Blog

  • பழகத் தெரிய வேணும் – 94

    பழகத் தெரிய வேணும் – 94

    நிர்மலா ராகவன்

    வாழ்க்கையும் பள்ளிதான்

    ஒரு சிறுமி தாயிடம் வம்பு வளர்த்தாள்: “எனக்குப் பிடிக்காததை எல்லாம் உடம்புக்கு நல்லதுங்கிறே!”

    இருபது வயதானபின்பும், சாப்பிடுவதும், விளையாடுவதும்தான் சிலருக்குப் பிடித்த விஷயங்கள்.

    அவர்களுடன் இணைந்து விளையாடியவர்களுக்குத் தனியாகக் குடும்பம் அமைந்துவிட்டால், பிறருக்காக நேரம் ஒதுக்குவார்களா என்பதை யோசிப்பதில்லை. தனித்துப்போவார்கள்.

    சிறு வயதில் நட்பு

    குழந்தைகளுக்கு நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு தெரியாது. யாராவது அவர்களைப் பாராட்டினால், அவர்களைப் பிடித்துப்போய்விடும்.

    பதினெட்டு வயதுவரை, குழந்தைகளைப் பாதுகாக்கக் கூறவேண்டிய அறிவுரை:

    1. யாராவது புகழ்ந்தால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே! `நன்றி’ என்று சொல்லிவிட்டு, போய்க்கொண்டே இரு. தலைக்கனம் வந்தால், வாழ்க்கை சறுக்கிவிடும்.
    2. உன்னைவிட ஓரிரு வயது மூத்தவர்களுடன் மட்டுமே பழகுவது நல்லது. ஏனெனில், உன்னைவிட வயதில் பெரியவர்கள், “நீ எவ்வளவு புத்திசாலி! அழகு!” என்று புகழ்ந்தால், அது அனேகமாக சுயநலத்திற்காக இருக்கும். உன்னைத் தவறான முறையில் நடக்கத் தூண்ட அவர்களுக்குத் தெரிந்த வழி அது.

    பாடம் படிக்கப் பிடிக்காது!

    அநேகமாக, பாலர் பள்ளியிலிருந்து எல்லா மாணவர்களும் சொல்லிவருவதுதான் இது. உரக்கச் சொல்லாவிட்டாலும், கல்லூரி மாணவர்களுக்குக்கூட கல்வி பயில்வதே கசப்பாக இருக்கும். கல்வி பயின்றால்தான் அறிவு வளரும், பிறர் மதிக்க வாழலாம் என்பதைப் பலரும் உணர்வதில்லை.

    `படிக்காத மேதை’ என்று சிலரைக் குறிப்பிடுகிறோம். அவர்களுடைய அறிவை வாழ்க்கையில் அடைந்த அனுபவங்களிலிருந்து பெற்றிருப்பார்கள்.

    வேறு சிலர், காலம் கடந்து, தாம் செய்த தவறுகளால் ஓயாது வருந்துவார்கள். அதனால் அவர்களுடைய சுயமதிப்பு குன்றியிருக்கக்கூடும். அதை மறைக்க, பிறருக்கு ஆலோசனை அளிப்பார்கள்.

    கதை

    “நான்தான் குடித்துக் குடித்து, சீரழிந்துபோய்விட்டேன். நீங்களாவது அந்த விஷத்தைத் தொடாதீர்கள்!” என்று தன் மூன்று மகன்களிடம் முடிந்தபோதெல்லாம் கூறுவார் அந்த தந்தை. கூடியவரை, அவர்களைக் கட்டுப்படுத்தினார்.

    தந்தையைப் பார்த்துதான் ஆண்குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை. அவருடைய அறிவுரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை.

    அத்துடன், கட்டுப்பாடு பொறுக்கமுடியாது போகும்போது, அதை மீறி நடக்கத்தானே தோன்றும்?

    ஒரு மகனுக்குமட்டும் தான் செய்வது சரியா, தவறா என்ற குழப்பம் எழுந்துகொண்டே இருந்தது.

    நண்பர்களுடன் பேசிச் சிரித்தபடி ஓய்வு நேரத்தையெல்லாம் கழிப்பது உயர்ந்ததா, அல்லது தன் குடும்பத்தினருடன் சுமுகமாக இருப்பது பயனுள்ளதா என்று யோசித்தான். தான் மூப்படைந்ததும், எந்த நண்பனும் உறுதுணையாக இருக்கமாட்டான் என்று தந்தையின் வாழ்க்கை அளித்த பாடம் புரிந்தது.

    போதையில், அப்பா அம்மாவை அடிப்பதுபோல் தானும் அருமை மனைவியிடம் நடந்துகொண்டுவிடுவோமோ என்ற பயம்வேறு.

    மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, `ஏனோ இப்படிச் செய்கிறேன்! ஐ லவ் யூ!’ என்று சொல்வதில் உண்மை இருக்கமுடியுமா? (இந்த பசப்பல் பேச்சை நம்பும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்).

    எல்லாரையும், எப்போதும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்று தெளிவடைந்தான். பிறருடைய ஆமோதிப்புக்காக நடிக்கவேண்டுமா என்று சிந்தித்தபோது, தன்னைக் கட்டுப்படுத்தும் நண்பர்களை விட்டொழித்தால்தான் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றியது.

    யோசனை பலத்தது. எந்தப் பயனும் கிடையாது என்று உறுதியாகத் தெரிந்தபின், ஒரு செயலை விட்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்! இல்லாவிட்டால், அதையே பலமுறை செய்வோம். நேரம்தான் வீணாகும்.

    பெருமுயற்சி எடுத்து அப்பழக்கத்தை விட்டொழித்தான்.

    அதற்குப் பிறகும், உடனே நிம்மதி கிட்டவில்லை.

    `நீங்கள் செய்வது சரியில்லை!’ என்று இவன் புத்திகூறுவதுபோல் எண்ணி நண்பர்கள் ஆத்திரப்பட்டார்கள். அவர்களின் கேலி, கோபம் இவற்றைச் சமாளிக்க நேர்ந்தது.

    பொது இடங்களில் அவனைப் பார்க்கும்போது, “நீ குடியை நிறுத்திவிட்டதால், இன்று வழக்கத்தைவிட பாதிதான் வாங்கியிருக்கிறார்கள்!” என்று, கண்டபடி கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.

    குடும்பத்தினரின் அன்பால் அவர்களது போக்கை அலட்சியப்படுத்தப்படுத்த முடிந்தது.

    நாளடைவில், அவர்களிடம் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, அவர்களை நாடியதில் தன் தவறும் இருக்கிறது என்று ஒத்துக்கொண்டான். ஆனால், அப்போது கற்ற பாடத்தை மறக்கவில்லை.

    வாழ்க்கையில் மாறுதல்கள் நிகழத்தான் செய்யும், மனிதர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை என்று உணர்ந்து அமைதியாக இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது.

    குற்ற உணர்வு, வஞ்சகம் செய்தவர்களின்மேல் கோபம் போன்ற எதிர்மறைக் குணங்கள் நீடித்தால் யாருக்கு நஷ்டம்? `அப்படிப்பட்டவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டோமே!’ என்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

    நமக்குப் பிடிக்காதவர்கள் மட்டுமில்லை, நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களையும் மட்டமாக நினைக்காதிருக்க, `நல்லவேளை, நானும் அவர்களைப்போல இல்லையே!’ என்று எண்ண ஆரம்பித்தால், வித்தியாசமாக இருப்பவர்களையும் ஏற்கமுடியும்.

    நம்மால் இயன்றதை, நமக்குப் பிடித்ததைச் செய்துவந்தால், அமைதி நம்மைவிட்டு விலகாது. நம்மைப்போன்ற பிறர் தாமே நம்மிடம் வருவார்கள். அதைவிட்டு, பிறருடன், துரத்தி அடிக்காத குறையாக, தொடர்புகொள்ளத் துடிப்பது ஏன்?

    யாருக்கு உதவலாம்?

    பிறருக்கு நன்மை செய்தால் புண்ணியம் என்று நம்மை நம்பவைத்திருக்கிறார்கள்.

    இதிலும் ஒரு சிக்கல். ஒருவருடைய தாராள மனப்பான்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நிறைய போலி மனிதர்கள் முளைப்பார்கள்.

    கதை

    மலேசிய தினசரிகளில் வெளியான அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலே எவர் மனமும் உருகிவிடும்.

    ஆரோக்கியம் மிகக் குன்றிய நிலையில் ஒரு நாய். அதை அணைத்தபடி ஒருவர். அவரைப்பற்றி அவரே அளித்த தகவல்:

    நான் ஒரு மிருக வைத்தியன். யாராலும் கவனிக்கப்படாது, தெருக்களில் நடமாடும் நாய்களை எனக்குச் சொந்தமான ஓரிடத்தில் வைத்துப் பராமரிக்க ஆரம்பித்தேன். இப்போது அதைப்போல் மூன்று இடங்கள். என் மனைவியும் எனக்கு ஆதரவாக உதவிபுரிகிறார். இந்த நாய்களுக்கான உணவு, மருந்து, கருத்தடைச் சிகிச்சை என்று நிறைய செலவழிக்க வேண்டியிருக்கிறது. யாராவது பண உதவி செய்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

    `இவ்வளவு நல்லவர்கள்கூட உலகில் இருப்பார்களா!’ என்று பிரமிக்கவைக்கும் அவருடைய தன்னலமற்ற சேவை.

    பல பத்திரிகைகளில் இம்மாதிரியான தகவலை அளித்து, லட்சக்கணக்கில் கொள்ளையடித்தபின் பிடிபட்டார். அவர் வைத்தியருமில்லை, அவருக்கு மனைவியும் கிடையாது என்பது கூடுதல் தகவல்.

    நாய்கள்?

    அவருடைய கற்பனையில்.

    சிலர் நம்மிடமிருந்து உதவியை எதிர்பார்ப்பார்கள். `எனக்காக அதைச் செய்துவிட்டீர்களா?’ என்று விடாக்கண்டனாக நம்மைத் துளைப்பார்கள். ஆனால், பிரதி உபகாரம் என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்கு எதற்காக உதவி புரிவது?

    உங்களுக்கு BP இருக்கா?

    இப்போதெல்லாம், ரத்த அழுத்தம் என்பது நாற்பது வயதாகிவிட்டாலே ஒருவர் எதிர்பார்க்கும் ஒன்றாகிவிட்டது.

    குடும்பத்தில், உத்தியோகம் பார்க்கும் இடத்தில், கடைகண்ணிகளில் – இப்படிப் பல இடங்களிலும் தாம் நினைத்தபடியே எல்லாம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஆகிற காரியமா? அப்படி நடக்காவிட்டால், ஆத்திரம் எழுகிறது. ஒருவர் ஆத்திரப்படுவதால், பிறர் மாறிவிடப்போகிறார்களா, என்ன! அவர் உடல்நிலைதான் கெடும்.

    என் தோழி அவளது கணவரைப்பற்றி ஆயாசத்துடன் கூறியது: “அரசியல்வாதிகள் மற்றும் கடைக்காரர்கள் செய்யும் ஊழல்களைத் தினசரியில் படித்துவிட்டுக் குமுறுவார். ரத்தக்கொதிப்பு ஏறிவிடும். இப்போது, பக்கவாதம் வந்து, படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரைக் கவனிப்பதற்குள் என் பிராணன் போகிறது!”

    சுய பரிதாபத்துடன் பிறரிடம் நம்மைப்பற்றிக் கூறிக்கொள்வது வீண்முயற்சி.

    “சிலருக்குத்தான் வாழ்க்கை இப்படி அமைகிறது!” என்று ஏக்கப் பெருமூச்சுடன், தம் குறைகளைப் பிறரிடம் கூறி ஆறுதல்பெற முயற்சிப்பவரின் புலம்பலைப் பலர் மரியாதை நிமித்தம் கேட்டுவைப்பார்கள். ஒரு சிலர் உள்ளூர மகிழ்வார்கள் – தமக்கு இப்படியெல்லாம் நேரவில்லையே என்று!

    வாழ்க்கை என்பது நாம் அமைத்துக்கொள்வதுதான்.

    பிறருடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடப்பதுதான் நல்ல குணம் என்றிருந்தால், தன் தேவைகள் என்ன, எது மகிழ்ச்சியைத் தரும் என்பதே ஒருவருக்குப் புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.

    Share
  • முடிவைத் தேர்வு செய்

    முடிவைத் தேர்வு செய்

    சி. ஜெயபாரதன், கனடா

    வையத்தில்
    வாழ நினைப்போர் எல்லாம்
    வாழ முடியாது,
    தீராத நோயில், வலியில்
    துடித்து,
    நாராகக் கிழிந்து போவது,
    கோரக் காட்சி !
    கண்ணீர் சிந்தி, சிந்தி
    இறைவனை
    ஆரா திக்கும் போது,
    காலன் வந்து
    கதவருகே நிற்பான் !
    பிரியும் நேரம்
    வந்து விட்ட தென அறி !

    உனக்குத் தனியாக
    பிரமிட் ஒன்று
    கட்டி எழுப்ப வேண்டுமா ?
    கல் கோபுரம் கட்ட

    எத்தனை ஆயிரம் அடிமைகள்
    செத்தனரோ ?

    பெரோ வேந்தர்,
    பிளான் செய்தார் தமக்கு !
    மீளாத

    ஓய்வு உறக்கத்தில் தம்
    உயிரற்ற உடலுக்கு
    பெட்டிக்குள்
    அடங்கிப் போய்,
    பயணம்
    முடிந்து போனது !
    கறையான் தின்னாது,
    காலம் விழுங்காது,
    நாலாயிரம் ஆண்டுக்கு
    முந்தைய
    வரலாற்றை
    பிரமிட் கல் கோபுரம்
    எழுதியது.

    செத்த அழகி
    மும்தாஜ் நினைவுக்கோர்
    தாஜ்மகால் !
    எத்தனை அரிய
    பளிங்குப் புதை மாளிகை !
    சாக நினைப்பவர்
    சாகலாம்!
    வேக ஊர்தி உள்ளது !
    மருத்துவர் உதவும் கனிவு
    மருந்து.

    Share
  • மழையில் நனையும் பவழமல்லி

    மழையில் நனையும் பவழமல்லி

    மழையில் நனையும் பவழமல்லி ஒன்றைக் கண்டேன். காண்போரைக் கொள்ளை கொள்ளும் அந்தக் காட்சி இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நீருக்கு அடியிலும் நீந்தும் நீர்க்காக்கை

    நீருக்கு அடியிலும் நீந்தும் நீர்க்காக்கை

    நீர்க்காக்கை, ஓர் அரிய பறவை. இதனால் தரையில் நடக்கவும் தண்ணீருக்கு அடியில் நீந்தவும் பறக்கவும் முடியும். நீரிலும் நிலத்திலும் வானிலும் இயங்கும் வாகனங்களுக்கு இதுவே தூண்டுதலாக இருக்கலாம். இதோ இங்கே இந்த நீர்க்காக்கை, தண்ணீருக்கு அடியில் நீந்துவதையும் பிறகு சிறகடித்துப் பறப்பதையும் பாருங்கள்.

    Indian cormorant can walk, swim underwater and fly, a 3-in-1 bird. Here you can see this Little Cormorant is swimming underwater and flying. This might be an inspiration to ambitious cars that can travel on land, water and air.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரத்தில் வெள்ளம் வடிகிறது

    தாம்பரத்தில் வெள்ளம் வடிகிறது

    அடையாறு நதி உடைப்பு சரி செய்யப்பட்டதால், நிலைமை கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம் வடிந்து வருகிறது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • த.மு.மு.க.வின் படகுச் சேவை

    வெள்ளத்தில் ஒரு குடும்பம் சிக்கியுள்ளது என அறிந்தவுடன், ஆட்டோவில் படகினை ஏற்றிக்கொண்டு களத்துக்கு விரைகின்றது த.மு.மு.க.வின் படகு அணி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கரைமீறும் அடையாறு

    கரைமீறும் அடையாறு

    நுங்கும் நுரையுமாக, சுழிப்பும் அலையுமாக, கழிவும் கசடுமாக, சிரிப்பும் சீற்றமுமாக, துடிப்பும் துள்ளலுமாக கரைமீறிப் பாய்கிறது அடையாறு. ஒரே நேரத்தில் மேலே கனமழை, கீழே பெருவெள்ளம் என்ற காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? ஆஹா என்று எழுந்து அதிர நடக்கும் அடையாற்றின் பேரழகு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாவலர் பெருமான், காலத்தின் குரலாய் நிற்கின்றார்

    நாவலர் பெருமான், காலத்தின் குரலாய் நிற்கின்றார்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    பக்தி இயக்கத்தின் முதற்குரலாய் தமிழ் உலகில் ஒலித்த குரல், ஒரு பெண்மணியின் குரல். அவர்தான் காரைக்கால் தந்த பெருமாட்டிதவப் புதல்வி காரைக்கால் அம்மையார் ஆவர்.

    இவர் சைவ பக்தி இயக்கத்தின் எழுஞாயிறாய் – பின்னர் வந்த அடியார்கள் அனைவருக்குமே ஆதாரமான குரலாய் விளங்குகிறார் எனலாம். சைவத் திருமுறைகளின் தோற்றத்தின் குரலாயும் நிற்கின்றார். இவர் சைவத்தைக் காத்திடக் கையில் எடுத்தது அமிர்தமாம் தமிழ் மொழியை. தமிழ் மொழியில் – அற்புதத் திருவந்தாதிதிரவிரட்டை மணிமாலை,திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகியவற்றை அளித்து ஆன்மீகக் குரலாய் ஒலித்து நிற்கிறார். இவரின் பின்னர் வந்த அடியார்கள் பலரும்அம்மையாரைப் பின்பற்றி இறைபுகழ் பரப்புவதில் தங்களின் குரலை ஒலித்து நிற்கிறார்கள்.

    ஆழ்வார்கள் வந்தார்கள். ஆளுடைய பிள்ளையார் வந்தார். அப்பர் வந்தார். ஆலால சுந்தரர் வந்தார். வாதவூர் வண்டும் வந்ததது. இவர்கள் அனைவரின் குரல்களும் தமி ழில் சைவத்தை நிலை நாட்டிட ஓங்கி ஒலித்து நின்றன எனலாம். இந்தக் குரல்கள் ஒலித்த காலம் வேறு. அந்தக்காலச் சூழலும் வேறு. அவர்களின் குரலில் காணப்பட்ட தத்துவங்களும் வேறு என்றுதான் கருதிட வேண்டும். அவர்கள் அனைவருமே அந்தக் கால தமிழ் இலக்கியத்தின் போக்கினை மனமிருத்தி பாடல்களை ஊடகமாக கொண்டே  தமது குரலை வெளிப்படுத்தும் கட்டாயம் காணப்பட்டது. ஏனெனில் தமிழ் இலக்கியத்தை ஆட்கொண்டு இருந்த வடிவம் பாட்டு அல்லது செய்யுள் வடிவமே யாகும்.

    காலம் மாறுகிறது. கோலமும் மாறுகிறது.சமூகத்தின் சிந்தனையும் மாறுகிறது. ஆனால் ஆன்மீகம் என்பது மட்டும் என்றுமே மாறிவிட மாட்டது. காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப கருத்து மோதல்களும்பிற மோதல்களும் பெருகுவது மட்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே அமைந்துவிடும். அத்தகைய வேளையில் சமயம் தளரும். சமய தத்துவங்கள் கேள்விக்குறி யாக்கப்படும். அன்னிய சக்திகளால் – மொழியும் சமயமுமே கேலிக்கு உரியதாக ஆகும் நிலையும் ஏற்பட்டு விடலாம். அப்படியான நிலை தோன்றும் வேளை – அந்த அந்தகார இருளில் சிக்கித்தவிக்கும் மக்களைசமுதாயத்தைக் காப்பாற்ற ஒரு குரல் கட்டாயம் தேவைப்படுகிறது. அப்படியான ஒரு தைரியம் வாய்ந்த தகுதியான குரலை ஓங்கி ஒலிக்க வைப்பதற்கு ஒருவரை ஆண்டவன் கட்டாயம் அனுப்பியே வைப்பான், அப்படி அனுப்பி வைக்கப்படு பவர் காலத்தின் குரலாய் வரலாற்றில் இடம் பிடித்தே நிற்பார். அப்படி “காலத்தின் குரலாய்” ஆகி நிற்பவர்தான் நல்லை நகர் தந்த நாவலர் பெருமான் ஆவர்.

    அன்னியரான ஆங்கிலேயர் ஆதிக்கம்.அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களின் ஆதரவுடன் அன்னிய மதமான கிறித்தவம் பரப்பப்படுகிறது. மதத்தைப் பரப்புவதற்கு அரசாங்கமே பக்கத்துணையாய்பணமும் கொடுக்கிறது. பாதுகாப்பும் கொடுக்கிறது. சலுகைகளைக் காட்டி, கிறித்தவ சபையினரும் அதன் மதபோதகர்களும் சைவர்களை மதமாற்றம் செய்வதில் தீவிரமாய் ஈடுபடுகின்றனர். சலுகைகளைக் கண்டவர்கள் சலனப்படுகிறார்கள். சொந்தச் சொத்தான சைவத்தை மறக்கிறார்கள். கிடைத்த அற்பச் சலுகைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளுகிறார்கள். என்றாலும் அவர்கள் மனத்தில் தங்களின் சமயம் ஒட்டிக்கொண்டிருப்பதை அகற்றிடவே முடியவில்லை. அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் திரிசங்கு நிலையிலை பலர் இருந்தார்கள் என்பதை பல செய்திகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.

    நாவலர் பெருமான் பாரம்பரியமிக்க சைவக்குடும்பத்தில் சைவச் சூழலில் பிறந்தவர். அவர் பிறந்த இடமே கோவில் அருகில் இருக்கும் இடமாகும். திருநீறு பூசி சிவனைத் தியானிக்கும் குடும்பந்தான் நாவரின் குடும்பம். நமச்சிவாய என்னும் நாமமே நம்மை என்றும் காத்திடும் என்னும் அசையா நம்பிக்கை கொண்ட குடும்பந்தான் நாவலர் குடும்பம். ஆசார அனுட்டாங்களை அனுட்டித்து சைவத்தை உயிராக எண்ணிய குடும் பந்தான் நாவலர் குடும்பம். அந்தக் குடும்பத்தில் பிறந்ததால் நாவலரின் உணர் வெல் லாம் சிவனும்சைவமுமே நிறைந்து காணப்பட்டது. அதனால் அவர் சைவத் தைக் காத்திடும் குரலாய் அந்தக் காலத்தில் விளங்கும் கட்டாயம் ஏற்பட்டது.

    திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தமிழை முறையாகக் கற்றார். இலக்கியம் கற்றார். இலக்கணம் கற்றார். புராண இதிகாசங்களை எல்லாம் ஐயந்திரிபறக் கற்றார். அந்தக்கால சூழலுக்கு அமையபெற்றவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆங்கிலக் கல்வியைப் படிக்க பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆங்கிலக் கல்வியைக் கற்றால்த்தான் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்னும் நிலை மேலோங்கிக் காணப்பட்ட காலம் அது. தங்கள் பிள்ளை படித்து பெரிய பதவியில் அமரவேண்டும் என்று நாவலர் பெற்றாரும் எண்ணங் கொண்டிருந்தனர், ஆனால் இறைவன் திருவுள்ளமே வேறாக, மாறாகஅமைந்தது. இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியாய் விளங்கும் கல்லூரி யில்தான் நாவவர் ஆங்கிலக் கல்வியை மேற்கொண்டார்.

    சைவமும் சிவமும் உள்ளத்தில் நிறைந்திருக்க, கிறித்தவப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நிலை நாவலருக்கு ஏற்பட்டது. ஆங்கிலத்தை நன்றாகவே கற்றார். பள்ளியில் இருந்த பார்சிவல் பாதிரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டார். நாவலரின் தமிழ் மொழி ஆற்றலைக் கண்டு வியந்தார். அத்துடன் தங்களின் மொழியான ஆங்கிலத்தின் ஆற்றல் கண்டும் நாவலர்மீது தனிப்பட்ட பற்றும் பாசமும் கொண்டார் பார்சிவல் பாதிரியார் அவர்கள்.. அந்த பற்றினால் விவிலியத்தை தமிழில் மொழி பெயர்க்கும் பாரிய பொறுப்பினை வழங்கினார். நாவலரும் அப்பணியினை யாவரும் பாராட்டும் வகையில் செய்து முடித்தார். சைவத்தை மனம் நிறைத்த நாவலர் விவிலியத்தை எப்படி மொழி பெயர்க்க ஒப்புக்கொண்டார் என்பது ஒரு பெரும் புதிராகவே இருக்கிறதல்லவா! வேதங்களை வகைப்படுத்தி அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மாக்ஸ் முல்லர் என்னும் ஆங்கிலேய கிறித்தவராவர். திருவாசகத்தைக் கையிலெ டுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண, ஜி.யூ, போப் அவர்கள். இவர் தன்னை போப்பையர் என்று அழைத்ததாக அறிகின்றோம். ஆனால் அவர்கள் எவருமே தங்கள் மதத்தை விட்டு மற்றய மதத்துக்கு மாறவில்லை என்பது நோக்கத்தக்கது. அந்த வழியில்த்தான் நாவலர் பெருமானும் தன்னுடைய குருவின் சொற்களுக்கு மதிப்புக் கொடுக்கவே விவிலிய மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் அல்லவா ! மொழி பெயர்த்த நிலையில் நின்றுவிடுகிறார். சைவம்தான் அவரின் உணர்வுள் ஊறி இருந்தது.

    விவிலியத்தை மொழி பெயர்த்தபடியால் கிறித்தவம் பற்றிய நுட்பங்களை நாவலர் நன்கு தெளிவாகவே அறியும் வாய்ப்புக் கிட்டியது. இதனால் எதிர் வாதமிட வந்த அன்னிய மத போதகர்கள் வாய் பேசாது மெள்னியாய் ஆக்கிடும் வகையில் அவரின் குரல் ஓங்கி ஒலிக்கக் கூடியதாக இருந்தது என்பதை மனமிருத்தல் அவசியமாகும். சைவத் தையும் நன்கறிந்திருந்தார். கிறித்தவத்வத்தையும் உள்நுழைந்து அறிந்திருந்தார். இதனால் நாவலர் பெருமானின் குரல் அக்காலத்தில் வலிமைமிக்க குரலாய், மாற்று மதத்தினருக்குச் சிம்மக்குரலாய் அமைந்தது என்பதை மறுத்துரைத்துவிட முடியாது எனலாம்.

