பாதமலர் போதும்
இசைக்கவி ரமணன்
மலருக்குத் தேனழகோ
மணமழகோ நிறமழகோ? என்
மனதுக்கு நீயன்றி
மற்றழகொன் றேது?
மறையெல்லாம் சொன்னாலும்
மற்றொருசொல் லேது?
சிலருக்கே திருவுண்டு
சிலருக்கே அறிவுண்டு
சிலருக்கோ நீசிரித்துச்
சேர்ந்த அருளுண்டு
சிறுபிள்ளை என்னெஞ்சில்
நீதானே உண்டு!
நாடகமாய் இவ்வையம்
பூடகமாய் மனிதமனம்
கூடெங்கும் நுழைந்துமலர்
சூடுமுன் கரத்தால், உன்னைத்
தேடுவதே இவரிங்கே
ஆடுவதும் பாடுவதும்!
தேடுவோர்கள் தேட, பதம்
சூடுவோர்கள் சூட, நிதம்
வாடுவோர்கள் வரிசையிலென்
வாழ்க்கை ஆடுதே! இதில்
ஏடும் இசையும் உன் திறவா
வாசலானதே!
போதுமடி அம்மா உன்
பொல்லாப்பு! இக்கணமே
மீதமின்றி மிச்சமின்றி
என்னைத் தீர்த்திடு! உன்
பாதமலர் போதுமதில்
பரிந்து சேர்த்திடு!