Year: 2015

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஆண்டாள் -12 ….
    —————————————–

    3f7b42bc-0f6e-4b6a-a0b9-bde2714c1e9f

    கீண்டானை புள்ளின்வாய், தீண்டானை தாமஸத்தை,
    ஆண்டாள் திருப்பாவை ஆறஞ்சால், -வேண்டினாள்
    சொப்பனத்தில் கைப்பற்ற, சொகுஸாய் அவன்மடியில்
    அப்பணத் தின்மேல் அயர்ந்து ….

    அப்பணத்தின் மேல் -பணம் -பாம்பு-அப்பணம் -ஆதிசேடன்….

    கீண்டானை புள்ளின்வாய், தீண்டானை தாமஸத்தை,
    ஆண்டாள் திருப்பாவை ஆறஞ்சால், -வேண்டினாள்
    நோன்பிருந்து, கைத்தலம் நம்பியைக் கொண்டபின்
    வான்புகுந்தாள், வைகுண்ட வாழ்வு ….கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி முன்னிட்டு ”தூவாதஸ நாமத் துதி”….

    கிரேசி மோகன்

    மார்கழி முன்னிட்டு ”தூவாதஸ நாமத் துதி”….

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….

    “கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..

    “களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்
    கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
    உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை
    பலமுற காட்டினை பாதையதை
    பொலபொல என்றுதி காலையை முந்திடும்
    பரவசக் கோதையின் பாசுரத்தால்
    அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை
    கட்டிடக் கேட்டிடும் கேசவனே”….(1)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “சரியபி தாம்பரம் நழுவக தாயுதம்
    பிளிறும்க ஜேந்திரன் குரல்கேட்டு
    பறவைசு தாகரம் விரையவ னாந்திரம்
    எறியசு தர்சனம் விரல்விட்டு
    துரிதநி வாரண முனிகள்த போவனம்
    பறையும்க தாம்ருத காரணனே
    முரளிம னோகர கமலப தாம்புய
    அனந்தந ராயண பூரணனே”….(2)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “அவையென இவையென அளவிடல் தவறென
    கவிமணி மலையணில் கூட்டியதை
    புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை
    மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
    தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட
    குளிர்மழை காத்தனை யாதவனே
    கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக்
    கரணம்செய் காக்கும் மாதவனே”….(3)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை
    அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
    பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய்
    புகல்ஜர கண்டியில் வாழயிலை
    துளசியை மென்றிட குறையிலை என்றிடும்
    நிலைதர நின்றிடும் கோவிந்தா
    அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில்
    வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
    முகநுனி தாரணி கொண்டவனே
    சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
    விதவித பந்தியில் உண்டவனே
    விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
    தொழுரகு ராமனும் பாகவதக்
    கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
    சதைவுயிர் விஷ்ணுவின் சாகசமே”….(5)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….(6)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “சிறைவசு தேவகி கருவச மாகிட
    இரவினில் ஏகினன் கோகுலமே
    கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன்
    தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
    மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும்
    குடுமியின் உச்சமும் பூமணமாய்
    குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற
    களபலி சேய்வளர் வாமனனே ….(7)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “இலைமரு தாணியின் மணமுறை மேனியள்
    திருமகள் பூணிடும் சீதரனே
    அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி
    மலைசிவ சங்கரி சோதரனே
    அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும்
    சிலைபரு தண்டமும் கண்டவுடன்
    விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும்
    விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
    அழியச ராசரம் வந்தவனை
    தசவித வேஷனை முனிமன வாசனை
    தவரிஷி கேசனை வந்தனம்செய்
    தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
    ரகுபதி ராகவ ரூபமெடு
    தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
    தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “கரனுடன் தூஷணை வனஉழை வேஷனை
    தசமுக பூஷனை இம்சைதரும்
    இரணிய ராட்ஷசன் இணையிரண் யாட்ஷகன்
    துரியனின் சூழ்ச்சியை ,கம்சனையும்
    குறைசிசு பாலனை மதுகைட பாணனை
    வதம்புரி மாலனை நம்பிடுவாய்
    பிரமனுய் நாபனை புவியுமிழ் நாபனை
    பதுமம்கொள் நாபனை கும்பிடுவாய்”….(10)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “கரமொடு களவாய் பிடிபட உனதாய்
    உரலிட இழுதா மோதரனே
    மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர்
    மறுவுல கேத்திடும் ஆதரவே
    புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை
    வெளியுற வைத்திடும் யவ்வனனே
    சரியென தப்பென அறியும்ம னத்தினை
    அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை
    பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
    துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை
    துருபதைக் எட்டிட பட்டதனை
    புகுவிட பூதனை விடவுடல் வேதனை
    முலையுறி மாமது சூதனனே
    புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட
    வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ———————————————————————————————————————————————————–
    ————————————————————————————————————————————————————-

    Share
  • மார்கழி மணாளன்  13   திருவனந்தபுரம் – பத்மநாபன்  

     க. பாலசுப்பிரமணியன்

    097265bd-2433-4646-9771-f75a46b7dd7a

    ஆனந்தன் அனந்தன் அச்சுதன்  அரங்கன்

    ஆதிசேஷன் மேலுறை அனந்த சயனன்

    பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்

    பாரினைக் காக்க வந்தான்  பத்மநாபன் !

     

    மாமுனி தேடிடவே மறைந்தான் மாயவன்

    மாயமாய் இலுப்பையில் இணைந்தான் தூயவன்

    மங்கலம் மலர்ந்திடும் மாபெரும் உருவம்

    மா தவன் தண்டத்தில் மும்முறை அடக்கம் !

     

    கருவண்ணம் தலை நாகம்  கருநீலம் உடல்  மின்னும்

    அலையாழி  பால்வண்ணம் அரங்கன்  எழில் குன்றம் !

    தலைவாசல் ஒருபக்கம்  பொன் திருப்பாதம் மறுபக்கம்

    திருமார்போ நேர்நோக்கும்  திருவருளோ நம் பக்கம் !

     

    நிலமகள் அலைமகள் பதம் போற்ற

    கலைமகள் தலைவனும் நாபியில் சிறக்க

    மோனத்தில் யோகத்தில் போகத்தை நிறுத்தி

    மோகனன் தியானத்தில் பூமியின் சுழற்சி !

     

    அலையாழி துயின்றாலும் சிலையாகச் சமைந்தாலும்

    நிலையாத வாழ்க்கையைக் கலையாகப் படைத்தான்

    மரியாத உயிருக்கு மரிக்கின்ற உடல் படைத்த மாயன்

    மனத்துள்ளே நிறுத்திட்டால் மார்கழியில்  மங்கலமே! ‘

     

    ஊழ்வினையால் ஒருடலில் நான் சிறையிருக்க

    ஆழ்கடலில் ஆனந்த சயனத்தில் நீயிருக்க

    தாளருகில் திருவாய் திருமகளும் அமர்ந்திருக்க

    தந்தருள்வாய் தாளிரண்டும் தாசனுக்கே துணையிருக்க  !

     

    வஞ்சமுடை நெஞ்சினில ஆணவமே  ஆர்பரிக்க

    கொஞ்சிவரும் காற்றோ  நாசியிலே நாள் வரைக்கும் !

    மிஞ்சியதாய் ஏதொன்றும் மரித்தவுடன் கிடைப்பதில்லை !

    மாதவனே ! உனையன்றி உறவேதும் உண்மையில்லை !

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ”ஆண்டாள் -11”….
    ————————————

    2347acd2-d5ae-4716-b289-9fad83358b04

    ”நினைப்புள்ளம் நேராக்கும் நாச்சியார் நோன்புக்(கு)
    அனத்தில்லத் தார்க்கும் அழைப்பு: -கனைத்திளங்,
    கற்றெருமைக் கன்றேபோல், காலைப் பசித்திருந்து,
    பற்றெருமை வண்ணன் பதம்”….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 28, 2015

    இவ்வார வல்லமையாளர்கள் 

    தனய் டாண்டன் மற்றும் தீபிகா போடபட்டி 

    Deepika and Tanay3

    வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர்களாக சிறப்பிக்கப் படுபவர்கள் இளம் தொழில் முனைவோர்களான, ‘அதிலாஸ்’ (Athelashttp://getathelas.com/) நிறுவனத்தின் நிறுவனர்கள் திருமிகு ‘தனய் டாண்டன்’ (Tanay Tandon ) மற்றும் ‘தீபிகா போடபட்டி’ (Deepika Bodapati) ஆகியோர். கலிஃபோர்னியா மாநிலத்தின் இந்த இரு இளம் தொழிலதிபர்களும் கல்லூரி மாணவர்கள், இருபது வயதைத் தாண்டாதவர்கள், இந்த ஆண்டு பலகலைக்கழகத்தில் முதலாண்டில் அடியெடுத்து வைத்துள்ளவர்கள். மாணவர்கள் இருவரும் அறிவியல் துறையில் ஆர்வம் மிக்கவர்கள். உயர்நிலைப் பள்ளி நாட்களிலேயே இருவரும் பல அறிவியல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் பெற்றுள்ளனர். தனய் டாண்டன் சிலிக்கான் பள்ளத்தாக்குப் புகழ் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University’) கணிதத்தில் பட்டப்படிப்பையும், தீபிகா போடபட்டி தென்கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of Southern California) பயோமெடிக்கல் என்ஜினியரிங்கில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்கள் துவக்கியுள்ள அதிலாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள எளியமுறை இரத்தப் பரிசோதனைக் கருவியை வணிக அளவில் சந்தைப்படுத்தும் திட்டத்தை, இருவரும் தங்களது பல்கலைக்கழகங்கள் நடத்தும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் போட்டியில் சமர்ப்பித்து பரிசுத் தொகையை வென்று, தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான நிதியையும் பெற்றுள்ளார்கள். இவர்களது இந்தச் சாதனைக்காக தனய், தீபிகா ஆகியோரை வல்லமை விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் நிறுவனர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள்.

    கணினி நிரல்கள் (Computer Programming) உருவாக்குவதில் ஆர்வமிக்க தனய் தொடங்கும் இரண்டாவது தொழில் நிறுவனம் இது. இவருடைய மற்றொரு நிறுவனம் “கிளிப்ட்” (http://clipped.me/). ஆப்பிள் ஐஃபோன் அலைபேசியின் செயலியான ‘கிளிப்ட்’, செய்திகளைச் சுருக்கி முக்கியமான கருத்துகளைப் பட்டியலிட்டுப் படிக்க உதவும் ஒரு மென்பொருள். இந்த இலவச செயலியை ஆப்பிள் (https://itunes.apple.com/us/app/clipped/id583616193) தளத்தில் இருந்து தரவிறக்கிப் பயன்பெறலாம்.

    பள்ளி நாட்களில் இருந்து தனய் மருத்துவப் பரிசோனையில் உதவக்கூடிய இரத்தப் பரிசோதனைக் கருவியை வடிவமைத்து வருகிறார். இதற்காகப் புகழ் பெற்ற அறிவியல் போட்டிகளான கூகுள் நடத்தும் அறிவியில் போட்டியிலும் (Google Science Fair), இன்டெல் அறிவியல் போட்டியிலும் (Intel Science Talent Search) பரிசுகள் பெற்றுள்ளார். கூகுள் போட்டியில் வெற்றி பெற்றதனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

    obamamefinal

    இக்காலத்தில் அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்ட திறன்பேசியில் (ஸ்மார்ட்ஃபோன்), மலிவான விலையில் தயாரிக்கக் கூடிய நுண்ணோக்கி வில்லையை (லென்ஸ்) இணைத்துப் பயன்படுத்தி, அதனை ஒரு சக்திவாய்ந்த நுண்பெருக்கியாக (மைக்ராஸ்கோப்) மாற்றுவது கையடக்க இரத்தப்பரிசோதனைக் கருவியின் (பிளட் டெஸ்டிங் கிட்) அடிப்படை. இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிந்த தனது தாத்தா பற்றியும், இரத்தப்பரிசோதனைக்காக ஆய்வகத்தின் வாசலில் வரிசையாக நிற்கும் நோயாளிகளையும், அதற்கு எடுக்கும் நேரம் பற்றிய தகவல்களைத் தனது தாய் மூலம் அறிந்த தனய் இக்கருவியை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டார்.

    இக்கருவி இயங்கும் விதம்; மலேரியா போன்ற ஒட்டுண்ணி நோய்க்கிருமியால் பாதிப்பா என்பது போன்ற இரத்தப் பரிசோதனை செய்ய, இரத்தத் துளிகளை ஆய்வகத்தின் கண்ணாடிப் பட்டையில் சேகரித்து, சோதனைக்குத் தயார் செய்து கைபேசியை நுண்பெருக்கியாகப் பயன்படுத்தி அதன் வழியாக ஆராய வேண்டும். பரிசோதனைக் கருவியாக மாறிய கைபேசி அதனை 350 முதல் 400 மடங்குவரை உருப்பெருக்கி ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை, இரத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிடும். இந்தத் தகவலை கைபேசியில் உள்ள செயலியின் மென்பொருள் பிற இரத்தப்பரிசோதனை தரவுகளுடன் ஒப்பிட்டு நோயினால் பாதிப்பா என்பது போன்ற தகவலை அளிக்கும். இந்த சோதனைமுடிவை மிகத் துல்லியமாக்கும் முறையில் இப்பொழுது தனய் மேற்கொண்டு கவனம் செலுத்தி வருகிறார். இந்தச் செயல்முறையை இவர் விளக்குவதைக் கீழ்காணும் காணொளி மூலமும், படம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

    Athelas
    காணொளி: https://youtu.be/lxBoZVJJdis

    https://youtu.be/lxBoZVJJdis

    இந்த மாதம் (டிசம்பர் 2015), தனய் பயிலும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு கிளையான, ‘கார்டினல் வென்ச்சர்’ (Cardinal Ventures) என்ற புதுமுறை தொழில்களின் முனைவோர்களை ஊக்குவிக்கும் நிதி முதலீடு செய்யும் (venture capitalist) நிறுவனம் நடத்திய போட்டியில் 60 தொழில் முனைவோர் குழுவினர் பங்கேற்றார்கள். அதில் தனய் டாண்டனின் கண்டுபிடிப்பான எளிய இரத்தப் பரிசோதனைக்கருவி உபயோகத்திலும், சந்தைப்படுத்துவதிலும் நம்பிக்கை தரும் ஒரு முயற்சி என்று பாராட்டப்பட்டு தேர்வு பெற்று பரிசும், நிதி உதவியும் பெற்றது. கூகுளும் இதுபோன்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக தொழில் முனைவோர் உருவாக்கியது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தைத் தேர்வு செய்த மூன்று நடுவர்களில் ஒருவரான ‘ஆனி காடவி’ (Annie Kadavy), இது வணிக முதலீட்டாளர்களைக் கவரும் நல்லதொரு தொழில் முயற்சி எனப் பாராட்டியுள்ளார்.

    Athelas3

    Athelas2

    சென்ற அக்டோபர் மாதம் ‘தீபிகா போடபட்டி – தனய் குழு, அதிலாஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான தீபிகா போடபட்டி படிக்கும் தென்கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோருக்கான ஸ்டீவன் மாணவ கண்டுபிடிப்பாளர் போட்டியில்’ (Stevens Student Innovator Showcase) 24 மாணவர்கள் கொண்ட குழுக்களுடன் போட்டியிட்டனர். தேர்வு செய்யப்பட்ட 6 குழுக்களில், சிறந்த புத்தாக்கத்திற்கான சிறப்புப் பரிசையும், $7,000 பரிசுத் தொகையையும் வென்றனர். மேலும் அதே மாதம், அதே பல்கலைக் கழகத்தின் ‘சிலிக்கான் பீச் தொழில் முனைவோருக்கான நான்காவது ஆண்டு போட்டியின் பரிசாக’ (4th Annual Silicon Beach Awards Venture Competition) $25,000 பரிசையும் பெற்றனர். இந்த பரிசுத் தொகைகளின் உதவி கொண்டு தங்கள் இரத்தப் பரிசோதனைக் கருவியை மேம்படுத்தி, மருத்துவதுறையினர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி, ‘அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்தக நிறுவனத்தின்’ (U.S. Food and Drug Administration) அங்கீகாரம் பெறும் வகையில் வடிவமைக்கப் போவதாக தீபிகா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

    Athelas1

    Deepika and Tanay

    தனய், தீபிகா இருவரும் தங்களது அதிலாஸ் நிறுவனத்திற்காக இதுபோல போட்டிகளில் வெற்றி பெற்ற பரிசுத் தொகைகளாகவே $50,000 வரை நிதி சேகரித்துள்ளனர். இந்த இளம் தொழில் முனைவோர்களின் முயற்சி வெற்றிபெற்று, மருத்துவத்துறையினருக்கு பெரிதும் உதவி புரிந்து, அதன் மூலம் பல்லாயிரம் உயிர்களைக் காக்க வேண்டும் என்று வாழ்த்தி வல்லமைக் குழுவினரின் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    __________________________________________________________________________

    மேலும் தகவலுக்கும் தொடர்புக்கும்:

    Athelas:
    http://getathelas.com/

    கையடக்க இரத்தப் பரிசோதனைக் கருவி பற்றி தனய் டாண்டன் வழங்கும் செயல்முறை விளக்கக் காணொளி:
    https://youtu.be/lxBoZVJJdis (https://www.youtube.com/channel/UCIghdhdj3GY3n0P_IYUZBNA)

    Tanay Tandon:
    http://tanaytandon.com/
    http://clipped.me/
    https://www.facebook.com/tanay.tandon.5
    https://www.linkedin.com/in/tanaytandon

    https://www.youtube.com/channel/UCIghdhdj3GY3n0P_IYUZBNA

    Deepika Bodapati:
    https://www.facebook.com/deepika.bodapati
    https://www.linkedin.com/in/deepika-bodapati-10229773
    http://www.huffingtonpost.com/deepika-bodapati/

    __________________________________________________________________________

    தகவலும் படங்களும் தந்துதவிய தளங்கள்:

    (1)
    The college freshman looking to shake up blood tests
    Athelas CEO Tanay Tandon has developed a blood-testing kit
    Tuesday, 8 Dec 2015
    http://video.cnbc.com/gallery/?video=3000463731

    (2)
    Stanford University’s on-campus incubator Cardinal Ventures
    Dick Costolo’s advice to entrepreneurs
    Harriet Taylor, Tuesday, 8 Dec 2015
    http://www.cnbc.com/2015/12/08/dick-costolos-advice-to-entrepreneurs.html

    (3)
    Next generation of entrepreneurs shines at USC Stevens Student Innovator Showcase
    The ninth annual event awards startups that create viable solutions to global problems
    BY Peijean Tsai, NOVEMBER 2, 2015
    https://news.usc.edu/88158/next-generation-of-usc-entrepreneurs-shines-at-student-innovator-showcase/

    (4)
    USC Stevens Student Innovator Showcase Awards $25K to Student Startups
    https://stevens.usc.edu/usc-stevens-student-innovator-showcase-awards-25k-to-student-startups/

    (5)
    Intel Science Talent Search finalist, vying for thousands of dollars in scholarships.
    http://googleforeducation.blogspot.com/2015_08_01_archive.html

    (6)
    ABC7 STAR SCHOLAR: TANAY TANDON
    https://www.googlesciencefair.com/projects/en/2015/fd6ac2f5d877cecc8705915021b5fc3e5a15f5feb8bde09d0c2f6be1559c2d65

    (7)
    This teenager could revolutionize malaria testing with a cheap smartphone attachment
    by Pavel Curda PAVEL CURDA — 18 Aug 2014
    http://thenextweb.com/insider/2014/08/18/teenager-revolutionize-malaria-testing-cheap-smartphone-attachment/

    __________________________________________________________________________

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 192

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை

    குரலை முதலாகக் கொண்டு
    புனையப்பட்ட பெயர்களுடைய அப்பெண்கள்,
    முதலில் சமமாக நின்றும்
    பின் வட்டமான வடிவில் நின்றும்
    நண்டின் வடிவமாய் நின்று
    கைகளைக் கோத்துக் கொண்டு
    கூத்தாட்டத்தின் தாள உறுப்புகளை ஆராய்ந்தனர். kuravai

    அவர்களுள் குரல் என்ற பெயர் உடைய
    பூங்கொடி போன்றவள்,
    தமது கிளையாகிய துத்த நரம்பின்
    பெயர் கொண்டவளைப் பார்த்து
    “அகன்ற கொல்லைப் புனத்தில்
    நின்ற குருத்த மரத்தினை
    வஞ்சத்தால் முறித்த மாயவனைப்பற்றி
    முல்லைப் பண் இசைத்துப் பாடுவோம்” என்றாள்.

    பின் முல்லைப்பண்ணைப் பாடத் தொடங்கினர்.
    குரல் எனும் பெயர் கொண்டவளின் ராகம்
    மந்தமாக இருக்க,
    இளி எனும் பெயர் கொண்டவளின் ராகம்
    சமமாக இருக்க
    துத்தம் எனும் பெயர் கொண்டவளின் ராகம்
    சற்றே வலிமையாக
    முறைப்படி ஒலித்தன.
    விளரி எனும் பெயர் கொண்டவள்
    வலிமையில்லாத மந்தமான ராகமாய்த்
    துத்தம் என்பவளுக்குச் சுருதி பாடத் தொடங்கினாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நக்கீரநோக்கில் நற்றமிழ்ப்புணர்ச்சியிலக்கணம்

    — முனைவர்   துரை. குணசேகரன்.  

    ThamizhVellathaazhi Dr. Ponmudi Book Cover 2

    ​​​​​​​​​​​​​​​​​​​​​​

    மதிப்புரைவரலாறு:
    இரண்டாயிரத்துப்பதினோராமாண்டின் பத்தாவதுமாதத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, எங்கள் கல்லூரியில் ஆங்கிலத்துறையிற்பணியாற்றும் பேராசிரியர் மகேந்திரனென்பார், முன்பின் அறிமுக-மில்லாதவொருவரை, நான் முன்னதாக ஏற்றுக்கொண்டதற்கிணங்க என் இல்லத்திற்கேயழைத்துவந்தார்.

    அவருடைய நண்பர்களிலொருவர், ஏதோ நூலெழுதியிருப்பதாகவும், அதற்கு மதிப்புரைதருமாறு வேண்டியும் முன்பே அவர் என்னிடம் பேசியிருந்தார். அவர் அழைத்துவந்த அந்த நண்பர், ஒரு நாற்-பதுவயதுமதிக்கத்தக்கவராகவும், பார்ப்பதற்கு மிகவும் எளியவராகவுங்காட்சியளித்தார்.

    அறிமுகம்:
    முதலில், நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். அவருடைய பெயர் பொன்முடியென்றும், திருமறைக்காட்டிலுள்ள ஆயக்காரன்புலமென்றவூரைச்சேர்ந்தவரென்றும், திருநள்ளாற்றிலுள்ள சமுதாயநலவழிமையத்தில் மருத்துவராகப்பணியாற்றுகிறாரென்றும் மகேந்திரன் கூறினார்.

    நாங்கள் தமிழ்மொழியைப்பற்றி பொதுவாகப்பேசிக்கொண்டிருந்தபோது, மருத்துவர் பொன்முடி இலக்கணத்திற்குள்ளேநுழைந்தார். இலக்கணமென்றால், அவர் புணர்ச்சியிலக்கணத்தைப்பற்றியேபேசினார். ஒரு மருத்துவர் புணர்ச்சியிலக்கணத்தைப்பற்றிப்பேசியது எனக்கு வியப்பாயிருந்தது!

    அந்த புணர்ச்சியிலக்கனத்தின்படி எவருமே சரியாயெழுதுவதில்லையென்றும், உரைநடைமட்டுமன்றி, இக்காலத்தில் கவிதைகளுங்கூட புணர்ச்சியைப்பொருத்தவரை பிழையாகவேயுள்ளனவென்றும் ஒரு புதுமையானபார்வையில் அவர் பேசத்தொடங்கினார். நானும் அதற்கு ஈடுகொடுக்கவேண்டியதாயிற்று. முதற்சந்திப்பிலேயே எங்கள் பேச்சு மூன்றுமணிநேரத்துக்குநீடித்தது! அந்த மூன்றுமணிநேரமும் போனதேதெரியாமற்போயிற்று! புணர்ச்சியைப்பற்றி அவர் அவ்வளவுபேசினார்.

    புணர்ச்சியால் பொருள்மாற்றம்:
    புணர்ச்சியை சரியாகப்பயன்படுத்தாததால் பொருளில் குற்றமும் குழப்பமுமுண்டாவதாகவும், புணர்ந்தசொற்கள் பிரித்தெழுதப்படுவதாகவும், மேலும் வல்லினமெய்யை சொற்களில் ஈற்றெழுத்தாய்-நிறுத்துவதாகவும், மகரவீற்றை கெடுத்தபின்னும் புணர்த்துவதில்லையென்றும் தமிழிலக்கணத்தின்படி இவையெல்லாம் குற்றமென்றும் இவற்றைப்போல் இன்னும் பலவற்றையும்பேசினார்.

    அத்துடன் சில எடுத்துக்காட்டுகளை எழுதிக்காட்டி, சொற்களிலும் அவற்றின் வரிசையமைப்பிலும் எந்தமாற்றமுமின்றி, அந்த சொற்களை வெவ்வேறிடங்களில் சேர்த்தும்பிரித்துங்காட்டி, அப்படி சேர்ப்-பதாலும் பிரிப்பதாலும் ஒரு வாக்கியத்தின் பொருளை வேறுவேறாகமாற்றமுடியுமென்றும் விளக்கிக்-காட்டினார். அது ஒரு புதியசெய்தியாயிருந்தாலும் ஏற்கக்கூடியதாயிருந்தது.

    உண்மை:
    அவருடைய பேச்சில் உண்மையிருப்பதாகத்தோன்றியது. மேலும் அவர், ‘ஐயா, பேருந்துநிலையம், அஞ்சல்நிலையம், காவல்நிலையம் என்பனவெல்லாம் பிரித்தெழுதமுடியாத தொடர்மொழிகள். ஆனால் தமிழகமெங்கும் இவை இரண்டிரண்டுசொற்களாக பிரித்துத்தானேயெழுதப்பட்டிருக்கின்றன?’ என்றுகேட்டபோது, எனக்கு மறுமொழியேதும் சொல்லமுடியவில்லை.

    குற்றமில்லையாவென்று வினவினார்:
    ‘துவக்கப் பள்ளி’ ‘உயர்நிலைப் பள்ளி’ ‘மேனிலைப் பள்ளி’ ‘கலைக் கல்லூரி’ என்றெல்லாம் தமிழகமெங்குமுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எழுதப்படுவதை நினைவூட்டி, இவற்றில் வல்லினமெய் சொல்லில் ஈற்றெழுத்தாயிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

    இந்த வல்லினமெய், சொற்கள் புணர்ந்ததாலேயேவந்ததென்றும், புணர்ந்தசொற்களை பிரித்ததுடன், வல்லினமெய்யை ஈற்றெழுத்தாய்நிறுத்தியிருப்பது குற்றமில்லையாவென்றுங்கேட்டார்!

    என்னநினைத்தாரோயென்னவோ, திடீரென்று தாம் கொண்டுவந்திருந்த ஒரு அச்சிட்டநூலினை என்னிடம் தந்து, ‘ஐயா, இதுதான் என் நூல். தாங்கள் தயைகூர்ந்து இந்த நூலை முழுவதுமாகப்-படித்துவிட்டு, உவந்தால் ஒரு மதிப்புரையினை நல்கிடவேண்டும்.’ என்றுகூறினார்.

    ‘காலங்காலமாய் நாம் புணர்ச்சியிலக்கணத்தை கற்றும் கற்பித்தும்வருகிறோம், இவர் சொன்னதெல்லாம் இவ்வளவிற்கு பெரியகுற்றமாயிருக்குமென்று இதுவரை எண்ணிப்பார்த்ததில்லை. இப்போதுபார்த்தால், இதற்காக இவர் ஒரு நூலையேயெழுதியிருப்பதாகச்சொல்கிறார். சரி, இருக்கட்டும்.’ என்றெண்ணிக்கொண்டு அவரிடம் சொன்னேன், ‘சரி. படித்துப்பார்க்கிறேன்.’ என்று.

    நிழலைப்போன்று நீங்காதிருந்தது:
    அன்றிலிருந்து, தமிழ்வெல்லத்தாழியென்ற அந்த நூலை, நேரங்கிடைத்தபோதெல்லாம்படித்தேன். ஒரு நிழலைப்போன்று அந்த நூல் என்னைவிட்டு நீங்காது என் அருகிலேயேயிருந்தது. அப்போது நான் வாங்கிய மகிழ்வுந்தில், மூன்றேமாதங்களுக்குள் பத்தாயிரங்கிலோமீட்டருக்குமேற்பயணஞ்-செய்யவேண்டியிருந்தது. அவ்வளவுதூரமும் என் மகிழ்வுந்து என்னைச்சுமந்ததோயில்லையோ அந்த நூலை சுமந்தேவந்தது!

    தமிழ்வெல்லத்தாழியின் பொருள் கனமானது. ஒரு பத்துப்பக்கத்தை படிப்பேன், உறங்கிவிடுவேன்! ஆனாலும், நூலின் பொருளானது உறக்கத்திலும் என் நினைவிலேநின்று என்னை எழுப்பும், மீண்டும்-படிப்பேன். ஒருவாறாக, நூல்முழுவதையும் படித்து முடித்துவிட்டேன்.

    அறிஞர்பெருமக்கள் ஒரு முடிவுக்குவரவேண்டும்:
    நூலை படித்துக்கொண்டிருக்கும்போதே, நூலிற்காணப்பட்ட பலகருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கனவாகவே தோன்றினாலும், சிலவற்றைப்பொருத்தவரை ஐயப்பாடுகளும் பற்பல வினாக்களும் தோன்றாமலிருக்கவில்லை! சிலவற்றை குறித்துவைத்துக்கொண்டு, அவரை நேரில்வரவழைத்து என் ஐயப்பாடுகளையும் வினாக்களையும் அவரிடமேகேட்டேன்.

    அவரோ, என் ஐயங்களுக்கும் வினாக்களுக்குமான விளக்கங்களை அவருடையபார்வையில் சரியாகவிளக்கிக்காட்டினார். அவர் என்னதான்விளக்கமளித்தாலும், சிலவற்றை அப்படியேயேற்றுக்-கொள்வதற்கு என் மனம் இடந்தரவில்லை. அதேநேரத்தில் அவருடைய அந்த கருத்துகள் சரியானவை-யாகவேயிருக்கக்கூடுமோவென்னும் ஐயமும் இன்னும் இருந்துகொண்டேதானிருக்கிறது.

    இதற்கு என்னசெய்யலாமென்று சிந்தித்தேன். அதன்பயனாய், என் சிற்றறிவிற்கெட்டிய சிலவற்றை தமிழறிஞர்களின்பார்வைக்கு இதன்வாயிலாக கொண்டுவரவிழைகிறேன். அறிஞர்பெருமக்கள் இந்த நூலினை தாங்களுமாய்ந்து அதற்கேற்ப ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

    மதிப்பீடு:
    சிவனும் ஔவையும்

    ‘தமிழ்வெல்லத்தாழி’ என்பது இந்த நூலின் தலைப்பாகும். இந்த நூலை எழுதிமுடித்தபின், அதுவரை நூலுக்கு பெயர்வைத்திராத நூலாசிரியர், அதற்கு என்னபெயர்வைப்பதென்று தாமாக-வெண்ணித்துணியவியலாதபோது, ஒருநாள், தான் அன்றாடம்வணங்கும் ‘கருப்பசாமி’ என்ற சாமியிடம் மனத்தை நிலைநிறுத்தி, ‘கருப்பசாமி, நூலுக்கு பெயர்சொல்’ என்று வேண்டியதாகவும், அந்த கருப்பசாமியோ, ‘என்னிலும்பெரியவரைக்கேள்’ என்றதாகவும், ஆசிரியர் அந்த சிவபெருமானையேகேட்க, அந்த பெருமான் ‘வெல்லம்’ என்று ஒற்றைச்சொல்லைத்தந்தாரென்றுங்கூறுகிறார்!

    இந்த ஒற்றைச்சொல்லைவைத்துக்கொண்டு என்னசெய்வதென்றுபுரியாமல்விழித்த ஆசிரியர், தமிழ்க்கடவுளென்று முருகனைக்கேட்க, முருகனிடமிருந்து ‘ஔவையைக்கேள்’ என்றவிடைவந்ததாம். அதன்படி ஔவையைக்கேட்டபோது, ‘தாழி’ என்று, சிவபெருமானைப்போல் அவரும் ஒற்றைச்சொல்லையேதந்தாராம்.

    ஆசிரியர் பின்னர் அது தமிழ்பற்றியநூலாயிற்றேயென்றெண்ணி, அந்த இரண்டுசொற்களுடன் தமிழென்பதையுஞ்சேர்த்து,

    தமிழ் + வெல்லம் + தாழி = தமிழ்வெல்லத்தாழி
    என்றுபெயர்வைத்தாராம்.

    தலைப்புப்பொருத்தம்:
    இந்த பெயரிலுள்ள வெல்லத்தாழி என்பதை, ‘வெல்லம் + தாழி’ என்றும், ‘வெல்லத்து + ஆழி’ என்றும் இருவேறுவகையிற்பிரித்துப்பார்க்கும்போது, இரண்டிற்கும் வெவ்வேறுபொருள்வருவது சிறப்பு. புணர்ச்சியைப்பற்றியதான இந்த நூலுக்கு, புணர்ச்சியாலேயேசிறப்புறுகின்ற இந்த தலைப்பு, இறையருளாற்கிடைத்ததென்று ஆசிரியர் மகிழ்கிறார்.

    என்னதான் இறைதந்ததாயிருப்பினும், இந்த தலைப்பிற்கான பொருள் மறைபொருளாகவேயிருப்பதால், வாசகர்களுக்கு எளிதில் புரியும்வகையில், ‘நக்கீரநோக்கில் நற்றமிழ்ப்புணர்ச்சி’ என்றபெயர் பொருத்தமாயிருக்குமென்பது என்கருத்து. ஏனெனில், இந்த நூலாசிரியரும், வினாமேல்வினாவாக நூல்முழுவதும் வினவிக்கொண்டேதான்போகிறார்.

    தமிழிலக்கியவரலாற்றை புரட்டிப்பார்த்தால், இறைநம்பிக்கையுடைய புலவர்பெருமக்களுக்கு, இக்கட்டானசூழலில் இறைவன் அருள்கூர்ந்தவரலாறுகளை அறிந்துகொள்ளலாம்.

    ‘உலகெலாம்’ என்று சேக்கிழாருக்கு பெரியபுராணம்பாடுவதற்கு அடியெடுத்துக்கொடுத்ததும், சுந்தரரை தடுத்தாட்கொண்டதுடன், ‘சொற்றமிழால் பாடுக’ என வேண்டிக்கொண்டதும், திருவாதவூராருக்காக பாண்டியமன்னனிடம் பிரம்படிபட்டதுடன், தம்மைப்பற்றி அவர்வாயாற்பாடச்சொல்லி, தான் கால்கடுக்கநின்றுகொண்டு தானே அதை எழுதிக்கொண்ட திருச்சிற்றம்பலத்தான்வரலாறும் அறியக்கிடக்கிறன.

    அதேபோன்று, தம்பொருட்டு மாணவன் நாடுகடத்தப்பட்டானென்பதை அறிந்து, திருமழிசையாழ்வார் கணிகண்ணன்பின்னாற்செல்லும்போது, தன்னுடன் திருமாலையுமழைத்துச்சென்றவரலாறும், மீண்டும் பழையபடியே கோவிலிற்கிடக்கச்செய்தவரலாறும் நாம் அறிந்தவொன்றே.

    இவ்வகையில், சரியானதாக ஒரு முடிவெடுக்கமுடியாதநிலையில், இறைவன்முன்னர் திருவுளச்-சீட்டுபோட்டு, அந்த இறைவனளிக்கின்றமுடிவினை ஏற்றுக்கொள்ளும்வழக்கம் இறைநம்பிக்கை-யுள்ளோரிடத்தில் இன்றுமிருப்பதை நாம் காணமுடிகிறது. அவ்வகையில், மருத்துவர் பொன்முடியும், இறைவனிடம்வேண்டி தம் நூலுக்கு பெயர்சூட்டியிருப்பது, வரலாற்றில் இடம்பெறத்தக்கது.

    நூலெழுந்த சூழல்:
    தமிழ்வெல்லத்தாழியென்னும் இந்த நூல் வெளிவருகின்ற இந்த நேரம், தமிழுக்கு பொற்காலமன்று. தமிழரே தமிழை புறக்கணிக்குங்காலம். வரலாற்றில் களப்பிறர்காலம்போல் தமிழுக்கு இது போதாதகாலம். அப்துல்ரகுமானின்வரியிற்சொல்வதென்றால்,

    அகமிழந்தான் புறமிழந்தான்
    ஆன்மாவை விற்றுவிட்டான்
    முகமிழந்தான் தன்னுடைய
    முகவரியை இழந்துவிட்டான்.
    என்றுசொல்கின்றநேரம்.

    பொல்லாதநேரம்:
    படித்தவன்மட்டுமன்றி பாமரன்கூட ‘தமிழ்த்தாய்வாழ்த்து’ என்று தமிழ்த்தாய்க்கு வாழ்த்துசொல்லுமுன், “ஹலோ, மைக்டெஸ்டிங் ஒன் டூ த்ரீ… தமிழ்த்தாய்வாழ்த்து.” என்றவாறு, முதலில் ஆங்கிலத்தில் ஆறுசொற்களை அள்ளிவீசுவதை விழாக்களில் காணநேரிடுகிறது.

    இது, தமிழன்னையை அவளுடையபிள்ளைகளே மாற்றாந்தாய்மனப்பான்மையோடுபார்க்கும்நேரம்!

    ஆங்கிலமாகிய அந்த வேற்றுமொழியின்மீதுகொண்ட பற்று, தமிழரை இந்தநிலைக்காளாக்கிவிட்டது!

    யுனெஸ்கோவின் அறிக்கையில், இன்னும் ஐம்பதாண்டுகளில் அழிந்துவிடக்கூடுமென்று கருதப்-படுகின்றதும், உலகமுழுவதிலும் படிப்படியாக அழிந்துவருவதுமான பலமொழிகளின் பட்டியலில், தமிழ்மொழியான நம் தாய்மொழி, முதலிடத்திலிருக்கின்ற பொல்லாதநேரமிது.

    கிரீக்கு, இலத்தீன், ஈப்ருவெனப்படும் எபிரேயம், சமற்கிருதம், சீனம், தமிழ் ஆகிய ஆறும் உயர்-தனிச்செம்மொழிகள். அவற்றுள், வாழுகின்றமொழிகள் சீனமும் தமிழுந்தான்! திராவிடமொழிகளின் தாயென்று கால்டுவெல்லாரும், உலகத்தின் தாய்மொழியென்று பாவாணரும்போற்றியது தமிழையே!

    சீரியநோக்கு:
    கோள்களிலொன்றென்றுமட்டுமேயறிந்து, ஒரு கோளுக்கு அமெரிக்கா ஏவுகலமொன்றினை அனுப்பியபோது, ஒருவேளை அந்த கோளில் மனிதர் இருப்பாரேயானால், அவர் இந்த பூவுலகி-லிருந்தேசென்றிருக்கவேண்டுமென்றுகருதி, அந்தமனிதர் அறிந்தமொழி, உலகிலுள்ள மொழிகளுள் மிகப்பழைமைவாய்ந்ததாகிய தமிழாகமட்டுமேயிருக்கக்கூடுமென்று முடிவெடுத்து, தமிழ்மொழிக்கான பலவகையான குறியீடுகளை அந்த ஏவுகலத்தில் வைத்து அனுப்பியது.

    அமெரிக்கர்கள் அது செம்மண்ணிறைந்தகோளென்று இன்றுகண்டுகூறினர். ஆனால், நம் தமிழர்களோ, ‘செவ்வாய்’ என்று அதற்கு அன்றேபெயர்சூட்டிவிட்டனர். என்னவிந்தைபாருங்கள்! ‘மாடுகட்டி போரடித்தால் மாளாதென்றுசொல்லி யானைகட்டி போரடித்த குடும்பம்’ என்றுசொல்லி பெருமைப்-பட்டுக்கொள்வதைப்போல், உலகளவில் பெயர்பெற்றமொழியென்று நாம் நம் மொழியைப்பற்றியும்- பெருமைபட்டுக்கொள்ளலாம்.

    இத்தகைய பல பெருமைகளுக்குரியதும் மிகவும் சிறந்திருந்ததுமான நம் தமிழ்மொழி, இன்று அழிவுறுமொழிகளில் முதலிடத்திலிருக்கின்ற இந்தநேரத்தில், அதனை மீட்டெடுத்துக்காத்து, அதன் பெருமையை மீண்டும்நிலைநாட்டி, மேலும்பெருகவைக்கும் சீரியநோக்குடன்வெளிவருகிறது, இந்த தமிழ்வெல்லத்தாழி.

    மருத்துவர் பொன்முடி மருத்துவத்தைப்பயின்றவராயினும், தம்மை பெற்றெடுத்தவள் தமிழன்-னையென்பதை மறவாமல், அவர் தமிழ்மொழியின்மீது அக்கறைகொண்டு, அதை கற்கமுனைந்து, ஆசானின்றி தானேகற்றாரென்பது ஒருபுறமிருக்க, தமிழ்மொழியில் காலங்காலமாகச்சொல்லப்பட்டு-வருவதும், தமிழிலக்கணத்தின் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி ஆகிய ஐந்துவகைகளுள் எழுத்திலக்கணத்திற்சொல்லப்படுகின்றதுமாகிய புணர்ச்சியிலக்கணத்தைப்பற்றி விரிவானவோர் ஆய்வினைமேற்கொண்டு, பத்தாண்டுகளாக அரும்பாடுபட்டெழுதியதுதான் தமிழ்வெல்லத்தாழி.

    தமிழ்வெல்லத்தாழியின் அடித்தளம்:
    தமிழ்மொழிக்கென்று எண்ணற்றசிறப்புகளுண்டு. அதற்குரிய இலக்கணமேசிறப்புவாய்ந்தது. அந்த இலக்கணத்திலும், யாப்பிலக்கணமென்பது மிகவும் நுட்பமானதும் வியக்கத்தக்கதுமாகும். இது பாவியற்றுவதற்கென்றேயமைந்தது.

    செய்யுளானாலும் உரைநடையானாலும், அதில் புணர்ச்சியிலக்கணம் பெரும்பங்குவகிக்கிறதென்பதும், அதில் பிழையேற்படுமாயின் சொல்லவருகின்ற பொருளிலும்பிழையேற்படுமென்பதும், மருத்துவர் பொன்முடியின்கருத்தாகும். அதனடிப்படையிலெழுந்ததே இந்த தமிழ்வெல்லத்தாழியென்னும் புதுமையானநூல்.

    அடிப்படையானதும் தேவையானதும்:
    இதுவரை பெரிதாயுணரப்படாதிருந்த புணர்ச்சியிலக்கணத்தின் சரியானபயன்பாட்டை, பல்வேறெ-டுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார், நூலாசிரியர். அவர்தருகின்ற அந்தவிளக்கங்களினடிப்படையிற்-பார்த்தால், புணர்ச்சியிலக்கணமானது தமிழ்மொழியின் உரைநடைக்கும் கவிதைக்கும் அவற்றின் பொருள்வெளிப்பாட்டைப்பொருத்தவரை மிகச்சிறந்த நுட்பத்தைத்தரவல்லதென்பதும், இந்த ஒரேகாரணத்தால், தமிழுக்கு புணர்ச்சியிலக்கணம் மிகவும் அடிப்படையானதும் தேவையானதுமாகு-மென்பது அறியக்கூடியதாயிருக்கிறது.

    பொருளில் நுட்பம்:
    எந்தவொருவாக்கியத்திலும், இந்த புணர்ச்சியிலக்கணத்தினால்வெளிப்படுத்திக்காட்டக்கூடிய அந்த வாக்கியத்தின் பொருளிலிருக்கும் நுட்பத்தைவைத்துப்பார்க்கும்போது, உலகிலுள்ள எந்தவொருமொழியும் தமிழ்மொழிக்கிணையானதாக இருக்கமுடியாதென்பதை உறுதியாகக்கூறமுடிகிறது!

    எடுத்துக்காட்டாக,
    1. ‘உன் மகனுடைய பெயர் என்ன?’
    2. ‘உன் மகனுடைய பெயரென்ன?’
    இவற்றுள், முன்னதில் ‘பெயர் என்ன?’ என்றும், பின்னதில் ‘பெயரென்ன?’என்றுமிருக்கின்றன. இந்தமாற்றத்தினால், இவை இரண்டும் வெவ்வேறுபொருளையுணர்த்துகின்றனவென்றால், உங்களால் நம்பமுடிகிறதா? முடியவில்லைதானே? இந்த விளக்கத்தைப்பாருங்கள்:

    ஒருவர், தன்னுடைய மகனுடைய பெயரை நேரடியாகச்சொல்லாமல், வெவ்வேறுகுறிப்புகளைச்சொல்லி கேட்பவரை கண்டுபிடிக்கச்சொல்லும்போது, கேட்பவர் கண்டுபிடிக்கமுடியாமல் சலிப்படைந்து, ‘ஒன் மகனோட பேரு என்னன்னுதான் சொல்லேன்!’ என்பதுண்டன்றோ?

    இவ்விடத்தில், ‘ஒன் மகனோட பேரென்னன்னுதான் சொல்லேன்!?’
    என்றுகேட்பது பொருந்தாதிருப்பதைப்பாருங்கள். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது முன்பிருந்தே பெயரைப்பற்றித்தானென்பதால், ‘பேரென்னன்னு’ என்று சேர்த்துப்பேசுவது தேவையற்றது.

    ‘பெயரென்ன?’ என்பது எங்கேபொருந்துகிறதென்பதை இங்கேபாருங்கள்:

    ஒருவருடைய மகனைப்பற்றி அவனுடைய உயரம், எடை போன்ற குறிப்புகளை பதிவுசெய்து-கொண்டிருக்கும் ஓர் அலுவலரிடம், அவர் சென்று, அந்த குறிப்புகளை சொல்லத்தொடங்கியதும், அந்த அலுவலர், மாணவனின் பெயர் சொல்லப்படவில்லையென்பதால்,

    ‘முதலில் உங்கள் மகனுடைய பெயரென்னவென்றுசொல்லுங்கள்!’ என்றுதானேசொல்வார்? இங்கே ‘பெயர் என்ன?’ என்றுகேட்பது பொருந்தாதன்றோ?

    இரண்டாம்வேற்றுமைத்தொடர்:
    3. ‘உன் மகனுடையபெயரென்ன?’
    இதில், மூன்றுசொற்கள் ஒன்றாகச்சேர்ந்து, தொடர்மொழியாகிநிற்கின்றன. இவ்வாறு பலசொற்கள் சேர்ந்திருக்கும்போது எந்தவொருதொடர்மொழியிலும் அதிலுள்ள முதற்சொல்லுக்கேசிறப்பென்கிறார், ஆசிரியர். அதன்படி, ‘மகனுடையபெயரென்ன?’ என்பதில், மகனென்பதற்கேசிறப்பு. இதை இரண்டாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடரென்கின்றோம், நாம். பொருளடிப்படையில், இது எங்கேபொருந்துமென்பதைப்பாருங்கள்:

    ஒருவர் தன் மகளுடையபெயரை சொல்லிவிட்டபிறகு, அவருடைய மகனுடையபெயரை சொல்-லாமலிருக்கும்போது, அதை தெரிந்துகொள்ளவிரும்பும் அவரது நண்பர் அவரைப்பார்த்து, ‘உன் மகனுடையபெயரென்ன?’ என்றுகேட்பதுதானே இயல்பு? ஆசிரியர், இதில் ‘மகனுடைய’ என்பதற்கு பேசும்போது ஒரு அழுத்தமிருக்குமென்பதையுஞ்சொல்கிறார்.

    4. ‘உன்மகனுடையபெயரென்ன?’
    இதில் நான்குசொற்களுஞ்சேர்ந்திருக்கின்றன. பொருளைப்பார்த்தால், சொல்பவர், தன்மகனுடைய-பெயரைச்சொல்லாமல், இன்னொருவருடையமகன்பெயரைச்சொல்லும்போது, அவரைப்பார்த்து, ‘அவருடையமகன்பெயரிருக்கட்டும், முதலில் உன்மகனுடையபெயரைச்சொல்’ என்றகருத்தில், ‘உன்மகனுடையபெயரென்ன?’ என்றுகேட்பதுதான் பொருந்தக்கூடியது.

    ஆனால், இவ்விடத்தில், ‘உன் மகனுடையபெயரென்ன?’ என்றுகேட்பது பொருந்தாதிருப்பதைப்பாருங்கள்.

    சொற்களையும் மாற்றாமல், அவற்றின் வரிசையமைப்பிலும் எந்தமாற்றமுஞ்செய்யாமல், புணர்ச்சியை தேவைக்கேற்றபடிபயன்படுத்துவதால், சொல்லவருகின்ற பொருளில் இத்தனைவேறு-பாடுகாட்டமுடியுமென்பது புதியசெய்தி. இந்த நுட்பமான பொருள்வேறுபாட்டினை அடிப்படை-யாகக்கொண்டுகட்டப்பட்டதுதான், ‘தமிழ்வெல்லத்தாழி’ எனும் இந்த நூல்.

    தமிழில் புணர்ச்சி:
    புணர்ச்சியென்றால் என்னவென்பதுபற்றி நன்னூலார்,

    மெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களும்
    தன்னொடும் பிறிதொடு மல்வழி வேற்றுமைப்
    பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள்
    இயல்பொடு விகாரத் திணைவது புணர்ப்பே
    {உயிரீற்றுப்புணரியல்-நூற்பா-1}

    என்றுகுறிப்பிடுகிறார். இதன்வழி,
    ‘மெய்யையும் உயிரையும் முதலாகவும் ஈறாகவுமுடைய பகுபதம்பகாப்பதமென்னும் இருபதங்களும், தன்னொடு தானும், பிறிதொடு பிறிதுமாய், அல்வழிவேற்றுமைப்பொருட்களில் பொருந்துமிடத்து, நிலைமொழியும் வருமொழியும் இயல்போடாயினும் விகாரத்தோடாயினும்பொருந்துவது புணர்ச்சியாகும்’ என்பது இதன் பொருளாகும்.

    இருபத்தாறுவகை:
    இயல்பாதல், தோன்றல், திரிதல், கெடுதல் என நால்வகைமாற்றங்கள் நிகழும். வேற்றுமை, அல்வழி என, முறையே பன்னிரண்டு, பதினாறு என இருபத்தெட்டுபுணர்ச்சிகள். இவற்றுள், வேற்றுமையில் தொகைநிலை தொகாநிலையென மொத்தம் பன்னிரண்டும், அல்வழியில், தொகைநிலையில் ஐந்தும், தொகாநிலையில் பதினொன்றுமாக, மொத்தம் இருபத்தெட்டுவகையால் புணர்ச்சியானது நிகழும்.

    அல்வழியில் தொகாநிலையில்வருவன, எழுவாய்த்தொடர் விளித்தொடர் இடைத்தொடர் உரித்தொடர் அடுக்குத்தொடர் ஆகிய ஐந்தும், தெரிநிலையும் குறிப்புமாகிய பெயரெச்சத்தொடர்களும் வினையெச்சத்தொடர்களும் வினைமுற்றுத்தொடர்களுமாகிய ஆறுமாக, மொத்தம் பதினொன்றாகும்.

    இதன்படி, மொத்தமாக இருபத்தெட்டிடங்கள் புணர்ச்சிக்கிடமானவையென்பது எளிதிற்பெறப்படும்.

    சேர்த்தெழுதுவதில்லை:
    இப்படிப்பட்ட வரைமுறைகள் புணர்ச்சியிலக்கணத்தில் தெளிவாகச்சொல்லப்பட்டிருந்தும், புணர்ச்சிக்கிடமான இந்த இருபத்தெட்டிடங்களிலும் நாம் தேவையிருந்தும் பலவிடங்களில் சேர்த்-தெழுதுவதில்லையென்பதையும், அதேநேரத்தில் சிலவிடங்களில் தேவையில்லாதபோதும் சேர்த்-தெழுதிவிடுகிறோமென்பதையும் மருத்துவர் பொன்முடி மீண்டுமீண்டுஞ்சுட்டிக்காட்டுகிறார்.

    இக்காலத்தில், உரைநடையில் எங்காவது எழுவாய்த்தொடரை பார்த்திருக்கிறீர்களாவென்று ஒரு வினாவையுந்தொடுக்கிறார்!

    நமக்கெல்லாம் தெளிவில்லை:
    ஓர் இலக்கணநூலில், ஓரிடத்தில் ‘இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும்’ என்றும், இன்னோரிடத்தில், ‘ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும்’ என்றுமிருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், {த.வெ.தா.- பக்192} ‘இரண்டுமாத்திரையளவொலிக்கும்’ என்றும், ‘ஒன்றரைமாத்திரையளயொலிக்கும்’ என்றும் இவற்றை சேர்த்தெழுதுமளவிற்கு நமக்கெல்லாம் இன்னும் புணர்ச்சியிலக்கணத்தில் தெளிவில்லையென்று குற்றஞ்சாட்டவுஞ்செய்கிறார்.

    அதுமட்டுமன்றி, ‘இத்தகைய நீண்டதான தொடர்மொழிகள், ஒருகாலத்தில் தமிழ்மொழியில் இருந்திருக்கவேண்டும்’ என்கிறார், ஆசிரியர்.

    தொடர்ந்து, ‘ஏனெனில், தொடர்மொழிக்கான விளக்கங்களையும், அவற்றுக்கான நிலைக்களன்களையும், தொடர்மொழிகளை அமைப்பதற்கான விதிமுறைகளையும், நன்றாக வெளிப்படுத்தும்வகையில், இலக்கணநூற்கள் காலங்காலமாக சொல்லிக்கொண்டேவந்திருக்கின்றன.’ என்றுகூறுகின்றார். அது உண்மைதானே?

    பொருட்பிழையும்நேரும்:
    ஆனால் நாம்தான், நீண்டதொடர்மொழிகளை எளிமைப்படுத்தும்பொருட்டு, பிரித்துப்பிரித்-தெழுதத்தொடங்கிவிட்டோம். அதனால், இலக்கணத்திற்கும் நாம் எழுதும் உரைநடைக்கும் மிகுந்த-வேறுபாடுதோன்றிவிட்டது.’ என்றுங்கூறுகிறார்.

    அதுமட்டுமன்றி, ‘தொடர்மொழிகளை சரியானமுறையிலமைத்தெழுதாவிட்டால், மொழியின் நடைமாறுவதோடு, இலக்கணப்பிழையும்நேரும்; பொருட்பிழையும்நேரும்.’ என்று அறிவுறுத்துவதோடு, ‘முதலில் இலக்கணநூற்களையாவது பிழையின்றியெழுதாவிட்டால், தமிழ் அழிவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்.’ என்று கலக்கமுறவுஞ்செய்கிறார்.

    புணர்ச்சிபற்றி ஆசிரியரின் பார்வை:
    1. தொகைநிலைத்தொடர்மொழிகளை எழுதும் முறை:
    ‘தொகை’ என்னுஞ்சொல்லை, ‘விரி’ என்றசொல்லுடன் பொருத்திப்பார்க்கும்போது, அதற்கு ‘மறைந்துவருதல்’ என்றபொருள்வருகிறது. ஆனால், இந்த சொல்லுக்கு, நர்மதாவின் தமிழகராதியில், ‘சேர்க்கை’ ‘கூட்டம்’ என்ற வேறுபட்டபொருளைக்காணமுடிகிறது.{பக்.460 – ஆகஸ்ட் 2000} தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில், எச்சவியலில், தொகைச்சொற்களெல்லாம் நடக்கும் விதம்பற்றிக்குறிப்பிடுகையில்,
    “எல்லாத் தொகையு மொருசொன் னடைய” {நூற்பா – 420}
    என்று தொல்காப்பியர் நூற்பாவமைக்கிறார்.

    இதற்கு சேனாவரையர், ‘அறுவகைத்தொகைச்சொல்லும் ஒரேசொல்லாய்நடத்தலையுடைய’ என்று உரைவகுக்கிறார். இவற்றோடு, அல்வழியின் ஐவகையையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

    ஒரேசொல்லாகவேயெழுதவேண்டும்:
    இதனடிப்படையிற்பார்க்கும்பொழுது, தொகைநிலைத்தொடர்மொழியினை பிரித்தெழுதாமல், {இக்காலத்தில் பிரித்தெழுதப்படுகிறதென்பது நூலாசிரியரின் குற்றச்சாட்டு} அதனை ஒரேசொல்லாகக்கொண்டு, ஒரேசொல்லாகவேயெழுதவேண்டுமென்பது எளிதிற்பெறப்படுகிறது.

    இதனை கருத்தூன்றிப்படித்திருக்கும் மருத்துவர் பொன்முடி, இந்த கொள்கைக்குமாறாக, தொகை-நிலைத்தொடர்மொழிகள் பிரித்தெழுதப்படுவதை, பாடநூற்களிளிருந்தும் அறிஞர்களின் படைப்புகளி-லிருந்தும் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்த பிழை நூற்களில் விரவிக்கிடப்பதை எடுத்துரைக்கிறார். சான்றாக, ஓர் இலக்கணநூலிற்காணப்பட்டதை அவர் எடுத்தாள்வதை கீழேபார்ப்போம். {த.வெ.தா.-பக்.192

    ‘அண்ணன் தம்பி’ ‘ஆடு மாடு’ ‘தாய் தந்தை’ {மூன்றும் உம்மைத்தொகைகள்}

    இவற்றுள், ‘தாய்தந்தை’ என்றிருக்கவேண்டியதைப்பற்றி விளக்கும்போது,

    ‘தாய்தந்தையை அழைக்கவேண்டும்’ என்பதும், ‘தாய் தந்தையை அழைக்கவேண்டும்’ என்பதும் ஒரேபொருளைத்தரக்கூடியனவாவென்று ஓர் வினாவெழுப்புகிறார்.

    நான்காம்வேற்றுமையின் உருபும் பயனும் உடன்றொக்கத்தொகையான ‘தலைவலிமருந்து’ என்பது அதேநூலில், ‘தலைவலி மருந்து’ என்று பிரிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், ‘பிரித்தெழுதும்போது இவை தொகைநிலைத்தொடராகமாட்டாவென்பது இவர்கள் அறியாததுபோலும்! இதைக்கூடப்புரிந்துகொள்ளமுடியாதவர்கள் எவ்வாறு இலக்கணநூலெழுதத்துணிந்தனரென்பது வியப்பைத்தருகிறதன்றோ?’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். {த.வெ.தா. பக்.-193}

    ‘தமிழ் மொழி’ என்று பிரித்தெழுதுதல்:
    ‘தமிழ்மொழி’ என்னும் சொல்லானது, ஒரு தொடர்மொழியாகும். இது, இலக்கணத்தில் ‘இருபெய-ரொட்டுப்பண்புத்தொகை’ எனப்படுகிறது. தொகைநிலைத்தொடரை பிரித்தெழுதக்கூடாதென்பதை முன்பேபார்த்தோம். ஆனால், பாடநூற்களிற்கூட, ‘தமிழ் மொழி’ என்று இது பிரிந்திருப்பதை சுட்டிக்-காட்டுகின்ற ஆசிரியர், நம் தாய்மொழியின் பெயரைக்கூட நாம் சரியாயெழுதாமல் பாடநூற்களிலேயே-பிழையாயெழுதுவதை ஆங்காங்கேசுட்டிக்காட்டி வேதனைப்படுகிறார்.

    ‘தொடர்மொழி’ என்பதே ஒரு தொடர்மொழியென்றும், இலக்கணத்தில் அது வினைத்தொகை-யெனப்படுகிறதென்றும், அந்த இலக்கணநூலில், இதுகூட ‘தொடர் மொழி’ என்று பிரித்தெழுதப்பட்-டிருக்கிறதென்றுங்கூறும் ஆசிரியர், ‘இதையேபிரித்தெழுதும்போது, மற்றவற்றைப்பிரித்தெழுதுவதில் வியப்பேதுமில்லை’ என்றுங்குறிப்பிடுகிறார். {பக்.193}

    2. வல்லினமெய்யில் தமிழ்ச்சொற்கள் முடிவுறாமை:

    ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
    சாயு முகரம் நாலாறு மீறே
    {நன்னூல் – 107}

    இந்த நூற்பாவில், நாலாறெனப்படுகின்ற அந்த இருபத்திநான்கெழுத்துகளே தமிழ்ச்சொற்களுக்கு ஈற்றெழுத்தாய்நிற்பனவென்பது சொல்லப்பட்டிருப்பதால், அவைதவிர பிறவெழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வாராவென்பது கொள்ளப்படுகிறது. இந்த வரிசையில், வல்லினமெய் இல்லையென்பது எண்ணிப்பார்க்கத்தக்கது.

    ஆகையால் அது மொழிக்கு ஈற்றெழுத்தாக வாராதென்பது எளிதிற்பெறப்பட்டது.

    இலக்கணநூற்கள் இவ்வாறு தெளிவாக வரையறுத்திருந்தும், இந்நாளில் உரைநடையில் வல்லின-மெய்யை சொற்களில் ஈற்றெழுத்தாய்நிறுத்துவது அனைத்துநூற்களிலுங்காணப்படுகிறதென்றும், பாடநூற்களுங்கூட இதற்கு விதிவிலக்கல்லவென்றுங்கூறும் ஆசிரியர், ஒருவர் பேசும்போது, பேச்சை வல்லினமெய்யில் நிறுத்தமுடியாதென்றும், அவ்வாறு நிறுத்துவது ஆங்கிலம்போன்றமொழிகளில் இருந்தாலும், தமிழில் அப்படியொருவழக்கம் இல்லவேயில்லையென்றுங்கூறுகிறார்.

    அடிப்படைக்கருத்து:
    புணர்ச்சியின்போது வலிமிகுந்துபுணர்ந்தசொற்களை, அவை புணர்ந்து ஒரு தொடர்மொழியானபின் புணர்ந்தவிடத்திலேயேபிரிப்பதனாற்றான் வல்லினமெய்யை சொல்லின் ஈற்றெழுத்தாய்நிறுத்தவேண்டிய தேவை உண்டாகிறது.

    புணர்ச்சியென்றாலே சேர்க்கையென்றுதானே பொருள், அவ்வாறிருக்க புணர்ந்தசொற்களை பிரித்தெழுதுகிறோமேயென்னும் அடிப்படையானகருத்தைப்பற்றிக்கூட எண்ணிப்பாராமல், தமிழை கற்றவர்க்ளெல்லாங்கூட அதை பிழையாயெழுதுவது ஏனென்று ஒரு வினாவை முன்வைக்கிறார்.

    தொல்காப்பியர்காலந்தொட்டே நூற்பாக்களில் வல்லினமெய் ஈற்றெழுத்தாக வைக்கப்பட்டிருக்-கிறதேயென்றால்,

    வல்லினமெய் சீருக்கேயீறாகிறது:
    ‘மரபுக்கவிதைக்கு சீரளவு அடிப்படையானது. ஒவ்வொருவகைப்பாவிலும் அதற்கென்றுள்ளசீர்-களையேயமைக்கவேண்டும். இதற்கு, ‘வகையுளி’ என்பர், அறிஞர். வேறாய்ச்சொல்வதானால், சீரின் அளவானது மாறுமானால், பாவின் வகையும் வேறாகிவிடும். சீரளவில் மாறுபாடென்பது, யாப்பிலக்-கணத்தின்படி குற்றமாகும்.

    எனவே, செய்யுட்களைப்பொருத்தவரை, அந்த குற்றத்திற்கு இடங்கொடாதபடி, சீரளவிற்காகவும், மெய்யெழுத்துகள் அசைக்கணக்கில் பெரிதானமாற்றமேதும் செய்வதில்லையென்பதனாலும் ஒரு தொடர்மொழியானது வலிமிகுந்தபுணர்ச்சியில்மட்டுமல்லாது, நாம் முன்பேகண்டபடியான இருபத்தெட்டுவகைப்புணர்ச்சியிலும், இயல்பாயினும் விகாரமாயினும் நிலைமொழிவருமொழிகள் பிரிக்கப்படுவதுண்டு.’ என்று விளக்கமளிக்கிறார்.

    அந்தவகையில், வல்லினமெய் சீருக்குத்தானீற்றெழுத்தாகிறதேயன்றி அந்த தொடர்மொழியானது தொடர்மொழியாகவேகொள்ளப்படுகிறதென்பது ஆசிரியரின் கருத்து. ஆனால், உரைநடையைப்-பொருத்தவரை, அவ்வாறு பிரித்தெழுதுவதும் வல்லினமெய்யை ஈற்றெழுத்தாய்நிறுத்துவதும் குற்றமேயென்கிறார்.

    இருபெயரொட்டுப்பண்புத்தொகை:
    உரையாசிரியர்களின் உரைகளும், தமிழறிஞர்களின் எழுத்துகளும், பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான பாடநூற்களுங்கூட இதற்கு விதிவிலக்கல்லவென்றுகூறும் மருத்துவர் பொன்முடி, தம்முடைய நூலில் அனைத்திடங்களிலும் இதுபற்றி சான்றுகளுடன் விளக்கமளிக்கிறார்.
    எ.கா: பொது + தமிழ் = பொதுத்தமிழ்
    இதில், ‘தமிழ்’ என்பது பொதுப்பெயராகவும், ‘பொது’ என்பது சிறப்புப்பெயராகவும் புணர்ந்து, ‘உயிர்முன் கசதப மிகும்’ என்னும் புணர்ச்சிவிதிப்படி வலிமிகுந்து, ஓர் இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகி, ‘பொதுவாகியதமிழ்’ என்று பொருளையும்பெற்றது.

    இவ்வளவிற்கிலக்கணவிளக்கம்பெறுகின்ற பொதுத்தமிழென்பதை, பாடநூற்களில் ‘பொதுத் தமிழ்’ என்று பிரித்தெழுதியிருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், இதில் ‘பொதுத்’ என்பது தகரவொற்றை தன் ஈற்றெழுத்தாய்க்கொண்டிருப்பதையும், இது பிழையென்பதையும் குறிப்பிட்டுச்சொல்கிறார்.

    அ. சங்கநூலிலிடம்பெற்றிருக்கின்ற உரைகள்:
    சங்கச்செய்யுட்களிலிடம்பெற்றிருக்கின்ற உரைநடைகளையும், செய்யுட்களுக்கு உரையாசிரி-யர்களெழுதியுள்ள உரைகளையும்பார்க்கும்பொழுது, உரையாசிரியர்கள் இந்த வல்லினமெய்யீற்றைப்பற்றி கவலைப்பட்டதாகத்தெரியவில்லை. சான்றாக, “அது கேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான்…பெருகிப் பிழையா வினையுள் நடாயிற்று” என்றுள்ளது.

    இதில் வல்லினமெய்யீற்றுச்சொற்கள் உள்ளன. அதுமட்டுமன்றி, புணர்ந்தசொற்களை பிரித்தெழுதுதலாக, ‘பிழையாவினை’ என்று சேர்ந்திருக்கவேண்டியதான ஒரு ஈறுகெட்டவெதிர்மறைப்-பெயரெச்சத்தொடரானது பிரிந்துநிற்பதையும்பாருங்கள்.

    இதனால், ‘பிழையா’ என்பதற்கிருக்கவேண்டிய எதிர்மறைப்பெயரெச்சப்பொருள் அதற்கு இல்-லாமற்போனதுடன், அது, பலர்பாலுக்கான எதிர்காலவினைமுற்றுப்பொருளைக்கொண்டுநிற்கிறது! புணர்ச்சி இல்லாதவிடத்தில், ஒரு எதிர்மறைப்பெயரெச்சத்தின் ஈறு, எதனாற்கெடும்?

    ஆ. சிலப்பதிகாரத்துக்கானவுரையில்:
    “மலைநாட்டிலுள்ள நெடுவேள் குன்றில்…அழைத்துச் சென்ற புதுமையைத் தம் கண்ணாற் கண்ட குன்றக்குறவர்…உரைத்தனர்.” என்றுள்ளது.

    இதில், ஒரு வினையெச்சத்தொடரும், ஒரு மூன்றாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடரும் புணர்ந்-திருந்தும், அவை பிரிக்கப்பட்டதால், அங்கெல்லாம் வல்லினமெய் சொல்லுக்கு ஈற்றெழுத்தாயிற்று.

    ஆனால், ‘புதுமை’ என்றசொல், ‘செயப்படுபொருள்வேற்றுமை’ என்றறியப்படுகின்றதான இரண்-டாம்வேற்றுமையின் ‘ஐ’ என்ற உருபை ஏற்று, ‘புதுமையை’ என்றாகியபின்னர், ஒரு வினைமுற்றுடன்-புணராமல், ‘தம்’ என்னும் ஒரு பெயர்ச்சொல்லுடன்புணர்ந்தது, கூடாப்புணர்ச்சி.

    சிலம்பின் அடியார்க்குநல்லாருரையில், “அழகிய புகாரினைப் போற்றுவோம்” என்றுள்ளது.

    இதிலும், ஒரு பெயெரானது ஐயுருபேற்றது. ஆனால், புணர்ச்சியில் பிழையின்றி, ஒரு வினைமுற்-றுடனேபுணர்ந்தது. பிழையின்றி புணர்ந்தென்னபயன்? ‘புகாரினைப்’ என்பதுடன் அந்த தொடர்-மொழியானது பிரிக்கப்பட்டது, அதில் வல்லினமெய் சொல்லுக்கு இறுதியானது.

    இ. இருபதாம்நூற்றாண்டுரைநடை:
    “பத்துப் பாட்டுகளிலும், மிகச்சிறியபாட்டாகிய முல்லைப் பாட்டிலும், மிகப் பெரியபாட்டாகிய மதுரைக் காஞ்சியிலும் பிரிவுத்துயரைக் காண்கிறோம்”

    மேற்சுட்டப்பட்ட அனைத்தெடுத்துக்காட்டுகளிலும், சொல்லின் இறுதியில் வல்லெழுத்தின் மெய் நிறுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

    இவர்களனைவரும் தவறுசெய்திருப்பார்களென்று கூறவியலாதிருந்தாலும், மருத்துவர் பொன்முடி சுட்டிக்காட்டுகிற இலக்கணத்தினடிப்படையிலும், அவர் அளிக்கின்ற விளக்கங்களினடிப்படையிலும் மேலேகுறிப்பிடப்பெற்றவை அனைத்திலும் வல்லினமெய் சொற்களுக்கு ஈற்றெழுத்தாயிருப்பதை பிழையேயென்று ஒப்புக்கொள்ளவேண்டிய சூழல் உண்டாகியிருக்கிறது.

    3. தொகாநிலைத்தொடர்கள்:
    தொகாநிலைத்தொடர்களைப்பொருத்தவரை, வேற்றுமையில் ஆறும், அல்வழியிலுள்ள ஒன்பதில், இடைத்தொடர், உரித்தொடர், அடுக்குத்தொடர் ஆகியவற்றைமட்டுமன்றி வினைமுற்றுத்தொடரை-யும்பிரிக்கவியலாதாகையால், அவைபோக, மற்றுள்ள ஐந்துதொடர்களுமாக, ஆகமொத்தம் பதினோரு-தொடர்மொழிகளையும் நம்முடைய தேவைக்கேற்றாற்போல் தொடர்மொழியாகவோ அவற்றின் நிலைமொழிவருமொழிகளை பிரித்து தனிமொழிகளாகவோ ஒவ்வோரிடத்திலும் சொல்லவருகின்ற பொருளுக்கேற்றவாறுபயன்படுத்தவேண்டுமென்கிறார்.

    தொகைநிலைத்தொடர்மொழிகளுள், வேற்றுமையில் ஆறும், அல்வழியில் ஐந்துமாகிய பதினோரு-தொடர்மொழிகளையும் பிரிக்கவேகூடாதென்னும் மருத்துவர் பொன்முடி, தொகாநிலைத்தொடர்களிலும், மேற்சொல்லப்பட்டவற்றை பிரிக்கக்கூடாதவையென்றேசொல்கிறார்.

    நான்கைத்தவிர, அல்வழித்தொடர்களான எழுவாய்த்தொடர், விளித்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர் ஆகிய நான்கையும், வேற்றுமையிலுள்ள விரிநிலைத்தொடர்கள் ஆறையும் ஆகமொத்தம் பதினோருதொடர்களைமட்டுமே பிரித்தெழுதலாமென்கிறார்.’

    வரையறை:
    மொத்தமுள்ள இருபத்தாறுதொடர்மொழிகளுள், பிரிக்கக்கூடாதவை பதினைந்து, பிரிக்கக்கூடியவை பதினொன்று.’ என்று வரையறுக்கிறார்.{பக். 156}

    ஒரு பெயரெச்சத்தொடர் சேர்ந்தும் பிரிந்தும்நின்று, எவ்வாறு தேவையானபொருளை சரியாகத்-தருகிறதென்பதற்கு எடுத்துக்காட்டாக, ‘இடிந்தவீடு’ என்றதொடரை எழுதிக்காடுகிறார்.{பக்.148}

    எடுத்துக்காட்டு:
    ‘இடிந்தவீட்டைக்கட்டுவது எளிது, ஆனால் புதுவீட்டைக்கட்டுவது எளிதன்று.’
    ‘இடிந்த வீட்டைக்கட்டுவது எளிது, ஆனால் சுற்றியிருந்த மரங்களையுண்டாக்குவது எளிதன்று.’
    இந்த இரண்டெடுத்துக்காட்டுகளிலும், ‘வீட்டைக்கட்டுவது’ என்னும் இரண்டாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடரும், ‘எளிது’ என்னும் தனிமொழியும் ‘இடிந்த’ என்ற ஒரு பெயரெச்சத்தினைத்-தொடர்ந்துநிற்கின்றன. அவற்றில் எந்தமாற்றமுமில்லை.

    ஆனால், அந்த பெயரெச்சமானது, ஒன்றில் சேர்ந்துநின்றும் மற்றதில் பிரிந்துநின்றும், பொருளில் வேறுபாட்டையுண்டாக்குகிறதென்றும், அந்த வேறுபாடு என்னவென்றும் விளக்கந்தருவதோடு, இவற்றில் சேர்ந்திருக்குமிடத்தில் பிரித்தும், பிரிந்திருக்குமிடத்தில் சேர்த்துமெழுதிப்பார்த்தால், பொருள் பொருந்தாதிருப்பதை காணவுஞ்சொல்கிறார்.

    எச்சமும் முற்றும்:
    பலரும், எச்சம் முற்று ஆகியவைபற்றிய தெளிவின்றியேயெழுதுகின்றனரென்பது நூலாசிரியரின் மற்றுமொருகுற்றச்சாட்டு.

