Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…101

    சக்தி சக்திதாசன்

    LBCBD2 LBCBD4

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    புதியதோர் வாரத்திலே புதியதோர் மடலுடன் உங்களுடன் உறவாட வந்துள்ளேன்.

    அவசரமான உலகம், அவசரமான வாழ்க்கை . இந்த வாழ்க்கையை மிகவும் அவசரமாகவே வாழ்ந்து முடித்துவிட காலத்தோடு போட்டி போட்டுக் கொண்டு முண்டியடித்துக் கொண்டு ஓடும் சமுதாயங்கள்.

    இன்றைய காலகட்டத்திலே சமுதாயங்களுக்கிடையில் பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்குகின்றன. அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடையை எம்மை அரசாளும் அரசியல்வாதிகள் தருவார்கள் எனும் நம்பிக்கையோடு வாழும் மக்கள் கூட்டம்.

    ஆனால் பல்வேறு முக்கியமான் மக்கள் பிரச்சனைகள் வாதிடுவதற்கு சிக்கலாக இருப்பதனால் பல்வேறு அரசியல்வாதிகளால் ஒரு மூலையில் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. அவை ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டன என்பதற்காக அவைகள் அப்படியே மக்கள் மனங்களில் இருந்து மறைந்து போய்விடுவதில்லை.

    மாறாக நீறுபூத்த நெருப்புப் போல மக்கள் மனங்களில் புகைந்து கொண்டுதானிருக்கின்றன. மிகவும் சர்ச்சைக்குரிய விடயம் என்பதற்காக முக்கியமான விடயங்கள் பகிரங்கமாக விவாதிக்கப்படாமல் விடுபட்டு போவது கவலைக்குரிய விடயமே !

    ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு இத்தகைய விவாதத் தவிர்ப்பு ஓர் இழப்பு என்றே கூற வேண்டும்.

    எங்கே இந்த ஆரம்பம் எம்மை அழைத்துச் செல்கிறது என்று நீங்கள் ஆரய முற்பட வேண்டியதில்லை இதோ விடயத்திற்கு வந்து விடுகிறேன்.

    இங்கிலாந்திலுள்ள மக்களின் வாழ்க்கை வசதிகளில் ஏற்பட்ட தாக்கங்கள். நிலைகுலைந்த பொருளாதாரத்தைச் சீராக்க கூட்டரசாங்கம் எடுத்த மிகக்கடுமையான பொதுச்சேவைக்கான செலவீனக்குறைப்பு என்பனவற்றின் அதீத தக்கங்கள்,

    வேலையில்லாத் திண்டாட்டத்தின் எதிரொலிப்பு, வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களுக்காக வழங்கப்படும் உதவிகளில் ஏற்படுத்தப்பட்ட கடும் போக்குகளின் தாக்கங்கள் என்பன இங்கிலாந்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுவோர் மீதான இந்நாட்டு மக்களின் அதிருப்தியின் அளவை அதிகரித்திருக்கிறது என்பது கசப்பான உண்மை.

    அன்றாடம் ஊடகங்களில் இதைப்பற்றிய கருத்தாடல்க அதிக அளவில் இடம்பெறுவதே இதற்குரிய சான்றாகிறது.

    இதை இங்கிலாந்து இனத்தவரின் இனவிரோதப் பார்வை என்று ஒதுக்கி வைத்து விட முடியாது. ஏனெனில் இங்கு வந்து வாழும் ஆசிய ஆபிரிக்க மக்களின் பார்வையும் இத்தகைய வெளிநாட்டவரின் வருகையை நோக்கி அதிருப்தியானதாகவே தென்படுகிறது.

    ஆனால் இதைப்பற்றிய பகிங்கரமான சர்ச்சைகளை முக்கிய அரசியல் கட்சிகளின் தலலவர்களால் எங்கே தாம் இனவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ எனும் அச்சத்தினால் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது.

    இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்திலிருந்து தம்மை அகற்றிக் கொள்ள வேண்டும் எனும் வாதத்தை முன்வைத்து ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UKIP) என்று ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்தி வருபவர் நைஜல் ப்றாஜ் (Nigel Farage) என்பவர்.

    இங்கிலாந்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றும் தற்போதைய கூட்டரசாங்கத்தின் பங்காளிக் கட்சியுமான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவர் நிக் கிளேஹ் (Nick Cleg). இவர் தனது கட்சியின் அழுத்தமான கொள்கையான இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் முக்கியமான பங்கு வகிக்க வேண்டியது தவிர்க்க முடியாது என்பதில் மிகுந்த அழுத்தமாக இருப்பவர்.

    நிக் கிளேக் ஒவ்வொருவாரமும் லண்டனின் பிரசித்தி பெற்ற எல்.பி.சி (LBC) எனும் வானொலியில் அதன் பிரசித்தி பெற்ற காலைநேர ஒலிபரப்பாளரான நிக் வெராரி (Nick Ferrari) என்பவர் நடத்தும் காலைநேர ஒலிபரப்பில் வியாழக்கிழமைகளில் பங்குபற்றி நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம்.

    சமீபத்தில் அப்படியான ஒரு நிகழ்வின் போது நிக் கிளேஹ் , நைஜல் ப்ராக் என்பவருக்கு பகிரங்கமாக இவ்வானோலியில் நிக் வெராரி தலைமையில் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் பங்கு பற்ற வேண்டுமா? வேண்டாமா? என்று விவாதிக்க வரும்படி அறைகூவல் விடுத்தார்.

    விடுவாரா ? நைஜல் ப்ராக் ஏற்றுக் கொண்டார். இலவசமாக தனக்கும் தனது கட்சிக்கும் கிடைக்கும் வானொலி விளம்பரத்தை ஏன் தவிர்க்கப் போகிறார் ?

    விளைவு !

    நேற்று மாலை அதாவது மார்ச் 26ம் திகதி 7 மணிக்கு நிக் வெராரி தலைமையில் லிபரல் கட்சித் தலைவர் நிக் கிளேஹும் , ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜல் ப்ராக்கும் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் பங்கு பற்றுவதின் சாதகங்களையும், பாதகங்களையும் பற்றிய பகிரங்க விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

    இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதன் அவசியத்திற்காக நிக் கிளேஹ் உம் , இங்கிலாந்து ஏன் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கக்கூடாது என்பதன் காரணத்தை நைஜல் ப்ராக் உம் விவாதித்தார்கள்.

    இவ்விவாதத்திலே யார் சரி, யார் பிழை என்பதல்ல எனது இம்மடலுக்கான காரணம். இத்தகைய விவாதம் ஜனநாயகத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வெற்றி எனும் எனது தாழ்மையான கருத்தை எனது இனிய வாசகர்களான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இம்மடலின் நோக்கம்.

    மிகவும் சிக்கலான விடயம் என்பதற்காக மக்களின் மனதில் முக்கியமாகக் கருதப்படும் ஒரு விடயத்தை ஓரங்கட்டி விடுவது என்றுமே ஆராக்கியமான ஜனநாயகத்திற்கு வழிவகுக்காது.

    மாறாக இத்தகைய பகிரங்க விவாதங்களின் மூலம் தலைவர்கள் தாங்கள் கொண்டுள்ள கொள்கைகளின் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மக்களுக்கு வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் வாய்க்கிறது..

    நேற்றைய விவாதத்தில் ஒருவர் வெற்றி பெற்றவரல்ல அங்கே மூன்று வெற்றியாளர்கள் இருக்கிறார்கள் .

    அவர்கள் . . . .

    பங்குபற்றிய இரு தலைவர்கள், மூன்றாமவர் “மக்கள்”

    பசும்புல்லின் மீது எப்போதும் நடப்பதல்ல உண்மையான பயணம் புற்தரை கற்தரையாக மாறும் போதும் நடையின் வேகம் தணியாமல் நடப்பதே பயணத்தின் வெற்றியைக் குறிக்கிறது.

    இதை மற்றைய பெரும் கட்சிகளின் தலைவர்களும் உணர்ந்து கொள்வார்களா ?

    பொறுத்திருந்து பார்ப்போம் !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • அன்புள்ள மணிமொழி!..

    வி.பாலகுமார்

     

    இன்மைஉணர்தல்

    ஆகாயத்தை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் காரைக்கட்டிட அட்டைப்பெட்டி அலுவலகத்தின் புழுக்கத்திலிருந்து வெகு தூரம் தள்ளி வந்து, தனித்து வியாபித்திருக்கும் பெரிய பூவரசமரத்தில், பறவைகள் அடையும் சத்தத்தினூடே இதனை எழுதத் துவங்குகிறேன் மணிமொழி ! உன் வீட்டு மொட்டை மாடியில் வடகிழக்கு மூலையில் உள்ள திண்டில் பறவைகள் வந்து நீர் அருந்தட்டுமென வைத்திருக்கும் வாய் அகலமான தண்ணீர்த் தொட்டியில் குறைந்திருக்கும் நீர் அளவைப் பார்த்து, உனக்கு மிகப்பிரியமான மிக்கி மௌஸ் படம் போட்ட ஊதா நிற பிளாஸ்டிக் குவளையை வலது கையால் பிடித்து நீர் கோரி தொட்டியை நிரப்பியபடி, காற்றில் படபடக்க விடாமல் லாவகமாய்  பிடித்த படி கண்களாலும், கழுத்தாலும் உன் பிரத்யேக செய்கையசைவில் வளைந்து வளைந்து, இடது கையில் பிடித்திருக்கும் இந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டிருப்பதாய் கற்பனை செய்து பார்க்கிறேன். உன் வீட்டுக் கொல்லையில் இருக்கும் வேம்பு காய்க்கும் பருவமல்லவா இது. மொட்டை மாடியெங்கும் வேப்பம்பழங்கள் சிதறிக் கிடக்க, அவற்றை சேகரித்து வட்டவட்டமாய் உருவம் அமைத்து மொட்டைமாடியெங்கும் சிரிப்பான்களாய் பரப்பி வைத்திருப்பாயே, அது ஏனோ இன்று காலை எழும் போதே நினைவில் வந்தது. இல்லை, அப்படிக்கூட சொல்ல முடியாது. அந்த வேப்பம்பழ சிரிப்பான்கள் தாம் கனவில் வந்து பொழுது புலர்வதற்கு முன்பாகவே என்னை எழுப்பி விட்டன. அது முதலே, ஒரு இனம்புரியாத பரவசம் என் மனமெங்கும் சிறகடிக்கத் துவங்கி விட்டது. எழுந்து தேநீர்க்கடைக்குச் சென்றால், அங்கே அடுத்த ஆச்சர்யம் ! நூலகத்தின் நிசப்தத்தில், முல்லை நிலத்து வாழ்க்கை முறையை நாம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த, மென்தூறல் விழுந்த இளமாலைப் பொழுதில் நீ உயிரைக் குழைத்து, என் கண்ணீர்க்குளங்களை தழும்பச் செய்து சன்னமான குரலில் எனக்காக மட்டும் பாடிய “கங்கைக்கரைத் தோட்டம்” ஒலித்துக் கொண்டிருந்தது.

    உயிருடனான முழு விலங்கை வாய் கொள்ளாமல் முழுங்கும் மலைப்பாம்பைப்போன்று நீண்ட பாலங்களாலும், தங்க நாற்கரச்சாலைகளாலும் சுற்றியிருந்த கிராமங்களை எல்லாம் தனக்குள் இழுத்துச் செறித்து, மீந்ததைத் துப்பி விரிவாக்கப்பகுதிகளாக தள்ளி வைத்திருக்கும் இந்த பெருநகரத்தின் ஒரு மூளையில் சந்திப்புச்சாலையைத் தாண்டி ஒடுங்கிப்போயிருக்கும் இந்த சிறு தேநீர்க்கடைக்குள்ளும், உயிர் கசியும் ஒரு தேவநொடியை எங்கிருந்தோ மீட்டுக்கொண்டு வர முடிகிறது, இந்த இசையினால். ”கண் திறந்து பார்த்தேன், கண்ணன் அங்கு இல்லை” என்று சுசீலாம்மாவின் குரலில் உன் விசும்பலை நினைத்த அந்த கணம், என்னையும் அறியாமால் கண்கள் கசிந்து அமர்ந்திருந்தேன். என்றோ நிகழ்ந்த ஒரு உன்னத நிகழ்வின் ஞாபகச்சரடு காலங்களுக்குள் எத்தனை முறை நம்மை மீண்டும் மீண்டும் பிணைத்துக் கொள்ளுமோ, மொழி ! அலைபேசி அலாரத்தை குறைந்தது ஒரு மணி நேரத்திற்க்காகவேணும் கண்ணயர்வு கொள்ளச் செய்து தினமும் கடிகாரத்துடன் சண்டையிட்டு அடித்துப்பிடித்து அலுவலகத்துக்கு விரைபவன் நான். இன்று உனது வேப்பம்பழ சிரிப்பான் அதிகாலையே என்னை எழுப்பி விட்டு, அதிசயமாய் தேநீர்க்கடைக்கும் செல்ல வைத்து, அங்கே ஒரு மகிழ்ச்சிப் பொட்டலத்தையும் இசையாய் விரித்து வைத்திருந்தது. அந்த மென்கீதத்தின் ரீங்காரத்தூடே அறைக்கு வந்து, நிதானமாக அதே சமயம் பரவசமாக இதழ்களுக்குள் மெல்லியதொரு புன்னகையை பரவ விட்ட படியே ஆயத்தமானேன்.

    எவ்வளவு நிதானமாகக் கிளம்பி, தயாரான பின்னும் அலுவலக வாகனம் எங்கள் பகுதிக்கு வந்து சேர இன்னும் இரண்டு மணிநேரமிருந்தது. அதற்கு மேல் அறைக்குள் இருப்புக்கொள்ளவில்லை. மெதுவாக தெருமுனைக்கு வந்தேன். அந்தப்பகுதி அவ்வளவு அமைதியாக இருக்கமுடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது. ஆறரை மணிக்கும் எட்டரை மணிக்கும் இடையில் உள்ள உவமிப்பு பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. தெருமுனையில் இன்னும் தண்ணீர் லாரி வந்திருக்கவில்லை. ஷேர் ஆட்டோக்களின் சாகசங்கள் இன்னும் தொடர்ந்திருக்கவில்லை. வழக்கமாக எட்டரை மணி சுமாருக்கு, தலை நிறைய எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து படிய சீவி விட்டு, எண்ணெய்க் கைகளில் பாண்ட்ஸ் பவுடர் கொட்டி குழந்தைகளின் முகங்களை வெள்ளையடித்து, பொதியேற்றி பள்ளி வாகனத்திற்குள் திணிக்கும் வழக்கமுள்ள புறநகரத்துப் பெண்மணிகள் அப்பொழுது தான் அன்றைய தினத்தின் முதல் வேலையாக வாசல் தெளிக்கத் துவங்கியிருந்தனர். வீட்டு வாசல்களில் படுத்திருந்த தெருநாய்கள் தண்ணீர் பட்டும் பதற்றம் காட்டாமல், மெதுவாக எழுந்து நெட்டி முறித்து ஓரமாய்ச் சென்று மறுபடியும் படுத்துக் கொண்டன. அந்தப்பகுதியின் அடையாளமாக, தங்கள் இருப்பை எப்போதும் சத்தமிட்டு பறைசாற்றி தங்களுக்குள் சத்த யுத்தம் நடத்தும் இரும்புப்பட்டறைகள் யாவும் இன்னும் துயில் எழுந்திருக்கவில்லை. மூடியிருக்கும் அந்த பட்டறைகளின் கனத்த கரந்தியல் சாத்திகளின் மீது தியானித்திருக்கும் கடவுளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. காலியான அதிகாலை நேரத்து தெருக்களைப் பார்க்கும் போது, அவை இரவில் அகலமடைந்து, பகல் செல்லச்செல்ல சுருங்கிக் கொள்கின்றனவோ என்று தோன்றியது.

