Category: Carousel

Carousel

  • கிறிஸ்துமஸ் கோலங்கள்

    கிறிஸ்துமஸ் கோலங்கள்

    தமிழக வீதிகளில் மார்கழிக் கோலங்களைப் போலவே புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கும் கோலம் வரைவது உண்டு. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரையப்பெற்ற கோலங்கள் சிலவற்றை இங்கே கண்டுகளியுங்கள். உங்கள் பகுதியில் இத்தகைய கோலங்களைக் கண்ணுற்றால், எமக்குப் படம் எடுத்து அனுப்புங்கள் (annakannan@yahoo.co.in). அடுத்த பதிப்பில் வெளியிடுவோம்.

    தொகுப்பு – சுதா மாதவன்

    யாவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 192

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்க்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • ஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு, 2010 மே 16 அன்று செல்வ முரளி உதவியுடன்  வல்லமையைத் தொடங்கினோம். பேரா.இ.அண்ணாமலை உடனான இ-நேர்காணலே முதல் இடுகை. அந்தப் புள்ளியிலிருந்து சிற்றடிகளை எடுத்து வைத்து, இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இப்போது 2018 மே 16 அன்று ஒன்பதாம் ஆண்டில் வல்லமை நுழைந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் வல்லமை, 14,276 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 12,551 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.

    Vallamai in 9th Year

    வல்லமை, 2017 மே மாதம், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் [University Grants Commission (UGC) (யுஜிசி)] அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழாக அறிவிக்கப்பெற்றது. 2018 மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதுப்பிக்கப்பெற்ற பட்டியலிலும் வல்லமை தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், 4305 ஆய்விதழ்களைப் பட்டியலிலிருந்து யுஜிசி நீக்கியுள்ளது. ஆயினும் தமிழ்ப் பிரிவில் வல்லமை நீடிக்கிறது.

    இந்தக் காலக் கட்டத்தில் சுமார் 200 ஆய்வுக் கட்டுரைகளை வல்லமை பதிப்பித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, இதர மாநிலங்களிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆக்கங்களை வல்லமை வெளியிட்டுள்ளது. தமிழ் இலக்கியம், இலக்கணம், சமூகவியல், பக்தி, வரலாறு, உளவியல், அறிவியல், இணையம், மொழிபெயர்ப்பு, ஒப்பீடு, பறவையியல், இன வரைவியல், நாட்டுப்புறவியல், கல்வி, இசை… எனப் பற்பல துறைகள் சார்ந்த கூர்நோக்கும் புதிய பார்வையும் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

    இவை மட்டுமின்றி, கனடாவிலிருந்து ஜெயபாரதன், அறிவியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 700க்கும் மேலான படைப்புகளை நல்கியுள்ளார். கேசவ் அவர்களின் கிருஷ்ணர் ஓவியங்களுக்குக் கிரேசி மோகன், நாள்தோறும் நவரசங்களில் வெண்பா விருந்து படைத்து வருகிறார். தொடர்கள் எழுதி வரும் இன்னம்பூரான் (இந்தியா), நிர்மலா ராகவன் (மலேசியா), அவ்வை மகள் (அமெரிக்கா), நாகேஸ்வரி அண்ணாமலை (அமெரிக்கா), மேகலா இராமமூர்த்தி (அமெரிக்கா), சக்தி சக்திதாசன் (இங்கிலாந்து), ஜெயராம சர்மா (ஆஸ்திரேலியா), முனைவர் சுபாஷிணி (ஜெர்மனி), கல்வியியல், வாழ்வியல் தொடர்களைச் செம்மையாக வழங்கி வரும் க.பாலசுப்பிரமணியன், செண்பக ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் வல்லமையின் படைப்புச் செழுமைக்குப் பங்களித்து வருகிறார்கள். ஆசிரியர் பவளசங்கரியின் தலையங்கங்கள், நம் கவனத்தை ஈர்ப்பவை. பெரும்பாலான தமிழ் மின்னிதழ்களில் தலையங்கம் என்ற பகுதி இல்லை என்பதையும் இணைத்துப் பார்க்கலாம்.

    மேலும், படக்கவிதைப் போட்டி 161 வாரங்களைக் கடந்து வெற்றி நடை போடுகிறது. உலகம் முழுவதுமிருந்து கவிஞர்கள் பங்கேற்க, மேகலா இராமமூர்த்தி நடுவர் பொறுப்பில் திறம்படச் செயலாற்றி வருகிறார். இந்த வார வல்லமையாளர் விருதினை 270 வாரங்களாக வழங்கி வருகிறோம். கடந்த 50 வாரங்களாகச் சிறப்புறத் தேர்ந்தெடுத்த பேராசிரியர் செல்வன் விடைபெற, அந்தப் பொறுப்பினை இளைஞர் கௌதம் ராஜ் ஏற்றுள்ளார். அத்துடன் வல்லமை ஆசிரியர் குழுவில் முனைவர் விஜய ராஜேஸ்வரி, கவிஞர் ராமலட்சுமி ஆகியோர் இணைந்துள்ளனர். புதியவர்களை வரவேற்கிறோம்.

    வல்லமை வாசகர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அளித்த பதில்களின் தொகுப்பினைத் தமிழ் இன்று – கேள்வியும் பதிலும் என்ற தலைப்பில் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தேமொழி தேர்ந்தெடுத்த வல்லமையாளர்கள் 100 பேர்களின் தொகுப்பும் மின்னூலாக வெளிவந்துள்ளது. இந்த ஆண்டில் வல்லமையாளர்கள் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பெஞ்சமின் லெபோ, முனைவர் சுபாஷிணி, ஜெயராம சர்மா, சுப்ரபாரதி மணியன் உள்ளிட்டோர், தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வென்றதில் உள்ளம் உவக்கின்றோம்.

    ஆண்டிராய்டு திறன்பேசி வைத்திருப்போர், தங்கள் செல்பேசியிலேயே வல்லமையைப் படித்து மகிழலாம். வல்லமையின் ஆண்டிராய்டு செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள் – https://play.google.com/store/apps/details?id=com.vallamai.android விரைவில் வல்லமை மின்னிதழின் வடிவமைப்பினை மாற்ற உள்ளோம். வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதியும் திட்டம் உள்ளது. மேலும் பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளோம். இவை அனைத்திற்கும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

    இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, முனைவர் காயத்ரி பூபதி, முனைவர் விஜய ராஜேஸ்வரி, சாந்தி மாரியப்பன், ராமலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள நிர்வாகி சீனிவாசன், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறோம்.

    உங்கள் அனைவரின் ஆதரவுடன் இன்னும் பல முத்திரைகளைப் பதிப்போம். முயற்சி திருவினையாக்கும்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (161)

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெங்கட்ராமன், எம். எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (118)

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    19756280_1366924990028363_1292024265_n

    சிவராஜன் தண்டபாணி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்  சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக் கவிதைப் போட்டி – 5இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    தமிழக – கேரள எல்லையில், ராமக்கல்மேடு என்ற கிராமத்தில் உள்ள குறவன் – குறத்தி சிலையை அமுதா ஹரிஹரன் படம் எடுத்தார். அதை நமது படக் கவிதைப் போட்டிக்குச் சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்தார். இந்தப் பொருள் பொதிந்த படத்துக்கு வல்லமை அன்பர்கள், நயமான கவிதைகளைப் படைத்துள்ளனர்.

    Amutha Hariharan's photo of Kuravan Kurathi Statue

    சிலையாய் அமர்ந்துள்ள இணையர், எதிரே பசுமை போர்த்திய மலைத் தொடர், மேலே வெண் மேகம் தவழும் நீல வானம் என ஒரு வளமான காட்சி, திறமான படைப்புகளுக்குச் சரியான தீனி. இருவர் ஏன் சிலையாக அமர்ந்துள்ளனர் என்ற தேடல், விதவிதமான கற்பனைகளைத் தூண்டி விட்டுள்ளது. இதற்கு ஜெயபாரதனும் எஸ்.பழனிச்சாமியும் ஜெயஸ்ரீ ஷங்கரும் புனிதா கணேசனும் வடித்த பின்கதைகள் நன்று. இவை, காவியமாக விரித்துரைக்கும் வாய்ப்பினைக் கொண்டவை.

    ஊடும் பாவுமாக விரவிச் செல்லும் இந்த வண்ண வரிகளுள் சில, சட்டென்று என்னை ஈர்த்தன.

    கலை தவழும் மலை
    மலை தழுவும் முகில்
    இவற்றோடு
    காதல் தலைவி தலைவனாய்
    நீயும் நானும்!

    எனக் கிரேஸ் பிரதிபாவும்

    மெல்ல கேசம் வருடும்
    மேகக் காதலனின் காதில்
    கிசுகிசுக்கிறாளோ –
    மரகதப் பட்டுடுத்திய
    மலை மங்கை?

    எனத் தமிழ் முகிலும்

    அன்பு நிறைந்த ஏகாந்த பூமியிது
    ஆசைக் கண்கள் தாலாட்டிய பூமியிது
    காலச் சுழற்சி, காதல் மலர்ச்சி
    பிறவிகள் வேண்டும்

    என ஜெயஸ்ரீ ஷங்கரும்

    நீலவான் நிலத்தை நோக்க
    நிலம்நாணி வானை நோக்க
    காலனே நீயும் எம்மை
    கணக்கினில் கொள்ளும் முன்னம்
    ஞாலமே வியக்கும் வண்ணம்
    நாமிங்கு சிலைகள் ஆனோம்!

    என ஜெயராம சர்மாவும்

    கனிவுறு காதலில் கல்லானோம்
    இனியொரு பிறவியில் இணைவோமா?
    அந்த வானமும் இந்த பூமியும் போலே
    எந்த போழ்திலும் சேர்ந்தேயிருப்போமா?

    எனப் புனிதா கணேசனும்

    ஊனுயிராய் உலவிக் கலக்கும்
    ஊன்றுகோல்! அன்பு ஊற்று!
    உன்னதம்! காதல் இறைமை!
    இத்தேடல் பிரபஞ்ச மயக்கம்!
    இவ்வாடல் உலக இயக்கம்!

    எனப் பா.வானதி வேதா. இலங்காதிலகமும்

    நிலையா உலகில் நிலைபெறவே
    நினைவுச் சின்ன நிலையானார்,
    கலையே ஈதெனப் பார்த்தாலும்
    காதல் சிலையெனச் சேர்த்தாலும்,
    விலையெனச் சொல்ல ஏதுமில்லை
    வென்றே நிற்கும் காலத்தையே…!

    எனச் செண்பக ஜெகதீசனும்

    இவர்கள்
    எதுவும் இல்லாதிருந்தபோது
    எல்லாமும் பெற்றிருந்தனர்
    எல்லாமும் கிடைத்தபோது
    எதையோ இழந்து நிற்கின்றனர்!

    எனக் கொ.வை அரங்கநாதனும் தீட்டிய வரிகள், என் ரசனைக்கு விருந்து படைத்தன.

    எனினும் ஒரு முழுமையான கவிதை என்ற அளவில் பார்க்கிற போது, சங்கர் சுப்பிரமணியனின் இந்தக் கவிதை என்னைப் பெரிதும் கவர்ந்தது.

    இதுவரை
    அறிந்திராத மொழியும்
    தீண்டலில் கரையும்
    புரியாத உணர்வுகளும் என
    பக்கமிருப்பிலே
    தூரமாகி போகிறது
    நாம் காணும் உலகம்

    மின்னும் நட்சத்திரம்
    காற்றினில் தவழ்ந்து வந்து
    நம்மை தழுவும் இசை
    உருகும் பனி
    பச்சை புல்வெளி
    பார்த்த பரவசம் என
    மீளா கணங்களில்
    முன்னம் விரியுது
    இதுவரை நாம்
    பார்த்திராத உலகம்

    நாம் கற்சிலையான
    தருணத்திலும்
    தீராத நம் பேச்சினில்
    கிளர்ந்தெழும் உணர்வுகளால்
    கலைத்து போகிறது
    கடந்து போகும் மேகமும்
    சுற்றி வரும் சூரியனும்

    இதில் ஒற்றுப் பிழைகள், ஒருமை / பன்மைப் பிழை, தட்டுப் பிழை (கலைத்து / களைத்து), நிறுத்தற்குறியின்மை ஆகியன இருந்தும் இதன் கவித்துவம், தனித்துவமானது. கற்சிலையான பிறகும் தீராத பேச்சு எது? பேசுவது வாயா, விழியா, விரலா, மனமா, ஆன்மாவா என விரிப்பது ஒரு நிலை என்றால், அந்தப் பேச்சினால் கிளர்ந்தெழும் உணர்வுகள், சுற்றி வரும் சூரியனையும் கடந்த போகும் மேகத்தையும் களைப்படையச் செய்கின்றன எனில் அதன் விரிவும் தீவிரமும் சலியாத அன்பும் அலாதியான இன்பமும் சொல்லில் வடிக்க இயலாதவை. தகுதி மிக்க இந்தக் கவிதைக்காகச் சங்கர் சுப்பிரமணியன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    ஏற்க மறுத்தாரோ ஏங்கிட வைத்தாரோ
    தோற்க மனமின்றி தோழமையாய் – வீற்றிருப்பீர்
    கற்சிலையாய் குன்றின்மேல், காலங் கனிந்துவரும்
    வற்றிடா அன்பே மருந்து

    எனக் காதலை ஏற்கும் வரை கற்சிலையாய்க் காத்திருக்கும் இணையரைப் படைத்த சியாமளா ராஜசேகர் அவர்களை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    சங்கர் சுப்பிரமணியன், சியாமளா ராஜசேகர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • நித்திலமே நித்திலம்

    அண்ணாகண்ணன்

    Nithila Annakannan

    நித்திலமே நித்திலம்
    நின்றொளிரும் ரத்தினம்
    புத்தம்புது புத்தகம்
    புத்துணர்வுப் பெட்டகம்
    கொத்துமலர் கோகிலம்
    குதித்துவரும் சாகசம்
    தத்திவரும் பூரதம்
    சிரித்துவரும் சித்திரம்

    ஆடிவரும் அற்புதம்
    ஓடிவரும் உற்சவம்
    தேடிவரும் காவியம்
    தீட்டாத ஓவியம்
    பாடிவரும் பாசுரம்
    நாடிவரும் நாட்டியம்
    கூடிவரும் மங்கலம்
    கோடியின்பம் நித்திலம்.

    ஆருயிரின் ஆரமுதம்
    ஆசைதரும் பேரமுதம்
    ஓருலக வேரின்பம் – ஈர்
    ஏழுலகப் பேரின்பம்
    ஊருலகம் பாராட்டும்
    உச்சி தனில் சீராட்டும்
    ஆரமடி முத்தாரம் – நீ
    அகிலத்தின் ஆபரணம்.

    Share
  • படக் கவிதைப் போட்டி – 4இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    அன்புக்கு ஏது வயது எனத் தம் குடும்ப விளக்கிற்கு இனிப்பூட்டும் கணவர், களிப்புடன் அதை ஏற்கும் இல்லத்தரசி, குதூகலத்தில் திளைக்கும் செல்லப் பிள்ளைகள்… என ஒரு கொண்டாட்ட மனநிலையை அழகாகப் படம் பிடித்த நித்தி ஆனந்துக்கு முதலில் பாராட்டுகள். வண்ணங்களின் கலவையும் உணர்வுகளின் வெளிப்பாடும் இந்தக் காட்சியில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.

    16483711086_5e9d5432f1_z

    இந்தப் படத்துக்கு அன்பர்கள் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றிலும் அன்பின் நறுமணம் கமழ்கிறது. கவிதையின் கூர்மை, நேர்த்தி, செம்மை ஆகியவற்றில் சற்றே முன்பின் இருந்தாலும் காதலின் தனித்த சுடர், இந்த வரிகளை மேலும் ஒளிரச் செய்கின்றது. காட்சியில் உள்ளதை அப்படியே எழுத்தில் வடிக்கச் சிலர் முயன்றுள்ளார்கள். காட்சியை மையமாக வைத்து, அதன் வேர்களிலும் கிளைகளிலும் பலர் பயணித்துள்ளார்கள். கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் பந்து எங்கே பட்டு [பிட்ச் (pitch) ஆகி], எங்கே பாய்கிறது என்று பார்ப்பதைப் போல், கவிதையிலும் சொல் எங்கே ‘பிட்ச்’ ஆகிறது என்று பார்க்க முடியும்.

    மாறா உன் புன்னகையிலே
    மாறியிருந்தது என் உலகம்

    எனச் சங்கர் சுப்ரமணியனும்

    வெயிலின் வனாந்தரங்களை
    ஓய்விலா வாழ்வின் போழ்தை
    நிலாவின் குளிர்மை தந்து
    குலவி இருந்தவளே

    எனப் புனிதா கணேசனும்

    முகத்தில் விழுந்த சுருக்கங்கள்
    முடிந்து வைத்துள்ளது காலங்காலமாய்
    பகிர்ந்து கொண்ட காதலை
    பலங்கொண்ட ஆலம் விழுதுகளென!

    எனத் தமிழ்முகிலும்

    இருவர் மனமும் ஒன்றானால் எமது முதுமை இளசாகும்
    உனது சுவையில் நான்கலப்பேன் எனது இனிமை நீயாவாய்!

    என ஜெயராமசர்மாவும்

    முற்றிய வாழ்வின்
    முதன்மை வசந்த முகவரி
    சூழ்ந்த சுகவரி சுந்தரம் காட்ட

    என மெய்யன் நடராஜும்

    கணப்பொழுதும் மனதால் நீங்காத
    கானப் பறவைகளின் இல்லற பாடல்

    என நாகினியும் தீட்டிய வரிகளை ரசித்து மகிழ்ந்தேன்.

    இந்த வாய்ப்பில் எஸ்.பழனிச்சாமி ஒரு சிறுகதை எழுத, மீ.லதா, ஒரு நாவல் சுருக்கத்தையே எழுதிவிட்டார். செந்திலகம் என்ற ஜெயபாரதனின் சொல், செம் திலகம், செந்தில் அகம் என்ற இரு பொருட்சுவை தருகின்றது. நிரஞ்சன் பாரதி, அணிச்சல் (Cake) என்ற சொல்லை ஒரு படைப்பினுள் முதன் முதலாகப் பயன்படுத்தியுள்ளார்.

    சிற்சில சொற்கள், வரிகள் என்ற அளவில் பலவும் சிறப்புற இருந்தாலும், முழுமையான கவிதை என்ற அளவில் பார்க்கிறபோது, இப்னு ஹம்துன் எழுதிய இந்தக் கவிதை என்னைப் பெரிதும் கவர்ந்தது.

    நாளும் இனிமை கூட்டியதும்
    நாவில் இனிப்பை ஊட்டியதும்
    காலம் முழுதும் இனித்திருக்கும்
    கடவுள் அருளாய் மணத்திருக்கும்.

    வாழும் பெண்ணின் உள்ளத்தில்
    வசந்தம் தன்னை மணந்தவரே.
    தோழன் போல துணைநிற்க
    துயரக் காற்றைக் கண்டதில்லை.

    பேரன் பேத்தி எடுத்தாலும்
    பெயரா உறவும் நமதன்றோ.
    வேர்கள் நாமே பரஸ்பரமே
    வெற்றி கண்டோம் வாழ்வினிலே.

    அன்பைத் தந்தாய் அனுதினமும்
    அதிலே திகட்டல் ஏதுமில்லை.
    உன்னை அன்றி வேறேதும்
    உவந்த இனிப்பும் எனக்கிலையே.

    இன்பம் வெற்றி உன்னாலே
    இதயம் கண்டது தன்னாலே.
    என்றும் காப்பான் இறையவனும்
    இந்த வாழ்வின் இனிமையினை.

    நன்றி சொல்லி வாழ்ந்திருப்போம்
    நல்ல வாழ்க்கை அதற்கென்றே.
    நின்று பார்க்கும் பிள்ளைகளே
    நேசப் பாடம் படிப்பீரே!

    இதில் ‘உன்னை அன்றி வேறேதும் உவந்த இனிப்பும் எனக்கிலையே’ என்று அழகுற உணர்ந்துரைத்த விதம் நன்று. இந்தக் கவிதையின் சிறப்பைப் பாராட்டி, இப்னு ஹம்துன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    மங்கல நாயகி முகமெங்கும்
    ஆயிரம் நிலவின் நட்சத்திரம்

    பொட்டும் பட்டும் பாட்டிசைக்க
    பளிச்சிடும் புன்னகைப் பெண்சித்திரம்

    அனுபவ வலிகள் மறைந்த
    ஆனந்த சுமைகளின் முகவரிகள்

    கொண்டவர் அருகிருக்க கோலமகள்
    வாரிசுகள் ஆர்ப்பரித்து அகமகிழ

    தொலைந்து கடந்த பிறந்தகாலம்
    நினைவில் நழுவிய வேளையிலும்

    குழந்தைமனம் மாறாக் குதூகலம்

    என வசீகரமாக வர்ணித்த ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    இந்த இரு கவிதைகளில் எதற்கு முதலிடம் எனக் கடுமையான போட்டி இருந்தது. ஏனெனில் ஜெயஸ்ரீயின் தொடக்கமும் இப்னுவின் முடிப்பும் மிகச் சிறப்பாக இருந்தன. எனினும் ஜெயஸ்ரீயின் கவிதை, பெரும்பாலும் காட்சிக்கு உள்ளே மட்டும் இருக்க, இப்னுவின் கவிதை, அதையும் கடந்து பயணித்தது. தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றுக்கும் அறிந்ததிலிருந்து அறியாதவற்றுக்கும் அழைத்துச் செல்வது, சிறந்த முறை. எனவே, இப்னு சிறந்த கவிஞர் என்ற பாராட்டைப் பெறுகிறார்.

    இப்னு ஹம்துன், ஜெயஸ்ரீ ஷங்கர் இருவருக்கும் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • இனிதினிது

    அண்ணாகண்ணன்
    Annakannan

    இனிதினிதினிதினிதினிதினிதினிது
    எமதெமதெமதெமதெமதெமதெமது
    அமுதமுதமுதமுதமுதமுதமுது
    எமதெமதெமதெமதெமதெமதெமது

    சரிசரிசரியென,சரிவரும்உலகு
    சிரிசிரிசிரியென,சிரிநலம்பழகு
    வரிகளுக்கிடையினில்படிப்பதும்அரிது
    அரிதரிதரிதரிதரிதரிதரிது

    சிறுதிரிவிரியொளிசெறிசுடரழகு
    சிறுதுளிவிரிகடல்புரிதொழிலழகு
    சிறகினில்திசைகளையளப்பதுமழகு
    சிறகெனத்திசைகளைவிரிப்பதுமழகு

    கருவுறுதிருதருவரகவிமதுரம்
    துருதுருசுறுசுறுவிழிநடம்மதுரம்
    பெருகிடும்வியர்வையில்பெருமிதம்மதுரம்
    மெருகிடும்உருகிடும்அருளதிமதுரம்

    கடகடபடபடமடமடவெனவே
    சடசடதடதடகிடுகிடுவெனவே
    உடனுடனுடனுடனுடனுடனுடனே
    முடிமுடிமுடிமுடிமுடிமுடிசெயலே.

    Share
  • படக் கவிதைப் போட்டி – 3இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    சிலை வணக்கம் புரியும் சிறுவனின் மனத்தில் புகுந்து, கலை மணக்கும் கவிதை வடித்த அன்பர்களுக்கு வாழ்த்துகள். புதுவை சரவணன் எடுத்த நிழற்படத்தின் சாரத்தை நிஜப் படமாய் எழுத முயன்றீர்கள்.

    16720185552_5ebd517bcb_o

    தெய்வத்தை வணங்கும் தெய்வம் என்று முகநூலில் ராமன் ஜனனியும் ஒரு தெய்வம் கடவுளை வணங்குகிறது…! என்று வேலுச்சாமியும் வர்ணித்தது, இந்தப் படத்திற்கான அழகிய தலைப்பு.

    வீட்டுச் சிக்கல்களையும் நாட்டுச் சிக்கல்களையும் சொந்தச் சிக்கல்களையும் தீர்க்க, இந்தச் சிறுவன் கடவுளை வேண்டுவதாக, கவிஞர்கள் அடுக்கிய விதத்தைக் கண்டோம். அதில்

    எப்போதும் இதையே பேசிடாமல்
    என்னை அவர்கள் கொஞ்சிடணும்

    என எஸ்.பழனிச்சாமியும்

    உன்னை வேண்டுவேன் படைத்தவனே
    உலகினில் வேண்டாம் அனாதைகளே…!

    என செண்பக ஜெகதீசனும் தீட்டிய வரிகளை ரசித்தேன்.

    எனினும் ஒரு முழுக் கவிதை என்ற அளவில் பார்க்கையில், பி.தமிழ்முகிலின் படைப்பு என்னை அதிகம் கவர்ந்தது.

    ஓட்டின் இடுக்கில் சின்னஞ்சிறு கூட்டில்
    சிட்டுக்குருவியும் குஞ்சுகளும்
    சுகமாய் தான் வாழனும்
    பூனையிடமிருந்து காத்திடனும் சாமியே!

    கோழிக் குஞ்சையும் வாத்து குஞ்சையும்
    பருந்து காக்கையிடம் இருந்து
    பத்திரமா காக்க வேணும் – அவையும்
    என் கண் முன்னே சிறகடிச்சு பறக்கனும்!

    கன்றுக் குட்டியும் ஆட்டுக் குட்டியும்
    என்னைக் கண்ட மறு நொடியே
    துள்ளி ஓடி வந்திடனும்
    அன்புடன் நானும் அணைத்திடனும்!

    சின்னச் சின்ன ஆசைகளின்
    சின்னஞ்சிறு பட்டியலிது
    பட்டியல் வளரும் வேளைதனில்
    பட்டென்று சொல்லிடுவேன் உன்னிடமே!

    பொய் பொறாமை புரட்டும் தான்
    என் மனதை அண்டாது காத்திடனும்
    அன்பும் பண்பும் எந்நாளும்
    குறையாது நானும் வாழ்ந்திடனும்!

    நாளும் உன்னைச் சந்தித்தே
    நலமும் கேட்டு மகிழ்ந்திடுவேன்
    நலமும் வளமும் உலகமெலாம்
    நிலைத்திடவே வேண்டிடுவேன்!

    இவற்றைச் சின்னஞ்சிறு ஆசைகளாகப் பார்த்தாலும் அர்த்தம் உண்டு. அதே நேரம், குறியீடுகளாகப் பார்த்தாலும் பொருள் உண்டு. மேலும் கடவுளை நலம் கேட்பது ஓர் அழகு என்றால், தனக்காக வேண்டாமல், உலகமெலாம் நலமும் வளமும் நிலைத்திட வேண்டுவது, இன்னும் அழகு. வேண்டும் என்பதன் பேச்சு வழக்கு வேணும் என்றே இருக்க வேணும். மூன்று சுழியை இரண்டு சுழியாக்கினாலும், கவிதை அம்சத்துக்காக, இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகப் பி.தமிழ்முகிலைத் தேர்ந்தெடுக்கிறேன்.

    அத்தனை பேரும் கடவுளை வேண்டுகையில், கடவுளே குழந்தையிடம் உரையாடுவது போல் மாற்றி யோசித்ததோடு மட்டுமின்றி,

    குட்டிச்செல்லமே…!
    கூடவே நானிருப்பேன் – உன்
    குட்டித்தோழனாக…!

    எனக் கடவுளைக் குட்டித் தோழனாக்கிய தனுவை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராக அறிவிக்கிறேன்.

    தமிழ்முகிலுக்கும் தனுவுக்கும் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • படக் கவிதைப் போட்டி – 2இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    ராபின் ராஜ் எடுத்த படம், பலரின் மன வயலில் கவிதைப் பயிர்களை வளர்த்துள்ளது. நாற்று நடும் உழவரின் கண்கள் என்ன சொல்கின்றன எனப் பலரும் எழுத்தால் படம் பிடித்தது, நல்ல முயற்சி. இது, மகளிர் தினத்தை ஒட்டி நடைபெற்றதாலோ என்னவோ, சிலர் பயிர் சுமந்த நிலத்தையும் பெண்ணையும் ஒப்பிட்டு எழுதியிருந்தனர். நிலமென்னும் நல்லாள் நகும் என்ற வள்ளுவரின் வழியில் இவர்கள் நடை பயில்கின்றனர்.

    Robins_click
    நிலம் – பெண் என்ற வகைப் படைப்புகள் ஒரு புறம் இருக்க, விளைநிலங்கள் விலை நிலங்களாய் ஆகிவரும் நிலையும் பல கவிதைகளில் கவலையாகவும் ஆதங்கமாகவும் கோபமாகவும் வேண்டுகோளாகவும் பதிவாகியுள்ளன. அதே போல், நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பழைய வசனத்தையும் பலரும் எதிரொலித்துள்ளனர்.

    இது, ஒரு வகையில் ஒரே வகையான எண்ணங்கள், பலரிடமிருந்தும் எழுவதற்கு ஒரு சான்றாகும். மேலும், படைப்புகளில் முந்தைய பின்னூட்டங்களின் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இது, படக் கவிதைப் போட்டியின் சவால்களில் ஒன்று. ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டதாகவும் வலிமை மிகுந்ததாகவும் கூர்மை உடையதாகவும் அமையுமாறு எழுதுவது, ஒவ்வொருவரின் தனித் தன்மையை வெளிப்படுத்த உதவும்.

    இந்த வாரப் படைப்புகளை ஆராய்ந்ததில், ஜெயபாரதனின் முதல் பின்னூட்டம், நன்கு அமைந்துள்ளது.

    வானம் பார்த்த பூமி

    வானம் பார்த்த பூமி, எங்கள்
    மானம் காக்க வேண்டும் !
    வயலில் வேலைக்(கு) ஆளில்லை, இந்த
    வருடம் போதிய மழை யில்லை !
    நீரின்றி நடுவதா மாரி யாத்தா ?
    ஊரில் உதவிட யாரு மில்லை
    பச்சை நாற்றெல் லாம் காய்ந்திடுமோ ?
    அச்ச முள்ள வாழ்வில் மிச்ச மில்லை !
    பிச்சை எடுக்கவும் இச்சை யில்லை !
    நஞ்செய்ப் பயிரெல்லாம் வஞ்சனை யாளர்
    தஞ்சமாய்ப் போச்சு ! பஞ்சமாய் ஆச்சு !
    உழுதுண்டு வாழும் நாங்கள் தினம்தினம்
    அழுதுண்டு சாவோம் ! அரசு உதவுமா ?

    சி. ஜெயபாரதன்.

    வயலில் வேலைக்கு ஆளில்லை என்ற நிலையிலும், தளராது உழைக்கும் ஒருவரின் மன ஓட்டங்களை இந்தப் படைப்பு, சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. மாரியாத்தா என்ற விளி, உயிரோட்டத்தைக் கூட்டுகிறது. அதே நேரம், இரு பொருளையும் தருகிறது.

    ஆயினும், கடைசி நான்கு வரிகளும் எனக்கு உடன்பாடானது இல்லை. நிலத்தை விற்பது என்பது பல இடங்களில் நில உரிமையாளரின் உடன்பாட்டோடும் அவரின் பேராசையின் காரணமாகவும் நிகழ்கின்றது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கருத்தை நாம் சரியாக உள்வாங்கினால், அடுத்தவரின் மீது முழுப் பழியையும் சுமத்த மாட்டோம். அதே போன்று அரசு உதவுமா? என்ற கேள்வியும் கூட, இந்தச் சிக்கலுக்குச் சரியான தீர்வு இல்லை. நம்பிக்கையை இந்தக் கவிதை இன்னும் சிறப்பாக முன்னிறுத்தி இருக்கலாம். ஆயினும், அச்ச முள்ள வாழ்வில் மிச்ச மில்லை ! என்ற வரி, இந்தக் கவிதைக்கு வலுச் சேர்க்கிறது. எனவே, இதன் பொருட்டு, கவிஞர் சி.ஜெயபாரதன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறோம்.

    கல் விதைத்து
    மனை பிரித்து
    கட்டிடம் எழுப்பி
    கோடிகள் பார்க்கும் காலத்தில்
    நெல் விதைத்து
    நீர் வார்த்து
    நாற்று வளர்த்து
    நலிந்து போகிறான்
    என்னுடைய விவசாயி!

    எனச் சிறப்பாக ஒப்பிட்ட அமீரை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராக அடையாளம் காண்கிறோம் (அமீர், கட்டடம் என்பதே சரி).

    இவர்கள் இருவருக்கும் சிறப்புப் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி

    வல்லமையில் பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற தலைப்பிலான புதிய கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.

    இணையம் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இருந்த இடத்திலிருந்தே எதையும் எளிதில், விரைவாக, கூர்மையாகச் செய்து முடிக்க முடிகிறது. கல்வி, தொழில், பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு… என எண்ணற்ற துறைகளில், வகைகளில் இதன் விரிவையும் ஆழத்தையும் நாம் கண்டு வருகிறோம். கூகுள், யாஹூ போன்ற பெரு நிறுவனத்தினர் முதல் தனி நபர்கள் வரை, புதிய புதிய பயனுள்ள இணையவழிச் சேவைகளை வழங்கி வருகின்றனர். இவற்றைப் பற்றி முழுதும் அறிந்தோர் சிலரே. இன்னும் ஏராளமானோருக்கு இப்படி ஒரு சேவை இருக்கிறது என்பதே தெரிவதில்லை. சேவையைப் பற்றிச் சிறிதளவு தெரிந்தாலும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. எனவே, இத்தகைய பயன்மிகு இணையவழிச் சேவைகளைப் பலரும் அறியும் வகையில் புதிய போட்டியை முன்னெடுக்கிறோம்.

    Google_Appliance

    வாசகர்கள், தங்களுக்கு நன்கு தெரிந்த, பயன் மிகுந்த, நம்பகமான இணையவழிச் சேவைகளை எளிய முறையில் அறிமுகப்படுத்தலாம். ஒரு கட்டுரையில், ஒரு நிறுவனத்தின் ஒரு சேவையையோ அல்லது பல சேவைகளையோ அல்லது பல நிறுவனங்களின் பற்பல சேவைகளையோ குறிப்பிடலாம். ஆனால், எந்தச் சேவையைக் குறிப்பிட்டாலும் அதுகுறித்த முழுமையான செய்திகளையும் அதன் பல்வகைப் பயன்களையும் பயனர் கண்ணோட்டத்தில் அளிக்க வேண்டும்.

    வையவன் படம்இதன்படி, இந்தப் போட்டி, மார்ச்சு 2015 முதல் பிப்ரவரி 2016 வரை மாதந்தோறும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ.100 (நூறு ரூபாய்) பரிசாக வழங்கப்படும். ஓராண்டு முடிவில் தேர்வு பெற்ற 12 கட்டுரைகளிலிருந்து ஒரு கட்டுரைக்கு ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பரிசு வழங்கப்படும். தேர்வு பெறும் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, தாரிணி பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியாகும். அதன் அச்சுப் பிரதி, கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    எழுத்தாளர் வையவன் அவர்கள், இந்தப் போட்டியை முன்மொழிந்ததோடு மட்டுமில்லாமல், இதற்கான பரிசுத் தொகையையும் வழங்க முன்வந்துள்ளார். அவருக்கு வல்லமையின் சார்பில் நன்றிகள்.

    எழுத்தாளரும் இணையத்தில் தோய்ந்தவருமான ஐயப்பன் கிருஷ்ணன், மாதாந்தரப் போட்டிக்கான நடுவராக இருந்து, சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கும் எங்கள் நன்றிகள்.

    விதிமுறைகள்

    1. கட்டுரைகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    2. பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்பது கருப்பொருளே. வேறு உகந்த தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம். ஆனால், பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரை என்பதை மடலில் குறிப்பிட வேண்டும்.

    Iyappan_Krishnan3. மாதத்தின் முதல் தேதியிலிருந்து கடைசித் தேதி வரை வரப்பெறும் கட்டுரைகள், அந்த மாதத்துக்கான போட்டிக்கு ஏற்கப்பெறும். அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பெறும்.

    4. போட்டிக்கு அனுப்பப்பெறும் கட்டுரைகள், வேறு எங்கும் வெளிவராத புதிய படைப்புகளாக இருக்க வேண்டும்.

    5. தேவையான இடங்களில் படங்களையும் சுட்டிகளையும் இணைக்கலாம். காப்புரிமை உள்ள படங்களை இணைக்க வேண்டாம்.

    6. கட்டுரைகள், 1500 வார்த்தைகளுக்குள் இருப்பது நல்லது.

    7. போட்டியில் வெற்றி பெறும் கட்டுரையாளர், இந்தியாவுக்கு வெளியே இருந்தால், தமது இந்திய முகவரியை அளிக்க வேண்டும். யார் பெயருக்குக் காசோலை அனுப்பலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

    உங்கள் கட்டுரையின் மூலம், உலகின் ஏதோ ஒரு மூலையில் இருப்பவரும் பயன்பெறக் கூடும். எனவே, நீங்கள் அறிந்த நல்லதொரு புதிய சேவையை அனைவரும் அறியும் வகையில் எழுதுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா

    Share