வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9
தேமொழி
திமிர் கொண்ட அழகு
உன் கண்ணில் தெரிவதென்ன
நெருப்பா?
என்னை சுட்டு வீழ்த்தச் செய்யும்
குறும்பா?
உன்
உதட்டில் இருப்பதென்ன
சிரிப்பா?
என்னை அதட்டி அழைக்கும்
அழைப்பா?
உன் பேச்சில் சொல்வதென்ன
இனிப்பா?
என்னை உனதாக்கச் செய்யும்
துடிப்பா?
திமிர் கொண்ட தென்றல் காற்றே….
உன்னைத் தேடி வந்தால்
உன்
புருவத்தில் ஏளனம் ஏற்றி
என்
பருவத்தில் தீ வைப்பதேனடி?
பள்ளி அறை பாடம் நடத்த
வெள்ளி நிலா தூண்டுதடி!
ஊதக்காற்றும் ஒத்துழைத்து
ஒதுங்கசொல்லி கூவுதடி!
உன் சுட்டு விரல் அசைவு
என்
கட்டுப்பாட்டை நொறுக்கும்!
உன் பட்டுப் பளிங்கு மேனி
என்னை உள் மூச்சில் வதைக்கும்!
பஞ்சமின்றி செழித்திருக்கும்
அஞ்சுகமே!
பட்டு நிலா வியப்புறும்
பெட்டகமே!
பொன்வண்டு அறியாது
அதனுடைய அழகை…
உன் கண் கொண்டு
உற்றுப்பாரடி
உன்னுடைய பேரழகை!
வஞ்சனையின்றி வளர்ந்த
உன் வதனம்!
அதை
இந்த மாமனிடம் தாரைவார்க்க
ஏனடி மெத்தனம்!
பொத்தி வைத்து ஆவதென்ன
அந்த
கன்னிமலை அதிசயம்!
இனி
ஒத்தி வைத்தால் தாங்காது என் உடம்பு
இது சத்தியம்!
காமன் கோயில் சாமிக்கு
நான் யாசிப்பது கேட்கலியா
தீர்த்து வைக்க தேவிக்கு
மாமன் மையல் புரியலியா!
-தனுசு-
ஓவியம்: தேமொழி
கவிதை: கவிஞர் தனுசு
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8>>
நன்று; கூட்டணியும் நன்று!!
சூப்பர் கூட்டணி. வெற்றிக் கூட்டணியும் கூட. படமும் கவிதையும் அழகோ அழகு. வண்ணத் தூரிகைக் காவியங்கள் என்ற பெயர் மிகப் பொருத்தமே. என் மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்.
இந்தக் கூட்டணி, மேலும் பல படைப்புகளைத் தர வேண்டுமென்பது என் பணிவான வேண்டுகோள். தேமொழி, தனுசு இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
புதுமையான முயற்சி. தேமொழி மற்றும் தனுசு இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
எங்களை பாராட்டிய மதிப்பிற்குரிய பழமை பேசி, பார்வதிராமசந்திரன், சச்சிதானந்தம் யாவருக்கும் நன்றிகள்.
Nice!!! நண்பர் தனுசு – சகோதரி தேமொழி, இந்தக் கூட்டணி, வெற்றிக்கூட்டணி ஆக வாழ்த்துகள்!!!
பதிவினைப் பாராட்டிக் கருத்துரைத்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிதையினைப் படத்துடன் வெளியிட அனுமதியளித்த தனுசுவுக்கும் நன்றி.
….. தேமொழி