Presentation1

அன்பினிய வல்லமை வாசகர்களே!

அன்பான வணக்கங்களுடன் இங்கிலாந்திலிருந்து சக்தி சக்திதாசன்.

நானிங்கு நலமே நீங்களும் அதேபோல நலமுடன், மகிழ்வாக இருப்பீர்கள் என்பதே என் நம்பிக்கை.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழின் பால் இருக்கும் அதீத மொழியன்பு பற்றிய பகிர்வே இது.

ஆம் கடந்த ஜூன் 27, 28ம் தேதிகளில் இங்கிலாந்தில் அல்பேர்ட்டன் (Alperton)  எனும் இடத்தில் நிகழ்ந்த மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற “கம்பன் விழா ” பற்றிய பகிர்வே இது.

தமிழ் இலக்கியத்தின் உயரிய மலைச்சிகரமாக விளங்கும் கம்பன், தனது “கம்பராமாயணம்” மூலம் தமிழுக்கு அளித்த செழுமை அளவிட முடியாதது.

வால்மீகியின் ஆதாரத்தைத் தமிழ்மொழியின் இனிமையாலும் கற்பனையின் வளமாலும் புதுப்பித்து, தமிழ் மக்களின் உள்ளங்களில் நிரந்தர இடம்பிடித்தவர் கம்பன்.

அவரது கவித்திறன் வெறும் இலக்கியச் சிறப்பாக மட்டுமல்லாது, ஆன்மீக ஆழமும் மனிதநேய சிந்தனைகளும் நிறைந்ததாகும்.

ஒவ்வொரு அடியிலும் ஒலிக்கும் இசைநயம், சொல் வளம், உவமைச் செல்வம் ஆகியவை கம்பனை உலகப் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராக உயர்த்துகின்றன.

இவ்வாறான கம்பனின் பெருமையையும், அவரது இலக்கியப் பாரம்பரியத்தையும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உயிர்ப்பித்து நிலைநிறுத்தும் முயற்சியாகவே இத்தகைய கம்பன் விழாக்கள் விளங்குகின்றன என்பது பெருமிதம் அளிக்கிறது.

இலண்டனில் இயங்கும் “அறிவு அறக்கட்டளை” அமைப்பின் கீழ் ஈழத்தின் கம்பன் கழக புகழ், ஆன்மீக அறிவுசார் அறிஞர் “கம்பவாரிதி ஜெயராஜ்” அவர்களின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்டது இலண்டன் கம்பன் கழக கட்டமைப்பு.

அவரின் வழி காட்டுதலில் இவ்விழா மூன்றாவது ஆண்டாக நிகழப்பெற்றது.

இம்முறை விழாவிற்கு தவிர்க்க முடியாத காரணங்களினால் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களினால் கலந்து கொள்ள முடியவில்லை.

இருப்பினும் விழா அவரது வழிகாட்டுதலிலும் ஆசிகளுடனுமே நடைபெற்றது என்பதை விழா அமைப்பாளர்களின் உரைகளின் மூலம் அறிய முடிந்தது.

இம்முறையும் விழா சிறப்பு நிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட நான்கு பேரை கெளரவ விருதளித்து பெருமைப்படுத்தியது விழாவுக்கு மேலும் சிறப்பு ஏற்ப்டுத்தியது.

ஈழத்தின் முன்னோடி ஊடகவியாளாலராக எமக்கெல்லா உதாரணமாகத் திகழும் ஊடகவியலாளர் “ஈழநாடு மாலி” என்று அன்போடு அழைக்கப்படும் அண்ணன் மகாலிங்கசிவம் முதலாவதாக கெளரவிக்கப்பட்டு “சமூகசிரோன்மணி” என்ற பட்டம் அளிக்கப்பட்டது உள்ளத்துக்கு இதமளித்தது.

நான் கல்வி பயின்ற எனது பழைய பாடசாலை யாழ் பரியோவான் கல்லூரியின் (Jaffna St. Johns College) எனது முன்னாள் ஆசிரியர் அமரர் கனகராஜா அவர்களின் மைந்தனும் இன்றைய இங்கிலாந்து லெஸ்டர் பல்கலைக்கழக துணைவேந்தர் நிஷான் கனகராஜா.

எத்தனையோ தசாப்தங்களுக்கு பின்பு இங்கிலாந்து அரசின் கெளரவமான “சார்” பட்டம் பெற்ற இலங்கைத் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவருக்கு இங்கிலாந்து அரசர் “சார்ள்ஸ்” அவர்களால் 2025 ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இவர் இலண்டன் கம்பன் விழாவினரால் “ஞானசாகரர்” பட்டம் வழங்கி கெரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து ஈழத்திலே பிறந்து  தந்தை மூலம் இசை பயின்று இந்தியாவில் இசை வித்துவான் அமரர் கல்யாணராமன் அவர்களின் மாணவியும் துணைவியுமாகிய திருமதி பூஷணி கல்யாணராமன் அம்மா அவர்கள் “இசைப்பேரரசி” பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

நான்காவதாக இலக்கிய ஆர்வலர், சமூக சேவையாளர், இலண்டன் ஐயப்பன் கோயில் அறங்காவலர் திரு. மீ. இராஜகோபாலன் அவர்களின் சமூகசேவை அர்ப்பணிப்புக்காக “சமூகசிரோன்மணி” பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

பல அருமையான நிகழ்ச்சிகள் இரண்டு தினங்களும் அமைப்பாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு விமரிசையாக நிகழ்ந்தது.

முதலாம் நாளான 27ம் தேதி, முதல் அமர்வில் அரங்கில் நாளைய தலைமுறை தமிழ் பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்ள உதவும் முகமாக “இளையோர் அரங்கம்” நிகழ்ந்தது.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கியவிடயம் இந்நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தேன் தமிழை நாவில் கொண்டு சுவைபட பேசும் தம்பி சிவராஜா விசாகன் பணியாற்றியதே!

இது இனிவரும் எம் இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத செயலாகக் காண்கிறேன்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் கடல்கடந்து வந்திருந்தார்கள்.

தமிழகத்திலிருந்து இலக்கியச்சுடர் இராமலிங்கம், தமிழ்ச்சுடர் தாமல் கோ. சரவணன் மற்றும் ஈழத்திலிருந்து செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ஐயா, பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் இவர்களோடு இவர்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து பேசும் வல்லவரான நன் லண்டன் கோமதி சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

27ம்தேதி முதல் அமர்வில், இளையோர் அரங்கம், தாமல் கோ. சரவணன் தலைமையிலும் பட்டிமன்றம் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தலைமையிலும் நடைபெற்றது.

இரண்டாம் அமர்வில் வழக்காடு மன்றம் இலக்கியச்சுடர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இரண்டாம் நாள் 28.06.2026 முதல் அமர்வில் சிந்தனை அரங்கம் பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் தலைமையிலும், இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்களின் தனியுரையும் நிகழ்ந்தது.

இரண்டாம் அமர்வில் சைவப்புலவர் சிவானந்தன் அவர்களின் தனியுரையும், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ஐயா அவர்களின் தனியுரையும் இடம்பெற்றது.

அத்தோடு இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்களின் தலைமையில் வழக்காடு மன்றம் நிகழ்ந்தது.

மிகவும் இனிமையாக நிகழ்ந்த இம்மனநிறைவான நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத காரணத்தினால் இரண்டாம் நாளே என்னால் கலந்து கொள்ள முடிந்தது.

பலகாலமாக சந்திக்காத பல பழைய இலக்கிய ஆர்வல உறவுகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

இரண்டு நாட்களும் சிற்றுண்டியோடு பானங்களும் இரவு போசனமும் வழங்கப்பட்டது.

இந்நேரத்தில் இவ்விழா சிறப்புற நிகழ பொருளுதவி, சரீர உதவி வழங்கியவர்களை நன்றியோடு நினைவுகூர்வது எமது கடமை.

இது போன்ற நிகழ்வுகள் புலம்பெயர் நிலங்களில் அந்நாட்டவரின் வசதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வது தமிழின் பெருமைக்கு மேலுமவிழா  பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த நிகழ்வினைக் குறித்து என்பாடல் வரிகளில் செயற்கை நுண்ணறிவின் உதவியோடு உருவாக்கப்பட்ட பாடலை என் காணிக்கையாகவும் நன்றிகளுடனும் சமர்பித்திருக்கிறேன்.

கம்பனைப் போற்றும் தமிழன்பன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.