Author: தேமொழி

  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர் 26, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள்

    Chokkalingam L

    வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும், அத்துடன் மற்றுமொரு விருதாக, “அக்னி சிறகுகள் அறக்கட்டளை” வழங்கிய நல்லாசிரியர் விருதினையும் சென்ற வாரத்தில் பெற்ற திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், கல்வியில் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தும் வகையில் அவர் ஆற்றிவரும் தொடர் முயற்சிகளுக்காக வல்லமை இதழ் சார்பில் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

    – அக்னி சிறகுகள் அறக்கட்டளை வழங்கிய நல்லாசிரியர் விருது
    – 2015 ஆண்டுக்கான தினமலர் லட்சிய ஆசிரியர் விருது
    – 2015 ஆண்டுக்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது
    – கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் தேர்வு
    – ஆனந்த விகடனில், கலாமின் காலடிச்சுவட்டில் களத்தில் 100 இளைஞரெனத் தேர்வு
    – சுட்டி விகடன் வழங்கிய கனவு ஆசிரியர் என்ற பாராட்டு
    – நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ஆனந்த விகடன் குழுமம் இணைந்து செயல் பட உள்ள அறம் செய விரும்பு திட்டத்தில் சேவை செய்ய நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களால் தேர்வு,
    எனக் கடந்த ஆண்டில் மட்டும் இவர் பெற்ற பாராட்டு மற்றும் விருதுகளின் பட்டியல் வளர்கிறது. அந்த வரிசையில் வல்லமை இதழின் வல்லமையாளர் விருதும் சேர்கிறது.

    தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் அவர்கள் புதியதலைமுறை வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்காக தலைமை ஆசிரியர் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல்
    தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் அவர்கள் புதியதலைமுறை வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்காக தலைமை ஆசிரியர் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல்

    திரு. லெ. சொக்கலிங்கமும், இவரது ஆசிரியர் குழுவினரும் மாணவர்களின் கல்வியில் காட்டும் அக்கறை மற்றும் சிறப்புப் பயிற்சிகளினாலும், இவரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும், முயற்சிகளினாலும் இப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களையும் விஞ்சும் வண்ணம் பலபோட்டிகளில் வெற்றிபெற்று வருகிறார்கள். இப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறம் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணமிருக்கும் சாதனைகள், ஒப்பீட்டில் சிறப்புக் கவனிப்பிற்காக நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் எந்த வகையிலும் சளைத்ததாக இல்லை.

    – கல்வியை அதற்குரிய அனுபவத்தோடு கற்கும்போது, வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் அது மறக்காது
    – கல்வி கற்பது வகுப்பறைக்குள் மட்டுமல்ல, மாணவர்களின் கல்வியை வகுப்பறைக்குள்ளேயே முடக்கிவிடாமல், வகுப்பறைக்கு வெளியேயும் அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கத் தேவை இருக்கிறது

    என்ற தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியை வழி நடத்திச் செல்கிறார் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள்.

    அரசு உதவி பெறும் பள்ளியான தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, 1934 ம் ஆண்டு (இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் முன்னரே) தேவகோட்டை மக்களின் கல்வி வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு துவங்கப்பட்டது. பின்தங்கிய சமுதாய மாணவர்களின் கல்வி, மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களின் கல்வி நலனுக்குக்காவும் துவக்கப்பட்ட பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேரடியாக சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவ சமுதாய இன மக்கள், ஊர் ஊராய் சென்று குறி சொல்லும், ஜோசியம் பார்க்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவர்கள், இலங்கை அகதிகள் முகாம் மாணவர்கள் என அனைவரையும் அவர்களின் அவர்களது இருப்பிடத்தில் நேரடியாகச் சந்தித்து இப்பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

    Chokkalingam Lakshmanan5

    கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளைப் பள்ளியிலும், களப்பயணமாக புத்தக திருவிழா, அஞ்சலகம், வங்கி, நூலகம், அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தைப் புதுமையாக்கி வருகின்றார்கள். திருக்குறள், அபிராமி அந்தாதி போன்ற இலக்கியங்கள் வகுப்பறைப் பாடங்களாக முடிந்துவிடாமல், இசையோடு கூடிய நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலமும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    தமிழக புள்ளியியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ .ஆ.ப., தேவகோட்டை உதவி கலெக்டர் சிதம்பரம், கணேசன், தமிழ்நாடு மின்சார துறை பொறியாளர் சந்திரசேகர், பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி, திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம், தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ் கோவன் போன்ற பல்வேறு துறைகளின் வல்லுநர்களைப் பள்ளிக்கு அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதுடன், மாணவர்கள் அவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று தங்களது அறிவை விரிவாக்கிக் கொள்ளவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் மாணவர்களும் தயக்கமின்றி கலந்துரையாடல்களில் பங்கு பெறுகிறார்கள்.

    மாதம் ஒரு தலைப்பின் கீழ், ஒவ்வொருவாரமும் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவியம், மனக்கணக்கு, புதிர்கணக்கு, வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவதுடன், ஒவ்வொரு மாதமும் பாடத்தில் வினாடி வினா போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்படுகின்றன. வெற்றி பெற்றோருக்கு வாய்ப்பு ஒருமுறை மட்டுமே என்ற திட்டத்தினால் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் மாணவர்களுக்கும் உணர்த்தப்படுகிறது.

    இது போன்ற தொடர் போட்டிகளும் பயிற்சிகளும் மாணவர்களை மேலும் பல போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கிறது. இதனால், ஊடகங்கள் நடத்தும் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பலர் தன்னம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் பங்கேற்று சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்று வருகிறார்கள். அன்றாடங்காய்ச்சியான நிலையில் வாழும் குடும்பங்களின் மாணவர்களுக்காக விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களே தங்கள் மாணவர்களை மற்ற ஊர்களில் நடக்கும் போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று பங்கேற்க உதவி வருகிறார்கள்.

    Chokkalingam Lakshmanan1-2

    மத்திய அரசின் அஞ்சல் துறையின் ஓவியப் போட்டி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பேச்சுப் போட்டி, அறிவியல், பாடல் ஒப்புவித்தல், கலைநிகழ்ச்சி போட்டிகள், ஊடகங்கள் நடத்தும் கதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் என இப்பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்டுவது பல ஊடகச் செய்திகளாகவும் வெளிவருகின்றன.

                                   Chokkalingam Lakshmanan3aChokkalingam Lakshmanan3b

    தங்கள் பள்ளியின் கற்பித்தல் முறையை விளக்கும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், “மாணவர்கள் வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் கல்வி, வாழ்க்கையோடு தொடர்புடையது. வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியது. மாணவர்கள் ஏட்டுப் படிப்பிலேயே கூட்டுப் புழுக்களாய் சுருங்கிவிடாமல், முழுமையான அறிவு பெற்றவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை அதில் பங்கேற்கச் செய்கிறோம். இதனால் மாணவர்களின் அறிவு, திறமை வளர்கிறது. அதுமட்டுமல்ல, பிறரிடம் பழகுவதற்கு அவர்கள் கூச்சப்படுவதில்லை” என்று தனது செய்தி ஒன்றில் குறிப்பிடுகிறார்.

    மாணவர்களின் கல்வியில் சிறந்த அக்கறை கொண்டு செயலாற்றும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    ஊடகங்களில் வெளியான சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி பற்றிய செய்திகள் ஒருசில:

    நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி 1ம் ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி

    வாசம் வீசும் வகுப்பறை! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109185

    கோணங்கள் கற்றல்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109196

    ஓட்டிக்கொண்டே படிக்கலாம்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109792

    புதிய உருவம் அறிவோம்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108797

    ஓவியத்தில் அறிவோம் இரட்டுற மொழிதல்! – http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108783

    கல்வி… வகுப்பறைக்குள் மட்டுமல்ல! – தினமணி: 27 June 2015

    மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி – தினமணி: 31 May 2015

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் கற்பித்தலில் புதுமை – தினத்தந்தி நாளிதழின் இளைஞர் மலர்: 13 June 2015

    _______________________________________________________

    To Contact:
    Mr. L. Chokkalingam, M.Sc, M.Phil, B.Ed, PGDHRM, BLISc, DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai District
    TamilNadu
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    _______________________________________________________

    For more Info:
    Mr. Chokkalingam Lakshmanan
    https://www.facebook.com/chokka.lingam.5815
    https://plus.google.com/101382123602736134466/
    http://kalviyeselvam.blogspot.com/

    _______________________________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: பறைக்கண் கடிப்பிடு மாறு

    வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப,
    உள்ளமாண் பில்லா ஒருவரைத் – தெள்ளி
    மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல்,
    பறைக்கண் கடிப்பிடு மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப,
    உள்ளம் மாண்பு இல்லா ஒருவரைத் தெள்ளி,
    மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்-
    பறைக்கண் கடிப்பு இடுமாறு.

    பொருள் விளக்கம்:
    (அளவிட இயலாத, மிகுந்த) வெள்ளம் போன்ற நற்பண்புகள் யாவும் கொண்ட உறவினர்கள் இருந்திட, உள்ளத்தில் நற்பண்பு இல்லாத ஒருவரும் உடனிருந்தால், தெளிவாக ஆராய்ந்து, மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைப் பேசும்பொழுது பிரித்து, அவரை வெளியேற்றத் தவறினால், அது (தமுக்கு அடிப்பது போல) பறையின் மேல் சிறுதடி கொண்டு அடிப்பதாகும் (தகவலை அக்கயவர் பரப்பிவிடுவார்).

    பழமொழி சொல்லும் பாடம்: மறைக்கப்படவேண்டியவற்றைப் பேசும்பொழுது, இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாத குணமுள்ளவரை விலக்காவிட்டால், தமுக்கடிபடிப்பது போல அவரே இரகசியத்தைப் பரப்பிவிடுவார். இதனைக் குறள்,

    அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். (குறள்: 1076)

    தாம் அறிந்த இரகசியங்களை வலியச் சென்று பிறருக்குப் பரப்பிவிடும் கயவரை, செய்தி அறிவிக்க அடிக்கப்படும் பறைக்கு ஒப்பானவர் என்று கூறுகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: உண்ணோட் டகலுடைப்பார்

     

    தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
    தீமாற்றத் தாலே பகைப்படுத்திட் – டேமாப்ப
    முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே
    யுண்ணோட் டகலுடைப் பார்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப்பட்டாரைத்
    தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப
    முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே-
    உண் ஓட்டு அகல் உடைப்பார்.

    பொருள் விளக்கம்:
    தனது சொந்த முயற்சியில் வாழும் திறனற்றவர், தான் வாழ உதவி அடைக்கலம் தருபவரையும் தீயவைக் கூறி பகைத்துக்கொண்டு, (அதனால் தனக்கு ஊறு ஏற்படலாம் என அஞ்சி) பாதுகாப்பிற்காக முன்னரே தப்பியோடி விடுபவர், பகைமை கருதி பயந்து ஓடுபவர், தான் பிச்சை பெற்று உண்ண உதவிய மண்கலத்தை உடைத்தவர் (போன்ற அறிவிலியாவார்)

    பழமொழி சொல்லும் பாடம்:
    தனக்கு வாழ்வாதாரமாக இருப்பவரைப் பகைத்துக் கொள்பவர் அறிவற்றவர். தனக்கு வாழ ஆதரவு தருபவரை தீயவை கூறி பகைத்துக் கொள்ளும் அறிவற்றவரை திருவள்ளுவர் பேதைமை நிறைந்தவர் என்று கூறுகிறார்,

    பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
    ஊதியம் போக விடல். (குறள்: 831)

    அறிவற்ற செயல் என்பது எது என்றால், தனக்குத் தீமை தருவதைக் கையாண்டு நன்மையைத் தொலைத்துவிடுவதாகும் என்பது குறள் அறிவுறுத்தும் அறவுரை.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர் 19, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. சேசாத்திரி சிறீதரன்  அவர்கள்

    Seshadri Sridharan2

    வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி சிறீதரன் அவர்கள். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகள் செம்மொழி தகுதிச்சான்றினை இந்திய அரசிடம் இருந்து பெறும் பொருட்டு சமர்ப்பித்த கல்வெட்டுகளை இவர் மறுஆய்வு செய்துள்ளார். அதன் அடிப்படையில், மாற்றுக்கோணத்தைக் காட்டும் கட்டுரைகளை வல்லமை கூகுள் குழுமத்தில் (https://groups.google.com/forum/?fromgroups#!forum/vallamai) எழுதியதற்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

    கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள், 2000 ஆண்டு வாக்கில், அந்நாளில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படாமல் இருக்க நேர்ந்ததன் காரணத்தை விளக்க முற்பட்டபொழுது (Statement on the Status of Tamil as a Classical Language, Professor of Tamil at the University of California, Berkeley, April 11, 2000), இந்திய அரசியல் சூழ்நிலையும், தமிழுக்குச் செம்மொழி தகுதி வழங்கினால் பிற இந்திய மொழிகளும் தங்கள் மொழிக்காக வற்புறுத்தும் நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் என்று கீழ்வருமாறு தனது மடல் ஒன்றில் (http://southasia.berkeley.edu/tamil-classes) குறிப்பிட்டிருந்தார்…

    “In trying to discern why Tamil has not been recognized as a classical language, I can see only a political reason: there is a fear that if Tamil is selected as a classical language, other Indian languages may claim similar status. “

    இந்திய மொழிகளில் செம்மொழித்தகுதிகள் கொண்டவை தமிழும் சமஸ்கிருதமும் மட்டுமே என்பது பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் கருத்து. அவர் குறிப்பிட்ட “அரசியல்” என்ற காரணம் பின்னாளில் பொய்க்கவில்லை. தமிழுக்குச் செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதும், தமிழில் இருந்து கிளைத்த பிற திராவிட மொழிகளும் தங்கள் மொழிக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில் செம்மொழி தகுதி கேட்டு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கத் துவங்கின.

    இதைத் தொடர்ந்து, ஒரு மொழிக்கு செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றியது. அந்த நெறிமுறைகளின்படி, ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. இந்த வரைமுறைகளின் அடிப்படையில் இதுவரை தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    தங்கள் மொழியின் பழமைக்குச் சான்றாக கன்னட மொழியினர் “ஹல்மிடி” கல்வெட்டினையும், தெலுங்கு மொழியினர் “கலமல்லா” கல்வெட்டினையும் சமர்ப்பித்து தங்களது மொழிகளுக்குச் செம்மொழி தகுதியினைப் பெற்றனர்.

    இதற்கான சான்றுகளையும், அதன் மேல் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி அவர்கள் எழுப்பும் கேள்விகளையும் இனி சுருக்கமாக கீழே காணலாம் (கருத்துக்களை விளக்க இயன்றவரை அவர் எழுத்துகள் கையாளப்பட்டுள்ளன). அக்கட்டுரைகளின் முழு வடிவங்களையும் கீழ்காணும் சுட்டிகளின் வழி சென்று படிக்கலாம்.

    செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு
    https://groups.google.com/d/msg/vallamai/iLKZBO5bKsc/_WWdsK_qBQAJ

    செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு
    https://groups.google.com/d/msg/vallamai/GLpn2097IAw/mqMoWM1MAwAJ

    Seshadri Sridharan1

    கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின்கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது. கல்வெட்டில் காலக் குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை. கதம்பன் ககுஸ்தன் என்ற பெயர் இடம்பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு இக்கல்வெட்டு கி.பி.450 இல் வடிக்கப்பட்டது என்று அறிஞர் முடிவு கொண்டு விட்டனர். இது ஒரு தவறான அணுகுமுறை, என்று கூறும் சேசாத்திரி,

    • இக்கல்வெட்டில் குறிப்பிடும் அரசன் அதே பெயரிலுள்ள பிற்காலத்தவர் என்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன
    • கல்வெட்டில் சமஸ்கிரதம் அதிகம் கலந்துள்ளது, ஆனால் தென்னகத்தில் சமற்கிருத மொழி 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமானது என்பதால் கல்வெட்டின் காலம் கி.பி. 450 என்ற கருத்து அடிபட்டுப் போகிறது
    • கல்வெட்டில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவத புராணக் கருத்துகள் எடுத்தாளப்படுகிறது
    • அத்துடன் கல்வெட்டு குறிப்பிடும் பாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மக்களிடம் பரவியது
    • இக்கல்வெட்டில் காணப்படும் மாபாதகன், மாபாதகம் ஆகிய சொற்கள் இந்தக் கல்வெட்டின் காலத்தை கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு நடுவே அல்லது 11 ஆம் நூற்றாண்டில் வைக்கின்றது
    • கற்கோவில்கள் தென்னகத்தில் பரவிய காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் என்பதால் அக்காலத்தியக் கல்வெட்டாகவே இக்கல்வெட்டு இருக்கும் வாய்ப்புள்ளது

    எனவே, மேற்கூறிய காரணங்களால் ஹல்மிடி கல்வெட்டு கன்னடத்திற்குச் செம்மொழி ஆவணமாகக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்ற முடிவிற்கு இட்டுச்செல்கிறது எனக் கூறுகிறார்.

     

    அடுத்து, தெலுங்கு மொழியின் பழமைக்குச் சான்றாக, கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது, கி.பி. 575 ஆம் நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்குச் சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர் தெலுங்கு மொழியினர். அக் கல்வெட்டுத் தொடர்பான சேசாத்திரியின் கருத்துகள்,

    • தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 ல் இக்கல்வெட்டின் காலம் குறித்தோ அல்லது எழுத்தமைதி மிகப் பழமையானது என்றோ எந்தக் குறிப்பும் இல்லை
    • கல்வெட்டிலும் காலக் குறிப்பு ஏதும் இல்லை
    • ரேனாட்டு சோழன் தனஞ்சயனின் மெய்க்கீர்த்திகளோ அல்லது ரைவணனின் அரச பின்னணிக் குறிப்புகளோ இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை ஆதலால் இது அரசர் வெட்டிய கல்வெட்டு அல்ல
    • எரிகல் முத்துராஜு புண்ணியகுமார என்ற பெயரில் இன்னொரு அரசனும் இருந்துள்ளான். ஆதலால் பிற்கால அரசர் சிலர் எரிகல் முத்துராஜு என்ற மூதாதையின் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்று கருதுவதே சரி
    • கல்வெட்டு குறிக்கும் தனஞ்சயன், ரேவண் ஆகிய பெயர்கள் புராணப் பெயர்கள். தனஞ்சயன் என்ற பெயர் முதன் முதலாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசர் இயற்றப்பட்ட பாகவத புராணத்தில் தான் இடம் பெறுகிறது. அதற்கு முன்னம் இப்பெயர் பரவியிருக்க வாய்ப்பில்லை
    • பாறைகளைச் செதுக்கி கற்றளிகள் கட்டுவது தென்னிந்தியாவில் முதன்முதலாக 8 ஆம் நூற்றாண்டில் தான் ராசசிம்மப் பல்லவனால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட கல்வெட்டு அல்ல மாறாகக் கற்கோவிலின் ஒரு தூணில் இருபக்கங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு எனும்போது இது 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்க முடியாது 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கல்வெட்டாகத்தான் இருக்க முடியும்
    • மேலும், கல்வெட்டில் இழிந்த குலத்தோர் என்ற குறிப்பு இக்கல்வெட்டின் காலத்தை மேலும் பின்னுக்குத் தள்ளுகிறது. புராண இந்து மதம் பரவிய பின்பு 9 – 10 ஆம் நூற்றாண்டுகளில் தான் பிறப்பு வழி ஏற்றத் தாழ்வுகள் மக்கள் கருத்தில் வேரூன்றின. ஆகவே இக்கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டளவில் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதவே இடம் தருகிறது

    எனவே, தெலுங்கைச் செம்மொழி என காட்டற்கு இக்கல்வெட்டிற்குச் சற்றும் தகுதி இல்லை. ஏனெனில் இதனினும் பழமையான தெலுங்கு நடுகல் கல்வெட்டுகள் உள்ளன என்பது கல்வெட்டு பற்றிய சேசாத்திரியின் கருத்து

    எனவே, இரு கல்வெட்டுகளும் அவை கூறப்படும் காலத்திற்கு பிற்காலத்தவை, இவை பிற்காலத்தில் கற்கோவில்கள் தோன்றிய பிறகு அவற்றின் பகுதிகள், இவை பிற்காலப் புராணக் கதைகளை கொண்டுள்ளன, பிற்காலத்திய அரசன் பெயர்கள் என்பது கருத்தில் கொள்ளப்படவில்லை, பிற்காலத்தில் மக்களிடம் புழக்கத்திற்கு வந்த கருத்தாக்கங்களை கொண்டுள்ளன என்ற காரணங்களைக் காட்டி, கல்வெட்டுகளின் கால நிர்ணயத்தின் மீது கேள்விகள் எழுப்பி அவற்றின் பழமையை நிராகரிக்கிறார் திரு. சேசாத்திரி.

    இவ்வாறு புதிய கோணங்களைக் காட்டி, கல்வெட்டு ஆவணச் சான்றுகளின் காலத்தைப் பற்றிய சிறப்பான கட்டுரைகளை வழங்கியதற்காக, திரு. சேசாத்திரி அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: இளையோனே யாயினும் மூத்தானே யாடுமகன்

    கற்றதொன் றின்றி விடினும் கருமத்தை
    அற்ற முடிப்பான் அறிவுடையான்: – உற்றியம்பும்
    நீத்தநீர்ச் சேர்ப்ப! இளையானே யாயினும்
    மூத்தானே யாடு மகன்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை
    அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;-
    நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையானே ஆயினும்,
    மூத்தானே, ஆடு மகன்.

    பொருள் விளக்கம்:
    முறையான கல்வியறிவைப் பெற்றிராவிட்டாலும், செய்ய வேண்டிய செயலைச் சோம்பலின்றி செய்து முடிப்பவர்தான் அறிவுடையவர் ஆவார். நிறைந்து ஆர்ப்பரிக்கும் வெள்ளப் பெருக்கெடுத்த நீர்நிலைகளைக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, இளவயதினராக இருப்பினும் முதிர்ச்சி அடைந்தவராகவே கருதப்படுவார் சிறப்பாகச் செயலாற்றுபவர்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    கல்வியறிவு இல்லாதிருப்பினும் திறம்படச் செயலாற்றுபவரே அறிவுடையவர் எனக் கருதப்படுவார். ஏற்றுக் கொண்ட செயலை முடிக்கும் பொருட்டு இடைவிடாது நல்ல முயற்சி செய்யும் ஆள்வினை உடையவரே அறிவுடையவர் என்பதை வள்ளுவர்,

    பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி. (குறள்: 618)

    செய்யவேண்டிய சூழ்நிலையோ வாய்ப்போ இல்லாதிருப்பது ஒரு குறையல்ல, ஆனால் அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாமையே ஒருவருக்குப் பெரும்பழியைத் தரும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கணையிலும் கூரியவாம் கண்

    யாந்தீய செய்த மலைமறைத்த தென்றெண்ணித்
    தாந்தீயார் தந்தீமை தேற்றாரால் – ஆம்பல்
    மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
    கணையிலுங் கூரியவாம் கண்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘யாம் தீய செய்த மலை மறைத்தது’ என்று எண்ணி,
    தாம் தீயார் தம் தீமை தேற்றாரால்;-ஆம்பல்
    மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!-
    கணையிலும் கூரியவாம் கண்.

    பொருள் விளக்கம்:
    நாம் தீமைகள் செய்ததை மலை மறைத்தது விட்டது (போன்று அவை மறைவில் உள்ளது) என்று நினைக்கும் தீயவர், தங்கள் தீச்செயல் விளைவு பற்றிய தெளிவற்றவர். ஆம்பல் மலர்கள் மணவிழா இல்லங்களில் மணம் பரப்பிட, மிகுத்த அலைகளையுடைய நீர்வளம் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, அம்பையும் விடக் கூர்மையானவை கண்கள் (அவை குற்றத்தைக் கண்டுவிடும் என அறிக).

    பழமொழி சொல்லும் பாடம்:
    பிறர் மனதில் ஓடும் எண்ணங்களை அவரது முகத்தைக் கொண்டே கூரிய பார்வை கொண்டவர் உணர்ந்து விடுவார். குற்றங்களை அத்தகையவரிடம் இருந்து மறைக்க இயலாது. இக்கருத்தை வள்ளுவர்,

    நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
    கண்ணல்லது இல்லை பிற. (குறள்: 710)

    நுட்பமான அறிவுடையோர் எனப்படுபவர், பிறர் மனக்கருத்தை அளக்கப் பயன்படும் கருவி அவரது கண்களைப் போன்றல்லாது வேறொன்று இல்லை என்கிறார். மேலும்,

    குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
    என்ன பயத்தவோ கண். (குறள்: 705)

    ஒருவரது அகத்தில் உள்ளதை அவரது முகமே காட்டிக் கொடுத்துவிடும் என்கின்றபோது, அந்த முகக்குறிப்பை உணர்ந்து கொள்ள இயலாத கண்கள் இருந்தென்ன பயன் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர் 12, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு லட்சுமி  அவர்கள்

    2015 Winner - Lakshmi Moorthy2

    வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், அக்டோபர் 8, 2015 அன்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின், பெர்க்லி நகரில் நடைபெற்ற விழாவில், சீக்காலஜி என்ற கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் 2015 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான சீக்காலஜி பரிசைப் பெற்ற மீனவர் திருமிகு லட்சுமி அவர்கள்.

    2015 Winner - Lakshmi Moorthy

    இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைக் கிராமம் சின்னப்பாலத்தைச் சேர்ந்த 46 அகவை நிரம்பிய மீனவர் லட்சுமி அவர்கள், கடந்த நாற்பதாண்டுகளாகக் கடற்பாசி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருபவர். மீனவச் சிறுமிகள் சிறுவயதிலிருந்தே கடற்பாசி சேகரிப்பில் பெற்றோர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இராமேஸ்வரம், பாம்பன், சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த 25 கிராமங்களின், சுமார் 2,000 த்திற்கும் மேற்பட்ட மீனவமகளிரின் வாழ்வாதாரம் மன்னார் வளைகுடாப்பகுதியில் மருக்கொழுந்து, கட்டக் கோரை, கஞ்சிப் பாசி, பக்கடா பாசி வகைகளை, நீரில் மூழ்கி, இரண்டு நிமிடங்களுக்கு மேல் மூச்சை அடக்கிச் சேகரித்து விற்று வருவது.

    மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பகத் தீவுகளான சிங்கில் தீவு, குருசடை தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவு ஆகியப் பகுதிகளில் பவளப்பாறைகளுடன், கடற்பாசிகளும் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு இவர்களால் சேகரிக்கப்படும் இவ்வகை கடற்பாசிகள் விண்வெளி வீரர்களுக்குத் தயாரிக்கப்படும் உணவு தயாரிப்பதில் அடிப்படைத் தேவையான உணவுப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பல மீனவமகளிருக்கு வாழ்வாதாரமாக இருக்கும் கடற்பாசி சேகரிப்பு, 2002 ஆண்டிலிருந்து இந்திய அரசால், கடல்வளம் பாதுகாக்கும் நோக்கத்தைக் காரணம் காட்டி தடை செய்யப்பட்டது. ஆழ்ந்த ஆய்வின்றி, மீனவ மகளிரின் வாழ்வாதாரத்திற்கும் ஒரு மாற்றுவழி காட்டாது எடுத்த அவசர முடிவினால் மீனவ மகளிர் பாதிக்கப்பட்டனர். கடற்பாசி சேகரிக்க செல்லும் மீனவ மகளிரின் படகுகள், கையூட்டு பெற நினைக்கும் ஊழல் அரசு அதிகாரிகளால் கைப்பிடிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கில் அபராதங்களும் விதிக்கப்பட்டதுடன், மீனவமகளிரும் சில அரசு அதிகாரிகளால் மரியாதைக் குறைவாகவும் நடத்தப்பட்டனர்.

    லட்சுமி இவ்வாறு பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து, அவர்களது கோரிக்கையை அரசிடம் எடுத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்களது பாரம்பரிய கடற்பாசி சேகரிக்கும் முறை எவ்வாறு கடல்வளத்தைப் பாதிப்பதில்லை என்று கடல் ஆய்வாளர்களுக்கும், அரசுக்கும் எடுத்துக் கூறி, பாரம்பரிய முறையில் பாசி சேகரிக்கும் முறை குறித்து அவர்களுக்குக் கொடுத்த விளக்கங்களுக்குப் பிறகு, குறிப்பிட்ட காலங்களில் கடற்பாசி சேகரிக்கலாம் என்ற அனுமதியும், பணியை முறைப்படுத்தி பயோமெட்ரிக் அடையாள அட்டைகளும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. மீனவமகளிரின் வாழ்வாதாரத்தை மீட்க உதவியதுடன் இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு முயற்சிகளால் மன்னார்வளைகுடா கடல்வளப் பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது. லட்சுமியின் தன்னார்வப்பணி பரிந்துரைமூலம் சீக்காலஜி அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

    அரசு சாராத அறக்கட்டளை அமைப்பான சீக்காலஜி அமைப்பினால், 1992 ஆம் ஆண்டு முதல் கடல்சார்சுற்றுச்சூழல் மற்றும் கடல்வள பாதுகாப்பிற்காகவும், கலாச்சார பாதுகாப்பிற்காகவும் தனி நபருக்காக வழங்கப்படும் சீக்காலஜி விருதினைப் பெறும் முதல் இந்தியப்பெண்மணி லட்சுமி ஆவார். இவரது கடல்வள பாதுகாப்பு முயற்சிக்காகவும், மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பேற்று, மீனவ மகளிருக்கு வாழ்வாதாரப் பணியை மீட்டுத் தர இவர் மேற்கொண்ட நடவடிக்கைக்காகவும் இவர் சீக்காலஜி விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதையும், சான்றிதழையும், ஆறரை லட்சம் ரூபாய் (பத்தாயிரம் டாலர்) மதிப்புள்ள பரிசுத் தொகையையும் சீக்காலஜி அமைப்பின் நிறுவனர் டாக்டர் பால் ஆலன் காக்ஸ் அவர்கள் லட்சுமிக்கு வழங்கி அவரைச் சிறப்பித்தார்.

    2015 Winner - Lakshmi Moorthy1

    விருது மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை மீனவ குழந்தைகளின் கல்விக்கும், மீனவ மகளிர் கூட்டமைப்பு செயல்பாட்டிற்கும் வழங்கவிருக்கிறார் லட்சுமி. மீனவ மகளிரின் உழைப்பிற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்ததில் மகிழும் லட்சுமி, மீனவ மகளிர் சேகரிக்கும் பாசிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்தால் மீனவமகளிரின் வாழ்க்கை நிலை உயரும் எனக் கருதுகிறார்.

    திருமிகு லட்சுமியின் கடல்வள பாதுகாப்பு முயற்சிக்காகவும், மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பேற்று, மீனவ மகளிருக்கு வாழ்வாதாரப் பணியை மீட்டுத் தர இவர் மேற்கொண்ட நடவடிக்கைக்காகவும் இவரை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமை மின்னிதழ் குழுமத்தினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _____________________________________________________________________________________________

    தகவல் பெற்ற தளங்கள்:
    http://www.seacology.org/about/seacology-prize/
    http://tamil.thehindu.com/todays-paper/tp-tamilnadu/ராமேசுவரம்-மீனவப்-பெண்ணுக்கு-அமெரிக்க-கடல்சார்-விருது/article7743942.ece
    http://tamil.thehindu.com/society/women/முகம்-நூறு-கடல்பாசியால்-கிடைத்த-அமெரிக்க-விருது/article7620004.ece
    http://www.thehindu.com/news/national/tamil-nadu/seaweed-collector-wins-environment-award/article7613833.ece
    http://keelakaraitimes.com/award-ceremony-in-california/
    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=164786
    http://www.viduthalai.in/home/viduthalai/women/108353-2015-09-08-11-35-57.html
    http://news.webindia123.com/news/Articles/India/20151006/2695535.html
    http://keelakaraitimes.com/seacology-award/
    http://newstodaynet.com/tamil-nadu/tn-woman-gets-us-prize-protecting-sea-life

    படங்கள் பெற்ற தளங்கள்:
    http://www.seacology.org/about/seacology-prize/
    http://keelakaraitimes.com/award-ceremony-in-california/

    _____________________________________________________________________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: மச்சேற்றி ஏணி களைவு

    எய்ப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்
    உற்றுழி ஒன்றுக் குதவலார், பைத்தொடீஇ!
    அச்சிடை யிட்டுத் திரியின், அதுவன்றோ
    மச்சேற்றி ஏணி களைவு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘எய்ப்புஉழி வைப்பாம்’ எனப் போற்றப்பட்டவர்
    உற்றுழி ஒன்றுக்கு உதவலராய்,-பைத்தொடீஇ!-
    அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
    மச்சு ஏற்றி, ஏணி களைவு.

    பொருள் விளக்கம்:
    சோதனைக்காலத்தில் உதவும் வைப்புநிதி போலக் காப்பாற்றுவார் எனக் கருதப்பட்ட உற்றார், நமக்கு இடையூறு நேர்ந்த பொழுது ஒருவகையிலும் உதவாமல் கைவிடும் செயலானது, பசும்பொன்வளையல்களை அணிந்த பெண்ணே! அச்சம் கொண்டு மறுத்துவிடும் அவரதுசெயலானது அல்லவோ, மாடியில் ஏற்றிவிட்ட பின்னர் இறங்க வழியின்றி ஏணியை அகற்றி விடுவதற்கு ஒப்பானது.

    பழமொழி சொல்லும் பாடம்:
    உதவுவேன் என நம்பவைத்து, உதவி கிடைக்கும் என நம்பி வந்த ஒருவரை, அவர் இடருற்ற நேரத்தில் ஏமாற்றாது உதவுவதே நற்பண்பு கொண்ட ஒருவரின் கடமை. இப்பண்பு இல்லாத, இடருற்ற காலத்தில் உதவாத ஒருவரின் உறவு இருப்பதைவிட இல்லாதிருப்பதே நலம் என்பதை வள்ளுவர்,

    அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
    தமரின் தனிமை தலை. (குறள்: 814)

    போர்க்களத்தில் உதவ வேண்டிய முக்கியமான நேரத்தில், உதவாது கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும் மடத்தனம் கொண்ட குதிரையைப் போன்றவர் உறவை பெற்றிருப்பதைக் காட்டிலும் தனித்திருப்பதே சிறப்பு என்று கூறுகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: ஒன்றேற்றி வெண்படைக்கோள் ஒன்று

     

    புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
    உரையும் பொருண்முடிவும் ஒன்றால் – உரைபிறிது
    கொண்டெடுத்துக் கூறல், கொடுங்கழித் தண்சேர்ப்ப!
    ஒன்றேற்றி வெண்படைக்கோ ளொன்று.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
    உரையும் பொருள் முடிவும் ஒன்றால்; உரை பிறிது
    கொண்டு எடுத்துக் கூறல், கொடுங் கழித் தண் சேர்ப்ப!
    ஒன்று ஏற்றி வெண்படைக்கோள் ஒன்று.

    பொருள் விளக்கம்:
    கள்ளமற்ற நட்பு கொண்டவர்களுக்குள், நண்பர் கூறிய சொற்களும் அதன் பொருளும் ஒன்றாகவே இருக்கும். மனதில் ஒன்றும் பேச்சில் மற்றொன்றும் கூறும் வஞ்சனையுள்ளோர் சொல்வது, வளைந்த உப்பங்கழிகள் கொண்ட குளிர்ந்த கடல் நாட்டில் வாழ்பவரே, மற்றொருவர் பாடலை தனது வெண்பா எனச் சொல்லி ஏய்க்கும் செயலுக்கு ஒப்பாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    உண்மையான நட்பு கொண்டவர் என்றும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதில்லை. அவ்வாறின்றி, மனம் வேறு, சொல்வேறாகப் பேசும் வஞ்சம் நிறைந்தவர் நட்பைத் தவிர்த்துவிடுதல் வேண்டும் என்ற அறிவுரையை வள்ளுவர்,

    கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு. (குறள்: 819)

    சொல்லும் செயலும் மாறுபட்டவரின் நட்பு கனவிலும் துன்பத்தைத் தரும் எனக் கூறி எச்சரிக்கிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர் 5, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு முனைவர் அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி அவர்கள்

    Arvind Thiruvengadam Padmavathy

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் ஆய்வுப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி (http://www.mae.cemr.wvu.edu/faculty/faculty-detail.php?id=1069&type=faculty) அவர்கள். வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த மோசடியை வெளியுலகிற்குக் காட்டிக் கொடுத்த ஆய்வறிக்கையை வெளியிட்டதற்காக இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள், அவருக்கு நன்றிகள் உரித்தாகிறது.

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம்நிலைப் பொறிமுறைப் பொறியியல்(B.E. Mechanical Engineering) பட்டம் பெற்ற அரவிந்த், அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். ஊர்திகளின் மாசுக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இவரின் ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகள், ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த குற்றத்தை வெளியுலகிற்குக் காட்டிக் கொடுத்தது. இதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஊர்திகளில் மாசுக்கட்டுப்பாட்டுச் சோதனைகளின் பொழுது ஆய்வாளர்களை ஏமாற்றுவதற்காக ஊர்திகளில் பொருத்தியிருக்கும் மென்பொருள் பற்றி அமெரிக்க அரசு கண்டறிந்தது. அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (U.S. Environmental Protection Agency) வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மீது தொடுத்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட வோல்க்ஸ்வேகன் நிறுவனம், 11 மில்லியன் வண்டிகளில் மென்பொருள் நிறுவி, அரசை ஏமாற்றியதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

    இதன் விளைவாக வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகியுள்ளார், பதினெட்டு பில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தவிருக்கும் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் பற்றிய உண்மை தெரிந்தவுடன், பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இப்பொழுது பிற வாகன நிறுவனங்களும் எச்சரிக்கையடைந்துள்ளன.

    முனைவர் அரவிந்த் அவர்களின் ஆய்வும் அதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் குற்றம் வெளிப்பட நேர்ந்த நிகழ்வுகள் பற்றிய மிகச் சுருக்கமாக அறிமுகம்.

    volks_scientist20151001

    மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மாற்று எரிபொருள் ஆய்வு மையம் (Center for Alternative Fuels, Engines and Emissions – CAFEE) ஊர்திகளின் மாசு கட்டுப்பாட்டு சோதனைகள் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு அத்துறையில் முன்னணி வகிக்கிறது. இந்த மையத்தில் ஒரு ஆய்வாளராகப் பணியாற்றும் முனைவர் அரவிந்துடன், மார்க் பேஷ்க், கிரிகரி தாம்ப்சன், டேனியல் கார்டர், ஹேமந்த் கப்பண்ணா (Marc Besch, Gregory Thompson, Daniel Carder, and Hemanth Kappanna) ஆகியோர் அடங்கிய ஐவர் குழு , கலிஃபோர்னியா மாநில அரசு அளித்த ஆய்வுநிதி பெற்று அந்த மாநிலத்தின், கண்டிப்பான சூழ்நிலை மாசுக்கட்டுப்பாடு விதிகளை ஊர்திகள் கடைப்பிடிக்கின்றனவா என்ற ஆய்வில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் இம்மாநிலத்தின் ஊர்திகள் மாநில அரசு விதிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குள் இருந்தால் மட்டுமே அவற்றை இயக்க அனுமதி அளிக்கப்படும். அந்தச் சோதனைகளில், ஆய்வக சூழலில் கிடைக்கும் சோதனை முடிவுகள், வண்டிகள் சாலைகளில் இயக்கப்படும் பொழுதும் அதே அளவில் அமைந்துள்ளனவா என்ற சோதனையை மேற்கொண்டனர் இந்த ஆய்வுக் குழுவினர்.

    SONY DSC

    முனைவர் அரவிந்தும் துணை ஆய்வாளர் மார்க் பேஷ்க்கும், வோல்க்ஸ்வேகன் ஊர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்து, தங்கள் சோதனைக் கருவியை அதில் பொருத்தி, கலிஃபோர்னியாவில் இருந்து வாஷிங்டன் மாநிலம் வரை சுமார் 2,500 மைல்கள் ஓட்டி சோதனை செய்தனர். அப்பொழுது வெளிப்படும் நைட்ரஜன் ஆக்சைட்களின் (Nitrogen oxides – NOx) அளவு, அமெரிக்க அரசு அனுமதித்த குறைந்த அளவு விதிக்கும் மேலாகா 35 மடங்கு வரை அதிகம் இருப்பது தெரிய வந்தது. சோதனைக் கருவிகளின் குற்றமோ எனச் சந்தேகித்து ஆராய்ந்ததில், அதிலும் குறை இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. ஆய்வக சோதனையில் தேறிய ஊர்திகள் எவ்வாறு சாலைப்பயணத்தில் இதுபோன்ற மாறுபட்ட முடிவைக் கொடுக்க முடிகிறது என்பதைத் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கண்டறியாவிட்டாலும், தங்கள் முடிவை முனைவர் அரவிந்த் குழு ஆய்வறிக்கையாக வெளியிட்டது. இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது 2013 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில். இவர்களுக்கு நிதிவழங்கி ஆய்வை முன்னெடுத்த ‘இண்டர்நேஷனல் கவுன்சில் ஆன் கிளீன் டிரான்ஸ்போர்ட்டேஷன்’ (International Council on Clean Transportation) ஆய்வின் முடிவுகளை அமெரிக்க அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.

    newsshine-com news on Arvind Thiruvengadam Padmavathy

    இது போன்று தனிப்பட்ட பல்கலைக்கழக ஆய்வறிக்கைகளில் வோல்க்ஸ்வேகன் ஊர்திகள் அரசு நிர்ணயித்த மாசுக்கடுப்பாட்டு விதிகளை மீறுவதைக் கவனித்து வந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை அடைந்தது. இதற்கு முன்னரே 1973, 1998 ஆண்டுகளிலும் ஏமாற்று வேலைகள் செய்து வோல்க்ஸ்வேகன் பிடிபட்டிருந்தால், அரசு மேலும் ஆராயத் தொடங்கியது. முடிவில் ஆய்வக சோதனையில் ஊர்தியின் ஸ்டியரிங் வீல் அசையாமல் இருக்கும்பொழுது வண்டியின் இயந்திரம் மட்டும் தொடர்ந்து இயங்கினால், அது ஊர்தி சோதனைக்குள்ளாகும் நேரம் என மென்பொருள் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு மாசுக்கட்டுப்படுத்தும் பாகங்களை இயங்கச் செய்து நைட்ரஜன் ஆக்சைட்களின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் நிறுவனம் வண்டிகளை வடிவமைத்து வைத்திருக்கும் உண்மை வெளியாகியது. இது அரசை ஏமாற்றும் மிகப்பெரிய குற்றச் செயல் மட்டுமல்ல, சுற்றுப்புறச் சூழல் மீதும், மனித நலத்திலும் அக்கறையற்ற செயலும் ஆகும். மாசுநிறைந்த காற்றைச் சுவாசிக்கும் பொழுது ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் அதிகரிக்க வழிவகுக்கும்.

    ஏன் ஊர்தி சோதனைக்குள்ளாகும் பொழுது மட்டும் மாசுக்கட்டுப்பாடு திட்டம் இயங்க வேண்டும் என்ற கேள்விக்கு … வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் பேராசை என்பதே பதில். பெட்ரோலுக்குப் பதில் மாற்று எரிபொருளாக டீசல் பயன்படுத்தும் ஊர்திகளை அதிகரிக்கும் எண்ணம் சந்தையில் பரவலாகத் தோன்றியது. அமெரிக்கர்கள் விரும்பும் வண்ணம் பெரிய வண்டிகளையும், அதே சமயம், அமெரிக்க அரசு விதிகள்படி குறைந்த எரிபொருளில் அதிக மைல்கள் கொடுக்கும், டீசலில் ஓடும் வண்டிகளைத் தயாரித்து விற்றால் அமெரிக்க சந்தையைப் பிடித்துவிடலாம் என்பது வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் திட்டம். ஆனால் அமெரிக்க அரசு நிர்ணயித்த மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வண்டி இயங்க நேர்ந்தால், குறைந்த எரிபொருளில் அதிக மைல்கள் ஓடாது. வண்டியை இயக்க அதிகம் செலவானால் ஊர்திகளும் விற்பனையாகாது. இதற்கு வழி, சரியான தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதாக இருக்கும். ஆனால் வோல்க்ஸ்வேகன் நிறுவனம், அதிக செலவைக் கூட்டி, ஊர்தியின் விலையை அதிகரிக்கச் செய்யும் முறையைத் தவிர்க்கும் நோக்கில் குறுக்கு வழியைக் கண்டுபிடித்தது. அரசு செய்யும் சோதனைகளில் ஆய்வாளர்களின் கண்களில் மண்ணைத்தூவும் வண்ணம் சோதனை நேரங்களில் மட்டும் வண்டிகள் மாசுக்கட்டுப்பாடு திட்டத்திற்கு ஏற்ப இயங்கும். பிற வேளைகளில், சாலைகளில் ஓட்டும்பொழுது வெளியாகும் நைட்ரஜன் ஆக்சைட்களின் அளவைக் கட்டுப்படுத்தும் முறை செயலிழந்து போகுமாறு வண்டிகளை இயக்க மென்பொருள் பொருத்தியது. அதனால் ஊர்தியும் குறைந்த எரிபொருளுக்கு அதிக தூரம் ஓடும். வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்த இந்த மோசடி வெளியாகக் காரணமாக இருந்தது முனைவர் அரவிந்தின் ஆய்வறிக்கையே.

    மாசுக்கட்டுப்பாட்டைக் குறைப்தற்கும், ஏமாற்றும் நிறுவனத்தின் குற்றம் வெளிப்படவும் உதவியாக இருந்த ஆய்வினை செய்த 32 வயதாகும் முனைவர் அரவிந்த் அவர்களின் ஆய்வுப்பணியைப் பாராட்டி அவரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _____________________________________________________________________________________________

    வல்லமையாளர் முனைவர் அரவிந்தின் கட்டுரை:
    The routine study that led to the discovery of the VW scandal
    by Arvind Thiruvengadam Oct 01, 2015
    http://www.autocarpro.in/news-international/routine-study-led-discovery-huge-scandal-9408

    _____________________________________________________________________________________________

    Arvind Thiruvengadam:
    Research Assistant Professor
    Mechanical and Aerospace Engineering
    West Virginia University
    Morgantown, West Virginia 26506
    Email: arvind.thiruvengadam@mail.wvu.edu
    Phone: 304-293-0805
    http://www.mae.cemr.wvu.edu/faculty/faculty-detail.php?id=1069&type=faculty
    Google+ https://plus.google.com/103696045919648975153/
    Google.scholar. https://scholar.google.com/citations?user=yNpEEDAAAAAJ&hl=en
    Linkedin https://www.linkedin.com/pub/arvind-thiruvengadam/31/732/644

    _____________________________________________________________________________________________

    தகவல்களும் படங்களும் கொடுத்து உதவிய தளங்கள்:
    How a university lab helped unearth the VW emissions scandal
    http://www.autocarpro.in/news-international/university-lab-led-unearthing-vw-emission-scandal-9373#sthash.SEqL1nbL.dpuf

    As Volkswagen Pushed to Be No. 1, Ambitions Fueled a Scandal
    http://www.nytimes.com/2015/09/27/business/as-vw-pushed-to-be-no-1-ambitions-fueled-a-scandal.html?_r=0

    Unexpected VW emissions results catapult WVU researchers to fame
    http://www.newsshine.com/us-local-news/west-virginia/business/140060-unexpected-vw-emissions-results-catapult-wvu-researchers-to-fame.html

    The Indian-origin scientist who took a test drive, exposed VW
    http://www.hindustantimes.com/business/a-long-ride-by-a-tamilian-that-exposed-the-vw-emission-fraud/story-DNB9Px86mMb4Fout6QiokN.html

    The Chennai-Born Scientist Who Exposed The Volkswagen Scam
    http://www.outlookindia.com/blogs/post/the-chennaiborn-scientist-who-exposed-the-volkswagen-scam/3627/12

    _____________________________________________________________________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கட்டி அடையைக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர்

    மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
    பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
    கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
    இட்டிகை தீற்று பவர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘மறுமை ஒன்று உண்டோ? மனப் பட்ட எல்லாம்
    பெறுமாறு செய்ம்மின்’ என்பாரே-நறு நெய்யுள்
    கட்டி அடையைக் களைவித்து, கண் சொரீஇ,
    இட்டிகை தீற்றுபவர்.

    பொருள் விளக்கம்:
    மறுபிறவி என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    அறிவற்றவர் நன்னெறி புகட்டாது, தீமை தரும் வழியில் வாழும் வகை காட்டுவார். இந்தப்பிறவியில் நாம் ஆற்றும் செயல்கள்தாம் நமது மறுபிறவியில் நாம் வாழும் நிலையை நிர்ணயிக்கும் என்பது மக்களை நல்வழியில் செலுத்துவதற்கான நம்பிக்கை அடிப்படையிலமைந்த ஓர் முயற்சியாகும். ஆதலால், அதனை எடுத்துரைத்து நல்வழி நடப்பீராக என்று வழிகாட்டாது, மனம்போனபடி வாழ அறிவுரை கூறுபவர் சுவை உணவைப் பரிமாறாது, செங்கல்லை ஊட்டுபவர் என்பது இப்பழமொழி பாடல் தரும் விளக்கம். குறள் என்ன நெறி காட்டுகிறது எனப் பார்ப்போமானால்,

    சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு. (குறள்: 422)

    மனம் போனபடியெல்லாம் நடக்காமல், தீமைகளில் இருந்து விலகி நல்வழி நடப்பதே அறிவுடையார் செயல் என்று கூறுகிறது. ஆகவே, தீமை விளக்கி நன்னெறி வழி நடப்பது நம் கடமை.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டம்பர் 28, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு கிரண் சேத்தி அவர்கள்

    Kiran Bir Sethi

    வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர் எனப் பாராட்டப்படுபவர் திருமிகு “கிரண் பிர் சேத்தி” (Kiran Bir Sethi) அவர்கள். தான் வாழும் சமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் தன்னார்வத் தொண்டர்களாகவும், அத்துடன் மாற்றம் கொண்டு வருபவர்களைக் கண்டறியும் வினையூக்கி (catalysts)களாகவும் விளங்கும் பலரை வல்லமை விருது கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் இடம் பெரும் ‘கிரண் சேத்தி’ அவர்கள் அகமதாபாத்தில் உள்ள ‘ரிவர்சைடு பள்ளி'(The Riverside School, Ahmedabad) யின் நிறுவனர் மற்றும் இயக்குநராக கல்விப்பணியில் மறுமலர்ச்சி செய்து வருகிறார். உலகளாவிய அளவில் நடத்தப்பெறும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ (Design for Change) என்ற திட்டத்தை, இந்தியாவில் இவர் அமைப்பு முன்னெடுத்து நடத்திவருகிறது. இந்த அமைப்பு நடத்தும் ‘புராஜக்ட் எக்ஸ்போ’ (Design for Change – DFC I CAN School Challeng) என்ற போட்டியை ஆண்டு தோறும் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தி, சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறது. பள்ளி மாணவர்களை ஆய்வில் ஊக்குவிக்கும் இந்தச் செயல் ஓர் அருமையான முயற்சி. தேசிய அளவில், 8 வயதிலிருந்து 13 வயது வரை உள்ள பள்ளி (நடுநிலைப்பள்ளி வரை பயிலும்) மாணவர்களுக்காக நடக்கும் இந்தப்போட்டியில் ஆண்டுதோறும் பல பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்ட பங்கேற்கிறார்கள்.

    Design for Change World

    இந்த ஆண்டு கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கும் ஆர்வத்தில் “இயற்கை கிருமிநாசினி” தயாரித்து அதனைப் போட்டிக்கு சமர்பிக்கிறார்ககள். இவர்களின் இந்த முயற்சிக்காக ஏழாம் வகுப்பு மாணவர்களான நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோரையும், அவர்களுக்கு ஊக்கமூட்டி உதவி வரும் பள்ளியின் கணித ஆசிரியர், சத்யபிரபா தேவி ஆகியோரையும் வல்லமை இதழ் சார்பில் பாராட்டுகிறோம். அன்றாடம் சுகாதாரத்திற்காக நாம் பயன்படுத்தும், ‘சோப்பு’, ‘ஷாம்பூ’ உள்ளிட்ட கிருமிநாசினி அனைத்தும் வேதிப் பொருட்களால் ஆனவை. இவற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு தோல் நோய்களும் வருகின்றன. இவற்றைக் கணக்கில்கொண்டு இயற்கை முறையில், கிருமி நாசினி தயாரித்துள்ளதாக இம்மாணவர்கள் தமிழ் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளனர். செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, திருநீற்றுப்பத்து, கற்பூரவல்லி ஆகியவற்றைக் கலவையாக்கி, இயற்கை கிருமி நாசினி தயாரித்து; அத்துடன், இவை அதிக நாள் மக்கள் பயன்படுத்த வசதியாக, எலுமிச்சையையும் இயற்கை கிருமிநாசினியில் சேர்த்துள்ளார்கள். சுத்தமாக்குவதுடன் பாதிப்பும் தராத இவர்களது இயற்கை கிருமிநாசினியை சுற்றுவட்டாரப் பள்ளிகளிலும் பயன்படுத்த இவர்களே தயாரித்தும் வழங்கியுள்ளார்கள்.

    Tamil_News_large_1348855 (1)

    இந்தத் தமிழக மாணவர்களைப் போன்று ஆர்வமுள்ள மாணவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஆராய்ச்சிக் கோணத்தில் வளர்த்துவரும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ அமைப்பும், அதனை முன்னெடுத்து நடத்தி வரும் கிரண் சேத்தியின் பணியும் பாராட்டிற்குரியவை.

    கிரண் சேத்தியின் கல்வி மறுமலர்ச்சி முயற்சிகள் உலக அளவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக அளவில் ‘வர்கி அறக்கட்டளை’ (Varkey Foundation) சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதுக்கான (Global Teacher Prize in the Global Education & Skills Forum 2015) இறுதிப்பட்டியலில் ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்தவர்களில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளார் கிரண் சேத்தி. இந்தப் பரிசு, தங்களது தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிகச் சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியருக்கே வழங்கப்படும். ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவோர்க்காக வழங்கப்படும் இந்தப் பரிசு ஒப்பீட்டில் நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படக்கூடிய ஒன்று என்பதும், இதற்காக சுமார் 5000 ஆசிரியர்கள் வரை அனைத்துலக அளவில் பரிந்துரைக்கப்படுவர் என்பதும் இதன் சிறப்பு.

    Kiran Bir Sethi3

    Kiran Bir Sethi4

    Kiran Bir Sethi5

    Kiran Bir Sethi2

    பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்கும் கலையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்றும், இவர் முதல் நாள் ஒரு ஆராய்ச்சியாளரின் பார்வையில் பாடம் சொல்லித் தரும் முயற்சியை மேற்கொண்டால், மறுநாள் ஒரு கலைஞராகவும், அதற்கும் அடுத்த நாள் ஒரு கதை சொல்லியாகவும் மாறி பாடம் நடத்தும் முறையைக் கடைப்பிடிப்பதாகவும் கூறும் கிரண் சேத்தி, மாணவர்களை இவ்வாறு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், அவர்கள் தாங்களே முயன்று வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

    தனது மகன் கல்வியில் எதிர்கொண்ட கட்டுப்பாடுகளையும் சவால்களையும் கண்ட பின்னர், அகமதாபாத்தில் ரிவர்சைட் பள்ளி என்ற பள்ளியைத் துவக்கி, 2001 ஆம் ஆண்டு முதல், மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் முறையை மாற்றி அமைப்பதில் அக்கறை காட்டி வருகிறார்.

    TED இந்தியாவின் சொற்பொழிவாளர், பல அயல்நாட்டுக் கருத்தரங்குகளில் சிறப்பு சொற்பொழிவாளர் என்ற வகையில் சமூக அளவில் மாற்றம் தர வேண்டிய கல்வியின் அவசியம் பற்றிய கருத்துகளை முன்னிறுத்தி வருகிறார். இவரது பள்ளியில் இவர் கடைபிடிக்கும் மாற்றம் நோக்கிய புதுமையான கல்விமுறை பாடத்திட்டங்களுக்காக 2009 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ‘கால் டு கான்சயின்ஸ்’ (Call to Conscience) விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘டிசைன் பார் சேஞ்ச்’ என்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியை முன்னெடுத்தது மட்டுமல்லாது, ‘அப்ரோச்’ (aProCh) என்ற அமைப்பைத் துவக்கி, நகரத்தைச் சிறுவர்களுக்கான பாதுகாப்பான இடமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டதற்காக 2008ம் ஆண்டின் அசோகா (Ashoka Fellow in 2008) விருதைப் பெற்றார். சமூகத்தில் கல்வியின் வழி இவர் மாற்றம் கொண்டு வரச் செய்யும் முயற்சிகளுக்காக இந்த ஆண்டு, ஏசியா சொசைட்டியின் ‘கேம் சேஞ்சர்’ விருதுக்காகவும் (Asia Society’s, 2015 Asia Game Changer of the Year) பரிந்துரைக்கப்பட்டார்.

    இந்திய மாணவர்களின் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ள கிரண் சேத்தியை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம், கிரணுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _____________________________________________________________________________________________

    கட்டுரைக்கான தகவல்களும் படங்களும் பெறப்பட்ட தளங்கள்:

    கட்டுரைக்குத் தகவல் தந்து உதவிய தளங்கள் (Resourses):
    http://www.globalteacherprize.org/
    http://asiasociety.org/asia-game-changers
    http://asiasociety.org/asia-game-changers/kiran-bir-sethi
    http://www.ted.com/speakers/kiran_sethi
    http://www.schoolriverside.com
    https://en.wikipedia.org/wiki/The_Riverside_School,_Ahmedabad

    The Importance of a Teacher in Society
    http://www.newindianexpress.com/education/The-Importance-of-a-Teacher-in-Society/2015/02/23/article2681963.ece

    இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1348855

    Info on DFC I CAN School Challenge – தகவல்:
    இணையதளம்: http://designforchangeindia.com/
    ஃபேஸ்புக்: https://www.facebook.com/designforchangeindia?fref=nf
    யூடியூப்: https://www.youtube.com/user/icandfc
    போட்டி மற்றும் போட்டியின் விதிமுறைகள்: http://www.dfcworld.com/file2015/asia_society_press.pdf
    மின்னஞ்சல்: india@dfcworld.com

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்

    தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார்
    மிக்காரா லென்று சிறியாரைத் தாம்தேறார்
    கொக்கார் வளவய லூர! தினலாமோ
    அக்காரம் சேர்ந்த மணல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
    மிக்காரால்’ என்று, சிறியாரைத் தாம் தேறார்;-
    கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ,
    அக்காரம் சேர்ந்த மணல்?

    பொருள் விளக்கம்:
    மதிக்கத்தக்கப் பண்பிற் சிறந்தோருடன் இணைந்து, அவர்களில் ஒருவராகவே செயல்படுகிறார். (ஆகவே) இவரும் குணம் மிக்கவரே என்றெண்ணி சிறுபுத்தி உடையவர் தம்மை நட்புக்காகத் தேர்ந்தெடுப்பவரில்லை. *கொக்குகள் இரை தேடிவரும் நீர்வளம் கொண்ட வயல்கள் கொண்ட ஊரைக் கொண்டிருப்பவரே, தின்னுவோமா நாம் சர்க்கரையுடன் கலந்துவிட்ட மணலை?

    பழமொழி சொல்லும் பாடம்:
    சிறுமைப்பண்புடையோர் ஒருவர் சான்றோர் மத்தியில் பழகிவந்தாலும், அவரது இழிகுணத்தின் காரணமாக அவரது தொடர்பை அறிவுடையவர் விரும்புவாரில்லை. இனிமையான சர்க்கரையுடன் கலந்து விட்டதால், அந்த மணலும் இனிப்பாகவே இருக்கும் என்று ஒருவரும் கருதி உண்ண விரும்பாததைப் போலவே, தீயோர் சான்றோர் தொடர்பில் இருந்தாலும், அவரை யாரும் விரும்ப மாட்டார். பண்பு நிறைந்தோரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், பண்பற்றோர் தமது குணத்தை உயர்த்திக் கொள்ளாது தங்கள் இயல்பிலேயே சிறுமைக் குணத்துடன் இருப்பார்கள் என்பதை மற்றொரு பழமொழிப்பாடலும் குறிக்கிறது. இத்தகையவர்களை வள்ளுவர்,

    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது. (குறள்: 823)

    அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராக வாழாமல் பண்பற்றவர்கள் தனது சிறுமைக் குணத்தைக் கைவிடாதவர்களாக இருப்பார்கள் என்றும், ‘நட்பாராய்தல்’ அதிகாரத்தின் குறளில்,

    குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு. (குறள்: 793)

    ஒருவரின் குணம், நற்குடிப்பிறப்பு, குற்றங்கள், அவருடைய குற்றத்தொடர்பற்ற உறவுகள் ஆகியவற்றை ஆராய்ந்தபின்னரே ஒருவரிடம் நட்பு பாராட்ட வேண்டும் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    * “வள வயல்” என்னும் குறிப்பினால் நீர்வளம் கொண்ட வயலில் மீன்களை இரையாகத் தேடி “கொக்குகள்” வருவதாக இரு உரை நூல்கள் பொருள் கொள்கின்றன, மேலும் இரு உரை நூல்கள் கொக்கு என்பதற்கு “மாந்தோப்பு” என்ற பொருளைக் காட்டி, மாந்தோப்புகளும், வயல்வளமும் நிறைந்த மருத நாட்டுத் தலைவன் அறிவுரை பெற்றதாகக் குறிக்கின்றன.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: கடங்கொண்டும் செய்வார் கடன்

     

    அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
    இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர்
    மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர்
    கடங்கொண்டும் செய்வார் கடன்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    அடர்ந்து வறியராய், ஆற்றாத போழ்தும்,
    ‘இடம் கண்டு அறிவாம்’ என்று எண்ணி இராஅர்;-
    மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர்
    கடம் கொண்டும் செய்வர் கடன்.

    பொருள் விளக்கம்:
    மிகுந்த வறுமை சூழ்ந்தவராய், (தேவையுள்ளோருக்கு) உதவ இயலாத நிலையிலும், நமக்கு வசதி வந்தால் உதவுவோம் என்று பண்புடையோர் எண்ணுவதில்லை. பெண்மைக்குரிய மடமைப் பண்பையும், மயிலின் சாயலையும் கொண்ட அழகியே, சான்றோர்கள் கடன்பட்டாவது உதவி செய்து தங்களது கடமையை நிறைவேற்றுவார்கள்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    உதவும் பண்புடைய சான்றோர், பிறரிடம் கடன்பட்டாவது தேவையுள்ளவருக்கு உதவும் பண்புள்ளவர்களாகவே இருப்பர். சான்றோருடைய இப்பண்பினைக் குறிக்குமிடத்து வள்ளுவர்,

    இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
    கடனறி காட்சி யவர். (குறள்: 218)

    பண்பிற் சிறந்த சான்றோர் தம்மிடம் கொடுக்க ஒன்றும் இல்லாது வறுமை சூழ்ந்துவிட்ட காலத்திலும்கூட, வறியவர் தேவையறிந்து அவர்களுக்கு உதவிடும் கடமை நிறைந்தவர்களாகவே விளங்குவர் என்கிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டம்பர் 21, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு முனைவர் பத்மாவதி அவர்கள்

    Padmavathy-a

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி ஆனையப்பன் அவர்கள். இவரைக் குறிப்பிடும் செய்திகள் யாவும் “முனைவர் பத்மாவதி, தொல்லியல் ஆய்வாளர் (பணி ஓய்வு), சென்னை” என்றே குறிப்பிடுகின்றன. ஆனால் “தொல்லியல் பணிகளில்” இருந்தோ அல்லது “தொல்லியல் ஆய்வுகளில்” இருந்தோ ஓய்வு பெற்றதாக முனைவர் பத்மாவதியின் செயல்பாடுகள் இதுவரையில் குறிப்பதாக இல்லை. மாறாக இவர், வழக்கமான பணிஓய்வு பெற்றவர் வாழ்க்கைமுறையில் இருந்து வேறுபட்டு தொல்லியல் துறை வளர்ச்சியிலும், வரலாற்று ஆய்வுகளிலும், வரலாற்றுக் கல்வியிலும், தொல்லியல் துறையில் இளையதலைமுறையினரை உருவாக்குவதிலும் ஆர்வம் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஆதலினால், இவரை பணிஓய்வு பெற்றவர் என்று குறிப்பிடுவதும் பொருத்தமற்றதே. செப்டெம்பர் 6, 2015 அன்று ஓசூரில் நடைபெற்ற, “அறம் இலக்கிய அமைப்பு ஓசூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்” இணைந்து நடத்திய “மாமன்னர் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1001 ஆவது ஆண்டுவிழாவில்”, தொல்லியல் துறையில் ஆர்வமுடன் செயலாற்றும் இளையதலைமுறை ஆர்வலர்களுக்கு “தொல்லியல் முனைவோர்” விருது வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் பாராட்டிப் பேசியுள்ளார். தொல்லியல்துறையில் பத்மாவதியின் தொடர் பங்களிப்பைப் பாராட்டி அவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ அமைப்பின் நிறுவனர் முனைவர் சுபாஷிணி அவர்கள், முனைவர் சுபாஷிணிக்கு வல்லமைக்குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

    viruthu

    முனைவர் பத்மாவதி தொல்லியல் கல்வி சார்ந்த பயிலரங்குகளையும், கல்வெட்டுகளைப் படிக்க உதவும் கிரந்தம் பயிலரங்கங்களையும் தொடர்ந்து நடத்தி வருபவர். சமீபத்தில் இவர் பங்கேற்ற பயிலரங்கங்கள் குறித்த தகவல்கள் சிலவற்றை கீழே காண்க …

    ▪தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையம் நடத்திய கிரந்தம் பயிலரங்கில் பங்கேற்று, தமிழகக் கல்வெட்டுகளில் கிரந்த எழுத்து பயன்பாடு என்ற தலைப்பில் பல்லவர் கல்வெட்டுகளில் கிரந்தம் பற்றிய வகுப்பு, மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கும் பொருட்டு தஞ்சை பெரிய கோயிலில் நேரடி கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி

       Padmavathy6 Padmavathy5

    ▪நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி தமிழ்த்துறை நடத்திய பயிலரங்கில் கலந்துகொண்டு மாணவ மாணவியர்க்கு கிரந்தஎழுத்துக்கள் கற்பித்து பயிற்சி

    ▪காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இலக்கியச் சான்றுகளுடன் “தொண்டைமண்டல வரலாறு” பற்றிய சொற்பொழிவு

    ▪சென்னை சமூக ஆய்வுவட்டம் கூட்டத்தில் “களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும்” பற்றிய சொற்பொழிவு

    Padmavathy-b

    ▪தமிழக மூதறிஞர்கள் குழு நடத்தும் மாதாந்திர கலந்துரையாடலில் சென்ற ஜூலை மாதக் கூட்டத்தில், “தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் கூறும் முக்கியச் செய்திகள்” என்ற தலைப்பில் தமிழக வரலாற்றில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டு ஆதாரங்கள், தமிழர்களின் சங்ககாலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இருப்பதற்கான தகவல் தரும் மீனாட்சிபுரம் கல்வெட்டு ஆகியன குறித்த சொற்பொழிவு

    ▪தமிழ் மரபு அறக்கட்டளையின் களஆய்வுகளில் பங்கேற்பு, தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவுகளுக்கு தகவல் அளித்து வரலாற்றுத் தகவல்கள் இணையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வழி பதிவாக்கம் பெற உதவுதல், தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக வழிநடத்துதல் ஆகிய தொடர் பணிகளுடன்…

    “பனுவல் புத்தக நிலையம்” நடத்திவரும் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் (Archeological Tour ) பங்கேற்று வரலாறு மற்றும் தொல்லியல் கல்வி பயிற்சி அளிப்பது, கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் படி எடுக்கும் முறை பற்றிய பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு இதுவரை,
    பனுவல் ஒருநாள் வரலாற்று தொல்லியல் கல்விப் பயணம் திட்டம் வழியாக (1) மகாபலிபுரம், (2) காஞ்சிபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், (3) செஞ்சி ஆகிய இடங்களில் தொல்லியல்துறை கல்வி வளர்ச்சிக்காகப் பயிற்சிகள் அளித்துள்ளார்.

       காஞ்சிபுரம் கல்விச் சுற்றுலாவில்பனுவலின் செஞ்சி வரலாற்று பயணம்

    கார்த்திக் புகழேந்தி

    அடுத்து வரும் அக்டோபர் 4, 2015 அன்று பனுவல் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் திருக்கோவிலூரிலும், திருக்கோவிலூரைச் சுற்றியுள்ள பகுதிகளான திருவெண்ணைநல்லூர், கிராமம், ஜம்பையில் 1981 ல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட, கி. பி. 1 ஆம் நூற்றாண்டு சங்க காலத்தமிழ் எழுத்துக் கல்வெட்டு ஆகியவற்றைப் பற்றி மங்கை ராகவன் அவர்களுடன் இணைந்து பயிலரங்கம் வழங்க உள்ளார்.

    பணி ஓய்விற்குப் பிறகும் வரலாற்றுக் கல்வி, கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி, தொல்லியல் கல்வி ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு வழங்கி அவர்களை ஊக்குவித்துவரும் முனைவர் பத்மாவதி அவர்களின் பணிகளுக்காக அவரை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _____________________________________________________________________________________________

    கட்டுரைக்கான தகவல்களும் படங்களும் பெறப்பட்ட தளங்கள்:
    முனைவர் பத்மாவதியின் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் – https://www.facebook.com/padmavathy.anaiappan
    பனுவல் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் – https://www.facebook.com/panuval.thiruvanmiyur
    கார்த்திக் புகழேந்தி – https://www.facebook.com/gsrkteam
    காற்றில் எழுதியவன்… கார்த்திக் புகழேந்தி வலைப்பூ – http://writterpugal.blogspot.com/2015/05/blog-post.html
    தமிழ் மரபு அறக்கட்டளை – http://www.tamilheritage.org/old/ec/ec.html#_pathma

    வல்லமையாளர் பற்றிய மேலதிகத் தகவல்கள்:
    களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும், தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி உரை
    http://samoogaaaivuvattam.blogspot.in/2014/12/blog-post.html

    கல்வி: முதுகலை தமிழ், முதுகலை கல்வெட்டு, தொல்லியல் பட்டயப்படிப்பு, முனைவர் ஆய்வு

    நூல்கள்:
    – சோழர் ஆட்சியில் அரசும் மதமும்
    – சைவத்தின் தோற்றம்
    – சோழர்கால சமயம்
    – அம்பாசமுத்திரம்

    ஆசிரியர்:
    – நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – I
    – நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – II
    – நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – III
    – திருவிழிமிழலை கல்வெட்டுகள்
    – திருவலஞ்சுழி கல்வெட்டுகள்
    – தாமரைப் பாக்கம் கல்வெட்டுகள்

    துணை ஆசிரியர்:
    – தொல்லியல் கருத்தரங்கம் தொகுதி – I
    – தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 2004
    – காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்
    – தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்
    – திருவாரூர் மாவட்டக் கல்வெட்டுகள்

    மின்னஞ்சல்: padma_tn@hotmail.com
    https://www.facebook.com/padmavathy.anaiappan

    Share