பெங்களூர் நாகரத்தினம்மா வாழ்வில் …..

0

–தஞ்சை வெ.கோபாலன்.

திருவையாற்றில் அடுத்த மாதம் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனையும், ஐந்து நாட்கள் இசைவிழாவும் மிகச் சிறப்பாக நடக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை வெளியுலகுக்குக் கொண்டுவந்து இந்த அளவுக்குச் சிறப்பாக விழா நடைபெற வழிவகுத்த ஒரு பெண்மணியைப் பற்றி தெரிந்து கொள்வோமே!

திருவையாறு சற்குரு ஸ்ரீதியாகபிரம்மத்தின் புகழ் வெளியுலகத்துக்குப் பரவிட பெரும்பணியாற்றிய பெண்மணி பெங்களூர் நாகரத்தினம்மாள். இவர் வாழ்க்கையில் செல்வம், புகழ் இவற்றின் உச்சியையும் தொட்டவர்; சில நேரங்களில் கடுமையான வீழ்ச்சிகளையும் கண்டவர். இவர் ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர். தந்தையால் கைவிடப்பட்டு இவரும், இவரது தாயார் புட்டம்மாவும் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகி வளர்ந்தவர்கள். இசையிலும், நாட்டியத்திலும் இவர் தேர்ந்து மிகவும் மதிக்கப்பட்ட கலைஞராகத் தென்னாடு முழுவதிலும் திகழ்ந்தவர். இவர் மைசூரில் பிறந்ததனால் கன்னடமும், தெலுங்கும், சென்னையில் வாழ்ந்ததால் தமிழும், சம்ஸ்கிருதமும் நன்கு பயின்று அவற்றில் புலமை பெற்றிருந்தார்.

பெங்களூர் நாகரத்தினம்மாநாகரத்தினம்மாள் அவருடைய சமகாலப் பெண்களோடு ஒப்பிடும்போது அதிகம் படித்த பெண்மணியாகத் திகழ்ந்தார். இவருடைய புலமைக்காக இவர் பல ஊர்களிலும் அழைத்துப் பாராட்டப் பட்டிருக்கிறார். புகழின் உச்சியைத் தொட்டவர் என்பதை பலகாலும் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர். அப்படிப்பட்ட இவர்தான் பின்னர் வாழ்க்கையில் பட்ட அடியின் காரணமாக, செல்வச் செழிப்பிருந்தும், வசதி வாய்ப்புகள் இருந்தும், கலைகளில் நல்ல பாண்டித்யம் இருந்தும், நிம்மதியில்லாமல் போயிற்று. காரணம் இவருக்கு வாரிசு இல்லை. நம்பிக்கை துரோகத்துக்கும் ஆளாகி மனம் வருந்தி, நெருங்கிய நண்பர்கள், கலைஞர்கள் ஆலோசனைக் கிணங்க திருவையாற்றுக்கு வந்து சற்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் சமாதி காவிரிக் கரையில் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதை செப்பனிட்டு அங்கு அவருக்கு ஒரு சமாதி கோயில் எழுப்பி, இன்று அது உலகத்தையே சுண்டி இழுக்கும் இசையின் தலைமை பீடமாக உருவெடுத்து ஆண்டுதோறும் அவர் சமாதியில் ஆராதனை இசைவிழா நடைபெற மூல காரணமாகத் திகழ்ந்தவர். அதுமட்டுமல்ல பல புரட்சிகளைச் செய்த இவரே, திருவையாற்றில் தியாகராஜர் சமாதி ஆராதனையில் பெண்கள் பாடுவதற்கு அனுமதி இல்லாமலிருந்த நிலையை மாற்றி, பெண்களுக்கும் சம அந்தஸ்து பெற்று அங்கு மேடையேறி பாட வழிவகுத்தவரும் இவரே. இந்த உண்மை இன்றைய பெண் பாடகிகள் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது.

