பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

பழமொழி: பறைக்கண் கடிப்பிடு மாறு

வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப,
உள்ளமாண் பில்லா ஒருவரைத் – தெள்ளி
மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல்,
பறைக்கண் கடிப்பிடு மாறு.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப,
உள்ளம் மாண்பு இல்லா ஒருவரைத் தெள்ளி,
மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்-
பறைக்கண் கடிப்பு இடுமாறு.

பொருள் விளக்கம்:
(அளவிட இயலாத, மிகுந்த) வெள்ளம் போன்ற நற்பண்புகள் யாவும் கொண்ட உறவினர்கள் இருந்திட, உள்ளத்தில் நற்பண்பு இல்லாத ஒருவரும் உடனிருந்தால், தெளிவாக ஆராய்ந்து, மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைப் பேசும்பொழுது பிரித்து, அவரை வெளியேற்றத் தவறினால், அது (தமுக்கு அடிப்பது போல) பறையின் மேல் சிறுதடி கொண்டு அடிப்பதாகும் (தகவலை அக்கயவர் பரப்பிவிடுவார்).

பழமொழி சொல்லும் பாடம்: மறைக்கப்படவேண்டியவற்றைப் பேசும்பொழுது, இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாத குணமுள்ளவரை விலக்காவிட்டால், தமுக்கடிபடிப்பது போல அவரே இரகசியத்தைப் பரப்பிவிடுவார். இதனைக் குறள்,

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். (குறள்: 1076)

தாம் அறிந்த இரகசியங்களை வலியச் சென்று பிறருக்குப் பரப்பிவிடும் கயவரை, செய்தி அறிவிக்க அடிக்கப்படும் பறைக்கு ஒப்பானவர் என்று கூறுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *