அண்ணாகண்ணன்

ராபின் ராஜ் எடுத்த படம், பலரின் மன வயலில் கவிதைப் பயிர்களை வளர்த்துள்ளது. நாற்று நடும் உழவரின் கண்கள் என்ன சொல்கின்றன எனப் பலரும் எழுத்தால் படம் பிடித்தது, நல்ல முயற்சி. இது, மகளிர் தினத்தை ஒட்டி நடைபெற்றதாலோ என்னவோ, சிலர் பயிர் சுமந்த நிலத்தையும் பெண்ணையும் ஒப்பிட்டு எழுதியிருந்தனர். நிலமென்னும் நல்லாள் நகும் என்ற வள்ளுவரின் வழியில் இவர்கள் நடை பயில்கின்றனர்.

Robins_click
நிலம் – பெண் என்ற வகைப் படைப்புகள் ஒரு புறம் இருக்க, விளைநிலங்கள் விலை நிலங்களாய் ஆகிவரும் நிலையும் பல கவிதைகளில் கவலையாகவும் ஆதங்கமாகவும் கோபமாகவும் வேண்டுகோளாகவும் பதிவாகியுள்ளன. அதே போல், நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பழைய வசனத்தையும் பலரும் எதிரொலித்துள்ளனர்.

இது, ஒரு வகையில் ஒரே வகையான எண்ணங்கள், பலரிடமிருந்தும் எழுவதற்கு ஒரு சான்றாகும். மேலும், படைப்புகளில் முந்தைய பின்னூட்டங்களின் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இது, படக் கவிதைப் போட்டியின் சவால்களில் ஒன்று. ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டதாகவும் வலிமை மிகுந்ததாகவும் கூர்மை உடையதாகவும் அமையுமாறு எழுதுவது, ஒவ்வொருவரின் தனித் தன்மையை வெளிப்படுத்த உதவும்.

இந்த வாரப் படைப்புகளை ஆராய்ந்ததில், ஜெயபாரதனின் முதல் பின்னூட்டம், நன்கு அமைந்துள்ளது.

வானம் பார்த்த பூமி

வானம் பார்த்த பூமி, எங்கள்
மானம் காக்க வேண்டும் !
வயலில் வேலைக்(கு) ஆளில்லை, இந்த
வருடம் போதிய மழை யில்லை !
நீரின்றி நடுவதா மாரி யாத்தா ?
ஊரில் உதவிட யாரு மில்லை
பச்சை நாற்றெல் லாம் காய்ந்திடுமோ ?
அச்ச முள்ள வாழ்வில் மிச்ச மில்லை !
பிச்சை எடுக்கவும் இச்சை யில்லை !
நஞ்செய்ப் பயிரெல்லாம் வஞ்சனை யாளர்
தஞ்சமாய்ப் போச்சு ! பஞ்சமாய் ஆச்சு !
உழுதுண்டு வாழும் நாங்கள் தினம்தினம்
அழுதுண்டு சாவோம் ! அரசு உதவுமா ?

சி. ஜெயபாரதன்.

வயலில் வேலைக்கு ஆளில்லை என்ற நிலையிலும், தளராது உழைக்கும் ஒருவரின் மன ஓட்டங்களை இந்தப் படைப்பு, சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. மாரியாத்தா என்ற விளி, உயிரோட்டத்தைக் கூட்டுகிறது. அதே நேரம், இரு பொருளையும் தருகிறது.

ஆயினும், கடைசி நான்கு வரிகளும் எனக்கு உடன்பாடானது இல்லை. நிலத்தை விற்பது என்பது பல இடங்களில் நில உரிமையாளரின் உடன்பாட்டோடும் அவரின் பேராசையின் காரணமாகவும் நிகழ்கின்றது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கருத்தை நாம் சரியாக உள்வாங்கினால், அடுத்தவரின் மீது முழுப் பழியையும் சுமத்த மாட்டோம். அதே போன்று அரசு உதவுமா? என்ற கேள்வியும் கூட, இந்தச் சிக்கலுக்குச் சரியான தீர்வு இல்லை. நம்பிக்கையை இந்தக் கவிதை இன்னும் சிறப்பாக முன்னிறுத்தி இருக்கலாம். ஆயினும், அச்ச முள்ள வாழ்வில் மிச்ச மில்லை ! என்ற வரி, இந்தக் கவிதைக்கு வலுச் சேர்க்கிறது. எனவே, இதன் பொருட்டு, கவிஞர் சி.ஜெயபாரதன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறோம்.

கல் விதைத்து
மனை பிரித்து
கட்டிடம் எழுப்பி
கோடிகள் பார்க்கும் காலத்தில்
நெல் விதைத்து
நீர் வார்த்து
நாற்று வளர்த்து
நலிந்து போகிறான்
என்னுடைய விவசாயி!

எனச் சிறப்பாக ஒப்பிட்ட அமீரை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராக அடையாளம் காண்கிறோம் (அமீர், கட்டடம் என்பதே சரி).

இவர்கள் இருவருக்கும் சிறப்புப் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக் கவிதைப் போட்டி – 2இன் முடிவுகள்

  1. அமீருக்கு என் பாராட்டுக்கள்

  2. வல்லமை அதிபர் அண்ணா கண்ணன் என் கவிதைக்கு முதலிடம் அளித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சி. ஜெயபாரதன்.

  3. ஜெயபாரதன் ஐயாவிற்குப் பாராட்டுகள்.  நண்பர் தனுசு வின் கவிதை யின் “கல்விதைத்து” என்பது தரும் கவன ஈர்ப்பும் அருமை.

    பட்டுக்கோட்டையாரின் ‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்கையுங்காலுந்தானே மிச்சம்’ வரிகளை… விவசாயிகளின் நிலை இன்றும் மாறவில்லை என்ற வருந்தத்தக்க சூழ்நிலையை படம்பிடிக்கிறது இருவரின் கவிதைகளும்.  சிறப்பான கவிதைகளுக்குப் பாராட்டுகள்.

  4. எனது கவிதையை குறிப்பிட்டு பாராட்டிய வல்லமை நிறுவனர் அண்ணா கண்ணன் அவர்களுகு மிக்க நன்றி.

    பாராட்டுக்கள் தெரிவித்த    புனிதா கணேசன், தேமொழி ஆகியோருக்கும் என் நன்றிகள்.

  5. படக்கவிதைப் போட்டி-2 க்கு வந்த கவிதைகளை நடுநிலையுடன் ஆராய்ந்து, ஜெயபாரதன் மற்றும் அமீரின் கவிதைகளைத் தேர்வு செய்த வல்லமை அதிபர் அண்ணா கண்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
    முதலிடம் பெற்ற ஜெயபாரதன் ஆய்யா அவர்களுக்கும், சிறந்த கவிஞராக அடையாளம் காணப்பெற்ற அமீருக்கும் வாழ்த்துக்கள்.

  6. இணைய வழியில் கலைஞர்கள் கவிஞர்களை இணைத்து தமிழ் உலகிற்கு சேவை செய்யும் வல்லமை அதிபர் அண்ணா கண்ணன் அவர்களுக்கு முதலில் எனது நல் வாழ்த்துக்கள் ,,,,,,,,இணைய வழியில் வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் அனைத்து கலைஞர்கள் கவிஞர்களும் நன்றியுடன் வாழ்த்துக்கள் ,,,,,,,போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கும் நல் வாழ்த்துக்கள் ,,,நம் கடன் பணி செய்துகிடப்பதே ,,,,,,,நன்றி ,,,,,

  7. ரொம்ப அருமையான கவிதைகட்குப் பரிசு கொடுத்த வல்லமைக்கும்  என் அருமை நண்பர் அண்ணாகண்ணனுக்கும் வாழ்த்தும் பாராட்டும். வாழ்க உங்கள் பணி,
     கவியோகியார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *