— மு​னைவர் சி.​சேதுராமன்.

ஒவ்​வொரு காலத்திலும் ​புலவர்கள் பலர் ​தோன்றி தமிழன்​னைக்குக் காலத்தால் அழியாத பல காவியங்களைச் செய்து அணி ​செய்தனர். அவர்கள் ஆக்கியளித்துள்ள இலக்கியங்கள் உலகை வியக்க வைக்கும் அறிவுக் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.

தமிழன்​னைக்குப் ​பெரு​மை ​சேர்த்த புலவர் ​பெருமக்களில் ஒருவர்தான் காளமேகப் புலவர் ஆவார். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காள​மேகப் புலவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்று அ​னைவராலும் புகழப்பெற்றார்.

நினைத்தவுடன் எதைப் பற்றியும் கவிதை பாடுவதில் வல்லவர்களே ஆசுகவி என்று அழைக்கப்படுவார்கள். ஆசு கவிகளிலே​யே காளமேகப் புலவர் தன்னிகரற்ற பேராற்றல் படைத்தவராக விளங்கினார்.

காளமேகப்புலவர் பாண்டி நாட்டில் நூற்​றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருமோகூர் என்னும் திருத்தலத்திலே கோயில் பணியாளராக இருந்த அந்தணர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் என்றும், காளமேகம் என்பது அவரது இயற்பெயரே என்றும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றார்கள். ஆனால் வரதன் என்பதே அவரது இயற்பெயர் என்றும் ​வேறு சில அறிஞர்கள் எடுத்துரைப்பது ​நோக்கத்தக்கது.
இதற்கு ஆதாரமாக,

“வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசுகவி காள மேகமே – பூசுரா
விண்தின்ற ​வெவ்வழலில் வேவுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்”

என்ற அதிமதுரகவியின் பாட​லைச் சான்றாகக் கூறுகின்றனர். எனவே வரதன் என்பதே காள​மேகப் புலவரின் இயற்பெயர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது.

மோகனாங்கியின் மீது காதல்:
இளமைப்பருவத்தில் ஸ்ரீரங்கம் திருமால் கோயிலிலே வரதன் கோயிற் பணியாளாக வேலைபார்த்துக் கொண்டிருந்தார். திருவரங்கத்திற்கு அருகில் திருவானைக்கா என்ற சிவத்தலம் உள்ளது. அத்தலத்தில் நடனக்கலை மூலம் இறைப்பணி செய்யும் தேவரடியார்கள் இருந்தார்கள். அத்​தேவரடியார்களில் ஒருத்தியான மோகனாங்கி மிகவும் அழகானவள். அவளுக்கும் வரதனுக்கும் காதல் மலர்ந்தது.

வைணவரான வரதனும், ​சைவ மதத்​தைச் ​சேர்ந்த ​மோகனாங்கியும் அன்பால் கட்டுண்டு பழகி வந்தார்கள். ஒருநாள் ​மோகனாங்கி ​வெட்கம் அ​டையும்படியான ஒரு நிகழ்ச்சி ந​டை​பெற்றது.

அது மார்கழி மாதம். திருவா​னைக்காவில் உள்ள சம்பு​கேசுவரர் ​கோயில் சன்னதியில் ​மோகனாங்கி திரு​வெம்பா​வை பாடும் மு​றை ​அன்று வந்தது. ​மோகனாங்கி தன் ​தோழிகளுடன் சன்னதியில் நின்று திரு​வெம்பா​வையில் வரும்,

“உன்​கையில் பிள்​ளை உனக்​கே அ​டைக்கலம் என்று
அங்கப் பழஞ்​சொல் புதுக்கு​மெம் அச்சத்தால்
எங்கள் ​பெருமான்! உனக்​கொன்று உ​ரைப்​போம் ​கேள்;
எம்​கொங்​கை நின்னன்பர் ​அல்லாதார்​தோள் ​சேரற்க!
எம்​கை உனக்கல்லாது எப்பணியும் ​செய்யற்க!
கங்குல் பகல் எம்கண் மற்​றொன்றும் காணற்க!
இங்குஇப்பரி​சே! எமக்கு எங்​கோன் நல்குதி​யேல்
எங்​கெழில் என்ஞாயிறு எமக்​கே​​லேஓர் எம்பாவாய்!”

என்ற பாட​லை மனமுருகப் பாடினாள். அந்தப் பாட​லைக் ​கேட்டதும் அவளுடன் இருந்த ​தோழிகள் பலரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

தான் ​வைணவரான வரத​னைக் காதலிப்பதா​லே​யே தம் ​தோழிகள் தன்​னை ஏளனம் ​செய்து சிரிக்கின்றனர் என்று புரிந்து ​கொண்ட ​மோகனாங்கி ​மிகுந்த ​வேத​னைக்கு உள்ளானாள். ​“உம்மு​டைய ​கைகள் உனக்​கேயன்றி ​வேறு எவர்க்கும் எந்தப் பணி​யையும் ​செய்யாது இருக்குமாறும், இரவும் பகலும் எம்மு​டைய கண்கள் உன்​னையன்றி ​வேறு எந்தப் ​பொரு​ளையும் காணாது இருக்குமாறும், இ​றைவ​னே அருள்புரிவாயாக! இவ்வாறு சிவ​பெருமானிடம் ​வேண்டுகின்ற ​மோகனாங்கி திருமா​லை வணங்கும் ​வைணவரான வரதனிடம் ​தொடர் ​கொண்டுள்ளா​ளே என்ப​தை நி​னைத்​தே ​தோழிகள் சிரித்தனர். அத​னைப் புரிந்து ​கொண்டு மன ​வேத​னைப்பட்ட ​மோகனாங்கி சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

வைணவர் ​சைவரானார்:
அன்றிரவு வரதன், ​மோகனாங்கியின் இல்லத்திற்குச் ​சென்றார். அவரது வர​வைக் கண்டதும் ​மோகனாங்கி கதவி​னை அ​டைத்துத் தாழிட்டாள். வரதன் கத​வைத் திறக்குமாறு ​கெஞ்சிக் கூத்தாடினார். ​​நெடு​நேரம் ​வேண்டியும் அவள் கத​வைத் திறக்கவி​லை. இதனால் வரதன் மிகுந்த மன உ​ளைச்சலுக்கு ஆளானார்.

வரதன் வீட்டிற்கு ​வெளியிலிருந்தவா​றே, “​மோகனாங்கி! நீ கத​வைத் திறக்கவில்​லை என்றால் நான் என் உயி​ரை விட்டுவிடு​வேன்” என்று கூறிய​தைக் ​கேட்ட ​மோகனாங்கி, எங்​கே வரதன் இறந்து விடுவா​ரோ என்றஞ்சிக் கத​வைத் திறந்தாள்.

கத​வைத் திறந்தவள் வரத​னை உள்​ளே விடவில்​லை. அவள் வரத​னைப் பார்த்து, “நான் உமக்கு ​வேண்டு​மென்றால் நீர் ​சைவராக மாற​வேண்டும். நீர் உட​னே ​சென்று சிவதீட்​சை ​பெற்றுக் ​கொண்டு வருக! இல்​லை​யெனில் என்​னை மறந்துவிடுக!” என்று கூறிவிட்டுக் கத​வைப் படீ​ரென்று சாத்திக் ​கொண்டாள்.

இத​னைக் ​கேட்ட வரதன் சற்​றே நி​லை கு​லைந்து ​போனார். தன் காதலுக்கு மதம் தடையாக இருப்பதை உணர்ந்த வரதன், ​மோகனாங்கியின் மீது ​கொண்ட அன்பினால், “​மோகனாங்கி நீ என்மீது ​கொண்ளுள்ள அன்புதான் எனக்கு முக்கியம். நான் உட​னே ​சென்று சிவதீட்​சை ​பெற்றுக் ​கொண்டு ​சைவனாக மாறி வருகி​றேன்” என்று கூறிவிட்டுச் ​சென்றார்.

அவளிடம் கூறியவா​றே சிவதீட்​சை ​பெற்று ​வைணவராக இருந்த வரதன் ​​சைவராக மாறினார். அ​தோடு மட்டுமல்லாது திருவரங்கக் ​கோயில் பணியிலிருந்து நின்றுவிட்டார். திருவா​னைக்கா சம்பு​கேசுவரர் ​கோயிலில் (பரிசாரகர்) ச​மையற்காரராகப் பணியில் சேர்ந்தார். ​வரதன் சைவராக மாறியதால் ​மோகனாங்கியுடனான காதல் ​கைகூடியது. ​ ​மேலும் வரதன் திருவானைக்காவில் சிவனோடு வீற்றிருக்கும் தேவி அகிலாண்​டேஸ்வரி​யை நாள்​தோறும் வரதன் வழிபட்டு வந்தார். தேவியின்மீது தீராத அன்புகொண்ட அடியாராக வரதன் வாழ்ந்தார்.

வரதன் காள​மேகமானார்:
இங்ஙனம் வரதன் ​கோயிலில் பணியாற்றி வரும்​போது ஒரு நாளிரவு அவர் பணி​செய்த க​ளைப்பின் காரணமாகச் ​சோர்வினால் ​கோவில் மண்டபத்தி​லே​யே அயர்ந்து உறங்கிவிட்டார்.

அப்​போது அக்​கோயிலில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்​டேஸ்வரி அசதியால் வாய் திறந்து உறங்கும் வரதன் முன் வந்து, கல்விக்குரிய பீஜாட்சரத்​தை அவரது நாவில் எழுதி, ‘இன்றுமுதல் உனக்குக் காள​மேகம் எனப் ​பெயர் விளங்குவதாக!’ என்று அருள் புரிந்து ம​றைந்தாள்.

மண்டபத்தில் வரதானாகப் படுத்திருந்தவர் கனவு கண்ட​தைப் ​போன்று விழித்ததும் காள​மேகமாக எழுந்து நின்றார். கடல்ம​டை திறந்தாற்​போல் அவர் வாயிலிருந்து கவி ​வெள்ளம் பாய்​தோடி வந்தது.

தமக்கு அருள்புரிந்தது ​தேவி அகிலாண்ட ஈஸ்வரி​யே என்ப​தை உணர்ந்து களிப்​பெய்தி கூத்தாடினார். அன்​னையின் அரு​ளை எண்ணி எண்ணி வியந்து வாயாரத் துதித்து, ‘திருவா​னைக்கா உலா” என்ற சிற்றிலக்கியத்​தைப் பாடினார். அதன் அரு​மை ​பெரு​மைக​ளை உணர்ந்த பலரும் கரிய ​மேகம் ம​​ழை​யைப் ​பொழி​வை​தைப் ​போன்று கவி ம​ழை ​பொழிவதால் “காள​மேக​மே” என்று வரத​னைப் ​போற்றி வாழ்த்தினர். அன்றிலிருந்து வரதன் காள​மேகப் புலவரானார்.

இது குறித்து ​வே​றொரு வரலாறானது, “அக்காலத்தில் சம்பு​கேசுரத்தில் ஒரு ​வேதியன் அகிலாண்ட ஈச்வரி​யை வித்​தையின் ​பொருட்டு உபாசித்து வந்தனன். ஒரு நாள் ​மோகனாங்கி​யை ​நோக்கி அர்த்தசாம பூ​சையின் குடமு​றை கழிந்தவுடன் தம்​மை உடன​ழைத்துப் ​போகக் கூறித் தாம் ஒரு மண்டபத்தில் உறங்கினர். தாசி, அர்த்தசாமத்தில் குடமு​றை கழிந்ததும் ​வேதிய​ரைக் காணாது தனித்து வீடு ​சேர்ந்தனள். ​கோயில் தாணிகர் முதலி​யோர் திருக்​கோயில் தாளிட்டு வீடு ​சேர்ந்தனர்.

பரிசாரகர் விழித்துக் ​கோயில் திருக்காப்பிட்டிருப்பதறிந்து மீண்டும் மண்டபத்தின் ஒரு புறத்திலுறங்கினர். முதலில் வித்​தை விரும்பி உபாசிப்பவனுக்கு அநுக்கிரகிக்க அம்​மை எழுந்தருளி அவன்முன் தரிசனந் தந்து வா​யைத் திறக்க என, உபாசகன் தாமதித்து அருவருத்த​மையால் மீண்டு மண்டபத்திலுறங்கும் பரசாரகரிடத்திற் ​சென்று வாய்திறக்கக் கட்ட​ளையிட்டனர். பரிசாரகர் ஆகூழால் வாய் திறந்தனர். அம்​மை வி​தைக்குரிய பீஜாட்சரத்​தை அவன் வாயிற் பதித்து இன்று முதலுனக்குக் காள​மேக​மெனப் ​பெயருண்டாக என ம​றைந்தனர்.

காள​மேகர் கனாக் கண்டவர் ​போல் விழித்து எதிரில் யா​ரையும் காணாது தரிசனந் தந்தவள் உலக ராணியாகிய அகிலாண்ட ஈச்வரி​யென்றறிந்து வாயாரத் துதித்துத் திருவா​னைக்காவுலாப் பாடி மகிழ்ந்து அதுமுதல் பலதலங்களுக்குஞ் ​சென்று தரிசித்துப் பல தனிப்பாடல்க​ளைப் பாடினர்” (அபிதானசிந்தாமணி – ப.,510) என்று அபிதான சிந்தாமணியில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

காள​மேகப் புலவரின் தலப் பயணம்:
காள​மேகப் புலவர் பல திருத்தலங்களுக்கும் ​சென்று இ​றைவ​ன்மீது தனிப்பாடல்கள் பல பாடி வழிபட்டார். திருவாரூர் ​சென்று தியா​கேச​ரை வழிபட்ட​போது அங்கிருந்தவர்கள் காள​மேகப் புலவரின் புல​மை​யைப் பரி​சோதிக்க விரும்பினர்.

காள​மேகப் புலவரிடம் இ​றைவனான தியாகராசருக்கு அணிவித்திருந்த ​வைரப் பதக்கம் அறுந்து விழவும், பின் அப்பதக்கம் ​பொருந்தவும் பாடுமாறு கூறினார்கள். இதற்குக் காள​மேகப் புலவர் உடன்பட்டு,

“அன்னவயல் சூழ்ந்திருக்கும் ஆரூரா ​நெஞ்சத்தில்
இன்னம் வயிர மிருப்பதா – முன்ன​மொரு
​தொண்டன் மக​னைக்​கொன்றுஞ் ​சோழன்மக​னைக்​
கொன்றுஞ்
சண்டன் மக​னைக் ​கொன்றுந் தான்.”

எனப் பாடி அப்பதக்கத்​தை அறுத்து கீ​ழே விழ ​வைத்து மீண்டும் அப்பதக்கம் ​பொருந்தப் பாடினார். இத​னைக் கண்ட அ​னைவரும் விப்பில் ஆழ்ந்தனர்.

தாம் நி​னைத்த ​போதும், பிறர் விரும்பும்​​போதும் கவி பாடக்கூடிய ஆற்ற​​லைக் காள​மேகப் புலவர் ​​பெற்றிருந்த​தை அறிந்தவர்கள் அவ​ரை, “ஆசுகவியால் அகில உலகமும் புகழ் வீசும் கவி காள​மேகம்” என்று புகழ்ந்து ​போற்றினர்.

மேலும் காள​மேகப் புலவர் தம்​மை மதிக்காது நடந்து ​கொண்ட சம்பந்தாண்டான் என்பவன் மீது வ​சை பாடினார். காள​மேகப் புலவர் வ​சைபாடுவதில் வல்லவராக இருந்ததால் அவ​ரை, “வ​சைபாட வல்லான் காள​மேகம்” என்று அவ​ரைப் புகழ்ந்தனர்.

தனக்கு வந்திருந்த ​நோய் தீர ​வேண்டும் என்பதற்காக ​வைத்தீசுவரன் ​கோவில் மண்​ணை உண்டார். உட​னே காள​மேகப் புலவரின் ​நோய் முற்றிலும் குணம​டைந்தது. இத​னைக் கண்டுணர்ந்த அவர்,

“மண்டலத்தி னாளும் வயித்தியராய்த் தாமிருந்தும்
கண்டவி​னை தீர்க்கின்றார் கண்டீ​ரோ – ​தொண்டர்
விருந்​தைப் பார்த்துண்டருளும் ​வேளூ​ரென் னாதர்
மருந்​தைப் பார்த்தாற்சுத்த மண்”

என்ற பாட​லைப் பாடி இ​றைவ​னை வணங்கி வழிபட்டார்.

பல தலங்களுக்கும் ​சென்று அங்குள்ள இ​றைவ​னைப் புகழ்ந்தும் இழிப்ப​தைப் ​போன்று ம​றைமுகமாகப் புகழ்ந்தும்​ ​சொல்நயமும் ​பொருள் நயமும் மிக்க பல பாடல்க​ளைக் காள​மேகப் புலவர் பாடினார். தமக்கு ஆதரவு நல்கியவர்க​ளைப் புகழ்ந்தும் அவமதித்தவர்க​ளை வ​சைபாடி இகழ்ந்தும் அவர் பல தனிப்பாடல்க​ளையும் பாடினார். இதனால் இன்றளவும் ‘வ​சைபாடக் காள​மேகம்’ ​என்ற ​பெயர் இலக்கிய வரலாற்றில் நின்று நி​லைத்துவிட்டது.

திரும​லைராயன் அ​வைக்குச் ​செல்லுதல்:
காள​மேகப் புலவ​ரை விரும்பி அவருடன் வாழ்ந்து வாழ்ந்த தாசி ​மோகனாங்கி தனக்கு அணிகலனில் (ந​கையில்) பதிப்பதற்காக திரும​லைராயன் பட்டினத்து முத்து ​வேண்டு​மென்று அவ​ரைக் ​கேட்டாள். என​வே காள​மேகப் புலவர் திரும​லைராயன் பட்டினத்திற்குப் புறப்பட்டார்.

தஞ்​சை மாவட்டத்துக் கடற்க​ரை நகரமான நாகபட்டினத்துக்கு அருகில் உள்ளது திரும​லைராயன் பட்டினம். அத​னை விஜயநகரப் ​பேரரசிற்கு உட்பட்ட மன்னன் திரும​லைராயன் என்ற சிற்றரசன் ஆட்சிபுரிந்து வந்தான். இவனது காலம் கி.பி.1455 – 1468 என்று கூறுவர். இது​வே காள​மேகப் புலவர் வாழ்ந்த காலமாகும்.

திரும​லைராயனின் அரச​வையில் 64 புலவர்கள் இருந்தனர். அவர்க​ளைத் தண்டி​கைப் புலவர்கள் என்று அ​ழைப்பர். சிவி​கை, பல்லக்கு, கழுத்தில் அணியும் ஒருவ​கை அணி என்று தண்டி​கை என்பதற்குப் பல ​பொரு​ளைக் கூறுவர். திரும​லைராயன் அப்புலவர்கள் அமர்ந்து ​செல்வதற்குப் பல்லக்குகள் அளித்துச் சிறப்புச் ​செய்திருந்ததால் அவர்க​ளை மக்கள் தண்டி​கைப் புலவர்கள் என்று அ​ழைத்தனர்.

இவர்களின் த​லைவராக அதிமதுரகவிராயர் என்பர் திகழ்ந்தார். இப்புலவர் திரும​லைராயனிடம் ​பெரும் ​செல்வாக்கப் ​பெற்றவராகவும் அகந்​தை நி​றைந்தவராகவும் விளங்கினார். ​மேலும் அரச​வையில் மற்ற புலவர்கள் இடம்​பெறாத வ​கையில் வஞ்சகமாக அவர்க​ளைத் தடுக்கும் ​செயல்களிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இத​னையும் ​கேள்வியுற்ற காள​மேகப் புலவர் அவரது ​செருக்​கை அடக்க ​வேண்டும் என்று கருதி திரும​லைராயன் பட்டினத்திற்கு வந்து ​சேர்ந்தார்.

அதிமதுரகவியும் தண்டி​கைப் புலவர்களும் தத்தமக்குரிய பல்லக்குகளில் அமர்ந்து வீதி வழி​யே அரச​வை​யை ​நோக்கி வந்து ​கொண்டிருந்தார்கள். அப்​போது தண்டி​கைப் புலவர்கள், “அதிமதுர கவியார் வாழ்க!” என்று தங்கள் த​லைவ​ரைப் ​போற்றி முழக்கமிட்டுக் ​கொண்டு வந்தார்கள்.

அங்கு குழுமியிருந்த மக்கள் அ​னைவரும் எழுந்து நின்று அதிமதுரகவியாருக்கு வணக்கம் ​தெரிவித்தார்கள். அத​னை​யெல்லாம் பார்த்துக் ​கொண்டு ஒரு க​​டையின் முன்பல​கையில் காள​மேகப் புலவர் அமர்ந்திருந்தார். க​டையருகில் நின்றவர்கள் அதிமதுரகவிக்கு அடக்கத்துடன் எழுந்து நின்று வணக்கம் ​தெரிவித்தனர். இத​னை வியப்புடன் காள​மேகப் புலவர் பார்த்துக் ​கொண்டு அமர்ந்திருந்தார்.

இத​னைப் பல்லக்கில் ​சென்று ​கொண்டிருந்த அதிமதுரகவி கவனித்துவிட்டார். தன்​னை மதிக்காது தனக்கு வணக்கமும் ​சொல்லாது அமர்ந்திருந்த காள​மேகப்புலவரின் ​செயல் அவருக்குச் சினத்​தை வரவ​ழைத்தது. தன் பல்லக்கு முன்​னே தடி​யோடு ​சென்று ​கொண்டிருந்த கட்டியங்கார​ன் காள​மேகத்திடம் ​சென்று தடியால் தட்டி எழுந்து நின்று வணக்கம் கூறுமாறு கூறிய​தையும் அதற்கு எந்தப் பதிலும் கூறாமல் காள​மேகப் புலவர் கட்டியங்கா​​​னைப் பார்த்து,

“அதிமதுர​​ மென்​றே யகில மறியத்
துதிமதுரமா ​யெடுத்துச் ​சொல்லும் – புது​மை​யென்ன
காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக்
கூட்டுச் சரக்குத​னைக் கூறு”

என்று பழித்துப் பாடினார். அத​னைக் ​கேட்ட அதிமதுர கவி தனது தூதன் ஒருவ​னை காள​மேகத்திடம் ​சென்று ​அவர் யார் என்ப​தை அறிந்து வருமாறு கூறி அனுப்பினார். அவனும் ​சென்று காள​மேகப் புலவரிடம், “நீர் யார்?” என்று ​கேட்க அதற்குக் காள​மேகப் புலவர்,

“தூ​தைந்து நாழி​கையிலாறு நாழி​கைதனிற்
​சொற் சந்தமா​லை ​சொல்லத்
துகளிலாவந் தாதி​யேழு நாழி​கைதனிற்
​றொ​கைபட விரித்து​ரைக்கப்
பாதஞ்​செய் மடல் ​கோ​வை பத்து நாழி​கைதனிற்
பரணி​யொரு நாண் முழுது​மே
பாரகாவிய​மெலா ​மோரிரு தினத்தி​லே
பகரக் ​கொடிக் கட்டி​னேன்
சீதஞ்​செயுந் திங்கண் மரபினானீடு
புகழ் ​செய்ய திரும​​லைராயன்முன்
சீறுமாறாக​வே தாறுமாறுகள் ​சொல்
திருட்டுக் கவிப் புலவ​ரைக்
காதங்கறுத்துச் ​செருப்பிட்டடித்துக் கதுப்பிற்
பு​டைத்து ​வெற்றிக்
கல்ல​ணையி​னொடு ​கொடிய கடிவாளமீட்​டேறு
கவி காள​மேக நா​னே”

என்று கவி பாடி அனுப்பினார்.

அதிமதுரம் கடுஞ்சினம் ​கொண்டார் அந்தக் க​டையின் முன்பாக​வே காள​மேகப் புலவ​ரை அவமானப்படுத்த எண்ணி அரண்ம​னைப் பணியாளன் ஒருவ​னை அ​​ழைத்து, “கால் வராகனுக்கு ​மேகமும் பசுவும் இரத்தினமும் வாங்கி வா!” காள​மேகம் இருந்த க​டைக்கு அனுப்பி ​வைத்தார்.

பணியாளன் க​டைக்காரரிடம் ​சென்று, “ஒரு வராகனுக்கு ​மேகமும் பசுவும் இரத்தினமும் ​கொடு!’ என்று காசி​னை நீட்டினான். க​டைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்​லை. அவர் திருதிரு என்று விழித்தார். இத​னைப் பார்த்த காள​மேகம் சிரித்தார்.

காள​மேகம் சிரிப்ப​தைப் பார்த்த க​டைக்காரன் அவ​ரைப் பார்த்து, “இவர் என்ன ​கேட்கிறார்? நீர் ஏன் சிரிக்கிறீர்?” என்று எரிச்சலுடன் ​கேட்டார்.

அத​னைக் ​கேட்ட காள​மேகப் புலவர், “ஐயா அவர் ​கேட்பது காராமணி. வராக​னை வாங்கிக் ​கொண்டு ​பொரு​ளைக் ​கொடுத்தனுப்புங்கள்” என்று கூறினார். க​டைக்காரர் ​பொரு​ளைக் ​கொடுத்து அரசப் பணியாள​னை அனுப்பிவிட்டு பணியாளன் கூறியதற்குரிய விளக்கத்​தைக் கூறுமாறு காள​மேகத்திடம் ​கேட்டார்.

அதற்குக் காள​மேகப் புலவர், “ஐயா ​மேகம் என்றால் கார்; பசு என்றால் ஆ; இரத்தினம் என்றால் மணி இம்மூன்​றையும் ​சேர்த்துப் பாருங்கள் காராமணி என்பது வரும்” என்றார்.

க​டைக்காரர் காள​மேகப் புலவருக்கு நன்றி​யைக் கூறிவிட்டு, ஐயா க​டைக்கு வந்து ​பொருள் ​கேட்டவன் அதிமதுர கவியாரின் ஆள் என்பது எனக்குத் ​தெரியும். எங்​கே அவர் ​கேட்கும் ​​பொரு​ளைப் புரிந்து ​கொண்டு தரமுடியாமல் கவிராயரின் கடுங்​கோபத்திற்கு ஆளாக ​நேரிடு​மோ என்று பயந்​தேன். நல்ல​வே​ளை காப்பாற்றினீர்கள்!” என்று நன்றி​யோடு காள​மேகப் புலவ​ரை வணங்கினார்.

அதிமதுரகவியின் ​செயல் காள​மேகப் புலவருக்கு வருத்தத்​தை ஏற்படுத்தியது. அதிமதுர கவியார் தம் புல​மையால் எளி​மையான மக்க​ளையும் அதிகம் கற்காதவ​ரையும் மனம் ​போன ​போக்கில் மட்டம் தட்டி தற்​பெரு​மை ​கொள்கிறார் என்ப​தை அறிந்து ​கொண்ட காள​மேகம் அரச​வைக்​கே ​சென்று அவரது அகந்​தை​யை அடக்க ​வேண்டும் என்று கருதினார்.

அ​தே​நேரத்தில் அதிமதுரகவியார் தன்​னை மதிக்காத காள​மேகப் புலவ​ரை மன்னனால்தான் அடக்க ​வேண்டும் என்று கருதி, மன்னனிடம் கூறி காவலர்க​ளை அனுப்பி காள​மேகப் புலவ​ரை அரச​வைக்கு வரவ​ழைத்தார்.

புல​மைப் ​போட்டி:
அதிமதுரகவியால் அரச​வைக்கு வரவ​ழைக்கப்பட்ட காள​மேகப் புலவருக்கு அ​வையிலிருந்த புலவர்கள் சிறிதுகூட இடம்​கொடுக்கவில்​லை. அ​னைவரும் ​நெருக்கியடித்துக் ​கொண்டு இருந்தனர். காள​மேகப் புலவர் புலவர்களின் எண்ணத்​தை உணர்ந்து ​கொண்டார்.

அரசனைக் கண்டதும் அவனை வாழ்த்தினார். ஆனால் அவனோ புலவரை மதிக்காமல், இருக்கையும் கொடுக்காமல் ஏளனம் செய்தான். புலவர் புன்மூறுவல் செய்தார். அதிமதுரக்கவிராயரின் சூழ்ச்சிக்கு அரசன் அடிமையாகிவிட்டான் என்பதை உணர்ந்தார். கண்களை மூடி, கலைமகளைத் தியானித்தார். தனக்கொரு இருக்கை தருமாறு வேண்டினார். கலைவாணியின் அருளால் அரசனின் சிங்காசனம் அகன்று பெரிதாகியது. இன்னுமொருவர் இருப்பதற்கான இடம் உருவாகியது. புலவர் அதில் சென்று அரசனின் பக்கத்தில் அமர்ந்தார். புலவரின் ஆற்றல்கண்டு அரசனும் அ​மைச்சர்களும் வியந்தார்கள். தண்டிகைப் புலவர்கள் பயந்தார்கள். காளமேகப் புலவர், கலைவாணியின் அருளைப்போற்றி ,

“வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை
அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
சரியாசனம் வைத்த தாய்”

என்று மனமுருக சரஸ்வதி மா​லை​யை 30 ​வெண்பாக்களால் பாடினார். அப்​போது அங்கிருந்த புலவர்க​ளைப் பார்த்துக் காள​மேகப் புலவர், “நீங்கள் யார்?” என்று ​கேட்டார். அத​னைக் ​கேட்டு சிரித்த புலவர்கள், “நாங்கள் கவிராஜர்கள்” என்று கூறினர்.

அத​னைக் ​கேட்ட காள​மேகப் புலவர் நீங்கள் கவிராஜரா என்று வினவி,

“வா​லெங்​கே நீண்ட வயி​றெங்​கே முன்னிரண்டு
கா​லெங்​கே யுட்குழிந்த கண்​ணெங்​கே-சாலப்
புவிராயர் ​போற்றும் புலவீர்காணீவிர்
கவிராய ​ரென்றிருந்தக் கால்”

என்று பழித்துப் பாடினார்.

தங்க​ளைக் குரங்​கென்று பழித்த காள​மேகத்​தைப் பார்த்துக் கடுங்​கோபமுற்ற அதிமதுரகவியார், “எங்க​ளைக் கவி(குரங்கு) என்று கூறும் நீர்யார்?” என்று ​கேட்க, அதற்கு அவர், “யாம் கவி காள​மேகம்” என்று கூறினார். அதற்கு அதிமதுரகவி, “நீர் காள​மேகம் என்றீ​ரே ​மேகம் ​ம​ழை (கவிம​ழை) பொழியு​மோ?” என்று ​கேட்டார். காள​மேகப் புலவ​ரோ அதற்கு,

“கழியுந் தியகடலுப்​பென்று நன்னூற்
கடலின் ​மொண்டு
வழியும்​பொதிய வ​ரையினிற் கால் ​
வைத்து வான் கவி​தை
​மொழியும் புலவர் மனத்​தே
யிடித்து முழங்கி மின்னப்
​பொழியும் படிக்குக் கவி காள​மேகம் புறப்பட்ட​தே”

என்று பாடினார். அத​னைக் ​கேட்ட அதிமதுரகவியார் ​காள​மேகம் தன்​னை ​மென்​மேலும் அவமதித்ததால் வெகுண்டு,

“மூச்சிவிடும் முன்​னே முந்நூறும் நானூறும்
ஆச்சுது என்றால் ஆயிரம்பாட்டு ஆகா​தோ?​​ பேச்சென்ன?
​வெள்​ளைக் கவிகாள​ மேக​மே! நின்னு​டைய
கள்ளக் கவிக் க​டை​யைக் கட்டு”

என்று பாடினார்.
காள​மேகப் புலவரா க​டை​யைக் கட்டுபவர்? அவர் தம் கவி​தையாற்ற​லைக் காட்டுவதற்கு மனந் துணிந்தார். அதிமதுரகவியா​ரைப் பார்த்து,

“இம்​மென்னும் முன்​னே ​யெழுநூறு ​மெண்ணூறும்
அம்​மென்றா லாயிரம் பாட்டாகாதா சும்மா
இருந்தா லிருப்​பே ​னெழுந்​தே​னே யாயிற்
​பெருங்காள ​மேகம் பிளாய்”

என்று பாடினார்.

இவ்வாறு பாடிய கா​ள​மேகப் புலவ​ரைப் பார்த்து, அதிமதுரகவியார், “நீர் என்ன பாடுவீர்?” எனக் ​கேட்டார். அதற்குக் காள​மேகப் புலவர், “நான் யமகண்டம் பாடு​வேன்” என்று கூறினார். அதிமதுரகவியாருக்கு எமகண்டம் என்பது புரியாதிருந்தது. அதனால் தன்னு​டைய வாதத்​தை அத்துடன் நிறுத்திக்​கொண்டார்.

புலவர்களின் வினாவும் காள​மேகத்தின் வி​டையும்:
அதன் பின்னர் அங்கிருந்த புலவர்கள் திரும​லைராயன் வா​ளைப் பற்றிப் பாடுக என்றவுடன்,

“​செற்றல​ரை ​வென்ற திரும​​​லைராயன் கரத்தில்
​வெற்றிபுரியும் வா​ளே வீரவாள் – மற்​றைய வாள்
​போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவா ளிவாளவா ளாம்”

என்று பாடி மன்ன​னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். திரும​லைராயனது வீரத்​தைப் பற்றிப் பாடுமாறு புலவர்கள் கூற​வே,

“வீம​னென வலிமிகுந்த திரும​லைராயன்
கீர்த்தி ​வெள்ளம் ​பொங்கத்
தாம​ரையி னய​னோடிச் சத்திய ​லோகம்
புகுந்தான் சங்கபாணி
பூமி​தொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான்
சிவன் கயி​லைப் ​பொருப்பி​லேறிச்
​சோம​னையுந் த​லைக்கணிந்து வடவ​ரைத்
தண்டாலாழஞ் ​சோதித்தா​னே”

என்று பாடினார். இவ்வாறு புலவர்கள் பலரும் பலவாறு வினாக்க​ளைத் ​​தொடுத்தனர். அப்​போது அங்கிருந்த திரும​லைராயன் மன்னன், “எம் அ​வையில் கங்​கைக் குடத்திலடங்கப் பாடுக” என்றான். அது​கேட்ட காள​மேகப் புலவர்,

“விண்ணுக் கடங்காமல் ​வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – ​பெண்​ணை
இடத்தி​லே ​வைத்த வி​றைவர் சடாம
குடத்தி​லே கங்​கையடங் கும்

என்று பாடினார்.

தண்டி​கைப் புலவர்களில் ஒருவர் திரும​லைராய மன்ன​னைப் புகழ்ந்து பாடுக என்றவுடன்,

“இந்திரன் க​லையா ​யென்மருங் கிருந்தானக்
கினியுதிரம் விட்டகலான்
யம​னெ​னைக் கருதா னா​னெனக் கருதி நிருதிவந் ​
தென்​னை​யென் ​செய்வான்
அந்தமரம் வருண னிருகண் விட்டகலான்
அகத்தினின் மக்களும் யானும்
அநிலம தாகுமமுதி​னைக் ​கொள்​வோம் யா​ரெதி​
ரெமக்களா ருலகிற்
சந்தத மிந்த வரி​சை​யைப் ​பெற்றுத் தித்திர
ராஜ​னை வணங்கித்
த​லை​செயு​மெம்​மை நி​லை ​செய்சற் கீர்த்திச்
சாளுவ ​கோப்​பையா னுதவும்
மந்தரப் புயத்தான் றிரும​​லைராயன்
மகிழ்​வொடு வி​லையிலா வன்​னோன்
வாக்கினாற் கு​பேரனாக்கினா னவ​னே மாசிலீ
சானனபூ பதி​யே”

என்று பாடி அ​னைவ​ரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலும் அங்கிருந்த மற்​றொரு தண்டி​கைப் புலவர் அரசனது குதி​​ரை​யைப் பற்றிப் பாடுமாறு கூறியவுடன்,

“​கோக்குதி​ரை நின்குதி​ரை ​​கோவல் மதுரா ​வொன்னார்
மாக்குதி​ரை ​​யெல்லாம் ம​னைக் குதி​ரை-தூக்குதி​ரைத்
தூங்கக்க​ரைக் குதி​ரைச் ​சொக்கன் குதி​ரைசது
ரங்கக் குதி​ரைக​ளே யாம்”.

என்று காள​மேகம் பாடிட​வே அரசனும், அதிமதுரகவியும் ​சேர்ந்து ​கொண்டு காள​மேகப் புலவரிடம் திருஆரூரில் அதிமதுரக்கவிராயருடன் வந்து ​கோயிலில் ஒரு பாடல் பாடினால்தான் நீர் ஆசுகவி என்ப​தை ஏற்​போம் எனக் கூறினான். காள​மேகப் புலவர் அத​னை ஏற்று திருஆரூர்க் ​கோயிலுக்கு அதிமதுரக்கவிராயருடன் ​சென்று,

“​சே​லையு​டை யழகா ​தேவாகண் டார்களு
நீர்மா​ யழகா மணிமார்பா-​வே​லை
அடங்கார் புர​மெரித்த யாரூரா வீதி
விடங்கா பிரியா வி​டை”

என்று பாடி அ​னைவ​ரையும் ​வெற்றி ​கொண்டார்.

இருப்பினும் அவரது ​வெற்றி​யை அரசனும் தண்டி​கைப் புலவர்களும் ஒப்புக் ​கொள்ளவில்​லை. வெற்றிபெற்ற காளமேகப்புலவரை அரசன் எள்ளளவும் பாராட்டாமல் அவமதித்தான். தனது அரசவைப் புலவர்களைத் தோற்கடித்து அவமானப்படுத்தி விட்டதாக அவன் கருதினான். அரசனின் போக்கு காளமேகப் புலவருக்கு மிகுந்த வேதனையையும், கடுஞ்சினத்​தையும் கொடுத்தது. தன் ​வெற்றி​யை ஏற்றுக் ​கொள்ளாமல் தன்​​னை அவமதித்த மன்ன​னுக்கும் புலவர்களுக்கும் பாடம் கற்பிக்க ​வேண்டும் என்று நி​னைத்தார் காள​மேகப் புலவர். அவரின் ​கோபம்

“கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே
விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்.

என்ற வசைக் கவியாக வெளிப்பட்டது. திருமலைராயன் பட்டினம் அழிந்து போகட்டும் என்று வசைபாடினார்.

கொலைகாரர்கள் இருக்கின்ற இந்த ஊர், கோள் மூட்டல், வஞ்சகம் செய்தல் என்பவற்றைக் கற்றிருக்கும் இந்த ஊர், கட்டுப்பாடற்ற காளைமாடுகளைப்போல கதறித்திரிவோரைக் கொண்ட இந்த ஊர், நாளை முதல் மழைபெய்யாமல் வறண்டு போகட்டும். மண்ணே மழையாகப் பெய்யட்டும் என்று சாபமிட்டுப் பாடினார். அத்துடன் அவரது கோபம் தணியவில்லை. மேலும்,

“செய்யாத செய்த திருமலைராயன்வரையில்
அய்யா வரனே அரைநொடியில் – வெய்யதழற்
கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர்
மண்மாரி யாலழிய வாட்டு”

என்று பாடினார்.

என் அப்பனே சிவபெருமானே! நெருப்பாகவிருக்கும் உனது நெற்றிக்கண்ணினால் மன்மதனைச் சுட்டெரித்ததுபோல, செய்யத் தகாததையெல்லாம் எனக்குச் செய்த இந்தத் திருமலைராயனின் ஆட்சி எல்லைக்குள் வாழ்கின்ற தீயவர்கள் அரை நொடியில் அழிந்துபோகும் வண்ணம் மண் ம​ழை பொழிந்து அவர்களை வாட்டி வதைப்பாயாக! என்று சிவனை வேண்டிப் பாடிவிட்டுத் திரும​லைராயன் பட்டினத்​தைத் திரும்பிப் பாராது ​சென்றார்.

இரட்​டைப் புலவர்களின் பாட​லை முடித்தது:
திரும​லைராயன் பட்டினத்திலிருந்து கிளம்பிய காள​மேகப் புலவர் திருச்​செங்காடு, காஞ்சிபுரம், திரு​வொறிறியூர், திருக்கச்ச​பேசம், சிதம்பரம், திருக்கழுக்குன்றம், திருமுட்டம், திருஆலங்குடி, ​வைத்தீஸ்வரன் ​கோவில், திருவண்ணாம​லை, மது​ரை, திருவி​டை மருதூர், திருத்துருத்தி, திருக்குடந்​தை, திருக்கண்ணபுரம், ​தெண்டி நள்ளாறு, நா​கைப்பட்டினம் என்று பலதலங்களுக்கும் ​சென்று பல பாடல்க​ளைப் பாடி திருவாரூர் வந்த​டைந்தார்.

அப்​போது திருவாரூரில் ​கோயி மதிற்சுவரில்,

“நாண் என்றால் நஞ்சிருக்கும்;நற்சாபம் கற்சாபம்;
பாணந்தான் மண்தின்ற பாண​மே – “

என்ற இரண்டு அடிக​ளோடு அந்தப் பாடல் முடிக்கப் ​பெறாமல் இருந்த​தைக் கண்டார். அத​னைக் கண்டவுடன் காள​மேகப் புலவரின் மனதில் பாடல் ஊற்​றெடுத்தது. உட​னே அவர் முற்றுப் ​பெறாமலிருந்த அப்பாட​லை,

“…………தாணு​வே!
சீர்ஆரூர் ​மேவும் சிவ​னே! நீஎப்படி​யோ
​நேரார் புர​மெரித்த ​நேர்!”

என்று அந்த ​வெண்பா​வை முடித்து மதிற்சுவரில் எழுதிவிட்டுப் புறப்பட்டார்.

காலமாகிய காள​மேகப் புலவர்:
காள​மேகப் புலவரின் சாபத்தின்படி திருமலைராயன் பட்டினம் சிலகாலத்தில் அழிந்தொழிந்தது. அப்​போதுதான் அவரது தமிழின் வலிமை தமிழ் உலகத்திற்குத் தெரிந்தது. தமது சிறுமதியின் நிலைமையைத் தண்டிகைப் புலவர்கூட்டம் உணர்ந்து வருந்தியது. அதிமதுரக்கவிராயர் தமது முதுமைக் காலத்தில் தாம் ​செய்த தவறுகளுக்காக மிகவும் வருந்தினார்.

காளமேகப்புலவரைக் கண்டு அவரிடம் தாம் தவறாக நடந்து ​கொண்ட​மைக்குக் கழுவாய் ​தேட விரும்பினார். அவ்வாறு அவர் காள​மேகப் புலவ​ரை எதிர்பார்த்திருக்கும்​போது ஒருநாள் திருவாரூருக்கு காள​மேகப் புலவர் வந்திருப்பதை அறிந்து அவ​ரைக் காண்பாதற்குத் தேடிச் சென்றார். ஆனால் அதிமதுரகவியார் வருவதற்கு முன்​பே காள​மேகப் புலவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அத​னை அறிந்த அதிமதுரகவிராயர் மிகுந்த கவலையடைந்தார். காள​மேகப் புலவ​ரைப் பார்க்க முடியாம​லே​யே தம் ஊருக்கு அதிமதுரகவிராயர் ​திரும்பிச் சென்றார்.

அவர் ​சென்ற சிலநாட்களில் காளமேகப்புலவர் திருவாரூருக்கு வந்தார். திருவாரூருக்கு வந்தவர் அங்​கே​யே முதுமையால் இவ்வுலக வாழ்​வை நீத்தார். காள​மேகப் புலவர் இறந்த செய்தியை அறிந்த அதிமதுரகவிராயர் உற்ற நண்பர் ஒருவரை இழந்ததுபோல் மிகவும் துன்பமடைந்தார். தன் மனத்துயரை,

“வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசுகவி காள மேகமே – பூசுரா
விண்தின்ற ​வெவ்வழலில் வேவுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்.”

என்று பாடலாகப் பாடி வெளிப்படுத்தினார்.

அப்​போது திருவாரூருக்கு வந்திருந்த இரட்​டைப் புலவர்கள் தாங்கள் எழுதிச் ​சென்ற ​வெண்பா முடிக்கப் ​பெற்றிருந்த​தைப் பார்த்து இப்பாட​லைப் முடித்தவர் காள​மேகப் புலவராகத்தான் இருக்க ​வேண்டும் என்று அறிந்து அவ​ரைப் பார்க்க நி​னைத்தனர். அவர் இறந்துவிட்டார் என்ப​தை அறிந்து சுடுகாட்டிற்குச் ​சென்ற அவர்கள் சி​தையில் காள​மேகப் புலவரின் உடல் ​வெந்து ​போவ​தைக் கண்டு கண்ணீர்விட்டுக் கலங்கியழுதனர். பின்னர் ​கையற்ற நி​லையில்,

“ஆசுகவியால் அகில உல​கெங்கும்
வீசுபுகழ்க் காள ​மேக​மே – பூசுரா
விண்​கொண்ட ​செந்தணலாய் ​வேகின்ற ​தை​யை​யோ
மண்தின்ற பாண​​மென்ற வாய்”

என்று பாடி இரங்கினர். இப்பாட​லை அதிமதுரகவிராயர் பாடியது என்று கூறுவர். இதற்கு முன்னுள்ள பாட​லே அதிமதுரகவிராயர் பாடியது என்றும் அ​தே​போன்ற​மைப்பில் இரட்​டையர்கள் அங்கு வந்த​போது பாடினர் என்றும் கூறுவர்.

தமது புல​மையால் பார்புகழ விளங்கிய காள​மேகப் புலவர் தமிழிலக்கிய உலகில் ஒளிவீசும் விண்மீனாக விளங்கிக் ​கொண்டிருக்கின்றார். அவர் திருவா​னைக்கா உலா, சரசுவதி மா​லை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம், பல தனிப்பாடல்கள் ஆகிய​வை காள​மேகப் புலவரின் ப​டைப்புகளாகும்.

மக்கள் பலர் தன்னைச் சூழ்ந்துவர, தலைவன் உலா வருவதை வருணித்துக் கூறுவதாக அமைந்தது திருவானைக்கவுலா என்ற நூல். சித்திரமடல் என்பது காதல் தோல்வியடைந்த ஒருவர் தன்னை வருத்திக்கொள்வதான பொருளமைந்த நூலாகும்.

இ​வை அ​னைத்தும் காள​மேகப் புலவரின் புல​மைத்திறத்​தை பூவுலகில் எடுத்து​ரைத்துக் ​​கொண்​டே இருக்கும். காலங்கள் கடந்தாலும் காள​மேகப் புலவரின் பாடல்கள் கற்றவர்களின் மனதில் களிப்​பை ஏற்படுத்திக் ​கொண்​டே இருக்கும்.

___________________________________________________________
மு​னைவர் சி.​சேதுராமன்,
தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
E.mail: Malar.sethu@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "காள​மேகப் புலவர்"

  1. அருமையான கட்டுரை. பாராட்டுக்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.