-கீதா மதிவாணன்
அன்றொருநாள் அவசர நிமித்தம்
கவிதையொன்றைக் கைமாற்றாய்க் கேட்டுக்
கையேந்தி நின்றிருந்தாய் என் வீட்டுவாயிலில்! 
உன் கையறுநிலையைக் காணச் சகியாது
என் கவிதைத் தாள்களின் கதறல்களை மீறிப்
பிய்த்துக்கொடுத்தேன் என் கவிச்சிதறல்களை!
காயமுற்ற என் கவிதைப் புத்தகம்
நேயமற்ற என்னோடு வாழ மறுத்ததால்
சுயமிழந்து தவிக்கிறேன் நான்!
விரைவில் திருப்புவதாய்க் கையடித்தபோது
என்விரல் ரேகைகளுக்கு மத்தியில் படிந்த
தூசுபடிந்த உன் சத்தியங்கள் காலாவதியாகிக்
கணகாலமாகிவிட்டதை உணராது
விடுபடும் நாளை எதிர்பார்த்திருக்கின்றன
விம்மலும் விசும்பலுமாய்!
உன் கையொப்பத்துக்காக முண்டியடித்த
கூட்டத்தின் நடுவில் நேற்றுன்னைக் காண நேர்ந்தது!
பைத்தியங்குளியைப் போன்ற தோற்றத்திலும்
என்னைநீ அடையாளங் கண்டுகொண்டாய் என்பதை
விழிகளைத் தழைத்து வேகமாய்க் கடந்துணர்த்தினாய்!
இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்
முகாந்திரமிருப்பதைச் சொல்லிச் சொல்லிக்
கரைந்து கொண்டிருக்கின்றன காக்கைகள்!
கையுதிர்க்கவிருக்கும் சத்தியத்தின் காத்திருப்போடு நான்!
கவிதைப் புத்தகத்தின் வெற்றுப் பக்கங்களைப்
படபடப்போடு புரட்டிக்கொண்டிருக்கிறது காற்று!

Leave a Reply