பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

 

பழமொழி: உண்ணோட் டகலுடைப்பார்

 

தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
தீமாற்றத் தாலே பகைப்படுத்திட் – டேமாப்ப
முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே
யுண்ணோட் டகலுடைப் பார்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப்பட்டாரைத்
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப
முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே-
உண் ஓட்டு அகல் உடைப்பார்.

பொருள் விளக்கம்:
தனது சொந்த முயற்சியில் வாழும் திறனற்றவர், தான் வாழ உதவி அடைக்கலம் தருபவரையும் தீயவைக் கூறி பகைத்துக்கொண்டு, (அதனால் தனக்கு ஊறு ஏற்படலாம் என அஞ்சி) பாதுகாப்பிற்காக முன்னரே தப்பியோடி விடுபவர், பகைமை கருதி பயந்து ஓடுபவர், தான் பிச்சை பெற்று உண்ண உதவிய மண்கலத்தை உடைத்தவர் (போன்ற அறிவிலியாவார்)

பழமொழி சொல்லும் பாடம்:
தனக்கு வாழ்வாதாரமாக இருப்பவரைப் பகைத்துக் கொள்பவர் அறிவற்றவர். தனக்கு வாழ ஆதரவு தருபவரை தீயவை கூறி பகைத்துக் கொள்ளும் அறிவற்றவரை திருவள்ளுவர் பேதைமை நிறைந்தவர் என்று கூறுகிறார்,

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். (குறள்: 831)

அறிவற்ற செயல் என்பது எது என்றால், தனக்குத் தீமை தருவதைக் கையாண்டு நன்மையைத் தொலைத்துவிடுவதாகும் என்பது குறள் அறிவுறுத்தும் அறவுரை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *