-ரா. பார்த்தசாரதி
வாழ்வின் ஏட்டினைத் திருப்பிப் பார்த்தேன்
வலிதாங்கா இளமைபருவத்தை எண்ணிப் பார்த்தேன்
எழுதுகோலைத் துணிவுகொண்டு கையில் எடுத்தேன்
அன்னை சரோஜாவின் அருமையினை எழுதத் துணிந்தேன்!
மக்களைப் பெற்ற மகராசியே தாய்தான்
குடும்பத்தின் ஆணிவேராய் இருப்பதும் தாய்தான்
ஞானியும், துறவியும் போற்றும் தெய்வம்
ஞாலம் புகழ்ந்திடும் சிறந்த தெய்வம்!
ஏழு பிறவி எடுத்து ஏழு பிள்ளைகள் பெற்றாய்
ஏழு ஏழு ஜென்மத்திற்கு ஓர் தொடர்பு வைத்தாய்
ஏழிலே ஒன்றே ஒன்று பெண் ஆனாலும்
எல்லோரிடத்திலும் மாறா அன்பும் பாசமும் வைத்தாய்!
ஓய்வின்றி உறக்கம்மின்றி உன்உயிரைக் கூட
ஒவ்வோர் பிறவிக்கும் பணயம் வைத்தாய்
உன்னை வையகம் எந்நாளும் போற்றுமே
உன்அருமை அறியாப் பிள்ளைகளைத் தூற்றுமே!
பாசமுள்ள வேளையிலே காசு பணம் கூடலியே
காசுவந்த வேளையிலே பாசம் வந்து சேரலியே
பருவத்திலே நாங்கள் பட்டவலி தாங்கலியே
வார்த்தையிலே வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லையே!
பாசத்தோடு வாழ்வதுதான் தாயின் குணமே
பாசத்துடன் இருப்பதுதன் பிள்ளைகளுக்கும் நலமே
எனக்கென்று துன்பம்வந்தால் உனக்கென்று வேறு பிள்ளையுண்டு
உனக்கென்று துன்பம் வந்தால் எனக்கென்று வேறு தாயுண்டோ?
தாயைவிடச் சிறந்த தெய்வம் இல்லை
திசை நான்கும் அவள்போல் எவரும் இல்லை
தாயின் பெருமையினைச் சொல்ல வார்த்தையில்லை
தியாகச்சுடரே தாயுருவம் மனதினின்றும் மறைவதில்லை!
இளமையில் ஸ்பரிசம் முதுமையில் பாசம்,
என்றும் உறவின் சிறந்த பந்தபாசம்
இளமையில் நான் உனக்கொரு குழந்தை
முதுமையில் எனக்கு நீயொரு குழந்தை!
வாழ்க்கைப் படகினிலே நீயொரு துடுப்பு
எங்கள் பிறப்பே உன் படைப்பு
எங்கள் வளமே உன் சிறப்பு
எங்கள் நினைவே பாசத்தின் பிணைப்பு!
பூமியைவிடச் சிறந்தவள் தாய்
ஆகாயத்தைவிடச் சிறந்தவர் தந்தை
பூவிலே சிறந்தது மல்லிகை ரோஜா
எங்கள் தாயின் பெயரோ சரோஜா!

Leave a Reply