    நல்லவை எங்கிருந்தாலும் அதனை நாவலர் உள்வாங்கினார். அன்னிய மத போதகர்கள் தங்கள் மதத்தைப் பற்றி நல்ல அறிவு பெற்றிருந்தனர். தங்களின் மத த்தைப் பரப்புவதற்கு தேவாலயங்களைப் பயன்படுத்தி – தங்கள் மதம் தொடர்பான விளக்கங்களைத் தெளிவாகப் பிரசங்கம் மூலம் செய்தார்கள். இந்த நடை முறை நாவ லர் உள்ளத்துள் பதிந்து விட்டது. அன்னிய மதத்தார் இப்படிச் செய்வதால் பாமரமக்கள் அவர்கள் பக்கம் பார்ப்பதை அவர் உற்றுக் கவனித்தார். சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் மத்தியில் காணப்பட்ட நிலைமைகள் நாவலருக்கு ஒவ்வாததாய் அமைந்தது.

    கிறித்தவ பாதிரிமாரிடம் நிறைந்து காணபட்ட கல்வி அறிவு – சைவசமயக் குரு மாரிடம் காணப்படாமையினைப் பொறுக்க இயலா நிலையில்  நாவலரின் குரல் ஓங்கி ஒலித்துக் கண்டித்தே நின்றது. சைவத்துக்குப் புறம்பான நிகழ்வுகள் கோவில் களில் நிகழும் பொழுது நாவலரின் குரல் கோபத்துடன் எழுந்தே ஒலித்தது. சைவ ஆசாரங்கள் நிலை தளரும் பொழுது அவரின் குரல் ஆணி அடித்தாற் போலவே எங்கும் ஒலித்து நின்றது. கோவில்களில் பூசை செய்து நின்ற அந்தணக் குருமாரையும் அவரின் குரல் விட்டு வைக்கவே இல்லை எனலாம். “யாழ்ப்பாணச் சமயநிலை” என்னும் நூல் நாவலரின் அக்காலக் குரலாய் அமைந்தது என்பது நோக்கத்தக்க தேயாகும்.

    சைவத்தின் கருவூலங்களான புராணங்களை, திருமுறைகளை யாவரும் அறிய வேண்டும். அத்துடன் யாவர் உள்ளத்திலும் அமர வேண்டும் என்னும் எண்ணம் நாவலரிடம் நிறைந்தே காணப்பட்டது. ஆனால் அக்காலச் சூழலில் பாமரமக்கள் பலர் இவைகளை அறியாதவர்களாகவும், விளங்காதவர்களாகவுமே காணப்பட்டார்கள். இந்த நிலையில் இருந்தவர்களிடையே – தம்முடைய பிரசங்கங்களால் அன்னியர்கள் மதமாற்ற முயற்சியை மேற்கொள்ளுவது இலகுவாய் அமைந்ததை நாவலர் கண்ணுற்றார். கண்ணுற்றவர் உள்ளம் கலங்கியது. இப்படியே விட்டால் சைவம் என்னும் பெயரே இல்லாமற் போனாலும் போய்விடுமோ என்று கவலைப்பட்டார். கவலைப்பட்ட நாவலர் கவலைப்பட்டுக் கொண்டு இருந்துவிடாமல் – படிப்பறியாத பாமர்களை மனங்கொண்டும், பேதலித்து நிற்பாரை மனங்கொண்டும் – வண்ணார் பண்ணைச் சிவன் கோவிலை மையமாக்கி தன்னுடைய உள்ளத்துணர்வுகளைச் சைவப்பிரசங்கமாய் தொடங்கினார். இங்கு புராணங்கள். இதிகாசங்கள். திருமுறைகள், சைவ நடை முறைகள் அத்தனையும் நாட்கள் தோறும், வாரந் தோறும், மாதந்தோறும் காலத்தின் குரலாய் நாவலர் பெருமானிடம் இருந்து வெளிப்பட்டு நின்றது.

    கந்தபுராண கலாசாரம் என்னும் கருத்தே நாவலரின் உள்ளத்தின் உன்னதமான குரலாகும். நாவலர் என்னும் பெருமகன் மட்டும் அந்தக்காலத்தில் பிறந்திராவிட்டால் – அவரின் குரல் சைவமாய், தமிழாய், நல்லொழுக்கமாய், ஓங்கி ஒலித்திருக்கா விட்டால் அக்காலச் சூழலினால் அத்தனையும் எங்கேயோ ஓடி மறைந்திருக்கும். ஆனால் நாவலரின் குரலோ  “காலத்தின் குரலாய்” ஓங்கி ஒலித்தே நின்றிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம். அதனை வலியுறுத்திட நல்ல தொரு சான்றாக வந்து அமைந்ததுதான் இப்பாடல்.

    நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
    சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
    ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேப்ர சங்கமெங்கே
    ஆத்தனறி வெங்கே அறை

    சைவத்தைக் காத்திட, தமிழைக் காத்திட, சமூக ஒழுக்கத்தைக் காத்திட – நாவலர் இல்லறத்தையே ஒதிக்கி சமூக ஞானியாய், சமய ஞானியாய், மொழியில் தத்துவ த்தில் ஞானியாய் ஆகிநின்றார். கல்வியில் கால் பதித்தார்.கடமையில் கால் பதித்தார். கண்ணியத்தில் கால்பதித்தார். கடவுள் கொள்கையில் கால் பதித்தார். தர்மத்தில் கால் பதிந்தார். சன்மார்க்க வழி நடந்தார். எந்தத்துறையினை எடுத்தாலும் அங்கெல்லாம் நாவலரின் பொறுப்பான குரலே ஓங்கி ஒலித்து நின்றது. அவரின் குரல் ஒலித்த இடமெல்லாம் குறைகள் என்னும் இருள் ஓடியே ஒழிந்தது. நாட்டின் தேசியப் பெருமக னாய் நாவலர் பெருமான் கொண்டாடிப் போற்றப்பட்டார். அப்படி அவர் போற்றப்படுகிறார் என்றால் அவரின் குரல் “காலத்தின் குரல்” ஆகியே இருக்கிறது என்பதுதானே உண்மை!

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 42

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 42

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமத் திருவாசகம் – 1

    முன்னுரை

    ‘படைப்பு’ என்ற அளவில் திருவாசகம் ஒரு பக்தி இலக்கியம் எனக் கருதப்படலாம். ஆனால் தமிழில் இலக்கியத்தின் பாடுபொருளாக அகம், புறம் என்னும் மரபு பின்பற்றப்பட்டு வந்த காலத்தில் அவற்றினும் மாறுபட்டு அதன் பாடுபொருள் இறைவனாக அமைந்திருப்பதை உணர்தல் வேண்டும். பாடுபொருள் பரம்பொருளாக அமைந்துவிட்ட காரணத்தால் பொதுவான இலக்கிய உத்திகளோ, உவமப் பகுதிகளோ, யாப்பியல் மரபுகளோ இலக்கிய மரபுசார்ந்து அமையும் என்று எதிர்பார்க்க இயலாது. உணர்ச்சியும் அகவுணர்ச்சியாகிய காதல், புறவுணர்ச்சியாகிய வீரம் என்பனவற்றினின்றும் சற்று விலகி உரிமையும் ஆதங்கமும் ஏக்கமும் இரத்தலும் கலந்த ஓர் புதுவகை உணர்ச்சியை இவ்வகை இலக்கியங்கள் கொண்டிலங்கும். விழைதலும் வேண்டுதலும் ஆகிய நிகழ்வில் பயன்படுத்தப்படும் உவமங்களும் பொதுவான இலக்கிய உவமங்களாக அமையாமல் அமைதி, பாசம், இழிவு, நம்பிக்கை முதலிய உணர்வுகளை எதிரொளிப்பதாக அமையும். மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்த அத்தகைய உவமங்கள் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    திருவாசகத்தில் இருகை யானை

    புறநானூற்றில் வரும் ஓரேர் உழவன் என்னுந் தொடர் அக்கால வேளாண் பெருங்குடி மக்களின் வறுமை நிலையை உணர்த்தியது. ‘ஒரு கை யானை’ என்பது யானைக்குச் சிறப்பு கையுடைய விலங்கு அதுவேயாதலின். ஆனால் மணிவாசகப் பெருமான் தன்னை ‘இருகையானை’ என்று உருவகப்படுத்திக் கொள்கிறார். யானை, தனக்குத்தானே சங்கிலியைத் தானே எடுத்துப் பாகன் கையில் தந்து தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்ளும். தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும். யானைக்குத் தனக்கு மேல் பாகன் என்று ஒருவன் அமர்ந்து இருக்கிறான் என்றும் தெரியாது. மணிவாசகரின் இருகை யானை உவமத்தில் நுண்ணியங்கள் பல உள்ளன என்பதை அறியலாம். தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்வதும் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதும் தனக்கு மேலே இருப்பவன் பாகன் என்பதை அறியாததும் அதன் பலவீனங்கள். காமம், வெகுளி, மயக்கம் இவற்றுள் கிடந்து உழல்வதும், தனக்கான துன்பத்தைத்தானே வரவழைத்துக் கொள்வதும் தன்னை வினைப்படுத்தும் இறைவனை மறப்பதும் மானுடர்க்கு இயல்பு.

    “இரு கை யானையை ஒத்து இருந்து என் உளக்
    கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே” (திருச்சதகம்)

    இங்கு அடிகளார் தம்மை யானையோடு உவமித்தது ஒரு நுண்மையான உட்கருத்தைக் கொண்டதாகும். ஒரு கை யானைக்கே இரண்டு கெட்ட குணங்கள் உண்டு. ஒன்று – நன்றி மறப்பது; இரண்டு – குளித்துவிட்டுத் தூய்மையாக வரும்பொழுதே மண்ணை வாரித் தன் தலையில் போட்டுக் கொள்வது. மாபெரும் உபகாரம் செய்த குருவிற்குத் தாம் நன்றி பாராட்டவில்லை ஆதலால் நன்றி கொல்லும் யானையோடு உவமம் செய்தார். வழியோடு சென்ற தம்மை வலிய அழைத்து இறையனுபவத்தைக் குருநாதர் நெஞ்சில் நிறைவித்தார். பழைய, பசுகரணங்களைப் போக்கிப் பதிகரணங்களாக மாற்றி அருளினார். ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்பதும் அது. இதற்குக் குளித்துவிட்டு வரும் யானை உவமம். இத்தகைய பெரிய நலங்களை விட்டுவிட்டுப் பொறிகளின் இன்ப நுகர்ச்சியில் மறுபடியும் தம் மனம் செல்வது குளித்துவரும் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போலாகும். அதனாலேயே ‘இருகை யானையை ஒத்திருந்து’ என்று பாடுகின்றார்.

    “என்னால் அறியாப் பதம் தந்தாய்
    யானறி யாதே கெட்டேன்
    உன்னால் ஒன்றும் குறைவில்லை”

    என யானையின் செயல்களை ஒத்திருக்கும் தனது செயல்களை விளக்கியிருப்பது காண்க.

    இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு

    ‘இருதலை’ என்பது மூங்கிலின் இரண்டு பக்கத்தின் நுனிப்பகுதியைக் குறிக்கும். ‘கொள்ளி’ என்பது அவ்விரு பக்கமும் வைக்கப்பட்ட தீயைக் குறிக்கும். ஒரு நுனியில் பற்றவைத்து அதனைப் பந்தமாகப் பயன்படுத்துவதும் உண்டு. இருபக்கமும் நெருப்பு என்பது பெரும்பாலும் வித்தை காட்டுவோர் செயலாகக் கருதப்படலாம். சிலம்பு விளையாட்டில் இதனைக் காணலாம். அச்செயல் இங்கு முக்கியமன்று. மூங்கில் குழாயின் உள்ளே எறும்பு சென்றதை அறியாது பற்றவைத்த இருமுனைக் கொள்ளிக்கு நடுவே அவ்வெறும்புபடும் வேதனையே உவமமாகக் கொள்ளப்படுகிறது. இந்த உவமத்தைச் சங்கச்சான்றோர்கள் அகத்திணைப் பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை,

    “ஆள்வினைக் கெழுந்த அசைவில் உள்ளத்து
    ஆண்மை வாங்கக் காமந் தட்பக்
    கவைபடு நெஞ்சங் கட்கண் அகைய
    இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி
    ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்
    நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
    உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
    வாழ்தல் அன்ன காதல்
    சாதல் அன்ன பிரிவரி யோளே!”

    முதலிய பாடல்களினால் அறியமுடிகிறது.

    “தாளாண்மை அறிந்தவென்தன் தளர்வில்லா நெஞ்சத்தைப்
    பேராண்மை முன்னிழுக்க, பெருங்காமம் பின்னிழுக்க
    இருகணுக்கள் தழல்தாங்கும் எரிகொள்ளி உள்சிக்கி
    இருபக்கம் ஓடுமொரு எறும்பென்றே நானானேன்”

    என அந்த அகநானூற்றுப் பாடலுக்குக் கொச்சகக் கலியால் உரையெழுதியவரும் இருந்திருக்கிறார்கள். இந்த இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பைத்தான் மணிவாசகப் பெருமான் தன் நிலையை விளக்க உவமமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

    “இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து
    நினைப் பிரிந்த
    விரிதலையேனை விடுதி கண்டாய்
    வியன் மூஉலகுக்கு
    ஒரு தலைவா மன்னும் உத்தரகோச
    மங்கைக்கு அரசே
    பொருது அலை மூஇலை வேல் வலன்
    ஏந்திப் பொலிபவனே!”

    ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ என்பதே முதுமொழி ஆகும். ஆனாலும் இதில் ஒரு குறை இருப்பதாக மணிவாசகர் உணர்கிறார். ஒரு குச்சியின் இரண்டு பக்கங்களிலும் நெருப்புப் பற்றியிருப்பதால் (குச்சியின் மேலே உள்ள) எறும்பு இரண்டு பக்கங்களாலும் வெளியேற முடியாது. ஆனால், இரு பக்கங்களிலும் நெருப்பு நெருங்கி வரவர வெப்பம் தாங்காத எறும்பு துடிப்பதால் கீழே விழுந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பழமொழியில் உள்ள இக்குறையைப் போக்க, அடிகளார் ‘இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து’ என்கிறார். இருதலைக் கொள்ளி எறும்பு என்பது மூங்கிலின் மேல்பக்கம் திரிவது. இருதலைக் கொள்ளி உள்ளெறும்பு என்பது இருபக்க அழலுக்கு நடுவே அகப்பட்டுக் கொண்டது. இருதலைக் கொள்ளி எறும்பு என்பதே இருதலைக்கொள்ளிக்கு நடுவே அகப்பட்ட எறும்புதான் என்று கூறுவார் ‘உள்’ என்னும் சொல்லாட்சிக்கான அமைதியைக் கூறுதல் வேண்டும் கடப்பாடு  உள்ளது.

    இலக்கியங்களில் நாய்

    பொதுவாக நன்றியுணர்ச்சியின் குறியீடாகவே நாய் பயன்படுத்தப்படுகிறது. ‘தன்னைப் பலகாலம் பேணிக்காத்தவன் என்றறிந்தும் கொல்லும் யானைபோல, நண்பரையே அழிக்கும் தீயவர் உறவு கூடாது. வேல் உடலிலே தைத்திருக்கவும் வால் குழைத்து நிற்கும் நாய்போலத் துன்பம் தாமே இழைத்த காலத்தும் நட்பினை மறவாது அன்புகாட்டும் ஒருவரது நட்பே கொள்ளத்தக்கதாகும் என்னும் கருத்தினை,

    “யானை அனையவர் நண்பொரீஇ, நாயனையார்
    கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்; – யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
    மெய்யதா, வால்குழைக்கும் நாய்”. (நாலடியார் – 213)

    என்னும் நாலடியார் பாடல் கூறுகிறது. இனி அங்கதப் புலவர் காளமேகம் தமது தனித்தன்மையான சிலேடை வெளிப்பாட்டிற்கு நாயைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    “ஓடு மிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
    நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
    தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
    தேங்காயும் நாயுமெனச் செப்பு”

    நாய்க்கும் தேங்காய் மூடிக்கும் பாடிய சிலேடை இப்படி அமைந்திருக்கிறது என்றால் பத்துப்பாட்டு இலக்கியங்களில் பாடிணியின் பாதத்து அழகிற்கு நாயின் நாக்கு உவமமாகக் கூறப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.

    “வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி”   (பொரு. 42)

    “உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
    வயங்கு இழை உலறிய அடியின்”  (சிறு. 17)

    “மதம் தபு ஞமலி நாவின் அன்ன
    துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி”  (மலை.42)

    என்றெல்லாம் சங்க கால இலக்கியங்களில் நாயின் நாக்கு உவமமாக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

    திருவாசகத்தில் நாய்

    மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தில் நாய் என்னும் விலங்கு உவம வகையானும் உருவகத்தாலும் பாடப்பெற்றிருக்கிறது. மணிவாசகர் தன்னை நாயாக உருவகம் செய்து கொள்ளுகிறார். வேறு சில இடங்களில் ‘நாயைப்போல’ என நாயின் வினைகளைத் தனக்கான வினையுவமமாக்கிக் கொள்கிறார். இந்தவகையில் திருவாசகத்தில் அறுபத்தேழு இடங்களில் நாய் பற்றிய குறிப்பு காணப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மணிவாசகப் பெருமான் தன்னை நாயோடு ஒப்பிடுவதற்கான காரணம் என்ன? ஜீவ ராசிகளை விட நாயை மட்டும் சொல்வதனால்  நாயின் அத்தகைய பண்புகள்தாம் என்ன? தன்னைப் ‘பொல்லாவினையேன், புழுத்தலைப் புலையனேன்’, ‘ஊற்றையேன்’ என்று கீழ்நிலைப்படுத்திக் கொண்டும் அமைதியடையாத நிலையில் ‘நாயேன், நாயடியேன், அடிநாயினேன், ஊர்நாயின் கடையேன்’ என்று  திரும்பத்  திரும்பத் தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்கிறார். நாய்  தன்  தலைவனை  அறியும்  தன்மை  உடையது. மேலும் தன் தலைவன் மேல் விசுவாசம் மிக்கது. சேக்கிழார் பெருமான் கண்ணப்ப நாயனார் புராணத்தில் வேட்டை நாய்களைப் பற்றி சொல்லும் போது ஒன்றுக்கு ஒன்று நேர் படாமல் செல்லும் என்கிறார். அதாவது வரிசையாக செல்லாமல் மாறி மாறி செல்லும் தன்மையது. தனக்குப் பிடிக்காது  ஒதுக்கும் ஒன்றை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வது நாயின் இயல்பு. தன் வாயினால் கக்கியதைத் தானே திரும்பத் தின்னும் இயல்புடையது. இதன் பொருள் வெறுத்த ஒன்றையே திரும்ப விரும்பும் என்பதாம். ஐந்தறிவு நாய்க்கு அது இயல்பு. ஆனால் ஆறறிவு உடைய  மனிதனுக்கும் தான் வெறுத்ததையே மீண்டும் மீண்டும் விரும்புகின்ற குணமுண்டு  ஆக ஐந்தறிவு  உள்ள  நாயின் குணத்தை உயர்த்தித் தான் அதனைவிடக் கீழானவன் என எண்ணும் எண்ணமாகவும் இருக்கலாம்.  அல்லது  கீழ்த்தரமான நாயை விட நான் கீழானவன் என்னும் பொருளிலும் கூறியிருக்கலாம். ஆன்மாவானது  பிறவி, பந்தம்,  பற்று, பாசம் போன்ற இயல்புகள் மனிதனைத் திரும்பத் திரும்ப வந்து ஆட்டி வைப்பதையும்  பிறவித்தளையில் இருந்து  விடுபட முயல்வதையும் இறைவனின் திருவடியைச் சேர தடையாய் இருப்பதையும்  கருத்தில் கொண்டே அவர் நாயேன் என்று நாயின்  பண்பை வைத்துக் கூறியிருக்க வேண்டும்.

    “நாயிற் கடையாய்க்  கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” (சிவபுராணம்)

    “நாயினேனை நலம் மலி தில்லையுள்
    கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென”  (கீர்த்தித் திருஅகவல் )

    “சொல்லுவது அறியேன் வாழிமுறையோ
    தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது”

    “குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
    குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்து நிரம்பிய”

                                                                          (திருவண்டப் பகுதி)

    “கனவிலும் தேவர்க்கு அறியாய் போற்றி
    நனவிலும் நாயேற்(கு) அருளினை போற்றி “

    “பஞ்சுஏர்  அடியாள் பங்கா போற்றி
    அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி”

                                        (போற்றித் திருஅகவல்)

    சிந்தனைநின் தனக்காக்கி நாயினேன்தன்
    கண்ணினை நின் திருப்பாதப் போதுக் காக்கி”

    “நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை”

    “நாசனே நான் யாதுமொன்று அல்லாப் பொல்லா நாயான”“

    “நகுவேன் பண்டு தோள் நோக்கி  நாணம் இல்லா நாயினேன்”

     “ ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
    “ஆடும் நின் கலழ் போது நாயினேன்”

                                                        (திருச்சதகம்)

    “பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே”

    (நீத்தல் விண்ணப்பம்)

    “கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை”

    “நாயான நம் தம்மை  ஆட்கொண்ட நாயகனை”

    (திரு அம்மானை)

    “கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட”
    (திருப்பொற்சுண்ணம் )

    “நாயுற்றசெல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்”

    “நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை”

    (திருக்கோத்தும்பி)

    “நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த

    (திருச்சாழல்)

    “தான் அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை”

    (திருப்பூவல்லி)

    “நாயிற் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து”

    “நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு”
    (திருப்பொன்னூசல்)

    “கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவி
    (திருத்தசாங்கம்)

    “நாளுமணு காவண்ணம் நாயெனை ஆளுடையான்”
    (கோயில் மூத்த திருப்பதிகம்)

    “தரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே”

    (செத்திலாப் பத்து)

    “நாயி னேன் உனை நினையவும் மாட்டேன்”

    “எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்க

    கில்லேன் இல்வாழ்க்கை”
    (ஆசைப் பத்து)

    “நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே நானோர் துணைகாணேன்”
    (புணர்ச்சிப் பத்து)

    “தாதாய் மூவேழு லகுக்கும் தாயே நாயேன் தனை ஆண்ட”
    (வாழாப் பத்து)

    “கல்லாத புல்ல றிவிற் கடைப்பட்ட நாயேனை”

    “ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு”
    (கண்டப் பத்து)
    “பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை”
    “புறமே கிடந்து புலைநாயேன் புலம்புகின்றேன் உடையானே”
    ( பிரார்த்தனைப் பத்து)

    “இடரே பெருக்கி ஏசற்றிங்கு  இருத்தல் அழகோ அடி நாயேன்”

    “ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை”

    “நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்”
    (குழைத்த பத்து)

    “அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகின்றேன் உடையானே”
    (உயிருண்ணிப் பத்து)

    “நானாரடி யணைவானொரு நாய்க்குத் தவிசி ட்டிங்கு”
    (திருவேசறவு)

    “பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே”
    (அற்புதப் பத்து)
    “பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான்

    புழுத்தலை நாய் போல”                       (எண்ணப் பதிகம்)

    “தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா

    கருணையினால்” (யாத்திரைப் பத்து)

    “ நகவே ஞாலத் துள்புகுந்து  நாயே அனைய நமையாண்ட”

    “நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே”
    (ஆனந்த மாலை)

    “நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ”
    “நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த”

    (அச்சோப்பதிகம்)

    என்றெல்லாம் தம்மை நாயாக உருவகப்படுத்தியும் நாயின் இழிந்த செயல்களைத் தன் செயல்களுக்கு உவமமாக்கியும் கூறுவதைக் காணமுடிகிறது. பொதுவாகத் தமிழ்க் கவிதைகளில் அல்லது நீதி நூல்களில் நாய் நன்றியுணர்ச்சியாகிய நேர்முகப் பார்வைக்கு உவமமாக்கப்பட்டிருந்தாலும் பக்தி இலக்கியங்களில் நாயின் இழிவான பழக்க வழக்கங்களாகிய எதிர்மறைப் பண்புகளே கருத்தில் கொள்ளப்படுகின்றன  என்பது  சிந்திக்கத்தக்கது.

    கண்ணப்பனே அன்பான கதை

    திருக்குறளில் ‘அழுக்காறு’ என்னும் பண்பைப் பண்பியாகச் செயல்படுத்திக் காட்டுவார் திருவள்ளுவர். அதாவது பண்பு செயல்படாது. பண்பை உடைய மனிதன்தான் செயல்படுவான். அந்தப் பண்புக்குப் பெருமையையோ இழிவையோ செய்வான். அன்பு என்னும் பண்பு இயேசு வழியாகச் செயல்படும். துரோகம் என்னும் பண்பு யூதாசு வழியாகச் செயல்படும். ஆனால் திருவள்ளுவர் பண்பே செயல்படுவதாகக் கூறி அந்தப் பண்பின் கொடுமையைச் சித்திரித்துள்ளார்.

    “அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

    தீயுழி உய்த்துவிடும்”

    என்பது அந்தக் குறட்பா. பாவத்தைச் செய்பவன்தான் பாவி. பாவமே பாவியாகிவிடாது. ‘அழுக்காறு’ என்பது பண்பு. அழுக்கர்ற்றினைப் பாவி என்றது பண்பினைப் பண்பியாக்கிய நுட்பம். இந்த நுண்ணியம் எதனைக் குறித்தது எனின் ‘அழுக்காறு’ என்னும் பண்பே செயல்படும். செயல்பட்டு அதனை ஆக்கினானை இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் அவனுக்குப் பேரழிவைத் தரும்.

    “பண்புக்குப் பண்பி இல்லையேனும் தன்னை ஆக்கினானை இருமையும் கெடுத்தல் கொடுமைப்பற்றி அழுக்காற்றினைப் பாவி என்றார்”

    என்னும் அழகர் உரை இதனை இன்னும் தெளிவாக்கும். திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் என்றால் மணிவாசகர் இதனை மாற்றுகிறார். இவர் பண்பியைப் பண்பாக்குகிறார்.

    “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

    என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி

    வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்

    சுண்ணப் பொன்நீற்றற்கே சென்றூதாய்க் கோத்தும்பீ!”

