மார்கழி மணாளன் 16 சீர்காழி – (தாடாளன்)
க. பாலசுப்பிரமணியன்
பல்லாண்டு நல்லோர்தம் மனமாண்ட மணிவண்ணா !
நல்லாண்டு எல்லோர்க்கும் அருள்வாயே நாராயணா !
நலமான மனதோடும் வலிவான உடலோடும்
நூறாண்டு வாழ்ந்திடவே வரம் தருவாய் வைகுந்தா !
திருவடி பெருவடி வைகுண்ட விண்வழி
ஒருவடி எடுத்தவன் உலகையே அளந்து
மறுவடி தூக்கி விண்ணையும் அளந்து
ஒருவடி வைத்திட ஒருவிரல் தூக்கினான் !
வலக்கை நீட்டினான் தானம் பெற்றிட
இடக்கை விரலால் இடமும் கேட்டே
தலைமேல் காலைத் தூக்கியே தாளாளன்
தருமம் காத்திடத் தரணியை அளந்தான் !
அரக்கனின் ஆணவம் அழித்திட வந்தவன்
அரங்கத்தில் அன்று வாமனின் வேடம் !
அரியவன் சீரடி அகந்தையில் துறந்தவன்
அடியினில் தலையை அறிந்தே வைத்தான் !
மூவடி தூக்கிய வாமன-விக்கிரமன் கால்வலி
முற்றிலும் மறைந்திட மார்பினில் வைத்தாள்
மாதவன் இதயத்தில் மலர்ந்திடும் மங்கை
மன்னவன் தன்னை இதயத்தில் அணைத்தாள் !
குறளாக வந்தவன் குறையின்றி நின்றான்
குனிந்தவன் நெஞ்சில் கனிவுடன் அமர்ந்தான்
திருத்தாள் எடுத்தே தலையினில் வைத்திடத்
திருவோணம் தன்னில் மாபலிக்கும் திருவிழா !
கனவென்பார் கண்ணா! நீ வெறும் கற்சிலையென்பார்
கற்பனையில் கனிந்து வந்த நல்லதோர் கபடமென்பார்
மன்னுயிரை மயக்கிவிடும் மாயையின் உருவென்பார்
மனக்கோயிலில் உருவான அருவான என் அற்புதமே !
பகல்பத்து இராப்பத்து பலமுறை பார்த்துவிட்டேன்
பல்லக்கில் உனைவைத்துத் தூக்கிவிட்டேன் !
வில்லங்கம் இல்லாத வாழ்வென்றும் வேண்டும்
வில்லோனே குழலோனே வினைகள் தீர்ப்பாய் !