திவாகர்

சென்னை தாம்பரம்-பீச் இடையேயான லோகல் ரயிலில் பிஸியான நேரத்தில் பிரயாணிப்பவர்கள் அதுவும் நின்று கொண்டே பிரயாணம் செய்பவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்தான். ஆனால் இந்த சிரமத்தைப் போக்கும் மருந்தாக அவ்வப்போது சில பாடல்கள் கேட்கும். கண்ணிழந்தவர் ஓரிருவர் பக்தி பாடலோ அல்லது ஜனங்களுக்கு மத்தியில் புகழ்பெற்ற சோகப்பாடல்களில் ஒன்றையோ பாடிக் கொண்டே பிச்சை எடுப்பார்கள். பிரயாணிகள் அவர்களுக்கு உதவுகிறார்களோ இல்லையோ அவர்கள் பாடல்களை இவர்கள் உதடுகளும் நிச்சயம் முணுமுணுக்கத்தான் செய்யும். பிரயாணப் பொழுது எத்தனை சிரமமாக இருந்தாலும் மனம் திசை திருப்பப்பட்ட நிலையில் சிரமத்தை பொருட்ப்படுத்தமாட்டார்கள். இப்படி ஆரம்பகால மாணவப்பருவத்தில் இப்படி ரயிலில் நான் கேட்ட ஒரு பாடல் ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்.. எனும் செவிக்கினிய, மனதுக்கினிய செந்தமிழ்ப் பாடல்.

நான் வெகு நாட்கள் வரை இது ஏதோ திரைப்படப்பாடல் என்றுதான் நினைத்திருந்தேன். பின்னொருநாள் நண்பன் கொடுத்த டி.எம்.எஸ் பாடிய.முருகர் பாடல் தனிப்பாடல்கள் மூலம்தான் உண்மையை அறிந்துகொண்டேன். என் மனதைக் கொள்ளை கொண்ட அந்தப் பாடல் எத்தனையோ பேருக்கு ஆழ்ந்த ஆறுதலையும் பக்தியையும் கொடுத்திருக்கத்தான் வேண்டும் என நான் எனக்குள்ளேயோ சொல்லிக் கொள்வதுண்டு.. டி.எம்.எஸ் இன் முருகர் பாடல்கள் இன்றளவும் இயற்கையான, எளிமையான பக்தி பாடல்களாகவே இருப்பது மட்டுமல்லாது பாமரர் மத்தியிலும் புகழடைவதென்பது அவருக்கு முருகர் கொடுத்த வரம் போலும். உள்ளம் உருக வைக்கும் முருகைய்யாவின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக விற்பனையானது ஆச்சரியமல்ல வென்றும், அதன் காரணம் டி.எம்.எஸ் எனும் மக்கள் கலைஞனின் குரல் வண்ணத்தால் என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

இதோ இந்த வாரம் டி.எம்.எஸ் பற்றி அஞ்சலிக் கட்டுரையை சமூக ஆர்வலர் திரு வேணுகோபாலன் உணர்ச்சிகரமாக எழுதி இருக்கிறார்

டி எம் எஸ் என்பது ஒரு குரல் மட்டுமல்ல. நான்கு பத்தாண்டுகளை, சில நூறு திரைப்படங்களை, அடுத்தடுத்த தலைமுறைகளை அப்படியே கட்டி ஆண்ட இசை சிம்மம். எப்படித் தான் அவர் நடிகர்களுக்கு ஏற்பத் தமது குரலில் மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது என்பது பலரும் வியந்து நோக்கிய விஷயம். நடிகர்களின் காலப் போக்கிற்கு ஏற்ற நெளிவு சுளிவுகளையும் கூட அவர் தமது குரலில் ஏற்றிக் கொண்டார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற (மலைக்கள்ளன்) பாடலின் தொனி வேறு. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை) பாடலின் தொனி முற்றிலும் வேறு. தாழையாம் பூ முடிச்சு (பாகப் பிரிவினை) பாடிய காலம் வேறு, சுமை தாங்கி சாய்ந்தால் (தங்கப் பதக்கம்) காலம் வேறு.

பாடலைப் பாடுவது மட்டிலும் அல்ல பாட்டுக்கான பாவத்தைப் பிடிப்பது மட்டிலும் கூட அல்ல, வாயசைக்கும் நடிகரின் திறன், அவரது உடல் மொழி, அந்தக் கதா பாத்திரத்தின் சமூக அடையாளம்….இவை எல்லாவற்றையும் தனது குரல் ஒரு ஒட்டுமொத்தக் குறியீடாக உணர்த்தி விட வேண்டும் என்று ஒரு பயிற்சி மேற்கொண்டார் போலும். இதனால் தான் அவர் – ஆத்திரம், அன்பு, கோபம், காதல், வீரம் சோகம், என எந்த உணர்ச்சியைக் காட்டும் பாடலையும் எடுத்துப் பாடும் திறமையைப் பெற்றிருந்தது.