    என்று பாடுகிறார் மணிவாசகர். இறைவனிடத்துப் பேரன்பு காட்டியவருள் கண்ணப்பன் முன்களத் தளபதியாகவே திகழ்கிறார். அவருடைய வேடர்குலப் பின்புலமும் அதற்கு முரணான அளப்பறிய பேரன்பும் தன்னல மறுப்பும் உண்மையான இறையுணர்வும் சிலையையும் தெய்வம் என்று, தந்தையென்று எண்ணும் பக்குவமும் அவருக்கு இந்தப் பெருமையினைப் பெற்றுத்தந்தது எனலாம். அதுபோன்ற அன்பு தனக்கு இல்லையென்பதையும் அத்தகைய தூய அன்பைத் தான் பெருமானிடத்துக் காட்டாதபோதே, காட்ட இயலாதபோதே தனக்குப் பேரருள் புரிந்த திருப்பெருந்துறை சிவபெருமானை வழிபடுகிறார் மணிவாசகப்பெருமான். இங்கே அவர் ஒப்பிடுவது கண்ணப்பன் காளத்தியப்பரிடம் காட்டிய அன்பை. ஆனால் பாட்டில் கண்ணப்பன் அன்பு ஒப்பதோர் என்னாமல் கண்ணப்பன் ஒப்பதோர் என்றே எழுதியிருக்கிறார். அதாவது ‘கண்ணப்பன் வேறு, அன்பு வேறு’ என நோக்காது கண்ணப்பனையே அன்பு வடிவமாக நோக்கியிருக்கிறார். பண்பைப் பண்பியாகச் சொன்னார் வள்ளுவர். பண்பியைப் பண்பாகக் காண்கிறார் மணிவாசகர்!.  கண்டு உவமமாக்கியிருக்கிறார்.

    நிறைவுரை

    அக இலக்கியங்களிலும் புற இலக்கியங்களிலும் பயின்றுவரும் உவமங்களைச் சுவைப்பதற்கும், பக்தி இலக்கியங்களில் வரும் உவமங்களை உணர்வதற்கும் தனித்தனி புலமையும் மனநிலையும் தேவைப்படுகின்றன. புலவனுடைய அறிவையும் நோக்குத் திறனையும் அழகியலையும் முன்னிறுத்தி முன்னவற்றிற்கு உவமங்கள் அமைக்கப்படுகின்றன. பக்தி இலக்கியங்கள் நிலையாமை நோக்கிய வாழ்வியல் அனுபவங்களில் வெளிப்படுவதால் அழகியலைவிட உணர்வுகளும் உணர்ச்சிகளுமே தூக்கலாகத் தெரிகின்றன. இதனை இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் உவமங்களால் ஓரளவு உணரலாம். சைவமானாலும் வைணவமானாலும் ஆண்டவன் அடியார் என்னும் நிலையில் பாடப்படுகின்ற பாடல்களில் பயன்படுத்தப்படும் உவமங்கள் பரம்பொருளை நோக்கிய மனத்தைப் பக்குவப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன. சிவபதத்தை அடையும் முழுத்தகுதி பெற்ற மணிவாசகர் முதலிய அடியவர்களும் தங்களைத் தாழ்த்திக் கொண்டு பாடும் முறையும் பயன்படுத்தும் உவமங்களும் தனிமனிதனையும் சமுதாயத்தையும் நன்னெறிப்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை. இலக்கியத்தை அழகுபடுத்தும் உவமங்களே வாழ்வியலை நெறிப்படுத்துகின்றன. இதனையே திருவாசகம் முதலிய பக்தி இலககியங்கள் தமது உவமக் கோட்பாடாகவும் கொண்டிருக்கின்றன  எனவும் கருதலாம்.

    (தொடரும்…)

    Share
  • நிகழ்கால ரிஷ்யசிருங்கர் (சிறுகதை)

    நிகழ்கால ரிஷ்யசிருங்கர் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    வயது ஏறிக்கொண்டே போனால், பலருக்கும் கவலை வந்துவிடும். நரைக்குச் சாயம் பூசலாம். ஆனால், தொங்கும் கன்னம், உடலின் பாதி எடையைத் தாங்கியிருக்கும் பருத்த வயிறு இவற்றை எப்படி மறைப்பது?

    கிட்டு பிறரிடமிருந்து சற்று வித்தியாசமானவர். இருபது வயதிலிருந்தே, தனக்கு எப்போது முதுமை வரும் என்று காத்திருந்த பேர்வழி அவர்.

    அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர் வளர்ந்த விதம் அப்படி.

    ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாடி வீட்டிலிருந்த பூமாவுடன் பாண்டி விளையாடினார். அவள் அவரைவிட இரண்டு வயது சிறியவள். அதனால், ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கை.

    அதுதான் முதலும் கடைசியுமாக அவர் பெண்களுடன் விளையாடியது.

    “இனிமே, பொட்டைமாதிரி, பொண்களோட விளையாடுவியா?” என்று அப்பா கிச்சாமி பிரம்பால் விளாசியது ஜன்மத்தில் மறக்குமா!

    கல்லூரியில் படிக்க அனுப்பினால், கண்ட பையன்களுடன் சேர்ந்து மகன் இன்னும் கெட்டுவிடுவான் என்று, தான் லட்சக்கணக்கான ரூபாயைச் சேமித்து வைத்திருந்த வங்கியில் வேலை கிடைக்கச் செய்தார். சிபாரிசு இருந்ததால், கிட்டுவின் கல்வித் தகுதியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    “வேலைக்குப் போற எடத்திலே பெண்கள் வராளாடா, கொழந்தே?” என்று கவலைப்பட்டாள் பாட்டி.

    அங்கு பெண்கள் அதிகமாக வரவில்லை. அப்படியே வந்தாலும், கணவன்மார்களை உரசியபடிதான். தனியாக வந்தவர்களோ, தம் செல்வச்செழிப்பைக் காட்டிக்கொள்ளவென உடலை வளர்த்திருந்தார்கள்.

    இந்த விவரத்தையெல்லாம் சற்று குறையுடன் தெரிவித்தார் கிட்டு.

    “அதுவும் நல்லதுக்குதான்!” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள் பாட்டி. “நீ ரிஷ்யசிருங்கர்மாதிரி!”

    எப்போதோ, பாட்டியுடன் கோயிலுக்குப் போனபோது, ராமாயணக் கதாகாலட்சேபத்தில் கேட்ட கதை கிட்டுவின் நினைவில் எழுந்தது.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன், ஒரு முனிவர் தேவலோக மங்கையான ஊர்வசியால் கவரப்பட்டதால் பிறந்த மகன் ரிஷ்யசிருங்கர்.

    மகனும் தன்னைப்போல் சீரழிந்து போகக்கூடாது என்ற `நல்ல’ எண்ணத்துடன், பெண்வாடையே இல்லாது அவனை வளர்த்தார்.

    பிரம்மச்சரியம் ரிஷ்யசிருங்கருக்கு அபாரசக்தியைக் கொடுத்தது. மழையே காணாது, வரண்டிருந்த நாட்டுக்குள் அவன் நுழைந்தவுடனேயே மாரி பொழிந்தது.

    அக்கதையை நினைவுகூர்ந்த கிட்டுவின் பிரம்மச்சரியமும் அதனால் எழுந்த பெருமையும் நீடிக்கவில்லை.

    “கிச்சாமி! பத்தொம்போது வயசிலேயும் ஒனக்கு கல்யாணமாகலியேன்னு நான் வேண்டாத தெய்வமில்லே. அந்த கோயிலில் இருக்கே, பிள்ளையார் விக்கிரகம்! அது நான் வாங்கிக் குடுத்ததுதான் – ஒனக்கு சீக்கிரமே கல்யாணம் நிச்சயமாகணும்னு வேண்டிண்டு!” என்று ஆரம்பித்த கிச்சாமியின் தாய், மகன் பொறுப்பில்லாது இருந்ததை மறைமுகமாகக் கண்டித்தாள். பேரனுக்கு மீசை முளைத்து பத்து வருஷம் ஆகிவிட்டதே, அவனுக்குப் பொருத்தமான எல்லா நல்ல பெண்களுக்கும் சீக்கிரமே கல்யாணம் ஆகிவிடுமே என்று அவள் பயந்தது யாருக்குப் புரியும்!

    அத்துடன், மகனுக்கும், பேரனுக்கும் எத்தனை காலம்தான் அவளால் வடித்துக்கொட்ட முடியும்! மருமகள் புண்ணியவதி! இந்தக் கவலையெல்லாம் இல்லாமல், போய் சேர்ந்துவிட்டாள்!

    கிச்சாமிக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. முதலிலேயே தனக்கு அந்த யோசனை வராமல் போயிற்றே என்று நொந்துகொண்டார்.

    தினமும் சாயங்கால டிபனுக்கு அரிசி உப்புமா செய்யத்தான் வயதான அம்மாவுக்கு சக்தி இருந்தது. கண் சரியாகத் தெரியாமல், உப்பை அள்ளிப் போட்டுவிடுவாள். அவள் மனம் நோகக்கூடாதே என்று அவர் சாப்பிட்டுவைப்பார்.

    “ரொம்ப படிச்ச பொண்ணு வேண்டாம்டா. சமையல்னா என்னன்னே தெரியாம வளர்த்திருப்பா. அடக்கமா, வீட்டு வேலை செய்யற பொண்ணா பாரு,” என்று அறிவுரை கூறினாள் தாய்.

    முதலில் பார்த்த பெண் பள்ளி இறுதிப் பரீட்சையை மூன்று முறை எழுதியும், பாசாகவில்லை என்ற விவரமே அவளுக்குச் சாதகமாக அமைந்தது.

    எலுமிச்சை நிறம், கையில் அடங்காத கூந்தல், விதம் விதமாகக் கோலம் போடுவாள், முக்கியமாக, வீட்டில் அவள் சமையல்தான் என்ற பிற அம்சங்கள் பாட்டிக்கு மிகவும் பிடித்துப்போக, கிட்டு பூரணியை மணந்தார்.

    அவளுடன் என்ன பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை.

    ஒரு முறை, அவளே வலியக் கேட்டாள்: “நான் நன்னா சமைக்கிறேனா?”

    “ம்!” என்று ஒரே வார்த்தையில் பதில் வந்தது.

    “ஒங்களுக்கு என் சமையல் பிடிச்சிருக்கோ?”

    உத்தியோகத்தில் படிப்படியாக உயர்ந்திருந்த கிட்டுவுக்கு எரிச்சலாக இருந்தது.

    அசமஞ்சம்!

    பேச விஷயங்களா இல்லை!

    சேஷனுக்கு எழுபது வயதாகியபோது, சுதந்திரமாக உணர்ந்தார். அப்பா இல்லை, பாட்டி இல்லை. அவரை மணந்த புண்ணியவதியும் சுமங்கலியாகவே போய்விட்டாள்.

    பெண்களுடன் பழக இனி ஒரு தடையுமில்லை!

    `விடுதலை! விடுதலை!’ என்று உரக்கப் பாடவேண்டும்போல் இருந்தது.

    இளம்பெண்களை அவருக்குப் பிடிப்பதில்லை. `மாமா’, `அங்கிள்,’ என்றெல்லாம் அழைத்து, வயதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள், கழுதைகள்!

    நிறைய யோசனைகளுக்குப்பின், முகநூலில் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். பெரும்பாலும், வயது முதிர்ந்தவர்கள்தாம் அதில் பங்குபெறுவார்களாமே!

    `மணமானவன்’ என்றெழுதினால் கௌரவமாக இருக்கும். மனைவி இருக்கிறாளா, இல்லையா என்று யார் ஆராயப்போகிறார்கள்!

    வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன்.

    வயது.. அங்கேதான் சற்று தடுக்கியது. 60 என்று எழுதிவிட்டு, ஏதோ யோசித்தவராக, கூட இரண்டைச் சேர்த்தார்.

    அடுத்த பிரச்னை: எப்படி சிநேகிதிகளைத் தேடுவது?

    அடுத்த சில நாட்களில், எல்லா படைப்புகளையும் படித்தார். நாள் முழுவதும் அதற்காகவே – இனிமையாக — செலவழிந்தது.

    ஒரு பெண்மணியின் எழுத்து அவரைக் கவர்ந்தது. பயம் சிறிதுமின்றி, பல விஷயங்களைத் தொட்டு, தன் கருத்துகளை வெளியிட்டாள். முக்கியமாக, சமையல் குறிப்புகளைப் பகிரவில்லை.

    தான் தேடிய புத்திசாலிப்பெண் இவள்தான் தனக்குத் தோழியாக இருக்கத் தகுதி உள்ளவள் என்று குதூகலித்தார் கிட்டு.

    அவள் எழுதிய ஒரு கட்டுரைக்கு, `லைக்’ போட்டார். பாராட்டாக, ஒருசில வரிகள்.

    பதிலுக்கு, அவளும் `நன்றி’ என்று ஒரே வார்த்தையில் தெரிவிக்க, கிட்டுவுக்குத் தலைகால் புரியவில்லை. அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது! தனிமரமாக இருப்பவளாக இருக்கும். அதனால்தான் அவ்வளவு சுதந்திர உணர்வு!

    அடுத்தடுத்து, பல முறை இவர் பாராட்ட, அவளும் சளைக்காது, அதே வார்த்தையில் பதிலளித்தாள்.

    அடுத்து அவளை நெருங்க நாம் என்ன செய்யலாம் என்று யோசித்த கிட்டு, தன் பாராட்டில், `டார்லிங்’ என்று அவளைக் குறிப்பிடலாமா என்று யோசித்தார்.

    முதலில் ரஞ்சனி என்ற அவள் பெயரைச் சுருக்கினாலே போதும், போகப் போகப் பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து, `டியர் ரஞ்சி!’ என்று ஆரம்பித்து, அவளுடைய துணிச்சலும், அறிவும் தன்னை எவ்வளவுதூரம் கவர்ந்திருக்கிறது என்று கவிதைபோல் எழுதினார்.

    அடுத்தமுறை அவளிடமிருந்து வந்த பதில் எப்போதையும்விட சற்று நீண்டிருந்தது.

    `எல்லாப் பெண்களும் மோசம்!’ என்ற முடிவுக்கு கிட்டு வரக் காரணமாக இருந்த அந்த வரி: “முதலில், மரியாதை கற்றுக்கொள்ளுங்கள்!”

    Share
  • குறளின் கதிர்களாய்…(378)

    குறளின் கதிர்களாய்…(378)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(378)

    அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்.

    – திருக்குறள் – 755(பொருள் செயல்வகை)

    புதுக் கவிதையில்…

    குடிகள் தம்மோடு
    கொற்றவன்
    கொள்ளும் அருளோடும்,
    குடிமக்கள் கொற்றவன்பால்
    காட்டும் அன்பாலுமின்றி
    ஈட்டப்படும் செல்வத்தை
    அனுபவித்து மகிழாமல்
    அழிவுதரும் தீயதென
    விலக்கிட வேண்டும்…!

    குறும்பாவில்…

    ஆள்பவரின் அருளோடும் மக்களின்
    அன்புடனுமின்றி ஈட்டிடும் செல்வத்தை அனுபவிக்காமல்
    அகற்றிட வேண்டும் தீயதெனவே…!

    மரபுக் கவிதையில்…

    நாட்டை யாளும் மன்னவனின்
    நல்ல குணமாம் கருணையிலும்
    நாட்டு மக்கள் அவன்தனையே
    நம்பிக் காட்டும் அன்புமின்றி
    ஈட்டும் செல்வம் பெரிதென்றே
    இன்பம் துய்க்கத் தொடங்காதே,
    கேட்டைத் தருமே அதுவென்றே
    கெட்ட தாகத் தவிர்ப்பாயே…!

    லிமரைக்கூ…

    அருளுடன் ஆள்வான் நாட்டை,
    அன்புடன் மக்கள், இவையின்றி யீட்டும்பொருள்
    அகற்றிடு தருவதால் கேட்டை…!

    கிராமிய பாணியில்…

    சேக்கணும் சேக்கணும்
    செல்வம் சேக்கணும்,
    நல்ல வழியில மட்டுமே
    செல்வம் சேக்கணும்..

    நாட்ட ஆளுற ராசாவோட
    நல்ல கொணத்தாலயும்
    நாட்டு மக்களெல்லாம் அவங்கிட்ட
    காட்டுற அன்புலயும் சம்பாதிக்காம
    வேற வழியில செல்வம் சேத்தா,
    கெடுதலத்தான் அது தருவதால
    அதக் கைவிடத்தான் வேணும்..

    அதால
    சேக்கணும் சேக்கணும்
    செல்வம் சேக்கணும்,
    நல்ல வழியில மட்டுமே
    செல்வம் சேக்கணும்…!

    Share
  • தாம்பரத்தில் வீடுகளைச் சூழ்ந்தது வெள்ளம்

    தாம்பரத்தில் வீடுகளைச் சூழ்ந்தது வெள்ளம்

    அடையாறு நதியில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேரளவு நீர், ஊருக்குள் பாய்கின்றது. தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாள் முழுவதும் தண்ணீர் வடியவில்லை. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆவேச அடையாறு! தத்தளிக்கும் தாம்பரம்!

    ஆவேச அடையாறு! தத்தளிக்கும் தாம்பரம்!

    அடையாறு நதியில் வெள்ளப் பெருக்கு, கரை உடைப்பு, கனமழை என ஒரே நேரத்தில் பலமுனைத் தாக்குதலால் தாம்பரம் தத்தளிக்கிறது. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். சாதாரணப் பயணமே சாகசப் பயணமாய் ஆகிவிட்டது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அடையாறு நதியில் மீண்டும் உடைப்பு

    அடையாறு நதியில் மீண்டும் உடைப்பு

    தாம்பரம் அருகில் அடையாறு நதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அப்பகுதி மக்கள் தற்காலிகமாக அடைத்துள்ளனர். ஆனாலும், அபாயம் முழுமையாக நீங்கியதாகக் கொள்ள முடியாது. இதற்கு வலிமையான கரையமைத்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசர அவசியம். மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share