இவருடைய வாழ்க்கையில் இன்னுமொரு வேடிக்கையும் நடந்தது. அது வேடிக்கையான நிகழ்ச்சி மட்டுமல்ல, வேதனை தரும் நிகழ்ச்சியுமாகும். தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் வரிசையில் பிரதாபசிம்ம ராஜா மிகவும் பிரபலமானவர். 18ஆம் நூற்றாண்டில் பிரதாபசிம்ம ராஜா தென்னாட்டு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் சம்பந்தப் பட்டிருந்தார். 1739 முதல் 1763 வரை இவர் தஞ்சையை ஆண்டு வந்தார். ஆற்காடு நவாப் முகமது அலிக்கு ஆதரவாக இருந்து அவருடைய எதிரியான சந்தா சாஹேபை சிறைபிடித்துப் பின்னர் முகமது அலியின் வேண்டுகோளுக் கிணங்க அவரை பலியிட்டதும் இவரே. இவர் காலத்தில்தான் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வாணிபம் புரிய நாடுதேடி வந்து கொண்டிருந்தனர், அப்படிப்பட்ட நிலையில் அவர்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பிரதாப சிம்மருக்கு இருந்தது. இவருடைய மகன் தான் துளஜேந்திர ராஜா. அவருக்குப் பின் சுவீகாரம் எடுக்கப்பட்ட மகன்தான் இரண்டாம் சரபோஜி.

இந்த பிரதாபசிம்ம ராஜாவின் அரண்மனையில் பல தேவதாசிகள் உயரிய அந்தஸ்துடன் இருந்து வந்தனர். அப்படிப்பட்ட பல தேவதாசிகளில் ‘முத்துப்பழனி’ எனும் பெயர் கொண்ட தேவதாசி அவருடைய ஆசை நாயகியாக இருந்தார். மன்னரின் அவையில் பல கலைஞர்கள் இருந்தனர், அவர்களில் முத்துப்பழனியும் ஒருவர்; அதுமட்டுமல்லாமல் அவர் மிகச் சிறந்த பண்டிதராகவும் திகழ்ந்தார். தெலுங்கு மொழியில் கவிதை இயற்றும் ஆற்றல் படைத்தவர்; சமஸ்கிருத மொழி அறிவும் இவருக்கு அதிகம். அப்படிப்பட்டவர் ஆண்டாளின் திருப்பாவையை யொட்டி அதே போல தெலுங்கில் ஒரு கவிதை நூலை இயற்றியவர். இவர் கவிதைகளில் பல புதுமைகளை செய்த போதிலும், இவர் இயற்றிய “ராதிகா சாந்தவனமு” (ராதையை சமாதானப் படுத்துதல்) எனும் தெலுங்கு மொழி கவிதை நூல் மிகவும் பிரபலமடைந்தது; பிரபலமடைந்தது மட்டுமல்ல, அரசாங்கத்தின் பார்வை பட்டு அது தடையும் செய்யப்பட்டது.

இந்த “ராதிகா சாந்தவனமு” கதைப் பாடல் அப்படி என்னதான் சொல்லுகிறது என்பது தெரிய வெண்டாமா? ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ராதை ஆகியோர் பற்றிய கதைகள், வடமொழி, தெலுங்கு போன்ற இலக்கியங்களில் ராதை, கிருஷ்ணன் பற்றிய பல கவிதை நூல்கள், அஷ்டபதி, கீதகோவிந்தம் போன்ற பல புகழ் பெற்றன. இந்த கிருஷ்ணன் ராதை உறவை பொதுவாக, பரமாத்மா, ஜீவாத்மா ஐக்கியத்தை உருவகப்படுத்துவதாகத்தான் பெரும்பாலும் சொல்வார்கள். வடமொழி அறிஞர் கே.எம்.முன்ஷி தன்னுடைய “கிருஷ்ணாவதார்” “மேஜிக் ஆஃப் தி ஃப்ளூட்” எனும் நூலில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பாக “ராதா தி காண்ட்ரோவர்ஷியல் கேரக்டர்” என்று எழுதி, ராதை என்பவர் கிருஷ்ணனை விட வயதில் மூத்தவர், யாதவ குல தலைவன் ஒருவனின் மனைவி என்றும் குறிப்பிடுகிறார். அப்படியானால் ராதையையும் கிருஷ்ணனையும் இணைத்து இப்படி பக்தி மார்க்கத்தில் ஒரு பஜனை சம்ப்ரதாயம் உருவாகி விட்டது எப்படி?

போகட்டும்! இப்போது பிரச்சனை அதுவல்ல. கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் ராதை உறவு பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியத்தை விழையும் நோக்கத்தில் இருந்தாலும், தெலுங்கு கவி முத்துப்பழனி இயற்றிய “ராதிகா சாந்தவனமு” அப்படி அமையவில்லை. காம உணர்வால் தூண்டப்பட்ட ஒரு இளம் பெண் கிருஷ்ணனுடன் இன்பம் துய்க்கும் உறவாக சித்தரித்து அது இயற்றப்பட்டிருந்தது. எந்தக் கதையானாலும் அது ஒரு திருப்பம் (ட்விஸ்ட்) இருக்க வேண்டுமல்லவா? இந்தக் கதையில் வயதில் மூத்த அந்தப் பெண் கிருஷ்ணனுடன் உறவில் ஈடுபட்டிருந்தாலும், தன்னுடைய மருமகளான இலா என்பவள் வயதுக்கு வந்தவுடன் அவளை கிருஷ்ணனுக்கு அளித்து விடுகிறாள். அப்போது அந்த ராதை இலாவுக்கும், கிருஷ்ணனுக்கும் இவர்கள் உறவில் எப்படியெல்லாம் இன்பம் துய்க்க முடியும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறாள். அதுதான் கவிதை. *(இணையத்திலிருந்து சில பாடல்களை கட்டுரையின் இறுதியில் காண்க)

பிற்காலத்தில் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் ஒருவர் இந்த நூலை இயற்றியவர் ஒரு பெண் என்பதறியாமல் முத்துப் பழனி எனும் ஒரு ஆண் என்கிறார். இந்த நூல் 1887இலும் பின்னர் 1907லும் சென்னையில் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஒரு வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போது சென்னை மாகாணத்தில் தெலுங்கு பேசும் பகுதியில் வாழ்ந்த சீர்திருத்தக்காரரும், தேவதாசி முறை ஒழிப்பு ஆதரவாளரும், விதவா விவாக ஆதரவாளருமான வீரேசலிங்கம் பந்துலு என்பவரின் கவனத்துக்கு இந்த நூல் வந்தது. மகாகவி பாரதி தன்னுடைய “சந்திரிகையின் கதை” எனும் நாவலில் இந்த வீரேசலிங்கம் பந்துலுவையே ஒரு கதாபாத்திரமாக்கியிருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறேன்.

இந்த வீரேசலிங்கம் பந்துலு தெலுங்கு மொழி கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு”களைத் தொகுத்து வெளியிட்டிருந்தார். அந்தத் தொகுப்பு நூலில் இந்த “ராதிகா சாந்தவனமு” கவிதை நூலைப் பற்றியும், அதன் உள்ளடக்கம் பற்றியும் எழுதியிருந்தார். அப்படி குறிப்பிடும்போது அவர் தேவதாசிகளை வெறுப்பவர் என்ற முறையில் இதன் ஆசிரியரான முத்துப்பழனியைக் குறிப்பிட தெலுங்கில் மரியாதைக் குறைவாக விளிக்கும் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். கவிஞரின் சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழி அறிவைப் பாராட்டிவிட்டு, உள்ளடக்கம் அதிர்ச்சியாக இருப்பதாக அவர் எழுதினார். உச்சகட்டமாக கவிஞர் முத்துப்பழனியை நடத்தை கெட்டவள் என்றும், ஒரு விலைமாதினால் எழுதப் பட்டதால் நூல் ஆபாசம் நிறைந்ததாக உள்ளது என்றும் எழுதினார்.

இந்த விவரங்களையெல்லாம் கேள்விப்பட்ட நாகரத்தினம்மாள் அந்த நூலை வாங்கிப் படித்துப் பார்த்தார். அதில் இருந்த பல பிழைகளை நீக்கி நல்ல முறையில் மீள்பதிவு செய்து வெளியிட்டார். அப்படி வெளியிட்ட பதிப்பின் முன்னுரையை எழுதிய நாகரத்தினம்மாள் சொல்கிறார். “வீரேசலிங்கம் இந்த நூலைப் பற்றி எழுதுகையில் ஆசிரியரும் கவிஞருமான முத்துப்பழனியை மிகக்கேவலமாக, அவர் ஒரு வேசி, இவரது தாயார் முத்தியாலு, முத்துப்பழனி பிரதாபசிம்ம ராஜாவின் ஆசைநாயகி என்றெல்லாம் எழுதியிருந்ததை நாகரத்தினம்மாள் கண்டித்து முத்தியாலு என்பவர் கவிஞரின் தாய் அல்ல, தந்தை என்பதையும் எழுதினார்.

