கவிஞர்.மகேந்திரன் பன்னீர்செல்வம்
நித்தமும் நிறைமதி
புத்தம்புது ஒளிபாய்ச்ச
சத்தமின்றி வருகையில்
சித்தம் வேண்டினேன்
நித்திலம் வேண்டுமென!!
சிந்தனையில் சிரித்து
சந்தத்தில் சிந்து பாடும்
சுந்தரத் தொன்மையின்
செப்புத் தமிழினால்
நித்திலம் வேண்டுமென!
நஞ்செனும் சொற்களால்
வஞ்சகரின் பேச்சில்
மஞ்சு முகில் போல்
நெஞ்சம் கனத்து
தஞ்சம் அடைகையில்
நித்திலம் வேண்டுமென!!
நெறியுடை வாழ்வில்
குறிப்பறிந்து செயலாற்றி – நெஞ்சை
பறித்துச் செல்லும்
செறிவுநிறை மாந்தருறையுள்
அறிவுநிறை புவனத்தில்
நித்திலம் வேண்டுமென!!
நேர்மைத்திறம் மாறா
கூர்மை அறிவுடை
தேர்வு நிலைதனில் – பிறர்
பார்வை துச்சமாக்கி
தேர்ச்சி அடைகையில்
நித்திலம் வேண்டுமென!!
அந்தம் நெருக்கையில்
மந்தப் போக்கினில்
பந்தமென்று இருந்த
சொந்தங்கள் யாவுமே
நிந்தனை செய்கையில்
நித்திலம் வேண்டுமென!!
சத்தியம் சொல்கிறேன்
நித்திலம் வேண்டினேன்!
முத்ததின் ஒளியுடை
புத்தியின் திண்மையே
நித்திலம் என்பதாம்!!
சான்றோர் சபையினில்
மாண்போர் நடுவில்!
பண்புசார் சொற்களை
அம்புபோல் பாய்த்திடவே
அகிலம் ஆளும் இறைவா – எனை
நித்திலம் ஆக்கிவிடு!!!

Leave a Reply