Month: January 2016

  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: பெரிது அகழின் பாம்பு காண்பாரும் உடைத்து

     

    உரிமைதனிற் றம்மோ டுழந்தமை கண்டு
    பிரிவின்றிப் போற்றப் படுவார் – திரிவின்றித்
    தாம்பெற் றதனா லுவவார் பெரிதகழிற்
    பாம்புகாண் பாரு முடைத்து.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு
    பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித்
    தாம் பெற்றதனால் உவவார்; பெரிது அகழின்,
    பாம்பு காண்பாரும் உடைத்து.

    பொருள் விளக்கம்:
    உரிமையோடு (நண்பர் ஒருவர் தனது துன்பத்திலும்) தன்னோடு வருந்தியதைப் பார்த்து, வேறுபாடு காட்டாது அவரால் பாதுகாக்கப்பட்டவர், நண்பரால் கிடைத்த உதவியை ஏற்று மனவருத்தமின்றி அதனால் நிறைவடைவார். (அவ்வாறு செய்யாமல், அதிக உதவி எதிர்பார்த்தால்) பெரிதும் ஆழமாகத் தோண்டும் பொழுது பாம்பையும் காண நேரலாம் (பேராசையால் பெரும் இழப்பை அடைவது போல, தொல்லை தருவதைத் தாளாது நண்பரும் சீற்றம் அடையக்கூடும்)

    பழமொழி சொல்லும் பாடம்: கிடைத்த உதவியில் மனநிறைவு கொள்வது சிறந்த நட்பின் பண்பாகும். பேராசை கொண்டு அதிக உதவி எதிர்பார்த்தால் பெரும் இழப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனையொத்த வழக்குகளாக, ‘புதையல் விரும்பித் தோண்டும் பொழுது பூதம் புறப்பட்டது’ என்றும், ‘எலி பிடிக்கும் எண்ணத்தில் புற்றினைத் தோண்ட பாம்பு கிளம்பியது’ என்றும் கூறும் வழக்கங்களும் உள்ளன. இக்கருத்தை விளக்கும் குறள்,

    பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
    கெழுதகைமை கேடு தரும். (குறள்: 700)

    பலநாள் பழகிய நட்பு என்று உரிமை எடுத்துக் கொண்டு, முறையற்ற செயலைச் செய்தால், அது அந்த நட்பிற்கு கேடு விளைவிக்கும் என்று கூறுகிறது.

    Share
  • சிங்களவரின் பிரித்தாளும் முயற்சிக்குக் கைகொடுக்காதீர்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    (இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடுக்குழு உறுப்பினர்)

    2016க்குள் ஈழத் தமிழரின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய அரசியல் தீர்வு பெற்றுத் தருவோம் எனத் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியளித்துள்ளனர். தலைவர் இரா. சம்பந்தன் மீட்டும் மீட்டும் இந்த உறுதிமொழியைக் கூறிவருகிறார். தீர்வை நோக்கிய காய்களை நகர்த்துவதாகவும் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசமுடிந்தால் தீர்வு எட்டமுடியாதென்பதையும் கூறி வருகிறார். அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வழமையே. உயிர் வாழ்வே தமிழருக்கு வினாக்குறியான இக்காலத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான, மனத் தடையற்ற ஆதரவைக் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

    2016 மார்கழி வரை காலக் கெடுவை நோக்கி, கட்டிறுக்கமான செயற் திட்டத்துடனும், சிங்கள அரசியல் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணியும், முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றும், மலையகத் தமிழர்களுடன் உறவை வளர்த்தும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் நீதிக்கான அழுத்தப் பின்னணியில் தீர்வை நோக்கித் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் முன்னேறுகின்றனர்.

    தீர்வு எட்டப்படக்கூடாதென்பதிலும் தமிழரைத் தொடர்ந்து அடிமைகொள்ள வேண்டும் என்பதிலும் சிங்களத் தலைமை உறுதியாக உள்ளது. இதற்காகத் தமிழரிடையே கலகத்தைத் தூண்டிவிடுகின்றனர். சிங்களத் தலைமையின் இந்த முயற்சிக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஈழத் தமிழ் மக்கள் வாக்களித்து மக்களுக்காகப் பணிபுரிய வந்தவர்கள் கடந்த சில மாதங்களாக தனிப்பட்ட தாக்குதல்களும் அழாப்பி நியாயங்களும், கட்சி பிரித்தலும், நகை முரண்களும் நிறைந்த அறிக்கைப் போரில் ஈடுபட்டுப் பகைமை வளர்ப்பது போற்ற புறத்தோற்றம் இருப்பதால் சிங்களத் தலைமை தங்கள் திட்டம் வெற்றியடைவதாக எண்ணிப் புளங்காகிதம் அடைந்து வருகின்றனர்.

    1965-1968 காலப்பகுதியில் தமிழரைப் பிரித்தாளும் சிங்களத் தலைமையின் சாணக்கியத்தை நேரில் கண்டிருக்கிறேன். அக்காலத்தில் அமைச்சராக இருந்த மு. திருச்செல்வம் அவர்களின் உதவியாளராக இருந்தேன். பெரியவர் செல்வநாயகம், தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம், மு. திருச்செல்வம் மூவரும் பிரதமர் டட்லி சேனாநாயக்காவையும் மூத்த அமைச்சர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவையும் சந்தித்த காலங்களில் அமைச்சர் திருச்செல்வத்தின் உதவியாளராக நானும் அங்கிருந்திருக்கிறேன். தமிழ்த் தலைவர்களை ஒருவருக்கு எதிராக மற்றவரைத் தூண்டும் அல்லது பயன்படுத்தும் வித்தையைச் சிங்களவர் நன்கறிந்திருந்தார்கள்.

    1619இல் ஆட்சியை இழந்து 400 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மரபையும் வழக்காறுகளையும் ஈழத் தமிழர் பெருமளவு மறந்து போயினர். 1815இல் ஆட்சியை இழந்த சிங்களவர் 100 ஆண்டு கால இடைவெளியில் ஆட்சி மரபை இழக்காமல் சாணக்கியங்களை மறக்காமல், வித்தைகளைக் கைவிடாமல் இருப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

    மக்களாட்சி மரபில் கொள்கைக் கருத்துக் குரல்களைக் கேட்போம், அவை மாற்றுக் கருத்தாயிலென் எனக் கூறியிருப்பதே தமிழர் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முதிர்ச்சியையும் சாணக்கியத்தையும் காட்டுகிறது. கொள்கை மாறுபாடுகளை வெளிப்படையாகக் கூறலாம், தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் அதை வரவேற்பர். தனிப்பட்ட தாக்குதல்களும் அழாப்பி நியாயங்களும், கட்சி பிரித்தலும், நகை முரண்களும் சிங்களவரின் பிரித்தாளும் முயற்சிக்குக் கைகொடுக்கும்.

    2016 மார்கழி வரை காலக்கெடு விதித்து, ஒளிமயமான எதிர்காலத்துக்கான அரசியல் தீர்வை நோக்கித் தமிழர் தேசியக் கூட்டமைப்பு நகர்த்தும் முயற்சிகளுக்கு அப்பழுக்கற்ற, நெஞ்சார்ந்த, தங்குதடையற்ற ஆதரவைக் காலக்கெடு முடியும்வரை வழங்குவதே ஈழத் தமிழரின் திறமையான ஆட்சி மரபுக்கும் சாணக்கியத்துக்கும் சான்று. அவ்வாறாற்றுவதே நம் அனைவரின் கடன். நமக்காக நாமானால் நாளை நமதாகும்.

    Share
  • சிறப்புடனே வந்திடுவாய்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    புத்தாண்டே  நீவருக
    புதுச்சேதியுடன் வருக
    சொத்தாக நினைக்கின்றோம்
    சுமையகற்ற நீவருக
    மொத்தமுள்ள முடைநாற்றம்
    அத்தனையும் களைந்துவிட்டுச்   newyear
    சுத்தநிறை சுகமனைத்தும்
    சுமந்துவர வேண்டுகின்றோம்!

    எங்களது வாழ்வினிலே
    இடர்கள்வந்து மோதாமல்
    சங்கடங்கள் தீர்த்துவிடச்
    சந்தோஷத்துடன் வருக
    மங்களங்கள் கொண்டுவந்து
    மனமகிழச் செய்துவிடச்
    செங்கதிரேன் போலநீயும்
    சிறப்புடனே வந்திடுவாய்!

    ஏழையொடு பணக்காரர்
    இயைந்துமே இருப்பதற்கு
    வேளைவரும் எனவெண்ணி
    விடியலையே வேண்டுகிறோம்
    நாளைவரும் புத்தாண்டே
    நற்சேதியுடன் வந்து
    நல்லவொரு ஆண்டாக
    யாவர்க்கும்  அமைந்துவிடு!

    உலகமெல்லாம் நல்லாட்சி
    ஓங்கிவர வேண்டுகின்றோம்
    நிலவுலகில் சமதர்மம்
    நிலைத்துவிட நினைக்கின்றோம்
    விளைநிலங்கள் வீணாகப்
    போவதையும் வெறுக்கின்றோம்
    நலமுடனே வளம்பெருக
    நல்லாண்டே வந்திடுவாய்!

    அரசியலார் மனசாட்சி
    அறிந்துணர வேண்டுகின்றோம்
    ஆதீனம் அத்தனையும்
    ஆண்டவனை நினைந்திடட்டும்
    நீதித்துறை அத்தனையும்
    நிமிர்ந்துநிற்க வேண்டிடுவோம்
    நிம்மதியைத் தருவதற்கு
    நீவருவாய் புத்தாண்டே!

    உளம்மகிழ வந்திடுவாய்
    உன்வரவு சிறந்திடட்டும்
    மனதிலுறை அத்தனையும்
    வண்ணமுறத் தந்துவிடு
    எண்ணமெலாம் இனித்துவிட
    இனியமுகம் கொண்டுநீயும்
    எழிலுடனே வந்திடுவாய்
    எங்களுக்குப் புத்தாண்டாய்!