முத்துப்பழனி ஒரு விலைமாது, ஒழுக்கமற்றவர் என்றெல்லாம் விமர்சனம் செய்திருந்ததை நாக்ரத்தினம்மாள் விரும்பவில்லை. அதற்கு கண்டனங்களைத் தெரிவித்தார். தேவதாசியாகப் பிறந்ததாலேயே ஒருவர் ஒழுக்கமற்றவர் என்று வீரேசலிங்கம் எப்படி முடிவுக்கு வரலாம் என்பது அவர் வாதம். இதற்கிடையே 1911 ஜனவரி மாதம் சென்னையிலிருந்து வெளிவந்த தெலுங்கு பத்திரிகையான “சசிலேகா” வில் இந்த நூலைப் பற்றி “ஒரு விலைமாதினால் எழுதப்பட்டு, இன்னொரு விலைமாது அதை திருத்தி வெளியிட்டிருக்கிறார்” என்று எழுதினார்கள்.

பல விவாதங்கள், அரசாங்க கடித பரிமாற்றங்கள், சமூக ஆர்வலர்களின் தலையீடு இவற்றின் முடிவில் இந்த நூல் காவல்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதில் பதிப்பாசிரியர் பெயரை பெங்களூரு நாகரத்தினம்மாள் (மதராசின் பிரபலமான விலைமாதுக்களில் ஒருவர்) என்று குறிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து 1911 மே மாதம் சென்னை காவல்துறை டெபுடி கமிஷனர் கன்னிங்ஹாம் தலைமையில் ஒரு குழு சென்று ஆய்வு நடத்தி மொத்தம் 18 நூல்களை ஆபாசம் என்று முடிவுக்கு வந்து ஒரு பட்டியல் தயாரித்தது. அதில் இரண்டாமிடத்தில் நாகரத்தினம்மாள் பிரசுரித்த முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனமு” இருந்தது. இதில் இன்னொரு வேடிக்கை, இந்த பிரச்சனையைக் கிளப்பி சீர்திருத்தம் பேசிய வீரேசலிங்கம் பந்துலு எழுதிய “ரசிக ஜன மனோரஞ்சனம்” எனும் நூலும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதைவிட ஆச்சர்யமும், பெரிய கொடுமையும் என்ன வென்றால் பெரிய புராணத்தில் பாடப்பட்ட நந்தனார் வரலாற்றை இசை நாடகமாக மாயூரம் கோபாலகிருஷ்ண பாரதியார் ஆக்கினாரல்லவா “நந்தன் சரித்திர” நாடகம், அதுவும் பட்டியலில் இருந்தது.

பின்னர் பல சர்ச்சைகள், கூட்டங்கள், ஆலோசனைகள் இவற்றுக்குப் பிறகு மற்ற நூல்கள், அடித்தல் திருத்தல், நீக்கல் ஆகியவைகளுடன் வெளியிட்டாலும் முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனமு” சந்தையில் இல்லாமலே போய்விட்டது.

இந்த சந்தடிகளெல்லாம் அடங்கிய பின் வாழ்க்கையில் விரக்தியுற்று நாகரத்தினம்மாள், தன் செல்வங்களையெல்லாம் ஒரு மகானின் நினைவிடத்தைப் புதுப்பித்து, ஒரு துறவி போல வாழ்ந்து வந்த கதை நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. இன்று திருவையாற்றில் காவிரிக் கரையில் மெல்லிய பனிப் பொழிவிடையே இசை வெள்ளம் பெருக்கெடுத்தோடுவது, இவருடைய சிறந்த தொண்டினால் என்பதை அறியும்போது சாதனைதான் பெரிதாக இருக்குமே தவிர, சாதனையாளரைப் பற்றிய சொந்த விமர்சனங்கள் நிற்பதில்லை. போராட்டங்களை சந்தித்த அந்தப் பெண்மணியின் மன உறுதியும், அர்ப்பணிப்புணர்வும் அனைவரும் போற்றவேண்டிய குணங்கள். வாழ்க நாகரத்தினம்மாள் புகழ்!!

_______________________________________________________________________________

எனையின்றி பொன் பொருளீந்தவள்
எனையின்றி என்குலத்தில் எவளுண்டு
நலமிகு காவியத்தை நாவலர்கள் எனையன்றி
எம் குலத்தார் எவர்க்கேனும் படைத்ததுண்டோ
கலையெலாம் பயின் றோங்கி நின்றாள்
எனையன்றி எம் குலத்தில் எவளுளாள்
முத்துபழனியே உனக்கிணையாய்
எவரேயுளார் உன் குலத்தில்

தெலுங்கு மூலத்தில் இருந்து…ஆங்கிலம். பி.வி.எல் நாராயணராவ் | தமிழ்: ப. சிவனடி
(http://puthagampesuthu.com/2014/04/16/தடை-செய்யப்படும்-புத்தகங/)
_______________________________________________________________________________

தேனே,
நான் காளியை நசுக்கினேன்;
ஏன் என்று நினைக்கிறாய்?
அந்தப் பாம்பு
உன் அழகான ஜடைப்பின்னுலுக்குப்
போட்டி என்பதால்…
நான் கம்சனின் வில்லை உடைத்தேன்
எதற்கு என்று நினைக்கிறாய்?
அது உன் வடிவான புருவத்திற்குப்
போட்டி என்பதால்…
நான் கோவர்தனமலையை
வேரோடு பிடிங்கினேன்;

ஏன் என்று நினைக்கிறாய்?
அந்த மலை
உன் திடமான முலைகளுக்குப்
போட்டி என்பதால்…
நான் குவளயபீடாவை வருத்தினேன்;
எதற்கு என்று நினைக்கிறாய்?
அந்த யானை
உன் அழகான பின்னிடை அசைவிற்குப்
போட்டி என்பதால்..
தேனே,
தயவுசெய்வு நீயே யோசித்துப்பார்..
அவைகள் உன்னைப் போலவே
அழகாய் இருந்தால்
என்னை வருத்துமா இல்லையா…

தெலுங்கு மூலத்தில் இருந்து…ஆங்கிலம். பி.வி.எல் நாராயணராவ் | தமிழ்: ஆ. ஈஸ்வரன்
(http://meyveendu.blogspot.com/2014/03/blog-post_685.html)
_______________________________________________________________________________

விக்கிபீடியாவிலிருந்து:
பார்க்க … https://en.wikipedia.org/wiki/R%C4%81dhik%C4%81-s%C4%81ntvanam

“If I ask her not to kiss me,
stroking on my cheeks
she presses my lips hard against hers.
If I ask her not to touch me,
stabbing me with her firm breasts
she hugs me.
If I ask her not to get too close
for it is not decorous,
she swears at me loudly.
If I tell her of my vow not
to have a woman in my bed,
she hops on
and begins the game of love.
Appreciative,
she lets me drink from her lips,
fondles me, talks on,
making love again and again.
How could I stay away
from her company?”

B. V. L. Narayanarow (trans.), ‘From RADHIKA SANTWANAM (Appeasing Radhika)
[If I ask her not to kiss me]’, in Women Writing in India: 600 B. C. to the Present, ed.
by Susie Tharu and K. Lalita, 2 vols (London: Pandora, 1991), I 120.

_______________________________________________________________________________

பார்க்க … https://en.wikipedia.org/wiki/Muddupalani

“Which other woman of my kind has
felicitated scholars with such gifts and money?
To which other women of my kind have
epics been dedicated?
Which other woman of my kind has
won such acclaim in each of the arts?
You are incomparable,
Muddupalani, among your kind.
[…]
A face that glows like the full moon,
skills of conversation, matching the countenance.
Eyes filled with compassion,
matching the speech.
A great spirit of generosity,
matching the glance.
These are the ornaments
that adorn Palani,
when she is praised by kings.”

B. V. L. Narayanarow (trans.), ‘From RADHIKA SANTWANAM (Appeasing Radhika)
in Women Writing in India: 600 B. C. to the Present, ed.
by Susie Tharu and K. Lalita, 2 vols (London: Pandora, 1991), I 120.
_______________________________________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *