மார்கழி மணாளன் 12 திருக்குடந்தை சாரங்கபாணி
க. பாலசுப்பிரமணியன்
காவிரிக் கரையோரப் பஞ்சரங்கம்
பூவிரி பொற்றாமரை விண்ணோக்கும் !
மாமுனி ஹேமரின் தவக்கோலம்
மாலினி இலக்குமி மகளாய் வேண்டும் !
தவப் பயனோ தரணியின் வினைப் பயனோ !
தாமரை ஆயிரம் நடுவே வந்தது கோமளமே!
தாயாரே தவமுனிக்கு வந்தாள் மகளாய்
தரணிக்குக் குடமுழுக்குக் குடந்தையிலே!
வில்லேந்தி வந்தான் வைகுந்தன் சாரங்கன்
சொல்லேந்தி நின்ற தவமுனியர் பேரன்பன் !
பண்ணேந்திப் பாசுரங்கள் ஆழ்வார்கள் பாடிடவே
தலையேந்திக் கிடந்தானும் எழுந்தான் அருளிடவே !
பிரபந்தத்தைச் சேர்த்தளித்த பரந்தாமன்
பிரபஞ்சத்தைக் காக்கின்ற பேரருளாளன்
பிரகலாதன் துயர்தீர்த்த நரசிம்மன்
பிறவிப்பயன் கொடுக்கின்ற நாரணன் !
தங்கமென மின்னிவிடும் செங்கதிரில் திருமேனி
பங்கமில்லா பக்தியிலே பொங்கிவரும் அருள்கேணி !
மூதடைந்தும் சூதறியா சபரியும் பக்தியுடன்
சுவைத்தளித்த பழத்தினையும் சுவைத்த தேனீ !
அன்புடை நெஞ்சங்களில் அவன் ஆட்சி
ஆராவமுதன் அகிலத்தின் அருள்காட்சி !
நினைத்தாலே சொர்க்கம் அவன் வாசல்
நிலையாத வாழ்வுக்கு அவன் காவல் !
வாராக உருவெடுத்து வேதங்கள் காத்தவனே
வாரணம் அழைத்திடவே விண்ணிருந்து வந்தவனே!
வைகுந்த அழகுடனே வாசலில் அருள்பவனே
வாடுகின்றேன் வேண்டுகின்றேன் வந்தருள்வாய் வேதவனே !