பழமொழி கூறும் பாடம்

0

தேமொழி.

 

பழமொழி: கடங்கொண்டும் செய்வார் கடன்

 

அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர்
மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர்
கடங்கொண்டும் செய்வார் கடன்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
அடர்ந்து வறியராய், ஆற்றாத போழ்தும்,
‘இடம் கண்டு அறிவாம்’ என்று எண்ணி இராஅர்;-
மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர்
கடம் கொண்டும் செய்வர் கடன்.

பொருள் விளக்கம்:
மிகுந்த வறுமை சூழ்ந்தவராய், (தேவையுள்ளோருக்கு) உதவ இயலாத நிலையிலும், நமக்கு வசதி வந்தால் உதவுவோம் என்று பண்புடையோர் எண்ணுவதில்லை. பெண்மைக்குரிய மடமைப் பண்பையும், மயிலின் சாயலையும் கொண்ட அழகியே, சான்றோர்கள் கடன்பட்டாவது உதவி செய்து தங்களது கடமையை நிறைவேற்றுவார்கள்.

பழமொழி சொல்லும் பாடம்:
உதவும் பண்புடைய சான்றோர், பிறரிடம் கடன்பட்டாவது தேவையுள்ளவருக்கு உதவும் பண்புள்ளவர்களாகவே இருப்பர். சான்றோருடைய இப்பண்பினைக் குறிக்குமிடத்து வள்ளுவர்,

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். (குறள்: 218)

பண்பிற் சிறந்த சான்றோர் தம்மிடம் கொடுக்க ஒன்றும் இல்லாது வறுமை சூழ்ந்துவிட்ட காலத்திலும்கூட, வறியவர் தேவையறிந்து அவர்களுக்கு உதவிடும் கடமை நிறைந்தவர்களாகவே விளங்குவர் என்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *