Category: இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்

  • என்னழகியே!

    இசைக்கவி ரமணன்

     

    7

    மதுவெழுந்து மலராகி மலர்விரிந்து மனமாகி
    மனமுழுதும் உனதானதே
    மகரந்தம் கனவாகி இதழ்யாவும் நினைவாகி
    மணமெங்கும் பெயர்வீசுதே
    இதுவரையில் கதையொன்றை இங்கங்குமாகவே
    எழுதியகை இளைப்பாறவே
    இமையடியில் மைதொட்டுன் விரலெழுதத் துவங்கியதும்
    இதயத்தில் குயில்கூவுதே
    இதுகேட்டு முகில்சூழ இணைகூடும் தருணமென
    இளையமயில் நடமாடுதே
    இமைக்காத தேவர்க்கும் விண்மின்னும் மீனுக்கும்
    இதுவிந்தை யானதம்மே
    எதுசெய்தும் தீராத துன்பங்கள் எதுவொன்றும்
    செய்யாமல் தீர்ந்ததின்றே!
    என்மயிலை தென்மதுரை எனதுஜா கேஷ்வரில்
    எழுந்தருளும் என்னழகியே!

    படியேறி வந்தென்றன் மடிதட்டிப் பதறவும்
    பாட்டியாய் நின்ற போதும்
    பாவாடைச் சிறுமியாய்ப் பாதச் சதங்கையுடன்
    பளிங்காய்ச் சிரித்த பொழுதும்
    முடிவற்ற இருளொன்றில் மூவாத இருளாக
    மூண்டெனை வெருட்டும் போதும்
    முத்தத்தில் என்றனுயிர் மொத்தமாய் மிஞ்சாமல்
    கொள்ளையாய் அள்ளும் பொழுதும்
    விடிவெள்ளி போல்நெஞ்சின் நடுவிலொரு புள்ளியாய்
    விலகவொட் டாத போதும்
    வேறுபல நிலைகளும் ஊரறிந் தாலென்னை
    வேறுபெயர் வைத்தழைக்கும்!
    எடையற்ற வெளியொன்றில் இதமாய் மிதக்கின்ற
    ஏகாந்தம் தொடர்க தாயே!
    என்மயிலை தென்மதுரை எனதுஜா கேஷ்வரில்
    எழுந்தருளும் என்னழகியே!

    எப்படித் தானிந்தக் குப்பிக்குள் இன்பமெனும்
    ஏழுகடல் கூத்தாடுமோ!
    ஏதுமறி யாதவன்முன் பாதமிரண் டும்காட்டி
    ஏதுக்குத் திரைபோடுமோ!
    தப்பேதும் நேராத தாளத்தி லேயென்னைத்
    தாலாட்டித் தூங்கவிடுமோ!
    தள்ளாடும் தூக்கத்தில் முள்ளாடும் முனையொன்றில்
    தனைக்காட்டி ஏங்கவிடுமோ!
    தப்பென்னும் சரியென்னும் தர்மங்கள் யாவும்நீ
    தழுவியதும் தீர்ந்ததம்மா
    தானாக வந்தனை நானாகப் பெறவில்லை
    தாயே மறக்கவில்லை
    எப்போதும் பிரியாமல் முப்போதும் அன்போடு
    என்னோ டிருக்கவேண்டும்
    என்மயிலை தென்மதுரை எனதுஜா கேஷ்வரில்
    எழுந்தருளும் என்னழகியே!

    Share
  • அன்பில் ஒன்றான சங்கம்

    இசைக்கவி ரமணன்

    14449023_10210455897336670_2420999709128751288_n

    கனவிலே மேவும் விடியலில் வந்து
    காதில் கவிதைகள் சொல்கிறாய், அதை
    நினைவிலே பாடி வைக்கிறேன், உனை
    நாளெலாம் தேட வைக்கிறாய்
    மனதிலே தைத்த முள்ளினை, உன்
    மலர்விரல் என்று கிள்ளுமோ? துளி
    மனமிலாத பெரும் மர்மமே! அது
    மறந்து பிள்ளையைத் தள்ளுமோ?

    துருவமாய் அன்னை பிள்ளையா? இந்தத்
    துயரை மிஞ்சும்துயர் உள்ளதா?
    கருவமா? இது கருணையா? இந்தக்
    கதையில் திருப்பமே இல்லையா?
    அருவமே! ஆழ நெஞ்சிலே அழகின்
    உருவமாய்த் தோன்றும் உண்மையே! உன்
    புருவம் உயரும் கணத்திலே, வினைப்
    பொற்பு பொடியாகிப் போகுமே!

    ஒன்றுநீ என்று சொல்லுவார் அதை
    நன்றுதான் என்று கொள்ளுவோம், ஒவ்
    வொன்றிலும் நீ ஒன்றுதான் என்றும்
    சொல்லுவார் அதையும் கொள்ளுவோம்
    ஒன்று மாறி ஒன்றாகத் தெரிவதும், நீ
    ஒன்றுதான் என்னில் ஏற்பரோ? அந்த
    ஒன்றி லொன்றாமல் ஒன்றி நிற்பதே
    வென்றி என்கிறேன் வேர்ப்பரோ!

    கற்றை விரியுமுன் ஒற்றை அழகினைக்
    காட்டினாய் யாம் கண்டனம்
    பெற்ற தாயெனப் பிச்சிப் பேயெனப்
    பேசினாய் யாம் கேட்டனம்
    உற்ற தோழியாய் உதடு முத்தங்கள்
    ஊட்டினாய் யாம் உண்டனம்
    மற்றும் வாழ்விலே வாட வைக்கிறாய்
    மன்றில் வைக்கிறோம் கண்டனம்!!

    உன்னில் நானாகி என்னில் நீயாகி
    நம்மில் நாமான இன்பம்
    அன்பி லொன்றாகி அழகில் இரண்டாகி
    அன்பில் ஒன்றான சங்கம்
    நன்மை தீமைகள் இன்ப துன்பங்கள்
    அன்னையாடும்சது ரங்கம்
    என்றும் உன்சொந்தம் என்று வாழும்நான்
    கன்னித் தமிழ்பேசும் சிங்கம்!

    Share
  • சக்தி முற்றம்

    இசைக்கவி ரமணன்

     

    images-5

    இருள்
    இருளே அஞ்சிப் பதறும் பேரிருள்
    இழைபிரியாமல் எழுந்து பரவி
    இனியொரு திசையே இலாதபடி
    இருந்தும் அசைந்தும் பராவி அவாவி
    ஏதுமே இலாத இலாத எதிரை
    இருக்க வைத்துக் கரைத்துக் குடிக்கும்
    இருள்

    ஒருநாள்
    ஆயிர மாயிரம் கோடிக் கதிர்கள்
    வாயினைத் திறந்து வற்றாச் செம்மைப்
    பாயினை விரித்த பயங்கரி, எனது
    தாயினைக் காணத் தளபதியாய் ஊழித்
    தீயினை அழைத்துச் சேனை வகுத்தன
    தங்கள் ஒளியெனத் தலைகனத்தன
    திங்கள் பகலெனத் திகிரி சுழற்றின
    நுரைக்குமிழிகளை நொறுக்கும் சூறையாய்
    தரைப்புதர்களைத் தழுவும் நெருப்பாய்
    அரைவிழி கூடத் திறக்கவில்லை
    அனைத்தும் அவளது கறுத்த இருட்டில்
    நனைந்த கணத்தில் அமிழ்ந்து மறைந்தன

    மொத்த வானும் ஒற்றை நிலவின்
    முத்தமொன்றால் முழுதும் நெகிழ்ந்து
    அறியாத அழிவொன்றின் தறுவாயில்
    தெரியாமல் சிரித்தபடித் ததும்புவதாய்
    ஆகாசம் காணாமல் போகலாம் எனுமோர்
    அபாயமாக
    ஆரிருளிலிருந்து ரெண்டு
    காரிழைகள் பிரித்தாள்
    அமிழ்தம் நஞ்சாய் அனைத்திலும் ஏறவும்
    அகத்தில் நிலவு மொட்டு முளைக்கவும்
    புறத்தைத் தொட்டுப் புளகம் எய்தவும்
    அகமும் புறமும் அமிழ்தத்தாலே
    தகர்ந்து போகுமோர் தருணத்தில் விழி

    சற்றே திறந்தாள்
    முற்றத்தினிலே முத்துதிர்ந்தன
    பற்றில்லாமல் மோட்டுவளையை
    உற்றுப் பார்த்து றைந்த சிறுவன்
    ஒவ்வொன்றாகப் பொறுக்கிக் கொண்டான்…

    Share
  • ஏழையினை மறந்துவிடாதே!

    இசைக்கவி ரமணன்

     

    images-4
    உன்களிப்பு தர்மம்
    உன்விருப்பம் சிருஷ்டி
    உன்னிமைப்பு மாயம்
    உன்னிமைப்பே முக்தி!

    என்னசொல்லி என்னசெய்து உன்னை அறிவது?
    எங்கு மெதுவு மானவுன்னை என்று காண்பது?
    என்றோநீ வைத்தபுள்ளி எட்டும்வரையிலே, நீ
    எழுதும்கதை சொந்தக்கதை யாகத் தொடருது
    உன்னை மீறி எண்ணமொன் றிருக்க முடியுமா?
    உனதல்ல எனதென்று தடுக்க முடியுமா?
    உள்ளமென்னும் பள்ளமெங்கும் பாயும் வெள்ளமே!
    உயிரில் நின்றும் கண்ணில்படா உச்சக் கள்ளமே!

    என்வினைகள் பிறவி
    உன்மறைப்பு வாழ்க்கை
    என்மறப்பு மரணம்
    என்னநியாயம் தர்மம்?

    கட்டுவதும் கழற்றுவதும் உன்றன் கைகளே, இதில்
    கர்மம் தர்மம் என்பதெலாம் கல்விப் பொய்களே!
    மட்டிலாத உன்றன்கருணை மட்டும் உண்மையே! உன்
    மனதுபோல என்னைமாற்றி மகிழும் பெண்மையே!
    தொட்டிலுக்கு முன்பிருந்தும் தொடர்ந்து வருகிறாய், நாலு
    தோள்களிலோர் தோளுமாகித் தூக்கிச் செல்லுவாய்
    முட்டுமந்த இடைவெளியில் என்ன செய்கிறாய்? ஏதோ
    முழுமையென்கிறார்கள் நீ என்ன சொல்கிறாய்?

    கண்ணில் நீ மாயம்
    கனவெல்லாம் நேயம், உயிர்
    எண்ணியெண்ணித் தேயும்
    என்று வீழும் தாயம்?

    உன்னிருப்பே ஒருகோடி எண்ணமானது, அந்த
    ஒருநினைப்பே இன்பதுன்ப வண்ணமானது
    என்னிருப்போ பொய்மிகுந்த மெய்யுமானது
    ஏற்றும்வரை வாழும்கற் பூரமானது
    ஒன்றுமட்டும் சொல்லிச் சற்று ஓய்வு கொள்கிறேன், நீ
    ஒருத்தி தவிர ஒருவருமே இல்லை சொல்கிறேன்
    என்றுமிந்த ஏழையினை மறந்துவிடாதே! எனக்கு
    எல்லாமும் நீயம்மா துறந்துவிடாதே!

    Share
  • என் காளிக்கு..

    இசைக்கவி ரமணன்

     

    kali

    பச்சைரத்தம் சொட்டச்சொட்டப்
    பட்டைநாக்கு பளபளக்கப்
    பரபரப்பாய் எதைவிழுங்கப் பார்த்திருக்கிறாய்? நீ
    படைக்குமுன்னே யாவும்விழுங்கித் தீர்த்திருக்கிறாய்!

    அச்சமஞ்சும் உன்வடிவை
    அகம்குலைக்கும் உன்னுருவை
    அள்ளிப்பருகத் துள்ளிவந்த பிள்ளையைப் பாராய்! அவன்
    அழகுத்தமிழின் மழலைகேட்க அம்மா வாராய்!

    இச்சைபோன்ற இடரையெலாம்
    மிச்சமின்றி விழுங்கிவிடு
    என்னையுன்றன் பிள்ளையாக வளையவரவிடு,
    என்றுமெதிரில் நின்றுனன்பில் அளையும்சுகம்கொடு!

    கச்சைக்கட்டிக் கொண்டுவரும்
    கவலையைப் பொசுக்கியந்தக்
    கனலையென்றன் கவிதையிலே சுருதியாக்கிடு! என்னைக்
    கன்னித்தமிழ் மின்னலுக்குக் கருவியாக்கிடு! (1)

    இந்த உலகம் நொந்த உலகம்
    இவர்மனத்தில் தினம்கலகம்
    இங்கெதற்கோ இறக்கிவைத்தாய் தெரியவுமில்லை
    இங்கெனக்கு வேலையென்ன புரியவுமில்லை

    கந்தனோடு பொய்கையிலே
    கவிதைபேசி ஆடியவன்
    சந்தையிலே காசும்பையு மின்றி நிற்கிறேன்
    சட்டையின்றிச் சவுக்கடிக்காய் என்னை விற்கிறேன்!

    எந்தவினை? ஏதுவிதி?
    எவரிடத்தில் இந்தச்சதி?
    உன்றன்பிள்ளை என்பதையே மறந்துவிட்டாயா? நானே
    ஊற்றித்தந்த கள்குடித்துக் கிறங்கிவிட்டாயா?

    அந்தமிலா ஓரிருளில்
    அந்தகார மாயெழுந்து
    வந்துநின்ற காட்சியினை எண்ணிப் பார்க்கிறேன், அந்த
    வாய்ப்புதவறிப் போனதென்று வருந்தி யழுகிறேன் (2)

    நிலவுநெகிழும் நிசியில் மனதில்
    உலவும் மின்ன லமிழ்த மாகக்
    குலவியென்றன் உயிரையெல்லாம் கொள்ளை யடிப்பாய்! இந்தக்
    குழந்தையிடம் குழந்தையாகச் சள்ளை படிப்பாய்

    கலகநடுவில் கண்விழிக்கும்
    கவிதையென்றன் காளியென்று
    உலகமறிய ஊர்நடுவே உடைத்துக் காட்டிடு! நம்
    உண்மையினைச் சந்தியிலே உடைத்துப் போட்டிடு!

    திலகமிட்ட சிறுமியாக
    சிரித்துக்கொன்ற குமரியாக
    திரைநரைத்த கிழவியாக வந்து நின்றனை
    திட்டமிட்டுத் திரும்பத்திரும்ப நின்று கொன்றனை

    உலகுபோதும் வாழ்வுபோதும்
    உறவுபிரிவுத் துயரம்போதும்
    உற்றபிள்ளை! பெற்றவளே ஓடி வந்திடு! காளீ
    உச்சிமுகர்ந் துன்மகவை உன்னில் சேர்த்திடு! (3)

    Share
  • பாதமலர் போதும்

    இசைக்கவி ரமணன்

     

    paduka_1

    மலருக்குத் தேனழகோ
    மணமழகோ நிறமழகோ? என்
    மனதுக்கு நீயன்றி
    மற்றழகொன் றேது?
    மறையெல்லாம் சொன்னாலும்
    மற்றொருசொல் லேது?

    சிலருக்கே திருவுண்டு
    சிலருக்கே அறிவுண்டு
    சிலருக்கோ நீசிரித்துச்
    சேர்ந்த அருளுண்டு
    சிறுபிள்ளை என்னெஞ்சில்
    நீதானே உண்டு!