    பெயரெச்சத்திற்குப்பின் பெயரல்லாததும், வினையெச்சத்துக்குப்பின் வினயல்லாததுமாகியசொற்கள், புணர்ந்துநிற்பதை குற்றமென்றுகூறும் ஆசிரியர், எடுத்துக்காட்டுகளை பாடநூற்களிலிருந்தேதருகிறார்.

    ‘இக்காப்பியத்தை இயற்றித் தமிழன்னைக்கு’ {பக். 254}{இயற்றி-வினையெச்சம், தமிழன்னை-பெயர்.
    ‘வெற்றிநங்கையைத் தழுவிப்புலவர்கள்’ [பக்.332} தழுவி-வினையெச்சம், புலவர்கள்-பெயர்.
    ‘பனைமடல்களை வெட்டிக் குதிரை செய்வதிலே உள்ள உயிர்த்துன்பங்கள் பல’
    {பக்.?376} வெட்டி-வினையெச்சம், குதிரை-பெயர்.
    ‘வெட்டிக்குதிரை’ என்ற இந்த தொடர்மொழிக்கு என்னபொருளென்று ஆசிரியர் வியக்கிறார்!

    பிழையும் சரியும்:
    ஒரு பெயரெச்சத்தைத்தொடர்ந்து, அதற்குரிய பெயர்ச்சொல்வருவது மரபு. ஆனால், இரண்டுபெயரெச்சங்கள் அடுத்தடுத்துநிற்பது பிழையென்கிறார்.

    எ.கா; ‘ஆழமான குறுகிய பள்ளத்தாக்குகளையும் நீர்நிலைகளையும் கனிதரும் மரங்களையும் தேனையும் கொண்ட அந்தக் குன்றுக்குக் கொல்லி மலை என்று பெயர்.’
    இதில், ‘ஆழமான’ ‘குறுகிய’ ஆகிய இரண்டுமே தெரிநிலைப்பெயரெச்சங்கள். இதனை, ‘ஆழமானதும் குறுகியதுமான பள்ளத்தாக்குகளையும்…’ என்றெழுதுவதே முறையென்கிறார். {பக்.321}

    வினையெச்சத்தைப்பொருத்தவரை ஒன்றையடுத்தொன்றாக எத்தனைவேண்டுமானாலும்வரலாமென்றும், முடிவில் வினைமுற்றுவருமென்றுங்கூறுகிறார்.

    எகா: ‘எடுத்துவைத்துக்கொண்டிருந்திருக்கிறான்’
    இந்த வினையெச்சத்தொடர்மொழியானது, எடுத்து, வைத்து, கொண்டு, இருந்து ஆகிய நான்கு-வினையெச்சங்களை தொடர்ந்துபெற்று, முடிவில் ‘இருக்கிறான்’ என்ற வினைமுற்றைக்கொண்டு தன் பொருள்முடிவை பெறுகிறது.

    இலக்கணவிளக்கம்:
    ‘ஓடிவந்துநின்ற அழகியகுழந்தை’ – சரி. {தெரிநிலைப்பெயரெச்சத்தின்பின் ஒரேயொரு குறிப்புப்பெயரெச்சம்}
    ‘ஓடிய வந்த நின்ற குழந்தை’ – பிழை. {தெரிநிலைப்பெயரெச்சங்கள்}
    ‘கரிய பெரிய அழகிய சிலை’ – பிழை. [குறிப்புப்பெயரெச்சங்கள்}
    ‘அழகிய வந்த குழந்தை’ – பிழை. {குறிப்புப்பெயரெச்சத்தின்பின் தெரிநிலைப்பெயரெச்சம்}
    “ஆக, பெயரெச்சங்களைப்பொருத்தவரை, தெரிநிலைப்பெயரெச்சமோ குறிப்புப்பெயரெச்சமோ தனக்குத்தானே அடுத்தடுத்துநிற்காதென்றும், எனினும், ஒரு தெரிநிலைப்பெயரெச்சத்தின்பின் ஒரேயொரு குறிப்புப்பெயரெச்சம்வருவது சரியென்பதும், ஆனால், ஒரு குறிப்புப்பெயரெச்சத்தின்பின் தெரிநிலைப்பெயரெச்சம் வரவேவராதென்பதும், இங்கு விளக்கப்பட்டது.” {பக்.327}

    உரைநடையெழுதுவதில் இதுபோன்று சிக்கல்களிருப்பதை ஆசிரியர் எடுத்துக்காட்டுவதோடு, தெரிநிலைப்பெயரெச்சம், குறிப்புப்பெயரெச்சம், வினையெச்சம் வினைமுற்று ஆகியவைபற்றி அறிந்-தெழுதினால்மட்டுமே உரைநடையானது பிழையின்றியமையுமென்கிறார்.

    4. ‘உடம்போ டுயிர்வந் தொன்றுவ தியல்பே’
    இந்த நூற்பாவை கற்றவர்களுங்கூட, அதுபற்றி சிறிதும் எண்ணியேபார்க்காமல், ‘தமிழ் இலக்கணம்’ ‘உயிர் எழுத்து’ ‘மெய் எழுத்து’ ‘நேர் அசை’ ‘தொடர் இயக்கம்’ என்றெல்லாம் தொடர்மொழியா-யிருக்கவேண்டியவற்றை இவ்வாறு பிரித்தெழுதுகின்றனர்.

    இவை சரியானவையல்ல. இவற்றை தமிழிலக்கணம், உயிரெழுத்து மெய்யெழுத்து நேரசை தொடரியக்கம் என்றவாறு சேர்த்துத்தானெழுதவேண்டுமென்கிறார், மருத்துவர் பொன்முடி.

    அதற்கு அவர்தருகின்ற இலக்கணவிளக்கமென்னவென்றால், தொடரியக்கமென்பது வினைத்தொகை, மற்றவை இருபெயரொட்டுப்பண்புத்தொகையென்பதாகும். இப்படிப்பார்க்கும்போது, ஆசிரியரின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

    5. உடம்படுமெய்க்குப்பின்னும் பிரித்தெழுதுதல்:
    புணர்ச்சியில், நிலைமொழியின் இறுதியும் வருமொழியின் முதலும் உயிராகவேயிருப்பின், அவை புணர்வதில் சிக்கல்வருகிறது. அந்த உயிர்களை புணர்த்துவதற்கு,

    ‘இ ஈ ஐவழி யவ்வும், ஏனை
    உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ்விருமையும்
    உயிர்வரின் உடம்படு மெய்யென்றாகும்’

    என்னும் நன்னூற்பாவினடிப்படையில், யகரமும் வகரமும் உடம்படுமெய்யாகவந்து புணர்ச்சியை சிக்கலின்றியமைக்கின்றன. அவ்வாறு உடம்படுமெய்பெற்றுப்புணர்ந்தவற்றை பிரித்தெழுதுவதை குற்றமென்கிறார், ஆசிரியர். எடுத்துக்காட்டாக, ஒரு பாடநூலிலிருந்து,

    ‘இம்மை யின்பத்தைப் பெற வேண்டுவோர்க்குங் கல்வி யறிவு முதன்மையாகும்’
    என்பதைக்காட்டுகிறார்.

    ‘இம்மை + இன்பம் = இம்மையின்பம், கல்வி + அறிவு = கல்வியறிவு ஆகியவை இணைந்-தேவரவேண்டுமென்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

    6. புணர்ச்சியால் மகரங்கெட்டசொல்லை தனியேநிறுத்துதல்:
    பாடம் + நூல் = பாட + நூல் {மகரம் கெட்டது} = பாடநூல். இது புணர்ச்சிமரபு.

    இவ்வாறு, மகரவீறுகெட்டு புணர்ந்திருக்கின்ற இந்த தொடர்மொழியை ‘பாட நூல்’ என்று பிரித்தெழுதுவது பிழையாகும். ஆனால், பாடநூற்களிலேயேகூட, இதுபோன்ற பலதொடர்மொழிகள் பிரித்தெழுதப்படுவதை எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டுக்காட்டுகிறார். ‘மின்சார வாரியம்’ என்பது, தமிழகமுழுவது-மிருக்கிறதென்று, அதையுஞ்சுட்டிக்காட்டுகின்றார்.

    அதுமட்டுமன்றி, மகரவீறு கெடுமாயின், அந்த சொல் உயிரை விதியீறாகக்கொள்கிறது. அதனைத்-தொடர்ந்து உயிர்முதன்மொழிவருமானால், அங்கே ‘அத்து’ என்னும் சாரியைவரவேண்டுமென்கிறார். ‘குடும்ப அட்டை’ என்பது ஒவ்வொருவீட்டிலுமுள்ளது. இதை அத்துச்சாரியையில்லாமலெழுதியிருப்-பதைப்போல், ‘குளத்தாமை’ என்பதை, ‘குள ஆமை’ என்றெழுதலாமாவென்றுகேட்கிறார்!

    7.பிரித்தெழுதுமிடங்கள் இல்லவேயில்லையா?
    மருத்துவர் பொன்முடி, நூல்முழுவதும் சேர்த்தெழுதுவதையேவலியுறுத்துகிறாரே, பிரித்தெழுதுமிடங்கள் இல்லவேயில்லையாவென்னும் வினா, உங்களுக்கெழுவதைப்போன்றே எனக்குமெழுந்தது. ஆனால், அவர் அதற்கும் சரியானவிளக்கத்தைமுன்வைக்கிறார்! அதாவது,

    தேவையிருந்தால் பிரிக்கலாம்:
    ‘ஒரு தொடர்மொழியில் எத்தனைச்சொற்களிருந்தாலும், அவை யாவற்றையுஞ்சேர்த்து, ஒரேசொல்-லாகவேகொள்ளவேண்டுமென்றும், அப்படிப்பட்டவற்றை பிரித்தெழுதுதல் குற்றமென்றும் கடுமை-யாகக்கூறுகின்ற மருத்துவர் பொன்முடி, முன்பேகண்டதுபோல், இருபத்தாறுவகைத்தொடர்மொழிகளுள் பதினோருவகைத்தொடர்மொழிகளை, தேவையிருந்தால் பிரித்துமெழுதலாமென்கிறார்.
    சான்று:
    எழுவாய்த்தொடர்: {பக். 107}
    ‘உன் மாமாவந்திருக்கிறாரே?’
    ‘மாமா வந்திருக்கிறார், ஆனால் அவர் இன்றே ஊருக்குப்போகிறார்.’
    வினாவிலுள்ள, ‘மாமாவந்திருக்கிறார்’ என்ற எழுவாய்த்தொடர், விடையில் ‘மாமா வந்திருக்கிறார்’ என்று பிரிந்திருப்பது, பொருளைச்சார்ந்ததே. வினவுபவர் மாமாவந்திருக்கிறாரேயென்றுகேட்டதற்காக, விடைசொல்பவரும் ‘மாமா’ என்றுதொடங்கவேண்டியதில்லை. ‘ஆமாம்’ என்றுமட்டுமோ, ‘ஆமாம், வந்திருக்கிறார்.’ என்றோசொன்னாற்போதும். ‘மாமா’ என்பதை சொல்லவேண்டியதேயில்லை.

    ஆனால், வந்திருக்கின்ற அந்த மாமா, அன்றே ஊருக்குப்போகவிருக்கின்றசெய்தியின் தாக்கத்தினை உணர்த்தும்பொருட்டு, ‘மாமா வந்திருக்கிறார்…’ என்றுசொல்கிறார். {இதில் சொற்கள் பிரிந்திருப்பதால், இது எழுவாய்த்தொடராகாது} இதை கேட்பவரும் பின்னால்வரப்போகின்ற ஏதோ-வொருபொருளை உணர்த்துவதற்காகத்தான் அவ்வாறுபேசுகிறாரென்பதை உணர்ந்துகொள்வார்.

    வினையெச்சத்தொடர்:
    அதேபக்கத்தில் ஒரு வினையெச்சத்தொடர்:
    ‘உங்கள் மாமா வந்திருக்கிறாராமே, என்னசெய்கிறார்?’
    ‘என்னசெய்கிறார், வந்து இருக்கிறார்.’
    இதில், ‘வந்து’ என்ற வினையெச்சமானது, முதலில் வினைமுற்றுடன்சேர்ந்து வினையெச்-சத்தொடராயிருப்பதும், அடுத்ததில் தொடராயில்லாமல் பிரிந்திருப்பதும் பொருளைச்சார்ந்ததே-யாகுமென்றுகூறுகின்ற ஆசிரியர், “இவ்வாறு தனித்துநிற்பதால், ‘ஒன்றுஞ்செய்யாமலிருக்கிறார்’ என்றுசொல்லவேண்டியதை, ‘வந்து இருக்கிறார்’ என்று பிரித்துப்பேசுவதனாலேயே கேட்பவருக்கு உணர்த்திவிடமுடிகிறதன்றோ?” என்று கேட்கவுஞ்செய்கிறார்.

    இதுபோல், சொல்லவருகின்ற பொருளுக்கு தேவையாயிருப்பின், வினையெச்சத்தொடரை பிரித்தெழுதலாமென்கிறார். ‘இடிந்தவீடு’ என்ற பெயரெச்சத்தொடர் சேர்ந்தும் பிரிந்தும்நின்று எவ்வாறு வெவ்வேறுபொருளைத்தந்ததென்பதை சற்றுமுன் கண்டோம்.

    ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’
    என்பது தொல்காப்பியர்நூற்பா. குறிக்கின்ற பொருளின் சிறப்புடைமையையும் சிறப்பின்மையையும் அறிந்துபயன்படுத்தவேண்டுமென்பதற்காகவே, சொற்களை சேர்த்தல் சேர்க்காதுவிடுத்தல், வலியை மிகுத்தல் மிகுக்காதுவிடுத்தல் இவற்றோடு குறியீடுகள் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை முறையாகப்பயன்படுத்தும்பொழுது, சொல்லவருகின்ற பொருளானது பொருள்மயக்கமின்றி மிகச்சரியாகவெளிப்படுகிறது.

    உலகிலேயே சிறந்தமொழி:
    ஒருவருடைய கருத்தை வெளிப்படுத்தும் கருவிகளுள், மொழியே சிறந்தது. உலகத்திலுள்ள மொழிகளுள் தமிழ்மொழியைப்பற்றி, “ஒரு கருத்தை வெளியிடுவதற்கு உலகிலேயே சிறந்தமொழி, தமிழ்மொழிதான்” என்று, ‘பெர்சிவல்’ என்ற மேலைநாட்டறிஞர் திறந்தமனத்துடன்குறிப்பிட்டுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

    ஆதங்கம்:
    ‘மீண்டும் பிறப்புண்டேல், தமிழனாகப்பிறந்து, திருக்குறளை படித்து மகிழவேண்டும்’ என்று காந்தியடிகள் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டதாக கூறுவர்.

    இவற்றின்வழி, கருத்தை சிறப்பாகப்புலப்படுத்துவதில், தமிழுக்குள்ள திறமானது நன்றாகப்புலப்படும். இவ்வளவிற்கு சிறப்புவாய்ந்த நம் தமிழ்மொழியை, அதன் சிறப்பிற்கு குறைவராதபடி, அதன் திறனறிந்து சரியாகப்பயன்படுத்துவதற்குத்தெரியாமல், அனைவரும் தவறிவிட்டோமேயென்பதுதான் மருத்துவர் பொன்முடியின் அமைதியடையமுடியாததான ஓர் ஆதங்கமாகும்.
    அவர் சொல்கிறார்,
    ‘புணர்த்தவேண்டியசொற்களை புணர்த்தாமலெழுதுவது எவ்வளவிற்குப்பிழையோ, அதைவிடப்-பிழையானது புணர்த்தவேண்டாதவிடத்தில் புணர்த்தியெழுதுவதாகும்’ என்று.

    பொருளேயுணர்த்துகிறது:
    இது, புணர்ச்சியிலக்கணத்தின்படி அனைவருமே ஏற்றுக்கொள்ளவேண்டியதாகும். ஆனால், எங்கெங்கு புணர்த்தலாகும், எங்கெங்கு புணர்த்தலாகாதென்பதுதான் சிக்கலைத்தருவதாயிருக்கும்போலிருக்கிறது. அதற்கென்று மாறாததான விதிகளை வகுத்துத்தந்துவிட்டால், அந்த சிக்கல் எளிதாகிவிடுமென்றேன், நான். ஆனால் அவரோ,

    ‘எந்தவோரிடத்திலும் அங்கே புணர்த்தினாற்சரியாயிருக்குமா புணர்த்தாவிட்டாற்சரியாயிருக்குமா-வென்பதை சொல்லவருகின்ற பொருளேயுணர்த்துகிறது. புணர்ச்சியென்பது சொல்லவருகின்ற பொருளைப்பொருத்தமைவதால், பிரித்தாளக்கூடிய பதினோருவகையானதொடர்மொழிகளும் எங்கெல்லாம் தொடர்மொழியாகவேநிற்குமென்பதையும், எங்கெல்லாம் பிரித்தாளப்படக்கூடுமென்பதையும் பொருள்வகையாற்குறிப்பிட்டுக்காட்டுவதென்பது இயலாதது.’என்றார்.

    பாமரர்மொழியில் புணர்ச்சி:
    ‘இலக்கணமென்றால் என்னவென்றேதெரியாதவர்களான பாமரமக்கள், தங்களுக்குள் இயல்பாக உரையாடுபோது, சேர்க்கவேண்டியவிடங்களில் சேர்த்தும், பிரிக்கவேண்டியவிடங்களில் பிரித்தும் எந்தச்சிக்கலுமில்லாமல் தாங்கள் சொல்லவேண்டிய கருத்தை தெளிவாகவெளியிடுவதை உற்றுநோக்-கினாலே, புணர்ச்சியின் தேவையும் அதன் சரியான பயன்பாடும் நமக்கு நன்றாகப்புலப்படும்.’
    என்றுகூறும் மருத்துவர் பொன்முடி,
    நூலிற்கூட, குழந்தைகளும் தாங்கள் பேசுகிறபோது, ஆறுசொற்கள்வரை பொருளறிந்து சேர்த்துப்-பேசுவதாகக்குறிப்பிட்டு, அவற்றை எடுத்துக்காட்டுகளோடு விளக்குகிறார்.{பக்.64}

    இரண்டாம்வேற்றுமையிலும் நான்காம்வேற்றுமையிலும் உருபு வெளிப்பட்டுவருமாயின், வலி மிகுமென்பது விதி. ஆனால், மருத்துவர் பொன்முடியோ, புணர்ச்சியில்லையென்றால், உருபு வெளிப்-பட்டுவந்தாலும் வலி மிகாதென்கிறார். உண்மைதானே, புணர்ச்சியேயில்லாமல் எப்படிமிகும்?

    இக்காலத்தில் மிகுந்த வலியோடு நிலைமொழியை நிறுத்திவிட்டு, வருமொழியை தனியேயெழுதும்நிலை மேலோங்கியிருப்பதால், இந்த இரண்டுருபுகளிலொன்று எங்குவந்தாலும், அவ்விடத்தில் சொல்லப்படுகின்ற பொருளுக்கு புணர்ச்சி தேவையாயில்லையாவென்பதுபற்றிய நினைவேதுமில்லாமல் வலிமிகுத்துவிடுவதோடு, வருமொழியை பிரித்துமெழுதிவிடுகிறார்களென்று குற்றஞ்சுமத்துகின்ற ஆசிரியர், இந்த போக்கை பாடநூற்களிலும் அடிக்கடிகாணலாமென்கிறார்.

    மொழியியல்வழி விளக்கம்:
    சங்கவிலக்கியங்களில்வரும் உள்ளுறை இறைச்சி ஆகியவற்றைப்போன்று, ஒரு வாக்கியத்தை அதன் பொருளடிப்படையில் அகவமைப்பு புறவமைப்பு என்ற இருநோக்கடிப்படையிற்காண்பர், மொழியியலார்.

    “பொருண்மையியல்விதிகள் அகவமைப்பில் செயல்பட்டால்தான், வாக்கியத்தின் முழுப்பொருளை உணர்வதற்கு தடையேதுமிருக்காது” என்றுகுறிப்பிடுகிறார், அறிஞர் கி.அரங்கன், தன்னுடைய ‘தொடரியல்: மாற்றிலக்கண அணுகுமுறை’ என்றநூலில்.

    மருத்துவர் பொன்முடியின் தமிழ்வெல்லத்தாழியும், வாக்கியத்தின் பொருளில் பொருட்குழப்பமேதுமின்றி, அதிலுள்ள சொற்களில் பொருட்சிறபுறுஞ்சொற்கள் யாவையென்பதை கண்டறிந்து, அவற்றுக்கு சிறப்புண்டாகும்வகையில் புணர்ச்சியை சரியாகப்பயன்படுத்தி, அந்த வாக்கியத்தின் பொருளை தெளிவாகவெளிப்படுத்துமாறு அதனை எழுதவேண்டுமென்பதைத்தான், தன்னுடைய நோக்கமாகக்கொண்டுள்ளது.

    முன்னுக்குப்பின் முரண்:
    தமிழை எப்படிவேண்டுமானாலுமெழுதலாமென்பதுபோல், பலரும் அதை தத்தமக்குத்தோன்றி-யவாறெழுதுவது வேதனைக்குரியதென்னும் மருத்துவர் பொன்முடி, அறிஞர்களாயிருந்தும் அவர்கள் எழுதித்தந்திருக்கின்ற பாடநூற்களிலேயேகூட ஓரிடத்தில் சேர்த்தெழுதியதை பிறிதோரிடத்தில் காரணமேதுமின்றி பிரித்தெழுதுகின்றனரென்பதை நூலில் ஆங்காங்கே சுட்டிச்செல்கிறார்.

    புணர்ச்சிபற்றிய அக்கறையின்மையே இதற்கெல்லாம் காரணம். இந்த நூல் வெளிவந்தபிறகாவது, அவர்களுடைய எழுத்தில் மாற்றமேற்படுமென்று நம்புவோம்.

    வல்லின்மெய்யீற்றில் சொற்களை நிறுத்துவதும், மகரத்தை கெடுத்தபின்னர் அதனை தனியேநிறுத்-துவதும், அதுமட்டுமன்றி, அதனுடன் புணர்ந்திருக்கவேண்டிய உடம்படுமெய்யை தவிர்த்துவிட்டு, வருமொழியாயிருக்கும் உயிர்முதன்மொழியினை எந்தமாற்றமுமின்றி உயிர்முதல்வருமொழியாக-நிறுத்துவதும், பிரிக்கவேண்டியவிடத்தில் சேர்ப்பதும், சேர்க்கவேண்டியவிடத்தில் பிரித்தெழுதுவதும் இதுபோன்ற இன்னபிறகுறைபாடுகளும் எல்லாநூற்களிலும் காணப்படுகிறதேயென்பதுபற்றி சிலரிடம் வினவினால், அவர்கள் வேடிக்கையாக, ‘பழக்கதோசம்’ என்கிறார்கள்!

    தவறானபழக்கமென்பது, மொழிக்கானாலும் நமக்கானாலும் ஆகாததோசமாகத்தானிருக்கும். அது மாற்றப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த நூலை படித்தபிறகாவது என்னைப்போன்றவர்களும் மற்றவர்களும் தம்முடைய எழுத்தில் இதுபோன்ற பிழைகள் நேராவண்ணம் திருத்திக்கொள்ளுதல் தேவையானதே. ஏனெனில், நம்முடைய அறியாமை வெளிப்படுமுன், உண்மையை நாமேயறிந்து, அதற்கேற்ப பிழையின்றி முறையாயெழுதிவிடுவது நலமன்றோ?

    குறியீடுகளின் தேவை:
    ஒரு தொடர்மொழியின் நிலைமொழியோடு முதல்வரியானது முடிவுற்று, அதன் வருமொழியானது அடுத்தவரியில்வரவேண்டியிருக்கும்போது, முதல்வரியின் இறுதியில் ஓர் இடைக்கோடிட்டு, அது ஒரு தொடர்மொழியென்பதை உறுதிப்படுத்தவேண்டுமென்கிறார்.

    அவ்வாறு செய்யவில்லையென்றால், அந்த தொடர்மொழியின் நிலைமொழியை ஒரு தனிமொழி-யென்றேநினைக்கவேண்டியிருக்குமென்றும், சிலநேரங்களில், அடுத்தவரியைப்படித்தபின்னுங்கூட பொருளில் குழப்பமேற்படுவதுண்டென்றுங்கூறுகிறார். அதேபோல், வாக்கியத்தின் பொருளோட்டத்தில் மாற்றமுண்டாகுமிடங்களிலெல்லாம் ஒரு காற்புள்ளியிடுவதும் தேவையானதென்கிறார்.

    நூல்வழியாக அறிந்துகொள்ளவேண்டியவை:
    * வல்லினமெய், தமிழ்ச்சொல்லின் இறுதியில் நிற்காது.
    * புணர்ச்சிக்குப்பிறகு, சொற்களை பிரித்தற்கூடாது.
    * சேர்க்கக்கூடாதவிடங்களில் சேர்த்துவிடக்கூடாது.
    * தொகைநிலைத்தொடர்மொழிகளை பிரிக்கவேகூடாது.
    * புணர்ச்சியின்றி மகரவீற்றை கெடுக்கக்கூடாது.
    * வினையெச்சத்தொடரில் பலவினையெச்சங்களிருக்கலாம். காரணம்பற்றி பிரிந்தும்நிற்கலாம்.
    * பெயரெச்சங்களில், தெரிநிலப்பெயரெச்சமோ குறிப்புப்பெயரெச்சமோ தனக்குத்தானே அடுத்துநிற்காது. ஆனால், ஒரு தெரிநிலைப்பெயரெச்சத்தின்பின் ஒரேயொரு குறிப்புப்பெயரெச்சம் வரலாம்.
    * பெயரெச்சத்தொடரும், தகுந்த காரணமிருக்க, பிரிந்துநிற்பதுண்டு.
    * இலக்கணம் வலிமிகுமென்று வரையறுத்துள்ளவிடங்களிலும், புணர்ச்சியின்றி வலி மிகாது.
    * மற்றகுறியீடுகளைப்போன்றே, இடைக்கோடும் இன்றியமையாதது.
    இவையும் இன்னபிறவும் இந்த நூலின்வழியாக நாம் அறிந்துகொள்ளக்கூடியவையாகும்.

    நூலின் நிறைகள்:
    * இந்தக்காலத்திற்குத்தேவையான நல்லநூல். புணர்ச்சியை நிலைநிறுத்தவந்திருக்கும்நூல்.
    * தமிழுலகில், இன்று பரவிக்கிடக்கின்ற புணர்ச்சிபற்றியதான அறியாமையை அகற்றும்பொருட்டு, இலக்கணப்புரட்சிசெய்யும் சிறந்தநூல்.
    * இதுவரையுள்ள இலக்கணநூற்கள் புணர்ச்சியைப்பற்றி என்னசொல்கின்றனவோ, அவ்விலக்கண-மட்டுமன்றி, நடைமுறைக்கேற்றவகையில் புதியவிதிகளை அமைத்துக்கொள்ள வழிவகுக்கும்நூல்.
    * உரைநடையெழுதுவதில், இந்நாள்வரையிலும் நடைமுறையிலிருந்துவருவதை மாற்றி, ஒரு புதியநடைமுறையை மேற்கொள்ளவேண்டி, தமிழறிஞர்குழாமும் அரசும் கூடிப்பேசி, ஒரு முடிவெடுக்-கவேண்டிய சூழலை உருவாக்கியிருக்கின்றநூல்.
    * புணர்ச்சியென்பது, பொருளைப்பொருத்ததேயென்பதை முதன்முறையாகச்சொல்லும்நூல்.
    * எழுத்து சொல் வாக்கியம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, தொடர்மொழியின் தேவை-யையும் அதன் சிறப்பையும் முழுமையாகவெளிப்படுத்தும் புதுமையானநூல்.
    *ஒரு வாக்கியத்திலுள்ள எந்தவிருசொற்களானாலும், அவற்றிற்கிடையேயுள்ள இலக்கணவுறவுகளை தெள்ளிதின்காட்டி, அந்த சொற்களை புணர்த்துவதாலும் புணர்த்தாமல் விடுத்தலாலுமுண்டாகக்கூடிய பொருள்மாற்றங்களை ஐயமறப்போக்கியதில், மருத்துவர் பொன்முடி தனித்துநிற்கிறார்.

    குறைகள்:
    நூலில் நிறைகள்மட்டுமன்றி, குறைகளுமுள்ளன. அவையாவன:
    * குன்றக்கூறல் இல்லையென்றாலும், மிகைபடக்கூறல் உண்டென்றேசொல்லவேண்டும். இலக்-கணம்பேசுகின்ற இந்த நூலில், இசையென்றும் யோகமென்றும்பேசுகிறார்.
    * கூறியதுகூறலென்பது நூல்முழுவதுங்காணப்படுகிறது. இது, படிப்போர்க்கு சலிப்பையேற்படுத்தக்கூடும்.
    * ஒவ்வொருநூலின்கீழும் ஒவ்வொருபுணர்ச்சிபற்றியும் மீண்டுமீண்டுங்கூறியிருப்பதை தவிர்த்து, ஒவ்வொருபுணர்ச்சியின்கீழும் அனைத்துநூற்களைப்பற்றியும் ஒருங்கிணைத்துக்குறிப்பிட்டிருந்தால், பக்கங்களின் அளவை வெகுவாகக்குறைத்திருக்கலாம்.
    * தொடர்மொழிகள் ஒரேசொல்லாகத்தானிருக்கவேண்டுமென்பதற்காக, மருத்துவர் பொன்முடி, முப்பத்திரண்டெழுத்துகள்வரை ஒரேசொல்லாயெழுதியிருக்கிறார். ஒருசொல்லில் எழுத்துகள் ஓர் அளவுக்குமேலிருக்கும்போது, அதை இடைவிடாமற்படிப்பதென்பது எவருக்குமே எளிதன்று.

    தொகுப்புரை:
    தமிழையே புரட்டிப்போடுவதாக, முற்றிலும் புதியநோக்கிலமைந்துள்ளது தமிழ்வெல்லத்தாழி.

    இதில் இடம்பெற்றிருந்த பல அறிஞர்களின் பெயர்கள் நீக்கப்படவேண்டுமென்று நான் கேட்டுக்-கொண்டபோது, மறுப்பேதுஞ்சொல்லாமல், எனது கருத்தை அப்படியேயேற்றுகொண்ட நூலாசிரியருடைய பெருந்தன்மையை பாராட்டுகிறேன்.

    முற்றிலும் புதியகருத்து:
    தொல்காப்பியர்காலந்தொடங்கி இக்காலம்வரை, எவருமேயெண்ணிப்பார்த்திராத ஒரு புதுமை-யானசிந்தனை; தொடாத துறை. இதுதான் தமிழ்வெல்லத்தாழியின் அடிப்படைகளில் இன்றியமையாதது. எனவே, இனியுங்காலந்தாழ்த்தாமல் அறிஞர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவெடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதென்றேகருதுகிறேன்.

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருட் காண்ப தறிவு
    {குறள்423}

    என்பதற்கிணங்க, இந்த நூலின்மெய்ப்பொருளையும் அறிஞர்கள் ஆய்ந்தறிந்து, அதன்பின்வரும் முடிவின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். புணர்ச்சியையும் அதன் பயன்பாட்டையும் புதியகோணத்திலாய்ந்திருக்கும் இந்த நூலைத்தந்த நூலாசிரியருக்கும், அவருடைய நூலுக்கும், வரவேற்பினையும் வாழ்த்தினையுமளிக்கவேண்டும்.

    உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
    புரத்தின் வளமுருக்கி பொல்லா – மரத்தின்
    கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோல் மாந்தர்
    மனக்கோட்டந் தீர்க்கும்நூன் மாண்பு.

    என்கிறது நூலின் சிறப்புகுறித்து நன்னூற்பாயிரம். அறியாமையை போக்கி, அறிவை வளர்த்து, மனக்கோணலை மாற்றுகின்ற ஆற்றல்வாய்ந்ததே நல்லநூலுக்கு அடையாளம். அவ்வகையில், என் அறியாமையிலிருந்து என்னை வெளிக்கொணர்ந்து, என்னை பெரிதுமாற்றியவொருநூலுக்கான மதிப்-புரையினை, நானேநல்கியதை பெரும்பேறாகக்கருதுகிறேன்.

    இந்த நூல் வெளிவந்தபிறகு, பழியோ புகழோ எதுவந்தாலும் அதிலிருந்து அந்த ஆனைமுகனே-காக்கவேண்டுமென்பதை “…பழிவரினும் புகழ்வரினும் சேர்ந்துபணிந்தேன் திருவடிகள் காப்பு” என்று தம் காப்புச்செய்யுளில் குறிப்பிடுவதிலிருந்து, ஆசிரியர் இரண்டையுமேயெதிர்பார்த்துத்தானிருக்கிறா-ரென்பது புலப்படுகிறது.

    அறிஞருலகம் ஒன்றுகூடி, புணர்ச்சிதொடர்பாக, மருத்துவர் பொன்முடியளித்துள்ள புதிதான இந்த கருத்துகளை நன்கு விவாதித்து, நல்லவொருமுடிவினை எட்டுதலும்வேண்டும், அதன்வழியாக, தமிழ்மொழியை அதன் அழிவுப்பாதையிலிருந்து மீட்டு, அதனை என்றுமேயழியாததாய் சீருடனும் சிறப்புடனும் நாம் அனைவரும் கொண்டாடிடவும்வேண்டும்.
    நன்றி.
    என்றும்
    மாறாத்தமிழன்புடன்,
    துரை குணசேகரன்
    29 – 06 – 2012

    _____________________________________________

    முனைவர் துரை குணசேகரன்,
    எம்.ஏ {தமிழ்}, எம்.ஏ {சமூகவியல்}, எம்.ஏ {மொழியியல்}, எம்..எட்., எம்.ஃபில்., பிஎச்.டி, பி..ஜி.டி.எல்.,
    தலைவர், தமிழ்த்துறை,
    மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, மயிலாடுதுறை
    மாநிலத்தலைவர், தமிழாராய்ச்சியாளர்ப்பேரவை.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (45)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12398954_930453380342195_1941367938_n
    134429018@N04_rராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (2.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • ஜன்னல் தேசங்கள்!

    -கவிஜி 

    வீதி முழுக்க
    அடைத்துக் கிடக்க
    ஒற்றை ஜன்னல்
    மட்டும்
    திறந்தே கிடக்கும்
    வீட்டுக்குள்
    யார்தான் இருப்பார்கள்?
    என்றபடியே
    பயந்து பயந்து
    வீதியில் நடந்து
    மழையில் நனைந்தும்
    நனையாமலும்
    சுற்றும் முற்றும்
    பார்த்தபடி ஜன்னல்
    அருகே சென்று
    எட்டிப் பார்க்கும்
    முன் கணமொன்றில்
    ஏதேச்சையாக
    என்வீட்டு ஜன்னலை
    திரும்பிப் பார்த்தேன்…
    எப்போதும்போல்
    கன்னத்தில்
    கைவைத்து
    இந்த ஜன்னலைப்
    பார்த்துக் கொண்டிருந்தேன்
    நான்…!

     

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (9)

    க. பாலசுப்பிரமணியன்

    குழந்தையின் மனநலத்தில் ஒலியின் தாக்கங்கள்

    education

     ஒலி அதிர்வுகள் எவ்வாறு ஒரு குழந்தையின் மன நிலையையும் மன நலத்தையும் பாதிக்கின்றன என்பதைப் பற்றி நாம் பார்த்தோம். சில நேரங்களில் சில அதிர்வுகள் ஒரு குழந்தையுன் மனத்தில் பயத்தையோ அல்லது வேறு விதமான பாதுகாப்பின்மையையோ ஏற்படுத்தக் கூடும். உதாரணமாக ஒரு உலோகத் தட்டு கீழே விழும் பொழுதோ அல்லது ஒரு கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கும் பொழுதோ அல்லது ஒரு சைரனின்  ஒலி குறிக்கிடும் பொழுதோ ஏற்படும் ஒலி அதிர்வுகள் குழந்தையின் கவனத்தை திடீரெனறு ஈர்ப்பது மட்டுமின்றி ஒருவிதமான அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தலாம்.

    இந்த மாதிரி சூழ்நிலைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி குழந்தைகளை இதை ஏற்றுக்கொள்ள தகுந்த நிலைக்கு தயார் செய்வதில் பெற்றோருக்கு மிகப் பெரிய பங்குண்டு.

    சில நேரங்களில் வீடுகளில் ஏற்படும் தகராறுகளின் போது குழந்தைகளை அருகிலோ அல்லது மடியிலோ வைத்துக் கொண்டு பெற்றோர்கள்  அலறவோ, கத்தவோ அல்லது வெறுப்பும் நெருப்பும் கக்கும் வார்த்தைகளைக்  கூறுதல் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டிய செயல். இந்தச் சூழ்நிலைகள் குழந்தையின் மன உணர்வுகளையும்   மனத்தின் சமத்துவ நிலையையும் பாதிக்கின்றன.

    அடிக்கடி இப்படிப்பட்ட சூழ்நிலைகளைப் பார்த்து வளரும் குழந்தைகளின் பேச்சுத் திறன்களில் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி பேசுவதில் தயக்கம், பொறுமையின்மை மற்றும் தான் பார்த்த பேச்சு வழிகளைப்போலவே பேசுகின்ற திறன்களையும் குழந்தைகள் பெறுவதாகக் கூறப்படுகின்றது.  பொதுவாக குழந்தைகளை முன்னிறுத்தி பெற்றோர்கள் வாக்குவாதங்களிலும் உணர்வு மிஞ்சிய சொல்லாடல்களையும் தவிர்த்தல் அவசியம்.

    இதே போன்ற சூழ்நிலைகளை உருவாக்கும் தொலைகாட்சிப் படங்கள், உரையாடல்கள் மற்றும் நிகழ்சிகள் குழந்தைகளின் மனதை மிகவும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மனோதத்துவ வல்லுனர்கள் சொல்லுகின்றனர். மேலும் தொலைக்கட்சிகளில் வரும் சண்டைகள், கோபக்கனல்களை வெளிப்படுத்தும் காட்சிகள், வன்மையைத் தூண்டும் காட்சிகளால் குழந்தைகளின் மனத்தில் ஏற்படும் தாக்கத்தைப் பற்றிய அளவற்ற ஆராய்ச்சிகள் இவைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி விவரித்துள்ளன. இதை உடன் ஏற்படும் தாக்கங்கள் என்றும் நீண்ட காலத்தில் ஏற்படும் தாக்கங்கள் என்றும் பிரித்து விளக்கியுள்ளனர்.

    பேச்சுத் திறன்களைப் பற்றியும் அவைகளால் மூலையிலும் மனந்திலும் ஏற்படும் தாக்கத்தைப் பற்றியும் ஆல்பர்ட் மெஹ்ராபியன் செய்த ஆராய்ச்சியில் வெறும் 7 விழுக்காடுகள் வார்த்தை தருகின்ற பொருள்களாலும், 38 விழுக்காடுகள் குரல், உணர்வுகள், குரலின் ஏற்ற தாழ்வுகள் ஆகியவற்றாலும், மீதி 55 விழுக்காடுகள் அந்த நேரத்தில் ஒருவர் காட்டும் உடல் மொழிகளாலும் அறியப்படுகின்றன என்று கூறுகின்றார். ஆகவே ஒரு குழந்தை ஒலிகளைக் கேட்கும் பொழுது அதைச் சொல்பவரின் குரல் ஏற்ற தாழ்வுகள் மற்றும் நோக்கங்களையும் அவருடைய உடல் மொழியையும் மிகுந்த ஆர்வத்தோடும் கவனத்தோடும் நோக்குகின்றது.

    உதாரணமாக 5 முதல் 7 ஆண்டு வயதுள்ள சிறார்கள் ஒரு திரைப்படத்தில் வருகின்ற சண்டைக்காட்சிகளைப் பார்க்கும் பொழுது தாங்கள் அமர்ந்துள்ள இடத்திலிருந்து எழுவதும் அருகிலுள்ள பொருள்களைக் கைகளால் குத்துவதும் அல்லது ஒரு காதல் காட்சியைப் பார்க்கும் பொழுது வெட்குவதும் அடிக்கடிப் பார்க்கபடும் ஒரு நிகழ்வு, ஆகவே ஒலியும் ஒளியும் நம்முடைய மனத்திரையில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

    எவ்வாறு இந்தத் திறன்களை ஆக்கபூர்வமாக மனநலத்தின் வளர்ச்சிக்கும் அறிதல் மற்றும் கற்றல் ஆகிய திறன்களை மேன்மைப் படுத்துவதற்கும் நல்ல ஒரு உபகரணமாக பயன்படுத்தலாம் என்பதை நாம் பின் வரும் தொடர்களில் பார்ப்போம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(101)

    செண்பக ஜெகதீசன்

    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை.  (திருக்குறள்-555: கொடுங்கோன்மை) 

    புதுக் கவிதையில்… 

    கொடுங்கோல் ஆட்சியாளர்தம்
    கீர்த்தி செல்வம் அழித்திட
    எதிரிப்படை
    எதுவும் வேண்டாம்,
    துன்பத்தில் துடித்து
    குடிமக்கள் சிந்திடும்
    கண்ணீரே போதும்…! 

    குறும்பாவில்… 

    கொடுங்கோலரை அழிக்கும் படை,
    குடிமக்கள் துன்புற்றழுத
    கண்ணீரே…! 

    மரபுக் கவிதையில்… 

    மக்களை வதைத்து முடிசூடி
      –மன்பதை ஆண்டிடும் கொடுங்கோலர்
    பக்கமாய் வந்தே அழித்திடத்தான்
      –படைகள் எதுவும் வேண்டாமே,
    துக்கம் மேலுறக் குடிமக்கள்
       -துன்பம் தாங்கா தழுதகண்ணீர்,
    மக்கள் படையாய் அவர்வாழ்வை
      –மீண்டும் எழாமல் அழித்திடுமே…! 

    லிமரைக்கூ… 

    கொடுங்கோல் ஆட்சியரை அழித்திடும் படை
    கொதித்திடும் குடிமக்களின் கண்ணீர்,
    கொடிய ஆட்சியாளர்க்குக் கொடுத்திடும் விடை! 

    கிராமிய பாணியில்… 

    ஆயுதம்வேண்டாம் ஆயுதம்வேண்டாம்
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்,
    கொடுங்கோலு ஆட்சியயையே
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்… 

    படவேண்டாம் படவேண்டாம்
    பொல்லாத அரசாங்கத்தப்
    போக்கிடத்தான் படவேண்டாம்,
    பாடுபட்ட பொதுசனங்க
    பொறுக்காத தும்பத்தில
    அழுதகண்ணீர் ஒண்ணேபோதும்,
    அழிஞ்சிடுவார் கொடுங்கோலர்… 

    அதால,
    ஆயுதம்வேண்டாம் ஆயுதம்வேண்டாம்
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்,
    கொடுங்கோலு ஆட்சியயையே
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்!

     

     

    Share
  • மார்கழி மணாளன்  12 திருக்குடந்தை      சாரங்கபாணி  

    க. பாலசுப்பிரமணியன்

     

    காவிரிக் கரையோரப் பஞ்சரங்கம்

    பூவிரி பொற்றாமரை விண்ணோக்கும் !

    மாமுனி ஹேமரின் தவக்கோலம்

    மாலினி இலக்குமி மகளாய் வேண்டும் !

     

    தவப் பயனோ தரணியின்  வினைப் பயனோ !

    தாமரை ஆயிரம் நடுவே வந்தது கோமளமே!

    தாயாரே தவமுனிக்கு வந்தாள் மகளாய்

    தரணிக்குக் குடமுழுக்குக் குடந்தையிலே!

     

    வில்லேந்தி வந்தான் வைகுந்தன் சாரங்கன்

    சொல்லேந்தி நின்ற தவமுனியர் பேரன்பன் !

    பண்ணேந்திப்  பாசுரங்கள் ஆழ்வார்கள் பாடிடவே

    தலையேந்திக்  கிடந்தானும் எழுந்தான் அருளிடவே    !

     

    பிரபந்தத்தைச் சேர்த்தளித்த பரந்தாமன்

    பிரபஞ்சத்தைக் காக்கின்ற பேரருளாளன்

    பிரகலாதன் துயர்தீர்த்த நரசிம்மன்

    பிறவிப்பயன் கொடுக்கின்ற நாரணன் !

     

    தங்கமென மின்னிவிடும் செங்கதிரில் திருமேனி

    பங்கமில்லா பக்தியிலே பொங்கிவரும் அருள்கேணி !

    மூதடைந்தும் சூதறியா சபரியும் பக்தியுடன்

    சுவைத்தளித்த பழத்தினையும் சுவைத்த தேனீ !

     

    அன்புடை நெஞ்சங்களில் அவன் ஆட்சி

    ஆராவமுதன் அகிலத்தின் அருள்காட்சி !

    நினைத்தாலே சொர்க்கம் அவன் வாசல்

    நிலையாத வாழ்வுக்கு அவன் காவல் !

     

    வாராக உருவெடுத்து வேதங்கள் காத்தவனே

    வாரணம் அழைத்திடவே விண்ணிருந்து வந்தவனே!

    வைகுந்த அழகுடனே  வாசலில் அருள்பவனே

    வாடுகின்றேன் வேண்டுகின்றேன் வந்தருள்வாய் வேதவனே !

     

     

    Share
  • காள​மேகப் புலவர்

    — மு​னைவர் சி.​சேதுராமன்.

    ஒவ்​வொரு காலத்திலும் ​புலவர்கள் பலர் ​தோன்றி தமிழன்​னைக்குக் காலத்தால் அழியாத பல காவியங்களைச் செய்து அணி ​செய்தனர். அவர்கள் ஆக்கியளித்துள்ள இலக்கியங்கள் உலகை வியக்க வைக்கும் அறிவுக் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.

    தமிழன்​னைக்குப் ​பெரு​மை ​சேர்த்த புலவர் ​பெருமக்களில் ஒருவர்தான் காளமேகப் புலவர் ஆவார். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காள​மேகப் புலவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்று அ​னைவராலும் புகழப்பெற்றார்.

    நினைத்தவுடன் எதைப் பற்றியும் கவிதை பாடுவதில் வல்லவர்களே ஆசுகவி என்று அழைக்கப்படுவார்கள். ஆசு கவிகளிலே​யே காளமேகப் புலவர் தன்னிகரற்ற பேராற்றல் படைத்தவராக விளங்கினார்.

    காளமேகப்புலவர் பாண்டி நாட்டில் நூற்​றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருமோகூர் என்னும் திருத்தலத்திலே கோயில் பணியாளராக இருந்த அந்தணர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் என்றும், காளமேகம் என்பது அவரது இயற்பெயரே என்றும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றார்கள். ஆனால் வரதன் என்பதே அவரது இயற்பெயர் என்றும் ​வேறு சில அறிஞர்கள் எடுத்துரைப்பது ​நோக்கத்தக்கது.
    இதற்கு ஆதாரமாக,

    “வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
    வீசுகவி காள மேகமே – பூசுரா
    விண்தின்ற ​வெவ்வழலில் வேவுதே பாவியேன்
    மண்தின்ற பாணமென்ற வாய்”

    என்ற அதிமதுரகவியின் பாட​லைச் சான்றாகக் கூறுகின்றனர். எனவே வரதன் என்பதே காள​மேகப் புலவரின் இயற்பெயர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது.

    மோகனாங்கியின் மீது காதல்:
    இளமைப்பருவத்தில் ஸ்ரீரங்கம் திருமால் கோயிலிலே வரதன் கோயிற் பணியாளாக வேலைபார்த்துக் கொண்டிருந்தார். திருவரங்கத்திற்கு அருகில் திருவானைக்கா என்ற சிவத்தலம் உள்ளது. அத்தலத்தில் நடனக்கலை மூலம் இறைப்பணி செய்யும் தேவரடியார்கள் இருந்தார்கள். அத்​தேவரடியார்களில் ஒருத்தியான மோகனாங்கி மிகவும் அழகானவள். அவளுக்கும் வரதனுக்கும் காதல் மலர்ந்தது.

    வைணவரான வரதனும், ​சைவ மதத்​தைச் ​சேர்ந்த ​மோகனாங்கியும் அன்பால் கட்டுண்டு பழகி வந்தார்கள். ஒருநாள் ​மோகனாங்கி ​வெட்கம் அ​டையும்படியான ஒரு நிகழ்ச்சி ந​டை​பெற்றது.

    அது மார்கழி மாதம். திருவா​னைக்காவில் உள்ள சம்பு​கேசுவரர் ​கோயில் சன்னதியில் ​மோகனாங்கி திரு​வெம்பா​வை பாடும் மு​றை ​அன்று வந்தது. ​மோகனாங்கி தன் ​தோழிகளுடன் சன்னதியில் நின்று திரு​வெம்பா​வையில் வரும்,

    “உன்​கையில் பிள்​ளை உனக்​கே அ​டைக்கலம் என்று
    அங்கப் பழஞ்​சொல் புதுக்கு​மெம் அச்சத்தால்
    எங்கள் ​பெருமான்! உனக்​கொன்று உ​ரைப்​போம் ​கேள்;
    எம்​கொங்​கை நின்னன்பர் ​அல்லாதார்​தோள் ​சேரற்க!
    எம்​கை உனக்கல்லாது எப்பணியும் ​செய்யற்க!
    கங்குல் பகல் எம்கண் மற்​றொன்றும் காணற்க!
    இங்குஇப்பரி​சே! எமக்கு எங்​கோன் நல்குதி​யேல்
    எங்​கெழில் என்ஞாயிறு எமக்​கே​​லேஓர் எம்பாவாய்!”

    என்ற பாட​லை மனமுருகப் பாடினாள். அந்தப் பாட​லைக் ​கேட்டதும் அவளுடன் இருந்த ​தோழிகள் பலரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

    தான் ​வைணவரான வரத​னைக் காதலிப்பதா​லே​யே தம் ​தோழிகள் தன்​னை ஏளனம் ​செய்து சிரிக்கின்றனர் என்று புரிந்து ​கொண்ட ​மோகனாங்கி ​மிகுந்த ​வேத​னைக்கு உள்ளானாள். ​“உம்மு​டைய ​கைகள் உனக்​கேயன்றி ​வேறு எவர்க்கும் எந்தப் பணி​யையும் ​செய்யாது இருக்குமாறும், இரவும் பகலும் எம்மு​டைய கண்கள் உன்​னையன்றி ​வேறு எந்தப் ​பொரு​ளையும் காணாது இருக்குமாறும், இ​றைவ​னே அருள்புரிவாயாக! இவ்வாறு சிவ​பெருமானிடம் ​வேண்டுகின்ற ​மோகனாங்கி திருமா​லை வணங்கும் ​வைணவரான வரதனிடம் ​தொடர் ​கொண்டுள்ளா​ளே என்ப​தை நி​னைத்​தே ​தோழிகள் சிரித்தனர். அத​னைப் புரிந்து ​கொண்டு மன ​வேத​னைப்பட்ட ​மோகனாங்கி சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

    வைணவர் ​சைவரானார்:
    அன்றிரவு வரதன், ​மோகனாங்கியின் இல்லத்திற்குச் ​சென்றார். அவரது வர​வைக் கண்டதும் ​மோகனாங்கி கதவி​னை அ​டைத்துத் தாழிட்டாள். வரதன் கத​வைத் திறக்குமாறு ​கெஞ்சிக் கூத்தாடினார். ​​நெடு​நேரம் ​வேண்டியும் அவள் கத​வைத் திறக்கவி​லை. இதனால் வரதன் மிகுந்த மன உ​ளைச்சலுக்கு ஆளானார்.

    வரதன் வீட்டிற்கு ​வெளியிலிருந்தவா​றே, “​மோகனாங்கி! நீ கத​வைத் திறக்கவில்​லை என்றால் நான் என் உயி​ரை விட்டுவிடு​வேன்” என்று கூறிய​தைக் ​கேட்ட ​மோகனாங்கி, எங்​கே வரதன் இறந்து விடுவா​ரோ என்றஞ்சிக் கத​வைத் திறந்தாள்.

    கத​வைத் திறந்தவள் வரத​னை உள்​ளே விடவில்​லை. அவள் வரத​னைப் பார்த்து, “நான் உமக்கு ​வேண்டு​மென்றால் நீர் ​சைவராக மாற​வேண்டும். நீர் உட​னே ​சென்று சிவதீட்​சை ​பெற்றுக் ​கொண்டு வருக! இல்​லை​யெனில் என்​னை மறந்துவிடுக!” என்று கூறிவிட்டுக் கத​வைப் படீ​ரென்று சாத்திக் ​கொண்டாள்.

    இத​னைக் ​கேட்ட வரதன் சற்​றே நி​லை கு​லைந்து ​போனார். தன் காதலுக்கு மதம் தடையாக இருப்பதை உணர்ந்த வரதன், ​மோகனாங்கியின் மீது ​கொண்ட அன்பினால், “​மோகனாங்கி நீ என்மீது ​கொண்ளுள்ள அன்புதான் எனக்கு முக்கியம். நான் உட​னே ​சென்று சிவதீட்​சை ​பெற்றுக் ​கொண்டு ​சைவனாக மாறி வருகி​றேன்” என்று கூறிவிட்டுச் ​சென்றார்.

    அவளிடம் கூறியவா​றே சிவதீட்​சை ​பெற்று ​வைணவராக இருந்த வரதன் ​​சைவராக மாறினார். அ​தோடு மட்டுமல்லாது திருவரங்கக் ​கோயில் பணியிலிருந்து நின்றுவிட்டார். திருவா​னைக்கா சம்பு​கேசுவரர் ​கோயிலில் (பரிசாரகர்) ச​மையற்காரராகப் பணியில் சேர்ந்தார். ​வரதன் சைவராக மாறியதால் ​மோகனாங்கியுடனான காதல் ​கைகூடியது. ​ ​மேலும் வரதன் திருவானைக்காவில் சிவனோடு வீற்றிருக்கும் தேவி அகிலாண்​டேஸ்வரி​யை நாள்​தோறும் வரதன் வழிபட்டு வந்தார். தேவியின்மீது தீராத அன்புகொண்ட அடியாராக வரதன் வாழ்ந்தார்.

    வரதன் காள​மேகமானார்:
    இங்ஙனம் வரதன் ​கோயிலில் பணியாற்றி வரும்​போது ஒரு நாளிரவு அவர் பணி​செய்த க​ளைப்பின் காரணமாகச் ​சோர்வினால் ​கோவில் மண்டபத்தி​லே​யே அயர்ந்து உறங்கிவிட்டார்.

    அப்​போது அக்​கோயிலில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்​டேஸ்வரி அசதியால் வாய் திறந்து உறங்கும் வரதன் முன் வந்து, கல்விக்குரிய பீஜாட்சரத்​தை அவரது நாவில் எழுதி, ‘இன்றுமுதல் உனக்குக் காள​மேகம் எனப் ​பெயர் விளங்குவதாக!’ என்று அருள் புரிந்து ம​றைந்தாள்.

    மண்டபத்தில் வரதானாகப் படுத்திருந்தவர் கனவு கண்ட​தைப் ​போன்று விழித்ததும் காள​மேகமாக எழுந்து நின்றார். கடல்ம​டை திறந்தாற்​போல் அவர் வாயிலிருந்து கவி ​வெள்ளம் பாய்​தோடி வந்தது.

    தமக்கு அருள்புரிந்தது ​தேவி அகிலாண்ட ஈஸ்வரி​யே என்ப​தை உணர்ந்து களிப்​பெய்தி கூத்தாடினார். அன்​னையின் அரு​ளை எண்ணி எண்ணி வியந்து வாயாரத் துதித்து, ‘திருவா​னைக்கா உலா” என்ற சிற்றிலக்கியத்​தைப் பாடினார். அதன் அரு​மை ​பெரு​மைக​ளை உணர்ந்த பலரும் கரிய ​மேகம் ம​​ழை​யைப் ​பொழி​வை​தைப் ​போன்று கவி ம​ழை ​பொழிவதால் “காள​மேக​மே” என்று வரத​னைப் ​போற்றி வாழ்த்தினர். அன்றிலிருந்து வரதன் காள​மேகப் புலவரானார்.

    இது குறித்து ​வே​றொரு வரலாறானது, “அக்காலத்தில் சம்பு​கேசுரத்தில் ஒரு ​வேதியன் அகிலாண்ட ஈச்வரி​யை வித்​தையின் ​பொருட்டு உபாசித்து வந்தனன். ஒரு நாள் ​மோகனாங்கி​யை ​நோக்கி அர்த்தசாம பூ​சையின் குடமு​றை கழிந்தவுடன் தம்​மை உடன​ழைத்துப் ​போகக் கூறித் தாம் ஒரு மண்டபத்தில் உறங்கினர். தாசி, அர்த்தசாமத்தில் குடமு​றை கழிந்ததும் ​வேதிய​ரைக் காணாது தனித்து வீடு ​சேர்ந்தனள். ​கோயில் தாணிகர் முதலி​யோர் திருக்​கோயில் தாளிட்டு வீடு ​சேர்ந்தனர்.

    பரிசாரகர் விழித்துக் ​கோயில் திருக்காப்பிட்டிருப்பதறிந்து மீண்டும் மண்டபத்தின் ஒரு புறத்திலுறங்கினர். முதலில் வித்​தை விரும்பி உபாசிப்பவனுக்கு அநுக்கிரகிக்க அம்​மை எழுந்தருளி அவன்முன் தரிசனந் தந்து வா​யைத் திறக்க என, உபாசகன் தாமதித்து அருவருத்த​மையால் மீண்டு மண்டபத்திலுறங்கும் பரசாரகரிடத்திற் ​சென்று வாய்திறக்கக் கட்ட​ளையிட்டனர். பரிசாரகர் ஆகூழால் வாய் திறந்தனர். அம்​மை வி​தைக்குரிய பீஜாட்சரத்​தை அவன் வாயிற் பதித்து இன்று முதலுனக்குக் காள​மேக​மெனப் ​பெயருண்டாக என ம​றைந்தனர்.

    காள​மேகர் கனாக் கண்டவர் ​போல் விழித்து எதிரில் யா​ரையும் காணாது தரிசனந் தந்தவள் உலக ராணியாகிய அகிலாண்ட ஈச்வரி​யென்றறிந்து வாயாரத் துதித்துத் திருவா​னைக்காவுலாப் பாடி மகிழ்ந்து அதுமுதல் பலதலங்களுக்குஞ் ​சென்று தரிசித்துப் பல தனிப்பாடல்க​ளைப் பாடினர்” (அபிதானசிந்தாமணி – ப.,510) என்று அபிதான சிந்தாமணியில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

    காள​மேகப் புலவரின் தலப் பயணம்:
    காள​மேகப் புலவர் பல திருத்தலங்களுக்கும் ​சென்று இ​றைவ​ன்மீது தனிப்பாடல்கள் பல பாடி வழிபட்டார். திருவாரூர் ​சென்று தியா​கேச​ரை வழிபட்ட​போது அங்கிருந்தவர்கள் காள​மேகப் புலவரின் புல​மை​யைப் பரி​சோதிக்க விரும்பினர்.

    காள​மேகப் புலவரிடம் இ​றைவனான தியாகராசருக்கு அணிவித்திருந்த ​வைரப் பதக்கம் அறுந்து விழவும், பின் அப்பதக்கம் ​பொருந்தவும் பாடுமாறு கூறினார்கள். இதற்குக் காள​மேகப் புலவர் உடன்பட்டு,

    “அன்னவயல் சூழ்ந்திருக்கும் ஆரூரா ​நெஞ்சத்தில்
    இன்னம் வயிர மிருப்பதா – முன்ன​மொரு
    ​தொண்டன் மக​னைக்​கொன்றுஞ் ​சோழன்மக​னைக்​
    கொன்றுஞ்
    சண்டன் மக​னைக் ​கொன்றுந் தான்.”

    எனப் பாடி அப்பதக்கத்​தை அறுத்து கீ​ழே விழ ​வைத்து மீண்டும் அப்பதக்கம் ​பொருந்தப் பாடினார். இத​னைக் கண்ட அ​னைவரும் விப்பில் ஆழ்ந்தனர்.

    தாம் நி​னைத்த ​போதும், பிறர் விரும்பும்​​போதும் கவி பாடக்கூடிய ஆற்ற​​லைக் காள​மேகப் புலவர் ​​பெற்றிருந்த​தை அறிந்தவர்கள் அவ​ரை, “ஆசுகவியால் அகில உலகமும் புகழ் வீசும் கவி காள​மேகம்” என்று புகழ்ந்து ​போற்றினர்.

    மேலும் காள​மேகப் புலவர் தம்​மை மதிக்காது நடந்து ​கொண்ட சம்பந்தாண்டான் என்பவன் மீது வ​சை பாடினார். காள​மேகப் புலவர் வ​சைபாடுவதில் வல்லவராக இருந்ததால் அவ​ரை, “வ​சைபாட வல்லான் காள​மேகம்” என்று அவ​ரைப் புகழ்ந்தனர்.

    தனக்கு வந்திருந்த ​நோய் தீர ​வேண்டும் என்பதற்காக ​வைத்தீசுவரன் ​கோவில் மண்​ணை உண்டார். உட​னே காள​மேகப் புலவரின் ​நோய் முற்றிலும் குணம​டைந்தது. இத​னைக் கண்டுணர்ந்த அவர்,

    “மண்டலத்தி னாளும் வயித்தியராய்த் தாமிருந்தும்
    கண்டவி​னை தீர்க்கின்றார் கண்டீ​ரோ – ​தொண்டர்
    விருந்​தைப் பார்த்துண்டருளும் ​வேளூ​ரென் னாதர்
    மருந்​தைப் பார்த்தாற்சுத்த மண்”

    என்ற பாட​லைப் பாடி இ​றைவ​னை வணங்கி வழிபட்டார்.

    பல தலங்களுக்கும் ​சென்று அங்குள்ள இ​றைவ​னைப் புகழ்ந்தும் இழிப்ப​தைப் ​போன்று ம​றைமுகமாகப் புகழ்ந்தும்​ ​சொல்நயமும் ​பொருள் நயமும் மிக்க பல பாடல்க​ளைக் காள​மேகப் புலவர் பாடினார். தமக்கு ஆதரவு நல்கியவர்க​ளைப் புகழ்ந்தும் அவமதித்தவர்க​ளை வ​சைபாடி இகழ்ந்தும் அவர் பல தனிப்பாடல்க​ளையும் பாடினார். இதனால் இன்றளவும் ‘வ​சைபாடக் காள​மேகம்’ ​என்ற ​பெயர் இலக்கிய வரலாற்றில் நின்று நி​லைத்துவிட்டது.

    திரும​லைராயன் அ​வைக்குச் ​செல்லுதல்:
    காள​மேகப் புலவ​ரை விரும்பி அவருடன் வாழ்ந்து வாழ்ந்த தாசி ​மோகனாங்கி தனக்கு அணிகலனில் (ந​கையில்) பதிப்பதற்காக திரும​லைராயன் பட்டினத்து முத்து ​வேண்டு​மென்று அவ​ரைக் ​கேட்டாள். என​வே காள​மேகப் புலவர் திரும​லைராயன் பட்டினத்திற்குப் புறப்பட்டார்.

    தஞ்​சை மாவட்டத்துக் கடற்க​ரை நகரமான நாகபட்டினத்துக்கு அருகில் உள்ளது திரும​லைராயன் பட்டினம். அத​னை விஜயநகரப் ​பேரரசிற்கு உட்பட்ட மன்னன் திரும​லைராயன் என்ற சிற்றரசன் ஆட்சிபுரிந்து வந்தான். இவனது காலம் கி.பி.1455 – 1468 என்று கூறுவர். இது​வே காள​மேகப் புலவர் வாழ்ந்த காலமாகும்.

    திரும​லைராயனின் அரச​வையில் 64 புலவர்கள் இருந்தனர். அவர்க​ளைத் தண்டி​கைப் புலவர்கள் என்று அ​ழைப்பர். சிவி​கை, பல்லக்கு, கழுத்தில் அணியும் ஒருவ​கை அணி என்று தண்டி​கை என்பதற்குப் பல ​பொரு​ளைக் கூறுவர். திரும​லைராயன் அப்புலவர்கள் அமர்ந்து ​செல்வதற்குப் பல்லக்குகள் அளித்துச் சிறப்புச் ​செய்திருந்ததால் அவர்க​ளை மக்கள் தண்டி​கைப் புலவர்கள் என்று அ​ழைத்தனர்.

    இவர்களின் த​லைவராக அதிமதுரகவிராயர் என்பர் திகழ்ந்தார். இப்புலவர் திரும​லைராயனிடம் ​பெரும் ​செல்வாக்கப் ​பெற்றவராகவும் அகந்​தை நி​றைந்தவராகவும் விளங்கினார். ​மேலும் அரச​வையில் மற்ற புலவர்கள் இடம்​பெறாத வ​கையில் வஞ்சகமாக அவர்க​ளைத் தடுக்கும் ​செயல்களிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இத​னையும் ​கேள்வியுற்ற காள​மேகப் புலவர் அவரது ​செருக்​கை அடக்க ​வேண்டும் என்று கருதி திரும​லைராயன் பட்டினத்திற்கு வந்து ​சேர்ந்தார்.

    அதிமதுரகவியும் தண்டி​கைப் புலவர்களும் தத்தமக்குரிய பல்லக்குகளில் அமர்ந்து வீதி வழி​யே அரச​வை​யை ​நோக்கி வந்து ​கொண்டிருந்தார்கள். அப்​போது தண்டி​கைப் புலவர்கள், “அதிமதுர கவியார் வாழ்க!” என்று தங்கள் த​லைவ​ரைப் ​போற்றி முழக்கமிட்டுக் ​கொண்டு வந்தார்கள்.

    அங்கு குழுமியிருந்த மக்கள் அ​னைவரும் எழுந்து நின்று அதிமதுரகவியாருக்கு வணக்கம் ​தெரிவித்தார்கள். அத​னை​யெல்லாம் பார்த்துக் ​கொண்டு ஒரு க​​டையின் முன்பல​கையில் காள​மேகப் புலவர் அமர்ந்திருந்தார். க​டையருகில் நின்றவர்கள் அதிமதுரகவிக்கு அடக்கத்துடன் எழுந்து நின்று வணக்கம் ​தெரிவித்தனர். இத​னை வியப்புடன் காள​மேகப் புலவர் பார்த்துக் ​கொண்டு அமர்ந்திருந்தார்.

    இத​னைப் பல்லக்கில் ​சென்று ​கொண்டிருந்த அதிமதுரகவி கவனித்துவிட்டார். தன்​னை மதிக்காது தனக்கு வணக்கமும் ​சொல்லாது அமர்ந்திருந்த காள​மேகப்புலவரின் ​செயல் அவருக்குச் சினத்​தை வரவ​ழைத்தது. தன் பல்லக்கு முன்​னே தடி​யோடு ​சென்று ​கொண்டிருந்த கட்டியங்கார​ன் காள​மேகத்திடம் ​சென்று தடியால் தட்டி எழுந்து நின்று வணக்கம் கூறுமாறு கூறிய​தையும் அதற்கு எந்தப் பதிலும் கூறாமல் காள​மேகப் புலவர் கட்டியங்கா​​​னைப் பார்த்து,

    “அதிமதுர​​ மென்​றே யகில மறியத்
    துதிமதுரமா ​யெடுத்துச் ​சொல்லும் – புது​மை​யென்ன
    காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக்
    கூட்டுச் சரக்குத​னைக் கூறு”

    என்று பழித்துப் பாடினார். அத​னைக் ​கேட்ட அதிமதுர கவி தனது தூதன் ஒருவ​னை காள​மேகத்திடம் ​சென்று ​அவர் யார் என்ப​தை அறிந்து வருமாறு கூறி அனுப்பினார். அவனும் ​சென்று காள​மேகப் புலவரிடம், “நீர் யார்?” என்று ​கேட்க அதற்குக் காள​மேகப் புலவர்,

    “தூ​தைந்து நாழி​கையிலாறு நாழி​கைதனிற்
    ​சொற் சந்தமா​லை ​சொல்லத்
    துகளிலாவந் தாதி​யேழு நாழி​கைதனிற்
    ​றொ​கைபட விரித்து​ரைக்கப்
    பாதஞ்​செய் மடல் ​கோ​வை பத்து நாழி​கைதனிற்
    பரணி​யொரு நாண் முழுது​மே
    பாரகாவிய​மெலா ​மோரிரு தினத்தி​லே
    பகரக் ​கொடிக் கட்டி​னேன்
    சீதஞ்​செயுந் திங்கண் மரபினானீடு
    புகழ் ​செய்ய திரும​​லைராயன்முன்
    சீறுமாறாக​வே தாறுமாறுகள் ​சொல்
    திருட்டுக் கவிப் புலவ​ரைக்
    காதங்கறுத்துச் ​செருப்பிட்டடித்துக் கதுப்பிற்
    பு​டைத்து ​வெற்றிக்
    கல்ல​ணையி​னொடு ​கொடிய கடிவாளமீட்​டேறு
    கவி காள​மேக நா​னே”

    என்று கவி பாடி அனுப்பினார்.

    அதிமதுரம் கடுஞ்சினம் ​கொண்டார் அந்தக் க​டையின் முன்பாக​வே காள​மேகப் புலவ​ரை அவமானப்படுத்த எண்ணி அரண்ம​னைப் பணியாளன் ஒருவ​னை அ​​ழைத்து, “கால் வராகனுக்கு ​மேகமும் பசுவும் இரத்தினமும் வாங்கி வா!” காள​மேகம் இருந்த க​டைக்கு அனுப்பி ​வைத்தார்.

    பணியாளன் க​டைக்காரரிடம் ​சென்று, “ஒரு வராகனுக்கு ​மேகமும் பசுவும் இரத்தினமும் ​கொடு!’ என்று காசி​னை நீட்டினான். க​டைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்​லை. அவர் திருதிரு என்று விழித்தார். இத​னைப் பார்த்த காள​மேகம் சிரித்தார்.

    காள​மேகம் சிரிப்ப​தைப் பார்த்த க​டைக்காரன் அவ​ரைப் பார்த்து, “இவர் என்ன ​கேட்கிறார்? நீர் ஏன் சிரிக்கிறீர்?” என்று எரிச்சலுடன் ​கேட்டார்.

    அத​னைக் ​கேட்ட காள​மேகப் புலவர், “ஐயா அவர் ​கேட்பது காராமணி. வராக​னை வாங்கிக் ​கொண்டு ​பொரு​ளைக் ​கொடுத்தனுப்புங்கள்” என்று கூறினார். க​டைக்காரர் ​பொரு​ளைக் ​கொடுத்து அரசப் பணியாள​னை அனுப்பிவிட்டு பணியாளன் கூறியதற்குரிய விளக்கத்​தைக் கூறுமாறு காள​மேகத்திடம் ​கேட்டார்.

    அதற்குக் காள​மேகப் புலவர், “ஐயா ​மேகம் என்றால் கார்; பசு என்றால் ஆ; இரத்தினம் என்றால் மணி இம்மூன்​றையும் ​சேர்த்துப் பாருங்கள் காராமணி என்பது வரும்” என்றார்.

    க​டைக்காரர் காள​மேகப் புலவருக்கு நன்றி​யைக் கூறிவிட்டு, ஐயா க​டைக்கு வந்து ​பொருள் ​கேட்டவன் அதிமதுர கவியாரின் ஆள் என்பது எனக்குத் ​தெரியும். எங்​கே அவர் ​கேட்கும் ​​பொரு​ளைப் புரிந்து ​கொண்டு தரமுடியாமல் கவிராயரின் கடுங்​கோபத்திற்கு ஆளாக ​நேரிடு​மோ என்று பயந்​தேன். நல்ல​வே​ளை காப்பாற்றினீர்கள்!” என்று நன்றி​யோடு காள​மேகப் புலவ​ரை வணங்கினார்.

    அதிமதுரகவியின் ​செயல் காள​மேகப் புலவருக்கு வருத்தத்​தை ஏற்படுத்தியது. அதிமதுர கவியார் தம் புல​மையால் எளி​மையான மக்க​ளையும் அதிகம் கற்காதவ​ரையும் மனம் ​போன ​போக்கில் மட்டம் தட்டி தற்​பெரு​மை ​கொள்கிறார் என்ப​தை அறிந்து ​கொண்ட காள​மேகம் அரச​வைக்​கே ​சென்று அவரது அகந்​தை​யை அடக்க ​வேண்டும் என்று கருதினார்.

    அ​தே​நேரத்தில் அதிமதுரகவியார் தன்​னை மதிக்காத காள​மேகப் புலவ​ரை மன்னனால்தான் அடக்க ​வேண்டும் என்று கருதி, மன்னனிடம் கூறி காவலர்க​ளை அனுப்பி காள​மேகப் புலவ​ரை அரச​வைக்கு வரவ​ழைத்தார்.

    புல​மைப் ​போட்டி:
    அதிமதுரகவியால் அரச​வைக்கு வரவ​ழைக்கப்பட்ட காள​மேகப் புலவருக்கு அ​வையிலிருந்த புலவர்கள் சிறிதுகூட இடம்​கொடுக்கவில்​லை. அ​னைவரும் ​நெருக்கியடித்துக் ​கொண்டு இருந்தனர். காள​மேகப் புலவர் புலவர்களின் எண்ணத்​தை உணர்ந்து ​கொண்டார்.

    அரசனைக் கண்டதும் அவனை வாழ்த்தினார். ஆனால் அவனோ புலவரை மதிக்காமல், இருக்கையும் கொடுக்காமல் ஏளனம் செய்தான். புலவர் புன்மூறுவல் செய்தார். அதிமதுரக்கவிராயரின் சூழ்ச்சிக்கு அரசன் அடிமையாகிவிட்டான் என்பதை உணர்ந்தார். கண்களை மூடி, கலைமகளைத் தியானித்தார். தனக்கொரு இருக்கை தருமாறு வேண்டினார். கலைவாணியின் அருளால் அரசனின் சிங்காசனம் அகன்று பெரிதாகியது. இன்னுமொருவர் இருப்பதற்கான இடம் உருவாகியது. புலவர் அதில் சென்று அரசனின் பக்கத்தில் அமர்ந்தார். புலவரின் ஆற்றல்கண்டு அரசனும் அ​மைச்சர்களும் வியந்தார்கள். தண்டிகைப் புலவர்கள் பயந்தார்கள். காளமேகப் புலவர், கலைவாணியின் அருளைப்போற்றி ,

    “வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
    வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை
    அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
    சரியாசனம் வைத்த தாய்”

    என்று மனமுருக சரஸ்வதி மா​லை​யை 30 ​வெண்பாக்களால் பாடினார். அப்​போது அங்கிருந்த புலவர்க​ளைப் பார்த்துக் காள​மேகப் புலவர், “நீங்கள் யார்?” என்று ​கேட்டார். அத​னைக் ​கேட்டு சிரித்த புலவர்கள், “நாங்கள் கவிராஜர்கள்” என்று கூறினர்.