    நகரப்பேருந்துகள் காலியாகக் கூட செல்லும் என்று இன்றைக்குத் தான் தெரிந்தது, மொழி ! ஒரு ஜன்னலேர இருக்கையை தேர்ந்து சாலையை மௌனமாய் பார்த்தபடியே பயணம் செய்தேன். அடுக்கங்களின் சிறு முன்றில்களில் வளர்க்கப்படும் போன்சாய் மரங்களைப் பார்த்து நீ விசனம் கொண்ட நிகழ்வு, அன்னிச்சையாய் நினைவுக்கு வந்தது. பிராணிகளை வளர்க்கத் தடையுள்ள, வாரமொரு முறை  தாழ்வாரங்களை ஆள்வைத்து சுத்தம் செய்து, அங்கே கூடுகட்ட எத்தனிக்கும் புறாக்களை அதைரியம் கொள்ளச்செய்யும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் அறிக்கையொன்றில் நீ செய்து காண்பித்த கத்திக்கப்பல் மனதில் தோன்றியது. ஒரு மணிநேரப்பயணத்தின் முழுமைக்கும் என் அருகில் நீ அமர்ந்து வருவதாகவே எண்ணிக் கொண்டேன் மொழி ! நாம் வாசித்த கவிதைத் தொகுப்புகளை, புதினங்களை, சிறுகதைகளை நீ ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாய், பேருந்துக்கு வெளியே எதிர் திசையில் விரைந்து கொண்டிருக்கும் மிதமான குளிர்க்காற்றை, அவ்வப்பொழுது வலது கையால் தடுத்து உன் முகத்துக்கு நேராக திருப்பி விட்டுக் கொண்டே வந்தேன். காற்றிலாடும் முடியை காதிற்கு பின் தள்ளியபடியே நீ பேசிக்கொண்டே வந்தாய். அலுவலக நிறுத்தம நெருந்துவதை உணர்ந்து உன்னை அப்படியே விட்டுவிட மனமில்லாது தவித்தேன். பின், அலுவலகத்திற்கு முந்தைய நிறுத்ததிலேயே இறங்கி, அருகிலிருந்த மரங்களடர்ந்த பூங்காவிற்குச் சென்றேன். விடாமல் தொடர் கேள்வி கேட்டுக் கொண்டு, தம் அப்பாக்களை வழி நடத்திச் செல்லும் சிறு பெண் குழந்தைகளின் நடைப்பயிற்சியால் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது அந்த காலை நேரத்து பூங்கா. அந்த சிறுமிகளைப் பார்த்து புன்னகைத்தபடியே மூச்சுப்பயிற்சி செய்து கொண்டிருந்த முதியவர்களின் முகங்கள் பரிசுத்தமாய் காட்சியளித்தன. பூங்காவின் பெரும்பகுதி தெரிவது போன்ற இடத்தைத் தேர்ந்து, அங்கேயிருந்த இருக்கையில் அமர்ந்தேன். கண்களை மூடி ஆழ்மூச்சில் சுவாசிக்கத் துவங்கியவுடன், அருகில் மஞ்சளின் வாசமும், செம்பருத்தியின் மணமும் கலந்த உன் வாசனையை நுகர்ந்து அருகில் நீ அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். கண்கள் மூடிய படியே உன் அருகாமையை ரசித்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தேன் மொழி ! வெயில் மெல்ல ஏறத்துவங்கியவுடன், அங்கிருந்து நடந்தே அலுவலகம் செல்வதென முடிவெடுத்து மெதுவாக அலுவலகம் சென்றடைந்தேன். எனக்குத் தெரியும் மொழி, பூங்காவில் இருந்த நீ, அங்கே கண்ணிற்குத் தட்டுப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு செல்ல பெயர் வைத்திருப்பாய், மரங்களிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு மலரோடு ஏதேனும் ஒரு ரகசிய மொழி பேசியிருப்பாய். பகலா, இரவா, வெளியே மழையா, வெயிலா, என்ன நேரம் என்ன திசை என்று கூட அறிந்து கொள்ள முடியாத கருப்புக் கண்ணாடிகள் பதித்த அடுக்குமாடி அலுவலம் உனக்கு பிடிக்காது என எனக்குத் தெரியும். எனவே தான் உன்னை உனக்குப் பிடித்தமான பூங்காவிலேயே இருக்கும் படி நினைத்துக் கொண்டேன்.

    இன்று முதல் ஆளாக அலுவலகம் வந்து இருந்தேன். மனம் முழுதும் நீயே நிறைந்து இருந்தாய். என் இன்றைய தினத்தின் பூரிப்பை, அகவெழுச்சியை, உள்ளே பொங்கும் மனவூற்றை எப்படி வெளிக்காட்டுவது என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அலைந்தேன். நாள் முழுமைக்கும் யாருடனும் பேசப்பிடிக்கவே இல்லை. நிமிடத்துக்கொரு முறையென கணினியிலும் , அலைபேசியிலும் ஆயிரக்கணக்கான சிரிப்பான்களை குறுந்தகவல்களாக, மின்னஞ்சல்களாக எனக்கு நானே அனுப்பிக் கொண்டேன். அதை நான் திறந்து பார்க்கும் போதும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் ஒவ்வொரும் சிரிப்பானிலும் வேப்பம்பழத்தின் வாசமும், உன் வெள்ளந்திச்சிரிப்பின் வாசமும் மாறி மாறி வீசிக் கொண்டே இருந்தது. இந்த நாளை முழுமையாக அனுபவிக்க வைத்தாய் மொழி, இன்று என்னை மீண்டும் நானாய் உணர வைத்திருக்கிறாய் மொழி. நமது இந்த பிரிவு  உன் காதலை, நட்பை, அருகாமையை, இருப்பை, தேவையை, உன்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது மொழி !

    உன் தாய் வீட்டிற்குச் சென்றிருக்கும் இந்த சிறு விடுமுறைப்  பிரிவில், ஆழத்தில் புதைந்து கொண்டிருந்த நம் காதலை உன் சிரிப்புருவினால் மீட்டெடுத்திருக்கிறாய் மணிமொழி ! உன்னை உன் வெகுளித்தனங்களோடும், ரசனையோடும், குழந்தைமையோடும் காதலிக்கும் உன் உயிர்த்தோழனை, நம் திருமணமான இத்தனை நாளில் தினப்பாடுகளுக்கும், அலுவலக வேலைப்பளுவுக்கும், எரிச்சல்களுக்கும், பொறுமையின்மைக்கும், நோய்மைக்கும் ஒப்புக் கொடுத்து விட்டு, ஒரு சராசரி கணவனாய் மட்டும் இருந்திருக்கிறேன் என்பதை இந்தப்பிரிவினால் உணர்த்தியிருக்கிறாய் மணிமொழி ! உன்னை நீயாய் இருக்க வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மனதாரச் செய்யும் உன் உற்ற தோழனாய் என்னை பழையபடி மாற்றியிருக்கிறாய் மணிமொழி ! போதும், நீ பாசமாய் வளர்த்த வேப்பமரத்துக்கும், மருதாணிச்செடிக்கும், உன் தாய்வீட்டுக்கும் அவசரமாய் ஒரு பிரியா விடை கொடுத்து விட்டு உடனே நம் வீட்டுக்கு வா என் அருமை மனைவியே !

    இப்படிக்கு

    உன் இன்மையில் உன்னை முழுவதுமாய் உணரும் உன் கணவன்.

    Share
  • தம்மையே இழந்திடுவார் !

    எம்.ஜெயராமசர்மாimages

    போதை தலைக்கேறி
    புத்தி  தடுமாறி
    பாதைதனை மறந்து
    பரிதவிக்கும் வேளையிலே

    காதும் அடைத்துவிடும்
    கண்களுமே கட்டிவிடும்
    பேதலித்த மனத்தோடு
    பெருமரமாய் வீழ்ந்திடுவர்

    வேர்த்து விறுவிறுக்க
    வெயிலெல்லாம் திரிந்தலைந்து
    பார்த்து உழைத்தபணம்
    பாதியிலிலே போய்விடுமே

    சோற்றுக்குக் காத்திருப்போர்
    சுகமின்றி படுத்திருப்போர்
    வீட்டிலே காத்திருக்க
    வீதியிலே குடித்துநிற்பார்

    நடுவீதி நாயகராய்
    நாளுமே நிற்பார்கள்
    தெருநாய்கள் கண்டுவிடின்
    தீராத கோபம்கோள்ளும்

    வெறிதலையில் ஏறிவிடின்
    நெறியெல்லாம் கெட்டுவிடும்
    தறிகெட்டுப் போயிடுவார்
    தம்மையே இழந்திடுவார்

    குடிபோதை வந்துவிடின்
    குணமெல்லாம் கெட்டுவிடும்
    மனைகூட அவனுக்கு
    மாறாகத் தெரிந்துவிடும்

    வாய்மையும் ஓடிவிடும்
    வல்லமையும் ஒழிந்துவிடும்
    பெய்கொண்ட மனமங்கே
    பேருருவம் கொண்டுவிடும்

    சிவமாக இருந்தவனோ
    சவமாகப் போயிடுவான்
    உவமானம் சொல்வதென்றால்
    உயிரற்ற பிணம்தானே

    மதியிழந்து கதியிழந்து
    மானமும் இழந்துநிற்கும்
    குடிபோதை நம்வாழ்வில்
    கெடுதியே தந்துவிடும்

    நாகரிகம் என்றெண்ணி
    நன்றாக குடித்திடுவார்
    நாட்டிலே உள்ளவரை
    நாகரிகம் என்னாகும்

    ஆதலால் குடிவிடுவோம்
    அனைவர்க்கும் வாழ்வுவரும்
    பேதலிக்கும் மனக்குரங்கை
    பிய்த்தெறிவோம் வாருங்கள் !

    http://fineartamerica.com/art/all/wine+bottle/canvas+prints

    Share
  • அன்புள்ள மணி மொழிக்கு

    டி.விப்ரநாராயணன்

    24-3-2014

    அன்புள்ள சகோதரி மணி மொழிக்கு

    நலம் உன் நலத்தை அறிய ஆவலாயுள்ளேன், சென்ற  கடிதத்தில் நலம் பற்றிக் குறிப்பிடாமல் கடிதத்தைத் தொடங்கிவிட்டாய். எப்படியிருக்கிறார்கள் சரவணனும் அருணாவும். பேரன் இளங்கோ நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறானா? உன் கணவர் மஸ்கட்டிலிருந்து வந்து விட்டாரா? இங்கு செந்தில் கனடா போயிருக்கிறான். அதனால் குழந்தையுடன் லக்ஷ்மி அவள் தாய் வீட்டிற்குச் சென்று இருக்கிறாள். அம்மாவிற்கு இரத்த அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கிறது. அப்பா நலமாக இருக்கிறார்.

    சென்ற கடிதத்தில் தாய்மையைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தாய். நன்றாக இருந்தது. நானும் நம் நாடு “அன்றும் இன்றும்” என்ற தலைப்பில்  ஒரு கவிதை எழுதினேன். என் நண்பர் பாலாவிடம் காண்பித்தேன். நன்றாக இருக்கிறது என்று சொன்னார். கீழே அந்தக் கவிதையை தந்திருக்கிறேன். படித்துப் பார். உன் கருத்தைத் தெரிவி. உன் வீட்டு வேலைகளின் நடுவில் கவிதை, கட்டுரை என்று எழுதுகிறாய். உன்னைப் பாராட்டத்தான் வேண்டும். அம்மாவும் அப்பாவும் உன்னைப் பார்க்க அடுத்தமாதம் வரலாம் என்று நினைக்கிறார்கள். உன் கருத்தைத் தெரிவி.

    இப்படிக்கு

    உன் பிரியமுள்ள அண்ணன்

    தமிழ்ச் செல்வன்

    நம்நாடு அன்றும் இன்றும்

    பாரத நாடு பழம்பெரும் நாடு

    பாரினிலே அது சிறந்த நாடு

    ஏரெடுத்து வாழும் மக்கள்

    பேரெடுத்த  அருமை நாடு,

    வேதங்கள் தோன்றிய நாடு – மன

    வேதனைகள் நிறைந்த நாடு – பல

    சோதனைகள் கண்ட நாடு – பல

    சாதனைகள் படைத்த நாடு.

    ஆலைகள் அமைந்த நாடு — கல்விச்

    சாலைகள் உள்ள  நாடு – அழகுச்

    சோலைகள் மல்கிய  நாடு – மனச்

    சோலைகள்  இல்லா நாடு.

    மக்கள் அதிகம் உள்ள நாடு

    ஏக்கங்கள் நிறைந்த நாடு

    ஊக்கங்கள்  குறைந்த நாடு – அதனால்

    தாக்கங்கள் விளைந்த நாடு

    சிற்பத்திற்குச் சிறந்த நாடு

    வெற்பால் சூழ்ந்த நாடு

    கற்பிற்கோர்  சிறந்த நாடு— ஆனால் பலர்

    கற்பைச் சூறையாடிய நாடு.

    மதங்கள் பல கண்ட நாடு

    மதச் சண்டைகளும் காணும் நாடு

    சாதிகள்  ஆயிரம் உள்ள நாடு

    சாதிச் சண்டையும் மலிந்த நாடு

    புனிதர்கள் தோன்றிய நாடு – பல

    முனிவர்கள் வாழ்ந்த நாடு

    மனிதத் தன்மை குறைந்த நாடு—அதனால்

    புனிதத்  தன்மையும் குறைந்த நாடு

    புண்ணியத் தலங்கள் உள்ள நாடு —  ஆனால்

    புண்ணியம் இல்லாத நாடு

    பெண்ணியம் குலைந்த நாடு—மனத்

    திண்ணியம் இல்லாத நாடு

    விழாக்கள் கொண்டாடும் நாடு – அதன்

    விளைவையும் சந்திக்கும் நாடு

    விளைநிலங்கள் அதிகம் உள்ள நாடு – அவற்றை

    விளையாத நிலமாக மாற்றிய நாடு.

    ஆன்றோர்கள் பிறந்த நாடு

    சான்றோர்கள் வாழ்ந்த நாடு – நாட்டை

    வென்றோர்கள்  இருந்த நாடு—ஆனால்  மனத்தை

    வென்றோர்கள் இல்லாத நாடு.

    நாட்டுப் பற்றை வளர்த்த நாடு

    வீட்டுப் பற்றை ஒழித்த நாடு—இன்றோ

    நாட்டுப் பற்று குறைந்த நாடு – தன்

    வீட்டுப் பற்றை வளர்க்கும் நாடு

    ஏற்றங்கள் நிறைந்த நாடு

    குற்றங்கள் மலிந்த நாடு – கட்சிச்

    சீற்றங்கள் காணும் நாடு—ஆனால் பல

    மாற்றங்கள் கொணர்ந்த  நாடு

    உண்மைக்குப் பெயர் பெற்ற நாடு

    உண்மையைப் பெயர்த்தெடுத்த நாடு

    வண்மைக்குச் சிறந்த  நாடு — ஆனால்

    வன்மைக்கும் உள்ளாகும் நாடு

    ஆட்சிகள் பல கண்ட நாடு

    கட்சிகளும் பல கண்ட நாடு– மாட்சிமிக்க

    ஆட்சி யில்லாத நாடு – மனச்

    சாட்சி யில்லா நாடு

    உழவர்கள் நிறைந்த நாடு

    ஊழல்கள்  மலிந்த நாடு

    உழைப்பாளிகளை மதிக்காத நாடு

    உழைப்பையும் மதிக்காத நாடு

    Share
  • வாழ்க்கை நலம் – 53

    குன்றக்குடி அடிகள்

    53. சிறப்பு செய்தொழிலாலல்ல!

    இன்று “மானுடம்” உலகமகா உலகளாவிய நிலையில் வளர்ந்து வந்திருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வளரும். இன்று மனிதம், குடும்பம். சமூகம், சமுதாயம் ஆகிய பரிணாம வளர்ச்சியின் எல்லைகலைக் கடந்து மானுடம் “ஓருலகம்” என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

    ஆதிகாலத்தில் மனிதக் கூட்டம்தான் இருந்தது; இந்த மனிதக் கூட்டம்தான் காலப்போக்கில் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாக வளர்ந்தது. ஏன்? சார்ந்து வாழும் பண்புகள் வளர்ந்தன. ஒருவருக்கொருவர் தேவைப்பட்டவர்களாக, ஒருவரையின்றி மற்றொருவர் இல்லை என்கிற அளவுக்கு வாழ்நிலை அமைந்தது. இந்த நிலையில்தான் சமூக அமைப்பு வடிவம் பெறுகிறது.

    மக்களிடையில் ஏற்பட்ட பல்வேறு வகைத் தொடர்புகளால் சமூக அமைப்பு தோன்றுகிறது. சமூகம் இயற்கையாகப் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவது. தனி மனிதர்களே சமூகத்தைத் தோற்றுவிக்க முடியாது. ஆனால் சமூக அமைப்பினால் உரிமைகளையும் பாதுகாப்பையும் பெறுபவர்கள் சமூகத்தை ஆதரித்துப் பாதுகாக்கின்றார்கள்.

    இங்கனம் இருந்த சமூக அமைப்பில் வகுப்பு, சாதி, குடும்பம் ஆகியன எதுவும் தொடக்கத்தில் இல்லை. காலப்போக்கில் விவசாயத் தொழில் தோன்றிய நிலையில் சமூகம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு நிலச் சொந்தக்காரர்கள், மற்றொரு பிரிவு நிலத்தில் விவசாயம் செய்யும் தொழிலாளிகள். இதனால் பண்ணையாட்கள் – அடிமை முறை தோன்றியது.
    இந்தக் காலக் கட்டத்தில்தான் ஒருவர் அல்லது சிலர் பிறிதொருவருக்காகக் கூலி அடிப்படையில் வாழ்தல் என்னும் நடைமுறைத் தோன்றியது. இந்த நடைமுறை தோன்றி, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வேளாண்மை அடிப்படையிலான பல தொழில்கள் தோன்றின. அதே போழ்து வாழ்நிலையினால் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சியின் காரணமாகவும் பல தொழில்கள் தோன்றின.

    தொழில்கள் தோற்றத்தின் அடிப்படையில் வகுப்புக்கள் தோன்றின. வகுப்புக்கள் தோன்றிய நிலையில் வகுப்புக்களுக்கிடையில், செய்யும் தொழில் அடிப்படையில் தகுதி, அந்தஸ்து, பெருமை முதலியன தோன்றின.

    இங்ஙனம் தொழில்கள், வகுப்புக்கள் அடிப்படையில் பெருமை சிறுமைகள் தோன்றிய நிலையை, திருக்குறள் அறுதியிட்டு எடுத்துக்காட்டுகிறது. எடுத்துக்காட்டுவதுடன் மட்டுமல்ல, மாந்தருள் பெருமை கோரிப் பெறும் உரிமையையும் மறுக்கிறது.

    மாந்தர் எவரும் பிறப்பில் தொழில் செய்பவராகவோ, பெருமைக்குரியவராகவோ பிறப்பதில்லை. பிறப்பிலேயே உயர்வுடையவர்கள் என்பது புகழ்ச்சியேயாம். அறிவியல் சார்ந்த உண்மையல்ல. பிறப்பில் அனைவரும் ஒன்றும் அறியா குழந்தைகளே என்பதை அக்பர் சோதனையின் மூலம் நிரூபணம் செயத வரலாற்றை ஓர்க. அதனால் தானே ததீசி முனிவரின் பத்தினி மும்மூர்த்திகளையும் குழந்தைகள் ஆக்கினார் போலும்.

    பிறப்பில் அனைவரும் சமம். மொழி இல்லை. மதம் இல்லை. உடைமை இல்லை, தொழில் இல்லை. பெருமை இல்லை. சிறுமை இல்லை. வளர்ச்சியின் காரணமாகச் சில பெறலாம். ஆயினும் மானிடத்தின் அடிநிலைக் கொள்கையான சமம், சமத்துவம் ஆகியனவற்றை இழந்து விடக் கூடாது.

    சமூகத்தின் இயக்கத்துக்குப் பல தொழில்கள் தேவை. தொழில்கள் சில உயர்வான அறிவு சார்ந்த உழைப்பாக இருக்கலாம். பல உடல் சார்ந்த உழைப்பாகவும் இருக்கலாம். ஆயினும், தொழிலின்கண் உள்ள வேறுபாடுகள் தொழிலை செய்பவர்களிடம் வந்துவிடக்கூடாது. வந்தால் சமூக மோதல்கள் ஏற்படக்கூடும் என்ற சமூகவியல் அறிவியலை

    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” (திருக்குறள் – 972) என்ற திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவர் உணர்த்துகின்றார்.

    பிறப்பின் அடிப்படையில் தொழில் இல்லை. தொழிலால் ஏற்படும் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை; பெருமையும் இல்லை; சிறுமையும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் உள்ள சமம், சமத்துவம் சமூகத்தின் அடிநிலைக் கொள்கையாக விளங்க வேண்டும். வாய்ப்புக்கள் காரணமாக அமையும் தொழிலின் காரணமாக எந்த ஒரு சிறப்பு உரிமையையும் தகுதியையும் சமூகத்தில் பெறக்கூடாது; அடையக்கூடாது. கோயில் சிலையைப் பூசிப்பவனும் சந்தி பெருக்குபவனும் செய்யும் தொழிலால் வேறுபடலாம். அதனால் கோயிற்பூசை செய்வோர் உயர் நிலையினராகவும், சந்தி பெருக்குவோர் இழி நிலையினராகவும் சமூகத்தில் ஆகக்கூடாது.

    சமூகத்தில் எந்த இரு பிரிவினரும் ஒத்த சமூகத் தகுதி உறவுகள் பெறுவதே சமூக நீதி அப்படி இருந்தால்தான் சமூகத்திற்கு தேவையான பல்வேறு தொழில்களையும் சிய முன் வருவர். அதனால் செய்யும் தொழில் காரணமாகச் சிறப்புரிமைகள் கோரி பெறுவதை – அடைவதை “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்று மறுக்கிறது திருக்குறள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிக்கல்கள் வராத சமூக அமைப்புக்கு, திருக்குறள் வழி காட்டியுள்ளது.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    டி.விப்ரநாராயணன்

    24-03-2014

    அன்புள்ள மகள் மணிமொழிக்கு

    நீ எப்படி இருக்கிறாய்? பேரன் அருண் நன்றாக படிக்கிறானா? மாப்பிள்ளைக்கு ப்ரொமோஷன் கிடைக்கப் போகிறது என்று சென்ற கடிதத்தில் எழுதியிருந்தாய். கிடைத்துவிட்டதா? மாமனார் மாமியார் எப்படியிருக்கிறார்கள்?

    எதிர் வீட்டுப் பெண் தனக்குப்பார்த்த மாப்பிள்ளையை நிச்சயதார்த்தம் நடந்த பத்து நாட்களுக்குப்பின்  மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டாளாம் என்று எழுதியிருந்தாய்..  மற்றொரு பெண் மாமனார் மாமியார் இல்லாத வீட்டில்தான் தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்கிறாள் என்றும் குறிப்பிட்டிருந்தாய். மேலும் மிகவும் கவலைப் பட்டு எழுதியிருந்தாய்.. நீ சொல்வது உண்மைதான். இப்பொழுது பையனுக்கோ பெண்ணுக்கோ திருமணம் நடக்கும் வரைக்கும் பயமாக இருக்கிறது என்று பெற்றொர்கள் சொல்கிறார்கள். திருமணம் ஆனபின்பும் கவலைதான். முன்காலத்தில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை என்று கேள்விப்பட்டோம். இன்றோ மருமகள் கொடுமை என்று கேள்விப்படுகிறோம்.

    ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார்.நிச்சயமான பின்பு. பெண்ணும் பிள்ளையும் வெளியில் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அவள் இளநீர் கேட்டிருக்கிறாள். அவனும் இளநீர் விற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறான் இளநீர் விற்பவரிடம் இளநீர் ஒன்றின் விலை என்ன என்று கேட்டிருக்கிறான். அவன் 25 ரூபாய் என்றிருக்கிறான். உடனே அந்தப் பையன் 20 ரூபாய் வைத்துக் கொள் என்று பேரம் பேசியிருக்கிறான். உடனே அந்தப் பெண் பேரம் பேசும் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து நடந்ததைக் கூறிவிட்டு திருமணத்தை நிறுத்தி விட்டாளாம் அந்தப் பெண். மற்றொரு செய்தி. ஒரு பையன் பெண்ணைப் பார்த்துவிட்டு பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு திருமணம் ஆனபின்பு பெண்ணின் பெற்றொர்கள் தங்கள் பெண்ணைப் பார்க்க வரக் கூடாது என்றானாம். இவ்வாறு பல கதைகள் என் செவியில் விழுந்தன.

    நீ ஏன் இவ்வாறு நடக்கிறது ? இதற்குக் காரணம் என்ன என்று கேட்டிருந்தாய்?

    குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றொர்கள் தவறு செய்து விடுகிறார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றி ஒரு அச்சத்தை தோற்றுவித்தே குழந்தைகளை வளர்க்கிறார்கள். வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வில்லை. சுதந்திரம் என்ற சொல்லின் பொருளைத் தவறாகத் தெரிந்துகொண்டு தங்கள் வாழ்வை அழித்துக் கொள்கின்றனர். .உன்னைத் திருமணம் செய்து கொடுத்தபோது இப்படியெல்லாம யோசித்தோமா.. மாப்பிள்ளயின் சம்பளம் ரூபாய் 200000 தான். அவர்கள் பெற்றொர்கள் உன்னுடன் தான் இருக்கிறார்கள்.. உனக்கு என்ன கஷ்டம் வந்து விட்டது. இப்பொழுது மாப்பிள்ளை நல்ல சம்பளம் வாஙுகுகிறார்.. வரவுக்கு ஏற்ற செலவு செய்து வாழ்க்கையை நன்றாகவும் சந்தோஷமாகவும் நடத்துகிறீர்கள்.

    வாழ்க்கையைக் கண்டு அச்சப்படக் கூடாது, 2020 பற்றி 2014-ல் சிந்தித்து வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் அனேகர். இக்காலப் பையன்களும் பெண்களும் – குறிப்பாக கணிணித் துறையில் பணிபுரிபவர்கள்—அதிக எதிர்பார்ப்பிலும் கற்பனையிலும் கருத்தைச் செலுத்தி நிகழ்காலத்தை இழந்து விடுகிறார்கள்.  பெண் பார்க்கும்போது  ஒரு பெண்  பையனிடம்,” தனக்குப் பிறக்கும் குழந்தை இண்டர் நேஷனல் பள்ளியில் படிக்கணும். அதற்கு நீங்கள் இப்பொழுது ஒப்புதல் தரவேண்டும் “ என்றாளாம்.இதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது..நம் வாழ்க்கை இவ்வுலகில் நிரந்தரமல்ல. மரணம் எப்பொழுது. நிகழும் என்பது நமக்குத் தெரியாது.இலக்கு இருக்கவேண்டும். ஆசைகள் இருக்க வேண்டியதுதான் . ஆனால் ஆசையையும் தேவையயும் அதிகரித்துக் கொண்டே சென்றால் அழிவைத் தேடித்தான் செல்ல வேண்டியிருக்கும்.

    நான் உனக்கு power of now என்ற நூலைப் பற்றிக் கூறியிருக்கிறேன், நம் கையில்  இருப்பது இந்தக் கணம். நடந்ததைப் பற்றி சிந்திiப்பதோ வருங்காலத்தைப் பற்றி எண்ணிக் கற்பனை காண்பதோ வீணான செயல் என்று அந்த நூல் கூறுகிறது.

    நாம் யாரும் இவ்வுலகில் தனித்து வாழ முடியாது. பிறரைச் சார்ந்து வாழத்தான் வேண்டும்.. எல்லொரும் சேர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். மேலை நாட்டின் தாக்கத்தால் உறவுகள் வேண்டாம் என்று பலர் எண்ணுகிறார்கள்…அது தவறு.  நான் என் நண்பர் வீட்டிற்குப் போயிருந்தேன். அங்கே அவர்களது பேரன் பேத்திகளைப் பார்த்தேன். அவர்கள் அமெரிக்காவில்  படிக்கிறார்கள்.. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் வந்தார். அவரை அந்தக் குழந்தைகளுக்கு “இவர் உங்கள் தாத்தா: என்று அறிமுகப் படுத்தினார்கள். அதற்கு அந்தக் குழந்தைகள் ”so whaat”  என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டனர். அதனால் மேலை நாட்டு மோகம் பணத்திற்கு மரியாதை தருகிறது. மனித நேயத்திற்கு மதிப்புத் தருவது இல்லை.

    இந்தக் காலத்து இளம் சிட்டுகள் ஒரு குழப்பத்திலும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலும் சிந்தனைகளை ஓடவிட்டுக் கொண்டிருப்பதால் அவர்கள் சிந்தனையில் தெளிவு இல்லை. ஆகவே பெற்றொர்கள் தான் அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும்.

    சரி. நீ ஒருகதை எழுதப் போகிறேன் என்று எழுதியிருந்தாயே. எழுதத் தொடங்கி விட்டாயா? வினோபா எழுதிய கீதைப் பேருரைகளைப் படித்து முடித்து விட்டாயா? எப்பொழுதும் நிறைவான மனதுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

    குழந்தைகளுக்கு என் அன்பைச் சொல்.

    இப்படிக்கு

    உன்பிரியமுள்ள அப்பா

    Share
  • தமிழுக்கும் அமுதென்று பேர்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    தமிழுக்கு அமுதென்று பேர் – பாரதிதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி.. பி.சுசீலா – கே.ஆர்.விஜயா

    நம் தாய்மொழி தமிழின் அழகை, இனிமையை,பெருமையை இதைவிட வேறெந்தக் கவிதையிலும்ஒருசேர உயர்த்திச் சொன்னவரில்லை என்னும் பெருமையைத் தட்டிச் செல்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

    குறிப்பாக பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில்பயன்படுத்தப்பட்ட பாரதிதாசன் கவிதையிது! கதையின்நாயகி வாயிலாகக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் -தமிழை நேசிக்கின்ற நெஞ்சம் தனக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

    பாடும் குயிலாய் தமிழ்த்திரையிசையில் பவனிவரும் பி.சுசீலா அமுதையே பொழிந்து தந்திருக்கிறார். அழகிய குழந்தைக்கு மேலும் அழகு சேர்க்க ஆபரணங்கள் அணிவிக்கும் அன்னையைப் போல் தாயுமானவர்கள் இருவர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி..

    பொங்கும் கடலென பூரித்து எழுகின்ற சங்கத்தமிழ் முரசமன்றோ.. பாவேந்தர்! தங்குதடையில்லா தமிழினை.. தமிழ் உணர்வினை.. தமிழ் மரபினை.. வருகின்ற தலைமுறைகளுக்கு உரமேற்றி வைத்த கவிதையிது!

    சொற்கள் எல்லாம் அவரிடம் ஏவல்செய்ய அணிவகுத்துநிற்க.. தமிழே கடலாகி.. அவர்தந்த முத்துக்கள்தான்அவர்தம் படைப்புகள் என்பதில் வியப்பென்ன?

    தமிழை நேசிப்பதும், சுவாசிப்பதும், வாசிப்பதும்இவர்தம் வழியென்றாக..அதன் புகழை எடுத்தியம்பச்சொன்னால்.. தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்என்றும்..அறிவுக்குத் தேன் என்றும்.. கவிதைக்கு வயிரத்தின்வாள் என்றும்.. உயிருக்கு நிகர் என்கிறார்..

    பாவேந்தரைப்போல் ஒரு கவிஞரை தமிழ் உலகம் காணாதிருந்தால் எழுச்சியும், இன உணர்வும், மொழிப்பற்றும் இன்றைக்கு உள்ள அளவு இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி! புரட்சிக்கவிஞன் என்றால் புதுவைதந்த பாரதிதாசன் என்பதற்கு இப்பாடலே முரசறையும்!

    தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் வரிகள்

    தமிழுக்கு அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்.
    தமிழுக்கு நிலவென்று பேர்
    இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நிர்
    தமிழுக்கு மணமென்று பேர்
    இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த உர்
    தமிழுக்கு மதுவென்று பேர்
    இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்
    பயிருக்கு வேர் .

    தமிழ் எங்கள் இளமைக்கு பால்
    ஆஆஆஆஆஆஆஆஆ
    தமிழ் எங்கள் இளமைக்கு பால்
    இன்பத்தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
    புலவர்க்கு வேல்
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வாண்
    இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்
    சுடர் தந்த தேன்

    தமிழ் எங்கள் அறிவுக்கு தோல்
    இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாழ்
    வயிரத்தின் வாழ்
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    Share
  • பரம்பொருள் பாமாலை-6

    தண்டுவட மாகிநீ எனைநிற்க வைத்தாய்,

    உண்டஉண வாகவே உதிரத்தில் சேர்ந்தாய்,

    வண்டுதொட வாடிடும் அணிச்சத்தைப் போலவே,

    கண்டுமுனைக் காணாமல் நான்வாடி னேனே!                                                              33

     

    பத்துவடி வெடுத்து நின்ற மாலுக்கும்,

    பத்துசிர மெடுத்த இலங்கைக் கோனுக்கும்,

    சித்துவடி வாகிமுழு முக்தியடைந் தோருக்கும்,

    பித்துவடி வானமுது பரமனே துணை!                                                               34

     

    கரிமுகனும் கந்தனும் இருபுறமும் இருக்க,

    திரிபுறம் எரித்தவன் உடலோடு இணைந்து,

    பரிமளம் மணக்கும் பார்வதியும் இருக்க,

    விரிமனம் கொண்டிந்த காட்சியைக் காண்போம்!                                                           35

     

    வினோதத் தாண்டவனே, வெண்ணிலவைப் பூண்டவனே,

    விவாதப் பொருளாக என்மனதில் நீண்டவனே,

    விகாரமனம் நீக்கும் வேலவனின் ஆண்டவனே,

    விதானமாகி நின்று காக்கும் கூத்தனே!                                                                            36

     

    இரவும் பகலும் நீங்கா துலகில்,

    அரவம் பூண்டு ஆடும் நாதனின்,

    பரவும் கருணைப் பேரொளி தன்னில்,

    குரவர் போல அனைவரும் நனைவோம்!                                                                      37

     

    பச்சை யப்பனாய், பசுப தீசனாய்,

    அம்மை யப்பனாய், தில்லை நாதனாய்,

    புற்றிடங் கொண்ட புனித ஈசனாய்,

    பக்தனைக் காக்க அத்தன் வருகிறான்!                                       38

     

    கோபியரோ டாடியவன், பாண்டவர்கள் நாடியவன்,

    ஆநிரைகள் அசைந்தாட அழகுகுழல் ஊதியவன்,

    தீபமெனும் சீதையினைத் துயரமுடன் தேடியவன்,

    பாடியதும் நாடியதும் பெருமைமிகு ஈசனையே!                                                            39

     

    அரசமர இலைகள் அசைந்தாடும் இன்னிசையில்,

    அருவிநீர் சலசலத்து அசைந்தோடும் தண்ணிசையில்,

    அடர்கறுங் குயிலிசைக்கும் அழகான பண்ணிசையில்,

    அமர்ந்திசைத் திடுவான் அம்மை யப்பன்!                                                                          40

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​6

     

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -2​6​

    ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

     

    unnamed (1)

    unnamed (2)

    தகவல் :
    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

     

    Share
  • சாவிற்கு முன்

    செந்தில்குமார் old-images

    சாவிற்கு முன் தெரியும் முகக்களையை தரிசித்திருக்கீற்களா?
    அப்போது தெரியும்  வாழ்வின் மகத்துவம்.
    சாகும் முகத்தின் புன்சிரிப்பை பார்த்திருக்கிறீர்களா?
    அப்போது தெரியும் அன்பின் ஆழம்.
    சாகும் நொடியில் அந்த முகத்தில் தெரியும் புரிதலை கவனித்திருக்கிறீர்களா?
    அப்போது தெரியும் அறிவின் பிதற்றல்.
    சாவை உணர்ந்துகொண்ட சந்தோஷத்தை  அனுபவித்திருக்கீற்களா?
    அப்போது புரியலாம்…..வாழ்க்கை.

    சாவை புரிந்து கொண்டதுபோல் தாத்தா முகம் இருந்தாலும்
    “இன்னும் கொஞ்சம் வாழ்விருக்காதா?” என்று
    தொக்கி நிற்கும் கேள்வி
    என்னை   புலப்படுத்தியதற்கு
    நன்றி.

    http://www.photographersdirect.com/buyers/stockphoto.asp?imageid=1131251

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

     

    நந்திதா

     

    இங்கு மணிமொழி என்பவர் ஒரு பெண் காவல் அதிகாரி. திருவிழாக்காலம். தீவிர வாதிகளால் கடத்தப் பட்ட ஒருவர் காவல் அதிகாரிக்கு கடிதம் அனுப்புகிறார். இதோ அக் கடிதம்.
    ஊர்திரை வேலை உலாவும் உயிர்மயிலைக்
    கூர் த்ரு வேல் வ்ல்லார் கொற்றங்க் கொள் சேரிதனில்
    கார் த்ரு சோலை கபாலீச் சரம் அமர்ந்தான்
    ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்
    ( தேவாரம்)

    இது பிணை கைதி பாடியவை

    கொற்றைவார் சடையோனை பணியாது போனேனோ
    பற்றற்றவன் பாதம்தனை போற்றாது போனேனோ
    கற்ற திரு வாசகமும் தேன் மொழி தேவாரம் பாடாது
    உற்றவரை விட்டு ஓடியவனை காத்தருள் மணிமொழி அம்மையே

    ஈரண்டு திங்கள் சுமந்தவளுமில்லை எங்கு உளேனென
    இரைந்து உரைப்பினும் ஏரெடுத்து பார்பாரில்லை
    ஈரட்டு நாளாய் ஏங்கியும் எமையறிவாரில்லை இனி
    இறப்பதோ இருப்பதோ உன்னையன்றி யாரரிவார் மணியம்மையே

    ஊரார் அறியாத ஒரிடத்தில் ஊமத்தைப் புதருமுண்டு
    பாழ் நரகக் குழியில் அமிழுமுன்னே அம்பிகையே வாராயோ
    உயிர் உகுக்கும்முன் காப்பியமும் கோப்பியமும் நான் படைப்பேன்
    உலகம்மையே மணிமொழியம்மையே காத்தருள்வாயே

    Share
  • திருமால் திருப்புகழ் (38)

    கிரேசி மோகன்

     Tamil-Daily-News-Paper_10669672490

    தனதனன தான தான தனதனன தான தான
    தனதனன தான தான -தனதான…..

    ——————————————————————————————————————

    “மலையருணை மேவும் ஞான ரமணமுனி கூறும் நானை images (7)
    ஒழிமனவி சார வேகம் -வரவேணும்
    ஒருநினைவி லாத மோன நிலையினில்சு கானு பாவ
    பரபிரும மாக நானும் -அருள்வாயே

    புலனசைவின் மோக தாப ஜலம்வரள காயும் பூமி
    நிலையடைய சாது வாகி -இகவாழ்வில்
    வருவதனை ஏசி டாது பெறுவதனில் கூசி டாது
    வெறுமைதனில் ஏக மாகி -மருளாது

    சலனமதி லாது கோரம் அழகுஅபி மான பேதம்
    அதுயிதுயெ னாது யாவும் -எனதாக
    சமரசசு பாவ மோடு வடஅருணை கோயில் கோபு
    ரஅமணிஅம் மாளின் வாழ்வை -உறவேணும்

    மலைபசிய மாக நீள மரகதவி ரோத மேனி
    அலைகடலில் சேடன் மீது -சொகுசாக
    வனசமகள் பாதம் நீவ வளரும்விழி யோக சீய
    மயிலைநகர் கேச வாதி -பெருமாளே”
    ————————————————————————————————————

     

    படங்களுக்கு நன்றி:

    http://narasimhar.blogspot.in/2009/08/blog-post_13.html

    Share
  • அன்பின் முகவரி

     

     

    எஸ் வி வி 

    unnamed (1)

    அன்பின் முகவரி உறைந்துவிட்டது
    நெல்லை 21 E சுடலை மாடன் தெருவில்

    அந்தத் தொலைபேசி முனையில்
    ஹலோ …என்ற வெள்ளந்திக் குரல்
    ஒலிக்காது இனி
    அழைப்பவர் அடையாளம் பிடிபட்ட மாத்திரத்தில்
    வெடித்துப் புறப்படும் அந்தக்
    குதூகல தோழமைச் சிரிப்பின் பரவசம்
    வாய்க்காது ஒருபோதும் இனி

    நிபந்தனையற்ற வாஞ்சையை
    திணறத் திணறப்
    பொழியும் அருவி தென்படுமோ இனி…

    சுமக்க மாட்டாது அஞ்சல்காரர்
    ஏந்திவரும் கடிதங்கள், புத்தகங்கள்,
    பருவ இதழ்கள் ஏங்கக் கூடும்
    எதிர்பார்த்து வந்த
    ஈரமான இதயத்தைக் காணாது.

    தந்தி சேவை நிறுத்தப்பட்ட ஆபத்து
    வந்து சேரக் கூடும்
    (அவர் அதிகம் எழுதிக் கொண்டிருந்த)
    அஞ்சல் அட்டைகளுக்கும் !
    அடுத்தவரைப் பாராது
    வேகமாகக் கடந்துபோகும்
    அவசர சமகால வெளியில்
    பகிர்ந்து கொள்ளவும் பாராட்டி மகிழவுமான
    ஊக்கமொழியாளரது மறைவு
    உளவியல் துறைக்குமான இழப்பு

    வயது சமாதானம் செய்துவிட
    முடியாத மரணங்களுக்கான
    துயரம் அளவிட முடியாதது

    ஆனாலும்

    செல்விருந்தோம்பி
    வருவிருந்து பார்த்திருக்கும்
    இலக்கியப் பெருந்தேடல் மிக்க
    அவரது கண் பார்வையின் நீட்சி
    காலத்தின் அடுத்தடுத்த பதிப்புகளில்
    உணரப்படவே செய்யும்
    வர்க்க சமரசமற்ற
    கருத்தோட்டத்தை அடைகாக்கும்
    சமத்துவ உலகுக்கான
    வேட்கையை வளர்த்தெடுக்கும்
    மனிதகுல விடுதலைக்கான
    கீதத்தை இசைத்துக் கொண்டுதான் இருக்கும்.

    ************
    நன்றி: தீக்கதிர் (மார்ச் 27, 2014)

    Share
  • திருமால் திருப்புகழ் (37)

     

    கிரேசி மோகன்

    தனன தான தானான தனன தான தானான
    தனன தான தானான -தனதான….

    ——————————————————————–

    காஞ்சி வரதராஜ பெருமாள்….
    —————————————

    pg19

    அதல சேட னாராட ,அலையு லாவு பாலாட,Vardar
    அமுத சோத ரீயாட, -அயனாரும்
    கமலா நாபி மீதாட, விரைய நீல வானோடி
    கருட வாக னாராட, -அதனாலே,

    எதிலும் ராம னேகாண விழிகள் மூடி வாளாக
    அமரும் வாயு சேயோனும் -செவிசாயும்
    இவர்கள் ஆடும் பேரோசை விழசு பாவ வாலாட
    சிறிய பாத னாராட, -கரநாலில்,

    கதையும் வாளும் கூராழி ஒலியும் ஓசை போராழி
    சிலையும் ஆட, மீனாமை -மறையேனம்
    வளரு வாம னார்சீயம் பரசு ராம ஸ்ரீராம
    உழவு ராம கோபால -அவதார

    கதைகள் ஆட, காமாட்சி பெரிய வாளின் ஊரான
    அசலம் ஆனை மீதேறி -வளர்வோனே,
    பெரிய தேவி தாயோடு வருக நீல மாலோல,
    வரத ராஜ தேவாதி -பெருமாளே

    ————————————————————————-

     

    படங்களுக்கு நன்றி :

    http://narasimhar.blogspot.in/2013_06_01_archive.html

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (3)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு ஸ்ரீனிவாசன் அவர்களே,

    உங்கள் மருமகன் மெய்யப்பன் செய்த தவறுகளனைத்தும் தாங்கள் அறியாமலே நடந்துள்ளது. இதனால் பல கோடி பணம் கைமாறியதும் தலைவராகிய தங்களுக்கேத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியவில்லையென்றால் நீங்கள் எப்படி பி.சி.சி.ஐ. இன் தலைவராகவும், இந்தியா சிமெண்ட்ஸ் குழுமத்தின் தலைவராகவும் இருந்து மிகச் சிறந்த நிர்வாகத்தை உங்களால் எப்படித்தர முடியும்? ஆனால் உச்சநீதி மன்றத்திற்கு இவையனைத்தும் மிகத் தெளிவாகப் புரிந்து உங்களை உடனடியாகப் பதவி விலகும்படிக் கூறியுள்ளார்கள். நீங்கள் பதவி விலகி அந்தப் பொறுப்பிற்குரிய கௌரவத்தையும், அந்த விளையாட்டிற்குரிய பெருந்தன்மையையும் காக்கப் போகிறீர்களா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share