    நாடகமாய் இவ்வையம்
    பூடகமாய் மனிதமனம்
    கூடெங்கும் நுழைந்துமலர்
    சூடுமுன் கரத்தால், உன்னைத்
    தேடுவதே இவரிங்கே
    ஆடுவதும் பாடுவதும்!

    தேடுவோர்கள் தேட, பதம்
    சூடுவோர்கள் சூட, நிதம்
    வாடுவோர்கள் வரிசையிலென்
    வாழ்க்கை ஆடுதே! இதில்
    ஏடும் இசையும் உன் திறவா
    வாசலானதே!

    போதுமடி அம்மா உன்
    பொல்லாப்பு! இக்கணமே
    மீதமின்றி மிச்சமின்றி
    என்னைத் தீர்த்திடு! உன்
    பாதமலர் போதுமதில்
    பரிந்து சேர்த்திடு!

    Share
  • சிக்காத அமரியல்லவா!

    இசைக்கவி ரமணன்

    amman

    ஏறெழுந்து வந்துநெஞ்சைக் கூறுபோடும் தங்கமே!
    என்றன் கனவில் கவியில்வந்து இடிசிரிக்கும் சிங்கமே! என்னை
    ஏறெடுத்துப் பார்த்துவிட்டால் ஏதுனக்கு பங்கமோ?
    எனக்கும் உனக்கும் இடையினிலே எவர்வகுத்த சுங்கமோ!

    தேரெழுந்த தாயிதயம் ஊர்திரண்ட தாகமனம்
    யாரெந்தக் கொடியசைக்கக் காத்திருக்கிறாய்? அடி
    யாமளையே யார்வரவைப் பார்த்திருக்கிறாய்?
    தேரழுந்தித் தெருநொறுங்கி ஊர்சிரிக்கவா? என்றோ
    தீர்ந்தகதை தொடர்தல்கண்டு பார்விழிக்கவா?

    கார்குழலை மின்னெடுத்துக் கட்டமுயலும் அழகியே!
    கட்டளைக்குக் கவிதைகேட்கும் கர்வமிக்க அரசியே!
    ஊர்விழுந்து நானெடுத்த பிச்சையெலாம் போதுமே! உன்
    உதடுபட்டென் உச்சிகுளிரும் ஒற்றைமுத்தம் வேண்டுமே!

    சாத்திரங்கள் தோற்ற இடம் சதுர்மறைகள் ஏங்கும்பதம்
    சாயங்காலக் கனவுகளில் காட்டியவள் நீ! நீ
    சாம்பலையும் நின்றெரிக்கும் சாம்பவியாம் தீ!
    தோத்திரங்கள் இன்னுமுனக் கலுக்கவில்லையா? கால்
    தொட்டுச்சுட்ட கண்ணீரும் உலுக்கவில்லையா?

    நீயெனக்கு நானுனக்கு நேர்ந்துகொள்ளுவோமே, ஒரு
    நிமிடம்கூடப் பிரிந்திடாமல் சேர்ந்து வாழுவோமே
    தாயெனக்கு நீயுனக்குத் தக்கபிள்ளை கவிஞனே, நீ
    தள்ளிவைக்கத் தள்ளிவைக்கத் தழுவவருவ தொருவனே!

    கூடெடுத்த தூழிக் கனல் குடிசையிலே சூறைப் புயல்
    கூர்த்தகைகள் கொட்டிச் சிரிக்கும் குமரியல்லவா! எந்தக்
    கோட்டுக்குள்ளும் சிக்காத அமரியல்லவா! இது
    மூடநல்ல நேரம்திரை போட நல்லநேரம், என்னை
    முன்பிலாமல் பின்பிலாமல் தீர்த்தருள்கவே! தாயே!
    முத்தமொன்றில் தீர்த்துன்னுள் வார்த்தருள்கவே!

    Share
  • உன்றன் பிள்ளை நான் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    14445941_904534546319371_2553612008051880227_n

    உந்தன் பிள்ளை நான், என்றும்
    எந்தன் அன்னை நீ
    ஏங்கியேங்கி அழுவதுதான் என்றன் வாழ்க்கையோ?
    என்னைப் பார்த்துச் சிரிப்பதுதான் உன்றன் பாசமோ?
    என்ன சொந்தமோ? என்று
    வந்த பந்தமோ?

    மந்திரங்க ளாலுனக்கு மாலை சூட்டுவார், கனல்
    மணமணக்கும் சொல்லெடுத்துக் காலில் தூவுவார்
    சந்திரனை சூரியனைச் சடையில் பூட்டுவார், அந்தி
    சாயும்பொழுதில் தேன்குழைத்துச் சாந்து சாற்றுவார்

    ஏதுமின்றி அம்மாநான் ஏங்கி நிற்கிறேன்
    எல்லோரும் சென்றபின்பும் எதிரில் நிற்கிறேன்

    உன்னையன்றிக் காரணங்கள் இருக்க முடியுமா? உன்முன்
    கன்மஜென்மத் தோரணங்கள் கலகலக்குமா?
    இன்றுநாளை என்றுநாளைத் தள்ளலாகுமா? உயிர்
    சென்றபின்பு தெரியாமல் அள்ளலாகுமா?

    இந்தக்கணம் அம்மாநீ என்னைத் தழுவிடு! இந்த
    விந்தை வாழ்க்கை போதுமென்னை விரைந்து தழுவிடு

    கண்பனிக்கக் கவியிசைக்கும் வரம்கொடுக்கிறாய், நெஞ்சில்
    காதலற்ற இவ்வுலகில் கதறவைக்கிறாய்
    எண்ணமிலாப் பெருவெளியை எட்டவைக்கிறாய், என்னை
    ஏழையாக்கி எவரெவரோ குட்டவைக்கிறாய்

    தாங்கவில்லை அம்மாஉன் தாளில் வீழ்கிறேன், உயிர்
    நீங்குகின்ற தருணம்வேண்டி நீண்டுவாழ்கிறேன்

    Share
  • என்னெதிரே வா உடனே!

    இசைக்கவி ரமணன்

     

    கண்ணிருந் தென்னபயன்? நீ
    காட்டவில்லை உன்வடிவை, நீ
    பெண்பிறந் தென்னபயன்? என்
    பேதைமையைத் தீர்க்கவில்லை
    மண்ணிருந் தென்னபயன்? இன்னும்
    மண்டியிட வில்லைவிண்
    எண்ணரிய பேரழகே!
    என்னெதிரே வா உடனே!

    உன்னருகே நானிருந்தால், அடி
    உனக்குமொரு துணையிருக்கும்
    என்னருகே நீயிருந்தால், அடி
    என்றென்றும் தமிழிருக்கும்
    வன்னங்கள் களைந்தாலோ, அடி
    வானுண்மை புரிந்துவிடும்
    இன்னுமென்ன தயங்குகிறாய்
    என்னெதிரே வா உடனே!

    வில்லாலே உயிர்கொல்வார்
    வீரத்தால் நிலம்கொள்வார்
    பல்கலையால் புகழ்கொள்வார்
    பணக்காரர் பொருள்கொள்வார்
    சொல்லாலே உயிர்தரவே
    சுடராக வடிவெடுத்தேன்
    எல்லோரும் பார்த்திடவே
    என்னெதிரே வா உடனே!

    இசையோடு தமிழ்க்கவிதை
    இதனோடே என்வாழ்க்கை
    வசையோடு பலமனிதர்
    வாழாமற் சாகின்றார்
    நசையின்றி எல்லோரும்
    நலம்வாழப் பாடுகிறேன்
    எசைப் பாட்டு நீ பாட
    என்னெதிரே வா உடனே!

    உள்ளத்தே மிகத்தெளிவாய்
    உலகத்தே மின்னல்களாய்
    வெள்ளத்தே மிகத்துள்ளி
    வெள்ளிவெட்டும் கெண்டைகளாய்
    கள்ளமு கம்காட்டிக்
    கண்சிமிட்டும் மாகாளி!
    எள்ளியது போதுமடி
    என்னெதிரே வா உடனே!

     

    Share