்ந்து

    மூளும் ஆதரவு பொங்க

      முன்பு நின்று இனிய கூறி

    நாளும் நல் அமுதம் ஊட்டி

      நயந்தன எல்லாம் நல்கி

    நீளும் இன்பத்துள் தங்கி

      நிதிமழை மாரி போன்றார்.

    திருஞான சம்பந்தர் பெருமான் தமது தேவாரப் பதிகத்தில், “இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் வாழும் மக்கள்” என்கிறார்.

    அக்கிருந்த ஆரமும்

      ஆடரவும் ஆமையும்

    தொக்கிருந்த மார்பினான்

      தோலுடையான் வெண்ணீற்றான்

    புக்கிருந்த தொல்கோயில்

      பொய்யிலா மெய்ந்நெறிக்கே

    தக்கிருந்தார் ஆக்கூரில்

      தான்தோன்றி மாடமே.

     

    நன்மையான் நாரணனும்நான்முகனும் காண்புஅரிய

    தொன்மையான்தோற்றம்கேடு இல்லாதான் தொல்கோயில்,

    இன்மையால் சென்றுஇரந்தார்க்கு இல்லைஎன்னாது ஈந்துஉவக்கும்

    தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

     

    சிறப்புலி நாயனார் அன்றாடம் எம்பெருமானின் அடியார்களுக்கு வேண்டுவனவற்றையெல்லாம் அளித்து தொண்டாற்றி வந்ததால், சிறப்புலி நாயனாரின் அறத்தினால் உளம் மகிழ்ந்து, ஆயிரமாவது அடியாராக சிவபெருமானே நேரில் வந்து அவர் அளித்த திருவமுதை ஏற்றுக்கொண்டார். திருவாக்கூர் கோயில் இந்த நிகழ்வுக்குச் சான்றாக விளங்குகின்றது. இங்கு இறைவன், ஆயிரத்தில் ஒருவர் என்று போற்றப்படுகிறார்.

    திருச்சிற்றம்பலம்

     

     

    Share
  • திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும்!

    திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அரனாரின் திருக்குமரன் அருளாலே அருணகிரி
    அமுதமாய் திருப்புகழை அள்ளியே வழங்கினார்
    அள்ளியே வழங்கிய அமுதத் திருப்புகழை
    தமிழன்னை மனமேற்றித் தானணைத்துக் கொண்டாள்

    சம்பந்தப் பெருமானே சந்தத்தின் தந்தை
    அவர் வழியைப் பற்றினார் அருணகிரிநாதர்
    அன்னைத் தமிழன்னை அகமகிழச் சந்தத்தை
    அள்ளி அள்ளி வழங்கினார் அருணகிரிநாதர்

    இத்தனை சந்தங்கள் எப்படித்தான் வந்தனவோ
    எண்ணியே பார்த்திட்டால் வியப்புத்தான் எழுகிறது
    பக்தியுடன் அருணகிரி பாடிவைத்த அனைத்தும்
    சித்தமதைத் திருத்த வந்த தத்துவங்களாகும்

    அருணகிரி வாழ்விலே அளவிலாத் துன்பம்
    துன்பத்தைத் தாங்காமல் துடித்தாரே அருணகிரி
    மண்ணைவிட்டு மறைந்துவிட மலையுச்சி நின்றார்
    விழுகின்ற வேளையிலே வேலவனே தாங்கினார்

    தாங்கி நின்றவேலவன் தமிழ்பாடு என்றார்
    முத்தைத் தருவே முதலாக வந்தது
    திருமுருகன் தாங்கியதால் திருப்புகழே மலர்ந்தது
    தமிழன்னை செய்தவத்தால் சந்தக்கவி நிறைந்தது

    திருப்புகழைப் பாடினால் செய்தவினை அகலும்
    திருப்புகழைப் பாடினால் சிறப்பாக வாழ்ந்திடலாம்
    திருமுருகன் ஓடிவந்து திருவருளைத் தந்திடுவான்
    தினமுமே திருப்புகழைப் பாடிடுவோம் வாருங்கள்

    துன்பமும் துயரமும் சொல்லாமல் ஓடிவிடும்
    துரத்துகின்ற வல்வினைகள் பொடிப்பொடியாய் ஆகிவிடும்
    திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும்
    திருத்தமுடன் வாழுதற்குத் திருப்புகழைப் படித்திடுவோம் !

    Share
  • லண்டனிலே கம்பன் விழா (ஜூன் 27 & 28, 2026)

    லண்டனிலே கம்பன் விழா (ஜூன் 27 & 28, 2026)

    அன்பினிய வல்லமை வாசகர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இங்கிலாந்திலிருந்து சக்தி சக்திதாசன்.

    நானிங்கு நலமே நீங்களும் அதேபோல நலமுடன், மகிழ்வாக இருப்பீர்கள் என்பதே என் நம்பிக்கை.

    புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழின் பால் இருக்கும் அதீத மொழியன்பு பற்றிய பகிர்வே இது.

    ஆம் கடந்த ஜூன் 27, 28ம் தேதிகளில் இங்கிலாந்தில் அல்பேர்ட்டன் (Alperton)  எனும் இடத்தில் நிகழ்ந்த மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற “கம்பன் விழா ” பற்றிய பகிர்வே இது.

    தமிழ் இலக்கியத்தின் உயரிய மலைச்சிகரமாக விளங்கும் கம்பன், தனது “கம்பராமாயணம்” மூலம் தமிழுக்கு அளித்த செழுமை அளவிட முடியாதது.

    வால்மீகியின் ஆதாரத்தைத் தமிழ்மொழியின் இனிமையாலும் கற்பனையின் வளமாலும் புதுப்பித்து, தமிழ் மக்களின் உள்ளங்களில் நிரந்தர இடம்பிடித்தவர் கம்பன்.

    அவரது கவித்திறன் வெறும் இலக்கியச் சிறப்பாக மட்டுமல்லாது, ஆன்மீக ஆழமும் மனிதநேய சிந்தனைகளும் நிறைந்ததாகும்.

    ஒவ்வொரு அடியிலும் ஒலிக்கும் இசைநயம், சொல் வளம், உவமைச் செல்வம் ஆகியவை கம்பனை உலகப் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராக உயர்த்துகின்றன.

    இவ்வாறான கம்பனின் பெருமையையும், அவரது இலக்கியப் பாரம்பரியத்தையும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உயிர்ப்பித்து நிலைநிறுத்தும் முயற்சியாகவே இத்தகைய கம்பன் விழாக்கள் விளங்குகின்றன என்பது பெருமிதம் அளிக்கிறது.

    இலண்டனில் இயங்கும் “அறிவு அறக்கட்டளை” அமைப்பின் கீழ் ஈழத்தின் கம்பன் கழக புகழ், ஆன்மீக அறிவுசார் அறிஞர் “கம்பவாரிதி ஜெயராஜ்” அவர்களின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்டது இலண்டன் கம்பன் கழக கட்டமைப்பு.

    அவரின் வழி காட்டுதலில் இவ்விழா மூன்றாவது ஆண்டாக நிகழப்பெற்றது.

    இம்முறை விழாவிற்கு தவிர்க்க முடியாத காரணங்களினால் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களினால் கலந்து கொள்ள முடியவில்லை.

    இருப்பினும் விழா அவரது வழிகாட்டுதலிலும் ஆசிகளுடனுமே நடைபெற்றது என்பதை விழா அமைப்பாளர்களின் உரைகளின் மூலம் அறிய முடிந்தது.

    இம்முறையும் விழா சிறப்பு நிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட நான்கு பேரை கெளரவ விருதளித்து பெருமைப்படுத்தியது விழாவுக்கு மேலும் சிறப்பு ஏற்ப்டுத்தியது.

    ஈழத்தின் முன்னோடி ஊடகவியாளாலராக எமக்கெல்லா உதாரணமாகத் திகழும் ஊடகவியலாளர் “ஈழநாடு மாலி” என்று அன்போடு அழைக்கப்படும் அண்ணன் மகாலிங்கசிவம் முதலாவதாக கெளரவிக்கப்பட்டு “சமூகசிரோன்மணி” என்ற பட்டம் அளிக்கப்பட்டது உள்ளத்துக்கு இதமளித்தது.

    நான் கல்வி பயின்ற எனது பழைய பாடசாலை யாழ் பரியோவான் கல்லூரியின் (Jaffna St. Johns College) எனது முன்னாள் ஆசிரியர் அமரர் கனகராஜா அவர்களின் மைந்தனும் இன்றைய இங்கிலாந்து லெஸ்டர் பல்கலைக்கழக துணைவேந்தர் நிஷான் கனகராஜா.

    எத்தனையோ தசாப்தங்களுக்கு பின்பு இங்கிலாந்து அரசின் கெளரவமான “சார்” பட்டம் பெற்ற இலங்கைத் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது இவருக்கு இங்கிலாந்து அரசர் “சார்ள்ஸ்” அவர்களால் 2025 ம் ஆண்டு வழங்கப்பட்டது.

    இவர் இலண்டன் கம்பன் விழாவினரால் “ஞானசாகரர்” பட்டம் வழங்கி கெரவிக்கப்பட்டார்.

    தொடர்ந்து ஈழத்திலே பிறந்து  தந்தை மூலம் இசை பயின்று இந்தியாவில் இசை வித்துவான் அமரர் கல்யாணராமன் அவர்களின் மாணவியும் துணைவியுமாகிய திருமதி பூஷணி கல்யாணராமன் அம்மா அவர்கள் “இசைப்பேரரசி” பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

    நான்காவதாக இலக்கிய ஆர்வலர், சமூக சேவையாளர், இலண்டன் ஐயப்பன் கோயில் அறங்காவலர் திரு. மீ. இராஜகோபாலன் அவர்களின் சமூகசேவை அர்ப்பணிப்புக்காக “சமூகசிரோன்மணி” பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

    பல அருமையான நிகழ்ச்சிகள் இரண்டு தினங்களும் அமைப்பாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு விமரிசையாக நிகழ்ந்தது.

    முதலாம் நாளான 27ம் தேதி, முதல் அமர்வில் அரங்கில் நாளைய தலைமுறை தமிழ் பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்ள உதவும் முகமாக “இளையோர் அரங்கம்” நிகழ்ந்தது.

    இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கியவிடயம் இந்நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தேன் தமிழை நாவில் கொண்டு சுவைபட பேசும் தம்பி சிவராஜா விசாகன் பணியாற்றியதே!

    இது இனிவரும் எம் இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத செயலாகக் காண்கிறேன்.

    இந்நிகழ்வில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் கடல்கடந்து வந்திருந்தார்கள்.

    தமிழகத்திலிருந்து இலக்கியச்சுடர் இராமலிங்கம், தமிழ்ச்சுடர் தாமல் கோ. சரவணன் மற்றும் ஈழத்திலிருந்து செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ஐயா, பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் இவர்களோடு இவர்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து பேசும் வல்லவரான நன் லண்டன் கோமதி சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    27ம்தேதி முதல் அமர்வில், இளையோர் அரங்கம், தாமல் கோ. சரவணன் தலைமையிலும் பட்டிமன்றம் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தலைமையிலும் நடைபெற்றது.

    இரண்டாம் அமர்வில் வழக்காடு மன்றம் இலக்கியச்சுடர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    இரண்டாம் நாள் 28.06.2026 முதல் அமர்வில் சிந்தனை அரங்கம் பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் தலைமையிலும், இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்களின் தனியுரையும் நிகழ்ந்தது.

    இரண்டாம் அமர்வில் சைவப்புலவர் சிவானந்தன் அவர்களின் தனியுரையும், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ஐயா அவர்களின் தனியுரையும் இடம்பெற்றது.

    அத்தோடு இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்களின் தலைமையில் வழக்காடு மன்றம் நிகழ்ந்தது.

    மிகவும் இனிமையாக நிகழ்ந்த இம்மனநிறைவான நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத காரணத்தினால் இரண்டாம் நாளே என்னால் கலந்து கொள்ள முடிந்தது.

    பலகாலமாக சந்திக்காத பல பழைய இலக்கிய ஆர்வல உறவுகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

    இரண்டு நாட்களும் சிற்றுண்டியோடு பானங்களும் இரவு போசனமும் வழங்கப்பட்டது.

    இந்நேரத்தில் இவ்விழா சிறப்புற நிகழ பொருளுதவி, சரீர உதவி வழங்கியவர்களை நன்றியோடு நினைவுகூர்வது எமது கடமை.

    இது போன்ற நிகழ்வுகள் புலம்பெயர் நிலங்களில் அந்நாட்டவரின் வசதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வது தமிழின் பெருமைக்கு மேலுமவிழா  பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

    இந்த நிகழ்வினைக் குறித்து என்பாடல் வரிகளில் செயற்கை நுண்ணறிவின் உதவியோடு உருவாக்கப்பட்ட பாடலை என் காணிக்கையாகவும் நன்றிகளுடனும் சமர்பித்திருக்கிறேன்.

    கம்பனைப் போற்றும் தமிழன்பன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே!

    மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    திருவாத வூரார் சிறப்பினை அறிந்து
    அரசனே நாடி அமைச்சர் ஆக்கினான்
    அமைச்சராய் இருந்தார் அலங்காரம் வெறுத்தார்
    அவரது அகமோ புனிதமாய் இருந்தது

    ஆடம் பரங்கள் அரசுச் சுகங்கள்
    அமைச்சராய் இருந்தும் அகமேற்க வில்லை
    ஆண்டவன் நினைப்பு ஆன்மீகச் சிந்தனை
    திருவாத வூரரின் சிந்தையை நிறைத்தது

    பொன்னையும் பொருளையும்  பொருட்டென எண்ணா
    மன்னனின் அவையில் இருந்தார் அவரும்
    மன்னனின் மனத்தின் மாறு பாட்டினால்
    அமைச்சராய் இருந்தவர் அல்லற் பட்டார்

    அல்லல் பட்டதை ஆண்டவன் பொறுக்கா
    அமைச்சரைக் காத்து அரசனை மாற்றினார்
    வாதவூர் பிறந்தார் பரமனைக் கண்டார்
    மனதில் உள்ளதை மாணிக்கம் ஆக்கினார்

    மனிதராய் பிறந்த மாணிக்க வாசகர்
    சொல்லச் சொல்ல சொக்கன் எழுதினார்
    சொக்கனே சொக்கினார் சுந்தரத் தமிழில்
    செந்தமிழ் தேனாய் திருவாசகம் மலர்ந்தது

    உருகா மனத்தையும் உருகிட  வைக்கும்
    திரு வாசகத்தைத் தேனே என்போம்
    உருவாய் அருவாய்  இருக்கும் இறைவன்
    உணர்வாய் இருப்பான் திரு வாசகத்தில்

    மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே
    அழுதார் தொழுதார் அவனடி பற்றினார்
    அழுகை அனைத்தும் அருந்தமிழ் ஆனது
    ஆனது அனைத்தும் தத்துவக் குவியலே

    அறுபத்து மூன்று நாயன் மாரும்
    அரனது அருளினைப் பெற்றவர் ஆவார்
    திரு வாசகத்தேனை ஈந்தவர் மட்டும்
    சிவனது பாதத்தின் அருகிலே அமர்ந்தார்

    உருவில் ஆணாய் உணர்வில் பெண்ணாய்
    திருவாசக மனைத்தும் செப்பினார் வாசகர்
    அதனால் உருக்கம் அதனால் இரக்கம்
    அனைத்தும் வாசகர் தமிழாய் மலர்ந்தது

    எண்ணிப் பார்த்தால் எல்லாம் சிவனருள்
    எண்ணிப் பார்த்தால் எல்லாம் சிவமே
    எண்ணில் அடங்கா எத்தனை தத்துவம்
    தத்துவம் அனைத்தும் தளையெலாம் போக்கும்  !

    Share
  • புதிய அரசிற்கு நம்பிக்கையின் பாராட்டு விழா!

    இன்று ஈரோட்டில், புதிதாக அரசு அமைத்துள்ள, த.வெ.க கட்சியின் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு விஜய் பாலாஜி அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் திரு கே.கே. ஆனந்த மோகன் அவர்களுக்கும், ஈரோட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு பாராட்டு விழா, பல்வேறு அமைப்புகளின் மூலம் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.
    இருவரும் மிக யதார்த்தமாக, இயல்பான உரை வழங்கியது மக்களிடையே மிகப்பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றது. மக்கள் முன்னிலையில் தாங்கள் எக்காரணம் கொண்டும் எந்த வகையிலும் 1 உரூபாய் கூட கையூட்டு பெறாமல், நேர்மையான முறையில் மக்கள் பணி ஆற்றப்போவதாக உறுதி மொழி அளித்தார்கள். தங்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் தங்களுடைய ஆட்சி நிரந்தரமாக இன்னும் பல காலங்களுக்கு தங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆசிகளுடன் இந்திய அளவில் தொடர உறுதி கொண்டுள்ளதாகவும் பேசி அசத்தியுள்ளனர். இது உண்மையாக நடந்தால் மகிழ்ச்சிதான் என்ற நம்பிக்கையுடன் மக்கள் கைதட்டி வரவேற்றனர். ஈரோட்டில் கைத்தறித்துறையிலும், துணிகள் தயாரிப்பு, சாயக்கழிவுகள் என்று பலப்பல பிரச்சனைகள் தீர்வு காணப்பட வேண்டியுள்ளன . மிகப்பெரிய நம்பிக்கைகளுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம். ஈரோடு மாவட்டத் தமிழியக்கத்தின் சார்பாக, மாவட்டச் செயலாளர் என்ற முறையிலும், வல்லமை இணைய இதழ் சார்பாகவும், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை சார்பாகவும் நம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டோம். நலமே விளைக என்ற நம்பிக்கையுடன் நகர்கிறோம் ……

    Share
  • காதலிக்க நேரமுண்டு (சிறுகதை)

    காதலிக்க நேரமுண்டு (சிறுகதை)

    செ. கோட்டாளம்

    பேருந்து வந்தது. ஏறிக்கொண்டோம். அவன் நேராக ஒரு அழகான பெண்ணருகில் போய் நின்றுகொண்டான். பேருந்து நகர நகர அவள்மீது சரிந்து உரசத்தொடங்கினான். அவள் திரும்பிப்பார்த்து முறைத்தாலும் அவன் கவலைப்படவில்லை. அவள் இறங்கியதும் வேறொருத்தியின் அருகில் நின்று தன் வேலையை தொடர்ந்தான்.

    எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. நான் அவனுக்கு நண்பன் என்று காட்டிக்கொள்ளவே எனக்கு வெட்கமாயிருந்தது. சற்று விலகி வேறெங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். இருக்கை கிடைத்ததும் அமர்ந்தேன். அவனருகில் இருக்கை கிடைத்தாலும் வேறு யாரையோ அமரவிட்டு அவன் அவளருகிலே நின்றுகொண்டான்.

    பேருந்திலிருந்து நாங்கள் இறங்கியதும், ‘என்னடா, இப்படி மோசமாக நடந்துகொள்கிறாய்? அவள் வைதாளே, அதுவும் உனக்கு உறைக்கவில்லையா?’ என்றேன்.

    அவன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்னை கேலிசெய்தான். ’நீ என்ன ஆண்பிள்ளை? உனக்கு ஏன் இந்த ஆசைகளெல்லாம் வரவில்லை?’ என்றான்.

    அவன் இப்படிக்கேட்டதும் நான் வாயடைத்துப்போனேன். ஆம், மற்ற இளம்பையன்களுக்கு பெண்கள்மீது ஆசை ஏற்படுவதுபோல் எனக்கு வரவில்லை. சொல்லவியலாத ஒரு சிக்கல் என் மனத்தில் இருந்து வாட்டியது. நண்பனுக்கு ஏதோ விடையளித்து சமாளித்துவிட்டேன். எனினும் என் மனம் அலைபாய்ந்தது.

    நல்லவேளை நான் வந்தபோது அப்பா வீட்டில் இல்லை. என்னைப்பற்றி குறைசொல்வதற்கும் கேள்விகேட்பதற்கும் திட்டுவதற்கும் ஏதாவது காரணம் அவருக்கு எப்போதும் இருக்கும். முகங்கழுவி சமையலறைக்கு சென்று அம்மாவிடம் சற்று கொஞ்சி காப்பியை வாங்கி குடித்தேன். அம்மாவுக்கு நான் எப்போதும் செல்லப்பிள்ளையே. அம்மா மட்டும் இல்லாவிட்டால் அப்பா என்னை எப்போதோ கொன்று தின்றிருப்பார்.

    என் தங்கை வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தாள். அருகில் சென்று பார்த்து தவறுகளை சுட்டியும் திட்டியும் அண்ணனின் ஆதிக்கத்தை நிலைநாட்டினேன். எனக்கு சிறுவயதில் அம்மாவே பாடஞ்சொல்லிக்கொடுப்பதுண்டு. அன்னையின் மடியில் அமர்ந்து ஆனா ஆவன்னா வாசித்ததும் கூட்டல், கழித்தல், இன்ன பிற கணக்குகளை போட்டதும் என்றுமே இனிக்கும் நினைவுகள். அதனாலே எனக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

    உயர்நிலைப்பள்ளியிலும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை வாங்கியபோது அம்மாவிடமே காட்டி மகிழ்ந்ததுண்டு. அம்மாவிடமிருந்து பாராட்டை பெறுவதில் எப்போதுமே ஒரு தனி இன்பம். அம்மா அன்புடன் உச்சந்தலையில் முத்தமிடுவதற்கு உலகில் எதுவுமே ஈடாகாது. அம்மாவை மகிழ்விப்பதற்காகவே நான் எதையும் செய்தேன். இது எல்லாருக்கும் இயல்பானதாயிருக்கலாம். எனினும் எனக்குக்கிடைத்த அம்மா ஒரு தனித்துவமான அம்மா என்பதில் எனக்கு ஐயமேயில்லை. என் அம்மாவுக்கு உலகில் யாருமே ஈடாகவியலாது.

    அம்மா எல்லாரிடமும் அன்பாக இருப்பார். என்னையும் அப்பாவையும் தங்கையையும் மிகவும் பரிவுடன் பார்த்துக்கொள்வார். சில நேரங்களில் அம்மா அப்பாவுடனும் தங்கையுடனும் சிரிப்பும் கும்மாளமுமாக பேசுவது எனக்கு பொறாமையாயிருக்கும். அம்மா எனக்கு மட்டுமே வேண்டும் என்ற ஆசை எழும். சின்னஞ்சிறு வயதில் அம்மாவை கட்டிப்பிடித்து அணைத்தது என் மனத்தில் பசுமையாக நினைவிருக்கிறது. இப்போதெல்லாம் நான் பெரியவனாகிவிட்டேனென்று அம்மா தடுத்துவிட்டார்.

    இப்போதும் காப்பி குடித்துக்கொண்டே அம்மாவை மறைமுகமாக பார்த்துக்கொண்டிருந்தேன். பல ஆண்டுகளாகவே எனக்கு இந்த பழக்கம் இருந்துவருகிறது. அதாவது அம்மாவே எனக்கு மிகவும் கவர்ச்சியாக தோன்றினார். வேறு எந்தப்பெண்ணும் அழகாகத்தோன்றவில்லை.

    அதே நேரத்தில் எனக்குள் ஒரு குற்றவுணர்வும் தோன்றி என் கண்களை வேறுபக்கம் திருப்பச்செய்தது. எண்ணங்களையும் திசைதிருப்ப முயன்றேன். எனக்குள் பல ஆண்டுகளாக ஒரு மனப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது. என் மனத்தில் கீழ்த்தரமான எண்ணங்கள் எழுவதாக உணர்ந்தேன். ஆனால் அவற்றை மாற்ற இயலாமல் தவித்தேன்.

    சிறுவயதில் அம்மாவின் அன்புப்பேச்சும் அணைப்புமே என் மனத்துக்கு இனிமையூட்டின. பிறகு தனிமையாயிருந்தபோது அவற்றை எண்ணி மனத்துக்குள்ளே திளைத்திருப்பது வழக்கமாயிற்று. நான் வளர வளர அம்மாவின் உடலழகையும் கண்டு களிக்கத்தொடங்கினேன்.

    அம்மாவுடன் பேச்சுக்கொடுத்தபடியே காப்பியை மெதுவாக குடித்துக்கொண்டிருந்தேன். அம்மா இரவுணவுக்காக சமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நான் பின்பக்கமிருந்து வெட்கமில்லாமல் பார்த்தேன். வெட்கமில்லாவிட்டாலும் அம்மாவை அப்படி பார்ப்பதும் எண்ணுவதும் தவறு என்ற ஒரு குறுகுறுப்பு மனத்துள் இருந்துகொண்டேயிருந்தது.

    அந்த வயதில் அம்மா அவ்வளவு அழகாகவும் அன்பாகவும் கவர்ச்சியாகவும் இருந்தால் தன் இளம் வயதில் எப்படியிருந்திருப்பார் என்று எண்ணிப்பார்த்தேன். உடனே காப்பிக்குவளையை வைத்துவிட்டு நான் படிக்கப்போகிறேன் என்றும் யாரும் தொல்லை தரக்கூடாது என்றும் அறிவித்துவிட்டு என் அறைக்குள் வந்து தாழிட்டுக்கொண்டேன்.

    எனக்கு ஏன் மற்றப்பெண்களின்மீது ஆசை வராமல் அம்மாவையே திருட்டுத்தனமாக மனத்துள் எண்ணும் ஆசை வருகிறது என்பது விளங்கவில்லை. யாருக்கும் தெரிந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்! அம்மாவுக்கு தெரிந்தால்? ஐயோ, வேண்டாம். அம்மாவின் முன்னிலையில் மிகவும் நல்ல பிள்ளையாக நடித்துவந்தேன். ஒன்றுமறியாத சிறுபிள்ளையாகவே அம்மா என்னை எண்ணிக்கொண்டிருக்கிறார். மற்றப்பையன்களைப்போல் பெண்களின்பின் நான் அலைவதில்லை என்பதில் அம்மாவுக்கு பெருமை.

    எனக்கு இருக்கும் உணர்வுகள் மற்றவர்களுக்கும் இருக்குமா, எனக்கு மட்டுந்தானா? எனக்கு மட்டுமாயிருந்தால் இது ஒரு மனநோயன்றோ! ஆம், நான் இயல்பானவன் அல்லேன். என்னில் ஏதோ தவறு இருக்கிறது. நான் மற்றவர்களைப்போல் இல்லை. எனக்கு ஏதோ மனக்கோளாறே. இதை யாரிடம் போய் சொல்வேன்! எங்கிருந்து உதவி பெறுவேன்! யாரிடமும் சொன்னால் வெட்கக்கேடு! கூகிளாண்டவரிடம் முறையிடுவதன்றி வேறு வழியில்லை.

    அம்மாமீது ஆசை வருவதுபற்றி கூகிளிட்டு தேடினேன். என்ன வியப்பு! கூகிளாண்டவரிடம் எல்லாவற்றுக்கும் விடை இருப்பதை நான் முன்பே அறிவேன். ஆனால் எனக்கு இருப்பது ஒரு தனிப்பட்ட நிலைமை என்று எண்ணியிருந்தேன். இது மருத்துவர்கள் நனகறிந்த ஒரு நிலைமை என்று கூகிளாண்டவர் சொன்னார். இதற்குப்பெயர் தாயீர்ப்புணர்தொகுப்பு[1] என்பதாம். அப்படியெனில் இது மற்றவர்களுக்கும் இருந்திருக்கிறது என்பதை அறிந்து சற்று நிம்மதியடைந்தேன். இதன் அறிகுறிகள் ஓரளவுக்கு எல்லாருக்கும் இருப்பது இயல்பேயாம்.

    என் நிலையிலிருக்கும் ஒரு பையன் கேட்ட கேள்விக்கு உளவிய வல்லுநரின் விடை[2]யை கண்டு சற்று ஆறுதலைடைந்தேன். உண்மையில் இந்தப்பையன் என்னைவிட மோசமான நிலையிலிருந்தான். அவன் சுவரில் ஓட்டைபோட்டு அம்மா குளிக்கும்போது பார்ப்பானாம். சீ, இப்படியும் இருக்கிறார்களே! இந்தப்பையனுக்கு உளவியலர் சொன்ன மறுமொழியின் ஒரு பகுதி: “பல பையன்கள் சிறுவயதில் தம் அம்மாமாரிடம் கவரப்படுகிறார்கள். பலர் இந்த ஈர்ப்பை அமுக்கிவிடுகிறார்கள். பருவமடைந்தபின் இது மறைந்துவிடுகிறது. சிலருக்கு வளர்ந்தபின் அம்மாவை காமக்கோணத்தில் எண்ணிப்பார்ப்பது பிடிக்காமல் போய்விடும். ஆனால் ஒரு சிலருக்கு வளர்ந்தபின்னும் இது தொடர்வது காம ஈர்ப்பின் ஒரு இயல்பான வடிவமே. அம்மாமீது காம ஈர்ப்பு ஏற்படுவது இயல்பற்றதுமன்று, எங்கும் கேள்விப்படாததுமன்று. ஆனால் தக்க நேரத்தில் இதை எதிர்கொள்ளாமல் விட்டுவிட்டால், எதிர்காலத்தில் நிலைப்பற்ற மணவுறவுகள், இப்போதைய உங்கள் நடத்தையைப்பற்றிய குற்றவுணர்வுகள் போன்ற கடும் பின்விளைவுகள் ஏற்படலாம். ஈர்ப்பு ஏற்கக்கூடியதெனினும் உங்கள் நடத்தை ஏற்கக்கூடியதன்று,” என்பது. இவ்வாறு சொல்லி சுவரின் ஓட்டையை மூடிவிடும்படி அறிவுரையையும் வழங்குகிறார். நல்லவேளை! என் எண்ணங்களெல்லாம் மனத்தில் மட்டுமே. நான் இவனைப்போல் செயலில் இறங்கவில்லை.

    கூகிளாண்டவர் மேலும் தாயீர்ப்புணர்தொகுப்பு[3] என்ற மனநோயைப்பற்றிய ஆங்கில விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காட்டியருளினார். தாயீர்ப்பு கடுமையான மனநோயாகவும் வளரக்கூடுமாம். மேலும் தாயை தன் காதலியாகவும் தந்தையை காதலுக்கு போட்டியாகவும் எண்ணுவதால் தந்தைமீது வெறுப்பும் அச்சமும் ஏற்பட்டு அவரை கொல்ல விரும்புமளவுக்கு செல்லலாமாம். இதையெல்லாம் படித்தபோது எனக்கு சிரிப்பாக வந்தது. உலகில் எவ்வளவு விந்தையான மக்கள் இருக்கிறார்கள்!

    அதேநேரத்தில் என் தந்தைமீது என்னையறியாமல் எனக்கு ஏற்பட்ட வெறுப்புக்கும் அச்சத்துக்குமான காரணத்தை புரிந்துகொண்டேன். இதை உணர்ந்ததும் அவர் என்மீது வைத்திருந்த உண்மையான அன்பு நினைவுக்கு வந்தது. என்னையுமறியாமல் அவர்மனம் புண்படும்படி நடந்துகொண்டேனோ என்று சிந்தித்தேன். பரவாயில்லை; அப்படியே நடந்திருந்தாலும் அது அவரை பாதிக்காது. அவர் பெரியவர்; மனவலிமையுடைவர். குஞ்சு மிதித்து கோழி சேதமடையாது என்று ஒருமுறை அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

    எப்படியாயினும் எனக்கு அம்மாமீது இருந்த ஈர்ப்பு ஓரளவுக்கு இயல்பானது என்பதையும் விரைவில் மறைந்துவிடும் என்பதையும் புரிந்துகொண்டேன். அப்பாமீதுள்ள அச்சமும் சற்று தணிந்தது. அறியாமையே பல தொல்லைகளுக்கு காரணம் என்று எங்கோ படித்ததை நினைவுகொண்டேன். நம் உணர்ச்சிகளின் காரணங்களையும் இயல்புகளையும் புரிந்துகொள்வதே பல சிக்கல்களை தவிர்க்கிறது.

    [1] Oedipus complex
    [2] https://timesofindia.indiatimes.com/life-style/relationships/ask-the-expert/i-am-sexually-attracted-towards-my-mother/articleshow/65165181.cms, 21 திச, 2019 மீட்பெற்றது
    [3] https://en.wikipedia.org/wiki/Oedipus_complex, 21 திச, 2019 மீட்பெற்றது

    Share
  • இரகசியத்தை வெளிப்படுத்திய இதயம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    இரகசியத்தை வெளிப்படுத்திய இதயம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    கதையாசிரியர்: எட்கர் ஆலன் போ (Edgar Allan Poe [1809 – 1849]), அமெரிக்கா.

    மொழிபெயர்ப்பாளர்
    முனைவர் ப. செல்வி,
    இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர்  கலை அறிவியல் கல்லூரி,
    கோவை – 641044

    இது உண்மைதான்! ஆம், நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன், மிகவும் மோசமாகவே பாதிக்கப்பட்டிருந்தேன். ஆனால் ஏன் என் மனதின் மீதான கட்டுப்பாட்டை நான் இழந்துவிட்டதாகச் சொல்கிறீர்கள்? நான் பைத்தியம் என்று ஏன் கூறுகிறீர்கள்? என் மனதின் மீது எனக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லையா?

    நான் பைத்தியம் இல்லை என்பது தெளிவாகத் தெரியவில்லையா? உண்மையில், அந்த நோய் என் மனதையும், உணர்வுகளையும், புலன்களையும் இன்னும் வலிமையாகவும் ஆற்றல்மிக்கதாகவும் மாற்றியது. குறிப்பாக, என் கேட்கும் திறன் மிகவும் கூர்மையடைந்தது.

    முன்னெப்போதும் கேட்டிராத ஒலிகளை என்னால் கேட்க முடிந்தது.

    சொர்க்கத்திலிருந்து வந்த ஒலிகளையும் என்னால் கேட்க முடிந்தது.

    நரகத்திலிருந்து வந்த ஒலிகளையும் நான் கேட்டேன்! கேளுங்கள்! கவனியுங்கள், அது எப்படி நடந்தது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். என் மனம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள், கேட்பீர்கள். அந்த எண்ணம் முதலில் என் தலைக்குள் எப்படி நுழைந்தது என்று சொல்வது சாத்தியமற்றது. நான் செய்ததற்கு எந்தக் காரணமும் இல்லை. அந்த முதியவர் மீது எனக்கு வெறுப்பு ஏதுமில்லை; சொல்லப்போனால், நான் அவரை நேசித்தேன். அவர் எனக்கு ஒருபோதும் தீங்கு இழைத்ததில்லை. அவருடைய பணம் எனக்குத் தேவையில்லை. அது அவருடைய கண்ணால் வந்த பிரச்சனை என்று நினைக்கிறேன். அவருடைய கண் ஒரு கழுகின் கண்ணைப் போல இருந்தது; அதாவது, ஒரு விலங்கு இறக்கும் வரை காத்திருந்து, பின்னர் அதன் உடலின் மீது பாய்ந்து, அதைத் துண்டு துண்டாகக் கிழித்துச் சாப்பிடும் அந்தப் பயங்கரமான பறவைகளில் ஒன்றின் கண்ணைப் போல இருந்தது. அந்த முதியவர் தனது கழுகு போன்ற கண்களால் என்னைப் பார்க்கும்போது, ​​என் முதுகெலும்பில் ஒருவிதக் குளிரான உணர்வு ஊர்ந்து சென்றது; என் ரத்தமே குளிர்ந்து போனது போல இருந்தது. எனவே, அந்த முதியவரைக் கொன்று, அந்தக் கண்ணை என்றென்றைக்குமாக மூடிவிட வேண்டும் என்று நான் இறுதியாக முடிவு செய்தேன்! ஆக, நான் பைத்தியம் என்று நினைக்கிறீர்களா? ஒரு பைத்தியத்தால் திட்டமிட முடியாது. ஆனால் நீங்கள் என்னைப் பார்த்திருக்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் நான் அந்த முதியவரிடம் மிகவும் நட்பாகவும், அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொண்டேன்.

    ஒவ்வொரு இரவும் சுமார் பன்னிரண்டு மணிக்கு நான் மெதுவாக அவருடைய கதவைத் திறப்பேன். கதவு போதுமான அளவு திறக்கப்பட்டதும், நான் என் கையை உள்ளே விடுவேன், அதன்பிறகு என் தலையை உள்ளே நுழைப்பேன். வெளிச்சம் வெளியே தெரியாதவாறு ஒரு துணியால் மூடப்பட்ட விளக்கை நான் கையில் ஏந்தியிருந்தேன். நான் அமைதியாக அங்கே நின்றேன். பிறகு, மிகக் கவனமாக அந்தத் துணியைச் சற்று விலக்கினேன்; அதனால் ஒரு மெல்லிய ஒளிக்கீற்று மட்டும் அந்த கண்ணின் மீது விழுந்தது. ஏழு இரவுகள் — நீண்ட ஏழு இரவுகள் — ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் நான் இதைச் செய்தேன். எப்போதும் அந்தக் கண் மூடியே இருந்தது, அதனால் என் வேலையைச் செய்வது சாத்தியமில்லாமல் போனது. ஏனென்றால், நான் கொல்ல வேண்டியது அந்த முதியவரை அல்ல; அந்த கண்ணைத்தான் — அவருடைய தீய கண்ணைத்தான் — நான் அழிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு காலையிலும் நான் அவர் அறைக்குச் சென்று, கனிவான, நட்பான குரலில் அவர் எப்படித் தூங்கினார் என்று கேட்பேன். ஒவ்வொரு இரவும் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு, அவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது நான் அவரை எட்டிப் பார்ப்பதை அவரால் ஊகிக்கவே முடியவில்லை.

    எட்டாவது இரவில், கதவைத் திறக்கும்போது நான் வழக்கத்தை விட அதிக கவனத்துடன் இருந்தேன். கடிகார முட்கள் நகர்வதை விட மிக மெதுவாகவே என் கை நகர்ந்தது. முன்னெப்போதையும் விட என் சொந்த ஆற்றலை நான் அப்போது வலுவாக உணர்ந்தேன்; வெற்றி நிச்சயம் என்று எனக்குத் தோன்றியது.

    நான் அவர் கதவருகே இருப்பதை அறியாமலே அந்த முதியவர் படுத்திருந்தார். திடீரென்று அவர் படுக்கையில் அசைந்தார். நான் பயந்துவிட்டேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இல்லை. அவர் அறையில் இருள் அடர்த்தியாகவும் கும்மிருட்டாகவும் இருந்தது. கதவு திறக்கப்படுவதை அவரால் பார்க்க முடியாது என்பது எனக்குத் தெரியும். நான் மெதுவாகவும் நிதானமாகவும் கதவைத் தள்ளிக்கொண்டே இருந்தேன். என் தலையை உள்ளே நுழைத்தேன். துணியால் மூடப்பட்ட விளக்குடன் என் கையையும் உள்ளே விட்டேன். திடீரென்று அந்த முதியவர் படுக்கையில் சட்டென்று எழுந்து உட்கார்ந்து, “அங்கே யார் இருப்பது?” என்று கத்தினார்.

    நான் அப்படியே அசையாமல் நின்றேன். ஒரு மணி நேரம் முழுவதுமாக நான் நகரவே இல்லை. அவர் மீண்டும் படுக்கையில் படுக்கும் சத்தமும் எனக்குக் கேட்கவில்லை. அவர் அங்கேயே அமர்ந்து எதையோ கவனித்துக்கொண்டிருந்தார். பிறகு ஒரு சத்தம் கேட்டது — அந்த முதியவரிடமிருந்து வெளிப்பட்ட ஒரு மெல்லிய பயத்தின் அலறல் அது. இப்போது அவர் பயத்தில் உறைந்த நிலையில் படுக்கையில் அமர்ந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்தது; நான் அங்கே இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார் என்பதும் எனக்குப் புரிந்தது. அவர் என்னைப் பார்க்கவில்லை. என் சத்தத்தையும் அவர் கேட்கவில்லை. ஆனால் நான் அங்கே இருப்பதை அவர் உணர்ந்தார். மரணம் அங்கே நின்றுகொண்டிருக்கிறது என்பதை அவர் அப்போது உணர்ந்துகொண்டார். மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக நான் அந்தத் துணியை உயர்த்தினேன்; அதற்கடியிலிருந்து ஒரு மிகச்சிறிய ஒளிக்கீற்று வெளியேறி, அந்த கழுகின் கண்ணின் மீது விழுந்தது! அது திறந்திருந்தது — அகலமாகத் திறந்திருந்தது; அது என்னை நேராகப் பார்த்தபோது என் கோபம் அதிகரித்தது. அந்த முதியவரின் முகம் எனக்குத் தெரியவில்லை. அந்த ஒரு கண் மட்டுமே — அந்த உறுதியான நீல நிறக் கண் — தெரிந்தது; என் உடலிலிருந்த இரத்தம் பனிக்கட்டி போல உறைந்துபோனது.

    என் கேட்கும் திறன் வழக்கத்திற்கு மாறாகக் கூர்மையடைந்திருந்தது என்று நான் உங்களிடம் சொல்லவில்லையா? இப்போது என்னால் ஒரு விரைவான, மெல்லிய, அடக்கமான ஒலியைக் கேட்க முடிந்தது; சுவருக்கு அப்பால் கேட்கும் கடிகாரத்தின் ஓசையைப் போல அது இருந்தது. அது அந்த முதியவரின் இதயத் துடிப்பு. நான் அமைதியாக நிற்க முயன்றேன். ஆனால் அந்த ஒலி உரத்ததாக மாறியது. அந்த முதியவரின் பயம் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். அந்த ஒலி அதிகரிக்க அதிகரிக்க, என் கோபமும் அதிகரித்து, அது மிகுந்த வேதனையைத் தந்தது. ஆனால் அது வெறும் கோபத்தை விட மேலானதாக இருந்தது. அமைதியான இரவில், படுக்கையறையின் இருண்ட மௌனத்தில், என் கோபம் பயமாக மாறியது — ஏனெனில் இதயம் அவ்வளவு சத்தமாகத் துடித்துக்கொண்டிருந்தது, யாராவது அதைக் கேட்டுவிடுவார்களோ என்று நான் அஞ்சினேன். நேரம் வந்துவிட்டது! நான் அறைக்குள் பாய்ந்து சென்று, “சாகட்டும்! சாகட்டும்!” என்று கத்தினேன். நான் அவர் மீது பாய்ந்து, படுக்கை விரிப்புகளை அவர் தலைக்கு மேல் இறுக்கமாகப் பிடித்தபோது, ​​அந்த முதியவர் பயத்தில் உரக்கக் கத்தினார். அப்போதும் அவர் இதயம் துடித்துக்கொண்டிருந்தது; ஆனால் வெற்றி நெருங்கிவிட்டதை உணர்ந்த நான் புன்னகைத்தேன். பல நிமிடங்கள் அந்த இதயம் துடித்துக்கொண்டிருந்தது; ஆனால் இறுதியில் துடிப்பு நின்றது. அந்த முதியவர் இறந்துவிட்டார். நான் படுக்கை விரிப்புகளை அகற்றிவிட்டு, என் காதை அவர் இதயத்தின் மீது வைத்தேன். எந்தச் சத்தமும் இல்லை. ஆம். அவர் இறந்துவிட்டார்! கல்லைப் போல அசைவற்றுக் கிடந்தார். இனி அந்தக் கண் என்னை ஒருபோதும் தொந்தரவு செய்யாது!

    ஆக, நான் பைத்தியக்காரன் என்று சொல்கிறீர்களா? யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் அந்த உடலை மறைத்து வைப்பதில் நான் எவ்வளவு கவனமாக இருந்தேன் என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். முதலில் நான் தலையைத் துண்டித்தேன், பிறகு கைகளையும் கால்களையும் வெட்டினேன். தரையில் ஒரு துளி இரத்தம் கூட சிந்தாதவாறு நான் கவனமாக இருந்தேன். நான் தரையில் அமைத்திருந்த பலகைகளில் மூன்றை மேலே தூக்கி, உடலின் துண்டுகளை அங்கே வைத்தேன்.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 38

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 33 சாக்கிய நாயனார்

    பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!

    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்ற்!

    வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி!

    ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!

     

        

    தொண்டை நாட்டில், திருச்சங்க மங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சாக்கிய நாயனார். சாக்கியர் என்பது சாக்கிய மதத்தைச் சார்ந்தவர் என்ற பொருளாகும். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் தெரியவில்லை. இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அனைத்து உயிர்களிடத்தும் அருளுடையவராக விளங்கிய சாக்கியர், பௌத்த மதத்தில் ஞானம் பெற முயன்றவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர் நெறி என்று உணர்ந்தார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதரைத் தொழுதார். ஆனாலும் அவர் சாக்கிய உடையை மாற்றிக் கொள்ளாமல் அதே உடையிலேயே இருந்தார்.

    “வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
    மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

     என்று சுந்தரமூர்த்தி நாயனார் இவரைப் புகழ்கின்றார்.

     

    காணாத அருவினுக்கும்

      உருவினுக்கும் காரணமாய்

    நீள் நாகம் அணிந்தார்க்கு

      நிகழ் குறியாம் சிவலிங்கம்

    நாணாது நேடியமால் நான்

      முகனும் காண நடுச்

    சேணாரும் தழல் பிழம்பாய்த்

      தோன்றிது தெளிந்தாராய்.

     

    சிவலிங்க வழிபாடே சிறந்தது என்று மனம் தெளிந்த சாக்கியர் உள்ளம், நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்ட பின்னரே உண்ண வேண்டும் என்ற முடிவை மேற்கொண்டார். வெட்டவெளியில் கேட்பாரற்று இருந்த ஒரு சிவலிங்கத்தைக் கண்டு களிப்புற்றவர், செய்வதறியாது அருகிலிருந்த ஒரு கல்லை எடுத்து சிவலிங்கத்தின் மீது எறிந்து வழிபட்டபோது சிவபெருமானும் அக்கல் அடியை இனிமையாக அன்புடன் ஏற்றுக்கொண்டார்.  இறைவன் மீது கொண்ட அளவிலாத அன்பினாலே அவன் திருவருளையே நினைந்து தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே கல் எறிந்த சாக்கியரை எம்பெருமான் மகிழ்ந்து ஏற்றார். மறுநாளும் சாக்கியர் சிவபெருமானைக் கண்டு களிக்க வந்தார். முதல் நாள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி எண்ணிப் பார்த்தவர், தாம் செய்த அச்செயல் இறைவன் திருவருளாலே நடந்துள்ளது என்று உணர்ந்து நாளும் அதையேச் செய்வது இறைவன் திருவுளம் என்றும் உணர்ந்தார்.

     

    சாக்கியரின் கல்லெறியும் வழிபாடு இங்கனமே தொடர்ந்தது. ஒரு நாள் கல் வழிபாட்டைச் செய்ய மறந்து உணவு உண்ண அமர்ந்தவர், எம்பெருமானுக்கு கல்லெறியாமல் உண்ண வந்துவிட்டோமே என்று பேரன்புடன் கல்லை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார் சாக்கியர். அப்போது அவர் முன் சிவபெருமான் உமாதேவியுடன் தோன்றி திருக்காட்சி வழங்கினார். தேவாதி தேவர்களுக்கும் கிடைக்காத பெரும்பேறு சாக்கிய நாயனாருக்குக் கிடைத்தது. அவருக்கு சிவலோகமும் அன்போடு வழங்கினார் எம்பெருமான்.

     

    சாக்கிய நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரே நாயனார் சாக்கிய நாயனார். இவர் அனைத்து உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார். சிவபெருமானை வழிபடுவோர் மலர் தூவியும், பதிகங்கள் பாடியும் வழிபடுவது வழக்கம். ஆனால் சிவபெருமானைக் கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார்.

    பிறப்பதும், இறப்பதும் மனித இனத்தின் சாபக்கேடு என்பதை உணர்ந்த சாக்கிய நாயனார், நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்லப் போகிறோம் என்றும் சிந்திக்க ஆரம்பித்தார். பிறப்பையும், இறப்பையும் தவிர்க்க வேண்டுமென்ற கருத்து அவர் எண்ணத்தில் ஆழமாக ஊன்றிவிட்டது. கல்வியில் கரையிலாக் காஞ்சி மாநகருக்குச் சென்றார். காஞ்சி மாநகர் தத்துவக் கோட்டையாகத் திகழ்ந்த பொற்காலம் அது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சீன நாட்டில் இருந்து பலர் காஞ்சி மாநகர் வந்து தத்துவம் பயின்று சென்றதாகவும் வரலாறு அறியத் தருகின்றது. சாக்கிய நாயனார் காஞ்சி மாநகர் சென்று பல நூல்களை ஆராய்ந்து, பல அறிஞர்களின் உரைகளைக் கேட்டுத் தாமும் அறிஞராய்த் திகழ்ந்தார்.

     

    பௌத்தர்களின் அரிய  “திரிபிடகம்” என்ற கலை நூலைக் கற்று அதன் துணிபாகப் பெறப்பட்ட முடிபும் இன்னும் மற்றப் புறச்சமயங்களின் சார்பாகக் கூறும் முடிவுகளும் உண்மைப் பொருள் அல்ல என்ற உண்மையைத் தெளிந்தார். தத்துவத்தின் ஈர்ப்பால் சாக்கிய மதத்தைச் சேர்ந்தவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர்நெறி என உணர்ந்தார். ஆனாலும் சாக்கியர் தோற்றத்திலேயே இருந்தார். சிவநெறியில் சிந்தை இருந்தாலும் புறத்தே சிவ வேடம் தரிக்காமல் சாக்கிய வேடத்திலேயே இருந்தார்.

     

     

    எந்நிலையில் நின்றாலும்

      எக்கோலம் கொண்டாலும்

    மன்னிய சீர்ச் சங்கரன் தாள்

      மறவாமை பொருள் என்றே

    துன்னிய வேடம் தன்னைத்

      துறவாதே தூய சிவம்

    தன்னை மிகும் அன்பினால்

      மறவாமை தலை நிற்பார்

     

    வினை என்பது சடம். வினைச்செயல் செய்கின்ற உயிர் செய்கின்ற செயல், செயலுக்கேற்ற பலன், பலனைக் கூட்டுகின்ற இறைவன் இந்த நான்கும் சைவத்திற்கு அடிப்படை. இறைவன் வினைப்பயனைக் கூட்டுவிக்கின்றான். எந்த நிலையில் ஒருவர் நின்றாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், நிலையான சிறப்புடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப் பொருளாகும், எனத் துணிந்து சாக்கியர் வேடம் தரித்தவாறே சிவபெருமானை வணங்கி வந்தார்.

     

    செய்வினையும் செய்வானும் அதன்

      பயனும் கொடுப்பானும்

    மெய் வகையால் நான்காகும் விதித்த

      பொருள் எனக் கொண்டே

    இவ்வியல்பு சைவநெறி அல்ல

      வற்றுக்கு இல்லை என

    உய்வகையால் பொருள் சிவன் என்று

      அருளாலே உணர்ந்து அறிந்தார்.

     

    கண்ணுக்குத் தெரியாத அருவமாய் உள்ள மேனிக்கும், கண்ணுக்குத் தெரியும் உருவ மேனிக்கும் மூலமான இருப்பிடமாகி, நீண்ட பாம்பினை அணிந்த எம்பெருமான் சிவனை அறிந்து வழிபட சிறந்த அடையாளமான குறியாய் விளங்கும் சிவலிங்கம் தேடிய திருமாலும், நான்முகனும் காணுமாறு அவர்கள் நடுவே அனல் தூணாகித் தோன்றிய வடிவமே ஆகும் எனத் தெளிவு கொண்டார்.

     

    செய்யும் வினை ஒன்று. செய்பவனான கருத்தா ஒன்று. பயன் ஒன்று. அதனை வழங்கி ஊட்டுபவனான இறைவன் ஒன்று என உண்மை காணும் வகையினால், விதியினால் கிடைக்கும் பொருட்கள் நான்காகும் என்ற தெளிவும் கொண்டார். இந்தச் சிறப்பு இயல்புநிலை சைவநெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிபையும், நிலை பெறும் தவத்தால் சிவபெருமானின் துணையால் பொருளாவது சிவனே ஆவார் என்பதனையும் உணர்ந்து அறிந்து கொண்டார்.

     

    அகம் நிறைந்த பேர்

      உவகை அடங்காத ஆதரவால்

    மகவு மகிழ்ந்து உவப்பார்கள்

      வன்மை புரிசெயலினால்

    இகழ்வனவே செய்தாலும் இளம்

      புதல்வர்க்கு இன்பமே

    நிகழும் அது போல் அதற்கு

      நீள் சடையார் தாம் மகிழ்வார்.

     

    எப்போதும் செயலுக்கு முக்கியத்துவம் இல்லை. செயல்புரிவார் உள்ளத்தில் திகழும் நினைவுகளுக்கே முதன்மை கொடுக்கிறோம்.

     

    கல்லாலே எறிந்ததுவும் அன்பான

      படி காணில்

    வில்வேடர் செருப்பு அடியும்

      திருமுடியில் மேவிற்றால்

    நல்லார் மற்று அவர் செய்கை

      அன்பாலே நயந்து அதனை

    அல்லாதார் கல் என்பார்

      அரனார்க்கு அஃது அலராமால்.

     

    சாக்கிய நாயனார் அச்செயல் தொடங்கிய நாளில் இறைவர் அருள் செய்த அச்செயல் இடையறாது தொடர்ந்து செல்லும் கடமையை எண்ணுபவராய்க் கல்லைச் சிவலிங்கத்தின்மீது எறிபவராய்த் துவராடையை அணிகின்ற சாக்கிய வேடத்தையும் தொடர்ந்தார். பெருந்தவமுடைய சாக்கிய நாயனார் சிவபெருமானின் அருட்செயலே அனைத்தும் என்ற உணர்வுடையவராக விளங்கினார். கல்லால் எறிந்த செயலும் அன்பால் செய்யும் தொண்டே என்பதற்கு ஆதாரமாக, வில்வேடரான கண்ணப்பரின் செருப்படியும், இறைவரின் திருமுடியில் பொருந்தப் பெற்ற தன்மையை அறிவோம். நாயனார் அன்பால் விரும்பிய அச்செயலை, அவர் எறிந்தது கல் என்பர் அறியாதார். ஆனால் அது எம்பெருமான் சிவனுக்கு மனமிக்க மலரேயாகும்.

     

    சிவபெருமானை வழிபட தூய அன்பும், உண்மையான பக்தியும் இருந்தால் போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார். வீரட்டானேசுவரருக்கு எதிரே சாக்கிய நாயனார் திருமேனி கையில் கல்லுடன் காணப்படுகிறது. வீரட்டானேசுவரர் திருமேனி மீது சாக்கியர் கல்லால் எறிந்ததால் ஏற்பட்ட வடுவும் காணப்படுகிறது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

     

    “திருச்சிற்றம்பலம்”

     

    Share
  • கவியரசர் கண்ணதாசன் கலைவாணி வரமாவார்!

    கவியரசர் கண்ணதாசன் கலைவாணி வரமாவார்!

    மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண்,  ஆஸ்திரேலியா

    நாட்டுக்கோட்டை  தந்த நல்லதமிழ்  முத்து
    நந்தமிழின் கவிதைக்கு அவரென்றும் சொத்து
    பாட்டுக்கோட்டை கட்டியவர் பரிமளிக்க மகிழ்ந்தார்
    பாட்டுத்தேரில்  ஏறியவர் பலர்வியக்க  வந்தார்

    கண்ணதாசன் என்றவரும் பெயர்சொல்லி வந்தார்
    கண்ணனுக்கே தாசனென்று காலமெலாம் வாழ்ந்தார்
    எண்ணம் எலாம் கண்ணனாகி  எப்பொழுதும் இருந்தார்
    எண்ணரிய கவிதைகளை எழுதியவர் குவித்தார்

    கம்பனாகி நிற்பார் காளிதாசன் ஆவார்
    இளங்கோவாய் எழுந்து கவிபாடி நிற்பார்
    வள்ளுவராய் மாறுவார் வாழ்வியலைப் பாடுவார்
    உள்ளமதைத் திருத்திவிட  உகந்தபடி பாடுவார்

    மதுவாற்றில் நீந்தினார் மங்கைசுகம் நாடினார்
    எதுவுமே அறியாமல் எடுத்தெறிந்தும் ஏசினார்
    சமயத்தை இகழ்ந்தார் தத்துவத்தை வெறுத்தார்
    சடம்போல கவிஞர் தன்வாழ்வை வாழ்ந்தார்

    ஆண்டவனின் அருளாலே மீண்டார் நம்கவிஞர்
    அஞ்ஞான இருளிலே வாழ்ந்ததாய் உணர்ந்தார்
    மெஞ்ஞானம் பேசினார் மெஞ்ஞானம் எழுதினார்
    மேலான தத்துவங்கள் விளங்கும்படி பாடினார்

    பட்டினத்தார் திருமூலர் பலசித்தர் கருத்தை
    படித்தவரும் பாமரரும் விளங்கும்படி பாடினார்
    கட்டிலுக்கும் பாடினார் தொட்டிலுக்கும் பாடினார்
    காடுவரை போகும்வரை கண்ணதாசன்   பாடினார்

    கண்ணதாசன் தனிப்பாடல் அத்தனையும் படித்தால்
    எண்ணரிய தத்துவங்கள் எமக்கெல்லாம் விளங்கும்
    கண்ணனது கருணையினால் கண்ணதாசன் பாடினார்
    கண்ணதாசன் கவியுலகில் காலமெலாம் வாழுவார்

    பாசமலர் ஆகியும் கண்ணதாசன் இருப்பார்
    பாலும் பழத்தையும் பக்குவமாய் கொடுப்பார்
    படிக்காத மேதையாய் பாட்டுலகில் திகழுகிறார்
    பார்த்தால் பசிதீர பலகவிதை  அளித்துள்ளார்

    சங்கத் தமிழுடுத்துச் சந்தமுடன் பாடுவார்
    சபையேறிக் கவிஞர் தமிழ்மணக்கப் பாடுவார்
    பொங்கிவரும் ஊற்றாக புறப்பட்டுக் கவிதைவரும்
    எங்கிருந்து வருகிறதோ எல்லாமே கண்ணனென்பார்

    அர்த்தமுள்ள இந்துமதம் அருங்கருத்துப் பெட்டகமே
    யேசுபிரான் காவியமோ நெஞ்சுக்கு ஒத்தடமே
    கவியரசர் கண்ணதாசன் கலைவாணி வரமாவார்
    புவிமீது கவியரசர் கவிதையாய்  வாழுகிறார்!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வல்லமை வாசகர்களே!

    இங்கிலாந்திலே இன்று அரசியல் நிலைமைகள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

    பிரதமர் கியர் ஸ்டாமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்ற செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த முடிவு ஒரு தனிப்பட்ட தீர்மானமாக மட்டும் அல்லாமல், கடந்த சில வாரங்களாக உருவாகிக் கொண்டிருந்த அரசியல் அழுத்தங்களின் கூட்டுத் தாக்கமாகப் பார்க்கப்படுகிறது.

    இந்தச் சூழலைப் புரிந்துகொள்ள, மூன்று முக்கிய காரணிகளை நாம் ஆராய வேண்டியுள்ளது.

    அண்டி பேர்ன்காம் ( Andy Burnham ) பெற்ற அண்மைய வெற்றி, ரீபோர்ம் கட்சியின் எதிர்பாராத எழுச்சி, மற்றும் லேபர் கட்சியின் உள்ளக அழுத்தங்கள்.

    முதலில், அண்டி பேர்ன்காம்.

    சில காலங்களுக்கு.முன்னால் இரண்டுமுறை லேபர் கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்றதால் பாரளுமன்ற அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார்.

    பாராளுமன்ற அரசியலை விட்டு ஒதுங்கினாலும் அரசியலை விட்டு ஒதுங்கவில்லை.

    லேபத் கட்சியின் சார்பாக தான் வாழும் மான்செஷ்டர் பகுதி மேயர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டுமுறையும் வெற்றி பெற்றார்.

    வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் அப்பகுதியின் பிரச்சனைகளை எதிர்கொண்டு பல தீர்வுகளை பெற்றுகொடுத்து அப்பகுதியில் மிகவும் பிரபல்யமடைந்திருந்தார்.

    இராண்டாவது தடவையாக கடந்த மேமாதம் தான் மீண்டும் மேயராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பராளுமன்ற உறுப்பினராகும் முடிவெடுத்தார்.

    அவரது மான்செஷ்டர் பகுதி செயற்பாடுகளின் அடிப்படையில் செல்வாக்கு குன்றிய நிலையில் இருந்த கியர் ஸ்டாமருக்கு ஒரு மாற்று தலைவராக இவரால் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று பாராளுமன்ற லேபர் கட்சி உறுப்பினர்கள் எண்ணினார்கள்.

    அதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத அண்டி பேர்ன்காம் எவ்வாறு பிரதமராகலாம் ?

    இங்கேதான் மான்செஷ்டர் பகுதியில் அண்டி பேர்ன்காம் பிறந்து வளர்ந்த மக்கெல்ஸ்வீல்ட் எனும் பகுதி பாரளுமன்ற உறுப்பினர் அண்டி பேர்ன்காம் அவர்களை பாரளுமன்றம் அனுப்புவதற்கு ஏதுவாக தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்தார்.

    விளைவு அதற்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.

    அண்டி பேர்ன்காம் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் கியர் ஸ்டாமர் அவர்களின் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் எனும் எதிர்பார்ப்பில் போட்டியிட்டார்.

    கடந்த வாரம் அவர் பெற்ற அரசியல் வெற்றி சாதாரண தேர்தல் வெற்றியாக மட்டும் பார்க்க முடியாது.

    அது லேபர் கட்சியின் அடிப்படை ஆதரவாளர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாக மாறியுள்ளது.

    பாரம்பரிய தொழிலாளர் வாக்காளர்கள், நகர்ப்புற நடுத்தர வர்க்கம், மற்றும் இளைஞர் வாக்காளர்கள் இவர்கள் பலரும் ஸ்டாமரின் மிதமான, சில நேரங்களில் தயக்கமான அரசியல் அணுகுமுறைக்கு மாற்றாக, தெளிவான மற்றும் நேரடியான குரலை நாடி வருகிறார்கள்.

    பேர்ன்காம் இந்த இடைவெளியை நிரப்பியுள்ளார்.

    அவரது அரசியல் மொழி நேரடி, அவரது கொள்கைகள் மக்களோடு இணையும் வகையில் அமைந்துள்ளன.

    இதனால், லேபர் கட்சிக்குள் மறைமுகமான தலைமைப் போட்டி உருவாகி, ஸ்டாமரின் நிலையை பலவீனப்படுத்தியுள்ளது.

    இரண்டாவது, ரீபோர்ம் கட்சியின் எழுச்சி.

    இது இங்கிலாந்தின் அரசியல் அமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.

    பாரம்பரிய கன்சர்வேட்டிவ் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், அரசியல் அமைப்பில் விரக்தி அடைந்த பலர் ரீபோர்ம் கட்சியின் பக்கம் திரும்பியுள்ளனர்.

    குடியேற்றம், பொருளாதாரம், மற்றும் தேசிய அடையாளம் போன்ற கேள்விகளில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் கடுமையான நிலைப்பாடுகள், பொதுமக்களிடையே எதிரொலி பெற்றுள்ளன.

    இந்த எழுச்சி, லேபர் கட்சிக்கு இரு முனைகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு பக்கம் கன்சர்வேட்டிவ் வாக்காளர்கள் ரீபோர்முக்கு நகர, மற்றொரு பக்கம் லேபர் ஆதரவாளர்கள் மாற்று தலைமை தேடுகின்றனர்.

    இதன் விளைவாக, ஸ்டாமர் அரசியல் மையத்தில் நிலைத்து நிற்க முயன்ற போதும், அவரின் ஆதரவு தளரத் தொடங்கியது.

    மூன்றாவது மற்றும் மிக முக்கியமானது, லேபர் கட்சியின் உள்ளக நிலைமை.

    ஸ்டாமர் தலைமையில் கட்சி ஒரு நிலைத்தன்மையை அடைந்தது என்பது உண்மை.

    ஆனால், அந்த நிலைத்தன்மை உற்சாகத்தை உருவாக்கவில்லை.

    கட்சியின் பல உறுப்பினர்கள், குறிப்பாக இளம் தலைமுறை, திடமான மாற்றங்களை எதிர்பார்த்தனர்.

    அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, அதிருப்தி மெதுவாக வெளிப்படத் தொடங்கியது.

    இவை அனைத்தும் சேர்ந்து, ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்கின.

    அந்த சூழலில், ஸ்டாமர் தனது பதவியைத் தொடர்வது கட்சிக்கே பாதகமாக இருக்கலாம் என்ற உணர்வு உருவாகியுள்ளது.

    அரசியலில், சில நேரங்களில் விலகுவது தோல்வி அல்ல.

    அது ஒரு மாற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்கும் தீர்மானமாகும்.

    இன்றைய இங்கிலாந்து அரசியல், புதிய சமநிலையைத் தேடிக் கொண்டிருக்கிறது.

    பழைய அரசியல் வரையறைகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

    தலைமை, கொள்கை, மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகள் இவை அனைத்தும் புதிய வடிவம் எடுக்கின்றன.

    இந்த மாற்றத்தின் மையத்தில் நின்று, கியர் ஸ்டாமரின் விலகல் ஒரு முடிவாக அல்ல, ஒரு புதிய அரசியல் கட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்பட வேண்டும்.

    கன்சர்வேடிவ் கட்சிக்கு இது தற்காலிகமாக அனுகூலம், ஆனால் நீண்டகாலத்தில் சிக்கலும் உள்ளது.

    கியர் ஸ்டாமரின் ராஜினாமா லேபர் அரசின் மீதான சோர்வை அதிகரித்து, ஆளும் தரப்பில் குழப்பத்தை உருவாக்குவதால் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களுக்கு தாக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

    குறிப்பாக “நிலைத்தன்மை” மற்றும் “ஆட்சி மாற்றம்” என்ற கதையை அவர்கள் முன்வைக்க முடியும் .

    ஆனால் 2024 பொதுத்தேர்தல் படுதோல்விக்குப் பிந்தைய பலவீன நிலை, கட்சிக்குள் தலைமைத் தெளிவின்மை, மற்றும் Reform UK-க்கு வாக்குகள் சிதறிச் செல்லும் அபாயம் காரணமாக, இந்த நெருக்கடி அவர்களுக்கு தானாகவே மீட்சியை தராது.

    மொத்தத்தில், இது கன்சர்வேடிவ்களுக்கு ஒரு வாய்ப்பும் ஒரு எச்சரிக்கையும் சேர்ந்த நிலை.

    ஸ்டாமர் விலகலால் அரசியல் விவாதத்தின் மையம் மீண்டும் ஆட்சியின் செயல்திறன், பொருளாதாரம், மற்றும் தலைமை நம்பகத்தன்மை என்பவற்றுக்கு திரும்புகிறது.

    இது கன்சர்வேடிவ்களுக்கு தாக்குப்பிடிக்க உதவும்.

    ஆனால் அவர்கள் தங்களை நம்பத்தகுந்த மாற்றாக காட்ட முடியாவிட்டால், அந்த அதிருப்தியின் பலனை Reform UK அதிகமாக எடுத்துக்கொள்ளும்.

    எனவே இந்த சூழல் கன்சர்வேடிவ்களுக்கு உடனடி அனுகூலம், ஆனால் அடிப்படை ரீதியில் இன்னும் பெரும் சிக்கலே .

    லிபரல் டெமகிரட்ஸ் க்கு இது பொதுவாக அனுகூலமான சூழல்.

    பெரிய இரண்டு கட்சிகளின் மீதான அதிருப்தி அதிகரிக்கும் போது, லிபரல் டெமகிரட்ஸ் பல இடங்களில் “நேர்மையான, மிதமான, உள்ளூர் பிரச்சினைகளை கவனிக்கும்” மாற்று சக்தியாக தங்களை முன்வைக்க முடியும்.

    குறிப்பாக நடுத்தர வர்க்கம், கல்வி பெற்ற வாக்காளர்கள், மற்றும் லேபர்-கன்சர்வேடிவ் இரண்டிலும் ஏமாற்றமடைந்தோர் இவர்களை நோக்கி நகர வாய்ப்பு உண்டு .

    தலைமை மாற்றமும், ஆட்சிக் குழப்பமும் அதிகமாகும் காலங்களில், அவர்கள் நிலைத்தன்மை மற்றும் சமநிலை எனும் அரசியல் மொழியை வலுப்படுத்தி, உள்ளூர் தேர்தல்களிலும் இடைத்தேர்தல்களிலும் முன்னேற முடியும் .

    ஆனால் அவர்களுக்கு சிக்கலும் இல்லாமல் இல்லை.

    நாட்டளவில் ஆட்சி மாற்றத்தின் வெற்றிடம் உருவானாலும், லிபரல் டெமகிரட்ஸின் ஆதரவு பெரும்பாலும் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே வலிமை பெறும்.

    அதை தேசிய அரசியல் அலைக்காற்றாக மாற்றுவது கடினம்.

    மேலும், அதிருப்தி வாக்குகள் எல்லாம் ஒரே நேரத்தில் அவர்களிடம் வருவதில்லை.

    அவை சில நேரங்களில் Reform UK-க்கும், சில நேரங்களில் கன்சர்வேடிவ் மீள்சீரமைப்புக்கும் சிதறிவிடும் .

    எனவே இவர்களுக்கு இது “வாய்ப்புள்ள காலம்” என்றாலும், அதை பெரும் இடைநிலை வெற்றியாக மாற்றத் தெளிவான பிரச்சாரமும் உள்ளூர் அமைப்பும் அவசியம்.

    இது ஒரு தனிப்பட்ட அரசியல் கதையாக மட்டும் அல்ல.

    இது இங்கிலாந்து ஜனநாயகத்தின் இயக்கத்தின் ஒரு பிரதிபலிப்பு.

    Share
  • முயற்சி பண்ணுகிறேன்

    நிர்மலா ராகவன்

    உத்தியோகத்திற்கான பேட்டியில்:

    “இந்த வேலையில் சேர்ந்தால், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்குமே!”

    “கடுமையான உழைப்பு யாரையும் சாகடித்தது கிடையாது!” இப்படிச் சொன்னவருக்கு வேலை கிடைத்தது.

    `முயற்சி செய்கிறேன்,’ என்று சொல்லியிருந்தால், அது அரைமனதான பதிலாக இருந்திருக்கும் — `பார்க்கலாம்,’ என்று தட்டிக்கழிப்பதுபோல்.

    ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒத்துக்கொள்பவர், `சரி,’ அல்லது `இப்போது முடியாது,’ என்று கூறினால், அவர் முழுமனதுடன் அதில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையாவது எழும்.

    `எனக்கு அவனைவிடத் திறமை அதிகம். படிப்பிலும் நான் அவனை மிஞ்சியவன்! அவனுக்கு என்னமோ அதிர்ஷ்டம்!’ என்று தன்னை மிஞ்சிவிட்ட ஒரு நண்பனைப் பார்த்துப் பொருமுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

    அறிவும் திறமையும் முக்கியம்தான். ஆனால், அவற்றை முழுமையாக வெளிக்காட்ட கடும் உழைப்பு வேண்டாமா?

    சிலர் ஒரு காரியத்தை ஆரம்பிப்பார்கள். ஆரம்பித்த வேலை நீண்டுகொண்டே போனால், `இதற்கு என்னதான் முடிவு!’ என்ற அலுப்பு ஏற்படும். அப்போது அரைகுறையாக, எப்படியோ செய்து முடிக்கத் தோன்றிவிடும்.

    வேலை செய்யும் தருணங்களை ரசித்தால், செய்பவருக்கு மகிழ்ச்சி கிட்டும். எடுத்த காரியமும் சிறப்பாக அமையும்.

    பிடிக்கிறதோ, இல்லையோ, செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, முழுமனதுடன் ஈடுபட்டால் செவ்வனே செய்து முடிக்க முடியும்.

    எதுவாக இருந்தாலும், படைப்பவர் ரசித்துச் செய்தால்தான் பிறருக்கு மகிழ்ச்சி ஏற்படும். சமையல், இசை, எழுத்து – எதுவாக இருந்தார் என்ன!

    “சமைப்பது என்றால் எனக்கு வெறுப்பு! மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டே, எதற்கு அந்த வேலை!” என்று அலுத்துக்கொள்வாள் என் தோழி ஒருத்தி.

    அவள் சமைத்ததை அன்றாடம் சாப்பிட வேண்டியிருக்கும் குடும்பத்தினரிடம் பரிதாபம்தான் எழுந்தது எனக்கு.

    “நான் எத்தனை வருடங்களாக எழுதுகிறேன்! எனக்கு ஒரு பட்டம்கூடக் கிடைக்கவில்லை,” என்று என்னிடம் குறைப்பட்டார் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

    பரிசுகளும், பட்டங்களும் பெறலாம் என்ற நோக்கத்துடன் எழுத ஆரம்பித்தால் அந்த இலக்கே சரியில்லை. எத்தனை கால அனுபவம் இருந்தாலும், புதிய விஷயங்களைக் கற்று, காலத்திற்கேற்ப எழுதுவது ஒருபுறமிருக்க, எழுதும்போதே மகிழ்ச்சியாக உணர்ந்தால்தான் ஒருவரது படைப்பு சிறப்பாக அமையும். எழுதுபவரது மகிழ்ச்சி பிறரை போய்ச்சேரும்.

    எந்தக் காரியமானாலும் அதை ஒரு சவாலாக ஏற்று, விடாமுயற்சியுடன் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும்.

    வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவால் என்று நினைத்து, அதன்படி செயல்படுகிறார்கள் சிலர்.

    இது அறிவுடைமையா, முட்டாள்தனமா?

    கதை

    சரவணன் ஒரு பெண்ணை மணந்தான். காதல் வயப்பட்டு அல்ல. அவள்மேல் பரிதாபப்பட்டு. அவளுக்கு ஏதோ வியாதி. `நம்மை விட்டால் வேறு யார் இவளை மணக்கப்போகிறார்கள், பாவம்!’ என்று எண்ணினான்.

    மணந்தபின், நோஞ்சானான அவளுடைய உருவத்துக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று.

    கணவனை வார்த்தைகளாலேயே துளைத்தாள் — தான் கிடைத்தற்கரிய பிறவி, அதனால்தான் இந்த முட்டாள் தேடிவந்து மணந்தான் என்றெண்ணியவளாக. `எந்த விஷயத்திலும்’ ஒத்துழைக்கவில்லை.

    மிகவும் குழப்பத்திற்கும் வருத்தத்திற்கும் ஆளான சரவணன் என்னிடம் ஆலோசனை கேட்டபோது, “மனைவியாகத் தன் கடமையைச் செய்ய மறுப்பவளுடன் எதற்குச் சேர்ந்து வாழவேண்டும்? இவளை விவாகரத்து செய்ய வேண்டியதுதான்!” என்றேன்.

    “அது பாவமில்ல?” என்று குழம்பியவனிடம், “உங்கள் சந்தோஷம் மட்டும் முக்கியமில்லையா? உங்களுக்கு இன்னும் இளமை இருக்கிறது. ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து, இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளுங்கள். எத்தனை காலம் இப்படியே நொந்துபோய் இருப்பீர்கள்?” என்றேன் வற்புறுத்தலாக. வேறு வழி தெரியவில்லை.

    அப்படியே செய்தான். சில மாதங்களுக்குப்பின், “நீங்க சொன்னபடி செய்தேன். இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன், ஆன்ட்டி,” என்று தெரிவித்தான்.

    பெண்கள் இவ்வளவு சீக்கிரம் திருமண வாழ்வை முறித்துக்கொள்ள மாட்டார்கள்.

    உயிர் போகும் நிலையில் காப்பாற்றப்பட்டு, அந்த மாது மறுவாழ்வு நிலையத்தில் இருந்தபோது சந்தித்தேன்.

    சுமார் முப்பது வருடங்கள் கணவரிடம் வன்முறையைத் தவிர வேறு எதையும் அனுபவித்திராதவள், “அவர் மாறுவாருன்னு பொறுமையா இருந்தேங்க,” என்றாள். அப்போதும் அவளுக்கு அடுத்து என்ன செய்வது என்ற தெளிவு இருக்கவில்லை.

    தன்னம்பிக்கையை இழந்தவர்களிடம் எந்த ஆற்றலையும் எதிர்பார்க்க முடியாது.

    கெண்டகி fried சிக்கன் நிறுவனத்தை ஆரம்பித்தபோது, கர்னல் ஸாண்டர்ஸ் என்பவருக்கு 67 வயது. அதற்குமுன், தெரு ஓரத்தில் ஒரு சிறிய உணவுக்கடை வைத்திருந்தார். வேறு ஒருவர் அப்பண்டத்தை விற்றபோது, அதில் குறை கண்டுபிடித்து, அதைவிடச் சிறப்பாகத் தயாரித்து, பெரும் வெற்றி பெற்றார்.

    இளம்வயதில் பண்ணையாளாக, பஸ் கண்டக்டராகப் பணி புரிந்திருந்த ஒருவர் தனது 88-வது வயதில், உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்த துரித உணவுச் சங்கிலியின் (fast food chain) நிறுவனராக எப்படி ஆனார்?

    தன் திறமையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. பிறர் பாராட்டாவிட்டாலும், பின்வாங்காது தன் இலக்கைக் குறிவைத்துச் சென்றார். கடுமையாக உழைக்கப் பயந்து, பின் வருத்தப்படுவது எதற்காக?

    வழியில் எத்தனையோ தவறுகள் வந்திருக்கலாம். அவைகளிலிருந்து சரியான வழி எது என்று கற்றிருப்பார்.

    பிறர் பொறாமைப்படுவதற்காகப் பெருமைப்படவேண்டுமே அல்லாது, பயந்துவிடக்கூடாது என்று புரிந்திருப்பார்.

    `கிட்டத்தட்ட தொண்ணூறு வயதிலும் தன் அனுபவங்களையும், திறமையையும் கொண்டு சாதித்திருக்கிறாரே, இவருக்கெல்லாம் உடலில் அப்படி ஒரு பலமா!’ என்ற பெருவியப்பு எழுகிறதா?

    மனிதனோ, மிருகமோ, என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பது என்பது நடக்காத காரியம். இது புரியாது, உடல்நலம் பாதிக்கப்பட்டால், தன்னைப் பார்த்துத் தானே பரிதாபப்பட்டுக்கொண்டு இருந்தால் யாருக்கு நஷ்டம்?

    ஒருவருக்கு இடுப்புவலி. மருத்துவர் slip disc என்று ஏதோ பெரிய பெயர் சொல்ல. மனிதர் பயந்துவிட்டார். அதன்பின், உடல்நிலை சரியானபோதும், மாடிப்படிகளில் ஏற பயம். மிகக் கனமான சாமான்களைத் தூக்க முடியாது என்றால் நியாயம். நடக்கவே பயந்தால்?

    இப்போதெல்லாம் வியாதியைப்பற்றிப் பேசுவது நாகரிகமாக ஆகிவிட்டது.

    முன்பெல்லாம், வயது முதிர்ந்த பெண்கள் சந்தித்துக்கொள்ளும்போது, “சௌக்கியமா?” என்று விசாரிப்பார்கள். இப்போது அந்த முகமன், “என்னென்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்?” என்று மாறிவிட்டது. ஒருவர் தன் உடல் உபாதையைப்பற்றி விவரிக்க, அடுத்தவர் அனுதாபம் காட்டவேண்டும். அதனால், உடல்நிலை சீராகிவிடுமா என்றெல்லாம் கேட்கக்கூடாது.

    நாம் ஒவ்வொரு முறையும் நமக்கு வந்த, ஆனால் இப்போது சரியாகிவிட்ட, நோயைப்பற்றி ரசனையுடன் விவரித்தால் கேட்பவர்களுக்கு எப்படி இருக்குமோ, நம் உல்லாசம் பறிபோய்விடும்.

    ஒரு சிலர், தாம் ஆரோக்கியமாக இருந்தாலும், தமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் ஆகியோரின் உடல்நிலைக் குறைபற்றி விவரிப்பார்கள்.

    `நமக்கு இப்படியெல்லாம் நேரவில்லேயே!’ என்ற நிம்மதியாலா? அல்லது, தம் ஆரோக்கியக்குறைவை சில நொடிகளாவது மறப்பதற்காகவா? எனக்குப் புரியத்தானில்லை.

    Share
  • அடையாத விழிகள் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    “எவ்வளவு முயற்சி செஞ்சும் இத மட்டும் பண்ணவே முடியல. நாசுவ மாரிமுத்துவ வரச்சொல்லியிருக்கோ. பார்க்கலா அவரு வந்து பூச செஞ்சு ஐஸ் பெட்டில படுக்க வெக்கும் போது அவருகிட்ட சொல்லலா. அவங்களுக்குத் தெரியும் எப்படி பண்ணனும்னு. செவ்வாக்கெழமை நைட்டு எறந்தது காலைலதா ஐஸ் பெட்டி கெடைக்கும்னு சொல்லிட்டாங்க கிட்டத்தட்ட ஒம்பது மணி நேரமாச்சு.  எழவு வீட்டுக்கு வர்ற ஒவ்வொருத்தரும் பொணம் இப்படி கண்ண தொறந்துட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டே தான் இருக்காங்க நாங்களும் ஏதேதோ செஞ்சிட்டு தா இருக்கோ. ஆனா முடிய மாட்டேங்குது. நேத்து எறந்ததும் கையை மடக்கிவெச்சு  வெள்ளத்துணி போடவே ரொம்ப சிரமமாதா இருந்துச்சு  கையெ மடக்கவே முடியல’.

    மாரிமுத்தண்ணன் காலைல ஆறு மணிக்கெல்லா ஐஸ்பெட்டியோட வந்துட்டாரு. வருண் ஓடிப்போய் பெட்டியை எறக்கினான்.  அந்த அண்ணந்தா எப்போதும் அப்பாவுக்கு முடிவெட்ட வீட்டுக்கு வருவாரு.  அதனால சின்ன வயசிலிருந்தே தெரியும்.

    “அண்ணா….. பாருங்க. அப்பா எறந்து இவ்வளவு நேரமாச்சு கண்ணு மட்டும் மூடவே மாட்டேங்குது நாங்களும் என்னெல்லாமோ செஞ்சு பார்த்துட்டோம். வாயும் பாருங்க  பல்ல கடிச்சுட்டு  இருக்காரு.  வாய மூடுறதும் சிரமமா இருக்கு.”

    “ சரி தம்பி நான் பாத்துக்குறேன். பூசைக்கு  தேங்காய் பழம் கொடுங்க.  எந்த எடத்தில பெட்டி வெக்கணும்.  வடக்கு தல வெச்சு  படுக்க வைக்கணும். அங்க கரண்ட் பாக்ஸ் இருக்கா ?”

    “இருக்குண்ணா”

    “ யாரு எறந்தாலும் வடக்குதா தல வெப்பாங்களா இல்ல வயசாகி எறந்ததால இப்படியாண்ணா”

    “இல்லப்பா பொணத்த வடக்கு தல வச்சுதா படுக்க வெப்பாங்க. வடக்கு தல வெச்சு  வாழ்ந்தவங்களுமில்ல. தெக்க தல வச்சு தேஞ்சவங்களுமில்லன்னு சொல்லுவாங்க. அதனாலதான் வீட்டுல படுக்கும் போது வடக்கு தல வெச்சுப் படுக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.”

    “ஓ….. அண்ணா இப்படி பொணம் கண்ணத்தொறந்து இருக்கக் கூடாதாமா”

    “இருப்பா”

    வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட தேகத்தை தலைப்பகுதியை மாரிமுத்துவும், கால் பகுதியை மகன் வருணும் பிடித்துத்தூக்கி ஐஸ் பெட்டியில் படுக்க வைத்தனர். ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டுவரச் சொல்லி தலையைத் தூக்கி வைத்து விட்டார். ஒரு வெள்ளை வேஷ்டி கேட்டார். ஒரு வேஷ்டியை நான்காகக் கிழித்து ஒருபகுதியைத்  தலையோடு சேர்த்து தாடைக்குக் கீழ் வழியாக இறுக்கமாகக் கட்டினார். பிறகு பொணத்தின் கண்களை மூடியபடி கொஞ்ச நேரம் கைகளால் அழுத்திப் பிடித்தார். தலைப்பகுதியை இழுத்துக்கட்டியதும் வாய் மூடியது.   கண்கள் மீது ஒரு சின்ன ஐஸ் கட்டியை  உடைத்து வைத்தார். ‘இப்போ மூடிரும் பாருப்பா’ என்று பெட்டியின் மூடியை எடுத்தார். ஐஸ் கரைந்ததும்  கண்கள் டப்பென்று  திறந்து கொண்டன, ஐஸ் கட்டியிலிருந்து வடிந்த நீர் கண்ணீர் விடுவது போல இருந்தன.

    “நான் எத்தனையோ பொணத்தப் பார்த்திருக்கே உங்க அப்பா யாரையோ ரொம்ப எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்தாரு போல அதனாலதா கண்கள் மூட மாட்டேங்கிறது. பாக்கலாம் ஐஸ் பெட்டியில வெச்சு கொஞ்ச நேரமானதும் சிலவேள கண்கள் தானா அடைஞ்சுடும். இல்ல அவரு யார ரொம்ப விரும்பி எதிர்பார்த்தாரோ அவங்க வந்துட்டாங்கனா  தானாக மூடிடு. ஒங்க அப்பாவுக்கு வீடு நெறய ஆளு இருக்கிறதுதானே ரொம்பப் புடிக்கும். உங்க அப்பாவும் நானு சின்ன வயசுல இருந்தே சிநேகிதம். அவரு மொதலாளி நானு சாதாரண நாசுவெங்கற மாதிரியெல்லா பழக மாட்டாரு. நா வந்தாலும் மொதல்ல எனக்கு வயிறு நெறைய சாப்பாடு போட்டு தா வேலயத்தொடங்கச் சொல்லுவாரு எந்த நேரத்தில யார் வந்தாலும் வயிறார சோறு போடுவாரு.”

    “உங்க அப்பச்சி சொல்லிக்கிட்டே இருப்பாங்க இவனுக்கு ராமகிருஷ்ணன்னு பேரு வச்சது தப்பா போச்சுன்னு. இராமர் குடும்பத்துக்காக பதினாலு வருசம் காட்டுக்குப் போய் கஷ்டப்பட்டது மாதிரி இவனும் குடும்பத்துக்காக கஷ்டப்படுறான். கிருஷ்ணன நம்பி மகாபாரத போர் நடந்த   மாதிரி  இவன நம்பி இவனுக்குக்கீழ ஆறு உடன்பொறந்தவங்கனு என்னெ பாக்கும்போதெல்லா  கரிசனப்படுவாங்க.”

    தங்கைங்க நாலு பேரும் அண்ணன் எறந்த சேதி கேட்டு அழுதுகொண்டே  வந்தனர். முந்தைய நாள் தான் கடைசி தங்கை வனிதாவின் இரண்டாவது பையன் கல்யாணம். மூத்த அண்ணன் இல்லாமல் நடந்த முதல் குடும்ப நிகழ்வு. அதற்கும் அவர் கலந்துகொள்ளத்தயாராகவே இருந்தார். உடல் ஒத்துழைக்கவில்லை படுக்கையை விட்டு எழவே முடியவில்லை புதிய வேஷ்டி எல்லாம் அதற்காக எடுத்து வைத்திருந்தார். திருமணத்திற்கு மொதநாள் மாப்பிள்ளை வீட்டில வீட்டு சாமி கும்பிடும்போது வனிதா கோயம்புத்தூர் வீட்டிலிருந்து வீடியோகால் பண்ணினா.  அனைவரும் அழுது விட்டனர் வீடியோகாலில் அவருடைய தேகத்தைப் பார்த்து. தினமும் சவரம் செய்து முகத்தை பளபளன்னு வைத்திருப்பவர். தாடியும் மீசையும் வளர்ந்து மீசை  வாயை மூடி கிடந்தது.  குழந்தை பெற்ற வயிறு பத்து மாதத்திற்குப் பிறகு எப்படி வெற்றிடமாகக் குழியாக இருக்குமோ அதேபோல வயிறு  குழியாக இருந்தது. விலா எலும்புகளை எண்ணிப் பார்க்கலாம். அப்படி எலும்புக்கூடாக இருந்தார். கம்பீரமாக குடும்பத்திற்கே பெரியமாமாவாக இருந்த ராமகிருஷ்ணன்  இப்போது பார்க்க முடியாத ஒரு சிதைந்த உருவமாக இருந்தார்.

    ஏன் பெரிய மாமா  என்று பெயர், தங்கைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் மனதில் எண்ணுவதற்குள் அங்கு நிற்பார். அதேபோல தங்கைகளின் பிள்ளைகளுக்கு வயசுக்கு வந்த சீரு செய்வது. கல்யாண சீருசெய்வது. நல்லது கெட்டதுக்கு பொறந்த வீட்டு சீரு செய்வதுனு எதுக்குமே சளைக்க மாட்டார். பாரபட்சம் பார்க்காம எல்லா தங்கைளுக்கும் ஒரே மாதிரி செய்வார்.  அவருக்கு படுத்த படுக்கையிலிருந்த போதும்  கவலை மாமஞ்சீருக்குத் தன்னால கலந்து கொள்ள முடியலயே என்பதுதான். மாமஞ்சீரு நல்லபடியா முடிஞ்சுதானு செய்கை மூலம் கேட்டார்.

    “நல்லபடியாக முடிஞ்சுது மாமா. ரிசப்ஷன் முடிஞ்சதும் நானே உங்கள வந்து பாக்கறே மாமா” மாப்பிள்ளை அனிருத் சொன்னார். அவர் உடனே வீடியோவை நிறுத்த சொல்லிட்டாரு. கல்யாண வீட்டில் அந்த சோக அமைதி கலையவே கொஞ்ச நேரம் ஆனது.

    நாலு தங்கச்சிக மூணு தம்பிங்க அவங்க  கொழந்தைங்க  என மகள்கள் பன்னிரெண்டு பேர் ஒவ்வொருத்தரு வீட்டிலயும் மாத்தி மாத்தி ஒவ்வொரு விசேஷம் வரும். அந்த காலத்தில சொத்து சுகம் சேர்த்த வழியில்லாம பெருசானா ஒருத்தருக்கு ஒருத்தரு ஒத்தாசயா இருக்குமேனு அப்பச்சியும் தாத்தாவும் யோசிச்சு ஏழு புள்ளகள பெத்துக்கிட்டாங்க. கரு உருவாகாமல் தடுக்க வைத்தியமெல்லா ஏது அந்த காலத்துல. ஏழு பேரும் கடைசி வரை ஒற்றுமையா இருக்கணும்ங்குறதுதா பெரிய அண்ணன் ராமகிருஷ்ணனோட ஆசையும். அம்மா அப்பா காலத்துல இருந்த ஒத்துமையும் பொருளாதாரத்தையும் நாம எதிர்பார்க்க முடியாது என்று ஏழு பேருமே இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு மேல பெற்றுக்கொள்ளவில்லை. அப்படியும் மொத்தம் பதினாலு பேர்.

    ராமகிருஷ்ணனுக்கு தனது தங்கைகளைப் பார்ப்பது அவ்வளவு புடிக்கும்.  தங்கைகளும் அதே பாசத்தோடு தான் இருப்பார்கள். அண்ணன் வந்து சபையில் நிற்பதே கௌரவமாக நினைப்பவர்கள். திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் இரண்டு மாதத்தில் படுத்த படுக்கையானது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் முக்கியத்துவமல்ல. குடும்பத்தில் யார் எதை சாதித்தாலும் பாராட்டக்கூடியவர். பாராட்டென்றால் வெறுமனே ஃபோன்ல பாராட்டறதோ நேர்ல பாராட்டுறதோ இல்ல. குடும்பமே பெருமைப்படும்படி மாதிரியான பாராட்டு. இரண்டாவது தங்கை கீதாவின் மகள் பி.எச்டி முடித்த போது குடும்ப சகிதமாக பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.   அன்றுதான் வனிதா வீட்டு கிரகப்பிரவேசம் அங்கேயே மதிய உணவிற்குப் பிறகு அனைவரும் ஒன்றாகக் கூடி கீதாவின் மகளுக்குப்  பொன்னாடை போர்த்தி கேடயம் கொடுத்து தன் குடும்பத்தில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவள் என பாராட்டினார். மற்றவர்களும்  அவரவருக்கு முடிந்த அளவிற்குப் பரிசுகள் கொடுத்தனர். குடும்பத்தினரின் வெற்றியைப் பாராட்டுவதற்கான பிள்ளையார் சுழியான நிகழ்வு அதுதான். அன்றிலிருந்து,  குடும்பத்தில் யார் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்தாலும் அவர்களுக்கு அனைவரும் பணம் திரட்டி  ஏதாவது ஒரு பரிசு பொருள் வாங்கி கொடுப்பது வழக்கமாகியது.  அதுபோக சித்தி பெரியம்மா பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வரும்போது ஒன்றுகூடி gettogether வைத்து அனைவரும் அவரவர் வீட்டில் சமைத்ததை ஒன்றாக ஒரு வீட்டில் அமர்ந்து உண்பர். உறவுகளுக்குள் எந்த விரிசலையும் வளர விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். கடன் வாங்கியாவது முறைச் சீர்களைச் சரியாக செய்ய வேண்டும் என்பது அவரது கொள்கை. அதே போல அனைவரையும் ஒன்றாக வீட்டுக்கு அழைத்து ஒன்றாக சாப்பிட்டு தம்பி தங்கை குடும்பத்தார் நன்றாக அமர்ந்து சாப்பிடும் அழகைப் பார்க்க மிகவும் விரும்புவார். அப்பச்சியும் தாத்தாவும் இறந்து    பன்னிரெண்டு  வருடமாச்சு. ஒவ்வொரு வருடமும் அம்மாவின் இறந்த நாளன்று அனைவரையும் அழைத்து பூசை முடித்து சாப்பாடு போட்டுச் சாப்பிட வைத்து மகிழ்ந்து பிறகுதான் அவர் உண்பார்.  யார் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் வகை வகையாகச் சமைத்துப் போடுவதில் அவரது மனைவியும் சலிக்கவே மாட்டார். இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு கூட கீதா வந்தபோது, அவளுக்குப் பிடிக்குமே என்று இரால் வாங்கி சமைத்துச்  சாப்பிட வைத்து அனுப்பினார். வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிடாமல் போகக்கூடாது என்பது அவருடைய இலட்சியம் அவருடைய இந்த திடீர் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

    “எம்மகெ குடும்பப் பொறுப்பத் தோளில சுமக்க ஆரம்பிச்சுட்டா இனி எனக்கு எந்த கவலையும் இல்ல அவனோடக் கடைசி காலம் வரைக்கு அவெ தம்பி தங்கைகளைக் கைவிடமாட்டா. நா… நிம்மதியா கண்ண மூடிடுவே” என்று ராமகிருஷ்ணனோட அம்மா மகனப்பத்தி பெருமையா பேசுவாங்க .

    சிறிதுநேரம் கழித்து மாரிமுத்து மீண்டும் பெட்டியைத்  திறந்து கண்களை அடைக்க முயற்சித்தார். மூக்கு வழியாக இரத்தம் வரத் தொடங்கியது. அப்போதும் கண்கள் மூடவே இல்லை. மூன்று தங்கையும் ஒரு தம்பி குடும்பத்தாரும் வந்தனர். மற்றொரு தங்கை வந்து கொண்டிருக்கிறாள். மகள் இன்னும் வரவில்லை. எல்லோர் வாயும்  முணுமுணுத்தது.

    ‘ஒருவேள மகளப் பார்த்தா கண்கள் அடையுமோ? மகளை எதிர்பார்க்கிறாரோ என்னமோ’.

    கார் வந்து நின்றது.  காரிலிருந்து இறங்கியதும் ‘அப்பா…….. அப்பா……. என்று தெருவே கேட்கும்படி சத்தம் போட்டுக்கொண்டு வந்தாள் லட்சனா.  அவள் கதறியழுது ஓய்ந்த பிறகு அவளிடம் கூறினர் கண்களை மூடிவிட. அவளும் அழுது கொண்டே செய்தாள்.  ஒரு நிமிடம் கண்கள் மூடியபடி இருந்தன. மீண்டும் திறந்தன.  ஆனால் அவள் தொட்ட பிறகு வெளியில் நீட்டிக்கொண்டிருந்த இரண்டு பற்கள் நன்றாகத் தெரிந்தன. இது சிரிப்பா ? இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம்?

    உற்றார் உறவினர் என அனைவரும் வந்தனர். பொணம் எடுப்பதற்கான நேரம் நெருங்கியது.   நாலு மணிக்கு மயானம் செல்ல வேண்டும்.

    “சரி பொணம் எடுக்க நேரமாச்சு. மொறக்காரங்க தண்ணி எடுக்க வாங்க…” ஐந்து பேர் கிளம்பினர் ஈரத்துணியுடன் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. சுவிட்சை நிறுத்திவிட்டு ஐஸ் பெட்டியின்   மூடியைத் திறந்தார். கண்கள் அடையவே இல்லை. நன்றாக விழித்துக்கொண்டு படுத்திருப்பது போலிருந்தது.  நான்குபேர்  சேர்ந்து பொணத்தைத் தூக்கி வந்து வாசலில் போடப்பட்ட கட்டலில் குளிப்பாட்டுவதற்காகப் படுக்கவைத்தனர்.

    “அரப்பு வெக்கறவங்கல்லா வந்து வையுங்க…”

    ஒரு சின்ன பானையில் அரப்பும் இன்னொரு பானையில் தேங்காய் எண்ணெயும், ஒரு குண்டாவில் தண்ணியும் தலைமாட்டில் வைக்கப்பட்டன. ஒவ்வொருவராக வந்து இடது கையில் எண்ணெய் தொட்டு அரப்பைத்தொட்டு தலையில் வைத்து விட்டு அங்கேயே பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரில் கையை நனைத்துத் தொங்கவிடப்பட்டிருந்த துணியில் துடைத்து விட்டுச் சென்றனர்.

    “பெரியவரு கையில பணம் வெச்சு வாங்கறவங்கெல்லா வாங்குங்க…..” என்றுகூறிவிட்டு   மாரிமுத்து மேனியில் போர்த்தியிருந்த வெள்ளைத் துணியை அகற்றினார்.

    ‘சுடுகாட்டுக்கு எடுத்திட்டுப்போகும்போது கண்களை மூடிவிட்டு ஒடனே தூக்கிக்கலாம்னு மாரிமுத்து எண்ணினார். என்னமோ சொல்ல வந்து சொல்ல முடியாம போயிருப்பாரோ கண்கள் திறந்து இருக்கக்கூடாது.’

    கையில் பணம் வைத்து வாங்குவதற்காகக் கையை விரித்த போது வலது கை இறுக மூடியிருந்தது. மாரிமுத்து வருணை   அழைத்தார்.

     “இங்க பாருப்பா, அப்பா கையை இறுக்கமா மூடி இருக்காரு கையில் என்னமோ வச்சிருக்காரு.”

    விரல்களைப் பலவந்தமாக விரித்தார் ஒரு தினசரி கேலண்டர் பேப்பரை இறுக்கமாகப் பிடித்திருந்தார். வருண் அதை எடுத்து மெதுவாக விரித்துப்பார்த்தான்.  கைகள்  ஆடி ஆடி எழுதப்பட்டதுபோல எழுத்துகள் கோணல் மாணலாக இருந்தன. வருண் அக்கேலண்டர் பேப்பரை பெரிய அத்தையிடம் கொடுத்தான். பெரிய அத்தைக்குக் கண்கள் சரியாகத்தெரியாததால் அருகில் நின்றிருந்த இன்னொரு தங்கையும் எட்டிப்பார்த்தாள்.  இருவரும்  சேர்ந்து வாசித்துப் பார்த்தனர்.

    “சா….ப்பி…..ட்டு போ…ங்….க”

    என்று கிறுக்கப்பட்டிருந்தது.  வாசித்ததும் அனைவரின் அழுகை சத்தமும் அதிகமானது.

    ராமகிருஷ்ணனின் கண்கள்  மெதுவாகத் தானாகவே அடைந்தன.

    Share