     

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 44

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “சமூகச் சொத்தைப் பற்களுக்குப் பொன் கவசமிடும் பல்மருத்துவர் பலர் இருக்கிறார். சிரியன் நாட்டு வாசலில் ஊசிப் போய் நாற்ற மடித்துச் சீழ் வடியும் ஊத்தைப் பற்கள் பல நடமாடுகின்றன ! மருத்துவர் அவற்றை அகற்றாது பொன்னிட்டு நிரப்புவார். நோய் இன்னும் அங்கே நிலைத்துள்ளது.”
    – கலில் கிப்ரான் (Decayed Teeth)
    ___________________

    திருமணம்
    ___________________

    திருமணம் என்பது
    தங்கத்தில் வடித்த சங்கிலித்
    தோரணம் !
    ஆரம்பம் அதற்குக்
    காதலர் கண்ணோக்கு !
    நேரும் விளைவு
    நித்தியப் பிணைப்பு !
    மாசற்ற வானி லிருந்து
    காய்கள் பழுத்திடப் பெய்திடும்
    தூய மழைப் பொழிவு !
    தெய்வீக இயற்கை நிலங்கள்
    ஆசிகள் பெறும் !
    ___________________

    ஏனெனில் கண்மணியின்
    மான் விழிகள்
    ஏவிடும்
    கடைக்கண் பாய்ச்சல்
    வாலிபன்
    இதயத்தில் இடப்படும் விதை !
    இள நங்கையர் இடும்
    உதடுகளின்
    முதல் முத்தங்கள்
    வாழ்க்கை மரக் கிளையில்
    பூக்கும் மலர்கள் !
    திருமணத்தில்
    இரு மனங்கள் கூடி
    உடன்படும் ஐக்கிய ஒப்பந்தம்
    முதல் விதையில் விளைந்த
    முதற்கனி !
    ___________________

    Share
  • கோட்பாட்டியல் நோக்கில் புறநானூறு

    — முனைவர் துரை. குணசேகரன்.

    புறநானூறு

    1.0 அறிமுகம்:-
    குறிக்கோள்கள் கொண்டது இலக்கியம். குறிக்கோளில்லா வாழ்வு சிறக்காது, சமயவாழ்வில் சாதனை படைத்த நாயன்மார் ஒருவர் ‘குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்பதிலிருந்து இதன் இன்றியமையாமை புலனாகும். சங்கத்தமிழர் வாழ்வியல் பெட்டகமாக விளங்கும் படைப்புகளுள் புறநானூறு குறிப்பிடத்தக்கது. இதனை ஆய்வதன் வழி அக்காலமக்களின் கொள்கைகள் விளங்கும். ஒருமித்த கொள்கைகளின் வழி புறநானூறு புலப்படுத்தும் கோட்பாடுகளை ஆய்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

    1.1 புறநானூற்றுப் பொருண்மை:-
    சங்ககால எட்டுத்தொகை நூல்களில் புறநூல்கள் இரண்டில் ஒன்று புறநானூறு. இந்நூலை ஆய்வதன் வழி மன்னர்கள், புலவர்கள், பொதுமக்கள் என்னும் முத்திறத்தார் வாழ்வியலை நன்குணரலாம். நாணயத்தின் இருபக்கங்கள் போன்று சங்க இலக்கியங்கள் அகம், புறம் என்னும் இரு கூறுகளைக்கொண்டவை. இவற்றுள் புறநானூறு சங்ககாலமக்களின் புறவாழ்வு குறித்தது. அகமல்லாத அனைத்தும் புறம் என்று பொதுவாகக்குறிப்பிட்டாலும் அக்காலமக்களின் வீரம், கொடை, விருந்தோம்பல், உயிரிறக்கம், உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியது இத்துறை.

    1.2 அரசியலின் மேன்மை:-
    மன்னராட்சிக்காலமாயினும் மக்களாட்சிக்காலமாயினும் அதிகாரம் படைத்ததாக விளங்குவது அரசியலாகும். அன்று மன்னர்கள் சார்ந்ததாக விளங்கியது; இன்று அமைச்சர்கள் சார்ந்ததாக விளங்குகிறது. புறநானூறு காலத்து அரசியலில் பெருவேந்தர்கள் தொடங்கி, குறுநிலமன்னர்கள்வரை ஆட்சி செய்துள்ளமை புலனாகும்.

    2.1 மன்னரியல்:-
    முடியாட்சி மன்னர்களேயாயினும் குடிமக்களை உடலாகக்கொண்டவர்களாகத் தான் பெரும்பாலான மன்னர்கள் விளங்கியுள்ளனர். ‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே’ என்று அவர்களை உயிராகக்கருதிய மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் உயர்வையே தம்முடைய உயர்வாகக்கருதி ஆட்சிபுரிந்தனர் அக்கால மன்னர்கள்.

    2.1.1 வாரிவழங்கிய வள்ளல்கள்:-
    தொழிற்கூடங்கள் இல்லாத காலம். வறுமையுற்ற மக்களின் வாழ்வில் ஒளியூட்ட மன்னர்கள் வள்ளல்களாக விளங்கியிருக்கின்றனர். மூவேழு வள்ளல்களில் கடையேழு வள்ளல்களின் பட்டியலை, புறம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

    பரம்பின் கோமான் பாரியும்
    கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்
    காரிவளர்ந்து பேரமர்க் கடந்த
    மாரிஈகை மறப்போர் மலையனும்
    கூவிளங் கண்ணி கொடும்பூண் எழினியும்
    பெருங்கடல் நாடன் பேகனும்
    மோசி பாடிய ஆயும்
    தள்ளாது ஈயும் தகைசால் வன்மை
    கொள்ளாத ஓட்டிய நள்ளியும்(புறம்.158)

    2.1.2 ஆன்மநேயம்:-
    கடையேழு வள்ளல்களில் பாரி, பேகன் இவர்களின் கொடைத்திறம் குறித்து ஐயுறுவோரும் உண்டு. முல்லைக்கொடிக்கு தேரைஈந்தது, மகிழ்வில்ஆடிய மயில் வருந்துவதாக எண்ணிப்போர்வை ஈந்தது அறிவின்பாற்பட்டவை அல்ல என்பது அவர்களின் வாதம்.

    உடுக்கை இழந்தவரின் கைபோல உறுதுயருற்றது என்று கருதியவுடனே அத்துன்பத்தில் பங்குகொண்டு செயல்படுவது: அத்துன்பத்தைத் தாம் ஏற்றுக் கொண்டு அதனை அதனின்று விடுவிப்பது கொடை மடத்தின்பாற்படும். அவ்வகையில் தாம் ஊர்ந்துவந்த மாணிக்கத்தேரினை முல்லைக்கொடி படர ஈந்துவிட்டு வந்த பாரியும், தாம் போர்த்தியிருந்த போர்வையை மயிலுக்கு ஈந்த பேகனும் இன்றுவரை பேசப்படுகின்றனர். இவற்றில் அவர்களின் ஈரப்பண்பு புலனாகும். இவை மனிதநேயம் தாண்டி ஆன்மநேயத்தின் பாற்பட்டவை.

    2.1.3 அதியனும் குமணனும்:-
    நெடுநாள் வாழ்வைத்தரவல்ல, அரிதின் முயன்று பெற்ற நெல்லிக்கணிணியைத் தாம் உண்ணாமலும் அதன் தன்மையை வெளிப்படுத்தாமலும் ஔவைக்கு,

    ஆதல் நின்னகத்து அடக்கிச்சாதல்
    நீங்க எமக்கு ஈத்தனையே(புறம்.19)

    என்று அதியன் அளித்த நிலையின்வழி தம்மைக்காட்டிலும் தமக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் புலவர்கள் நீண்டநாள் வாழவேண்டும் என்னும் உயரிய தன்மை புலனாகும். அவனை அவர்பாடியது என்று புறத்தால் பெருமைப்பட்டவர்கள் புலவர்கள் அன்றோ.

    உயிரைக்கொடுத்தேனும் கொடைத்தன்மையைக் காத்தவன் கண்ணன் என்று பாரதம் பெருமிதப்படுத்தும். அவ்வகையில் கொடைக்காகத் தம்முயிரைத்துச்சமெனக் கருதிய குமணவள்ளலைப்புறம் காட்டும் (165). தம்பிக்கு அஞ்சி, காட்டில்வாழும் குமணவள்ளலை நாடிச்சென்று பாடிய பெருஞ்சித்தினாருக்குத் தன் தலையைக் கொண்டு போய்க்கொடுத்து, பரிசில்பெற்றுச்செல்க என்று உரைத்தான் என்பதை அறிகின்றபொழுது, அக்காலத்து மன்னர்களின் கொடைக்குணம் புலனாகும்.

    2.1.4 பயன்கருதாக்கொடை:-
    எதையும் பயன்கருதிச்செய்தல் என்பது இன்று சராசரி மனிதர்களின் பண்பு. ஆனால் சங்கத்தமிழ் மன்னர்கள் கொடுத்த கொடை அவ்வாறு பயன்கருதியதன்று. இம்மை, மறுமை குறித்த நம்பிக்கையுள்ள காலத்தில் வாழும் கடையேழு வள்ளல்களில் ஒருவனான ‘ஆய்’ எப்படிப்பட்டவன் என்பதை,

    இம்மைச் செய்ததை மறுமைக்கு ஆம்எனும்
    அறவிலை வணிகன் ஆயலன்.(புறம்.134)

    என்று உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுவது இவண் கருதத்தக்கது.

    காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனான பிட்டங்கொற்றனின் கொடை குறித்து,

    “இன்று செலவினுந் தருமே; சிறுவரை
    நின்று செலினுந் தருமே; பின்னும்
    முன்னே தந்தனன் என்னாது துன்னி
    வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
    யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்
    தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப”(புறம்.171)

    என்று குறிப்பதன் வழி ஒளவையார் சொன்ன “கொடையும் தயையும் பிறவிக்குணம்” என்பது உறுதியாகின்றது.

    2.1.5 வீரத்தின் விளைநிலம்:-
    ஆடவர்களை வீரத்தின் அடிப்படையில் ‘மைந்தர்கள்’ என்று அழைப்பது வழக்கம். ஆடவர்கள் மட்டுமன்றிப் பெண்டிரும் செம்மாந்த வீரப்பண்பு மிக்கவர்களாக விளங்கியிருக்கின்றனர். வீரத்தின் மேம்பட்ட நிலையில் மன்னர்கள் வஞ்சினம் கூறி அதன்படி பகைமுடிக்காவிடில் ‘என் மார்பை பொருட்பெண்டிர் தழுவுவதாக’ என்று குறிப்பதன் வழி நாடாளும் மன்னனாயினும் பொருட்பெண்டிர் தழுவலை, பழியாகக் கொள்ளும் ஒழுக்கமேன்மை புலனாகும்.

    2.1.6 உயிரா? மானமா?
    புறப்பாடல் காலத்து மன்னர்களின் வாழ்வியல் குறித்து ஆராய்கையில், அவர்கள் வீரம் செறிந்தவர்களாக வாழ்ந்தது மட்டுமன்றி, தோல்வி ஏற்படும் பொழுதோ மானத்திற்கு இழுக்கு நேரும்பொழுதோ ‘மயிர் நீப்பின் வாழாக்கவரி மாவாக’ உயிரைப்பரிசாக அளித்து மானம் காத்தனர் என்பது கண்கூடு. சோழன் செங்கணானுக்கும் சேரன் கணைக்காலிரும் பொறைக்கும் கழுமலம் எனுமிடத்தில் நடந்த போரில் சேரன் தோல்வியுற்றான். சோழனால் சிறைபிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான். சிறைப்பட்ட சேரன் தாகம் தணிக்கத்தண்ணீர் காலத்தில் கிடைக்காமையால்,

    மதுகையின்றி வயிற்றுத்தீத் தணியத்
    தாமிரந் துண்ணும் மளவை
    ஈன்மரோ இவ்வுலகத் தானே.(புறம்.74)

    என்று கூறி உயிர் துறந்தான். குடிபழிதூற்ற ஆட்சிசெய்தல், புலவர் பாடாமை, இரவலர்க்கு ஈயாமை போன்றவை வேந்தனைக் கீழ்மைப்படுத்தும் செயல் என்று புலவனாகவும் விளங்கிய தலையாலங்கானத்து செருவென்றை பாண்டிய நெடுஞ்செழியன் எண்ணியவை (புறம்.72) இவண் எண்ணத்தக்கது.

    2.1.7 போர்நெறி:-
    போர் செய்தலைக்கடமையாகக் கொண்ட புறநானூற்று மன்னர்கள் அதனைப் பெரிதும் அறநெறியின்பாற்பட்டே நிகழ்த்தியுள்ளனர். போரினின்றும்

    ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புலம் வாழ்நர்க் கருங்கட னிருக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
    அறத்தாறு நுவலும் பூட்கை (புறம் 9:1-6)

    என்று பாதுகாக்கப்பட வேண்டியவர் குறித்த பட்டியல் இடம் பெறுகிறது. இது குறித்து ஆய்வுரை நல்கும் கு.வெ.பாலசுப்பிரமணியன், “வீரநிலைக்காலப்போர்கள் ஆனிரை, பார்ப்பனர், பெண்டிர், பிணியாளர், மகப்பெறாதவர் என விலக்கி, போர்மறவரோடு மட்டும் போரிடும் நிலை இல்லை. சங்ககாலத் தமிழ்ச்சமூகத்தில் வைதிகசமயம் தம் கோட்பாடுகளைப் படரவிட்டதன் விளைவே ஆனிரை, பார்ப்பனர், உயிர்கட்குத்தீங்கு விளைக்கக்கூடாது என்ற எண்ணமாகும். சமண, பௌத்த நெறிகள் உயிர்க்கொலையை, கடுமையாகக்கண்டித்த சமயங்கள் ஆகும். இவற்றிடமிருந்து இவ்வருளற நெறியைப்பின்பற்றிய வைதிகசமயம் பசுவைத்தெய்வமாகக் கொல்லுதல் கொடிய, தீயவினையாகக் கருதப்பட்டது” என்று குறிப்பிடுகின்றார். மேலும், ஆகோன் மறவர் பசுவை வெட்டி உண்ணும் வழக்க முடையவர்கள் என்பதற்கு அக நானூற்றிலிருந்தும் (309:1-6) சான்று காட்டி நிறுவுகின்றார். (சங்க இலக்கியத்தில் புறப்பொருள், ப.91) இவ்வகையில் சமண சமயத்தின் அறக்கோட்பாடு தமிழர்களின் போர்த்துறையில் ஓர் கோட்பாடாக இடம் பிடித்ததை எடுத்துக்காட்டுகின்றார்.

    புறமுதுகிட்டு ஓடுதல் நாணமிருந்த செயல்களில் ஒன்றாகவும் அவ்வாறு ஓடுவோரைத்துரத்திச் சென்று போரிடுதலும் விரும்பத்தகாத தொன்றாகக் கருதப்பட்டது. ஒரு மன்னன் தொண்ணூற்றாறு விழுப்புண்கள் பெற்றதைப் பெருமையாகக் கருதும் நிலையை, புறம் எடுத்துக்காட்டும். கரிகாலனின்வேல் தன்மார்பைப்பதம் பார்த்துவிட்டுப்புறம் போனதற்கு வருந்தி பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததாகப்புறம் குறிப்பிடுவது (65,66) இவண் கருதத்தக்கது.

    2.1.8 விருந்தோம்பல்:-
    அல்லிலாயினும் விருந்துவரின் உவந்தவர்கள் தமிழர்கள். விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்னும் மொழியைப்பொய்யாக்கும் வகையில் மன்னர்கள் விருந்து போற்றிய தன்மையைப்புறம் எடுத்துரைக்கும்.

    ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
    பலநாள் பயின்று பலரோடு செல்லினும்
    தலைநாள் போன்ற விருப்பினன் (புறம் 101)

    என்று விருந்தளித்த தன்மை போற்றப்படுகிறது.

    3.1 புலவரியல்:-
    மக்களுக்கும் மன்னர்களுக்கும் பாலமாக விளங்கியவர்கள் புறநானூற்றுக்காலத்து வாழ்ந்த புலவர்கள் என்றால் மிகையன்று. செம்மாந்த வாழ்வு வாழ்ந்த மன்னர்களால் புரக்கப்பெற்ற புலவர்களும் சீரும் சிறப்புமாக வாழ்ந்தனர் என்பதைப் புறப்பாடல்கள் வழி அறிந்துகொள்ளலாம். வறுமையுற்ற காலத்தும் வளமைபெற்ற காலத்தும் செம்மை மாறாத் தன்மையுடன் வாழ்ந்தனர்.

    3.2 எல்லாருக்கும் எல்லாம்:-
    நீண்டநாள் வறுமையுற்ற நிலையில் குமணனைப் பாடிப்பெற்ற பரிசிலைக் கொண்டுவந்த பெருஞ்சித்திரனார் தம் மனைவியிடம் கொடுத்து,

    “நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
    இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது
    வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
    எல்லோர்க்கும் கொடுமதி”(புறம் 163)

    என்று எந்தக்கட்டுப்பாடுமின்றி எல்லாருக்கும் கொடுக்குமாறு கூறும் பண்பு, எண்ணி வியக்கத்தக்கது. இதன்வழி எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்னும் சமத்துவப்பண்பு வெளிப்படும். வள்ளுவர் கூட,

    நன்றாற்ற ளுள்ளும் தவறுண்டு அவரவர்
    பண்பறிந்து ஆற்றாக் கடை(குறள் 469)

    என்று கட்டுப்பாடு விதித்திருக்க, புறநானூற்றுப் புலவர் பெருஞ்சித்திரனாரின் பண்பு ‘வறுமையுற்ற காலத்து எவரும் உதவமுன்வராத நிலையிலும் வாராதுவந்த பொருளை வைத்துக்கொண்டு நீண்டநாள் வாழ்வோம் என்று எண்ணாமல் எல்லாருக்கும் கொடுக்கச்சொல்லும் பண்பு போற்றத்தகுந்தது.

    3.3 பொய்கூறாமை:-
    ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே’ என்று கற்பனை கலந்து பாடும் புலவர்கள் குறித்த கருத்து இக்காலத்தில் நிலைத்திருக்க, புறநானூற்றுக் காலப்புலவர்கள் வறுமையைக்காரணம் காட்டி பொய்கூறாதவர்கள் என்பதனை ஆய் அண்டிரனைப்பாடும் மருதனிளநாகனாரின்,

    வாழ்தல் வேண்டிப்
    பொய் கூறேன்: மெய் கூறுவல்:(புறம் 139)

    என்னும் புறப்பாடல் உறுதி செய்யும்.

    3.4 அஞ்சாமை:-

    அஞ்சிவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவது
    அஞ்ச லறிவார் தொழில்(குறள்: 428)

    என்பது குறள். இதன்வழி அஞ்சுதல் ஆகாதவற்றிற்கு அச்சம்கூடாது என்பதும் பெறப்படும்.

    முடிமன்னர்களிடையே போர் நடக்கும் பொழுதும் அஞ்சாது புலவர்கள் சென்று சந்து செய்வித்தனர் (புறம்.45). பகை காரணமாக அவர்களின் பிள்ளைகளைக் கொல்ல எண்ணியபொழுது அவர்களின் உண்மைப்பண்பினை அஞ்சாது எடுத்துரைத்துக்காத்தனர். (புறம்.46). கொடுவினைகளைப் பட்டியலிடும் ஆலத்தூர் கிழார் இவற்றிற்குக்கூடக் கழுவாய் உண்டு ஆனால்,

    “நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
    செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென”(புறம் 34)

    என்று செய்நன்றி மறந்தோருக்குக்கழுவாயில்லை என்பார். சோழன் கிள்ளி வளவனை ‘மாமழை சொரியும் துளியினும் பலகாலம்; வாழ்க’ என்று வாழ்த்தியவர், கரூர்வேந்தனின் காவல் மரத்தைக்கிள்ளிவளவன் வெட்டியபோது ‘நாணுத்தகவுடைத்து’ என்று அஞ்சாது இடித்தும் உரைக்கிறார் (புறம்.36).

    3.5 மாறுபட்ட சிந்தனை:-
    போரும் அதன்வழி விளைந்த வீரமும் குறித்துப் பெருமிதமாகப்பேசும் புறநானூற்றில், கணியன் பூங்குன்றனின் பாடல் மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தும். இந்திய நாட்டின் முன்னாள் முதன்மை அமைச்சர் இந்திராகாந்தி ஐ.நா.அவையில் பேசும் பொழுது எந்நாட்டுப்புலவர்,

    “யாதும் ஊரே யாவருங் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா”

    என்னும் பாடலை எடுத்துக்காட்டி அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின்வழி அனைவரையும் வியக்கச்செய்தார் என்பது வரலாறு. பூங்குன்றனின் இப்பாடலின் நிறைவில்,

    “நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
    முறைவழிப் படூஉம்”(புறம் 190)

    என்னும் விதி குறித்த நிலையாமைச் சிந்தனையின் வெளிப்பாடாகும். இது குறித்து, “போரிலும் வீரப்புகழிலும் ஏற்பட்ட ஒரு சலிப்பும் அதன் காரணமாகத்தோன்றிய ஒரு நிலையாமை உணர்வும் இத்தகைய பனுவல்கள் தோன்றக்காரணமாகும். வீரநிலைக்காலச் சமூகத்தைத் திருப்பியவையாக இத்தகு கருத்துகள் பெற்ற வெற்றி, தொடர்ந்து தோன்றிய நீதிநூல்கள் பலவற்றிற்கு அடித்தளமாக அமைந்திருக்க வேண்டும்” என்று சங்க இலக்கியத்தில் புறப்பொருள் என்னும் நூலின் வழி (ப.319) தந்துள்ள கு.வெ.பாவின் கருத்து இவண் பொருந்தத்தக்கது.

    4.1 மக்களியல்:-
    மன்னராயினும் புலவராயினும் அவர்களின் முயற்சியாகவும் மக்களுக்காகவே. மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சி மட்டுமன்றி, மக்களும் அவர்களைப்பெரிதும் மதித்து வந்துள்ளனர்.

    4.2 நோயற்ற வாழ்வே:-
    நாடு நலம்பெற நோயின்றி அனைவரும் வாழ மக்களும் மன்னரும் அவரவர் கடன்களை ஆற்றவேண்டும் என்னும் உயரிய கருத்தை உள்ளடக்கி, பிசிராந்தையார் தமது செய்யுளை அமைத்துள்ளார். நரையிலாமைக்குக் காரணம் பற்றிக் குறிப்பிடுகையில் மன்னன், பிள்ளை, பணியாளர், மனைவி என்று அனைவரும் அவரவர்களுக்குரிய கடன்களையாற்றுகின்றனர். அதனால் மனத்தில் எவ்விதச் சலனமுமின்றி நிறைவுவாழ்வு வாழ்ந்துவருவதால் கவலையில்லா மனிதனாய் முதுமையில்கூட முடியும் நரைத்தலின்றி வாழ்வதாக, அப்பாடலை யாத்துள்ளார் (புறம்.191)

    4.3 நாடுநலம்பெற:-
    சங்ககாலச் சமுதாயம் பரத்தமையைக்கண்டிக்காத சமூகமாக விளங்கியது. பரத்தமை ஒழுக்கத்திற்குப்பெரிதும் காரணம் ஆடவர்களே. ஆணாதிக்கச் சமூகம் என்பதால் அதனைக் கண்டிக்கத்தயங்கினார். வள்ளுவர் மட்டும் வெளிப்படக்கண்டிக்கிறார். ஆனால் அதனை மறைமுகமாக ஒளவையார் பின்வரும் புறநானூற்றுப்பாடல் வழி வெளிப்படுத்துகின்றார் என்று கருதலாம்.

    நாடா கொன்றோ: காடா கொன்றோ:
    அவலா கொன்றோ: மிசையா கொன்றோ:
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை: வாழிய நிலனே!(புறம்.187)

    இதன்வழி ஒரு நாடு நல்ல நாடாக இருப்பது அச்சமூகத்தில் வாழும் ஆடவர்களைப் பொருத்தது என்று வெளிப்படுத்துவதன்வழி அக்கால ஆடவர் சமுதாயத்தின் ஒழுக்கக் கேட்டினைச்சாடுகிறார் எனலாம். இப்பாடலில் இக்கால நிலவமைப்பு வெளிப்படுவதை அறிந்து கொள்ளலாம்.

    5.0 முடிவுகள்:-
    புறநானூற்றை ஆய்ந்ததன்வழி பின்வரும் முடிவுகளைப்பெறலாம்.

    ⚫ சமூக மேம்பாட்டுக்கு அரசியலின் பங்கு அளப்பரியது.
    ⚫ மக்களைக்காப்பதை உயிராகவும் மானத்தை அதனினும் மேலானதாகவும் கருதியமை.
    ⚫ புலவர்களைக் குருவாக – அமைச்சராக – நண்பராகப் போற்றல்
    ⚫ பொருட்பெண்டிர் முயக்கம், புலவர் பாடாமை, மக்கள் பழிதூற்றல், இரவலர்க்கு ஈயாமை இழிவு என அஞ்சல்.
    ⚫ புகழுக்காக உயிரைவிடவும், துணிந்தமை; பழிக்காக உலகமே கிடைத்தாலும் பெறவும் மறுத்தமை.
    ⚫ எந்நிலையிலும் எதிர்ப்பில்லா, தவறா, விளம்பரமில்லா குறையாத விருந்தோம்பலைப் போற்றியமை.
    ⚫ பகை முடிக்கப்போர் நிகழ்ந்தாலும் அறவழியிலேயே நிகழ்த்தியமை.
    ⚫ என்பன போன்ற பலவற்றைப் புறநானூற்று மன்னர்கள் வழியும்.
    ⚫ மன்னர்களிடையே பகை தீர்க்கவும் மக்களின் குறைபோக்கவும் அஞ்சாது சென்று இடித்துரைத்தும், இணங்கிடவுரைத்தும்.
    ⚫ வறுமையிலும் செம்மை, பிறருக்கு வாரி வழங்கும் தன்மை
    ⚫ பொருளுக்காகப்பொய் கூறாமலும் மன்னனை நல்வழிப்படுத்தியமை
    ⚫ மக்களுக்கும் மன்னருக்கும் பாலமாக விளங்கியமை
    ⚫ என்பன போன்றவற்றை புலவர்கள் வழியும்…..
    ⚫ மன்னனே உயிர் அறமே வாழ்வுக்கு அடிப்படை, நல்ல சமூகத்திற்கு ஆடவர்களே பெரிதும் காரணம்.
    ⚫ அமிழ்தமாயினும் தனித்து உண்ணாமை
    ⚫ உயிர் கொடுத்தோர் என்பவர் உண்டிகொடுத்தோரே.

    மேற்சுட்டியன உள்ளிட்ட பல, மக்கள் வழியும் பெறப்படும். இம்முடிவுகள் புறநானூற்றின் வழிப்பெறப்படும் கோட்பாடுகளாகக் கொள்ளக்கிடக்கின்றன. நாடாளும் மன்னரை கவிபாடும் புலவன், வாழும் மக்கள் அனைவரும் அறத்தைப் பின்பற்றுவதைக் கடமையாகக்கொண்டவர்கள் என்பது பொது நிலையில் அறிந்து கொள்ளலாம். இவையும் இவையோன்றை எண்ணற்ற பிறவும் புறநானூறு உணர்த்தும் கோட்பாடுகளாகும். இவற்றில் காலத்திற்கேற்ப கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி வாழ்ந்தால் தனிமனிதன் குடும்பம் சமூகம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

    முனைவர் துரை.குணசேகரன்
    தலைவர், இணைப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி. கல்லூரி,
    மயிலாடுதுறை – 609 305.

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-9

    மீனாட்சி பாலகணேஷ்

    செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே!

    ஒரு சிறுமியர் கூட்டம். மண்ணால் சிறுவீடுகட்டி- சிற்றிலிழைத்து- விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் இச்சிறு பெண்கள். பாடுபட்டுச் சுவர்களை மூன்றுபக்கமும் நிறுத்தியாயிற்று. சிறு கிளைகளை ஒடித்துவந்து கூரையாகக் குறுக்காக இட்டு அதன்மீது இலைதழைகளைப்பரப்பி, வீட்டின் கூரையையும் எழுப்பியாயிற்று. மூன்று கற்களை அடுக்கி செங்கமலம் எனும் சிறுமி சிவந்த மலர்களை அள்ளிவந்து அவ்வடுப்பிலிட்டு பற்றவைத்தும் விட்டாள். வயதில் சற்றே பெரியவளான மங்கை அதன்மீது ஒருசிறு மண்சட்டியை ஏற்றி அதில் நிறைய மணலினையும் இட்டு சோறுசமைப்பதாகப் பாவனை செய்கிறாள்.

    “ஆஹா, வெண்பொங்கலா அக்கா?” என மோப்பம் பிடிக்கின்றனர் மற்ற சிறுமிகள். பசி வயிற்றை உண்மையாகவே கிள்ளுகின்றது. இப்போது இவர்களுக்கு வேண்டியது எல்லாம் சிறுவர்கள் விரும்பும் விதம்விதமான -உண்மையான- தின்பண்டங்கள்தாம்.

    என்ன செய்யலாம்? உடனே சிவகாமி, “அதோ பாருங்களடி! நமது நண்பன் கணேசன் தொலைவில் தொந்தியசைய வருகிறான் பாருங்கள்,” என உற்சாகமாகக் கைகளைத் தட்டியவண்ணம் குதூகலிக்கிறாள். எல்லாரும் அத்திசையையே ஆவலாகப் பார்க்கின்றனர்.

    ec1cf0fc-7336-4147-8835-4f978939a98d
    கணேசனேதான்! மெல்ல ஆடியசைந்து வருகின்றான்; இடதுபக்கம் இடுக்கிக்கொண்டிருக்கும் பாத்திரம் நிறையத் தின்பண்டங்கள்; வலது கையில் பாதி தின்றதொரு பணியாரம். அதனையும் அவசரஅவசரமாகத் தின்றுகொண்டேவருகிறான்! நண்பர்களை வந்தடையுமுன் முடிந்தமட்டும் தன்னிடமுள்ள பணியாரங்களைத் தின்றுவிடவேண்டும் என்ற பேராசை. சிறிது மிகுந்தால், ‘போனால் போகட்டும்,’ என அவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என்பது அவன் எண்ணம்போலும்!

    ஒருவழியாக அவன் பக்கத்தில் வந்து நிற்கிறான். சிறுமிகள் அனைவரும் ஓடோடிச் சென்று ஆவலுடன் அவனைச் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பார்க்கப் பார்க்க அவன் பணியாரங்களை வாயிலிட்டு மென்று சுவைக்கிறானே தவிரப் பகிர்ந்துகொள்வதாகக் காணோம்! வாய்த்துடுக்கு மிக்கவளான மங்கை அவனிடம், “கணேசா! தொந்தியை ஆட்டிக்கொண்டு, மெல்ல வருகிறாயே! இன்று விளையாட்டிற்கு நீ பணியாரம் கொண்டுவருவதாகக் கூறியதை மறந்துவிட்டாயோ? நீ சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தில் மிகுந்ததையாவது எங்களுக்குத் தருவாய் என்று நாங்கள் ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லையா உனக்கு? எங்களுக்குக்கொடுக்காமல் நீயே தின்றுவிடப்போகிறாயா?” என்று கடிந்துகொள்வதுபோலக் கேட்கிறாள்.

    கணேசனுக்கு எப்போதும் சினமே வராது. இன்று என்னவோ உண்டமயக்கம் போலும்! அவர்கள் கட்டிவைத்திருக்கும் சிறுமண்வீட்டினைத் தன் காலால் விளையாட்டாக எற்றி உதைக்கிறான்; கூரை பிய்ந்து, ஒருபக்கச்சுவரும் உடைந்துவிழுகின்றது. சிறுமிகளுக்குக் கண்களில் நீர்தளும்புகின்றது.

    “இடையூறுகள் செய்வதில் மன்னன்’ எனும் பெயரை எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதில் உனக்கு என்ன ஆசையோ கணேசா! ஏன் எங்கள் சிற்றிலைச்சிதைத்தாய்? நீ எவ்வளவு நல்லவன்? எங்களுக்கெல்லாம் பெரியவன்; எங்களிடம் மிகுந்த அன்பு கொண்டவன் அல்லவா? தயவு செய்து எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என்று அவன் கரத்தைப்பற்றிக்கொண்டு கெஞ்சுகின்றனர் அச்சிறுமிகள்.

    பெருத்த வயிறு தயங்கமெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
    பெரும்பண் ணியமு மேந்தியேம்பாற் பேணி வருநின் கரவினைக்கண்
    டருத்தி யொடுநீ யுண்டபரி கலசே டத்தை யடியேங்கட்
    களிக்க வருவாயென்றுவகை யரும்பி வழிபார்த் திருந்தேமை
    வருத்த லழகோ விக்கினஞ்செய் மன்னனெனும்பேர் பேதையரேம்
    மாட்டுத் தெரிப்ப தொருபுகழோ மடவாரூடன் மவுணரென்றும்
    திருத்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
    தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே
    (கலைசைப் பிள்ளைத்தமிழ்)

    பெருத்த வயிறு அசையுமாறு மெல்ல அடிவைத்து நடந்து, உள்ளங்கையில் பெரிய பணியாரத்தையும் ஏந்தி நாங்கள் சிற்றிலிழைத்து விளையாடும் இந்த எமது இருப்பிடம் தேடிவரும் உனது தந்திரமான எண்ணத்தினை – எங்களுடன் பகிர்ந்து கொள்ளாது நீயே உண்டுவிடும் உனது வஞ்சனைமிகுந்த எண்ணத்தினை (கரவினை) நாங்கள் அறிவோம். இருப்பினும் மிகுந்த ஆசையுடன் நீ உண்ட பரிகலமாகிய பாத்திரத்தில் உள்ள சேடத்தினையாவது (மிகுதியானதை) எங்களுக்கு அளிக்க வருவாய் என்று நாங்கள் நீ வரும் வழியை எதிர்பார்த்திருந்தோம். அப்படிப்பட்ட எங்களை நீ வருத்தலாகுமோ? ‘இடையூறுகள் செய்வதில் இவன் மன்னன்’ என்ற பெயரை எங்களிடத்தில் நீ பெற்றுக்கொள்வதும் உனக்குப் புகழாகுமோ? இளமையான பெண்களும் அரக்கர்களும் என்றும் உன்னைப் போற்றி வழிபடும் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவனே எமது சிற்றிலைச் சிதைக்காதே! தெளிந்த மதி கொண்டவர்களுக்குத் தேனாக விளங்கும் செல்வனே, எமது சிற்றிலைச் சிதைக்காதே!- என்பது பொருள்!

    அருமையான சிற்றிலக்கியச் சித்திரம் அல்லவோ இது? சிவஞானயோகிகள் எனும் புலவர்பெருமான் படைத்த கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலிலிருந்து இப்பாடல் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் பாட்டுடைத்தலைவன் முருகப்பிரானாகவே இருப்பான். இது ஒன்றே விநாயகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ். இன்னொருவிதத்திலும் இப்பிள்ளைத்தமிழ் வேறுபட்டு விளங்குகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப்பாடல்களைக் கொண்டமையும் பிள்ளைத்தமிழ் நூல்களுள் இது ஒவ்வொருபருவத்திற்கும் ஐந்து பாடல்களையே கொண்டுவிளங்கிடினும், சொற்சுவையும் பொருட்சுவையும் செறிந்து கருத்தினைக் கவரும்வண்ணம் அமைந்து பயில்வோர் உள்ளத்தைக் கொள்ளைகொள்கின்றது. ஆசிரியரின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டு எனப்படுகின்றது. இவர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் எனும் இன்னொரு பிள்ளைத்தமிழையும் இயற்றியுள்ளார். அதனைப் பின்பொரு நாள் காண்போம்.

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கே உரித்தான சிற்றிற்பருவம் (சிறுமியர் அமைத்து விளையாடும் சிற்றிலைச் சிதைத்தல்), சிறுபறைப்பருவம், சிறுதேர்ப்பருவம் ஆகியன இந்நூலில் அழகுறப்புனையப்பட்டுள்ளன. அவற்றில் சிற்றிற்பருவத்திலமைந்தது மேற்கண்ட இப்பாடல்.

    அடுத்து இன்னொரு இனிய காட்சி நம் கண்முன் விரிகின்றது.

    614b8ad7-11de-4bd1-9517-523fc90f4b67
    எப்போதும் மோனத்திலிருக்கும் எம்பிரான் சிவபெருமான் அம்மோனநிலைகலைந்து சற்றே அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். தகப்பனார் சிறிது இவ்வாறு அமர்ந்திருந்தாலும் சிறிய குழந்தைகள் உடனே உரிமையுடன் அவர்மீது ஏறி விளையாடுவார்களல்லவா? குழந்தை விநாயகனும் இதற்கு விலக்கல்லவே! ‘குறுகுறு’வென நடந்துவந்து சிவபிரான் மடிமீதேறித் தோள்களை அடைய எத்தனிக்கிறான். குழந்தையின் பூப்போன்ற மேனிஸ்பரிசம் பட்டதும் ஐயனின் திருமேனி அன்பில் குழைந்து இளகுகின்றதாம்! அழகான, நுணுக்கமான, உணர்வுபூர்வமான கற்பனை!

    ஐயனின் தோள்மீதேறி இருகால்களையும் வாகாக இருபுறமும் போட்டுக்கொண்டு குறும்புகள்செய்ய வசதியாக அமர்ந்துகொள்கிறான் விநாயகன். அவனைப் பொறுத்தவரை தன் தந்தையை அழகுசெய்வதாகக் கருதுகிறான். அவருடைய சடைமுடியும், அதிலுள்ள அணிகலன்களும், உடலின் சாம்பல்பூச்சும் அவனுக்குப் பிடித்தமானவையாக இல்லை. தன்விருப்பப்படி அவரை அலங்கரிக்கத் திட்டமிடுகிறான் குழந்தை! அவர் சடாமுடியிலணிந்துள்ள கொன்றைமலர்வேணியினைப் பிடித்திழுத்து உதறி வீசியெறிகிறான். ‘காடுடைய சுடலைப்பொடி பூசிய’ பெருமானின் உடலைக் கழுவ எத்தனிக்கிறான். வாகாக அவருடைய சடையினின்று இழிதரும் கங்கைப்புனலைத் தனது தும்பிக்கையால் பிடித்து உறிஞ்சியெடுக்கிறான். (இக்காலத்தில் வாகனங்களைக்கழுவ ரப்பர்குழாய்களால் நீர் பீய்ச்சுவதைப்போல) அவ்வாறு உறிஞ்சிய நீரை அவர்மீது பீய்ச்சியடித்து சாம்பல்பொடிபடர்ந்த அவரது திருமேனியைக் கழுவுகின்றானாம்!

    புள்ளிகள் நிரம்பிய அரவங்கள், தலையிலணிந்த மாலை, வெண்மையான எலும்புகளாலாகிய மாலை, கையில் அவர் வைத்திருக்கும் மான், இடையிலுள்ள புலித்தோல் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக ‘வெடுக்,வெடுக்’கென எடுத்தெடுத்து அவருடைய கரத்திலுள்ள தீயினில் இட்டுப்பொசுக்குகிறான். பின் தலையிலணிந்த பிறையினை நோக்கி, ‘இது முழுமையான வட்டநிலவாக இல்லையே என்ன செய்யலாம்,’ என ஒருகணம் சிந்திக்கிறான். பிரான் அணிந்திருக்கும் வலிய வளைந்த ஒரு பன்றிக்கொம்பினை எடுத்து அந்தப்பிறைநிலாவுடன் பொருத்திப்பார்க்கிறான். அட! அது அழகாகப் பொருந்தி வட்டவடிவாகக் காண்கின்றது; குழந்தையின் உள்ளம் மகிழ்கின்றது. இடையில் இந்த மானையும் வைத்தால் முழுநிலவாகுமே எனக்கருதி, மானையும் அதன் நடுவே வைத்துப் பொருத்துகிறான். பின் அந்த முழுநிலவை ஆகாயத்தில் உலவவிடுக்கின்றான்! வான்தரு எனும் தெய்வீகக் கற்பகத்தருவின் மலர்களாலும் இலைகளாலும் அதற்கு மேலும் அழகு செய்கின்றான்.

    இப்போது அவனுக்கு மகிழ்ச்சிபொங்குகிறது. “எல்லாம் பொருத்தமாக அமைந்துவிட்டது! ஒரு குறையும் இல்லை,” எனக்கைகளை அசைத்துக்கூறியபடி பெருமகிழ்ச்சிகொள்கிறான் விநாயகன் எனும் குறும்புக்குழந்தை.

    “இவ்வாறு எல்லாம் செய்து அசைத்து மகிழும் கரங்களால் சிறுபறை முழக்குவாயாக! தென்கோ இருந்தநகரின் செங்கழுநீர் (உற்பலம்) விநாயகனே! நீ சிறுபறை முழக்கி விளையாடி அருளுக,” எனத் தாயாரும் மற்றோரும் வேண்டுவதாக அமைந்த இந்த சிறுபறைப்பருவப்பாடல் தனியழகு கொண்டு விளங்குகிறது.

    வேறெந்த பிள்ளைத்தமிழிலும் காணாத கருத்தாக, குழந்தை கணேசன் தன் தகப்பனை அலங்கரிக்கும் அழகு, கவிநயமும், சொன்னயமும் மிகுந்து விளங்கும் பாடலினால் பேரழகுடன் விளங்கி நம்மைக் களிப்பிலாழ்த்துகிறது.

    குறுகுறு நடந்தெய்தி எம்பிரான் திருமேனி
    குழைய மேலேறி வேணிக்
    கொத்தினைக் கோத்தலைத்து உதறி வான்
    குளிர்புனல் புழைக்கை எற்றி
    பொறியரவு தலைமாலை வெள்ளென்பு கைம்மாப்
    புலிச்சரும முதலணி எலாம்
    பொள்ளென எடுத்தெடுத்து அங்கை அனலிற் பெய்து
    போக்கி இளமதியை வன்றி
    எறுழுலவை ஒன்றப் பொருத்தித் திருக்கைமான்
    இடைவைத்து முற்று மதிசெய்
    திருவிசும்பு உய்த்துவான் தருத்தரும் பேரணி கொடு
    எங்கணும் அலங்க ரித்து
    சிறுமை இலை இனியென அசைக்கும் கரம்கொண்டு
    சிறுபறை முழக்கி அருளே
    தென்கோ விருந்த நகருற்பல விநாயகன்
    சிறுபறை முழக்கி அருளே
    (கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்- சிவஞான முனிகள்)

    இந்த விநாயகக் குட்டனை வாரியணைத்து உச்சிமுகர நமக்குமே உள்ளம் ஆவலில் துடிக்கின்றதல்லவா?

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • புத்தாண்டு மலரட்டும்!

    -க.சௌமியா

    அன்பு பெருக…                              happy-new-year
    ஆனந்தம் பொங்க…
    இனிமை உண்டாக…
    ஈகை  வளர
    உழைப்புப் பெருகி…
    ஊஞ்சலாடும் மனதில் அமைதி நிலவ…
    எழுச்சி மிகு, சீர்மிகு
    ஏற்றம் கொண்ட தன்னிறைவில்
    ஐயம் கொள்ளாமல்
    ஒழுக்கத்துடன் வாழ்வில்
    ஓங்கி வளர்ந்து ஒளிபெற
    ஔவையின் வழியில் நடந்து
    வாழ்வில் வளம்பெற்றுப்
    புதுவாழ்க்கை புத்தாண்டில் பெற வாழ்த்துகள்!

     

     

    Share
  • இனி ஒரு விதி செய்வோம்: 1

    இன்னம்பூரான்
    ஜனவரி 1, 2016

    innam

    தற்காலம் பொற்காலமில்லை என்று நாம் யாவரும் அறிவோம். பொற்காலம் என்ற சொல்லே ஒரு மயக்கம். மிடாஸ் என்ற ஐதிக அரசன் தொட்டதெல்லாம் பொன் ஆனதால், பட்டினியில் வாடினானாம். நமக்கு வேண்டியதெல்லாம் நல்ல காலம். உழைப்புக்கேற்ற ஊதியம். மகவுகளுக்கு தரமான கல்வி. பொறுப்பும், காருண்யமும், திறனும் கூடிய மருத்துவம். ஒளிமயமான வருங்காலத்தை அளிக்கக்கூடிய தனிமனிதனின் ஆற்றலும், சமூகத்தின் பரந்த மனப்பான்மையும், சமுதாயத்தின் முற்போக்கு சிந்தனைகளும், தடம் மாறாத அரசும்.

    நாம் நிதர்சனமாக அன்றாடம் கண்டும் காணாது விடுபவை: சுண்ணாம்பு காளவாயிலும், செங்கள் சூளையிலும் கொத்தடிமைகள். முறுக்கு பிழிவது சிறார்கள். தேநீர் ஆற்றுவது சிறார்கள். ஆரம்பக்கல்வி அரசின் பொறுப்பு. இலவசம். அதைத் தட்டிப்பறித்தது அரசியல் சாஸனத்தின் உள்ளுறை குறைபாடு. தற்குறியாக ( எழுதப்படிக்கத்தெரியாதவர்களாக) இறந்தது பல ஏழை தலைமுறைகள். அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் தரமான கல்வி அளிக்கப்பட்டது. அதை பிற்காலம் கல்வி தந்தைகள் சூறையாடியதற்கு யார் காரணம்? அக்காலம் பிரபலங்கள் கூட அரசு ஆஸ்பத்திரிகளுக்குத்தான் செல்வார்கள். தற்காலம், வீடு, மனை, வயற்காடு எல்லாவற்றையும் விற்றால் தான் ஏழைகள், காசை தட்டிப்பறித்து, அதன் பின்னர் பிரமாதமான சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளில், நிவாரணம் நாட இயலும். இது எல்லாமே நமது சமுதாயம் அழுகிப்போகும் சின்னங்களே.

    பொது வாழ்வு என்றொரு துறை இருக்கிறது. பொது நலம் நாடுவோர்களின் தோணி, அது. மக்கள் யாவரும் அந்தத் துறையில் அனுபவம் பெறவேண்டும். தனது நேரம், செல்வம், உழைப்பு எல்லாவற்றிலிருந்தும் கடுகளவாவது பொது நலத்துக்கு உழைக்க வேண்டும். சாதாரணமாக, சராசரி மக்களுக்கும் பொதுநலசேவைக்கும் காத தூரம் என்பதை, சில நாட்களுக்கு முன்னால் தமிழ் நாட்டை அலக்கழித்த மழையும், வெள்ளமும், சகதியும் தகர்த்து விட்டது. சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் ஓடோடி முன்பின் அறியாதவர்களுக்கு உதவினார்கள். சாதிமதபேதம் முதலில் தகர்ந்தது. இளைய சமுதாயத்தின் முதிர்ந்த மனப்பான்மையை கண்கூடாகப்பார்த்தோம். தலை வணங்கினோம். யாவரும் சேவகனானோம். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற சொற்றொடர் தாரகமந்திரமானது.

    இனி ஒரு விதி செய்வோம்.
    பிறந்த குழந்தைக்கு, நாமே முன்னோடியாகத் திகழ்ந்து, பொதுநல சேவை பாடங்கள் நடத்தத் தொடங்குவோம். வளரும் சிறார்களுக்கு சிறிய சிறிய பொறுப்புகள் கொடுத்துப் பழக்குவோம்.

    -#-
    சித்திரத்துக்கு நன்றி: http://www.quickmeme.com/img/30/3000818e21952986f174bf51237dd650fa11b000adf99846bc2699b9a0113dbb.jpg

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 30

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    திருக்குறளில் சொல்லாட்சி தனித்த சிறப்புப் பெற்றது! தக்க சொல்லைத் தக்க பொருளுணர்ச்சியுடன் தக்க இடத்தில் அமைப்பதே கவிதை என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறுவர். அவ்வகையில், தாய் என்ற சொல்லைத் திருவள்ளுவர் “ஈன்றாள்” என்றே இரண்டிடங்களில் கூறுகிறார்! அவ்வாறு பயன்படுத்தும் இடங்களில் ஒன்றை,

    ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை! (656)

    என்ற குறட்பாவில் காணலாம்.

    இக்குறட்பாவில் திருவள்ளுவர் தாயை “ஈன்றாள்” என்ற பெயரில் குறிக்கிறார்! தாய், அம்மா, அன்னை, மாதா, பெற்றோள் என்றெல்லாம் குறிக்காமல் “ஈன்றாள்”, என்ற சொல்லில் குறிப்பதற்கு முறையான காரணம் ஒன்றுண்டு! ஈன்றாள் என்றாலே மகவைப் பத்துத் திங்கள் சுமந்த வயிற்றை உடையவளைக் குறிப்பிடும்! அன்னை குழந்தையைக் காணும் போதெல்லாம் அதனைத் தாங்கிய வயிற்றையே பெருமிதத்துடன் நோக்கி மகிழ்வாள்! அதனைக் குறிக்கவே, பழைய பரிபாடலில், சேரன் செங்குட்டுவனைப் புகழ்ந்து பாடிய குமட்டூர்க் கண்ணனார் “வயிறு மாசிலீஇயர் அவன் ஈன்ற தாயே!” என்று ஈன்றாளின் வயிற்றைத் தொடர்பு படுத்திப் பாடுகிறார்!
    அதனைப் போலவே தன் மகன் எங்கே? என்று கேட்ட ஒருவனிடம்,

    “புலிசேர்ந்து போகிய கல்லளை போல
    ஈன்ற வயிறோ இதுவே
    தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே”

    என்று புறநானூற்றில் ஒரு தாய் அந்த மகனைத் தாங்கிப் பெற்ற வயிற்றைக் காட்டி மகிழ்கிறாள்! தாய் தன் மகனை நினைக்கும் போதெல்லாம் அவனைப் பெற்ற வயிற்றைப் பெருமையுடன் எண்ணுவது வழக்கம் என்பதைப் பிற்காலத்தில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்,

    “மன்னு புகழ்க் கோசலை தன் ‘மணிவயிறு’ வாய்த்தவனே!” என்று பெரியாழ்வாரும்,
    “தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோ தரனை” என்று ஆண்டாள் நாச்சியாரும்
    போற்றிப் புகழ்கின்றனர்.

    கம்பரும், கோசலையைக் குறிப்பிடும்போது,

    “உலகு யாவையும்
    மன்வயிற்றில் அடக்கிய மாயனைத்
    தன்வயிற்றில் அடக்கும் தவத்தினாள் “

    என்று பாடுகின்றார்! இவ்வாறு ,”சிறந்த மகனைப் பெற்ற வயிறு” என்று புகழ்ந்து கொள்வது ஈன்ற தாயாரின் சிறப்பு! இவ்வாறு தன்னைப் பத்துத் திங்கள் தாங்கிப் பெற தாயைப் பட்டினத்தார், பிரிந்த போது,

    “ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
    பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்யஇரு
    கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
    எப்பிறப்பில் காண்பேன் இனி!” என்றும்,

    “முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள்அளவும்
    அந்திபக லாய்ச்சிவனை ஆதரித்துத் – தொந்தி
    சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
    எரியச் சிதைமூட்டு வேன்?” என்றும்,

    உளமுருகிப் பாடினார்! இவ்வாறு, மகனைப் பெற்ற மணிவயிற்றை எண்ணியே “ஈன்றாள்” என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்து வள்ளுவர் இட்டார்! அத்தகைய வயிற்றைப் பசித்துன்பம் வாட்டும் சூழ்நிலையில், எந்த மகனும் பதற்றம் அடைவது இயற்கை! பெற்ற தாயின் வயிறு, பசியால் வாடும்போது எவ்வாறேனும், அதாவது, அறத்துக்கு மாறான வழியிலேனும் – தாயின் பசியைப் போக்கப் பாடுபடுவது மகனின் இயற்கை! இதனை மைந்தர்கள் எல்லாரும் செய்யலாம்; ஆனால், அந்த மைந்தர், நாட்டின் அமைச்சராக இருந்தால், எவ்வாறேனும் தாயின் பசியைப் போக்கல் கூடாது! அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பொழுது, அவர் தம் ஆட்சி அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன் படுத்தியோ, மக்களிடம் தவறான வழியில் பொருளைப் பெற்றோ தாயின் பசியை நீக்க முயலக் கூடாது! அமைச்சர், அரசரின் பெருமையைக் குறைக்காத வகையில் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்! ஏனெனில் இந்தக்குறள் அமைச்சியலைச் சார்ந்ததாகும்!

    பரிமேலழகர், வடமொழியில், “இறந்த மூப்பினராய இரு முது குரவரும், கற்புடை மனைவியும், குழந்தையும் பசியான் வருந்தும் எல்லைக்கண், தீயன பலவும்செய்தாயினும் காப்பாற்றுக!”, என்ற அறநூற்பொதுவிதி, பொருள்நூல் மற்றும் அரசியல் வழிகளில் முறையாகச் செயல்பட்டு, மக்களிடம் நல்ல மதிப்பும் பெற்று வாழும் அமைச்சர்களுக்குப் பொருந்தாது ,என்கிறார்! ஆகவே அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுச் செயல் படுவோர், பெற்றோர், மற்றும் உறவினர்களுக்காக எந்தப் பொருளையும் அரசாங்கத்திடமிருந்து எடுத்துக் கொள்ளவோ, மக்களிடமிருந்து கையூட்டு போன்ற வழிகளில் பொருளீட்டவோ கூடாது! என்கிறார்! ஆகவே அமைச்சராகப் பணி புரிபவர், அரசியலில்,குடும்பத்தை இணைத்துக் கொள்ளக்கூடாது!

    அரசியல் வாதிகள், குடும்ப அரசியல் நடத்தும் இந்தக் காலத்திற்கு மிகவும் தேவையான புதிய கருத்தினை இந்தத் திருக்குறள் புலப்படுத்துகிறது! அமைச்சுப் பணியில் இருப்போர் குடும்பம் வறுமை அடைந்தாலும் அதனைக் கருதாத வாழ்க்கையை அமைச்சர்கள் நடத்தலாம்! அப்போதும், தவறான வழியில் அமைச்சர் பொருளீட்டல் கூடாது! என்ற இக்காலத்துக்கும் ஏற்றக் கருத்தினை அக்காலத்திலேயே, திருக்குறள் வலியுறுத்திக் கூறியுள்ளது! இக்காலத்துக்கேற்ற புதிய விளக்கத்தை இங்கே நாம் புரிந்து கொள்கிறோம்! இனி இந்தப் பொருளுணர்வுடன், நாம் இத்திருக்குறளைப் பயில்வோம்!

    “ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை!(656)

     

    Share
  • அம்மா வீடு!

    -கவிஜி 

    என் வீடு
    அம்மா வீடாகிப்
    போனது…

    வந்து போகத்
    திருவிழாக்கள்
    தேவைப்படுகின்றன…

    என்குழந்தையை விட
    அண்ணனின் குழந்தையைச்
    சற்று அதிகமாகவே
    கொஞ்சுகிறார் அப்பா…!

    ஒரு பொம்மையைக் கூட
    கேட்டுத்தான்
    எடுக்க வேண்டி இருக்கிறது…
    சிரித்துக் கொண்டே
    மறுத்து விடுகிறார் அண்ணி…

    எனதறையில்
    பழைய பொருட்கள்
    போட்டு வைத்திருக்கிறார்கள்
    எனது பள்ளிக்காலச் சீருடைகள் உட்பட…

    ஏனோ இப்போதெல்லாம்
    அம்மா வீட்டை
    எனக்கும்
    அம்மா வீடென்றே
    சொல்லத் தோன்றுகிறது…!

     

     

    Share
  • புத்தாண்டுக் கவிதை!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    புதுபொலிவுடன்  வருக
    புத்தாண்டே நீ  வருக
    போன நாட்களெல்லாம்                   HappyNewYear
    புண்மிகு     நாட்கள்
    புண்ணுக்கு மருந்தாய்
    புலர்ந்திடு நல்பொழுதாய்
    மருவும் நெஞ்சத் தீமைகள்
    மாய்த்து   ஞானம்  தருக
    வறுமைகள்  போக்கி
    வன்முறை    நீக்கி
    பயங்கரவாதங்கள்
    படுதுயர் தீவிரவாதங்கள்
    சாதிச் சண்டைகள்
    சமயப்  பேதங்கள்
    சிதைத்து  மாய்த்திட வா
    இன்னல்கள்   மாய்த்து
    இன்னருள்    சேர்த்துப்
    புவியில் சாந்தம் நிலவிட
    புதுப் பொலிவுடன் வருக வருகவே!

     

    Share
  • மார்கழி மணாளன் 16 சீர்காழி – (தாடாளன்)

     க. பாலசுப்பிரமணியன்

    dc77a786-9d2c-47a6-9e0e-192df1a79fbb

    பல்லாண்டு நல்லோர்தம் மனமாண்ட மணிவண்ணா !

    நல்லாண்டு எல்லோர்க்கும் அருள்வாயே நாராயணா !

    நலமான மனதோடும் வலிவான உடலோடும்

    நூறாண்டு வாழ்ந்திடவே வரம் தருவாய் வைகுந்தா !

     

    திருவடி பெருவடி வைகுண்ட விண்வழி

    ஒருவடி எடுத்தவன் உலகையே அளந்து

    மறுவடி தூக்கி விண்ணையும் அளந்து

    ஒருவடி வைத்திட ஒருவிரல் தூக்கினான் !

     

    வலக்கை நீட்டினான் தானம் பெற்றிட

    இடக்கை விரலால் இடமும் கேட்டே

    தலைமேல் காலைத் தூக்கியே தாளாளன்

    தருமம் காத்திடத் தரணியை அளந்தான் !

     

    அரக்கனின் ஆணவம் அழித்திட வந்தவன்

    அரங்கத்தில் அன்று வாமனின் வேடம் !

    அரியவன் சீரடி அகந்தையில் துறந்தவன்

    அடியினில் தலையை அறிந்தே வைத்தான் !

     

    மூவடி தூக்கிய வாமன-விக்கிரமன் கால்வலி

    முற்றிலும் மறைந்திட மார்பினில் வைத்தாள்

    மாதவன் இதயத்தில் மலர்ந்திடும் மங்கை

    மன்னவன் தன்னை இதயத்தில் அணைத்தாள் !

     

    குறளாக வந்தவன் குறையின்றி நின்றான்

    குனிந்தவன் நெஞ்சில் கனிவுடன் அமர்ந்தான்

    திருத்தாள் எடுத்தே தலையினில் வைத்திடத்

    திருவோணம் தன்னில் மாபலிக்கும் திருவிழா !

     

    கனவென்பார் கண்ணா! நீ வெறும் கற்சிலையென்பார்

    கற்பனையில் கனிந்து வந்த நல்லதோர் கபடமென்பார்

    மன்னுயிரை மயக்கிவிடும் மாயையின் உருவென்பார்

    மனக்கோயிலில் உருவான அருவான என் அற்புதமே !

     

    பகல்பத்து இராப்பத்து பலமுறை பார்த்துவிட்டேன்

    பல்லக்கில் உனைவைத்துத் தூக்கிவிட்டேன் !

    வில்லங்கம் இல்லாத வாழ்வென்றும் வேண்டும்

    வில்லோனே குழலோனே வினைகள் தீர்ப்பாய் !

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • பாரதி பாடிய யேசு கிறிஸ்து

    – முனைவர் சீ. இளையராஜா.

    ஆங்கில ஆண்டின் நிறைவு மாதமாக விளங்கக்கூடிய டிசம்பர் மாதத்திற்கு நிறைய சிறப்புகள் காணக்கிடைக்கின்றன. அவற்றில் மிகச்சிறப்பான ஒன்றாக அனைவராலும் கருதப்பெறுவது, யேசு கிறிஸ்துவின் பிறப்பு. இந்த மாதத்தில்தான் பாரதியாரும் பிறந்தார். அவர், தன்னை சக்திதாசனாகக் கருதிக் கொண்ட போதிலும் அவர் ஒருபோதும் தன்னைப் பிற மதத்துவேசியாகக் காட்டி வாழாத மகாகவியாகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியுள்ளார். சமயச்சார்பின்றி ஒரு சமய நல்லிணக்கவாதியாக விளங்கியுள்ளார். அதை அவரின் பல்வேறு பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.

    பாரதியார் கவிதைகள் என்னும் பெருந்தொகுதியில் விநாயகர் நான்மணி மாலை முதலாகவும், தோத்திரப் பாடல்கள் இரண்டாவதாகவும், வேதந்தப் பாடல்கள் மூன்றாவதாகவும் காணப்படுகின்றன. இம்மூன்றாம் பகுதியாக உள்ள வேதாந்தப் பாடல்களில் முப்பது தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. இவை யாவும் 1930ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பெற்றன. இதிலுள்ள சில பாடல்கள் 1910ஆம் ஆண்டில் வெளிவந்தவையாகும். இம்முப்பது கவிதைகளில் ஒன்பதாவது கவிதையாகக் காணக்கிடைப்பதுதான் இந்த யேசு கிறிஸ்து என்னும் கவிதையாகும். இதில் யேசுவைப் பற்றிப் பாரதியார் குறிப்பிடும் செய்திகள் பற்றி இக்கட்டுரை ஆய்கிறது.

    மகாகவி பாரதியார் தம்முடைய புதிய ஆத்திசூடியின் காப்புப் பாடலைப் பரம்பொருள் வாழ்த்து என்னுந் தலைப்பிட்டுப் பாடியுள்ளார். அதில், யேசுவைப் பற்றி, “ஏசுவின் தந்தை” என்ற வரியைக் குறிப்பிடுகின்றார். இதற்கு யேசு ஓர் இறைத்தூதர். அவரை இயக்கும் ஒரு பிதாவே கடவுளாகக் கொள்ளப்படுகின்றார் என்று பாரதி குறிப்பிடுகின்றார். அதாவது, யேசு இறைத்தூதர் என்ற கருத்து வெளிப்படுகிறது. காணப்பெறும் யேசு கிறிஸ்து என்னும் கவிதைக்கு முதலில் ஒரு முன்னுரை போன்று ஒரு பகுதி, ”தீய ஒழுக்கத்தில் நின்ற மேரி மக்தலேன் என்பாள் யேசு கிறிஸ்துவை அடைந்து, தனது ஒழுக்கத்திற்காகப் பரிதபித்து, தன்னைக் கடையேற்ற வேண்டுமென்று வேண்டினாள். யேசுவும் அவளுக்கு அருள் புரிந்தார். யேசு புதைக்கப்பட்ட மூன்றாம்நாள் அவர் உடம்புடன் எழுந்து விண்ணேகியதை மேரி மக்தலேன் கண்ணால் கண்டு பிறருக்கறிவித்ததாய் கிறிஸ்து புராணம் கூறுகிறது. இக்கதையையே இங்கு விளக்கியிருக்கிறது” என்று காணக்கிடைக்கிறது. இதில், மேரிமக்தலேன் என்ற பெண் தீய ஒழுக்கத்தில் நின்று, பின்பு மனம் வருந்தி நின்ற அவளுக்கு அருள் வழங்கி, யாருக்கும் கிடைக்காத அரியதொரு வாய்ப்பான யேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சியைக் காணும் அருட்பெரும் பேற்றைப் பெற்ற ஒரே உயர் பெண்ணாக விளங்கியதை இப்பத்தி கூறுகிறது. இச்செய்தியை,

    ”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
    எழுந்து யிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்;
    நேச மாமரி யாமக்த லேநா
    நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்.”

    என்ற தம் கவிதை வரிகளால் குறிப்பிடுகின்றார். தீய ஒழுக்கத்திலிருந்து மீண்ட ஒருவரை மேன்மைப்படுத்த வேண்டியது அனைவரின் கடமையாகும். அதன் பொருட்டு மரியா மக்த்லேநா என்ற அவர்தம் பெயரை நேசமா என்ற அடைமொழியை இணைத்து நேசமா மரியா மக்தலேநா என்று குறிப்பிட்டு உயர்த்தியுள்ளார் பாரதியார்.

    jesus4

    உலகத்தார் அனைவரையும் அழைத்து,

    ”தேவர் வந்து நமக்குட் புகுந்தே
    நாச மின்றி நமைநித்தங் காப்பார்
    நமகந் தையை நாம்கொன்று விட்டால்”

    என்ற வரிகளில் மனிதர்கள் தம்மிடம் உள்ள அகந்தைச் செயல்களை அகற்றி அழித்தொழித்தால் தேவர் அதாவது, யேசு கிறிஸ்து மனித்த மனத்துள் நுழைந்து, மனிதர்கள் வாழ்வில் துன்பமின்றிப் பேரின்பம் எய்தலாம் என்ற வழிகாட்டுதலை வழங்குகிறார் மகாகவி.

    ”அன்பு காண்மரி யாமக்த லேநா,
    ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;
    முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
    மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
    பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே
    போற்று வாள்அந்த நல்லுயிர் தன்னை
    அன்பெ னும்மரி யாமக்த லேநா
    ஆஹ!சாலப் பெருங்களி யிஃதே.”

    என்ற கவிதை வரிகளில் தீய ஒழுக்கத்திலிருந்த மரியா மக்தலேநா மனந்திருந்தி யேசு கிறிஸ்துவை அடைந்து, முன்பு தீய செயல்கள் யாவற்றிற்கும் வருந்தித் தம்முடைய தீய எண்ணங்களை அழித்ததின் பயனாக அவள் விளங்கியதால்தான் அவளுக்கு இவ்வுலகில் யாருக்கும் கிடைக்காததொரு அரும்பெரும் பேறான யேசு உயிர்த்தெழுந்து விண் சென்றதைக் காணும் பாக்கியம் அவளுக்குக் கிட்டியது என்றும், யேசு கிறிஸ்துவின் முகம் பொன்பொலிந்த முகமாக விளங்கியது என்றும் பாரதியார் கூறுகின்றார். மேலும், யேசுவை நல்லுயிர் என்று சிறப்புற இவ்வுலகத்திற்கு எடுத்தியம்புகின்றார். மரியா மக்தலேநா அன்புக்கு நிகரானவள் என்று கவிஞர் வாழ்த்துகின்றார். அவளுக்குத் தேவன் யேசு வழங்கிய பேரருள் அவர் அப்போது மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்கு ஏகியதைக் காணும் பேரின்பமே அதுவாகும்.

    ”உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
    உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்
    வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து.
    நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
    நொடியி லிஃது பயின்றிட லாகும்.”

    என்ற வரிகளில் உண்மை என்ற சிலுவையில் உணர்வினை ஆணி என்னுந் தவங் கொண்டு அடித்தால் மனிதர்கள் அனைவரும் பயன் பெறும் வித்ததில் வாழ்க்கை அமையும். அதனை ஈகைக் குணப் பேருயிராக விளங்கும் யேசு கிறிஸ்து வழங்குவார். இதனை முதன்முதலில் மரியா மக்தலேநா என்ற பெண்ணுக்கு வழங்கிப் பெண்மையைப் போற்றியுள்ளார். இதிலிருந்து, இப்புவியுலகில் இறைத்தூதராக விளங்கிய யேசு பெண்களுக்கும் அவர்களின் செயல்களான நல்லறத்தையும் முன்மொழிகின்றார். இதைப் போன்று தம்முடைய பல்வேறு செயல்களாலும் உலக உயிர்கள் யாவற்றிற்கும் பேரின்பத்தைப் பயக்கும் நுண்மைப் பொருளாக யேசு கிறிஸ்து உள்ளார் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார்.

    (டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சமர்ப்பணம்: யேசு கிறிஸ்துவுக்கு)

    முனைவர் சீ.இளையராஜா
    உதவிப் பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ. கல்லூரி (தன்.)
    மன்னன்பந்தல் – 609 305.
    மின்னஞ்சல்: ilayaraja20@gmail.com

    Share