சிறப்புடனே வந்திடுவாய்!

-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

புத்தாண்டே  நீவருக
புதுச்சேதியுடன் வருக
சொத்தாக நினைக்கின்றோம்
சுமையகற்ற நீவருக
மொத்தமுள்ள முடைநாற்றம்
அத்தனையும் களைந்துவிட்டுச்   newyear
சுத்தநிறை சுகமனைத்தும்
சுமந்துவர வேண்டுகின்றோம்!

எங்களது வாழ்வினிலே
இடர்கள்வந்து மோதாமல்
சங்கடங்கள் தீர்த்துவிடச்
சந்தோஷத்துடன் வருக
மங்களங்கள் கொண்டுவந்து
மனமகிழச் செய்துவிடச்
செங்கதிரேன் போலநீயும்
சிறப்புடனே வந்திடுவாய்!

ஏழையொடு பணக்காரர்
இயைந்துமே இருப்பதற்கு
வேளைவரும் எனவெண்ணி
விடியலையே வேண்டுகிறோம்
நாளைவரும் புத்தாண்டே
நற்சேதியுடன் வந்து
நல்லவொரு ஆண்டாக
யாவர்க்கும்  அமைந்துவிடு!

உலகமெல்லாம் நல்லாட்சி
ஓங்கிவர வேண்டுகின்றோம்
நிலவுலகில் சமதர்மம்
நிலைத்துவிட நினைக்கின்றோம்
விளைநிலங்கள் வீணாகப்
போவதையும் வெறுக்கின்றோம்
நலமுடனே வளம்பெருக
நல்லாண்டே வந்திடுவாய்!

அரசியலார் மனசாட்சி
அறிந்துணர வேண்டுகின்றோம்
ஆதீனம் அத்தனையும்
ஆண்டவனை நினைந்திடட்டும்
நீதித்துறை அத்தனையும்
நிமிர்ந்துநிற்க வேண்டிடுவோம்
நிம்மதியைத் தருவதற்கு
நீவருவாய் புத்தாண்டே!

உளம்மகிழ வந்திடுவாய்
உன்வரவு சிறந்திடட்டும்
மனதிலுறை அத்தனையும்
வண்ணமுறத் தந்துவிடு
எண்ணமெலாம் இனித்துவிட
இனியமுகம் கொண்டுநீயும்
எழிலுடனே வந்திடுவாய்
எங்களுக்குப் புத்தாண்டாய்!

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *