63 நாயன்மார்கள் வரலாறு – 33 சாக்கிய நாயனார்

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்ற்!

வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி!

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!

 

    

தொண்டை நாட்டில், திருச்சங்க மங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சாக்கிய நாயனார். சாக்கியர் என்பது சாக்கிய மதத்தைச் சார்ந்தவர் என்ற பொருளாகும். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் தெரியவில்லை. இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அனைத்து உயிர்களிடத்தும் அருளுடையவராக விளங்கிய சாக்கியர், பௌத்த மதத்தில் ஞானம் பெற முயன்றவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர் நெறி என்று உணர்ந்தார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதரைத் தொழுதார். ஆனாலும் அவர் சாக்கிய உடையை மாற்றிக் கொள்ளாமல் அதே உடையிலேயே இருந்தார்.

“வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

 என்று சுந்தரமூர்த்தி நாயனார் இவரைப் புகழ்கின்றார்.

 

காணாத அருவினுக்கும்

  உருவினுக்கும் காரணமாய்

நீள் நாகம் அணிந்தார்க்கு

  நிகழ் குறியாம் சிவலிங்கம்

நாணாது நேடியமால் நான்

  முகனும் காண நடுச்

சேணாரும் தழல் பிழம்பாய்த்

  தோன்றிது தெளிந்தாராய்.

 

சிவலிங்க வழிபாடே சிறந்தது என்று மனம் தெளிந்த சாக்கியர் உள்ளம், நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்ட பின்னரே உண்ண வேண்டும் என்ற முடிவை மேற்கொண்டார். வெட்டவெளியில் கேட்பாரற்று இருந்த ஒரு சிவலிங்கத்தைக் கண்டு களிப்புற்றவர், செய்வதறியாது அருகிலிருந்த ஒரு கல்லை எடுத்து சிவலிங்கத்தின் மீது எறிந்து வழிபட்டபோது சிவபெருமானும் அக்கல் அடியை இனிமையாக அன்புடன் ஏற்றுக்கொண்டார்.  இறைவன் மீது கொண்ட அளவிலாத அன்பினாலே அவன் திருவருளையே நினைந்து தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே கல் எறிந்த சாக்கியரை எம்பெருமான் மகிழ்ந்து ஏற்றார். மறுநாளும் சாக்கியர் சிவபெருமானைக் கண்டு களிக்க வந்தார். முதல் நாள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி எண்ணிப் பார்த்தவர், தாம் செய்த அச்செயல் இறைவன் திருவருளாலே நடந்துள்ளது என்று உணர்ந்து நாளும் அதையேச் செய்வது இறைவன் திருவுளம் என்றும் உணர்ந்தார்.

 

சாக்கியரின் கல்லெறியும் வழிபாடு இங்கனமே தொடர்ந்தது. ஒரு நாள் கல் வழிபாட்டைச் செய்ய மறந்து உணவு உண்ண அமர்ந்தவர், எம்பெருமானுக்கு கல்லெறியாமல் உண்ண வந்துவிட்டோமே என்று பேரன்புடன் கல்லை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார் சாக்கியர். அப்போது அவர் முன் சிவபெருமான் உமாதேவியுடன் தோன்றி திருக்காட்சி வழங்கினார். தேவாதி தேவர்களுக்கும் கிடைக்காத பெரும்பேறு சாக்கிய நாயனாருக்குக் கிடைத்தது. அவருக்கு சிவலோகமும் அன்போடு வழங்கினார் எம்பெருமான்.

 

சாக்கிய நாயனார் புராணம் சொல்லும் கருத்து

 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரே நாயனார் சாக்கிய நாயனார். இவர் அனைத்து உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார். சிவபெருமானை வழிபடுவோர் மலர் தூவியும், பதிகங்கள் பாடியும் வழிபடுவது வழக்கம். ஆனால் சிவபெருமானைக் கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார்.

பிறப்பதும், இறப்பதும் மனித இனத்தின் சாபக்கேடு என்பதை உணர்ந்த சாக்கிய நாயனார், நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்லப் போகிறோம் என்றும் சிந்திக்க ஆரம்பித்தார். பிறப்பையும், இறப்பையும் தவிர்க்க வேண்டுமென்ற கருத்து அவர் எண்ணத்தில் ஆழமாக ஊன்றிவிட்டது. கல்வியில் கரையிலாக் காஞ்சி மாநகருக்குச் சென்றார். காஞ்சி மாநகர் தத்துவக் கோட்டையாகத் திகழ்ந்த பொற்காலம் அது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சீன நாட்டில் இருந்து பலர் காஞ்சி மாநகர் வந்து தத்துவம் பயின்று சென்றதாகவும் வரலாறு அறியத் தருகின்றது. சாக்கிய நாயனார் காஞ்சி மாநகர் சென்று பல நூல்களை ஆராய்ந்து, பல அறிஞர்களின் உரைகளைக் கேட்டுத் தாமும் அறிஞராய்த் திகழ்ந்தார்.

 

பௌத்தர்களின் அரிய  “திரிபிடகம்” என்ற கலை நூலைக் கற்று அதன் துணிபாகப் பெறப்பட்ட முடிபும் இன்னும் மற்றப் புறச்சமயங்களின் சார்பாகக் கூறும் முடிவுகளும் உண்மைப் பொருள் அல்ல என்ற உண்மையைத் தெளிந்தார். தத்துவத்தின் ஈர்ப்பால் சாக்கிய மதத்தைச் சேர்ந்தவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர்நெறி என உணர்ந்தார். ஆனாலும் சாக்கியர் தோற்றத்திலேயே இருந்தார். சிவநெறியில் சிந்தை இருந்தாலும் புறத்தே சிவ வேடம் தரிக்காமல் சாக்கிய வேடத்திலேயே இருந்தார்.

 

 

எந்நிலையில் நின்றாலும்

  எக்கோலம் கொண்டாலும்

மன்னிய சீர்ச் சங்கரன் தாள்

  மறவாமை பொருள் என்றே

துன்னிய வேடம் தன்னைத்

  துறவாதே தூய சிவம்

தன்னை மிகும் அன்பினால்

  மறவாமை தலை நிற்பார்

 

வினை என்பது சடம். வினைச்செயல் செய்கின்ற உயிர் செய்கின்ற செயல், செயலுக்கேற்ற பலன், பலனைக் கூட்டுகின்ற இறைவன் இந்த நான்கும் சைவத்திற்கு அடிப்படை. இறைவன் வினைப்பயனைக் கூட்டுவிக்கின்றான். எந்த நிலையில் ஒருவர் நின்றாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், நிலையான சிறப்புடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப் பொருளாகும், எனத் துணிந்து சாக்கியர் வேடம் தரித்தவாறே சிவபெருமானை வணங்கி வந்தார்.

 

செய்வினையும் செய்வானும் அதன்

  பயனும் கொடுப்பானும்

மெய் வகையால் நான்காகும் விதித்த

  பொருள் எனக் கொண்டே

இவ்வியல்பு சைவநெறி அல்ல

  வற்றுக்கு இல்லை என

உய்வகையால் பொருள் சிவன் என்று

  அருளாலே உணர்ந்து அறிந்தார்.

 

கண்ணுக்குத் தெரியாத அருவமாய் உள்ள மேனிக்கும், கண்ணுக்குத் தெரியும் உருவ மேனிக்கும் மூலமான இருப்பிடமாகி, நீண்ட பாம்பினை அணிந்த எம்பெருமான் சிவனை அறிந்து வழிபட சிறந்த அடையாளமான குறியாய் விளங்கும் சிவலிங்கம் தேடிய திருமாலும், நான்முகனும் காணுமாறு அவர்கள் நடுவே அனல் தூணாகித் தோன்றிய வடிவமே ஆகும் எனத் தெளிவு கொண்டார்.

 

செய்யும் வினை ஒன்று. செய்பவனான கருத்தா ஒன்று. பயன் ஒன்று. அதனை வழங்கி ஊட்டுபவனான இறைவன் ஒன்று என உண்மை காணும் வகையினால், விதியினால் கிடைக்கும் பொருட்கள் நான்காகும் என்ற தெளிவும் கொண்டார். இந்தச் சிறப்பு இயல்புநிலை சைவநெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிபையும், நிலை பெறும் தவத்தால் சிவபெருமானின் துணையால் பொருளாவது சிவனே ஆவார் என்பதனையும் உணர்ந்து அறிந்து கொண்டார்.

 

அகம் நிறைந்த பேர்

  உவகை அடங்காத ஆதரவால்

மகவு மகிழ்ந்து உவப்பார்கள்

  வன்மை புரிசெயலினால்

இகழ்வனவே செய்தாலும் இளம்

  புதல்வர்க்கு இன்பமே

நிகழும் அது போல் அதற்கு

  நீள் சடையார் தாம் மகிழ்வார்.

 

எப்போதும் செயலுக்கு முக்கியத்துவம் இல்லை. செயல்புரிவார் உள்ளத்தில் திகழும் நினைவுகளுக்கே முதன்மை கொடுக்கிறோம்.

 

கல்லாலே எறிந்ததுவும் அன்பான

  படி காணில்

வில்வேடர் செருப்பு அடியும்

  திருமுடியில் மேவிற்றால்

நல்லார் மற்று அவர் செய்கை

  அன்பாலே நயந்து அதனை

அல்லாதார் கல் என்பார்

  அரனார்க்கு அஃது அலராமால்.

 

சாக்கிய நாயனார் அச்செயல் தொடங்கிய நாளில் இறைவர் அருள் செய்த அச்செயல் இடையறாது தொடர்ந்து செல்லும் கடமையை எண்ணுபவராய்க் கல்லைச் சிவலிங்கத்தின்மீது எறிபவராய்த் துவராடையை அணிகின்ற சாக்கிய வேடத்தையும் தொடர்ந்தார். பெருந்தவமுடைய சாக்கிய நாயனார் சிவபெருமானின் அருட்செயலே அனைத்தும் என்ற உணர்வுடையவராக விளங்கினார். கல்லால் எறிந்த செயலும் அன்பால் செய்யும் தொண்டே என்பதற்கு ஆதாரமாக, வில்வேடரான கண்ணப்பரின் செருப்படியும், இறைவரின் திருமுடியில் பொருந்தப் பெற்ற தன்மையை அறிவோம். நாயனார் அன்பால் விரும்பிய அச்செயலை, அவர் எறிந்தது கல் என்பர் அறியாதார். ஆனால் அது எம்பெருமான் சிவனுக்கு மனமிக்க மலரேயாகும்.

 

சிவபெருமானை வழிபட தூய அன்பும், உண்மையான பக்தியும் இருந்தால் போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார். வீரட்டானேசுவரருக்கு எதிரே சாக்கிய நாயனார் திருமேனி கையில் கல்லுடன் காணப்படுகிறது. வீரட்டானேசுவரர் திருமேனி மீது சாக்கியர் கல்லால் எறிந்ததால் ஏற்பட்ட வடுவும் காணப்படுகிறது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

 

“திருச்சிற்றம்பலம்”

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.