அன்பின் முகவரி
எஸ் வி வி
அன்பின் முகவரி உறைந்துவிட்டது
நெல்லை 21 E சுடலை மாடன் தெருவில்
அந்தத் தொலைபேசி முனையில்
ஹலோ …என்ற வெள்ளந்திக் குரல்
ஒலிக்காது இனி
அழைப்பவர் அடையாளம் பிடிபட்ட மாத்திரத்தில்
வெடித்துப் புறப்படும் அந்தக்
குதூகல தோழமைச் சிரிப்பின் பரவசம்
வாய்க்காது ஒருபோதும் இனி
நிபந்தனையற்ற வாஞ்சையை
திணறத் திணறப்
பொழியும் அருவி தென்படுமோ இனி…
சுமக்க மாட்டாது அஞ்சல்காரர்
ஏந்திவரும் கடிதங்கள், புத்தகங்கள்,
பருவ இதழ்கள் ஏங்கக் கூடும்
எதிர்பார்த்து வந்த
ஈரமான இதயத்தைக் காணாது.
தந்தி சேவை நிறுத்தப்பட்ட ஆபத்து
வந்து சேரக் கூடும்
(அவர் அதிகம் எழுதிக் கொண்டிருந்த)
அஞ்சல் அட்டைகளுக்கும் !
அடுத்தவரைப் பாராது
வேகமாகக் கடந்துபோகும்
அவசர சமகால வெளியில்
பகிர்ந்து கொள்ளவும் பாராட்டி மகிழவுமான
ஊக்கமொழியாளரது மறைவு
உளவியல் துறைக்குமான இழப்பு
வயது சமாதானம் செய்துவிட
முடியாத மரணங்களுக்கான
துயரம் அளவிட முடியாதது
ஆனாலும்
செல்விருந்தோம்பி
வருவிருந்து பார்த்திருக்கும்
இலக்கியப் பெருந்தேடல் மிக்க
அவரது கண் பார்வையின் நீட்சி
காலத்தின் அடுத்தடுத்த பதிப்புகளில்
உணரப்படவே செய்யும்
வர்க்க சமரசமற்ற
கருத்தோட்டத்தை அடைகாக்கும்
சமத்துவ உலகுக்கான
வேட்கையை வளர்த்தெடுக்கும்
மனிதகுல விடுதலைக்கான
கீதத்தை இசைத்துக் கொண்டுதான் இருக்கும்.
************
நன்றி: தீக்கதிர் (மார்ச் 27, 2014)