கம்பீரம் பொங்கும் பாடல்களை மிக அனாயாசமாகப் பாட முடிந்த அவருக்கு, மெலிதான குரலில் அரவணைப்பாக இசைக்கவும் தெரிந்திருந்தது. கர்ணன் படத்திற்காக அவர் பாடிய (ஆனால் படத்தில் இடம் பெறாத) மகாராஜன் உலகை ஆளலாம் என்பதில் ஒலிக்கும் அவரது குரலுக்கும், சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி (சபாஷ் மீனா) என்பதன் குழைவுக்கும் எத்தனை வேறுபாடு ! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி (தங்கப் பதக்கம்) என்ற தன்னிரக்கம் மிகுந்த ஒரு பாடலுக்கும், அச்சம் என்பது மடமையடா (மன்னாதி மன்னன்) போன்ற நெஞ்சு நிமிர்த்தும் ஒரு பாடலுக்கும் எத்தனை மாறுபாடு.

துயரம் பொங்க ஒலிக்க வேண்டிய பாடல்களை அவர் வெளுத்துக் கட்டினார். நினைந்து நினைந்து நெஞ்சம் (சதாரம்), நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள்), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), ஆட்டுவித்தால் யார் ஒருவர் (அவன் தான் மனிதன்), அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை) என்று பெரிய பட்டியல் உண்டு. ஓர் இசைக் கருவி இழைத்துத் தரும் சோகத்தை அவரது குரலினுள் குரலாக ஒரு ரசவாதம் செய்து அந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.

கர்நாடக சங்கீத ஞானம் இருந்ததால், ராகங்கள் கொஞ்சும் இசைப் பாடல்களை அவர் தூக்கலான குரலில் இசைக்க முடிந்தது. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா), ஏரிக்கரையின் மேலே (முதலாளி), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), சின்னஞ்சிறிய வண்ணப் பறவை (குங்குமம்), மாதவிப் பொன் மயிலாள் (இரு மலர்கள்) என கிறங்க வைக்கும் குரலில் அவர் கலக்கிய பாடல்களில், கே வி மகாதேவன் அவர்களின் இசை நுட்பத்தில் விளைந்த ‘பாட்டும் நானே பாவமும் நானே’ (திருவிளையாடல்) பாடல் ஓர் அற்புதக் கொடை ! கர்நாடக சங்கீதத்தில் பாடத் தொடங்குமுன் சுருதி சேர்த்துக் கொள்ள, ஸ ப ஸ பிடிப்பது என்று முக்கிய தொடக்கம் ஒன்று உண்டு. அதை, ஒரு இசையறிவு அற்ற பாமரன் எத்தனை கொனஷ்டை வேலைகளைச் செய்து பாடுவானோ (விறகுவெட்டி பாத்திரம்) அப்படி பாடியவாறே ஸ ப ஸ சுருதியில் அதை அமைத்துத்தான் அந்தப் பாடலை டி எம் எஸ் தொடங்குவார். சிரிப்பில் உண்டாகும் ராகங்களே என்ற எம் எஸ் விசுவநாதனின் (எங்கிருந்தோ வந்தாள்) அரிய பாடலில் பி சுசீலாவும் டி எம் எஸ்சும் சங்கீத சிரிப்பு சிரிப்பது வித்தியாசமான அனுபவம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற ஒப்பற்ற கவிஞர் மிகக் குறுகிய காலமே திரையுலகில் பங்களிப்பு செய்ததில், அவரது பொருளடர்த்தி மிகுந்த பாடல்களின் உயிர்த் துடிப்பாக ஒலித்தது டி எம் எஸ் குரல். தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே ஆகியவை காலத்தால் அழியாதவை. அதைப் போலவே, தியேட்டரில் ஒரு காலத்தில் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா (நீல மலைத் திருடன்), எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் (மலைக்கள்ளன்) போன்றவை ஒரு ரகம் என்றால், எழுபதுகளில் கொடி கட்டிய அடி என்னடி ராக்கம்மா (பட்டிக்காடா பட்டணமா), அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (ராமன் எத்தனை ராமனடி) வரிசையில் சிலவற்றை இரண்டு எதிரெதிர் உணர்வுகளின் விளிம்பில் பாடியவை இன்னொரு விதம்.

சிவாஜி, எம் ஜி ஆர் இருவருக்காக மட்டுமல்ல- ஜெய்சங்கருக்காகவும் அவர் நிறைய பாடினார். நாகேஷ், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார்…. என பல நடிகர்களுக்கும் ஒலித்த அவரது குரல், தனக்குப் பல பாடல்களை எழுதிய கண்ணதாசனுக்காகவும் கூட (ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பரமசிவன் கழுத்தில் இருந்து.) ஒலித்தது.

கிராமப்புறக் கதைகளுக்கான தெம்மாங்கு பாடல்களும், துள்ளாட்டப் பாடல்களும் அவருக்கு நிறையவே வாய்த்திருந்தன. மணப்பாறை மாடு கட்டி (மக்களைப் பெற்ற மகராசி) பாடல் எல்லாக் காலத்திற்குமான ஒன்று. மேற்கத்திய பாணியில் சாந்தி திரைப்படத்தில் அவர் பாடிய ‘யாரந்த நிலவு…’ அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துச் சொன்னது. எந்தக் குரலோடும் இணைந்து, தனது தனித்துவத்தைப் பதிக்கும் திறம் அவரது தனித்தன்மையாக இருந்தது. ‘இது மாலை நேரத்து மயக்கம் ‘ (தரிசனம்) போன்ற எல் ஆர் ஈஸ்வரியின் கிறக்கம் மிகுந்த பாடல்களானாலும், காதலின் பொன் வீதியில் (பூக்காரி) போன்ற எஸ் ஜானகியின் கொஞ்சும் குரல் ஒலிக்கும் பாடல்களானாலும், முத்துக்களோ கண்கள் (நெஞ்சிருக்கும் வரை) போன்ற இழையும் குரலெடுக்கும் பி சுசீலாவோடு இணைந்து ஒலித்த பாடல்களானாலும் அவரது குரல் எப்போது வந்து கலக்கும், எந்த ஒரு மிதப்பில் வசீகரிக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும்….

திரைப்படப் பாடல்களில் மட்டுமல்ல, பக்திப் பாடல்களிலும் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்துவிட்டவர் அவர். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ஒலிக்காத இசைக் குழு ஏது தமிழகத்தில் ! முருகர் பாடல்களுக்கு அவரைப் போல் உள்ளம் கரைய வைத்தவர்கள் யார்….அழகென்று சொல்லுக்கு முருகா, உள்ளம் உருகுதையா, மண்ணானாலும் திருச்செந்தூரில், முத்தைத் திரு பத்தி…இந்தப் பாடல்களை அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட அசத்தலான ஒரு பாணியில் பாடி கேட்பவர் மனங்களை மயக்கிக் கொண்டிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

அவரது பாடல்களை உற்றுக் கேட்கும்போது, ‘ன்’ என்ற எழுத்தை அவர் அதற்குமுன் ஒரு ‘ல்’ சேர்த்து தினுசாக உச்சரிப்பதைக் கண்டு பிடிக்க முடியும். ஒன்று என்ற சொல்லை அவர், (உனது விழியில் என்ற பாடலில், உயிர் கொண்ட ஓவியம் ஒன்று என வரும் இடத்தில்) ஒல்ன்று என ஸ்டைலாக ஒலிப்பதைக் கேட்க முடியும். இன்று என்பது இல்ன்று எனவும், வந்து என்பதை வல்ந்து எனவும் அவர் பாடுவதைக் கேட்க முடியும்.

டி எம் எஸ் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றுமே நம் மனதை விட்டு மறையப்போவதில்லைதான். இந்த வேளையில். மனதுக்கு இதமாக இப்படி ஒரு அஞ்சலிக்கட்டுரையை எழுதிய திரு வேணுகோபால் அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். திரு வேணுகோபால் அவர்களுக்கு,, வல்லமையாளருக்கு எம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: மலர்சபா அவர்களின் ’நான் அறிந்த சிலம்புப் பாடல்’

மயக்கத்தையுடைய மாலைப்பொழுதே!

நின் கொடுமைதான் காணச் சகியாமல்
நிலமகளும் கண் மூடிக்கொண்டனள்;

நீ மட்டும் வந்திடுவாய் ஆயின்,
எம் தலைவர் வாராதிருப்பார் ஆயின்,
யாம் மட்டுமின்றி இவ்வையமே
இங்ஙனம் துன்புறுமன்றோ..
மாலையே! நீ வாழ்வாயாக!

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. திரு வேணுகோபால் அவர்களுக்கும்,, மலர்சபா அவர்களுக்கும் எம் வாழ்த்துகள்.

  2. வல்லமையாளர் திரு வேணுகோபால் அவர்களுக்கும், மலர்சபா அவர்களுக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துகள்!

    சு.ரவி

  3. இந்த வார வல்லமையாளர், திரு. வேணுகோபால் அவர்களுக்கும் கடைசிபாராவில் இடம் பிடித்த திருமிகு.மலர்சபா அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  4. எத்தனையோ டி.எம்.எஸ்ஸின் பாடல்களை மாற்றிப் பாடிய சமூக ஆர்வலர் திரு வேணுகோபாலன் அவர்களின் கட்டுரை, பாடல்கள் தேர்வு அழகு. வாழ்த்துகள் வேணு சார்.

    கடைசி பக்கம் மலர்சபா அவர்களுக்கும்  வாழ்த்துகள்.

  5. இந்த வார வல்லமையாளர் திரு.வேணுகோபால் அவர்களுக்கும், “நான் அறிந்த சிலம்பு” என்னும் தலைப்பில் சிலப்பதிகாரத்தை எளிமைப் படுத்தி வழங்கிவரும் திருமதி.மலர்சபா அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  6. வேணுகோபாலனின் டி.எம்.எஸ். பற்றிய கட்டுரை அப்படியே அவரது அழியாக்குரலை மேலும் அமரத்துவமாக்குகிறது !…அவர் வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *