Category: இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்

  • குருவெண்பா

     

    இசைக்கவி ரமணன்

    1456219253-6062

     

    சிவனே குருவெனச் செப்பிய ஆசான்

    அவனே சிவனென் றறிந்தேன் – தவமே

    அறியா எனையும் அருளால் அணைத்தான்

    வறியன் அடைந்ததே வாழ்வு

    குருவே வெயிலாய்க் கொளுத்தி உறிஞ்சி

    குருவே மழையாய்ப் பொழிவார் – குருவே

    கரத்தைக் கொடுத்துக் கலத்தில் இருத்திக்

    கரையில் இறக்குவார் காண்!

    குருவின் திருவடியைக் கூடுவதும், அன்னார்

    அருளே கதியென் றடங்கி – இருப்பதுமே

    நல்வழி நம்வழி நம்பிக்கை யானவழி

    சொல்வ தறிந்ததிந்தச் சொல் !

    நிலையற்ற வாழ்வில் நிலையான தொன்றே

    கலைகின்ற காட்சி கலையாத தொன்றே

    குலையாமல் காக்கும் குருதேவன் பாதம்

    அலைபாயும் நெஞ்சே அறி

    பரமகுரு வந்தான்! பரிபக்கு வத்தைக்

    கரமதனில் தந்தான்! கலந்தான்! சரமாய்க்

    கவிதைமிகு கானங்கள் நான்பாட வைத்தான்

    செவியாரக் கேட்டான் சிரித்து

    விட்டுவிட்டேன் ஐயா நான் விட்டுவிட்டேன்; தாங்கவில்லை

    பட்டுவிட்டேன் ஐயா என் பாழும் விதியாலே

    தொட்டுவிட்டாய், பின்னே தொடர்ந்துவந்தாய்; போதவில்லை

    சுட்டால்தான் கிட்டும் சுகம்

    உணர்வெலாம் ஒற்றை உயிர்முனையில் கூடித்

    தணலாய்ச் சுடுதே தலைவா! அணைப்பாயா?

    இல்லை அணைப்பாயா? என்குருவே! என்னுயிரே!

    தொல்லைகள் நீங்கத் தொடு

    அன்பே குருதேவா! ஆருயிரே! ஒன்றுமில்லா

    என்மீதும் அன்பாய் இரைக்கும் கருணையென்னே!

    நன்றியன்றி வேறு நலமேதும் என்னிலில்லை

    புன்மைகள் இன்னமும் போயொழிய வேயில்லை

    சென்மத்தைக் காலமென்னும் செல்லரிக்க, அவ்வப்போ(து)

    உன்மத்தம் ஏறி உயிர்சிலிர்க்க, ஓர்கணத்தே

    கன்மம் அழிந்ததுபோல் காண, மறுகணத்தே

    கன்மமே என்விதியாய்க் கட்டி எனைஇறுக்க

    அன்பே!நான் காணும் அனுபவங்கள் யாவினுள்ளும்

    நின்றொலிக்கும் ஆதார நாதவொலி நீயன்றோ!

    உன்முகம் உன்ஸ்வாசம் உன்நினைவு உன்கனவு

    என்றோர் சுருதியில் எல்லாம் நடக்கிறது

    என்கடன் என்தவறு என்சரி என்பொறுப்பு

    என்றேதான் ஏதும் எனக்குண்டோ இங்கினிமேல்?

    நீயே பொறுப்பு நினதே விருப்பு வெறுப்பு, அன்றே

    தீயாய் வினையை எரித்தென்றன் சித்தத்

    திரிமுனையில்

    நீயன்றோ தீயாய் நிமிர்ந்து சுடரலானாய்?

    நினைவின் நிழல்கள் நிசமல்ல என்று

    நினைவு படுத்தி நெருங்கியது நீதானே?

    என்னை முடிப்பதாய் என்றைக்கோ சொன்னாயே?

    உன்முன்னில் ஓர்நாள் உயிருதற நின்றேனே

    அன்றே முடிந்ததாய் மற்றொருநாள் சொன்னாயே?

    என்னாயிற் றப்பா? எதுவும் தவறியதா?

    சின்ன மறதியா? செப்பு! சிரிக்காதே!

    ஏதும் இயலாத ஏழைநான் என்பதிலே

    பேதமின்றி உன்முன்பு பிள்ளையாய் நிற்கின்றேன்

    போதும்வா! உன்னில் பொசுக்கிவிடு! வேறிங்கே

    ஏதும்நான் கோரேன் இனி

    Share
  • கண்ணே! தமிழ் வாணீ!

    Gnana_Saraswathi

    அமிழ்தத்வனி மதுரத்வனி அமரத்வனி அருள்க

    அழகுத் தமிழ் நதியில்முழு நிலவாய் நீ எழுக

    தமிழ்போ லெதும் இலையென்பதைத் தரையெங்கணும் மொழிக! ஒரு

    தமிழ்ச் சொல்லினில் தட மேவிடும் தடையாவையும் கழிக!

     

    இதயத்தினில் நீயே சதம் இன்பத் தமிழ் வாணி

    இருவேளையும் இடையின்றி நீ எனையாள்கிற ராணி

    கதையெத்தனை நிதம்மாறிடும் ககனத் துலைநடுவே

    கனலெற்றிடும் புனலாயெழும் கவிதையெனும் கேணி

     

    வேதம் மிகத் தேடும் பெரு விந்தை மிகும் தாய் நீ

    வீதித் திரு மூலைதனில் விளையாடிடும் சேய்நீ

    பேதம்செயும் நீதர்தமைப் பின்னும் கொடும் பேய்நீ

    பேதைக்கொரு வாழ்வைத்தரச் சாதம்பிசைந் தாய்நீ

     

    உச்சந்தலை ஊசித்துளை தொட்டுக் கன லாடும், அதை

    உள்ளத் தினி லோடும் பெரு வெள்ளத் துளி சாடும்

    மெச்சத் தகு பண்ணை ஒரு மின்னற் சொல் சூடும்

    மேவும் நிலை தானே ஒரு மரணத்தினில் ஜனனம்!

     

    அன்பே நீ வாழ்க! உன் அழகுப் பதம் வாழ்க!

    அருளே! என் அமிழ்தே! என் அம்மா! நீ வாழ்க!

    இன்பத் தினுக் கப்பா லிசைக் கவியா யெனைவைத்தாய்

    இதைமீ றிடும் நிலை இல்லயென் றுயிரைப் புளகித்தாய்

     

    கண்ணே! தமிழ் வாணீ! உன் காலே கதி கொண்டேன்

    கவிதைக் கனல் தனில் மூழ்கிநான் கர்மங்களை விண்டேன்

    மண்ணை விண் ணாக்கும் பெரும் மாயம் தமிழ் செய்யும்,

    கலை மகளே! பர சுகமே! எக் காலமும் நான் உனதே!

     

    29.09.2017 / வெள்ளி / காலை 9.04

    (படம் : ஸ்ரீ ஞானசரஸ்வதி ஆலயம், குன்றக்குடி)

    Share
  • வாணிக்கு வணக்கம்

    koothanur-saraswathi-temple-tamilnadu

     

    உன்
    வீணையே என் நெஞ்சமே, மின்
    விரல்கள் பலவிதம் கொஞ்சுமே!
    உன்
    ஆணையே ஸ்வர மாகுமே, அவை
    அண்டம் தாண்டியும் விஞ்சுமே!
    முகில்
    ஏணையில் வெண் ணிலவுபோல், உயிர்
    எங்கும் களியே மிஞ்சுமே!
    என்
    ராணியே! உயிர் வாணியே! நீ
    ரகசி யங்களின் கேணியே!

    பத்து விரல்களின் பதை பதைப்பினைப்
    பார்த்தவன் கதி என்னவோ!
    முத்துத் தமிழினில் மூண்ட கவிஞன்முன்
    முடிந்ததே விதி என்கவோ!
    சத்த மடங்கிய சாந்தி வாசலில்
    சன்ன மாயொலி மேவுதே!
    எத்த னைவிதம் செப்பிச் சோர்கிறேன்!
    என்றன் அனுபவம் மீறுதே!

    செந்த மிழ்க்கவி என்ப தைவிட
    வேறு பதவிகள் இல்லையே!
    சந்த சங்கீத சரச நேரமே
    பரவ சங்களின் எல்லையே!
    சொந்த பந்தங்கள் சோழி விசிறிடும்
    சூழ்ச்சிகள் மிகத் தொல்லையே
    உந்தன் சொந்தமே உணர்வின் பந்தமே
    உயிரைத் தந்தேனென் வாணியே!

    நோக்க மற்றவோர் நோக்கில் மூண்டுமின்
    புன்ன கைசெயும் சரஸ்வதீ!
    வாக்கி யங்களை வாச கங்களாய்
    மாற்றி யருளுமா தங்கிநீ!
    ஊக்கி உந்திடும் மெளனம்நீ! என்றன்
    உள்ளின் உள்ளிலே முரசம்நீ!
    தேக்க மின்றியே தெளும்ப லின்றியே
    நீக்க மற்றதோர் தெளிவுநீ!

    கானம் கவிதையாய் கவிதை கானமாய்
    கண்ணி மைப்பினில் அருளுவாய்!
    மோன மடுவிலொரு மொக்க விழ்த்ததன்
    மோடி யில்வந்து மூளுவாய்!
    ஆன வரையில்நான் அலசிப் பார்க்கிறேன்
    அன்னை உன்னைப்போல் இல்லையே!
    ஏனம்நான்! அமிழ்த பானம்நீ! என்றும்
    ஏந்தி மகிழ்ந்திடும் பிள்ளையே!

    29.09.2017 / வெள்ளி / காலை 7.14

    Share
  • நவராத்திரி 11

    இசைக்கவி ரமணன்

    73369037
    வெற்றி வெற்றி வெற்றி என்று கூவு! இந்த’
    விண்ணும் போத வில்லையென்று தாவு!
    பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு
    பராசக்தி வந்துநிற்பாள் பாரு!
    முற்றும்யாவும் தீர்ந்துவிட்ட போது – நெஞ்சில்
    முத்துத்தமிழ்க் கவிதையாய் முளைப்பாள்! அந்த
    ஒற்றைமினுக்கிக் காலில்நெஞ்சைப் போடு! வந்த
    ஊக்கத்திலே புல்நுனியில் ஆடு!

    என்மனத்தைச் சந்தமய மாக்கி, அதில்
    ஏகாந்தத் தேன்குளத்தைத் தேக்கி, கொல்லும்
    புன்மையின் நினைவுகூடப் போக்கி, நிதமும்
    புதிய புதிய நிலைகளிலே ஊக்கி,
    மின்னல்களால் என்னுயிரைத் தாக்கி, ஒரு
    மென்னகையால் மீண்டுமதைத் தூக்கி, இவள்
    என்னவென்ன செய்திடுவாள் கண்ணே!
    என்றுமிவட் கேதமிழின் பண்ணே!

    கருவிலருள் தந்ததுவோ கருணை, சந்தைக்
    கடையில் அலைய வைத்ததுவோ கொடுமை
    குருவைக் கண்ணில் காட்டியதோ அருமை, அவர்
    கூடத் தெருவில் நடந்ததுதான் பெருமை, இன்று
    மருமமெல்லாம் தீர்ந்து வந்த வெறுமை, இதில்
    மாற்றிலாமல் தேவையொன்று பொறுமை
    அருகிலென்றும் நிற்பதுன்றன் கடமை, எதையும்
    அதிரடியாய்க் கேட்பதென்றன் உரிமை!

    ’இக்கணமே நாட்டின்நிலை மாற்று! எம்மை
    இக்கலியின் கொடுமைதாண்டி ஏற்று
    மக்களெல்லாம் தக்கவர்க ளாகி, நல்ல
    மாண்புடையோர் கையில் ஆட்சி மாற்று
    வக்கரித்துக் கொள்ளையடித் தோரை, நினைந்து
    வாடவாட நரகத்திலே பூட்டு!’ என்று
    சக்திபரா சக்தியென்று சாற்று! அந்த
    சாம்பவியின் சாகசத்தைப் போற்று!

    பாரதத்தின் தேவியில்லை சக்தி! இந்த
    பாரதமே சக்தி! பராசக்தி!
    பாரதமே தேவியென்று கொண்டு, இன்னும்
    பலரும் நன்கு புரிகின்றார் தொண்டு, அந்த
    மாரதர்கள் முக்திபெறுவ துறுதி, இதில்
    மறைந்திருக்கும் நுண்மையினைக் கருதி, நமது
    பாரதமே பராசக்தி என்று, ஒரு
    பரவசத்தை அவளுக்கு நாம் தருவோம்!

    Share
  • நவராத்திரி 10

    இசைக்கவி ரமணன்

    f05b0d62a058d1566368fe0ba06abfeb

    சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும்
    நில்லா திமைக்கின்ற சுந்தரீ!
    முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே
    மெளனத்தை சுவாசிக்கும் அந்தரீ!
    எல்லைகள் இல்லா நிரந்தரீ! நெஞ்சுள்
    எங்கோ த்வனிக்கின்ற மந்த்ரிணீ!
    தொல்லைகள் நீக்கியெனைத் தொய்வின்றித் தூக்கவே
    தோட்டத்தில் பாடிடும் பைங்கிளீ!

    வற்றாத ஊற்றையே வார்க்கிறாய்! தக்க
    வார்த்தையே தருணத்தில் சேர்க்கிறாய்!
    முற்றாத புத்தியின் முன்னிலும், கட்டி
    முக்தியை வெண்ணையாய் வைக்கிறாய்!
    பற்றேது மற்றவன் ஆக்குவாய், தெருவில்
    படும்பா டனைத்தையும் பார்க்கிறாய்!
    கற்றென்றும் வாராத கவிதையெனும் விந்தையைக்
    கலைவாணி தந்துன்னுள் ஈர்க்கிறாய்!

    செல்வந்தர் பலபேரைக் கண்டனம், கலை
    தேர்ந்தவர் சிலரையும் கண்டனம்
    புல்லர்புகழ் பெறுவதைக் கண்டனம், ஏதும்
    புரியா விமர்சகரைக் கண்டனம்
    நல்லவர் நலிவதும் கண்டனம், யார்க்கும்
    நல்லசிரிப் பில்லையதைக் கண்டனம், என்னை
    வல்லமை தரும்தமிழைப் பாடுமொரு கவிஞனாய்
    வாழ்வித்த தாயே என் வந்தனம்!

    உயிரெனும் உலையூதும் போதுன் – தோளில்
    ஒருகரம் வைத்துற்றுப் பார்க்கிறேன் – உலையில்
    உயிரைநீ வாட்டிடும் போதுன் – தாளில்
    போதுமடி என்றுவா திடுகிறேன்
    உயிரைஉய் விக்கும் போதுன் – முன்னில்
    ஓங்கியுன் புகழ்பாடு கின்றேன்
    உயிருக்குள் உயிராக சேய்வயிறில் தாயாக
    உற்றகலை வாணியே வந்தனம்!

    வாணிநீ! தேனிநீ! வற்றாத கேணிநீ!
    வார்த்தைகளின் தாயகம்!
    ராணிநீ! அறியாத ரகசியம் நீ அங்கு
    ராகங்களின் சேவகம்!
    மாணிக்க வீணையுன் மார்பில் படும்போது
    மனமெங்கும் பூங்காவனம்!
    தோணித் துறைமூலை பொன்னந்தி மாலையெதிர்
    தோன்றும்தாயே வந்தனம்!

    27.09.2017 / புதன் / காலை 9.21

    Share
  • நவராத்திரி 09

    இசைக்கவி ரமணன்

     

    Navaratri

    நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம்
    நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள்
    பகராமல் எதையும்நான் செய்ததில்லை,
    பகிராமல் எதையும்நான் மறைத்ததில்லை
    சுகமென்றும் துயரென்றும் வருவதெல்லாம், சென்று
    சொல்லாமல் ஒருநாளும் சென்றதில்லை
    நகர்ந்துவிட்டாள் ஏனோ தெரியவில்லை! தவறு
    நான்புதிதாய் என்செய்தேன் புரியவில்லை!

    கணந்தோறும் எந்நலம் கேட்கின்றவள், நித்தம்
    கண்ணார நேசத்தைப் பெய்கின்றவள், என்னைப்
    பிணமாகப் பார்க்கின்ற பொருளென்னவோ? இந்தப்
    பிச்சியின் நெஞ்சின் கருத்தென்னவோ?
    ரணமாக உயிரெலாம் குடைகின்றதே, பல
    ராகங்கள் ஸ்ருதியின்றி உடைகின்றதே!
    மணமாலை பிணமாலை ஆகலாமா? தாய்
    மகனைப்போய்ப் பகையென்று தள்ளலாமா?

    கனவிலே நிலவுமுகம் காட்டுகின்றாள், காதல்
    கண்களால் இன்னும்தா லாட்டுகின்றாள்
    நனவிலோ தொலைவையே காட்டுகின்றாள்
    நான்ராணி என்பதை நாட்டுகின்றாள்
    மனதினை ஈயாக ஓட்டுகின்றாள், எனை
    மல்லாந்த ஆமையாய் வாட்டுகின்றாள்
    தினையளவும் என்மீதில் அன்பில்லையோ?
    சென்றகதை மாற்றுவதும் வன்பில்லையோ?

    அன்னையே! ஈதென்ன பரிசோதனை? காயும்
    அனலிலே மஞ்சமாய் ஒருவேதனை?
    வன்கொடுமை யால்வீழ்ந்த ஊமையாக, நான்
    வாடநீ பார்ப்பதா உன் சாதனை?
    உன்னில்நான் என்னில்நீ உண்மையன்றோ? அதை
    உணரா திருக்கின்ற பெண்மை நன்றோ?
    என்றென்றும் நீயென்றன் உயிரல்லவோ? நான் உன்
    அன்பிலே வாழ்கின்ற பயிரல்லவோ?

    போதுமம் மாயிந்தப் புதிய வேடம், பசும்
    புல்லுக்குத் தீயைப் புகட்டும் பாடம்
    தீதுநன் மையெலாம் தீர்த்தபின்பும், நான்
    தீரா திருப்பதில் என்ன லாபம்?
    ஆதரவுக் கேங்கிடும் அல்லிகண்டு, நிலவு
    அசிங்கமென் றேவிலகிச் செல்வதுண்டோ?
    காதலே யாவுமெனக் கற்றுத்தந்து, பின்
    காலால் மிதிக்கின்ற காதலென்னே!

    கன்னங் கருத்தசிறு பிள்ளையாக, மொத்த
    ககனம் அதிர்ந்திடும் காளியாக, இடை
    பின்னி நடக்கின்ற வஞ்சியாக,கிழப்
    பீடிகை போட்டிடும் பிச்சியாக
    என்னென்ன வடிவத்தில் வந்துநிற்பாய்! சுகம்
    எத்தனை வண்ணத்தில் தந்துநிற்பாய்!
    கன்னம் ஈரம்கண்டு காலமாச்சே! நீ
    கட்டித் தழுவினால் கவலை போச்சே!

    26.09.17 / செவ்வாய்

    Share
  • நவராத்திரி (8)

    இசைக்கவி ரமணன்

     

    hqdefault

    நீ கானம் நீ மோனம் நீயே மெளனம்

    நீ தென்றல் நீ சூறை நீயே
    அமைதி

    தேவை தருவதும் நீ
    அதைத்
    தீர்த்து வைப்பதும் நீ
    ஆசை தருவதும் நீ
    மிக மிக
    அலைய வைப்பதும் நீ

    தேவை யாவும் தீர்ந்த பின்னும்
    தேட வைப்பது நீ

    யாவும் ஒன்றென அறிந்திடும் வரை
    எதிரில் இருந்தும் ஏங்க வைப்பது நீ

    கன்னல் பிழிந்தே சாறு தருவாய்

    காற்றைப் பிழிந்தே மாரி பொழிவாய்

    மின்னல் பிழிந்தே சொல்லை எடுப்பாய்

    உருவைப் பிழிந்தே அருவைத் தருவாய்

    என்னைப் பிழிந்தாய் என்னவோ!
    அது
    உன்னைப் பார்த்திடும் எண்ணமோ!

    உன்னில் நானும் என்னில் நீயும்
    என்றும் ஒன்றாய் நின்ற துன்னருள் (நீ)

    25.09.2017 / திங்கள் 

     

    Share
  • நவராத்திரி 07

    abhirami-1

     

    நானிருக்கின்றேன்! ஓஹோ!
    நானிருக்கின்றேன்! இந்த
    வானும் வெளியும் அதையும் தாண்டி
    வளருகின்ற மர்மங்களும்
    தேனும் மலரும் தெப்பக் குளமும்
    தேனடையும் தெருவின் முனையும்
    ஊனும் உயிரும் அதிர அதிர
    உரக்க உரக்கக் கூவுகிறேன்

    நானிருக்கின்றேன்! ஓஹோ!
    நானிருக்கின்றேன்!

    அமைதி என்பதா? ஆ
    னந்த மென்பதா? இந்த
    அதிச யங்களின் அதிபதியாய்
    ஆசையற்ற அரசனாய்
    துதிகள் பாடும் அடியவனாய்
    துதிகள் ஏற்கும் தெய்வமாய்
    விதியின் வசத்தில் வெறும் சருகாய்
    விதிகள் பதியும் திருவடியாய்
    நானிருக்கின்றேன்! ஓஹோ!
    நானிருக்கின்றேன்!

    எங்கு நிற்கிறேன்? நான்
    எதனைப் பார்க்கிறேன்?
    பொங்கும் கடலில் ஒருதிவலை
    புளகமுற்றுப் பூத்தெழுந்து
    தங்க வானைத் தடவி மயக்கித்
    தரை யிறக்கித் தழுவிக் குலவிச்
    சிங்க நாதம் செய்து பிடரி
    சிலிர்த்துச் சின்னச் சுடரில் ஒடுங்கி
    பொங்கும் கடலில் ரகசியத்தைப்
    பொத்திச் சிரிக்கும் திவலையாக
    நானிருக்கின்றேன்! ஓஹோ!
    நானிருக்கின்றேன்!

    தக்கையாக இருந்து நீலக்
    கடலில் மிதக்கிறேன்
    தரங்கமாக இருந்து தரையைத்
    தாங்கி மகிழ்கிறேன்
    சக்கையாகக் கிடந்து பின்னும்
    சாற்றைப் பார்க்கிறேன்
    சக்தி யாக இருந்து பரா
    சக்தி என்கிறேன்!

    அதிசயத்தின் உச்சமன்றோ
    நானிருப்பது!
    ஆனந்த உன்னதமே
    அவளைப் பார்ப்பது!
    கதிகளிலே அரிது தமிழ்க்
    கவிஞனென்பது
    களிப்பினிலே லஹரி அதையும்
    கவிதை சொல்வது!

    அச்சமின்றிச் சொல்லுகிறேன்
    அன்னை சக்தி நான்
    அப்படியே கூவுகிறேன்
    அவளின் பிள்ளை நான்
    மிச்சமின்றித் தீர்ந்தபோதும்
    மிஞ்சிடுவேன் நான்
    மிஞ்சி அணிந்த வஞ்சி பதம்
    மேவிடுவேன் நான்!

    அவளைப் பாட அவளி லிருந்து
    அகிலம் வந்தேன் நான்
    ஆனந்தத் தலைநகரம்
    அமைதி யாவும் நான்
    கவிதையினால் கவலை தீர்க்கும்
    காளி காளி நான்
    காணவொண்ணாக் காளியவள்
    கண்களன்றோ நான்!
    நானிருக்கின்றேன்! ஓஹோ!
    நானிருக்கின்றேன்!

    25.09.2017 / திங்கள் / காலை 7.55

    Share
  • நவராத்திரி 06

    இசைக்கவி ரமணன்

    c740b994503ba63b446525f69a984b73

    வாலைக் குமரியென வந்துநிற்கும் பேரழகை
    சாலையிற் கண்டதுண்டு சந்நிதியில் பார்த்ததுண்டு
    முலைப் பிறையில் முணுமுணுக்கும் தீபத்துக்
    கோலச் சுடர்முனையில் கூடிச் சிலிர்த்ததுண்டு
    வேலைநடு வேவுயிரை வெட்டிப் பறிக்குமின்னின்
    நீல விளிம்பில் நிலைகுலைந்து போனதுண்டு
    சாலையிலே தூலம் கரைந்து மிதக்கையிலே
    பாலை நிகர்த்தநகை வாசம் நுகர்ந்ததுண்டு
    கோலத் தமிழ்நமக்குக் கூடி இருந்தாலும்
    ஏலுமோ இந்த எழிலாள் புதிர்விளக்க?

    இன்றுந்தான் காலை எதிர்ப்பட்டாள்; எப்படியாம்?
    நன்று துயில்நீங்கி நானமர்ந்து மந்திரத்து
    மின்பருகிக் கொண்டிருந்த விந்தைக் கணமொன்றில்
    நின்றெதிரே மாலை நிமிண்டுகிறாள்! ஏதுக்காம்?
    ’உன்னத் தலைப்படுதல் உன்வேலை; உள்ளிருந்தே
    எண்ணுவதோ என்வேலை’ என்கின்றாள்; ’நாமத்தை
    எண்ணயெண்ண எண்ணங்கள் வண்ணமய மாகியிரு
    கண்ணிடையே ஒற்றைக் கனல்புடைத்தல் காணெ’ன்றாள்

    வட்டக் கரியவிழி வண்ணச் சதங்கைக்கால்
    அட்டக் கருப்பி அதிலோர் இளஞ்சாம்பல்
    கிட்ட! மிகக்கிட்டக் கீழ்மூச்சின் வெம்மையினைத்
    தொட்டே சுவைத்திடலாம் போலே மிகவணுக்கம்!
    எட்டேநாள் என்றாள் எவரறிவார் தாய்மழலை?
    கட்டெனக்குப் பாட்டென்றாள்; கட்டிவிட்டேன்; என்னுயிரை
    விட்டுவிட்டேன் கால்கள் விரலிடையில்; ஒன்றுசொல்வேன்
    தொட்டவளைத் தொட்டேன் சுகம்!

    24.09.2017 / ஞாயிறு / காலை 6.18

    Share
  • நவராத்திரி 05 (பாடல்)

    இசைக்கவி ரமணன்

    NAVA1
    உச்ச மானத்துலே வச்ச நேரத்துலே
    ஊருக்கெல்லாம் வெளக்கா உசுருக்கு உசுரா, அங்க
    ஒய்யாரி ஆடுற ஓரத் தலப்பா
    ஓடை நெளிகையிலே, துள்ளி
    வெள்ளி மினுக்குற கெண்டை இடுப்புல
    வெட்டும் மின்னல் அழகா?

    நீ அம்பலத்து அழகா? இல்ல
    அந்தரங்க நெசமா?

    கள்ளிச் செடிப்பழமே! அடி காசிப் படித்துறையே!
    முள்ளில் எழும் முனையே! அந்த முனையெழும் சுனையே! ஒரு
    சொல்லுக்குள்ள வந்து கண்ணச் சிமிட்டி
    சூனியம் ஆக்குறியே! அந்தச்
    சூனியத்துக்குள்ள சோழி விசிறி
    மானியங் கேக்குறியே, உசுர மானியங் கேக்குறியே!
    நீ வாழ அழெக்கிறியா? இல்ல
    வம்புக் கிழுக்குறியா?

    காலத் திருவோடு, என் காலும் தெருவோடு
    கரை ஒரு கோடு கல கலக்குது ஓடு, இங்க
    பாலமுமில்லே படகுமில்லே பாயுது காட்டாறு, உயிர்
    பதறுது காலோடு, அங்க
    பட்டுன்னு வெட்டுற மின்னலிலே ஒரு
    பட்டைத் திருநீறு, உசுரு
    மொட்டை மரமாச்சு
    இதில் எந்தக் கதை நெசமோ? அதில்
    எந்த முடிவழகோ?

     

    Share
  • நவராத்திரி – 04

    இசைக்கவி ரமணன்

     

    IMG-20170921-WA0042

     

    பாதையாய்த் தோன்றிப் பயணமாய் நீள்கிறாள்

    பக்கத் துணையாய்ப் பரிந்து வருகிறாள்

    ஆதரவில் அன்னையாய், கண்டிப்பில் தந்தையாய்

    அக்குவே றாணிவேறாய் அத்தனையும் ஆய்கிறாள்

    காதலே தேகமாய்க் கட்டழகாய், நெஞ்சின்

    கவனத்தை ஈர்த்துக் கரத்தில் முகர்கிறாள்

    சோதனை செய்து புடம்போட்டுக் காய்ச்சுவாள்

    சுவடு துளியுமின்றிச் சுத்தமாய் நீக்கிடுவாள்

     

    நெற்றித் திரையிலோ நெஞ்சிலோ நேர்வருவாள்

    நேரத்தைக் காலத்துள் நேரே மறைத்திடுவாள்

    சற்றும் அசையாமல் சாயாமல் பார்த்திடுவாள்

    சாரத்தைக் காட்டிச் சலனத்தைச் சாந்திசெய்து

    உற்றுற் றவள்விழி ஊடுருவும் போதில்

    உயிர்போகும்; போனவுயிர் உள்நுழையும்; வந்தவுயிர்

    பெற்ற அனுபவத்தைப் பேணமுடி யாமல்

    பெயர்க்க முயன்று பிழைபோல் விழுகையிலே

    வெற்றிச்சங் கூதிடுவாள்! வெள்ளித்தண் டைகிலுங்க

    வேதவடி வாளன்று வீதியிலே தென்படுவாள்

     

    என்னவித மெல்லாம் எனக்கருள் செய்கின்றாள்!

    ஏழைக் குடிலை எழில்ராணி ஆள்கின்றாள்

    மின்னல் களையோலைக் கீற்றாய்ப் புனைகின்றாள்

    வீழும் நிலவொளியில் விந்தை வனைகின்றாள்

    அன்னை எனைமுழுதாய் ஆட்கொண்டாள்; அந்தரங்க

    அம்பலத்தில் தேவியென ஆழ அமர்ந்துகொண்டாள்

    சொன்ன விதம்கொஞ்சம்; சொல்லாத தேமிஞ்சும்

    நம்புவ தொன்றே நலம்!

     

    Share
  • நவராத்திரி 03 (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    goddess_saraswati_seated_on_her_mount_or98

    வாக்கிலொளி மின்னவைத்து
    வாழ்விலிருள் பின்னவைத்து
    வக்கணையாய் நீ அடிக்கும் கூத்து, இதை
    வாழ்த்திடுவர் தூற்றிடுவர் பார்த்து, அம்மா

    போக்கிடமே தெரியாமல்
    போகும்நதி போலே என்னைப்
    புரட்டிப் புரட்டி எடுக்கின்றாய், பொருள்
    புரியவில்லை சிரிக்கின்றாய்

    பார்க்குமிடம் அத்தனையும்
    நீக்கமற நீயிருந்தும்
    ஏக்கமெனும் பேய்க்கெனை நேர்ந்தாயே! உயிரில்
    எறும்பென எங்கோ ஊர்ந்தாயே! அம்மா

    சீக்கிரமே வந்துநில்லுன்
    சித்திரத்துப் புன்னகையைச்
    செந்தமிழின் தேன்குடத்தில் தேக்கி, இசைப்பேன்
    சிந்தனை அபஸ்வரத்தை நீக்கி!

    எந்தவினை என்றன்வினை
    எந்தவிதி என்றன்விதி
    இந்தப் பொய்க்கு இத்தனை அலங்காரம்! அம்மா
    எவரிடம் உன்றன் அகங்காரம்? அம்மா

    சொந்தமென நாமிருவர்
    சொல்லிசொல்லி முத்தமிட்ட
    அந்தக்கணம் ஒன்று மட்டும் நிசமே! அந்த
    அன்பில் ஒருவர் ஒருவர் வசமே!

    சந்தனத்து நந்தவனம்
    சக்தியுன்னைக் கொண்டமனம்
    சாவுமொரு ஜீவகளை பூணும், பூமி
    சார்ந்திடாத மேன்மைபல தோணும்

    சந்தையிலே வெய்யிலிலே
    சாக்கடையின் ஓரத்திலே
    தந்ததென்ன வோஇந்தப் பாடம்? அம்மா
    தாங்கவில்லையே விந்தை வேடம்!

    என்னபந்தம் இந்தபந்தம்
    என்னசொந்தம் இந்தசொந்தம்
    ஏழையென்றும் தூங்கியதும் உண்டோ? நீ
    எனக்கென ஏங்கியதும் உண்டோ?

    மின்னல்களை மீட்டுமுன்றன்
    மென்விரலில் என்றன்மனம்
    மீண்டும்மீண்டும் கொள்ளை அடிக்கின்றாய், ஏனோ
    மிரண்டவனைப் போட்டு வதைக்கின்றாய்

    நட்டநடு நெஞ்சுக்குள்ளே
    கொட்டக்கொட்ட விழித்திருக்கும்
    நாயகியுன் ஒற்றைவிழி என்றும், அதை
    நாடும்பொழு தெல்லாமதில் குன்றும்! அந்தக்

    கொட்டங்களும் போதும் இந்தக்
    கொட்டகையும் போதும், அங்கே
    கொட்டிக் கிடக்கின்ற சோழியாடி, நாம்
    கொஞ்சிமகிழ் வோம்தமிழில் பாடி!


    20.09.2017 / வியாழன் / காலை 7.07

     

    Share
  • உலையுள்ளே உனைக்கண்டேன் – நவராத்திரி கவிதை (2)

    இசைக்கவி ரமணன்

     

    உலையுள்ளே உனைக்கண்டேன்

    wpe7

    உற்ற பிறப்பும் உறுதுயரும் இன்பமும்
    பெற்றவளே உன்றன் பிரசாதம்! மற்று
    வினையே தெனக்கு? விதியே தெனக்கு?
    உனையேநான் என்றேன் உணர்.

    உணர்வின் முனையின் துளியாய்க் கனலும்
    குணமற்ற விந்தைக் குழந்தாய்! ரணமான
    நெஞ்சைத் தடவி நினைவைக் குலவியதைப்
    பஞ்சாக்கித் தீயாய்ப் பருகு.

    பருகப் பெருகும் பரதாகம்! நெஞ்சம்
    உருக வளரும் விரகம் – ஒருகரம்
    மெள்ளத் தலைகோதும் வேளையில் அவ்வின்பம்
    கொள்ளத்தான் ஒண்ணுமோ கூறு

    கூறும் மொழியும் குறிக்கும் பொருளுமதில்
    ஊறும் சுவையும் ஒருத்தியே! மாறும்
    உலகினில் மாறாத உண்மையே! ஏனோ
    கலகத்தி லேஇமைப்பாய் கண்

    கண்ணான கண்ணன்றோ! கட்டழகுப் பெண்ணன்றோ!
    மண்ணான வாழ்வில் மலரன்றோ! எண்ணாத
    எண்ணத்தின் பின்னிருக்கும் ஏகாந்தம் தானன்றோ!
    வண்ணத்தின் பின்னிருக்கும் வான்.

    வானயர்ந்து போனாலும் நானயர்ந்து போகாமல்
    தேனயரும் தித்திப்புத் தீந்தமிழில் – மானேயுன்
    போக்கேது மற்ற புதிர்நடையை, என்னிசை
    வாக்கில் வடித்திடுவேன் வா!

    வாவென்றால் வந்திடுவாய்; வந்தென்முன் நின்றிடுவாய்
    போவென்று சொல்லாதே! போகாதே! காவென்று
    காலில் விழுந்தவனைக் கையால் எடுத்துடனே
    காலில் அழுத்தியெனைக் கா.

    காலத்தே நேரமெனக் கண்பொத்தி நீயாடும்
    ஜாலத்தை என்னென்பேன் சாம்பவியே! ஞாலத்தே
    தூலத்தை வைத்துத் துளியொளியாய் உள்நின்ற
    கோலத்தைப் பாடுவதே சொல்.

    சொல்வேண்டும்! தக்கபடிச் சோழி விழவேண்டும்!
    நில்லென்றால் எல்லாமும் நிற்கவேண்டும் – செல்லென்றால்
    மானுடர் துன்பமெல்லாம் மாயமாய் நீங்கவேண்டும்
    ஊனுள்ளே மந்திரச்சொல் ஊற்று.

    ஊற்று பெருகட்டும்! உள்ளம் உருகட்டும்!
    மாற்றத்தின் மத்தியிலே மாறாமல் – ஏற்றம்
    நிலைக்கட்டும்! ஏலா தலைபாயும் நெஞ்ச
    உலையுள் உனைக்கண்டேன் உற்று!

    Share
  • வருவாளோ? – நவராத்திரிப்பாடல்கள் (1)

     

    gangai amman santhavaasal

    கங்கைக் கரையின் ஓரத்தில், ஒரு
    காலை புலரும் நேரத்தில்
    கன்னங் கரிய சின்னஞ் சிறுமி
    காலை இணைத்தென் முன்நின்றாள்
    சிங்கம் பிடரி சிலிர்த்ததுபோல்
    செங்கதிர் எதிரே பளபளக்க
    சேவடி ஈரம் என்விழி ஈரம்
    சேர்ந்த கணத்தினை அவளேற்றாள்
    சிட்டுக் குருவிச் சிறகு விரலால்
    செம்மைத் திலகம் ஏற்றினளே!

    மல்லாந் திருந்த இரவொன்றில்
    மறந்த கனவின் நினைவொன்றில்
    மாடிப் படியில் திமுதிமு திமுதிமுவென
    மணிச்ச தங்கை கலகலக்க
    நில்லா தெங்கோ நின்றாளே
    நினைவைக் கனவைக் கொன்றாளே
    நீலப் பட்டுப் பாவடையை
    நித்திலம் பதறும் மின்விரலால்
    நேர்த்தியின் உன்னத மாய்வந்தாள்
    நேரே உயிரை மலர்கொய்தாள்!

    இமயப் படுகையின் குளிரினிலே
    இரவா பகலா புரியாத
    இறைநட மாடிடும் விந்தைப் பொழுதினில்
    மின்நரை மலிந்த கிழவியென
    இமையுள் சிரித்து நின்றாளே
    என்னை எழுப்பிச் சென்றாளே
    ஈனம் மலிந்த மனத்தினிலே
    ஈசன் வாசனை சேர்த்தாளே
    இதுவரை நேராச் சொல்லெல்லாம்
    இடுப்பில் உடுத்தி நொடித்தாளே!

    காரிருள் அஞ்சும் காரிருளில்
    கட்டி நிலவைக் காணாமல்
    கடல்தடு மாறிக் குமுறும் கருப்பில்
    கருமை அறியாக் கருப்பியென
    நேரில் விண்ணில் எழுந்தாளே
    நெஞ்சம் பதறப் புடைத்தாளே
    நிலையில் லாத மணல்வெளியில்
    வெருட்டித் துரத்திச் சிரித்தாளே
    நெஞ்சம் விடாமல் ஏங்குவதாய்
    எங்கோ உயிரைத் தொட்டாளே!

    எத்தனை எத்தனைக் கோலங்கள்
    ஏட்டில் வராத ஜாலங்கள்
    ஏதிதன் பொருளென எவரே அறிவார்
    எதைநிஜ மெனநான் கொள்ளுவதோ
    முத்த மிட்டதும் மிகவுண்மை
    முனைப்பே அற்றதும் மிகவுண்மை
    மூர்க்கி யினைநான் மோகித்தே
    முழுதாய் இழந்ததும் மிகவுண்மை
    மொட்டுள் மெளனச் சுடர்போல
    மோதும் தென்றலுக் கேங்குகிறேன்!

    கரைவதில் எனக்கு மனமில்லை
    கண்கள் சற்றும் இமைக்காமல்
    கண்ணீர்த் துளிகள் கால்களை நனைக்கக்
    கவிதை முனையில் உயிர்பதற
    விரைவின் அறியா உயரங்களும்
    அமைதியின் புரியா ஆழங்களும்
    விந்தைக் கலவி புரிகையிலே
    விழிக்கும் பிள்ளையாய் நிற்கின்றேன்
    விண்ணை யாளும் பேரழகி
    வீதி முனைக்கு வருவாளோ?

    Share
  • உன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி (பாடல்)

    இசைக்கவி ரமணன்

    1286636471_127469105_1-numerology-astrology-and-namalogy-choolaimedu-1286636471

    நீ என்பதா? இல்லை
    நானென்பதா?
    தனிமையில் உன்னை நான்
    நானென்பதா? தன்னந்
    தனிமையில் என்னை நான்
    நீயென்பதா?

    உன்விழி அசைவில் என்னுயிர் ஆடும்
    புன்னகை மலர்ந்தால் புதுக்கவி பாடும்
    உன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி
    இன்னமும் ஏனம்மா துன்பத்தின் இடைவெளி (நீ)

    விரைந்து வரும் அலையில் வீற்றிருக்கும் மலையில்
    இதயத்திலே இரண்டும் சமன்பெறும் ஒரு நிலையில்
    கரைந்து கரைந்து கண்ணீராய் வீழ்கிறேன்
    கடைசி ஒருதுளியில் உன்முகம் காண்கிறேன் (நீ)

    Share