Month: January 2016

  • நானும் சங்கரன் தான்..  சிறுகதை .. க. பாலசுப்ரமணியன்

    “மகாலிங்கம் .. மகாலிங்கம்…”

    அந்த திருவிடைமருதூர் கோவில் பிரகாரம் முழுதும் அந்த ஒலி எதிரொலித்தது. காலை ஐந்தரை மணிக்கு அந்தக் குளத்திலே  நீராடி விட்டு, குளிர் காற்று  சில்லென்று உடம்பைத் தழுவ, திருநீறின் மணம் பக்தி பரவசத்தை உண்டாக்க அந்தக் கோவில் பிரகாரத்தை சுற்றி வருவது மனதுக்கு இனம் புரியாத மகிழ்ச்சியை த்  தந்தது. .

    மீண்டும் யாரோ அங்கே  “மகாலிங்கம், மகாலிங்கம்” என்று குரல் எழுப்பியதும் என் சுயனைவுக்குத் திரும்பினேன்.

    ” இந்தக் கோவில் ரொம்ப பெரிசு. இங்க வந்து தரிசனம் பண்ணினா ” பிரம்மஹத்தி தோஷம்” விலகிடுமாம். நிறையப் பேர் சொல்லுவா.” முன்னாலே போன பெரியவர் நான் இந்தக் கோவிலுக்கு முதல் முறையாக வருவதைப் புரிந்து கொண்டார் போலும்.., எனக்கு விளக்கிவிட்டுச் சென்றார்.

    பிரம்மஹத்தி தோஷம்னா  என்ன? என் மனதில் ஒரு கேள்வி. சான்றோரைக் கொன்றதாலா, இல்லை, கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றதாலா, இல்லை முதியோரையோக்  கொன்றதாலா .. சந்தேகத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

    ‘”ஓம் நமச்சிவாய,  ஓம் நமச்சிவாய”  என்று சொல்லிக்கொண்டே முன் நகர்ந்தேன்.

    ” காலையிலே நீங்கள் தான் முதல் தரிசனம். விஸ்வரூப தரிசனம் மாதிரி.. பசிக்கறது.. ஏதாவது கொடுங்கோ..”

    ஒரு நாலு முழம் வேட்டியைக் கட்டிக்கொண்டு இடுப்பில் ஒரு துண்டை இருக்கிகொண்டு  திருநீறு அணிந்து முன்னே நின்ற உருவத்தைப் பார்த்ததும் பகீரென்றது.! இவரை எங்கேயோ பார்த்திருக்கேனே.. மனம் ஆழ்ந்த சிந்தனயில் ஈடுபட்டது..

    ” சார்,உங்களைத்தானே  ஹெல்ப் பண்ணுங்கோ..””

    இந்தக் குரலும் சற்று பழகிய குரலாகத் தெரிகிறதே..”

    ” ..நீங்க. “… கொஞ்சம் தயங்கிக் கேட்டேன் “அனந்து சார் இல்லே”

    ” அனந்து .. அனந்தன்.. ஆனந்தன்.. ஆனந்தம்  எல்லாம் என் பெயர் தான். கோவிலுக்கு உள்ளே இருக்கானே, அவனுக்கும் இந்தப் பெயரெல்லாம்  உண்டு., ..பசிக்கிறது.. ஏதாவது குடுங்கோ..”

    “நீங்க நாகர்கோயில் கணபதி கோயில் தெருவிலே இருந்தேளோ?”

    “பிள்ளையார்.. எல்லாக் கஷ்டத்தையும் நிவர்த்தி செய்வார். நோ டவுட். எதாவது தருவேளா..”

    மனம் வலித்தது.. இவருக்கு எதாவது மன நோயோ? ஏன் இங்கே வந்து பிச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறார்?  இவர் குடும்பம் முழுவதும் எனக்குத் தெரியுமே..”

    “சார், உங்கள் குழந்தைகளெல்லாம்..?”

    “குழந்தைகளா?…..” ஏதோ பெரிய ஜோக் சொல்லிவிட்டதைப் போல் சிரித்தார்… ” சின்ன வயசிலேதான் அவர்கள் குழந்தைகள்… அதுக்கப்பறம் படிச்சு வேலைக்குப் போயாச்சுனா அவா எல்லாம் ஆபீசர்கள் .. என் வாரிசுகளெல்லாம் பெரிய ஆபீசர்கள். …”

    அவர் சூசகமாகச சொன்னதிலிருந்து அவர் வாழ்வின் உண்மை தெரிய வந்தது..

    “‘ஜெர்மனி தெரியுமா, ஜெர்மனி அங்கதான் என் ஆபீசர் மகன். ..” அந்த வார்த்தைகளில் தொனித்தது பெருமையா ஏளனமா என்று தெரியவில்லை.

    ” உங்க மனைவி… ? ”  மீண்டும் வாய் விட்டுச் சிரிப்பு..

    பெண்டாட்டி ரொம்பப்  படுத்தினா, அவ்வை என்ன சொன்னா தெரியுமா “கூறாமல் சன்யாசம் கொள்”  .. சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிரிப்பு..

    ” நீங்க ஒரு கம்பெனியிலே மக்கள் தொடர்பு  அதிகாரியாக இருந்தேளில்லையோ ..”

    “அன்னிக்கும் மக்கள் தொடர்பு .. இன்னிக்கும் மக்கள் தொடர்பு.. அன்னிக்கு நான் பேசினதுக்கு காசு கொடுத்தா .. இன்னிக்கு நான் பேசாம இருக்கறதுக்கு காசு கொடுக்கறா.. நீங்க எப்படி?  பசிக்கறது.. ஏதாவது தருவேளா…”

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்ற ஒரு அனுபவம். ,.” நிச்சயமா தரேன்.. ஆனா ஒரு கேள்வி.. உங்களுக்கு அந்த தெருவிலே ஒரு வீடு இருந்ததில்லையோ? ”

    “வீடு.. அந்த வீடு வேற.. நான் இனிமே போகப்போற வீடு வேற.. அந்த வீட்டை விலைக்கு விக்கலாம்.. எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம் .. இந்த வீட்டுக்கு விலையே கிடையாது.. யாரும் ஷேர் பண்ணிக்கவும் மாட்டா ..”

    “வீடு வரை உறவு..: கண்ணதாசன் பாடல் கேட்டிருக்கேளோ? அதெல்லாம் கேட்ட பின்னும்  ஜனங்களுக்கு புத்தி வர மாட்டேங்கறது… சரிதானே?

    “மகாலிங்கம்  மகாலிங்கம்” .. கோவில் முழுதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது .. அந்த சிவன் அங்கே அமர்ந்து கொண்டு ஏன் இப்படி நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்  என்று  புரியவில்லை.

    “ஹலோ ..” அவர் குரல் மீண்டும் என்னை ஈர்த்தது. .”உங்களுக்கு ஆதி சங்கரரைத் தெரியுமோ…?:

    நான் தலையை அசைத்தேன் .. “அவர் எங்கே பிறந்தார்?”  ஏதோ விநாடி வினாவில் கேள்விகள் கேட்பது போல் கேட்டார்.

    :”காலடி” மெதுவாகச் சொன்னேன்.. “கரெக்ட்.  அவர் எப்படி சாப்பிட்டார் தெரியுமா?”

    நான் மௌனமாக இருந்தேன். அவர் தொடர்ந்தார்.

    ” பவதி பிக்ஷான் தேஹி.”.. தினசரி வீடு வீடாகப் போய்  “பவதி பிக்ஷான் தேஹி”  என்று பிக்ஷாவந்தனம்  செய்து தானியங்கள் பெற்று உணவு சமைத்து சாப்பிட்டார்.”

    எதோ ஒரு பெரிய உண்மையை  கண்டறிந்தது போல் நான் பேசாமல் இருந்தேன்.

    ” இப்போ நானும் “பவதி பிக்ஷான் தேஹி”  வீடு வீடாகப் போகலை. இங்கேயே இப்படியே கோவில் வாசலிலே நின்று கொண்டு :பவதி பிக்ஷான் தேஹி.,”

    “:சொல்லுங்கோ.. எனக்கும் சங்கரனுக்கும் என்ன வித்யாசம்? நானும் சங்கரன் தானே..”  சிரித்துக்கொண்டே  “அவர் ஆதி சங்கரர்.. நான் ஆதி அனந்தர்..”.. ஓ வெனக் கைகொட்டிச் சிரித்தார்.

    மெதுவாக அவர் கைகளைப் பிடுத்து அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன். அவருக்கு வேண்டிய காலை  டிபன் கொடுக்கச் சொன்னேன்.. அவர் கைகளில் ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்தேன்.

    அவரைப் பார்த்த அந்த ஹோட்டல் முதலாளி “யாரு? பவதி பிக்ஷான் தேஹி சாரா?” புன்னகை அவர் முகத்தில்.

    அருகில் இருந்த சிவபிரானின் படத்தை ஒருமுறை பார்த்து “மகாலிங்கம்” என்றார்.

    கடைசியாக அவரிடம் நான் “சார், நான் யார் என்று தெரிகிறதா?” எனக்கேட்டேன்.

    என்னை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு  “ஆதி அனந்தருக்கு இன்னிக்கு பிக்ஷா வந்தனம் செய்த ஒரு நல்லவர்.. ராஜாராமன் என்ற நாமதேயம்.” இட்டிலியை சாம்பாரில் தோய்த்து வாய்க்குள் திணித்தார்

    என் சப்த நாடிகளும் அடங்கி நின்றன!!

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 49

    –சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

     

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

     

    நீ அழுத்திக் கேட்கும் போது சிரியன் தேசம் ரொட்டியைச் சொத்தைப் பற்களால் கடித்து ஒவ்வொரு கவளைத்தையும் நச்சு உமிழ் நீரில் கலந்து நாட்டின் வயிற்றில் நோயைப் பரப்பிப் பதில் உனக்குக் கூறுகிறது, “ஆம் ! அவர்கள் தரும் நல்ல மயக்க மருந்துகளையும், சொத்தைப் பல் குழி நிரப்பிகளையும் நாங்கள் தேடிக் கொண்டி ருக்கிறோம்” என்று.
    கலில் கிப்ரான். (Decayed Teeth)
    ___________________

    எனக்கில்லை முற்றுப் புள்ளி !
    ___________________

    நான் அறிவேன் இந்த
    நளின மணப்பெண்
    பூமியை !
    இயற்கை எழிலைப் பெருக்க
    இந்த மனிதன்
    செயற்கை யில் சூட்டும்
    எந்த ஓர் ஆபரணமும்
    இனித் தேவை இல்லை
    இந்த பூமிக்கு !
    ___________________

    குன்றுகளில் மின்னும்
    விலைமதிப் பற்ற கற்களும்
    கடற்கரை களில்
    காணப்படும் பொன் மணலும்,
    பரந்த நிலத்தில் தெரியும்
    பச்சைப் புல்வெளிகளும்
    போதும் என்று கூறுவது
    பூமிக்குத் திருப்தி !
    ___________________

    என்றாலும் பூமியின்
    சீற்றத்தை
    எள்ளி நகையாடி
    பேரழிவுக்கும்,
    பெருஞ் சினத்துக்கும்
    இடையே
    தெரியுது எனக்கு :
    எதிர்த்துக் கொண்டு
    மனிதன் தனது
    தெய்வீகச் சக்தியில்
    நிற்பது !
    ___________________

    Share
  • படக்கவிதைப் போட்டி 47-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய புகைப்படத்தை எடுத்துத்தந்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், இப்படத்தைப் போட்டிக்கு ஏற்றது என்று தேர்வுசெய்துதந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமையின் நன்றி.

    sleeping buddha

    புவிவாழ் மாந்தர்கூட்டம் நித்தமும் படுந்துயர்கண்டு புத்தரும் மனம்சோர்ந்து நித்திரை கொண்டனரோ? என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது இந்தப்படத்தைப் பார்க்கும்போது!

    புத்தரின் துயில்கோலம் நம் கவிகளின் மனங்களில் எத்தகைய சிந்தனை அலைகளை எழுப்பியிருக்கின்றது என்று அறிந்துவருவோம்!

     ***

    ”அடடா…! மக்களெல்லாம் ஆசையைத் துறந்திட்டார்; அன்பை அணைந்திட்டார்; சமூகமெங்கிலும் சமாதானப் பூக்களின் மணம்! எனும் சுகமான கனவொன்று காண்கின்றார் புத்தர்” என்று விளம்புகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அடடா,
    அகிலத்து மாந்தரெல்லாம்
    ஆசை துறந்திட்டார்,
    அன்பைத் துணைகொண்டார்..

    மாறிவிட்டனர் மனிதர்கள்,
    வேறுபாடுகள் இல்லை
    வெட்டுகுத்துகளும் இல்லை,
    எங்கும் எதிலும் சமாதானம்..

    மனிதனிடம் நோய்நொடி இல்லை
    மரணமும் இல்லை அவனுக்கு,
    நிரந்தரமாகிவிட்டான் மண்ணில்..

    இருந்துகொண்டே கனவுகாண்கிறார்
    புத்தர்,
    இதழில் புன்னகை மிளிர…! 

    *** 

    ”ஆசை அறுமின்காள்!” என்று வையத்தைப் பார்த்து நான் அறைகூவல் விடுக்கின்றேனே…! மக்களின் ஆசைகள் அறுபடவேண்டும் என்று நான்மட்டும் ஆசைப்படல் முறையோ?!” என்று தன் அறியாமையை எண்ணித் தன்னுள் நகைக்கும் புத்தரை நம்முன் நிறுத்துகின்றார் திரு. மெய்யன் நடராஜ். 

    ஆசைகளைத் துறக்கவேண்டும் என்று 
    ஆசைதானே பட்டிருக்கிறேன் நான் 
    ஆழ்ந்து சிந்திக்கும் எனக்கே  
    என் அறியாமையைப் பற்றி 
    சிரிப்பாக இருக்கிறது.

     *** 

    ”மோகனப்புன்னகை பொலியும் புத்தரின் திருமுகம் மோனத்துயில் கொண்டதேன்? எத்தனை போதித்தும் இத்தரை மானுடர் எள்ளளவும் திருந்தவில்லையே… எனும் விரக்தியால் இருக்குமோ?” என்று ஐயுற்று வினவுகின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

     
    சித்தார்தரா அவரைப் பின்தொடரும்
    பக்த பிக்குணியா பால
    தேரோவா! பல கேள்விகள்
    தேரோடின காட்சியால் என்னுள்.
    எதுவும் கடக்குமெனும் சாந்தம்
    பொதுப் போதனை வதனம்
    மதுமிகு மோகனப் புன்னகை
    அது இறவாப் புன்னகை.

    அத்யந்த சயனம் கொண்ட
    அரசமரத்தடிப் புத்தர் எப்போது
    அமர்ந்த நிலையில் மறுபடி
    அழகு சயனம் கொண்டார்!
    தீராத நாட்டுப் பிரச்சனையால்
    பாராத முகமாய் அவர்
    இவர்கள் திருந்தார்கள் என்று
    நிகர்வில்லா ஆழ்ந்த உறக்கமா!

    மோனப் புத்தன் தூக்கம்,
    தானம் வாங்கும் தேரோக்கள்
    வானம் வெளிக்குமா! தமிழ்
    கானம் இலங்கையெங்கும் கேட்க!
    புத்தன் போதனை நாட்டில்
    சத்தின்றிப் போனது ஏன்!
    உத்தம புத்தம் ஏனோ
    மொத்தமாய்ப் பின்பற்றப் படவில்லை!

    ***

    ”தன்னுடைய பல்லையும் அங்கியையும் கேசத்தையும் புனிதப்படுத்தியோர், தான்போதித்த நேசத்தையும் நல்லறத்தையும் சேதித்து மனிதத்தை மரணிக்கவைத்துவிட்ட ஆயாசத்தில் புத்ததேவனும் நீடுதுயில் கொண்டான் போலும்!” என்பது திரு. இளவல் ஹரிஹரனின் அனுமானம்! 

    இளைப்பாறுதல்
    போதி தேவனுக்கும் தேவை….
    கால்கள் நோவ
    கால தேசங் கடந்து
    போதனைகள் பரவிய அளவு
    புனிதம் பெருகவில்லை
    என்ற ஆயாசம்….

    பல்லையும் முடியையும்
    அங்கியையும் அடியினையும்
    புனிதப்படுத்திய அளவு
    மனிதத்தை மறந்து
    புனிதத்தை இழந்தனரே
    என்ற ஆயாசம்….

    புத்தமும் சங்கமும்
    தர்மமும் போயினவோ
    பழங்கதையாய்…….

    யுத்தமும் பிரிவினையும்
    அதர்மமும் பெருகினவோ
    புதுக்கதையாய்……

    பட்டுப்போன போதிமரம்
    பால்சுரக்காதோ எனும்
    பரிவின் ஏக்கப் பெருமூச்சில்
    இன்னும் கொஞ்சம்….
    இன்னும் கொஞ்சம்….
    ஆயாசம் நீண்டு
    நீள்துயில் கொள்ள வைத்ததோ
    புத்த பகவானே.
         

    ***

    புத்தரின் அறிதுயில் காட்டும் மோனத்திருவுரு, நம் கவிஞர்களுக்குள் உறங்கிக்கிடந்த பல அரிய சிந்தனைகளைத் தட்டியெழுப்பியிருப்பதைக் கண்ணுற்று மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்! 

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரையும், பாராட்டுக்குரிய கவிதையையும் அடுத்துக் காண்போம்! 

    ஞானி என்பவன் தன் அகத்துள்ளே மட்டும் தன்னைத் தேடுவதோடு நின்றுவிடுவதில்லை! அவன் தேடலின் பயணம்,

    ”நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரள வின்றே…” எனும் சங்கக்காதலுக்கு ஒப்பான அகலமும் ஆழமும் உயரமும் கொண்டதாய்ப் புறத்தேயும் விரிந்து பரந்தது. அவ்வாறு தன்னைத்தேடித் தானே பயணிக்கும் புத்தனின் முடிவற்ற தேடுதல் பயணத்தைப் பாடுபொருளாக்கியிருக்கும் கவிதை என்னைக் கவர்ந்தது.

    அக்கவிதை… 

    திசை வேண்டாத
    பறவையாய்
     
    ஒரு மாய பயணத்தில்
    புன்னகை மாறாமல்
    அமர்ந்திருக்கிறான் அவன்

    அவனின்
    இருத்தலில்
    அன்பென்ற பூக்கள்
    ஆகாயம் வரை
    வளர்ந்து கொண்டேயிருக்கிறது

    கேட்டதற்கு
    புத்தனைத் தேடி
    பயணம் என்றான்
    தொடர்ந்தபடி

    நன்றாக தெரியும் 
    போதியில் போதனை
    சொன்ன புத்தன்
    இவன் தானென்று…!

    இருந்தும் தன்னை
    வெளியில் தேடுவதும்
    தொடர்வதும்
    எதற்கான தொடக்கம்
    என்று
    யோசித்தேன்

    சட்டெனப் புரிந்ததில்
    காலம் உதறி,
    கர்வம் உதறிப்
    பின்தொடர்ந்தேன்,
    ஒரு புத்தனாக…! 

    காலமும் கர்வமும் உதறி, தன்னைக் கண்டடைதல் எனும் புண்ணியப் பாதையில் புத்தரின் பயணத்தை நீட்டித்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. கவிஜியைச் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துள்ளேன். பாராட்டுக்கள் கவிஞரே!

     ***

    இந்தியத் திருநாட்டில் கருவாகி, உருவாகி, உச்சந்தொட்ட புத்தம், ஈழத்து மண்ணில் சருகாகிக் கருகி மரணித்த அவலத்தை அலசியிருக்கும் கவிதையொன்று நாடி நரம்புகளில் வேதனை மின்னலைத் தெறிக்கவிட்டது.

    அக்கவிதை…

    துக்கமுற்று, துயருற்று
    புத்தர் மகான்
    துஞ்சுகிறார் நிரந்தரமாய்,
    ஏக்கமுற்று மனது 
    வீக்கமுற்று
    இந்தியாவில் பிறப்பு!
    ஈழத்தில் மரிப்பு
    நீதி, நெறி வற்றிப் போன 
    இலங்கா புரியிலே
    ஈவு, இரக்க மின்றி
    பல்லாயிரம் தமிழ் மக்கள் 
    மானம் இழந்தார்!
    ஊனம் உற்றார்!
    உயிரிழந்தார்!
    உடல் உறுப்பிழந்தார்!
    உடைகள்
    உறிஞ்சப் பட்டார்!  
    கற்பிழக்கப் பட்டார்
    கால், கைகள்
    வெட்டப் பட்டார்!
    முலை அறுக்கப் பட்டார்!
    தலைகள் 
    துண்டிக்கப் பட்டார்
    விடுதலை
    வேண்டிப் போராடி யதற்கு!
    ஆண்டாண்டு 
    தோறும்
    சரித்திர  நாயகி 
    கண்ணீர் கொட்டி நமக்குக்
    கதை சொல்வாள் !
    ஈழத் தீவில்
    மீளாத் தூக்கத்தில்
    விடை பெறுகிறார்
    போதி மரப்
    புத்தர்! 

    சிங்களத்தீவு, புத்தர் வகுத்த அன்புக்கும் அகிம்சைக்கும் மங்களம் பாடி, பவுத்தத்தை மீளாத் தூக்கத்தில் ஆழ்த்தியிருப்பது உள்ளுந்தொறும் வேதனையை மிகுவிக்கும் ஒன்றாகும். அதனை உள்ளந்தொடும் வண்ணம் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. ஜெயபாரதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியது என அறிவிக்கின்றேன்.

    சொல் புதிதாய்ச் சுவை புதிதாய்ச் சோதிமிக்க நவகவிதை படைத்துவரும் கவிஞர் குழாத்துக்கு மீண்டும் என் பாராட்டும் நன்றியும்!

     

     

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: சுரத்திடைப் பெய்த பெயல்

     

    கரப்புடையார் வைத்தகடையும் உதவா
    துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்
    நிரப்பிடும்பை மிக்கார்க் குதவஒன் றீதல்
    சுரத்திடைப் பெய்த பெயல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கரப்பு உடையார் வைத்த, கடையும் உதவா,
    துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால்,
    நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்-
    சுரத்திடைத் பெய்த பெயல்.

    பொருள் விளக்கம்:
    (வறுமையில் வாடுவோருக்குக் கொடுத்து உதவாது) ஒளித்து வைப்பவரின் செல்வம் இறுதியில் அவர் சந்ததிக்கும் உதவாது போகும். (பின்னர் புதையலாக அது கண்டெடுக்கப்பட்டு) பகைவரைத் துரத்தி விரட்டும் தொழிலைச் செய்யும் அரசுக்கு உரிமை உடையதாக உலக வழக்குப்படி சென்று சேரும். அவ்வாறின்றி, வறுமையில் துன்பம் மிகக் கொண்டவருக்கு உதவுமாறு அப்பொருள் மூலம்  ஒரு உதவி செய்வது வறண்டப் பாலை நிலத்திற்குப் புத்துயிர் ஊட்டும் மழைக்கு ஒப்பாகப் பயன் அளிக்கும்.

    பழமொழி சொல்லும் பாடம்: செல்வத்தை மறைத்து வைக்காமல், வாடும் வறியவர்க்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் கொடுத்து உதவுவதே சிறந்த ஈகையாகும். தேடிச் சேர்த்த பொருளைத் தக்கவருக்கு உதவப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தைத் திருக்குறள்,

    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள்: 212)

    ஒருவர் முயன்று சேர்க்கும் செல்வத்தைத் தக்கவருக்கு பயன்படுமாறு கொடுத்துதவ வேண்டும் என்று விளக்குகிறது.

    Share
  • நல்வழியில் நடக்கும் தொல்குடி!

    -மேகலா இராமமூர்த்தி

    மனிதகுலம் தோன்றிய தொடக்ககாலத்தில் மனிதர்கள் தனித்தனியாகவே வாழ்ந்தனர். காலப்போக்கில் விலங்குகளிடமிருந்தும், மழை, காற்று, தீ முதலிய இயற்கைச் சக்திகளின் இடர்களிடமிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகவே அவர்கள் குழுக்களாய் வாழத்தொடங்கினர். எப்போது குழுக்கள் தோன்றினவோ அப்போதே யார் அதனை வழிநடாத்திச் செல்வது? எனும் கேள்வியும் பிறந்து, ”உடல்வன்மையும் மனத்திண்மையும் வாய்ந்தவொருவனே அதற்குத் தகுதியானவன்” என்ற தீர்வையும் அவர்கள் கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும்.

    பின்னர், மாந்தகுலவளர்ச்சி காரணமாய், ஒரே இடத்தில் அனைவரும் வாழ்வதற்கு இயலாமல் மக்கள் இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் குடியேறினர். அவ்வாறு அவர்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் தொழிலடிப்படையிலான பிரிவுகள் தோன்றின. அவ்வவ்விடங்களில் அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவர்களும் தோன்றலாயினர். இதுவே நாளடைவில் முடியாட்சிமுறையை முகிழ்க்கச் செய்தது எனலாம்.

    தலைவன் ஒருவன்கீழ் ஏனையோர் அடங்கிவாழும் இத்தகைய ஆண்டான் அடிமைமுறைக்கு என்று கால்கோள் நடப்பட்டதோ அன்றே போரும் பூசலும் வேர்கொள்ளத்தொடங்கிவிட்டன. யார் அடுத்துத் தலைவனாகி அனைவரையும் அடக்கியாள்வது? யார் வையமனைத்தையும் தன் கையகப்படுத்துவது? என்ற போட்டியில் ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் சகமனிதரையும் தன்னைப்போல் நேசிக்கும் அன்புடைமையும் மனிதர்களிடம் காணாமற்போயின. இன்றோ… பேராசையற்றவரை, உலகத்தோடு ஒட்டவொழுகும் உயர்ந்தோரை, நிபந்தனையின்றி அனைவரிடமும் அன்புபாராட்டும் நல்லுளம் கொண்டோரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கின்றது! 

    இத்தகைய சூழலில், அன்பும் அமைதியும் அறவாழ்வும் வாழ்வோரை இனிக் காணவே வாய்ப்பில்லையோ என்று நாம் கவலும் வேளையில்… ”ஏன் காணமுடியாது? இதோ நாங்கள் இருக்கிறோம்!” எனும் குரல்கள் நம் காதுகளில் அமுதத்துளிகளாய் விழுகின்றன.

    ஆம்! அறத்தையும் அமைதிநெறியையும் கைக்கொண்டுவாழும் மக்கள் இன்னும் புவிப்பந்தைவிட்டு முற்றாய் அழிந்துபோய்விடவில்லை. அங்குமிங்குமாய்ச் சிலர் இன்னும் இந்நற்பண்புகளுக்கு நீர்பாய்ச்சி வளர்த்துவரவே செய்கின்றனர் என்றறியும்போது நமக்கு ஏற்படும் களிப்பு அளப்பரியது. அம்மேன்மக்கள் யார்? அவர்கள் எந்த நகரத்தில் வசிக்கின்றனர் என்று சிந்திக்கின்றீர்களா?

    அவர்கள் யாரும் நகரத்தில், நவநாகரிக உலகில்வாழும் மேட்டுக்குடியினரல்லர்; கல்வியில் கரைகண்ட அறிஞர்களும் அல்லர். பின்னர் யார்?

    Orang_Asliஅவர்கள் மலேசிய தீபகற்பத்திலுள்ள (Peninsular Malaysia) காடுகளில் வாழும் பழங்குடியினர்! என்ன வியப்பாயிருக்கின்றதா? அவர்கள் வாழ்க்கைமுறையை அறிந்தால் இன்னும் அதிகமான வியப்புக்கு நாம் ஆளாவோம்!

    அப்பழங்குடியினரின் வாழ்க்கைமுறையை அறிந்துவருவோம்! வாருங்கள்!

    ’ஓரங் அஸ்லி’ (Orang Asli = Native people/Aboriginal people) என்றழைக்கப்படும் மலேசியப் பழங்குடியினரில் 18 வகைகள் (18 types of tribes) இருப்பதாய்த் தெரிகின்றது. இவர்கள் 3 பெரும் பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளனர். அத்தகைய பிரிவுகளில் ஒன்று ‘செமாங்’ (Semang). இந்தச் செமாங்கின் ஓர் உட்பிரிவுவே ’பெடக்’ (Batek) என்பது. இப்பிரிவினர் மலேசிய தீபகற்பத்திலுள்ள (Peninsular Malaysia) காடுகள், தாமான் நெகாரா தேசியப்பூங்கா (Taman Negara National Park) மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கின்றனர்.

    பொருளாதாரம்: காட்டிலிருந்து வேட்டையாடியும் சேகரித்தும் கிடைக்கின்ற காடுபடுபொருள்களை விற்றும், அரிதாக, மிகச்சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்தும் ஈட்டும் பொருளே இம்மக்களின் வாழ்வாதாரம். பொதுவுடைமையின் தந்தையான ’கார்ல் மார்க்ஸ்’ வந்து போதிக்காமலேயே பொதுவுடைமைத் தத்துவத்தைப் பின்பற்றுவதைத் தம் கடமையாகக் கொண்டிருப்பவர்கள் இம்மக்கள். ஆம்! தனியொருவன், (இவர்கள்) அனைவருக்கும் பொதுவான நிலத்தைத் தனதென்று உரிமைகோரும் ’ஏகபோக’ முதலாளித்துவக் கொள்கையே இவர்களிடம் கிடையாது. அவ்வளவு ஏன்… அந்தச் சிந்தனையே கேலிக்குரியது எனக்கருதுபவர்கள் இம்மக்கள்! காடும், அதிலுள்ள வளங்களும் அனைவர்க்கும் பொதுவானவை என்பதே இவர்கள் சித்தாந்தம்.

    Batek_girl_and_brotherநம்பிக்கைகளும் கொள்கைகளும்:  ஒரு மனிதன் இன்னொருவனிடம் எவ்வித நியாயமான காரணமுமின்றிச் சினங்கொள்வது, தம்மினத்தவருக்குக் காய்ச்சல், மூச்சுத்திணறல், உடல் பலவீனம், மனவுளைச்சல் முதலியவற்றைத் தருகின்ற ’கெஓய்’ (ke’oy) எனும் நோயைப் பரப்பும் என்று நம்புகின்றனர் இவர்கள். இந்த நோயால் பீடிக்கப்பட்ட ஒருவனை, இதனைப் பரப்பியதாய் மக்கள் நம்பும் இன்னொருவன், நாட்டுவைத்திய முறைகளைக் கையாண்டும், நோயாளியின் மார்பில் குளிர்ந்தகாற்றை ஊதியும் அவனுடலில் குடியிருக்கும் ’கெஓய்’ நோயை விரட்டவேண்டும்.

    இவ்வாறு, முறையற்ற ’வெகுளி’யால் சமூகத்திற்குத் தீங்குசெய்வோர் இச்சமூகமக்களின் ஆதரவை இழப்பர். ’பெடக்’ சமூகமக்களைச் ’சமாதானச் சகவாழ்வை விரும்பும் வேட்டைச்சமூகத்தினர் – 2011’-ஆக (Batek, a peaceful foraging society – 2011) என்று அறிவித்தார் அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையரிலுள்ள டார்ட்மவுத் கல்லூரியின் மானுடவியல்துறையின் கவுரவப் பேராசிரியரும், (Emeritus Professor, Dept. of Anthropology, Dartmouth College, New Hampshire, U.S.A.), பழங்குடியினர் குறித்த ஆராய்ச்சியில் ஆர்வத்தோடு ஈடுபட்டுவருபவருமான பேரா. கிர்க் எண்டிகாட் (Porf. Kirk Endicott)  என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

    போரைத் தவிர்த்தலும், தீர்த்தலும்: இம்மக்களிடையே கருத்துவேற்றுமைகள் ஏற்படுவது மிகக்குறைவு. அவ்வாறு ஏற்படுமாயின், பொதுமன்றில் தங்கள் பிரச்சனை குறித்து விவாதித்துத் தம் கருத்துக்கு ஆதரவு திரட்டுவது இவ்வினத்தாரின் வழக்கம். அம்முறை வெற்றிதராதாயின், கருத்துவேற்றுமை ஏற்பட்ட குழுக்களில் ஒன்று, மற்றொரு குழுவோடு தமக்கு விளைந்த கசப்புணர்வும் அதிருப்தியும் மாறும்வரை – மறையும்வரை, சிறிதுகாலம் தம் சமூகத்தைவிட்டு வெளியேறிவிடுமாம். சிறிதுகாலம் சென்றபின்பே மீண்டும்வந்து தம் மக்களோடு இணையுமாம். ’காலமெனும் மாமருந்து… கோபத்தையும் விரோதத்தையும் ஆற்றும் அருமருந்து’ என்று கண்டறிந்து செயற்படும் இம்மக்களின் உளவியலறிவு பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.

    சமூகத்தில் ஆண், பெண் நிலை: இக்குடியினரில், ஆடவரே பொதுவாக வேட்டைத்தொழிலைச் செய்வோராகவும், பெண்டிர் காய்கனிகளைச் சேகரிப்போராகவும் விளங்குகின்றனர். எனினும், இருவரின் உழைப்பும் சமமாகவே மதிக்கப்படுகின்றது. அரிதாக, வேட்டையில் பெண்டிரும், காய்கனி சேகரிப்பில் ஆடவரும் ஈடுபடுவதுண்டு. ’இந்தத் தொழிலை இவர்தான் செய்யவேண்டும்’ எனும் கடுமையான வரையறையோ, ஆடவரையும் பெண்டிரையும் பால் அடிப்படையில் பிரித்துப்பார்க்கும் நடைமுறையோ இவர்களிடம் இல்லை.

    திருமணங்களும் ஆண், பெண் இருவரின் அன்பின் அடிப்படையிலும் அவர்களிடம் காணப்படும் ஒத்தகுணங்களின் (பொருத்தத்தின்) அடிப்படையிலுமே அமைகின்றன. சமூகத்தின் அடக்குமுறையும், ஆதிக்கமும் காதலுக்குக் குறுக்கேநின்று குந்தகம் செய்வதில்லை. ஒத்த தலைவன் தலைவியருக்கிடையே அமையவேண்டிய ’பத்துவகைப் பொருத்தங்கள்’ குறித்து ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் சொல்வதை இங்கே நாம் பொருத்திப்பார்க்கலாம்.

    ”பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
    உருவு
    நிறுத்த காம வாயில்
    நிறையே
    அருளே உணர்வொடு திருஎன

    முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” (தொல்: பொருள்: 488)

    தொல்காப்பியம் அறியாத்தொல்குடியினரான இவர்கள் அந்நெறி நிற்பது வியப்பே!

    இத்தகைய உளமொத்த காதல்வாழ்விலும், அத்திபூத்தாற்போல், கணவன் மனைவியரிடையேயான உறவில் விரிசல்கண்டுவிடுமானால் அவர்கள் இருவரும் மணவிலக்குப் பெறுவதையும் இச்சமூகம் அனுமதிக்கின்றது. அவ்வாறு மணவிலக்கு நிகழ்ந்துவிடும் சூழலில், மணவிலக்குப்பெற்ற பெண் தன் சுற்றத்தையும் நட்பையும் சார்ந்துவாழ வேண்டியவளாகின்றாள்.

    குழந்தை வளர்ப்பு: ’பெடக்’ சமூகத்தைச்சேர்ந்த பெற்றோர் தம் Batekman1குழந்தைகளைக் கொண்டாடுவதிலும், கொஞ்சுவதிலும், அவர்களோடு நேரம் செலவழிப்பதிலும் மிக்க ஆர்வம் உடையவர்கள். இதில், ஆண்குழந்தை பெண்குழந்தை எனும் பேதமில்லை அவர்களிடம்! பெற்றோர், குழந்தைகளை அடிப்பதும் தாக்குவதும் அரிதினும் அரிது. ஏனெனில் தாக்குதல், கொல்லுதல் எனும் பொருள்களில் கையாளப்படும் ’சேகல்’ (sakel) எனும் சொல், இச்சமூகத்தினரால் கடுமையாக வெறுத்து ஒதுக்கப்பட்ட சொல்லாகும். தாக்குதல் எனும் சொல்லையே வெறுப்பவர்கள் அதனைச் செயலில்காட்ட முனைவரா? குழந்தைகள்விளையாட்டில்கூட முரட்டுத்தனமோ, வன்முறையோ ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவதோ கூடாது என்றெண்ணுபவர்கள் இவர்கள். இவ்வினமக்களைப் பெற்றோராகப் பெறும் பிள்ளைகள் பேறுபெற்றோரே என்று எண்ணத்தோன்றுகின்றது!

    சமுதாய நடைமுறைகள்: இச்சமூகத்தினரில், ஒத்தசெயல்களில் ஆர்வம்கொண்ட பலர் ஒன்றுகூடி அச்செயல்களில் ஈடுபடுதல் வழக்கம். அவற்றிலொன்று மீன்பிடித்தல். எப்போதும் சுறுசுறுப்புடன் திகழும் இம்மக்கள் சோம்பித்திரிவதை விரும்புவதில்லை. ஏனெனில், ஒருவருடைய சோம்பல் இன்னொருவருக்கு வேலைப்பளுவைக்கூட்டும் என நினைக்கின்றனர்.

    சுயமதிப்பீடு: ’கானகமே தம் உறைவிடம்’ என்றெண்ணும் இவ்வினத்தார், தம்மைக் ’கானவராய்’ அடையாளப்படுத்துவதையே விரும்புகின்றனர். காட்டில் எந்த இடத்தில் தங்க விழைகின்றனரோ அங்கே குடிசைபோட்டுத் தங்குவதைத் தம் வழக்கமாய்க்கொண்டிருக்கின்றனர். கானகவாசம் குளிர்ச்சியையும், நல்ல உடல்நலத்தையும் தமக்குத்தருவதாய்க் கருதுகின்ற இம்மக்கள், மரங்களடர்ந்த காட்டைவிட்டு, வெப்பம்மிகுந்த திறந்தவெளிகளில் தங்குவதை விரும்புவதில்லை.

    பகிர்ந்துண்ணல்: ’பெடக்’ சமூகத்தைப் பொறுத்தவரை, தாங்கள் வேட்டையில் சேகரித்த உணவுப்பொருள்கள் அனைத்தையும் பகுத்துண்டுவாழும் பண்புகொண்டோராய்த் திகழ்கின்றனர். தம் இல்லங்களில் சமைக்கப்படும் உணவைத் தட்டிலிட்டு அதனைத் தம் பிள்ளைகளின் தளிர்க்கரங்களில் தந்து, மற்றவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுதல் என்பது இவர்களின் வாழ்க்கைமுறையாய் இருக்கின்றது. பகுத்துண்ணலின் மகத்துவத்தைக் குழந்தைகளும் அறியவேண்டும் என்பதற்கான ஏற்பாடே இது. உணவு மட்டுமல்லாது, இவர்களுக்குப் பரிசிலாய்க் கிடைக்கும் பொருள்களையும்,  வணிகத்தின் வாயிலாய்ப் பெறும்/வாங்கும் பொருள்களையும் இவர்கள் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயங்குவதில்லை.

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
     (322) என்ற வள்ளுவத்தை இவர்கள் எங்குக் கற்றனர்?

    போருக்கும் வன்முறைக்கும் எதிரான அணுகுமுறை: இத்தொல்குடி மக்கள் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள். யாரேனும் பகைவர் தம்மைத் தாக்கவந்தால், எதிர்த்தாக்குதல் தொடுக்காமல் அவர்களிடமிருந்து தப்பியோடிவிடுவதையே தம் வழக்கமாய் வைத்திருக்கின்றனர். இது பயத்தினால் அன்று! பகைவனுக்கும் அருளும் இவர்தம் நன்னெஞ்சில் விளைந்த பாசத்தினால்!

    1988-ஆம் ஆண்டு, பெடக் மக்களை அவர்கள் வசிக்கும் காட்டுப்பகுதிக்கே சென்று சந்தித்த பேராசிரியர் எண்டிகாட், இவ்வினத்தைச்சார்ந்த மனிதன் ஒருவனிடம், “உம்முடைய முன்னோர் ஏன் தம்மைத் தாக்கியோரைத் துப்பாக்கியால் சுடவில்லை?” (“Why didn’t his ancestors shoot the attackers?”) என்று வினவியுள்ளார். அதற்கு அம்மனிதன் சற்று அதிர்ச்சியோடு, ”ஏனெனில், அவ்வாறு தாக்குவது அவர்களைக் கொன்றுவிடுமே!” (“Because it would kill them”) என்று பதிலிறுத்திருக்கின்றான். இப்பதில் அந்தப் பேராசிரியரை மட்டுமன்று…நம்மையும் திகைக்கவைக்கின்றது!

    ”வன்முறை, மற்றவருக்குத் துன்பமிழைத்தல், பழிவாங்குதல் போன்ற இழிகுணங்களை முற்றாய் வெறுத்தொதுக்கிய மக்கள் இவர்கள்!” என்று இவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கும் பேராசிரியர் எண்டிகாட், அண்டையில் வாழும் மலேசிய மக்களால் தமக்கு ஏற்படும் தொந்தரவுகளைத்தவிர்க்க இம்மக்கள் அவ்விடங்களைவிட்டு அகன்றுசெல்கின்றனரேயொழிய அவர்களை எதிர்த்துத் தாக்குதலோ, போரோ புரிவதில்லை என்று பதிவுசெய்திருக்கின்றார் (It was recorded in 1988).

    வான்புகழ் வள்ளுவரின் தெய்வக்குறள் போதிக்கும் இன்னாசெய்யாமை, சான்றாண்மை, ஈகை, ஒப்புரவு, அன்புடைமை, விருந்தோம்பல் உள்ளிட்ட அனைத்து அறப்பண்புகளையும் தம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கின்றனர் மலேசியக் கானகவாசிகளான பெடக் மக்கள்.

    நகரங்களில் வாழ்ந்தால்தான் நாகரிகம் வளரும்; பண்பாடு மிளிரும் என்ற எண்ணத்தில் நகரங்களை நாடிச்சென்று வாழ்ந்துவரும் நாகரிக மனிதர்களிடத்தும், அனைத்து அறநூல்களையும் எழுத்தெண்ணிப் படித்துவிட்டோம் என்று தருக்கோடும் செருக்கோடும் செப்பித் திரியும் மெத்தப்படித்த மேதைகளிடத்தும் காணக்கிடைக்கா அரும்பண்புகள், ’கானவர்’ என்று தம்மைப் பெருமிதத்தோடு புகலும் படிப்பறியா, உலகின் பாடறியா இத்தொல்குடியினரிடம் நிறைந்து கிடக்கின்றது!

    காட்டில் வாழ்ந்தாலும், கல்வியில் (நகர்வாழ் மக்களினும்) தாழ்ந்தாலும், நயத்தகு நாகரிகத்திலும், வியத்தகு (மாந்தப்) பண்புகளிலும் நாடுவாழ் நல்லறிஞரினும், காடுவாழ் இத்தொல்குடியினர் பன்மடங்கு உயர்ந்துநிற்கின்றனர். இத்தகையோராலேயே மானுடம் வெல்கின்றது!

    *** 

    கட்டுரைக்கு உதவியவை:

    https://en.wikipedia.org/wiki/Orang_Asli
    https://en.wikipedia.org/wiki/Batek_people
    https://cas.uab.edu/peacefulsocieties/societies/batek/

     

     

    Share
  • பொங்கல் திருநாளும் வந்ததே!

    -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    அகமோடு முகமும்   மலர
    ஆதவனை வணங்கி வரவேற்று
    இல்லத்தில் பொங்கல் வைத்து                         pongal4
    ஈடற்ற மகிழ்ச்சி தானும் பொங்க
    உள்ளத்தே நல்லன மட்டும் விதைத்து
    ஊராரோடும் நாம்தான் ஒன்றுகூடி
    எப்போதும் சமத்துவமே மேலோங்க
    ஏகமனதுடன் வாழ்த்துக்கள்  பரிமாறி
    ஐ! நம் தை மகளுக்கும் நன்றிசொல்லி
    ஒப்பற்ற சமுதாயம் உருவாகவே
    ஓயாது நாமும் தான் பாடுபடுவோம்!
    பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவர்க்கும்!

    வாழ்க வளமுடன்!

     

     

    Share
  • வளவன் கனவு (27)

    சு. கோதண்டராமன்

     நல்லூர்ப் பெருமணம்

     vallavan-kanavu11

    காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
    ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே
    -சம்பந்தர்.

    வயது பதினாறு ஆயிற்று. சம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார் தந்தை. எல்லோரையும் போல இல்லறத்தில் ஈடுபட்டு இன்பம் அனுபவிக்கவா அவர் அவதரித்தார்? இறைவன் தன்னை எதற்காக இந்த உலகிற்கு அனுப்பினான் என்பதை அவர் அறிவார். இறைவன் வழிகாட்டுவான் என்ற நம்பிக்கையில் இருந்ததால் தந்தை சொல்லை மறுக்கவும் இல்லை. நல்லூர்ப் பெருமணம் என்னும் தலத்தில் கோயிலில் இறைவன் திருமுன்பு திருமணம் நிறைவேறியது.

    “நல்லூர்ப் பெருமணத்தில் உறைகின்ற ஈசா, கல்லூர்ப் பெருமணம் (அம்மி மிதிக்கும் சடங்கு) எனக்குத் தேவையா? இத்தனைத் தலங்களில் உன்னை நான் பாடினேனே, என்றாவது எனக்குத் திருமணம் செய்து வை என்று கேட்டதுண்டா? என்னை இந்த உலகிற்கு அனுப்பிய நோக்கத்தை நான் நிறைவேற்றி விட்ட நிலையில் இல்லறத்தில் ஈடுபடுத்திச் சோதனை செய்கிறாயே” என்று பாடினார்.

    பின் தான் இத்தனை காலம் ஊர் ஊராகப் போய்ப் பிரசாரம் செய்ததின் சாரத்தை மீண்டும் நினைவுபடுத்துவது போலப் பாடத் தொடங்கினார்.

    “நான்கு வேதங்களின் சாரமாவது நமச்சிவாய மந்திரம்தான். அதை நாள் தோறும் ஓதுங்கள், அன்புடன் ஓதுங்கள், உள்ளம் உருகி ஓதுங்கள். கடுமையான பாவங்களும் நீங்கும், மீண்டு் பிறவா நிலையான முத்தி கிடைக்கும்” என்று பாடிப் பதிகத்தை முடித்துவிட்டுத் தன் அவதார நோக்கம் நிறைவேறியதை அறிவிக்கும் வகையில் அனைவருடனும் சிவ ஜோதியில் கலந்தார் காழியர் கோன்.

    காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித்
    தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்
    நாதன்எழில் வளர்சோதி நண்ணிஅதன் உட்புகுவார்
    போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்.
    -சேக்கிழார்

    28.  கனவு பலித்தது

    தன் வம்சத்தவர் அனைவரும் சிவபாதசேகரர்களாக இருப்பது பற்றி விண்ணுலகில் செந்தீ வளவன் பேரானந்தம் அடைந்தார். “என் கனவு பலித்துவிட்டது. சோழ நாட்டில் மட்டுமன்றி தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் சமணம் முற்றிலும் அழிந்துவிட்டது. இனி, மக்கள் கலாசார வளர்ச்சிக்கான நல்ல பண்புகளைப் பெறுவார்கள். ஆடல், பாடல், ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்கள். சோழரின் படை வலிமை சிறக்கும். தமிழகம் முழுவதும் சோழர் ஆட்சியின் கீழ் வரும். கடல் கடந்தும் வெல்வார்கள். இதை எல்லாம் சாத்தியமாக்கிய மகாதேவர் புகழைப் பறை சாற்றுவதற்காக உலகிலேயே பெரிய லிங்கம் அமைப்பார்கள். வானை முட்டும் விமானங்கள் கட்டுவார்கள். சோழப் பேரரசு அழிந்தாலும் செயற்கரிய சாதனையான இந்தக் கோயில்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு நின்று சோழர் பெருமையைப் பரப்பிக் கொண்டிருக்கும். அரன் நாமமே சூழ்க, வையகம் துயர் தீர்க” என்று வாழ்த்தினார்.

    முற்றும்

     

    Share
  • நினைவுகளுடன் ஒருத்தி

                      ———சீதாம்மா————————————–

    பொங்கல் திருநாள்

    pongal4-25

    ஒருவருக்கொருவர்  வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்வோம்

    இயற்கையின் சீற்றத்தில் இழந்தது எத்தனை எத்தனை?!

    பயிர்களும் தவித்து துவண்டதே

    ஆனால் இப்பொழுது எல்லோர் முகங்களிலும் ஓர் மலர்ச்சி

    மனத்தில் வாட்டமிருப்பினும் சொந்த பந்தங்களுடன் கூடியிருப்பது மகிழ்ச்சி

    இதுதான் வாழ்க்கை

    இது பொங்கல் வாழ்த்து மடல்மட்டுமல்ல. ஓர் மூதாட்டியின் மனக்குரலின் ஓசையும் கூட.    ஆம்   … ஓர் புதிய தொடரின் தொடக்கம்

    எழுதுவதை நிறுத்தி ஏறத்தாழ இரண்டாண்டுகள்  ஆகப் போகின்றன

    ஏன் இப்பொழுது எழுதத் தொடங்கினேன்?

    அது ஓர் தீவு. ஏரிகள் சூழ்ந்த ஓர் திடல் அங்கு நான்கு வீடுகள்.

    அத்திடலிலும் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஓர் பெரிய மரவீடு. அதன் பின்னும் ஓர் சின்ன ஏரி. ஓர் நீச்சல்குளமும் உண்டு. எத்தனை பறவைகள். கொக்குகள் வந்து கொஞ்சும். அணில்கள் துள்ளி விளையாடும்.  இவைகள் மட்டுமா? விதம் விதமான பாம்புகள். முதலையும் அவ்வப்பொழுது வரும்.  அந்த வீட்டில் ஒர் அறை. அதற்குள் ஒருத்தி. இயக்கங்களின் இயலாமை. உலகமெல்லாம் சுற்றிப் பறந்த ஓர் பறவை தங்கக் கூண்டில் அடைப்பு.

    அப்பப்பா, கொடுமை! முதுமை இவ்வளவு கொடியதா?  வாழ்வியலில் பன்முகம் தெரிந்தவள். அவளே திணறினாள். சுருண்டாள். அழுதாள்  ஒடுங்கிப் போயிருந்த அவளை மனக்குரல் தட்டி எழுப்பியது. அனுபவங்களின் சக்தி அவள் மனச் சிமிழைத் திறந்தது.. சிறிது சிறிதாக அவளிடம் ஓர் புத்துணர்வு.  அவள் துவண்டு போக மாட்டாள்.   மரணத்தையும் வரவேற்கும் வலிமை பிறந்துவிட்டது.

    முதுமையில் துணையிருப்பது நினைவுகள்

    உண்மை

    வாழ்வியல் தத்துவம்

    முயற்சிகளில் ஒன்றாக உங்கள்முன் வந்திருக்கின்றேன். என் நினைவுகளைப் பதிகின்றேன். எந்தப் பதிவிலும் ஓர் செய்தி இருக்கும். அதை உங்கள் ஆழ்மனத்தில் வைத்து பூட்டி வையுங்கள். உங்களுக்கும் பின்னால் உதவும்.

    அடிக்கடி சந்திப்போம்.

    ( கண்பார்வை மங்கிவிட்டது. விரல்கள் நடுங்குகின்றன எனவே எழுத்துப் பிழையைப் பொருத்தருள வேணடிக் கொள்கின்றேன்.)

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-10

    மீனாட்சி பாலகணேஷ்

    புலியும் அம்புலியும்!

    காலங்கள் மாறினும் சிலகாட்சிகள் மட்டும் மாறுவதேயில்லை! மாறாதகாட்சிகளாயினும் அவற்றின் புதுமையும் இனிமையும் நெஞ்சை மகிழ்விக்கவும் நெகிழ்விக்கவும் தவறுவதேயில்லை! நாம் எதனைப்பற்றிப் பேசப்புகுந்தோம் தெரியுமா? வாருங்கள், இதோ காணலாம் ஒரு இனிய இலக்கியச்சித்திரத்தினை!

    இந்தப் பெரியமாளிகையின் நிலாமுற்றத்தில் பரபரப்பும், ஓடியாடுதலும் இன்று மிகுந்துகாணப்படுகின்றது. ஏன் தெரியுமா? இன்று பௌர்ணமி எனப்படும் முழுநிலா மாலை. மாளிகைப் பணிப்பெண்கள் அனைவரும் நிலாச்சோறு உண்பதற்கு ஏற்பாடுசெய்ய ஓடியாடிக்கொண்டுள்ளனர்; அன்னையின் கையில் சிறு பெண்குழந்தை, பாலன்னத்தை வெள்ளிக்கிண்ணத்திலிருந்து எடுத்து அன்னை வானில் எழுந்து பளிச்சிடும் நிலாவைக்காட்டிக் கதைகூறியபடியே குழந்தைக்கு ஊட்டுகிறாள். இரண்டு கவளங்கள் உண்டகுழந்தைக்கு, அந்தப் பால்போலும் அழகுநிலாவிடம் ஆர்வம் மிகுகின்றது.

    “அம்மா, அம்புலிமாமாவை என்னோடு விளையாட இங்கே அழைத்துவாயேன்,” என ஒரு மாபெரும் கட்டளையை இடுகிறாள் இந்தச் சுட்டிச்சிறுமி. அரசிளங்குமரியல்லவா இந்தக் கிள்ளைமொழிக்குழந்தை? உடனே நிறைவேற்றவேண்டாமா?

    பணிப்பெண்கள் சாம, தான, பேத, தண்ட உபாயங்களை மாற்றிமாற்றி உபயோகித்து, அம்புலியைத் தங்கள் சிறுமியுடன் விளையாட வருமாறு அழைக்கின்றனர். அம்புலி அவ்வளவு எளிதாக வந்துவிடுமா என்ன? அவனும் செருக்குற்று நிற்கிறான். ‘இவர்களழைத்து இந்தச்சிறுமியுடன் நான் விளையாடப்போக வேண்டுமோ? நான் உலகிற்கே தலைவனான சிவபிரானின் சடையில் குடியிருப்பவன், இப்பெண்கள் என்னை மிரட்டி விரட்டினால் விரட்டட்டுமே, பார்த்து விடலாம்,’ என மெத்தனமாக இருக்கிறான்!

    தானத்தையும் (அதாவது நீ கீழிறங்கி இக்குழந்தையுடன் விளையாட வந்தால் என்னென்ன பெறலாம் எனக்கூறுவது) பேதத்தையும் (வராவிடில் எதையெல்லாம் இழக்க நேரிடும் எனவும் கூறுகிறாள்) கலந்து விரவி அழகான சொல்விளையாட்டாகப் பல கதைகளைப் பகிர்ந்துகொண்டு, அம்புலியைக் கூப்பிடுகிறாள் பாடலில் வல்ல செவிலித்தாய் ஒருத்தி! அவற்றைக் கொஞ்சம் கேட்கலாமா?

    “என் நாதன் ஒரு வெம்புலியைத் தோல்உரித்தனன்; நாமும் அவனுக்கு ஈடாக ஒரு வண்புலித்தோலை உரிக்கலாம் என்று இவள் உன்னைக் கூப்பிடுகிறாள் என்று அச்சங்கொண்டு வராமல் இருக்கிறாயோ அம்புலியே!” என்கிறாள்.

    உடனே மற்ற பெண்கள் அவளைச் சூழ்ந்துகொண்டு, “அதுவென்ன ஐயன் புலித்தோல் உரித்த கதை! எமக்கு முழுமையாக இக்கதையினைக் கூறுவாய்” எனக் கேட்கலாயினர். அவளும் நயம்பட அதனைக் கூறுகிறாள்!

    10a157d8-614f-4855-aefc-201cbf1fa4be
    “புலிக்கால்முனிவரான வியாக்கிரபாதர், பதஞ்சலி எனும் முனிபுங்கவர் ஆகியோர் போலும் அருந்தவமுனிவர்கள் போற்றும் சிறந்த ஊர் திருப்புலிநகர் ஆகும். அவ்வூரின்கண் சிவ அபராதம் செய்தவர்களை வாளால் கண்டனம்செய்த கோட்புலிநாயனார் என்னும் பெருமைமிக்க ஒரு அடியார் இருந்தார். அவ்வூரில் வாழ்ந்த வள்ளல்தன்மை மிகுந்த மற்றொரு அடியார் சிறப்புலி நாயனார் ஆவார். இவர்களுக்குப் பேரருள் செய்தவன் நமது சிவபெருமான்.

    “ஒருநாள் நமது உமையம்மை ஐயனிடம் ஏதோ காரணத்தினால் ஊடல் கொண்டபோது எம்பிரான் என்னசெய்தார் தெரியுமா? அவளது ஊடலைத் தீர்க்கும்வகையில் அவளைத் தன்னுடன் சேர்த்து இறுகத்தழுவிக்கொண்டு அவளை நகைபுரியச் செய்யும்வண்ணம் வினோதமான பல செய்திகளையும், தான் செய்த நகைப்புக்குரிய செயல்களையும் கூறினார்: “யாம் ஒரு புலியின் தோலையுரித்து அதனை எம் இடையில் அணிந்துள்ளதைப்பாராய் தேவி! இது தாருகாவனத்து முனிவர்கள் மிகுந்த கருவம்கொண்டு அபிசார வேள்வி செய்து வரவழைத்து என்மீது ஏவிய கொடியபுலியின் தோல்,” என்று அந்தக் கதையினை நகைத்தவண்ணம் உமையாளுக்குக் கூறினான்.

    659a37b0-9193-42a1-9b3a-5f29d4870d4a
    “அதுகேட்ட நமது உமையவள், “நாமும் ஒரு புலித்தோலை உரித்து நமது நாதனுக்கு ஈடாக வெற்றிச்செயல் செய்யலாம்,” என அம்புலியை அழைக்கிறாள் என்று அச்சம்கொண்டு இந்த அம்புலி சிவபிரானின் தலையை இறுகப்பற்றிக்கொண்டு வராமல் இருக்கிறது போலும்,” எனக்கூறவும், மற்ற நங்கையர் அனைவரும் கரம்கொட்டிக் ‘கலகல’ என நகைத்திடவும், அந்த நிலாமுற்றமே அவர்கள் நகையொலியில் தானும் மிளிர்கின்றது.

    “ஏ அம்புலியே! கேட்டனையோ இந்தக்கதையை? காலம் தாழ்த்தாது வந்தாயானால், இந்தக் கவுரியின் அருளைப்பெற்று உய்யலாம் தெரியுமா?” என்கிறாள் ஒருத்தி!

    “ஒருவேளை அவளுடைய மாற்றாளாகிய கங்கையோடு நட்புபூண்டவன் இந்த அம்புலியாகிய திங்கள்புலி எனச்சினம் கொள்வாள் உமையம்மை எனும் அச்சமோ என்னவோ!” எனச் சிலபெண்கள் குறும்புபேசிக் களிக்கின்றனர்.

    “அதனாலென்ன? ‘இவன் அம்புலி! உன்னோடு விளையாட வந்தனன் தாயே! இவன்மீது சினம்கொள்ளாதே!’ எனக்கூறித் தப்பவைத்துவிடுவோம்! ‘பயப்படாதே நிலாவே! அண்ணாமலையானுக்கு இனியவளான இந்த உண்ணாமுலையுடன் விளையாட வந்துவிடு!” எனக்கூறி அம்புலியை அழைக்கிறாள் மற்றொருபெண்!

    (குந்தலவராளி)

    செம்புலி பதஞ்சலி யெனுந்தவர்கள் போற்றத்
    திருப்புலி நகர்க் கண்டனஞ்
    செய்தருளி வாட்புலி யெனும் பெரிய கோட்புலி
    சிறப்புலிக் கருளுநாதன்
    வெம்புலி யுரித்தன னெனப்புலவி தீரும்வண
    மெய்ப்புலி நகைத்துரைக்கின்
    வெற்றிகொள நாமுமொரு வண்புலி யுரித்துமென
    வேண்டிவரு கென்றெனளெனக்
    கம்புலி யிருத்தியோ தாழாது வருதியேற்
    கவுரியருள் பெற்றுய்யலாம்
    கங்கை யொடு பழகுதிங் கட்புலியே னாவெனைக்
    காயினென் செய்வதென்னி
    லம்புலி யெனச் சொலித் தப்புவிப் பேமுண்மை
    யம்புலீ யாடவாவே
    அண்ணா மலைக்கினிய யுண்ணா முலைக்கனியோ
    டம்புலீ யாடவாவே.

    (உபாயம்- தானம், பேதம் )
    (மெய்ப்புலி- உடலினைப்புல்லி, தழுவி; கம்புலி- சிவபிரான் தலையை இறுகப்பற்றி)
    (திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- அம்புலிப்பருவம்)

    17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த அழகிய பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர் சோணாசல பாரதியார் என்பவராவார். இவர் இன்னும் கார்த்திகைத்தீப வெண்பா, சோணாசலவெண்பா ஆகிய பலநூல்களையும் படைத்துள்ளார். இப்பிள்ளைத்தமிழ்ப்பாடல்கள் பலவிதமான அணிகளையும் கவிதைநயங்களையும் கொண்டு திகழ்கின்றன. இப்பாடலிலும் இப்பிள்ளைத்தமிழ் நூலில் காணும் இன்னும் பலபாடல்களிலும் ‘சொல்பின்வருநிலையணி’ மிக அழகாகக் கையாளப்பட்டுள்ளது. புலி எனும் சொல் பலபொருள்களைக்கொண்டு (புலி- வேங்கை; வாட்புலி, கோட்புலி, புல்லி, தழுவி, திங்கட்புலி, அம்புலி) அமைந்து இனிய சந்தநயத்துடன் பயில்வோருக்குக் கவிதையின்பம் தருகின்றன.

    ********

    அம்புலி வரவில்லை! சேடியரும் சளைக்காமல் பலகதைகளையும் கூறி அவனை வரக்கூவுகின்றனர்.

    செவிலித்தாய் கூறுகிறாள், “அம்புலியே! இந்த மான்போலும் பெண்ணரசியின் கருணையினால் பிரமனும் பாவமொழிந்து உய்ந்தான். உனது பாவத்தையும் இவள் போக்கியருளுவள்; இவளுடன் விளையாட விரைவில் வந்துவிடு.”

    “அந்தக் கதையைக் கூறக்கா,” என மற்ற பெண்கள் துளைத்தெடுக்க, அதனையும் நயம்பட விரித்துரைக்கிறாள் அவள்!

    “திருமகளும் திருமாலும் கூடி ஈன்றெடுத்த மகன் தாமரையிலமரும் பிரமன்; அவன் படைப்புக்கடவுள். அவன் திலோத்தமை எனும் அழகுமிகுந்த பெண்ணைப்படைத்து ஈன்றான். அவளுடைய பேரழகினைக்கண்டு தகப்பனான அவனுக்கே விலங்குபோல அவளிடம் இச்சைபிறந்தது. மானுருக்கொண்டு அவளைத் துரத்தினான்.”

    “ஐயோ! பின் என்னவாயிற்று?” கதை கேட்கும் ஆவலில் இப்பெண்கள் நிலவிடம் இடும் சண்டை சிறிதுநேரம் தடைபட்டு நிற்கிறது!

    “பின் என்ன? எங்கெல்லாமோ ஓடிய திலோத்தமை இம்மலையினை அடைந்து அருணைப்பெருமானைத் துணைசெய்யக் கூவியழைத்தாள். அப்போது அவருடன் இந்தப் பெண்மானான பெருமையுடைய உண்ணாமுலையம்மைதான் வந்தாள். திலோத்தமையை உய்வித்தாள்; அம்மையின் கருணையினால் பிரமனும் தான்பெற்ற பெண்ணை விழைந்த கொடும்பாவம் நீங்கப்பெற்றான். பிழையினை மன்னித்துக் கொடும்பாவத்தினையும் போக்குதல் இவள் இயல்பாகும். ஆகவேதான் அம்புலியினை இவள்பால் வந்து சரணடையக் கூப்பிடுகிறேன்,” என்கிறாள்.

    “அம்புலி செய்த பிழை யாதோ? பாவம் எதுவோ?” அறியாத இளம் சேடியர் செவிலியன்னையை வினவ, அவள் தொடர்ந்து கூறுகிறாள்.

    “இந்தச் சந்திரன் தனது குருவான பிருஹஸ்பதியின் பத்தினியையே விரும்பியவன்; அதுவே அவன் செய்த பெரும்பிழை! ஆயினும் நம் உண்ணாமுலையாளை அடைந்தால் அவனுக்கும் இவள் அருளமாட்டாளா என்ன?”

    “ஆம், அருளுவளே, இந்தச் சந்திரனின் குலத்தில் தோன்றிய ஒரு பாண்டியமன்னன்- வச்சிராங்கத பாண்டியன் என்பவன்- ஒரு குதிரைமீதேறி இவ்வருணாசலமலையின்மீது வேட்டைக்கு வந்தாராம்; பலவிலங்குகளைக் கொன்றுபின் ஒரு புனுகுப்பூனையைத் துரத்தினாராம். புனுகுப்பூனையும் அதனைத் துரத்தியவண்ணம் குதிரைமீது மன்னனுமாக மலையை வலம் வந்தனராம். பயத்தில் பூனை தனது உடலைவிட்டுத் தேவ உருவம் பெற்றதாம். குதிரையும் களைத்துவிழுந்து தேவ உருவம் பெற்றதாம். இருவரும் தேவர்கள் தொழ அங்குவந்த இந்திரவிமானத்திலேறினராம். ‘ஒரு சாபத்தால் இவ்வாறு விலங்குகளாக இருந்தோம். இவ்வருணையைக் கால்களால் வலம்வந்த புண்ணியத்தால் மீளவும் தேவரானோம் என பாண்டிய மன்னனிடம் ‘கால்களால் கிரிவலம் வருதலின் உயர்வை’க் கூறி உணர்த்தினர் என என் பாட்டியார் கூறுவார்களக்கா! ” என்றாள் ஒருபெண்.

    “நிச்சயமாக! தேவர்களும் இத்தலத்தின் பெருமையை நினைந்து வணங்குகின்றனர். இவனுக்குத்தான் என்ன மதியீனம்?” என இகழ்கிறாள் தாய். “உவமானம் அற்ற எங்கள் அருமை மான்விழிக்குமரியான இந்த உண்ணாமுலை, நீ அவளடிகளை அடைந்தால் உனக்குப் பெரிதும் மகிழ்ச்சி தருவாள்; ஆகவே, விளையாட வந்துவிடுவாய் அம்புலியே,” என வேண்டுகிறாள்.

    இப்பாடலில் மான்’ எனும் சொல் விளையாட்டினைக் கண்டு ரசிக்கலாம்!

    “திருமகளெனும் மான் (திரு+மான்) கருமைநிறமுள்ள திருமாலுடன் (கரு+மான்) கூடி ஈன்றெடுத்த மகன் தான் பிரமன். அவன் தான் பெற்ற திலோத்தமை எனும் பெண்மானை, மானுருக்கொண்டு சேர ஆசைகொண்டான். ஓடோடிவந்து திருவருணையை அடைந்த அவள் ‘அருணைப்பெருமானே,’ என முறையிட, உடன் வந்தவள் இந்த மான் (உண்ணாமுலை); திலோத்தமையும் உய்ந்தாள். பிரமன் செய்த கொடும்பாவத்தினையும் அம்மை நீக்கினாள். குருவிற்கிழைத்த பாவத்தை நீ தொலைக்கவும் இவளே அருளுவாள்.

    “ஒரு குதிரையிலேறி (ஒருமான் இவர்ந்து) உனது குலத்தோன்றலான (மருமான்) பாண்டியன் இழைத்த பாவத்தினை (காலாலன்றிக் குதிரைமேல் கிரிவலம் வந்தது) போக்கி, பூனை, குதிரை ஆகியன தேவ உருபெற்று இந்திரவிமானத்திலேறிச் சென்ற மகிமை வாய்ந்த மலையிலுறையும் மான்விழியாளான இந்த உண்ணாமுலை எனும் பெண்மான் உனக்குத்தரும் மகிழ்ச்சி (தருமான்) பெரிதாகையால் அவளோடு விளையாடவா!” என அழைக்கின்றனர்.

    அம்புலி வந்தானோ என்னவோ? நமக்கு படித்து இன்புற அருமையான வித்தாரகவிதையாகக்கிடைத்த இப்பாடல்கள் உள்ளனவே!

    (சுருட்டி)

    திருமான் மகிழ்ந்துபுணர் கருமா னயந்துபெறு
    செய்யமா நளினனீன்ற
    திலோத்தமைப் பெண்மானை யிச்சையான் மானுருச்
    சேருபுது ரத்தவருணைப்
    பெருமா னெனாவந்த வந்தமானிந்தமான்
    பெம்மா னளிக்கவுய்ந்தாள்
    பிரமனும் பவநீங்கி யெத்தினன் குரவற்
    பிழைத்தபவ நீயுமகல்வா
    யொருமா னிவர்ந்துனது மருமா னிழைத்தபவ
    மோவியிந் திரவிமான
    மூர்த்தும்ப ருற்றவித் தலமகிமை யோர்ந்தடையி
    னுவமான மற்றவெங்க
    ளருமான் விழிக்குமரி தருமான் மகிழ்ச்சிபெரி
    தம்புலீ யாடவாவே
    அண்ணா மலைக்கினிய வுண்ணா முலைக்கனியொ
    டம்புலீ யாடவாவே.

    (உபாயம்- தானம்)
    (திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- அம்புலிப்பருவம்)

    (இப்பாடலில் பொதிந்துள்ள சில அழகிய தொன்மங்களை அருணைப்புராணத்திலிருந்து விளக்கியளித்த முனைவர் ஐயா திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்)

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 48

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    மேடைப் பேச்சில் முழக்கிப் பேரரங்கை நிறுவிச் சமூகத்தை ஒன்று கூட்ட அறிவு ஜீவிகளாய்ப் பாவனை செய்யும் சிரியன் தேசத்துச் சீர்திருத்தவாதிகளுடன் சிறிது பேசிப் பாருங்கள் ! அவரிடம் பேசும் போது மாவரைக்கும் யந்திரத்தை விடக் கோரமாகவும் கோடைக் கால இரவில் கத்தும் தவளைகளை விட மேலானக் கீத அரவத்தைக் கேட்பீர் !
    கலில் கிப்ரான். (Decayed Teeth)
    ___________________

    பூமியின் சீற்றம் !
    ___________________

    நான் கண்டேன் இந்தப்
    பராக்கிரம மனிதர்
    கட்டி எழுப்புவதை !
    தகர்க்க முடி யாத
    கற் கோட்டைகள் !
    நான் கண்டேன்
    செம்மைக் கலை ஞர்கள்
    தம் சுவர்கள் மீது
    ஏராள மான ஓவியத்தைத்
    தோரண மாய்
    வரைந் திருப்பதை !
    ___________________

    நான் கண்டேன் இந்தப்
    பூமியை !
    அகண்டத் தனது
    தள வாயைத் திறந்து
    அப்படியே விழுங்கும் சுளுவாய்
    அத்தனைக்
    கைத்திறன் வித்தகரை !
    சிந்தனைச் சிற்பிகள்
    விந்தையாய்ச்
    செதுக்கி வைத்ததை !
    ___________________

    நான் அறிவேன் இந்த
    நளின மணப்பெண்
    பூமியை !
    எழிலைப் பெருக்கு வதற்கு
    இந்த மனிதன்
    செயற்கை யில் சூட்டும்
    எந்த ஓர் ஆபரணமும்
    இனித் தேவை இல்லை
    இந்த பூமிக்கு !
    ___________________

    Share
  • பொங்கல் வாழ்த்துகள்!

    கிரேசி மோகன்

    images

    ”புதியன ஏற்று பழையன போற்றி
    கதிரை குணதிசை காண்போம் -மதிநிறை
    திங்கட் தவம்முடிந்து தைப்பலன் தந்தது
    பொங்கலோ பொங்கலெனப் பாடு’’….

    ”எத்தைநாம் செய்தாலும் பித்தம் தெளியாது
    இத்தரை வாழ்வின் இயல்பது -இத்தையில்
    அத்தைதன் மீசைக்கும் ஆச்சரியம் கொள்ளாதே
    சித்தத்தின் பொங்கல் சழுக்கு’’(குற்றம்)….

    ”கங்குலைப் போக்கும் கதிரவா தைத்திங்கள்
    பொங்கலை வைத்துப் பணிகின்றோம் -எங்களுள்
    பொங்கிடும் காமத்துப் பாலைத் தணித்திடு
    சங்கராந்தி சூர்யா சரண்’’….கிரேசி மோகன்….

    Share
  • ”ஆண்டாள் திருக்கல்யாணம்’’….

    ’’ஆண்டாள் -30’’….
    ————————————-

    ‘’வங்கம் கடைந்தானை வாழ்த்தித் திருப்பாவை
    அங்கம் சிலிர்க்க அளித்தவள், -சங்கரன்(அட சங்கராந்தி வந்துடுத்தே)
    மைத்துனன் நம்பிக்கு மாலை அணிவித்துக்
    கைத்தலம் பற்றினாள்கோ ‘’தை’’(அட தையும் பிறந்து விட்டதே)….கிரேசி மோகன்….

    Share
  • வல்லமையின் போகித் திருநாள் வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    போகி

     

    தமிழர் தம் திருநாளாம்
    தரணி போற்றும் பெருநாளாம்
    தீயன தீயில் தீயும்நாளாம்
    வாழ்வன வரமாகும் போகித்திருநாளாம்
    நல்லன நலமே விளைநாளாம்
    நலிவிலா பலமே வாழ்நாளாம்
    குணமிலா குறுநகை பாழ்நாளாம்
    சருகான சாகசமும் வீழ்நாளாம்
    வரும்நாளெலாம் பாகும் பருப்பும்
    பெருகும் பொங்கல் திருநாளாம்!!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஆண்டாள் -29 ….
    ————————————

    caf5cd3d-704f-498d-b913-cd02c63d9147

    குற்றம் புரிந்தோமே, பெற்றோர்கள், கோவிந்தன்,
    பொற்றா மரைத்தாயார், பக்கமிருந்தும், – மற்றைநம்
    காமங் களாலானோம், காட்டு மிராண்டியாய்,
    ஷேமத் திருப்பாவை செப்பு ….கிரேசி மோகன்….

    Share