பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

பழமொழி: கணையிலும் கூரியவாம் கண்

யாந்தீய செய்த மலைமறைத்த தென்றெண்ணித்
தாந்தீயார் தந்தீமை தேற்றாரால் – ஆம்பல்
மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
கணையிலுங் கூரியவாம் கண்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
‘யாம் தீய செய்த மலை மறைத்தது’ என்று எண்ணி,
தாம் தீயார் தம் தீமை தேற்றாரால்;-ஆம்பல்
மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!-
கணையிலும் கூரியவாம் கண்.

பொருள் விளக்கம்:
நாம் தீமைகள் செய்ததை மலை மறைத்தது விட்டது (போன்று அவை மறைவில் உள்ளது) என்று நினைக்கும் தீயவர், தங்கள் தீச்செயல் விளைவு பற்றிய தெளிவற்றவர். ஆம்பல் மலர்கள் மணவிழா இல்லங்களில் மணம் பரப்பிட, மிகுத்த அலைகளையுடைய நீர்வளம் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, அம்பையும் விடக் கூர்மையானவை கண்கள் (அவை குற்றத்தைக் கண்டுவிடும் என அறிக).

பழமொழி சொல்லும் பாடம்:
பிறர் மனதில் ஓடும் எண்ணங்களை அவரது முகத்தைக் கொண்டே கூரிய பார்வை கொண்டவர் உணர்ந்து விடுவார். குற்றங்களை அத்தகையவரிடம் இருந்து மறைக்க இயலாது. இக்கருத்தை வள்ளுவர்,

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. (குறள்: 710)

நுட்பமான அறிவுடையோர் எனப்படுபவர், பிறர் மனக்கருத்தை அளக்கப் பயன்படும் கருவி அவரது கண்களைப் போன்றல்லாது வேறொன்று இல்லை என்கிறார். மேலும்,

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். (குறள்: 705)

ஒருவரது அகத்தில் உள்ளதை அவரது முகமே காட்டிக் கொடுத்துவிடும் என்கின்றபோது, அந்த முகக்குறிப்பை உணர்ந்து கொள்ள இயலாத கண்கள் இருந்தென்ன பயன் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *