திவாகர்
‘பாரதநாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’ என்று பாரதி எழுதியது எதற்காக என்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பாரதநாட்டை சுமார் இருநூறு வருடம் சுல்தான்கள், இருநூறு வருடம் மொகலாயர்கள், பின்னர் வந்த ஐரோப்பியர், பிரிட்டிஷ்காரர்கள் முன்னூறு வருடங்கள் ஆண்டனர். ஔரங்கசீப் காலத்தில் முக்கால்வாசி பாரதம் மொகலாயர் கைக்குப் போனது என்றால் இங்கிலீஷ்காரர்கள் கையில் அகண்டபாரதம் முழுவதுமே சென்றுவிட்டது. ஆட்சியாளர் அனைவருமே பாரத பண்பாட்டை முற்றிலும் நிராகரித்தவர் (ஒரு அக்பர் தவிர) என்று கூடச் சொல்லலாம். இத்தனை பரதேசத்தவர் ஆண்டாலும் உள்ளூற நிரவிக்கிடந்த பாரதத்தின் ஆன்மீக நம்பிக்கையையோ பண்பாட்டு விதானங்களையோ இவர்களால் மாற்றமுடியவில்லைதான்.
பாரத ஆன்மீகப் பண்பாடு, கலாசாரங்கள் இவையாவும் தர்மத்தின் அடிப்படையில் ஏற்பட்டவை. ஆரம்பத்திலிருந்தே அதர்மத்தைக் கண்டு அஞ்சுபவர்களாக நம் முன்னோர்களை சித்தரித்திருந்தார்கள். அதர்மம் துளிர்த்து வன்முறையாட்டம் ஆடும்போதெல்லாம் தெய்வம் தோன்றி அந்த அதர்மத்தை அழித்தது என்பதை பரிபூர்ணமாக நம்புபவர்கள். அப்படி அதர்மத்தை அழிக்கும் தெய்வங்களுக்கு நன்றி பாராட்டி விழா எடுத்து மகிழ்பவர்கள். வேலனுக்கும் துர்க்கைக்கும் திருமாலுக்கும் கண்ணனுக்கும் ராமனுக்கும் என்றில்லாமல் தம் ஊர்மக்கள் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்து தெய்வமாகிவிட்டவர்களுக்கும் அவர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் விழா கொண்டாடி வருபவர்கள். இதை நம் பாரதம் முழுமைக்கும் வெவ்வேறு விதமாக காணலாம்.
ஆனாலும் அங்கே குறிக்கோள் ஒன்றே.. ‘தர்மம் வெல்லவேண்டும் – அதர்மம் அழியவேண்டும், ஊர் செழிக்கவேண்டும், நல்லதோர் சமுதாயம் உருவாகவேண்டும்.. இதுதான் குறிக்கோள். இந்த குறிக்கோள் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் விதமாக அமையவேண்டும் என்பதற்காக அதற்கான புராணக் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அக்கருத்துகள் பொதுவாக மெய்ஞ்ஞானமாகவே இருந்தாலும் அது விஞ்ஞானத்தோடு பொருந்தும் வகையிலும் இருந்தது. இந்த புராணக்கருத்துகள் நாளடைவில் பாமரருக்கு எளிதாகப் புரியவைக்கும்படியாக புராணக்கதைகளாக மாறின. இக் கதைகளை மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து எல்லோரும் சேர்ந்து பண்டிகையாகக் கொண்டாடினர். அப்படிப்பட்ட ஒரு பண்டிகையைப் பற்றிய பதிவு ஒன்றினைப் பற்றியதுதான் இந்த வார வல்லமையாளர் எழுதியது.
சரதபௌர்ணிமை என அழைக்கப்படும் ஐப்பசி மாத முழுநிலவு நாளன்று கொண்டாடப்படும் கஜகிரி லக்ஷ்மி பூஜையைப் பற்றிய பதிவாகும். இந்த பூஜைக்கான ஆதி காரணங்கள், விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்டதாக எப்படி அமைகிறது, பாரதத்தின் எந்தந்தப் பகுதியில் கொண்டாடப்படுகிறது, விரதம், அதன் பலன்கள் போன்றவைகளை விவரமாகக் கொடுத்துள்ளார் பதிவர் திருமதி பார்வதி ராமச்சந்திரன்.
நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் உருவான இவை போன்ற விரதகால பூஜைகள் பண்டைய காலத்திலிருந்தே மக்கள் அனுசரித்து வந்திருக்கின்றனர் என்பதனை விவரமாக தெரிவித்திருக்கிறார்.
புராணக் கதை எதுவானால் என்ன, அதனால் தீங்கு நெருங்காத அளவுக்கும் மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவும், அவர்களின் மன வளமும், செல்வ வளமும் பெருகும் விதமாகவும் அமைந்தால் சமுதாயம் வளரும் இல்லையா.. வளரும் சமுதாயம் நல்ல சமுதாயமாகவும் தர்மம் குன்றாத சமுதாயமாகவும் இருந்துவிட்டால் உலகில் ஏது பிரச்னை.. இப்படியெல்லாம் நம் மனதில் கேள்வி எழும்பும் அளவுக்கு சிந்தனைகள் உருவாக்கிய திருமதி பார்வதி ராமச்சந்திரனை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் பிரத்தியேக வாழ்த்துகள்.
கடைசி பாரா: கவியரசைப் பற்றிய சக்திதாசன் கவிதை
பூஜ்ஜியத்துக்குள் ஒரு ராஜ்ஜியத்தை
பூட்டி வைத்த பரம் பொருளின்
தத்துவத்தை எளிமையாக்கி எமக்கதை
தீந்தமிழ்ப் பாடலாக்கிய கவிவேந்தனே!

Leave a Reply