    அத​னைக் ​கேட்ட காள​மேகப் புலவர் நீங்கள் கவிராஜரா என்று வினவி,

    “வா​லெங்​கே நீண்ட வயி​றெங்​கே முன்னிரண்டு
    கா​லெங்​கே யுட்குழிந்த கண்​ணெங்​கே-சாலப்
    புவிராயர் ​போற்றும் புலவீர்காணீவிர்
    கவிராய ​ரென்றிருந்தக் கால்”

    என்று பழித்துப் பாடினார்.

    தங்க​ளைக் குரங்​கென்று பழித்த காள​மேகத்​தைப் பார்த்துக் கடுங்​கோபமுற்ற அதிமதுரகவியார், “எங்க​ளைக் கவி(குரங்கு) என்று கூறும் நீர்யார்?” என்று ​கேட்க, அதற்கு அவர், “யாம் கவி காள​மேகம்” என்று கூறினார். அதற்கு அதிமதுரகவி, “நீர் காள​மேகம் என்றீ​ரே ​மேகம் ​ம​ழை (கவிம​ழை) பொழியு​மோ?” என்று ​கேட்டார். காள​மேகப் புலவ​ரோ அதற்கு,

    “கழியுந் தியகடலுப்​பென்று நன்னூற்
    கடலின் ​மொண்டு
    வழியும்​பொதிய வ​ரையினிற் கால் ​
    வைத்து வான் கவி​தை
    ​மொழியும் புலவர் மனத்​தே
    யிடித்து முழங்கி மின்னப்
    ​பொழியும் படிக்குக் கவி காள​மேகம் புறப்பட்ட​தே”

    என்று பாடினார். அத​னைக் ​கேட்ட அதிமதுரகவியார் ​காள​மேகம் தன்​னை ​மென்​மேலும் அவமதித்ததால் வெகுண்டு,

    “மூச்சிவிடும் முன்​னே முந்நூறும் நானூறும்
    ஆச்சுது என்றால் ஆயிரம்பாட்டு ஆகா​தோ?​​ பேச்சென்ன?
    ​வெள்​ளைக் கவிகாள​ மேக​மே! நின்னு​டைய
    கள்ளக் கவிக் க​டை​யைக் கட்டு”

    என்று பாடினார்.
    காள​மேகப் புலவரா க​டை​யைக் கட்டுபவர்? அவர் தம் கவி​தையாற்ற​லைக் காட்டுவதற்கு மனந் துணிந்தார். அதிமதுரகவியா​ரைப் பார்த்து,

    “இம்​மென்னும் முன்​னே ​யெழுநூறு ​மெண்ணூறும்
    அம்​மென்றா லாயிரம் பாட்டாகாதா சும்மா
    இருந்தா லிருப்​பே ​னெழுந்​தே​னே யாயிற்
    ​பெருங்காள ​மேகம் பிளாய்”

    என்று பாடினார்.

    இவ்வாறு பாடிய கா​ள​மேகப் புலவ​ரைப் பார்த்து, அதிமதுரகவியார், “நீர் என்ன பாடுவீர்?” எனக் ​கேட்டார். அதற்குக் காள​மேகப் புலவர், “நான் யமகண்டம் பாடு​வேன்” என்று கூறினார். அதிமதுரகவியாருக்கு எமகண்டம் என்பது புரியாதிருந்தது. அதனால் தன்னு​டைய வாதத்​தை அத்துடன் நிறுத்திக்​கொண்டார்.

    புலவர்களின் வினாவும் காள​மேகத்தின் வி​டையும்:
    அதன் பின்னர் அங்கிருந்த புலவர்கள் திரும​லைராயன் வா​ளைப் பற்றிப் பாடுக என்றவுடன்,

    “​செற்றல​ரை ​வென்ற திரும​​​லைராயன் கரத்தில்
    ​வெற்றிபுரியும் வா​ளே வீரவாள் – மற்​றைய வாள்
    ​போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
    ஆவா ளிவாளவா ளாம்”

    என்று பாடி மன்ன​னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். திரும​லைராயனது வீரத்​தைப் பற்றிப் பாடுமாறு புலவர்கள் கூற​வே,

    “வீம​னென வலிமிகுந்த திரும​லைராயன்
    கீர்த்தி ​வெள்ளம் ​பொங்கத்
    தாம​ரையி னய​னோடிச் சத்திய ​லோகம்
    புகுந்தான் சங்கபாணி
    பூமி​தொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான்
    சிவன் கயி​லைப் ​பொருப்பி​லேறிச்
    ​சோம​னையுந் த​லைக்கணிந்து வடவ​ரைத்
    தண்டாலாழஞ் ​சோதித்தா​னே”

    என்று பாடினார். இவ்வாறு புலவர்கள் பலரும் பலவாறு வினாக்க​ளைத் ​​தொடுத்தனர். அப்​போது அங்கிருந்த திரும​லைராயன் மன்னன், “எம் அ​வையில் கங்​கைக் குடத்திலடங்கப் பாடுக” என்றான். அது​கேட்ட காள​மேகப் புலவர்,

    “விண்ணுக் கடங்காமல் ​வெற்புக் கடங்காமல்
    மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – ​பெண்​ணை
    இடத்தி​லே ​வைத்த வி​றைவர் சடாம
    குடத்தி​லே கங்​கையடங் கும்

    என்று பாடினார்.

    தண்டி​கைப் புலவர்களில் ஒருவர் திரும​லைராய மன்ன​னைப் புகழ்ந்து பாடுக என்றவுடன்,

    “இந்திரன் க​லையா ​யென்மருங் கிருந்தானக்
    கினியுதிரம் விட்டகலான்
    யம​னெ​னைக் கருதா னா​னெனக் கருதி நிருதிவந் ​
    தென்​னை​யென் ​செய்வான்
    அந்தமரம் வருண னிருகண் விட்டகலான்
    அகத்தினின் மக்களும் யானும்
    அநிலம தாகுமமுதி​னைக் ​கொள்​வோம் யா​ரெதி​
    ரெமக்களா ருலகிற்
    சந்தத மிந்த வரி​சை​யைப் ​பெற்றுத் தித்திர
    ராஜ​னை வணங்கித்
    த​லை​செயு​மெம்​மை நி​லை ​செய்சற் கீர்த்திச்
    சாளுவ ​கோப்​பையா னுதவும்
    மந்தரப் புயத்தான் றிரும​​லைராயன்
    மகிழ்​வொடு வி​லையிலா வன்​னோன்
    வாக்கினாற் கு​பேரனாக்கினா னவ​னே மாசிலீ
    சானனபூ பதி​யே”

    என்று பாடி அ​னைவ​ரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    மேலும் அங்கிருந்த மற்​றொரு தண்டி​கைப் புலவர் அரசனது குதி​​ரை​யைப் பற்றிப் பாடுமாறு கூறியவுடன்,

    “​கோக்குதி​ரை நின்குதி​ரை ​​கோவல் மதுரா ​வொன்னார்
    மாக்குதி​ரை ​​யெல்லாம் ம​னைக் குதி​ரை-தூக்குதி​ரைத்
    தூங்கக்க​ரைக் குதி​ரைச் ​சொக்கன் குதி​ரைசது
    ரங்கக் குதி​ரைக​ளே யாம்”.

    என்று காள​மேகம் பாடிட​வே அரசனும், அதிமதுரகவியும் ​சேர்ந்து ​கொண்டு காள​மேகப் புலவரிடம் திருஆரூரில் அதிமதுரக்கவிராயருடன் வந்து ​கோயிலில் ஒரு பாடல் பாடினால்தான் நீர் ஆசுகவி என்ப​தை ஏற்​போம் எனக் கூறினான். காள​மேகப் புலவர் அத​னை ஏற்று திருஆரூர்க் ​கோயிலுக்கு அதிமதுரக்கவிராயருடன் ​சென்று,

    “​சே​லையு​டை யழகா ​தேவாகண் டார்களு
    நீர்மா​ யழகா மணிமார்பா-​வே​லை
    அடங்கார் புர​மெரித்த யாரூரா வீதி
    விடங்கா பிரியா வி​டை”

    என்று பாடி அ​னைவ​ரையும் ​வெற்றி ​கொண்டார்.

    இருப்பினும் அவரது ​வெற்றி​யை அரசனும் தண்டி​கைப் புலவர்களும் ஒப்புக் ​கொள்ளவில்​லை. வெற்றிபெற்ற காளமேகப்புலவரை அரசன் எள்ளளவும் பாராட்டாமல் அவமதித்தான். தனது அரசவைப் புலவர்களைத் தோற்கடித்து அவமானப்படுத்தி விட்டதாக அவன் கருதினான். அரசனின் போக்கு காளமேகப் புலவருக்கு மிகுந்த வேதனையையும், கடுஞ்சினத்​தையும் கொடுத்தது. தன் ​வெற்றி​யை ஏற்றுக் ​கொள்ளாமல் தன்​​னை அவமதித்த மன்ன​னுக்கும் புலவர்களுக்கும் பாடம் கற்பிக்க ​வேண்டும் என்று நி​னைத்தார் காள​மேகப் புலவர். அவரின் ​கோபம்

    “கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
    காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே
    விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து
    மண்மாரி பெய்கவிந்த வான்.

    என்ற வசைக் கவியாக வெளிப்பட்டது. திருமலைராயன் பட்டினம் அழிந்து போகட்டும் என்று வசைபாடினார்.

    கொலைகாரர்கள் இருக்கின்ற இந்த ஊர், கோள் மூட்டல், வஞ்சகம் செய்தல் என்பவற்றைக் கற்றிருக்கும் இந்த ஊர், கட்டுப்பாடற்ற காளைமாடுகளைப்போல கதறித்திரிவோரைக் கொண்ட இந்த ஊர், நாளை முதல் மழைபெய்யாமல் வறண்டு போகட்டும். மண்ணே மழையாகப் பெய்யட்டும் என்று சாபமிட்டுப் பாடினார். அத்துடன் அவரது கோபம் தணியவில்லை. மேலும்,

    “செய்யாத செய்த திருமலைராயன்வரையில்
    அய்யா வரனே அரைநொடியில் – வெய்யதழற்
    கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர்
    மண்மாரி யாலழிய வாட்டு”

    என்று பாடினார்.

    என் அப்பனே சிவபெருமானே! நெருப்பாகவிருக்கும் உனது நெற்றிக்கண்ணினால் மன்மதனைச் சுட்டெரித்ததுபோல, செய்யத் தகாததையெல்லாம் எனக்குச் செய்த இந்தத் திருமலைராயனின் ஆட்சி எல்லைக்குள் வாழ்கின்ற தீயவர்கள் அரை நொடியில் அழிந்துபோகும் வண்ணம் மண் ம​ழை பொழிந்து அவர்களை வாட்டி வதைப்பாயாக! என்று சிவனை வேண்டிப் பாடிவிட்டுத் திரும​லைராயன் பட்டினத்​தைத் திரும்பிப் பாராது ​சென்றார்.

    இரட்​டைப் புலவர்களின் பாட​லை முடித்தது:
    திரும​லைராயன் பட்டினத்திலிருந்து கிளம்பிய காள​மேகப் புலவர் திருச்​செங்காடு, காஞ்சிபுரம், திரு​வொறிறியூர், திருக்கச்ச​பேசம், சிதம்பரம், திருக்கழுக்குன்றம், திருமுட்டம், திருஆலங்குடி, ​வைத்தீஸ்வரன் ​கோவில், திருவண்ணாம​லை, மது​ரை, திருவி​டை மருதூர், திருத்துருத்தி, திருக்குடந்​தை, திருக்கண்ணபுரம், ​தெண்டி நள்ளாறு, நா​கைப்பட்டினம் என்று பலதலங்களுக்கும் ​சென்று பல பாடல்க​ளைப் பாடி திருவாரூர் வந்த​டைந்தார்.

    அப்​போது திருவாரூரில் ​கோயி மதிற்சுவரில்,

    “நாண் என்றால் நஞ்சிருக்கும்;நற்சாபம் கற்சாபம்;
    பாணந்தான் மண்தின்ற பாண​மே – “

    என்ற இரண்டு அடிக​ளோடு அந்தப் பாடல் முடிக்கப் ​பெறாமல் இருந்த​தைக் கண்டார். அத​னைக் கண்டவுடன் காள​மேகப் புலவரின் மனதில் பாடல் ஊற்​றெடுத்தது. உட​னே அவர் முற்றுப் ​பெறாமலிருந்த அப்பாட​லை,

    “…………தாணு​வே!
    சீர்ஆரூர் ​மேவும் சிவ​னே! நீஎப்படி​யோ
    ​நேரார் புர​மெரித்த ​நேர்!”

    என்று அந்த ​வெண்பா​வை முடித்து மதிற்சுவரில் எழுதிவிட்டுப் புறப்பட்டார்.

    காலமாகிய காள​மேகப் புலவர்:
    காள​மேகப் புலவரின் சாபத்தின்படி திருமலைராயன் பட்டினம் சிலகாலத்தில் அழிந்தொழிந்தது. அப்​போதுதான் அவரது தமிழின் வலிமை தமிழ் உலகத்திற்குத் தெரிந்தது. தமது சிறுமதியின் நிலைமையைத் தண்டிகைப் புலவர்கூட்டம் உணர்ந்து வருந்தியது. அதிமதுரக்கவிராயர் தமது முதுமைக் காலத்தில் தாம் ​செய்த தவறுகளுக்காக மிகவும் வருந்தினார்.

    காளமேகப்புலவரைக் கண்டு அவரிடம் தாம் தவறாக நடந்து ​கொண்ட​மைக்குக் கழுவாய் ​தேட விரும்பினார். அவ்வாறு அவர் காள​மேகப் புலவ​ரை எதிர்பார்த்திருக்கும்​போது ஒருநாள் திருவாரூருக்கு காள​மேகப் புலவர் வந்திருப்பதை அறிந்து அவ​ரைக் காண்பாதற்குத் தேடிச் சென்றார். ஆனால் அதிமதுரகவியார் வருவதற்கு முன்​பே காள​மேகப் புலவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அத​னை அறிந்த அதிமதுரகவிராயர் மிகுந்த கவலையடைந்தார். காள​மேகப் புலவ​ரைப் பார்க்க முடியாம​லே​யே தம் ஊருக்கு அதிமதுரகவிராயர் ​திரும்பிச் சென்றார்.

    அவர் ​சென்ற சிலநாட்களில் காளமேகப்புலவர் திருவாரூருக்கு வந்தார். திருவாரூருக்கு வந்தவர் அங்​கே​யே முதுமையால் இவ்வுலக வாழ்​வை நீத்தார். காள​மேகப் புலவர் இறந்த செய்தியை அறிந்த அதிமதுரகவிராயர் உற்ற நண்பர் ஒருவரை இழந்ததுபோல் மிகவும் துன்பமடைந்தார். தன் மனத்துயரை,

    “வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
    வீசுகவி காள மேகமே – பூசுரா
    விண்தின்ற ​வெவ்வழலில் வேவுதே பாவியேன்
    மண்தின்ற பாணமென்ற வாய்.”

    என்று பாடலாகப் பாடி வெளிப்படுத்தினார்.

    அப்​போது திருவாரூருக்கு வந்திருந்த இரட்​டைப் புலவர்கள் தாங்கள் எழுதிச் ​சென்ற ​வெண்பா முடிக்கப் ​பெற்றிருந்த​தைப் பார்த்து இப்பாட​லைப் முடித்தவர் காள​மேகப் புலவராகத்தான் இருக்க ​வேண்டும் என்று அறிந்து அவ​ரைப் பார்க்க நி​னைத்தனர். அவர் இறந்துவிட்டார் என்ப​தை அறிந்து சுடுகாட்டிற்குச் ​சென்ற அவர்கள் சி​தையில் காள​மேகப் புலவரின் உடல் ​வெந்து ​போவ​தைக் கண்டு கண்ணீர்விட்டுக் கலங்கியழுதனர். பின்னர் ​கையற்ற நி​லையில்,

    “ஆசுகவியால் அகில உல​கெங்கும்
    வீசுபுகழ்க் காள ​மேக​மே – பூசுரா
    விண்​கொண்ட ​செந்தணலாய் ​வேகின்ற ​தை​யை​யோ
    மண்தின்ற பாண​​மென்ற வாய்”

    என்று பாடி இரங்கினர். இப்பாட​லை அதிமதுரகவிராயர் பாடியது என்று கூறுவர். இதற்கு முன்னுள்ள பாட​லே அதிமதுரகவிராயர் பாடியது என்றும் அ​தே​போன்ற​மைப்பில் இரட்​டையர்கள் அங்கு வந்த​போது பாடினர் என்றும் கூறுவர்.

    தமது புல​மையால் பார்புகழ விளங்கிய காள​மேகப் புலவர் தமிழிலக்கிய உலகில் ஒளிவீசும் விண்மீனாக விளங்கிக் ​கொண்டிருக்கின்றார். அவர் திருவா​னைக்கா உலா, சரசுவதி மா​லை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம், பல தனிப்பாடல்கள் ஆகிய​வை காள​மேகப் புலவரின் ப​டைப்புகளாகும்.

    மக்கள் பலர் தன்னைச் சூழ்ந்துவர, தலைவன் உலா வருவதை வருணித்துக் கூறுவதாக அமைந்தது திருவானைக்கவுலா என்ற நூல். சித்திரமடல் என்பது காதல் தோல்வியடைந்த ஒருவர் தன்னை வருத்திக்கொள்வதான பொருளமைந்த நூலாகும்.

    இ​வை அ​னைத்தும் காள​மேகப் புலவரின் புல​மைத்திறத்​தை பூவுலகில் எடுத்து​ரைத்துக் ​​கொண்​டே இருக்கும். காலங்கள் கடந்தாலும் காள​மேகப் புலவரின் பாடல்கள் கற்றவர்களின் மனதில் களிப்​பை ஏற்படுத்திக் ​கொண்​டே இருக்கும்.

    ___________________________________________________________
    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    E.mail: Malar.sethu@gmail.com

    Share
  • உன்னையறிந்தால் … (36)

    நிர்மலா ராகவன்

    வதையைத் தடுக்க சில வழிகள்

    உனையறிந்தால்1

    கேள்வி: ஒருவரை அவருக்கு அச்சமூட்டும், அல்லது பிடிக்காத விதத்தில் நடத்துபவர்கள் எதில் சேர்த்தி?

    விளக்கம்: பிறரை வதைப்பவர்கள் சிறு வயதில் வதைக்கு ஆளானவர்களாக இருப்பார்கள். வளர்ந்தபின்னர், தம்மை எதிர்க்க உடலிலோ, மனத்திலோ சக்தி இல்லாதவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவதால், தமது சக்தி பெருகிவிட்டதாக நினைப்பார்கள்.

    சரி எது, தவறு எது என்று தெரியாத பிராயத்தில், குழந்தைகளுக்கு. எது ஒன்றையும் தமக்குத் தோன்றிய முறையில் செய்து பார்க்க சுதந்திர உணர்வு எழும். `இது குழந்தைகளின் இயல்பு!’ என்று புரிந்து விடமாட்டார்கள் சிலர். அவர்களை வன்முறையால் தண்டித்து, சிறுமைப்படுத்துவார்கள், அல்லது `சாமி கண்ணைக் குத்துவார்!’ என்று பயமுறுத்துவார்கள்.

    `குழந்தைகள் தப்பே செய்யாமலிருக்கத்தான் அப்படிச் செய்கிறோம்!’ என்று இவர்கள் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஓயாது பயமுறுத்தலுடன் வளர்க்கப்படும் குழந்தை இயற்கையாக எழும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் எதிர்நோக்கும்போது அச்சமும், `பெற்றோர் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்தோமே, ஏன் எதிலும் வெற்றி பெற முடியவில்லை?’ என்ற குழப்பமும் அடைகிறான்.

    உடல் வதை, பாலியல் வதை, உணர்ச்சிபூர்வமான வதை என்று பலவிதமான வதைகள் இருக்கின்றன.

    சில ஆண்டுகளுக்குமுன், கோலாலம்பூர் பெரிய ஆஸ்பத்திரியிலும், யூனிவர்சிடி ஆஸ்பத்திரியிலும் ஏதாவதொரு வதைக்கு உள்ளாகி சேர்க்கப்பட்ட சிறுவர்களின் அடிப்படையில், ஓராண்டில் பெரும்பாலும் தந்தைமார்கள் (30), அடுத்து குழந்தையைப் பார்த்துக் கொள்பவர்கள் (22), தாய்மார்கள் (14), தாயின் காதலன் (7) ஆகியோர் உடல் ரீதியாக (ஆயுதங்களால் அடிப்பது, சிகரெட்டால் சுடுவது) போன்ற உடல் வதைகளைச் செய்பவர்கள் என்ற தெரிய வந்தது.

    குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைகூடக் கவனிக்காது நடக்கும் பெற்றோர் குழந்தைகளை உணர்ச்சிபூர்வமாக வதைக்கிறார்கள். இன்னும் பிறர் தாம் செய்வது வதை என்றே புரியாது நடக்கிறார்கள்.

    என்னிடம் ஒருவர் கேட்டார்: `என் மகளை என் விருப்பப்படி நடத்த எனக்கு உரிமை கிடையாதா? அவளுக்கு வேண்டியதை எல்லாம் நான்தானே கொடுக்கிறேன்!’

    பெற்ற மகளையே பாலியல் வதைக்கு உள்ளாக்கிய தந்தை ஒருவரும் இதே விவாதத்தைத்தான் எழுப்பினார் என்று என் நெருங்கிய தோழி (சமூக நல இலாகாவில் உயர்பதவி வகித்தவள்) என்னிடம் கோபமும், ஆச்சரியமும் கலந்த தொனியில் தெரிவித்திருக்கிறாள்.

    தாம் பெற்ற குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டியது ஒரு பெற்றோரின் கடமை. அதற்குப் பிரதிபலனாக தாம் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது விதண்டாவாதம்.

    தனது மூன்று வயதுக் குழந்தையை இரும்புச் சங்கிலியால் — பலரும் பார்க்க, வீட்டு வளாகத்தில் — அடித்த என் எதிர்வீட்டுக்காரி, `உன்னிடம்தான் தப்பு இருக்கிறது. அதற்கு நான் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். எல்லாம் உன் நன்மைக்காகத்தான்!’ என்று ஒவ்வொரு முறை அடித்த பின்னரும் தான் மகளிடம் சொல்வதாக என்னிடம் பெருமையாகச் சொன்னாள்.

    எனக்கு வாயடைத்துப் போயிற்று. அந்தக் குழந்தை தன் வயதொத்த பிற குழந்தைகளை அடிக்கும்.

    மகள் செய்த சிறு விஷமத்தைக்கூட (தானே கத்திரிக்கோலால் முடி வெட்டிக்கொண்டதை) பிறரிடம் கூறிச் சிரிப்பாள் அத்தாய். சிறுமி அவமானப்பட்டு அழுவாள்.

    பெண் குழந்தைக்கு ஒரு முறை முடியை வெட்டிவிட்டு, `அழகாக இருக்கிறாய்! என்று யாராவது பாராட்டினால், தினமும் தானே வெட்டிக் கொள்வாள்! அழகாக இருக்க வேண்டாமா! கத்தரிக்கோலை ஒளித்து வைப்பதுதான் ஒரே வழி. ஐந்து வயதானால், சற்று விவரம் புரியும்.

    நம் குழந்தைகள் செய்த `குற்றங்களை’ மிகைப்படுத்தி, பிறருடன் பகிர்ந்துகொள்வது சொல்பவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாகப் படலாம். ஆனால், இம்முறையால் தன்னம்பிக்கை குன்றி வளரும் குழந்தைகள், தம்மையும் அறியாமல், வதை செய்யும் ஒருவரையே காதலனாகவோ, கணவனாகவோ வரிக்கிறார்கள். காதலன் தன்னைப் புகழ்வதால், மதிமயங்கி, அவனுடனேயே இருக்கிறார்கள், வதையைப்பற்றி எவரிடமும் கூறாது.

    முதல் முறை அடித்து, உதைத்ததும், பெண்கள் பயந்து விலகுகிறார்கள். ஆனால் இவர்கள் விடுவதில்லை. `தயவு செய்து என்னை விட்டுப் போய்விடாதே! நீதான் என் உயிர்! என்னை மன்னிப்பாயா?’ என்று கடிதம் எழுதுவார்களாம். இதையே தினசரியில் விளம்பரமாகக் கொடுத்தவனும் உண்டு!

    திரும்பத் திரும்ப அவர்கள் கெஞ்சும்போது, மனமிரங்கி, உறவைப் புதுப்பித்துக்கொள்ள நம்பிக்கையுடன் வருவார்கள். அதன்பின், வதை அதிகரிக்கும். பெண்களுடைய பலமும் குன்றிக்கொண்டே வரும். தப்பு தன்மேல்தான் என்று எல்லாவற்றையும் பொறுத்துப் போவார்கள்.

    தினசரியில் கடிதம் எழுதினவன், ஐந்தே வாரங்களுக்குப்பின், காதலியை அடித்தே கொன்றானாம். இந்தச் சம்பவம் நடந்தது தென் அமெரிக்காவில், பெரு என்ற நாட்டில். உலகிலேயே பெண்கள் அதிகமாக கொடும் வதைபடும் நாடு (61%) இது.

    குடும்பத்தில் நடப்பது நான்கு சுவற்றுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பது காலத்துக்கு ஒவ்வாதது. இதனால் குற்றம் புரிபவர்களின் துணிச்சல்தான் அதிகரிக்கிறது.

    சில ஆண்கள் `பெண்’ என்றாலே இளக்காரம் என்றெண்ணி, முரட்டுத்தனமாக வளர்கிறார்கள்.

    `என் மேல் சாமி வந்துவிட்டது,’ `குடித்திருந்தேன்,’ என்பதெல்லாம் பொய்ச்சாக்கு. தாம் செய்வது பிறருக்கு என்ன துன்பம் விளைவிக்கும் என்பது தெரிந்தே செய்பவர்கள் இவர்கள். திருந்தவே மாட்டார்கள். சட்டம் தண்டித்தால்தான் உண்டு.

    ஒரு குழந்தையைப் பிறர் வதைக்காமலிருக்க தாய் செய்ய வேண்டிய கடமைகள் சில உண்டு. குழந்தை ஆணோ, பெண்ணோ, அவர்களது உடலைப் பிறர் எப்படித் தொடலாம் , எப்படித் தொடக்கூடாது என்பதைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

    நான்கு வயதுக் குழந்தையின் கன்னத்தைத் தடவுவது சரிதான். ஆனால் வயதுக்கு வந்த பெண் உடலுறவைப்பற்றி புரிந்துகொள்ளாமல் இருப்பாளாகில், அவளுக்கு நன்கு பரிச்சயமான ஒரு ஆண் — நண்பன், உறவினர், அண்டை வீட்டுக்காரர் — அப்படித் தொடுவது தவறு என்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறாள். தந்தை இல்லாத பெண்ணோ, தாய் அருகில் இல்லாது, அல்லது உடல் நலக் குறைவாக இருந்தாலோ ஒரு பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது எளிது.

    வதைக்கு உள்ளாகும் சிறுமிகளிடையே திடீரென சில மாற்றங்கள் தென்படும். ஓயாமல் அழுவது, சோம்பி இருப்பது, ஓயாது தொணதொணப்பது அல்லது அதிகாரமாக நடப்பது, மிகுந்த ஆத்திரத்துடன் நடப்பது, காரணமில்லாமல் திருடுவது, சாமான்களை உடைப்பது, அடிக்கடி ஐஸ் கட்டிகளைச் சாப்பிடுவது — இதில் ஏதாவது இருந்தால், வீட்டிலோ, பள்ளியிலோ ஏதாவது ஒரு வகையில் வதைக்கப்படுகிறார்கள் என்று கொள்ளலாம்.

    சில சமயம், அக்குழந்தைகளிடம் நிறையப் பணம் புழங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பாலியல் வதை செய்துவிட்டு, ஐந்தோ, பத்தோ கொடுத்து, அவர்கள் வாயை அடைக்கிறார்கள். இதுவும் கவனிக்க வேண்டிய சமாசாரம்.

    இம்மாதிரியான குழந்தைகளை ஏதாவது கதை எழுதச்சொன்னாலோ, அல்லது படம் வரையச் சொன்னாலோ, அவர்கள் மனதின் வேதனை வெளிப்படும். வாய்ச்சொல்லாக வர்ணிக்கத் தெரியாதவர்கள் படம் மற்றும் எழுத்து வடிவில் தங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

    அன்பான குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் வதைப்பட்டாலும், பெற்றோரின் ஆதரவால் நீண்ட காலப் பாதிப்பு இல்லாமல் தப்புகிறார்கள். சில சமயம், உளவியல் நிபுணர்களின் உதவியும் தேவைப்படலாம்.

    பிள்ளைகள் மனக்குழப்பத்துடன் காணப்பட்டால், அவர்களுடைய நல்ல குணங்களைப் பாராட்டுங்கள்.

    `யார்கிட்டேயும் சொல்லக்கூடாது என்று, யாராவது எதையாவது செய்தார்களா?’ என்று அனுதாபத்துடன் விசாரித்து, அவர்கள் மனந்திறந்து பேசும்போது, ஆதரவு கொடுக்க வேண்டும். `பிறருக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?’ என்று அஞ்சாது, `இதில் உன் தப்பு எதுவுமில்லை!’ என்று பலமுறை அழுத்திக் கூறுங்கள். வதைத்தவர்தான் குற்றவாளி என்று புரிந்து போனால், அவர்களுடைய சோகம், குற்ற உணர்வு, அவமானம் எல்லாவற்றிலிருந்தும் நிரந்தர விடுதலை கிட்டும்.

    Share
  • பெங்களூர் நாகரத்தினம்மா வாழ்வில் …..

    –தஞ்சை வெ.கோபாலன்.

    திருவையாற்றில் அடுத்த மாதம் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனையும், ஐந்து நாட்கள் இசைவிழாவும் மிகச் சிறப்பாக நடக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை வெளியுலகுக்குக் கொண்டுவந்து இந்த அளவுக்குச் சிறப்பாக விழா நடைபெற வழிவகுத்த ஒரு பெண்மணியைப் பற்றி தெரிந்து கொள்வோமே!

    திருவையாறு சற்குரு ஸ்ரீதியாகபிரம்மத்தின் புகழ் வெளியுலகத்துக்குப் பரவிட பெரும்பணியாற்றிய பெண்மணி பெங்களூர் நாகரத்தினம்மாள். இவர் வாழ்க்கையில் செல்வம், புகழ் இவற்றின் உச்சியையும் தொட்டவர்; சில நேரங்களில் கடுமையான வீழ்ச்சிகளையும் கண்டவர். இவர் ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர். தந்தையால் கைவிடப்பட்டு இவரும், இவரது தாயார் புட்டம்மாவும் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகி வளர்ந்தவர்கள். இசையிலும், நாட்டியத்திலும் இவர் தேர்ந்து மிகவும் மதிக்கப்பட்ட கலைஞராகத் தென்னாடு முழுவதிலும் திகழ்ந்தவர். இவர் மைசூரில் பிறந்ததனால் கன்னடமும், தெலுங்கும், சென்னையில் வாழ்ந்ததால் தமிழும், சம்ஸ்கிருதமும் நன்கு பயின்று அவற்றில் புலமை பெற்றிருந்தார்.

    பெங்களூர் நாகரத்தினம்மாநாகரத்தினம்மாள் அவருடைய சமகாலப் பெண்களோடு ஒப்பிடும்போது அதிகம் படித்த பெண்மணியாகத் திகழ்ந்தார். இவருடைய புலமைக்காக இவர் பல ஊர்களிலும் அழைத்துப் பாராட்டப் பட்டிருக்கிறார். புகழின் உச்சியைத் தொட்டவர் என்பதை பலகாலும் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர். அப்படிப்பட்ட இவர்தான் பின்னர் வாழ்க்கையில் பட்ட அடியின் காரணமாக, செல்வச் செழிப்பிருந்தும், வசதி வாய்ப்புகள் இருந்தும், கலைகளில் நல்ல பாண்டித்யம் இருந்தும், நிம்மதியில்லாமல் போயிற்று. காரணம் இவருக்கு வாரிசு இல்லை. நம்பிக்கை துரோகத்துக்கும் ஆளாகி மனம் வருந்தி, நெருங்கிய நண்பர்கள், கலைஞர்கள் ஆலோசனைக் கிணங்க திருவையாற்றுக்கு வந்து சற்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் சமாதி காவிரிக் கரையில் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதை செப்பனிட்டு அங்கு அவருக்கு ஒரு சமாதி கோயில் எழுப்பி, இன்று அது உலகத்தையே சுண்டி இழுக்கும் இசையின் தலைமை பீடமாக உருவெடுத்து ஆண்டுதோறும் அவர் சமாதியில் ஆராதனை இசைவிழா நடைபெற மூல காரணமாகத் திகழ்ந்தவர். அதுமட்டுமல்ல பல புரட்சிகளைச் செய்த இவரே, திருவையாற்றில் தியாகராஜர் சமாதி ஆராதனையில் பெண்கள் பாடுவதற்கு அனுமதி இல்லாமலிருந்த நிலையை மாற்றி, பெண்களுக்கும் சம அந்தஸ்து பெற்று அங்கு மேடையேறி பாட வழிவகுத்தவரும் இவரே. இந்த உண்மை இன்றைய பெண் பாடகிகள் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது.

    இவருடைய வாழ்க்கையில் இன்னுமொரு வேடிக்கையும் நடந்தது. அது வேடிக்கையான நிகழ்ச்சி மட்டுமல்ல, வேதனை தரும் நிகழ்ச்சியுமாகும். தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் வரிசையில் பிரதாபசிம்ம ராஜா மிகவும் பிரபலமானவர். 18ஆம் நூற்றாண்டில் பிரதாபசிம்ம ராஜா தென்னாட்டு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் சம்பந்தப் பட்டிருந்தார். 1739 முதல் 1763 வரை இவர் தஞ்சையை ஆண்டு வந்தார். ஆற்காடு நவாப் முகமது அலிக்கு ஆதரவாக இருந்து அவருடைய எதிரியான சந்தா சாஹேபை சிறைபிடித்துப் பின்னர் முகமது அலியின் வேண்டுகோளுக் கிணங்க அவரை பலியிட்டதும் இவரே. இவர் காலத்தில்தான் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வாணிபம் புரிய நாடுதேடி வந்து கொண்டிருந்தனர், அப்படிப்பட்ட நிலையில் அவர்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பிரதாப சிம்மருக்கு இருந்தது. இவருடைய மகன் தான் துளஜேந்திர ராஜா. அவருக்குப் பின் சுவீகாரம் எடுக்கப்பட்ட மகன்தான் இரண்டாம் சரபோஜி.

    இந்த பிரதாபசிம்ம ராஜாவின் அரண்மனையில் பல தேவதாசிகள் உயரிய அந்தஸ்துடன் இருந்து வந்தனர். அப்படிப்பட்ட பல தேவதாசிகளில் ‘முத்துப்பழனி’ எனும் பெயர் கொண்ட தேவதாசி அவருடைய ஆசை நாயகியாக இருந்தார். மன்னரின் அவையில் பல கலைஞர்கள் இருந்தனர், அவர்களில் முத்துப்பழனியும் ஒருவர்; அதுமட்டுமல்லாமல் அவர் மிகச் சிறந்த பண்டிதராகவும் திகழ்ந்தார். தெலுங்கு மொழியில் கவிதை இயற்றும் ஆற்றல் படைத்தவர்; சமஸ்கிருத மொழி அறிவும் இவருக்கு அதிகம். அப்படிப்பட்டவர் ஆண்டாளின் திருப்பாவையை யொட்டி அதே போல தெலுங்கில் ஒரு கவிதை நூலை இயற்றியவர். இவர் கவிதைகளில் பல புதுமைகளை செய்த போதிலும், இவர் இயற்றிய “ராதிகா சாந்தவனமு” (ராதையை சமாதானப் படுத்துதல்) எனும் தெலுங்கு மொழி கவிதை நூல் மிகவும் பிரபலமடைந்தது; பிரபலமடைந்தது மட்டுமல்ல, அரசாங்கத்தின் பார்வை பட்டு அது தடையும் செய்யப்பட்டது.

    இந்த “ராதிகா சாந்தவனமு” கதைப் பாடல் அப்படி என்னதான் சொல்லுகிறது என்பது தெரிய வெண்டாமா? ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ராதை ஆகியோர் பற்றிய கதைகள், வடமொழி, தெலுங்கு போன்ற இலக்கியங்களில் ராதை, கிருஷ்ணன் பற்றிய பல கவிதை நூல்கள், அஷ்டபதி, கீதகோவிந்தம் போன்ற பல புகழ் பெற்றன. இந்த கிருஷ்ணன் ராதை உறவை பொதுவாக, பரமாத்மா, ஜீவாத்மா ஐக்கியத்தை உருவகப்படுத்துவதாகத்தான் பெரும்பாலும் சொல்வார்கள். வடமொழி அறிஞர் கே.எம்.முன்ஷி தன்னுடைய “கிருஷ்ணாவதார்” “மேஜிக் ஆஃப் தி ஃப்ளூட்” எனும் நூலில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பாக “ராதா தி காண்ட்ரோவர்ஷியல் கேரக்டர்” என்று எழுதி, ராதை என்பவர் கிருஷ்ணனை விட வயதில் மூத்தவர், யாதவ குல தலைவன் ஒருவனின் மனைவி என்றும் குறிப்பிடுகிறார். அப்படியானால் ராதையையும் கிருஷ்ணனையும் இணைத்து இப்படி பக்தி மார்க்கத்தில் ஒரு பஜனை சம்ப்ரதாயம் உருவாகி விட்டது எப்படி?

    போகட்டும்! இப்போது பிரச்சனை அதுவல்ல. கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் ராதை உறவு பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியத்தை விழையும் நோக்கத்தில் இருந்தாலும், தெலுங்கு கவி முத்துப்பழனி இயற்றிய “ராதிகா சாந்தவனமு” அப்படி அமையவில்லை. காம உணர்வால் தூண்டப்பட்ட ஒரு இளம் பெண் கிருஷ்ணனுடன் இன்பம் துய்க்கும் உறவாக சித்தரித்து அது இயற்றப்பட்டிருந்தது. எந்தக் கதையானாலும் அது ஒரு திருப்பம் (ட்விஸ்ட்) இருக்க வேண்டுமல்லவா? இந்தக் கதையில் வயதில் மூத்த அந்தப் பெண் கிருஷ்ணனுடன் உறவில் ஈடுபட்டிருந்தாலும், தன்னுடைய மருமகளான இலா என்பவள் வயதுக்கு வந்தவுடன் அவளை கிருஷ்ணனுக்கு அளித்து விடுகிறாள். அப்போது அந்த ராதை இலாவுக்கும், கிருஷ்ணனுக்கும் இவர்கள் உறவில் எப்படியெல்லாம் இன்பம் துய்க்க முடியும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறாள். அதுதான் கவிதை. *(இணையத்திலிருந்து சில பாடல்களை கட்டுரையின் இறுதியில் காண்க)

    பிற்காலத்தில் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் ஒருவர் இந்த நூலை இயற்றியவர் ஒரு பெண் என்பதறியாமல் முத்துப் பழனி எனும் ஒரு ஆண் என்கிறார். இந்த நூல் 1887இலும் பின்னர் 1907லும் சென்னையில் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஒரு வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போது சென்னை மாகாணத்தில் தெலுங்கு பேசும் பகுதியில் வாழ்ந்த சீர்திருத்தக்காரரும், தேவதாசி முறை ஒழிப்பு ஆதரவாளரும், விதவா விவாக ஆதரவாளருமான வீரேசலிங்கம் பந்துலு என்பவரின் கவனத்துக்கு இந்த நூல் வந்தது. மகாகவி பாரதி தன்னுடைய “சந்திரிகையின் கதை” எனும் நாவலில் இந்த வீரேசலிங்கம் பந்துலுவையே ஒரு கதாபாத்திரமாக்கியிருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறேன்.

    இந்த வீரேசலிங்கம் பந்துலு தெலுங்கு மொழி கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு”களைத் தொகுத்து வெளியிட்டிருந்தார். அந்தத் தொகுப்பு நூலில் இந்த “ராதிகா சாந்தவனமு” கவிதை நூலைப் பற்றியும், அதன் உள்ளடக்கம் பற்றியும் எழுதியிருந்தார். அப்படி குறிப்பிடும்போது அவர் தேவதாசிகளை வெறுப்பவர் என்ற முறையில் இதன் ஆசிரியரான முத்துப்பழனியைக் குறிப்பிட தெலுங்கில் மரியாதைக் குறைவாக விளிக்கும் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். கவிஞரின் சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழி அறிவைப் பாராட்டிவிட்டு, உள்ளடக்கம் அதிர்ச்சியாக இருப்பதாக அவர் எழுதினார். உச்சகட்டமாக கவிஞர் முத்துப்பழனியை நடத்தை கெட்டவள் என்றும், ஒரு விலைமாதினால் எழுதப் பட்டதால் நூல் ஆபாசம் நிறைந்ததாக உள்ளது என்றும் எழுதினார்.

    இந்த விவரங்களையெல்லாம் கேள்விப்பட்ட நாகரத்தினம்மாள் அந்த நூலை வாங்கிப் படித்துப் பார்த்தார். அதில் இருந்த பல பிழைகளை நீக்கி நல்ல முறையில் மீள்பதிவு செய்து வெளியிட்டார். அப்படி வெளியிட்ட பதிப்பின் முன்னுரையை எழுதிய நாகரத்தினம்மாள் சொல்கிறார். “வீரேசலிங்கம் இந்த நூலைப் பற்றி எழுதுகையில் ஆசிரியரும் கவிஞருமான முத்துப்பழனியை மிகக்கேவலமாக, அவர் ஒரு வேசி, இவரது தாயார் முத்தியாலு, முத்துப்பழனி பிரதாபசிம்ம ராஜாவின் ஆசைநாயகி என்றெல்லாம் எழுதியிருந்ததை நாகரத்தினம்மாள் கண்டித்து முத்தியாலு என்பவர் கவிஞரின் தாய் அல்ல, தந்தை என்பதையும் எழுதினார்.

    முத்துப்பழனி ஒரு விலைமாது, ஒழுக்கமற்றவர் என்றெல்லாம் விமர்சனம் செய்திருந்ததை நாக்ரத்தினம்மாள் விரும்பவில்லை. அதற்கு கண்டனங்களைத் தெரிவித்தார். தேவதாசியாகப் பிறந்ததாலேயே ஒருவர் ஒழுக்கமற்றவர் என்று வீரேசலிங்கம் எப்படி முடிவுக்கு வரலாம் என்பது அவர் வாதம். இதற்கிடையே 1911 ஜனவரி மாதம் சென்னையிலிருந்து வெளிவந்த தெலுங்கு பத்திரிகையான “சசிலேகா” வில் இந்த நூலைப் பற்றி “ஒரு விலைமாதினால் எழுதப்பட்டு, இன்னொரு விலைமாது அதை திருத்தி வெளியிட்டிருக்கிறார்” என்று எழுதினார்கள்.

    பல விவாதங்கள், அரசாங்க கடித பரிமாற்றங்கள், சமூக ஆர்வலர்களின் தலையீடு இவற்றின் முடிவில் இந்த நூல் காவல்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதில் பதிப்பாசிரியர் பெயரை பெங்களூரு நாகரத்தினம்மாள் (மதராசின் பிரபலமான விலைமாதுக்களில் ஒருவர்) என்று குறிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து 1911 மே மாதம் சென்னை காவல்துறை டெபுடி கமிஷனர் கன்னிங்ஹாம் தலைமையில் ஒரு குழு சென்று ஆய்வு நடத்தி மொத்தம் 18 நூல்களை ஆபாசம் என்று முடிவுக்கு வந்து ஒரு பட்டியல் தயாரித்தது. அதில் இரண்டாமிடத்தில் நாகரத்தினம்மாள் பிரசுரித்த முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனமு” இருந்தது. இதில் இன்னொரு வேடிக்கை, இந்த பிரச்சனையைக் கிளப்பி சீர்திருத்தம் பேசிய வீரேசலிங்கம் பந்துலு எழுதிய “ரசிக ஜன மனோரஞ்சனம்” எனும் நூலும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதைவிட ஆச்சர்யமும், பெரிய கொடுமையும் என்ன வென்றால் பெரிய புராணத்தில் பாடப்பட்ட நந்தனார் வரலாற்றை இசை நாடகமாக மாயூரம் கோபாலகிருஷ்ண பாரதியார் ஆக்கினாரல்லவா “நந்தன் சரித்திர” நாடகம், அதுவும் பட்டியலில் இருந்தது.

    பின்னர் பல சர்ச்சைகள், கூட்டங்கள், ஆலோசனைகள் இவற்றுக்குப் பிறகு மற்ற நூல்கள், அடித்தல் திருத்தல், நீக்கல் ஆகியவைகளுடன் வெளியிட்டாலும் முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனமு” சந்தையில் இல்லாமலே போய்விட்டது.

    இந்த சந்தடிகளெல்லாம் அடங்கிய பின் வாழ்க்கையில் விரக்தியுற்று நாகரத்தினம்மாள், தன் செல்வங்களையெல்லாம் ஒரு மகானின் நினைவிடத்தைப் புதுப்பித்து, ஒரு துறவி போல வாழ்ந்து வந்த கதை நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. இன்று திருவையாற்றில் காவிரிக் கரையில் மெல்லிய பனிப் பொழிவிடையே இசை வெள்ளம் பெருக்கெடுத்தோடுவது, இவருடைய சிறந்த தொண்டினால் என்பதை அறியும்போது சாதனைதான் பெரிதாக இருக்குமே தவிர, சாதனையாளரைப் பற்றிய சொந்த விமர்சனங்கள் நிற்பதில்லை. போராட்டங்களை சந்தித்த அந்தப் பெண்மணியின் மன உறுதியும், அர்ப்பணிப்புணர்வும் அனைவரும் போற்றவேண்டிய குணங்கள். வாழ்க நாகரத்தினம்மாள் புகழ்!!

    _______________________________________________________________________________

    எனையின்றி பொன் பொருளீந்தவள்
    எனையின்றி என்குலத்தில் எவளுண்டு
    நலமிகு காவியத்தை நாவலர்கள் எனையன்றி
    எம் குலத்தார் எவர்க்கேனும் படைத்ததுண்டோ
    கலையெலாம் பயின் றோங்கி நின்றாள்
    எனையன்றி எம் குலத்தில் எவளுளாள்
    முத்துபழனியே உனக்கிணையாய்
    எவரேயுளார் உன் குலத்தில்

    தெலுங்கு மூலத்தில் இருந்து…ஆங்கிலம். பி.வி.எல் நாராயணராவ் | தமிழ்: ப. சிவனடி
    (http://puthagampesuthu.com/2014/04/16/தடை-செய்யப்படும்-புத்தகங/)
    _______________________________________________________________________________

    தேனே,
    நான் காளியை நசுக்கினேன்;
    ஏன் என்று நினைக்கிறாய்?
    அந்தப் பாம்பு
    உன் அழகான ஜடைப்பின்னுலுக்குப்
    போட்டி என்பதால்…
    நான் கம்சனின் வில்லை உடைத்தேன்
    எதற்கு என்று நினைக்கிறாய்?
    அது உன் வடிவான புருவத்திற்குப்
    போட்டி என்பதால்…
    நான் கோவர்தனமலையை
    வேரோடு பிடிங்கினேன்;

    ஏன் என்று நினைக்கிறாய்?
    அந்த மலை
    உன் திடமான முலைகளுக்குப்
    போட்டி என்பதால்…
    நான் குவளயபீடாவை வருத்தினேன்;
    எதற்கு என்று நினைக்கிறாய்?
    அந்த யானை
    உன் அழகான பின்னிடை அசைவிற்குப்
    போட்டி என்பதால்..
    தேனே,
    தயவுசெய்வு நீயே யோசித்துப்பார்..
    அவைகள் உன்னைப் போலவே
    அழகாய் இருந்தால்
    என்னை வருத்துமா இல்லையா…

    தெலுங்கு மூலத்தில் இருந்து…ஆங்கிலம். பி.வி.எல் நாராயணராவ் | தமிழ்: ஆ. ஈஸ்வரன்
    (http://meyveendu.blogspot.com/2014/03/blog-post_685.html)
    _______________________________________________________________________________

    விக்கிபீடியாவிலிருந்து:
    பார்க்க … https://en.wikipedia.org/wiki/R%C4%81dhik%C4%81-s%C4%81ntvanam

    “If I ask her not to kiss me,
    stroking on my cheeks
    she presses my lips hard against hers.
    If I ask her not to touch me,
    stabbing me with her firm breasts
    she hugs me.
    If I ask her not to get too close
    for it is not decorous,
    she swears at me loudly.
    If I tell her of my vow not
    to have a woman in my bed,
    she hops on
    and begins the game of love.
    Appreciative,
    she lets me drink from her lips,
    fondles me, talks on,
    making love again and again.
    How could I stay away
    from her company?”

    B. V. L. Narayanarow (trans.), ‘From RADHIKA SANTWANAM (Appeasing Radhika)
    [If I ask her not to kiss me]’, in Women Writing in India: 600 B. C. to the Present, ed.
    by Susie Tharu and K. Lalita, 2 vols (London: Pandora, 1991), I 120.

    _______________________________________________________________________________

    பார்க்க … https://en.wikipedia.org/wiki/Muddupalani

    “Which other woman of my kind has
    felicitated scholars with such gifts and money?
    To which other women of my kind have
    epics been dedicated?
    Which other woman of my kind has
    won such acclaim in each of the arts?
    You are incomparable,
    Muddupalani, among your kind.
    […]
    A face that glows like the full moon,
    skills of conversation, matching the countenance.
    Eyes filled with compassion,
    matching the speech.
    A great spirit of generosity,
    matching the glance.
    These are the ornaments
    that adorn Palani,
    when she is praised by kings.”

    B. V. L. Narayanarow (trans.), ‘From RADHIKA SANTWANAM (Appeasing Radhika)
    in Women Writing in India: 600 B. C. to the Present, ed.
    by Susie Tharu and K. Lalita, 2 vols (London: Pandora, 1991), I 120.
    _______________________________________________________________________________

    Share