Month: August 2016

  • பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி

    நாகை வை. ராமஸ்வாமி

    Neela

    அரும் பெரும் ஐயாறு தியாகராசனும்                                     

    மூவரில் பெருமைமிகு முத்துசாமியும்                                     

    சீர்மிகு சிங்காரி நீலாயதாக்ஷி யுனை                                         

    பாரும் அடி பணிய பாடினரே பாராட்டி

    பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி                                

    சிவராஜதானி கொலுவுறும் சிவமய ராணி                                

    புவனம் காக்குமுன் பூந்தளிர் பதம் போற்றி                               

    தவமுடன் பாடிட எனக் கருள் தந்தனையே

    குவலயம் போற்றும் பாலா நீலாயதாக்ஷி                                                  

    பாலும் தேனும் பஞ்ச அமிர்தமுடன்                              

    கோலாகலமாய்  சுகந்த நீரும் கலந்துன்                                       

    காலடி சேர்த்தோம் ஏற்றிடுவாய் என்னம்மே

    கந்தனும் அண்ணனும் தந்தை தாய் உடனிருக்க                            

    நந்தியவன் மெய்மறந்து சுற்றியே வலம் வர                             

    விந்தைக் கோலமதை புந்தியதில் பதித்தனனே                        

    சிந்தையில் வந்தமரும் சிந்தூர வண்ணவளே

    என்றும் பாவமுடன் ஏலாதிருக்கு மெனை                            

    இன்பமுடன் நின் திருவடி நினைத்திட                                    

    அன்பும் அருளும் தயையும் தந்திடுவாய்                                  

    பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி

    Share
  • வள்ளுவமும் வாழ்வியலும் !

    எம். ஜெயராமசர்மா, B.A Hons, Dip.in.Ed, Dip.in.Soc, M.Phil Edu, SLEAS

    கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர்

    மெல்பேண் . அவுஸ்திரேலியா

     

    வள்ளுவத்தின் சிறப்பு

    தமிழிலே தோன்றிய பல நூல்கள் வாழ்வியலைப் பற்றிய கருத்துக்களை பலவாறு எடுத்துக் காட்டிருக்கின்றன. அவைகள் கூறும் கருத்துக்கள் முழுமையான தாகவோ எக்காலத்துக்கும் ஏற்றனவாகவோ இருகின்றனவா என்று பார்க்கின்ற பொழுதான், திருக்குறளை நாம் கூர்ந்து பார்க்க வேண்டியுள்ளது.வாழ்வியல் சம்பந்தமான கருத்துக்களைப் பகர்ந்து நின்ற நூல்களுக்கு மத்தியில் திருக்குறள் ஒன்றே முன்னுக்கு நிற்கிறது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.

    நூல்களை இரண்டு வகையாகப் பார்க்கலாம். அந்தக் காலத்துக்கு ஏற்றவை, எக்காலத்துக்கும் ஏற்றவை என்று வகைப் படுத்தலாம். இதே வேளை நூல்களைக் கற்கும் வகையிலும் இருவகைப் படுத்தலாம். முதாலாவது எழுதிய காலத்துக்கே சென்று கற்பது. மற்றையது வாழும் காலத்திற்கு வந்து கற்பதாகும். இந்த வகையில் வள்ளுவமானது வாழும் காலத்திலேயே கற்கும் நூலாக விளங்குகின்றது. ஆகையால் தான் பல ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாழ்வியல் நூலாக விளங்கும் பெருமையைப் பெற்றிருக்கிறது.

    திருக்குறள் தான் தோன்றிய காலம் முதல் இன்றளவும் தனித்துவம் மிக்கதாகவே விளங்குகிறது என்பதை எவருமே ஒத்துக் கொள்ளுவார்கள். அந்த அளவுக்கு அதன் அமைப்பும், அதில் சொல்லப்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன.

    பகவத்கீதை வாழ்வுக்கு வழிகாட்டி தான். திருக்குரான் வாழ்வியலைக்  காட்டும் கருத்துக்கள் கொண்டது தான். பைபிளில் கூட வாழ்வியல் கருத்துகள்  காணப்படுகிறது. ஆனால் இவையாவும் சமயம் சார்ந்தனவாக இருக்கின்றன. கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது தான் வள்ளுவம்.

    ஆகவே தான் திருக்குறள் எந்தவிதச் சமயச் சார்பும் கலவாத சமுதாயச் சிந்தனை மிகுந்த நூலாக இருக்கிறது. கூறப்படும் சிந்தனைகளும் யாராலும் கூறப் படாதனவாகவும், புரட்சிகரமானதாகவும்,புதுமையானதாகவும் இருக்கின்றன.

    ஒருநூல் எழுதப்பட்ட காலத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் சில காலத்துக்கு மட்டுமே பொருந்துவதாகவே பெரும்பாலும் இருக்கும். சில வேளை எழுதப்பட்ட காலத்தோடே அக் கருத்துக்களும் வலுவிழந்தும் கூடப் போய்விடலாம். அப்படியான நூல்கள் நிலைத்து நிற்பது என்பது கடினமானதாகவே இருக்கும். ஆனால் எழுந்த காலம் தொடக்கம் இன்று வரை ஏன் இன்னும் பல காலங்களுக்கும் நிலைத்து நிற்கும் அளவுக்குச் சிந்தனைக் கருவூலங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பெருமை  திருக்குறள் நூல் பெற்றிருப்பதால் தான் அது வாழும் நூலாக வாழ்வியலைக் காட்டும் நூலாக இருக்கிறது என்பதை யாவருமே ஏற்றுக் கொள்வார்கள்.

    உண்டோம், உடுத்தோம், உறங்கினோம் , என்பது வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்பது இவற்றுடன் அடங்கி விடுகிறது என்னும் அபிப்பிராயம் பெரும்பாலும் நம்மிடையே காணப்படுகிறது. விலங்களும் சாப்பிடுகின்றன. உறங்கிவிடுகின்றன. நாமும் அப்படியிருந்தால் அதன் அர்த்தம் தான் என்ன? மனிதன் என்றால் அவன் சிந்திக்கத் தெரிந்தவன்.பகுத்தறியும் தன்மை பெற்றவன். அவன் வாழ்வும் விலங்கு வாழ்வும் ஒன்றாகுமா?

    எனவே மனிதனது வாழ்வு இப்படித் தான் வாழவேண்டும்  என்னும் நிலைக்குள் இருந்துவிட்டால் தான் அங்கு வாழ்வியலைப் பார்க்கமுடியும். இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்குப் பல வழிகளைத் தேர்ந்து அவற்றை வழங்கி நிற்பதால் தான் வள்ளுவம் மிகச் சிறந்த வாழ்வியல் நெறியாகி நிற்கிறது எனலாம்.

    வள்ளுவம் காட்டும் வழிகளை உலகிலுள்ள அனைவரும் கடைப்பிடித்தால் மிகவும் உன்னதமான வாழ்வு அவர்களுக்குக் கிடைத்து விடும். யாவரும் அறத்தின் வழியில் வாழுதல்  வேண்டும். அறத்தின் வழியில் பொருள் தேடுதல்வேண்டும். அறத்துடன் அன்பினையும் இணைக்க வேண்டும். அறமும் அன்புமும் இணையும் வேளை அத்துடன் ஒழுக்கத்தையும் சேர்த்துவிடல் மிகவும் முக்கியம் என்பது தான் வள்ளுவத்தின் தத்துவம்.

    வாழ்வியல் முறைகள்

    எப்படியும் வாழலாம் என்று மனம்போன போக்கிலே வாழ்ந்தால் வாழ்க்கை வாழ்க்கையாக இருந்து விடாது. வாழ்வென்றால் அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். குறிக்கோள் அற்ற வாழ்க்கை குருட்டு வாழ்க்கையாகும். சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்குக் கிடைத்திருக்கும் பெரும் வரப் பிரசாதமாகும். பகுத்தறியும் பாங்கு என்பது மனிதனை மாநிலத்தில் உயர்த்தி வைப்பதற்குக் காரணமாய் இருக்கின்றது.

    விலங்காக  மனிதன் விலங்குகளுடன் காட்டில் இருந்த நிலையைக் கடந்து நாட்டில் நாகரிகமாக வாழும் நிலைக்கு வந்து விட்ட பின்னரும் கூட மனிதனாக வாழ எண்ணா விட்டால் மனித வாழ்வுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் அல்லவா?  எனவே கல்வியறிவு என்பது வாழ்வியலின் முக்கிய அம்சமாக விளங்குகின்றது.

    இதனை வள்ளுவம் மிகவும் அழகாக எடுத்துச் சொல்லுகிறது.

      ” எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

         கண் என்ப வாழும் உயிர்க்கு”

      “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

        புண்ணுடையர் கல்லா தவர்”

    தனது அறிவாலும், நூல் அறிவாலும் நுனித்து அறிய வேண்டும். முதற் குறளில் எண் என்பதனை தன்னறி வென்றும் எழுத்து என்பதனை  நூல் அறிவு என்றும் எடுத்துக் கொண்டால் யாவருக்கும் வள்ளுவம் கூறும் பொருள் இலகுவில் புரிந்து விடும். எனவே தன்னறிவும் நூலறிவும் கல்வியால் வருகின்றதை நயமாகக் காட்டும் வள்ளுவம் வழிகாட்டிதானே!

    கல்வி கற்கா விட்டால் கண்கள் இருந்தும் அந்தக் கண்கள் பயனற்ற வாகிவிடும் என்பது இரண்டாம் குறளால் உணர்த்தப்படுகிறது. கண்களால் பொருள்களைப் பார்க்கவே முடியும். ஆனால் பார்க்கப் படுகின்ற பொருளைப் பற்றி அறியவேண்டு மானால் அங்கே அறிவு தேவைப்படுகிறது. அதனைப் பெறுவதற்கு யாவரும் கற்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. கண்ணிருந்தும் விஷயங்களை அறியும் ஆற்றல் இல்லா விட்டால் அது புண்தானே என்று புரிய வைக்கும் வள்ளுவத்தின் பாங்கு தான் அதன் வெற்றி யெனலாம்.

    வாழ்க்கையின் அத்திவாரம் கல்வியாக இருப்பின் அந்தச் சமூகம் தலைநிமிர்ந்த வாழ்க்கையினை வாழும். அறிவு என்பது வாழ்வியலின் அடிப்படையாகும். அதனை வளர்ப்பதற்குக் கற்றல் மிகவும் தேவையானதாகும். கற்கக் கற்க அறிவானது பெருக்கெடுத்துக் கொண்டே வரும்.

          “தொட்டனைத்து ஊறும் மணல்கேணி மாந்தர்க்கு

           கற்றனைத்து ஊறும் அறிவு “

    கல்வியை ஒருதரம் நாம் கற்று விட்டோமேயானால் அந்தக் கல்வியானது நம்முடன் சேர்ந்து ஏழேழு பிறவிக்கும் வரும் என்று துணிவாகச் சொல்லி கற்பதை இலட்சியமாக்குங்கள் என வள்ளுவம் செப்பி நிற்கிறது.

     “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்க

     எழுமையும் ஏமாப்பு உடைத்து”

    இது மாத்திர மல்ல கல்வியானது என்றுமே அழிவில்லாத செல்வமாகி நிற்கும். மற்றய செல்வங்கள் வராவிட்டாலும் கல்விச் செல்வமானது நம்முடன் வந்தே நிற்கும் அருமையும், பெருமையும் மிக்கது என்பது வள்ளுவத்தின் கருத்தாகும்

     “கேடில் விழுச்செல்லவம் கல்வி ஒருவற்கு

        மாடல்ல மற்றை யவை”

    மனிதன் மனிதனாக வாழ சிறந்த வாழ்வியல் என்பதை அடையக் கற்றல் என்பது எல்லோருக்கும், எங்கும், எச்சமூகத்துக்குமே தேவை என்பது வள்ளுவத்தின் கொள்கை எனலாம்.

    ஏன் கற்கவேண்டும்? கல்லாதவர்கள் வாழவில்லையா? குழந்தை பெற்றுக் குடும்பம் நடத்த வில்லையா? உயிரோடு இருக்க வில்லையா? என்றெல்லாம் விவாதங்கள் செய்யலாம். இதற்குச் சரியான பதிலையும் வள்ளும் வைத்திருக்கிறது.

     “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

        கற்றாரோடு ஏனை யவர்”

    விலங்குகள் கற்பதில்லை. அறிவுவளர்சி அற்றன. ஆனால் மனிதனோ அறிவுவளர்ச்சி உடையவன். மக்கள் மக்களாக வாழவேண்டும் என்றால் கல்வியறிவு முக்கியமாகும். உடல்வளர்ச்சி பெற்றுவிட்டால் வாழ்வுவாழ்வாகிவிடாது. அவ்வாறு வாழ்வது விலங்கு வாழ்க்கையே ஒக்கும்.  எண்ண வளர்ச்சிக்கு உரிய நூலறிவு தான் மனிதனை மனிதனாக்கும் என்று வள்ளுவம் சொல்லுகின்றது.

    வள்ளுவத்தின் தனித்துவம்

    அறநூல்கள் பல வந்திருக்கின்றன. அவையாவும் சமயம் சார்ந்ததாகவும்,  தாம் கூறும் அறக் கருத்துக்களை மட்டுமே முக்கியமாகக் கொள்ள வேண்டும் என்னும் தன்மையினவாகவுமே இருந்திருக்கின்றன. இதனால் இவைகள் நல்ல பல கருத்துக்களைச் சொன்னபோதும் அவற்றை மனித அன்றாட நடைமுறைகளுடன் இணைத்து அவற்றை வாழ்வியல் நெறியாக்கும் பாங்கினைப் பெற்று விட வில்லை என்று தான் கொள்ள முடிகிறது. ஆனால் வள்ளுவம் இந்த வகையில் தனித்துவம் பெற்றதாக நிற்கிறது. அறக் கருத்துக்களைத் தாங்கி நின்றாலும் அது எந்தச் சார்பும் அற்றதாகவும் , நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் அமைந்து விடுகிறது. எனவே வள்ளுவம் வாழ்வியல் நூலாகவே விளங்குகிறது. அறநூல் என்பது வேறு. வாழ்வியல் நூல் என்பது வேறு. வள்ளுவம் வாழ்வியல் நூலாக மிளிர்வதனால்  தான், இனம் கடந்து, மொழி கடந்து, நாடு கடந்து, யாவருக்கும் ஏற்றதாக இருக்கிறது என்பது இங்கு நாம் எல்லோரும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். உலகத்திலே இருக்கின்ற அனைவருக்கும் கல்வி முக்கியமானது. அதனை எவரும் தேவையற்றது என்று சொல்லவே மாட்டார்கள். அதே வேளை பொருளும் இன்றியமயாததுதானே! அந்தப் பொருளோடு அறமும் சேர்ந்துவிட்டால் மிகவும் சிறப்பாகவும் இருக்குமல்லவா? இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக ஒழுக்கம் தேவைதானே ! இதுதானே உண்மையான வாழ்வியல் தத்துவம். இதைத் தானே வள்ளுவமும் சொல்லி நிற்கிறது.

    உலகத்திலே கொலை , களவு, கள், காமம், பொய்  இவைகள் இல்லாமல் போகுமானால் அந்த இடம் சொர்க்கமாகத்தானே இருக்கும் ! அப்படி அமைய வேண்டும் என்று வள்ளுவம் ஆசைப்பட்டது. அப்படியான இடத்தில் வாழும் வாழ்வையே “வையத்துள் வாழ்வாங்கு வாழுதல் ” என்று வள்ளுவம் கனவு கண்டது.

    மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால் அவன் தன்னிலையை உணருதல் அவசியமானதாகும். அதற்கு  நிதானமே மிகவும் முக்கியமானதாகும். நிதானம் தவறினால் யாவுமே போய்விடும். நிதானத்தை இழக்கச் செய்வது ” கள் ” ஆகும். இந்தக் கள்ளினால் கொலைவரும், களவுவரும் , கூடவே காமமும் பொய்யும் இணைந்தே வந்துவிடும் என்பது வள்ளுவத்தின் அடிப்படையாகும். இவைகள் யாவும் இணைகின்ற பொழுது வாழ்வியலே கேள்விக்குறியாகி விடும்! ஆகவே மூலகாரணமாக  இருக்கின்ற கள்ளினை முதலில் கைவிடுதல் மிகவும் அவசியம் என்பதை வள்ளுவம் வலியுறுத்தி நிற்கிறது.

              “உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்

              கட்காதல் கொண்டொழுகு வார்”

    கள்ளைக் குடித்தால் மதியை இழக்க நேருவதோடு, இருக்கின்ற பொருள்களோ வலிமையோ எதுவுமே பயனற்ற தாகிவிடும். அது மட்டுமல்ல பெரியவர்கள் கூட குடித்தவர்களை மனிதர்களாகவே மதிக்கவே மாட்டார்கள். எதிரிகள் கூட பயப்படாத நிலையினையும் கூட குடியானது ஏற்படுத்தி விடும் என்று வள்ளும் அறிவுறுத்தி நிற்கிறது

     “ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

       சான்றோர் முகத்துக் களி”

    அன்பைச் செலுத்துகின்ற அன்னை  கூட கள் குடிப்பானை வெறுத்துவிடுவாளாம். அது மட்டுமல்ல அருளைச் செலுத்துகின்ற பெரியவர்களும் கூட குடிப்பவனை விரும்பாமல் வெறுத்து விடுவார்களாம் ! ஏனென்றால் இவர்களுக்கு முன்னாலேயே குடியால் தன்னிலை யிழந்து செய்யக் கூடாதவற்றை எல்லாம் செய்யும் நிலை வந்துவிடுகிறதாம். இதனால் கள்ளானது சமூகத்தில் வாழுகின்ற அதாவது மானத்துடன் வாழமுடியாமலே செய்து விடுவதால் அதனை விலக்குதல் அவசியம் என்பது வள்ளுவத்தின் நிலையாகும்.

    கள்ளினால் வருகின்ற தீங்குபோல் தான் கோபத்தால் வருகின்ற அழிவுமாகும். “கோபமாவது பாவம் ” என்று சாதாரணமாகச் சொல்லுவது வழக்கம்.

        “சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

          ஏமப் புணையைச் சுடும்”

    கோபம் வந்து விட்டால் இன்னார் இனியார் என்று பார்ப்பதே இல்லை. நன்மை தீமை ஆராய்வதில்லை. உதவியவர் என்றோ, சுற்றத்தவர் என்றோ கூடப் பார்ப்பதும் இல்லை. யாருக்குக் கோவம் வருகிறதோ அவரையும் அழித்து அவரை அண்டிய வர்களையும் அழித்து விடும் வல்லமை கொண்டதாகும். நெருப்புக்கு சேர்ந்தாரைக் கொல்லி என்று ஒரு பெயரை வள்ளுவம் காட்டி அதடனுடன் கோபத்தையும் இணைத்துக் காட்டிய பின்பும் கோபம் கொள்ளுவது எந்த அளவுக்கு வாழ்வினை அழித்துவிடும் என்பது எல்லோருக்கும் விளங்கத்தானே வேண்டும். வாழ்வியலுக்குக் கோவம் என்பது கள்ளுடன் சேருமாயின் வாழ்வியல் சிறக்குமா? அதனை வாழ்வியல் என்று சொல்லத்தான் முடியுமா? நிம்மதியுடன் வாழவேண்டும் என்பது தான் வள்ளுவத்தின் நோக்கமேயாகும்.   எல்லாவற்றுக்கும் எங்களின் வாய்ச்சொற்களே காரணமாகிறது என்பதை பொதுவாக எல்லோரும் தெரிந்திருப்பது கட்டாயமானதாகும். இதனை வள்ளுவம் மிகவும் நாசூக்காக எடுத்துச் சொல்லுகிறது.

     “யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

      சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

    எதனைக் காக்காது விட்டாலும் நாவை அதாவது சொல்லும் சொற்களைக் கவனத் துடன் சொல்லுதல் அவசியம். பேசும் வார்த்தைகளே நம்மைப் பெருமைக்கும் சிறுமைக்கும் ஆளாக்க வல்லன வாகும். நாவென்பதைக் காக்கா விட்டால் நாடே நலம் மிழந்தும் விடலாம். வாழ்வே அழிந்தும் விடலாம். இதனால் நாவடக்கம் என்பது மிகச் சிறந்த வாழ்வியல் தத்துவம் என்பதை வள்ளுவம் வற்புறுத்தி நிற்கிறது. இந்த நாகாத்தல்  என்பது உலகம் முழுவதிலும் வாழ்கின்ற அனைவருக்குமே பொருந்துவதாகும்.

    அறம் என்று சொன்னால் அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். மக்களின் வாழ்க்கையில் முதல் ஆதாரமே அறமாகும். அதற்கு அடுத்ததாக பொருளை எடுத்துக்  கொள்ளலாம். மூன்றாவதாக இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். இவை மூன்றுமே மனித வாழ்வியலின் மூல ஆதாரங்கள் என்றே எடுத்துக் கொள்ளுதல் பொருத்தமானதாகும்.

    இவற்றை வள்ளுவம் எல்லோருக்கும் ஏற்ற வகையில் தந்து நிற்பதால் அது நிலைக்கும் வாழ்வியல் வழிகாட்டியாக இருக்கிறது என்பது வெளிப்படையாகும். நாகாத்தல் என்பது மிகச் சிறந்த அறமாகும்.

    வாய்மை என்பதையும் நாவினாலும் , மனத்தினாலும் , காக்கவேண்டும். வாய்மை என்பது வாழ்க்கையின் முக்கிய அறமாகி நிற்கிறது. வாய்மை தவறும் பொழுது வாழ்க்கையே தவறி விடுகிறது.

           “உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

              உள்ளத்துள் எல்லாம் உளன்”

    இது வள்ளுவம் சொல்லும் முக்கிய அறமென்றே கொள்ளலாம். பொய்மை ஒழிந்தால் வாழ்வு பிரகாசமாகும். வாய்மையானது வளர்ச்சி பெறுமானால் வாழ்வு வசந்தமாகிவிடும். வெகுளாமை வாய்த்துவிட்டால் யாவும் அது பெரும் வரமாக அமைந்துவிடும்.

    மன்னிக்கும் பண்பு தான் மனித வாழ்வியலில் எல்லோருக்கும் வேண்டிய ஒன்றாகும். அந்தப் பண்பு குறையும் பொழுதோ அல்லது இல்லாமல் போகும் பொழுதோ மனித வாழ்வு அர்த்த மற்றதாகி விடுகிறது. துன்பம் செய்தாலும் அதனைத் தாங்கி திருப்பி துன்பத்தைச் செய்யாமல் நன்மையே செய்து பாருங்கள் உங்களின் நிலை உங்களை அறியாமலேயே உயரும் .உள்ளுக்குள் ஒரு ஆத்ம திருப்தியே வந்து சேரும் என்னும் வாழ்வியல் தத்துவத்தை வாழும் புதிய அணுகுமுறையை வள்ளும் காட்டி நிற்கிறது.

         “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

             நல்நயம் செய்து விடல்”

    இதனை உலக மக்கள் கைக்கொண்டு வாழ்ந்தால் உலகம் சமாதானப் பூங்காவாக மாறிவிடும் நிலை வந்துவிடுமல்லவா? தனிமனிதன் முன்னேற்றம் சமுதாய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சமுதாயம் முன்னேற்றம் நாட்டுக்கே வழிவகுக்கும். நாடுகளின் முன்னேற்றம் தான் உலக முன்னேற்றமாகப் பரிணமித்து நிற்கும்.

    இதற்கு என்ன தேவை யென்றால் நல்ல வாழ்வியல்முறை தான் தேவை. அந்த வாழ்வியல் முறையை வள்ளுவம் .. இல்லறவியலாகவும், துறவறவியலாகவும், அரசியல் இயலாகவும் , அங்கவியலாகவும், ஒழிபு இயல்பாகவும், இன்ப இயலாகவும், சொல்லி அதன்படி வாழ்ந்தால் வையத்து மாந்தரெல்லாம் வளமுடன் வாழலாம், வாழ்வாங்கு வாழலாம் என்று நம்பிக்கையும் துணிவையும் தந்து நிற்கிறது.

    வள்ளுவத்தின் உன்னதம்

    வள்ளுவம் என்பது மிகச்சிறந்த வாழ்வியல் என்பதை உலகப் பெரியோர்கள் பலர் தமது உள்ளத்தே பதித்து வைத்துள்ளார்கள்.

    “இந்துவுக்கு ஒரு கடிதம்” என்னும் டால்ஸ்டாயின் ஒரு பிரதியில் வள்ளுவத்தின் “அன்பின் வழியது உயிர் நிலை” என்பது மிகவும் சிறப்பாகச் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. இதனை தேசபிதா காந்தியடிகள் பார்த்துவிடுகிறார். அவரும் வள்ளுவத்தில் பெருமதிப்புற்று  – ” வள்ளுவரைப் போல் மிகப்பெரிய ஞானக் களஞ்சியத்தை வழங்கியவர் இந்தவுலகில் எவரும் இல்லை ” என்று நெஞ்சத்தால் போற்றுகின்றார்.

    “இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்”  என்னும் நூலில் –  “திருக்குறள் இல்லாமல் இந்தியச் சிந்தனை என்பது முடிவில்லாததாகும்” என்று ஆல்பிரட்  ஸ்வைட்சர் என்னும் அறிஞர் போற்றி நிற்கின்றார்.

    “ஒழுக்கமே மனிதனுடைய உயர்ந்த குறிக்கோளாக இருக்கவேண்டும்” என்பதை மிகுந்த உறுதியோடு வள்ளுவர் கூறியிருக்கிறார். ஒவ்வொருவரும் தனக்குள்  தானே செய்ய வேண்டிய கடமை என்ன? மற்றவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்ன? என்பனவற்றையெல்லாம் சிறந்த பண்பாட்டோடும், மதிநுட்பத்தோடும், வள்ளுவர் பேசுகிறார். உலக இலக்கியங்களுள் இத்தகைய மாண்புமிக்க மெய்யறிவு வேறு எந்த நூலிலும் இத்தனை சிறப்பாகப் பொலிவுறவில்லை என்று சொல்லலாம் என – உலக அறிஞரான ஆல்பர்ட்  ஸ்வைட்சர் போற்றியுள்ளார் .

     அதுமட்டுமல்ல “பிற இந்திய மொழி நூல்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்துகின்றன. ஆனால் திருக்குறளோ வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உடன்பாட்டினை உணர்தும் நூல்” என்றும் விதந்து கூறுகின்றார். இதிலிருந்து வள்ளுவம் என்பது மிகச்சிறந்த வாழ்வியல் என்பது புலனாகிறதல்லவா!

    பல உலக மொழிகளில் வள்ளுவம் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எதற்காக இப்படிச் செய்யப்பட்டது என்பதை உற்று நோக்குதல் அவசியமாகிறது அல்லவா?  வள்ளுவம் காட்டும் வாழ்வியலை யாவருமே விரும்புகின்றமைதான் இதற்கு முக்கிய காரணமாகும். வள்ளுவம் பற்றி அறிவதற்கு யாவரும் ஆசைப்படுகிறார்கள்.அதுகூட அதன் வாழ்வியல் முறையினால்த்தான் என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகிறது.

    வள்ளுவத்தில் சொல்லப்பட்ட  வற்றைத் தவறாது வாழ்வில் கடைப்பிடிக்கத் தவறுதல் கூடாது. வாழ்க்கையுடன் பொருத்திப்பார்த்து எவற்றைச் செய்தல்  வேண்டுமோ அவற்றைச் செய்து எவற்றைத் தவிர்க்க வேண்டுமோ அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    எப்படியும் வாழலாம் என்று வாழும் உலகமக்களுக்கு இப்படி வாழ்ந்து  பாருங்கள் உங்கள் வாழ்வு எப்படி  – இன்பமாக,  இன்னலின்றி , அமைதியாக, அறம்செறிந்து,அகமும்புறமும் தூய்மையாக, இதுதான் வாழ்க்கை என்று  இருக்கும் என்னும்  நிலையைக் காட்டி நிற்பது தான் வள்ளுவத்தின் வாழ்வியலாகும்.

    ஆகவே  வைகத்திலுள்ளோர் வாழ்வாங்கு வாழ வேண்டுமாயின் வள்ளுவம்

    சொல்லும்  வாழ்வியலைப் போற்றுங்கள். அதன்படி வாழ்ந்து வளமதைப் பெற்றிடுங்கள் !

    Share
  • எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் – “எழுத்துக்கு எழுபது”

    மீ. விசுவநாதன்

    3886e5c9-93f0-4cc8-8780-cfde35377b53
    சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் எழுபத்தி ஒன்றாவது பிறந்த தினத்தில் (05.07.2016) வெளியிடப் பட்ட “எழுத்துக்கு எழுபது” மலரைக் கண்டதும் கண்களில் ஒற்றிக்கொள்ளத் தோன்றும் வனப்பும், படித்ததும் மனத்திற்கு நிறைவும் தந்தது. பாலகுமாரனின் இளமைக் காலம் தொட்டு, இன்று வரை அவரது முக்கியமான நிகழ்வுகளின் அழகழகான வண்ணப்படங்கள் மலருக்குச் சிறப்பு சேர்க்கிறது. இந்த அழகிய மலரைத் தயாரித்த திரு. சூர்யா பாலகுமாரன் உள்ளிட்ட குழுவினருக்குப் பாராட்டுகள்..

    எங்கே படைப்பாளி கொண்டாடப் படுகிறானோ அங்கேதான் மிக உன்னதமான படைப்புகள் மலரும். அந்தப் படைப்புகளால் மனிதம் உயரும். அதற்கு மிகச் சரியான சான்று இந்த “எழுத்திற்கு எழுபது” மலர்.

    ஒரு படைப்பாளியை இன்னொரு படைப்பாளி கொண்டாடுவதும், அவனோடு சிநேகமாக இருப்பதை நினைத்து மகிழ்வதும் , அதிலும் மிக முக்கியமாக ஆயிரக்கணக்கான வாசகர்கள் அந்த எழுத்தாளனின் படைப்புகளைப் படித்தே உயர்ந்தோம் என்று பதிவு செய்வதும் அவ்வளவு எளிதாக நடந்து விடக்கூடியது அல்ல. அது ஏதோ ஒரு சிலருக்குத்தான் நிகழ்கிறது. அப்படி ஒரு நிகழ்வு எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு வாய்த்திருப்பது நற்பேறு. அதற்கு விலையோ அவரது கடுமையான, இன்றும் அயராது தொடந்து செய்துவரும் உழைப்புதான்.

    இந்த மலரில் பல பிரபலங்கள் அவருடனான நட்பைப் புகழ்ந்தும், மதித்தும் எழுதி இருக்கிறார்கள். அவரது தாயார் திருமதி சுலோச்சனா அம்மையார் தானூட்டிய தமிழ்ப் பாலை நினைவு கொண்டு அவரைக் கொஞ்சி இருக்கிறார். அவரது துணைவியர்கள் திருமதி. கமலா, திருமதி. சாந்தா, மகன் சூரியா, மகள் ஸ்ரீ கௌரி, என்று கும்பத்தினர் கொண்டாடி இருக்கின்றனர்.

    திருமதி. சாந்தா பாலகுமாரனின் எழுத்தில் ஒரு சிறந்த படைப்பாளியைத் தான் கணவனாக அடைந்திருக்கும் பெருமைக்கு மேல் அவர் யோகி ராம்சுரத்குமார் என்ற மாபெரும் சக்தியால் ஆட்க்கொண்ட திருமகன் என்ற நிறைவு தெரிகிறது. சூர்யா பாலகுமாரன் தன்தந்தையையே தன்குருவாகப் பதிவு செய்தவிதத்தில் தெளிவும், நெகிழ்வும் இருக்கிறது. அவரது எழுத்தில் தந்தை பாலகுமாரனின் குரல் கேட்கிறது.

    எழுத்தாளர் மாலன் தன் சிநேகிதனின் வளர்ச்சியில் மகிழ்ந்து, நெகிழ்ந்து பதிவு செய்ததில் கலப்படம் இல்லாத நட்பு தெரிகிறது. எழுத்தாளர் இந்துமதி பாலகுமாரனின் இயல்பான அன்பை விளக்கிய பகுதி அருமை. “பாலகுமாரனின் எழுத்து வலிமையைச் சொல்லி “உடையார்” நாவலின் தகுதியையும் மெச்சி, பாலகுமாரன் அவர்களுக்கு உயர்ந்த இலக்கிய விருதான “ஞானபீடம்” வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று சகபடைப்பாளியான இந்திரா சௌந்தர்ராஜன் பதிவு செய்திருக்கிறார்.

    தேவகோட்டை வா. மூர்த்தியின் கட்டுரை ஆழ்ந்த நட்புக்கு ஒரு உதாரணம். அதில் பாலகுமாரன் தன் தாயார் மறந்த பொழுது குமுதம் பக்தி ஸ்பெஷல் (May, 1,2007) இதழில் ,” என்னுடைய நண்பர்கள் பலரும் அவளுக்கும் நண்பர்கள். தேவகோட்டை மூர்த்தி என்னுடைய தோழன். அதே சமயம் என் அம்மாவுக்குச் செல்லப்பிள்ளை. துக்கம் கேட்டு நண்பர்கள் வரத் தொடங்கினார்கள். ஆறுதல் சொன்னார்கள். தேவகோட்டை வா. மூர்த்தி வரும் பொழுது கொஞ்சம் மனம் கலங்கினேன், தடுமாறி அழுதேன்” என்று எழுதி இருப்பதைப் படித்து விட்டு பாலகுமாரனின் அன்பை, தன்னோடு அவர் கொண்ட தோழமையை எண்ணி வியக்கிறார் தேவகோட்டை வா. மூர்த்தி. இதே எண்ணம்தான் பாலகுமாரன் அவர்களுடன் பழகிய அத்தனை பேருக்கும் இருக்கும். இந்தப் பரந்து பட்ட அன்புதான் பாலகுமாரனின் சொத்து.

    இயக்குனர் வசந்த் அவர்களின் கட்டுரை இந்த மலர்மாலையில் உள்ள வாசமிகு செண்பகப் பூவாய் மணக்கிறது. திரைப்படத் துறையில் பாலகுமாரனின் பங்களிப்பையும், தான் பாலகுமாரனின் எழுத்தால் எப்படி ஈர்க்கப் பட்டேன் என்பதையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.

    இவை எல்லாவற்றையும் விட பாலகுமாரனின் வாசககர்கள் பலர் தங்களது குடும்ப உறவின் மேன்மைகளும் , காதலும், சிநேகமும், கூடி வாழும் குணமும், குருபக்தியும் எப்படித் தங்களுக்குள் வந்தது என்ற பதிவுதான் இந்த மலருக்கான வைரமுடி.

    கபடமில்லாமல் எழுதியிருகிறார்கள். நல்ல எழுத்து எப்படி ஒருவரது வாழ்க்கையை மடைமாற்றம் செய்யும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக இந்த வாசகர்களின் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. “மெர்க்குரிப் பூக்கள்” தொடங்கி “ராஜேந்திர சோழன்” வரை பாலகுமாரனோடு பயணித்த, இன்னும் பயணித்துக் கொண்டே இருகின்ற வாசகர்களின் அன்பே இந்த எழுத்துச் சித்தரின் வெற்றி.

    ” என் சிறப்புக்கெல்லாம் என் சத்குருநாதன் யோகி ராம்சுரத்குமாரின்” கருணையும், என் தாயார் சுலோச்சனா என்ற தமிழ்ப் பண்டிதையின் அன்பும், என்குடும்ப உறவுகளின் ஊக்கமும், சத்சங்க அன்பர்களின் நெருக்கமும், நட்புகளின் துணையுமே” காரணம் என்று கைகூப்பும்” பாலகுமாரனின் பணிவே இந்த மலரின் சாரம்.

    இந்த அருமையான “எழுத்துக்கு எழுபது” என்ற வண்ணமலரை வெளியிட்ட விசா பதிப்பகத்தினருக்கு பாராட்டுகள்.

    கடுமையாக உழைத்தால் தான் அடைய விரும்பிய உயரத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தரக்கூடிய இந்த நூலை அனைவரும் படித்து மகிழ வேண்டும்.

    அன்புடன்,

    மீ.விசுவநாதன்

    04.08.2016

    Share
  • உமையாள் திருப்புகழ் -7

    விவேக்பாரதி 

    தான தந்தன தானா தனாதன 
    …தான தந்தன தானா தனாதன 
    …..தான தந்தன தானா தனாதன – தனதானா ! 

    சீறு மங்கர வோடே சடாமுடி 
    …சீத ளம்பயி லாதே  நிலாவொடு 
    …….சீவ னந்தக னோடே யுலாவிடு – சிவதேவீ !

    தீது மெங்கிலு மூடே யெழாதற
    …தீரு மந்நிலை மாதே அழாதிர
    …….தீர மென்றிட மாரே விழாதுற – அருள்தாராய் !  

    ஏறு மங்கரி காடே புகாதரு 
    …ளேகி யெம்மன நாடே சடாரென 
    ……ஏறி அந்திரி நீயே தயாபரி – வரவேணும் 

    ஏம மென்றுமெ சாகா துராவிட 
    …ஏடி சங்கரி மாயே அடாசிடு 
    ……ஏத மென்றிடு தீயே சுடாதுற – உனைநாடி 

    நீற ணிந்திடு வோமே கனாவிடை 
    …நீளு மெம்மட நாவே கெடாமொழி 
    …….நீவ ழங்கிடு வாயே பராபரை ! – பணிவோமே 

    நீச மென்றிடு நோயே படாதுயர் 
    …நீல கண்டனைப் போலே யுலாவிட 
    ……நீய ருள்தரு வாயே தடாகமு – முறைமாதே ! 

    ஊற றுந்திட ஊழே தொடாதுற 
    …ஊரெ ழுந்திட நீயே வொரேகதி 
    …….ஊமை யெங்களின் வாயே சொலாமொழி – மொழிவாயே 

    ஊசி தன்னிடை நீயே நியாயமு 
    …மூரி லிங்ஙண மேவீ விழாவுற 
    ……வூப மென்றிட வாராய்க் கபாலியி – னுமையாளே !

    Share
  • ’’கற்பகாம்பாள்’’….

    19bd4130-8c16-4ad2-a235-16f3a69dac16

     

    ”புன்னை வனநாதர் பூசை புரிந்திட
    அன்னை மயிலாய் அவதரித்த -தொன்னை
    மயிலைக்(கு)ஆ தார மணமிகு நெய்யே
    கயிலைக்க பாலிகற்ப கம்’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    இன்று கேசவ் உபயத்தால் என் நினைவு மலர்ந்தது….1975ல் பொறியியல் கல்லூரியில் படிக்கையில் , விவேகானந்தாவில் படிக்கும் என் தம்பி ‘’மாது பாலாஜியின்’’ குழுவுக்கு சிறு சிறு நாடகங்கள் எழுதித் தருவேன்(SKITS)….அப்படி எழுதியதுதான் ‘’கச்சத் தீவு’’ SKIT(Political நாடகம்….சோ சாரைப் பார்த்து போட்டுக் கொண்ட சூடு….அன்றோடு பாலிடிக்ஸ் வசனங்களை விட்டுவிட்டேன்….)…. அதில் பஞ்ச பாண்டவர்களுக்கு சொந்தமான ‘’கச்சத் தீவைக்’’ கேட்க கிருஷ்ணர் துரியோதனாதியரிடம் தூது செல்கிறார்….அதில் ஒரு வசனம்….துரியோதனர்-கிருஷ்ணா எங்களுடன் விளையாடாதே நாங்கள் ‘’100 RIFLES”(அந்தக் கால சினிமா….) …..பதிலுக்கு கிருஷ்ணர் -’’உன்னோடு விளயாட நான் என்ன ‘’டென்னீஸ் கிருஷ்ணனா(இந்த வசனம் இன்றைய சாக்லேட் கிருஷ்ணாவிலும் உண்டு)….நீங்கள் நூறு பேரும் 100 RIFLES என்றால் பஞ்ச பாண்டவர்கள் ”5 MEN ARMY”(இதுவும் அந்தக் கால வெஸ்டேர்ன் மூவி….)….இண்டெர் காலேஜ் அதிரும்….மேலும் எங்கள் குழுவை(கிரேசி கிரியேஷன்ஸ்) சேர்ந்த நண்பன் பார்த்திபன் ‘’எல்லா பெண்களையும் கோடம்மா என்றும் (வீடு பெருக்கும் கன்னியம்மா முதல் குயின் எலிஸெபத் வரை அவனுக்கு கோடம்மாதான்)….எல்லா ஆண்களையும் ‘’குப்பாச்சுலு’’ என்று செல்லமாக விளிப்பதுண்டு….எனது ‘’மை-லவ்வாப்பூர்’’(சுஜாதா சாரின் ‘’ஸ்ரீரங்கத்து தேவதைகள் இராமுருகனின் ‘’ரெட்டைத் தெரு’’ ஜாடை) டைம்ஸில் எழுத உத்தேசம்….அதற்கு இந்த குறிப்பு ‘’நெட்-ப்ராக்டீஸ்’’…..இனி வெண்பா….

    39fabdfe-62cf-421e-9255-95b0543629df

    ‘’அப்பாச்சி(ஜாடையில் நேடிவ் அமெரிக்கன்) கண்ணனாய், ஆவை(பசுவை) அசுவமாய் (குதிரையாய்) – துப்பாக்கி நூறைத்(100RIFLES துரியோதனன் & கோ) தொலைக்கவும் , -குப்பாச்சுலு-பார்த்திபன்தேர் பூட்ட பரந்தாமர், டோக்கியோவின்(ஜப்பான் ஜாடையும் கண்ணனுக்கு இருப்பதால்) – தீர்த்தக் கரைதனில் திட் டம்’’….கிரேசி மோகன்….!

    * -ஈசர் நரியை பரியாக்கும் போது அவர் மைத்துனர் பெருமாள் ‘’ஆவை(பசுவை) அசுவன்(குதிரை) ஆக்கக் கூடாதா….!

    Share
  • தட்டொளி

    பவள சங்கரி

    தட்டொளியின் புறக்காட்சிகளனைத்தும்
    அறச்சீற்றத்தின் அகக்காட்சிகள்! 

    life 26

    தட்டொளி – உலோகத்தாலான கண்ணாடி
    உக்கம் – விசிறி

    ஆண்டாள் சந்நிதியின் நேர் எதிரில் வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி இருக்கிறது. (படத்தில் உள்ளது). இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்தாளாம். தற்போது பளபளப்பு குறைந்துள்ளது. ஆண்டாள் திருப்பாவையில், ‘உக்கமும் தட்டொளியும்’ என்று குறிப்பிட்டிருக்கிறாள் – கோதைத்தமிழ்!

    ஆண்டாள் அருளிய திருப்பாவை (493)large_133341970

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
    செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
    செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    192b7c36-9b0f-417e-8fbb-6920e25d1029

    ’’பாதஸாரிக் கன்றவர் பின்சென்று மேயுது
    நாதரிசை கேட்டபடி நீட்டுது, -காதிரெண்டை:
    ராஹிமால்ட் கண்ணனால் ராகம் விலகிடும்:
    பாஹிமாம் பாதாம் புஜம்’’….கிரேசி மோகன்….

    ராஹிமால்ட் -அந்த காலத்து குழந்தைகள் பானம்(காப்பி சாப்டாதே மோஹன்….கேசரி ராஹிமால்ட் சாப்டு-என் பாட்டியின் குரல் கேட்கிறது….)
    ராகம் -ராகத்துவேஷ வகையறா….

     

    Share
  • திருமால் திருப்புகழ்….

    மந்தவெளி மாரிச்செட்டி தெரு ஸ்ரீனிவாசப் பெருமாள்….
    ———————————

    இந்த பெருமாளைப் பத்தி சொல்லியே ஆகணும்….உப்பிலியப்பன் எங்க குலதெய்வம்னா, இவர் எங்க காவல் தெய்வம்….25வயசு வரை எனக்கு பரிட்சை ரிஸல்ட் வந்தாலும் சரி….காலில் சிரங்கு வந்தாலும் சரி…..என்னோட தந்தை வழி பாட்டி நாலணா உண்டில போட்டுட்டு ,இந்த பெருமாளைத்தான் நம்புவோ….கோமுட்டிச் செட்டியார் கைங்கரியத்துல இந்த மந்தவெளி மாரிச்செட்டி தெரு வெங்கடாசலபதி திருப்பணி நடக்கறது….இந்தக் கோயில் தாயார் சாக்‌ஷாத் பராசக்தி….பச்சை கலர் புடவையை இவளுக்கு சாத்திட்டு ‘’பில்-கேட்ஸ்’’ ஆகணும்னு வேண்டிண்டாலும் நிறைவேத்தி வப்பா…எதோ ஒரு சந்தத்துக்கு எழுதிண்டு போறச்சே , *ஈற்றடில இவர் வலிந்திடாது குதித்து எழுந்தருளியபோது , ப்ரபத்தி சரணாகதியை ப்ரஸ்தாபிக்கும் வைணவ விசிஷ்டாத்வைதத்தை உணர்ந்து அனுபவித்தேன்….எல்லாம் வல்ல மைவண்ணனுக்கும் நன்றி…’’
    —————————————————————————————————————-

    ’’பெருமாள் திருப்புகழ்’’
    —————————————–

    தந்ததன தானத்தத்த தந்ததன தானத்தத்த
    தந்ததன தானத்தத்த -தனதான….

    ’’ரெண்டுவிரல் சேரக்கட்டி பஞ்சுதனை நாசிக்கிட்டு
    பிண்டமென ரேழிக்கட்டில் -சவமாக
    சங்குபறை மோளக்கொட்டு அன்புமகன் தீயைப்பற்ற
    பெண்டிரழ ஓலைக்கட்டில் -தனிலேறி

    கொண்டுசுடு காடுக்கிட்டு வெந்துதண லாகச்சுட்டு
    இந்தவுடல் போலிச்சட்டை -எனநானும்
    அந்தரம ணேசர்க்குற்ற சொந்தஅனு பூதிக்கொத்த
    உந்தனிரு தாளைப்பற்ற -அருள்வாயே

    தொண்ட(ன்)அனு மானுச்சிப்ப றந்தரத மேறிக்கற்க
    பஞ்சவிஜ யோருக்கொப்ப -மொழிகீதை,
    சந்தகிரி வாரிக்கொட்டு கந்தரனு பூதிப்பித்த
    கண்டர்விழி ஜோதிப்புத்ரர் -முறைமாம

    உண்டுலக(ம்) ஏழைத்துப்ப பண்டைஇலை ஆலத்தெப்பம்
    சென்றபலி சாயக்குட்டை -திருவோணா
    *தந்தைவழி பாட்டிக்கென்று நின்றருளும் கோமுட்டிக்கு
    மந்தவெளி மாரிச்செட்டி -பெருமாளே….கிரேசி மோகன்….
    —————————————————————————————————————–

    Share
  • மறந்துவிட முடிவதில்லை !

    எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

         

          புலம்பெயர்ந்து வந்தாலும் புலனெல்லாம் பிறந்தமண்ணில் 

                 நலங்கள்பல இங்கிருந்தும் நம்மனமோ வெறுமைநிலை

            உளம்மகிழ வாழவெண்ணி உழைக்கின்றோம் ஓய்தலின்றி

                 உளமகிழ்வோ சிலநேரம்  உளநெகிழ்வோ பலநேரம் 

            மனம்முழுக்க ஊரையெண்ணி மெளனித்தே நிற்கிறதே !

     

          நீர்கண்ட இடமெல்லாம் நீந்திநாம் களித்திருந்தோம்

                யாரென்ன கொடுத்தாலும் நாம்விரும்பி அதையுண்டோம்

          தார்ரோட்டில் ஓடிநின்றோம் தலைநிறைய எண்ணெய் வைத்தோம்

                 கார்ப்பயணம் இல்லாமல் கால்நடையாய் சென்றுவந்தோம் !

     

          ஓடிநிற்போம் பாடிநிற்போம் உடல்முழுக்க வியர்வைவரும்

                  ஒடியல்கூழ் குடித்துவிடின் உற்சாகம் தேடிவரும் 

          பனங்கிழங்கு பனாட்டு  பனங்குட்டான் பால்றொட்டி 

                  பாங்காக சுவைத்தபடி பந்தாடி மகிழ்ந்துநிற்போம் !

     

          சைக்கிளை எடுத்துக்கொண்டு சவாரி போய்வருவோம்

                 சந்தோஷம் மனமெல்லாம் தானாக வந்துநிற்கும்

          சைவத்தார் கடைவடையை சட்டினியில் தொட்டுநின்று

                  சகலரும் சுவைத்தநிலை சரித்திரமாய் போச்சுதிப்போ !

     

         எங்களது கல்லூரி அருகிலுள்ள கடையதனில்

              இடியப்பம் இடிசம்பல் இருப்பதுவோ சிலநாளே

        தங்கராசு அண்ணனது தாராள மனத்தாலே

               எங்களுக்கோ இடியப்பம் எப்படியோ கிடைத்துவிடும் ! 

     

         பாடசாலை விடுமுறையில் பலநண்பர் சேர்ந்தபடி

               கீரிமலைக் கேணிநோக்கி கிளம்பிடுவோம் சைக்கிளிலே

         கேணியிலும் குளித்திடுவோம் கிட்டவுள்ள கடலிலும்

                ஆசைதீர நீச்சலிட்டு அனைவருமே மகிழ்ந்துநிற்போம் !

     

          சித்திரையில் பட்டங்கட்டி திரளாகப் பறக்கவிட்ட

                  சத்தமிட்டுக் கூத்தாடி சகலருமே நின்றிடுவோம்

          வட்டமிடும் பட்டமெலாம் வாவெனவே அழைக்குதென

                 வண்ணக் கருவிழியால் வானத்தைப் பார்த்துநிற்போம் !

     

          போரென்னும் பெயராலே ஊரெல்லாம் ஓடியது

                 ஊரிலுள்ள மக்களெலாம் உருக்குலைந்தும் போனார்கள்

          ஊரைவிட்டு பேரைவிட்டு உற்றாரை இழந்துவிட்டு

                 யாருறவும் இல்லாத நாட்டிலிப்போ வசிக்கின்றோம் !

     

         எங்களது உழைக்கும்சக்தி எந்நாட்டில் இருந்தாலும்

               மங்காமல் இருப்பதனால் வாழுகிறோம் வீழாமல் 

        பொங்கிவரும் தமிழுணர்வால் எங்கள்தமிழ் வளர்க்கின்றோம்

               என்றாலும் தமிழ்பற்றி இன்னுமே எண்ணல்வேண்டும் !

             

            ஊரிலேவாழ்ந்த அந்த உவப்பில்லா காலமதை

                 உள்ளமது நினைக்கையிலே ஒருவெறுமை தெரிகிறது 

          வசதியுடன் வாழ்ந்தாலும் வசந்தகாலம் மனம்முழுக்க

               வாழ்ந்துகொண்டே இருப்பதனை மறந்துவிட முடிவதில்லை !

    Share
  • விரல்களில் வெளிச்சங்கள்

    ராஜகவி ராகில்

     

    வாடாத வரம் 

    பெறும்

    அன்னை மீது விழுந்த பூ 

    தாயின் நா கொண்டு சேர்க்கத்தான் 

    பூக்களில் 

    தேனும் தேனீயும் படைத்தான் 

    இறைவன் 

    பட்டு 

    மலர் 

    பஞ்சு 

    மெத்தைகள் சாய 

    ஆசைப்படும் இடம்  அன்னை மடி

    ஓர் ஆலயத்தை விட புனிதமானது 

    அன்னை உடுத்த 

    சேலை 

    அம்மா முகம்  பார்த்திடின் 

    எமனுக்கு தோணவே தோணாது 

    அவள் உயிர் பறிக்க 

    தாய் தாலாட்டின் பின்னே  கை கட்டி நிற்கும்  

    புகழ் பூத்த புலவன் 

    கவிதை 

    தாய் வாழுகின்ற 

    வீட்டுக்குத் தேவையில்லை 

    விளக்கு 

    உயிர் ஊட்டப்படுகின்ற புனித தலம்

    தாய் கருவறை 

    உலகம் என்ற உருண்டை விருட்சம்  

    நிற்கிறது 

    அன்னை வேரில் 

    மாதா கண்ணீர் திரவத் தீ 

    திரவத் தீ 

    அது அழித்துவிடும் பாறைகளையும் 

    அன்னை புன்னகை அரண் 

    அது தடுத்துவிடும் 

    எந்தச் சுனாமிகளையும் 

    அன்னை 

    பிசைந்தூட்டிய கூழ் 

    ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமுதத்தினையும் 

    ஆக்கிவிடும் வெறும் வைக்கோலாய்

    அம்மா சமைப்பது அரிசியல்ல

    பாசம் 

    விறகுகள் வென்று 

    அவள் எரிகிறாள் 

    அடுப்பில் 

    இறைவன் 

    அதிசயிக்கின்ற அதிசயம் 

    அன்னை பிரசவம் 

    தன் தாய் மறந்த மகன்  

    இதயத்தால் இறந்த 

    பிணப் பிரஜை 

    தாய் 

    இருமல் சத்தம் ஒரு தரம் கேட்டாலும் 

    மருத்துவம் செய் 

    வைத்தியன் கடத்தி வந்து 

    ஒரு குயிலிடம் கேள் 

    அது சொல்லும் 

    தன் குக்கூ 

    அன்னைக்கான வாழ்த்தென 

    மழைத் துளிகளிடம் விசாரி 

    அவை மொழியும்  

    தாய் பாதம் தொடத்தான் பொழிவதாய்

    அன்னைக்கு

    பணிவிடை செய்கின்ற கைகளில் இருப்பவை  

    விரல்களல்ல வெளிச்சங்கள்

    Share
  • இறைவனாய் வாழுகின்றார் !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா

     

    தப்பாகப் போகாமல் தடுத்திடுவார் எங்களப்பா

    எப்போதும் எம்நினைப்பாய் இருந்திடுவார் எங்களப்பா

    அப்பாவி போலவர் அயலார்க்குத் தோன்றிடினும்

    அப்பாவின் அறிவுத்திறன் ஆருக்கும் இல்லையென்போம் !

     

    ஆங்கிலத்தைப் பேசுகின்ற ஆற்றலில்லா எங்களப்பா

    அழகுதமிழ் பேசிநின்றால் அனைவருமே அசந்திடுவர்

    பட்டிமன்றம் கவியரங்கம் ஏறிநிற்பார் எங்களப்பா

    பரவசமாய் அவர்படையல் பாங்குடனே வந்துநிற்கும் !

     

    ஆடம்பரம் அறியாமல் வளர்ந்துவிட்டார் எங்களப்பா

    அறிவுடனே ஆராயும் ஆற்றலுள்ளார் எங்களப்பா

    வீணான வார்த்தைகளை விரும்பாதார் எங்களப்பா

    விருப்புடனே தேர்ந்தெடுத்து விளம்பிடுவார் வார்த்தைதனை !

     

    ஓடியாடி நின்றிடுவார் ஓயாமல் உழைத்திடுவார்

    ஓய்வெடுப்பு எனும்வார்த்தை உள்ளமதில் அவர்க்கில்லை

    வாடிநிற்பார் முகங்காணின் மனமார உதவிநிற்பார்

    மாமனிதர் எங்களப்பா வாழ்வாங்கு வாழவேணும் !

     

    வடமொழியில் வல்லுனராய் எங்களப்பா இருப்பதனால்

    வாத்தியார் எனும்பெயரால் வரவேற்பார் யாவருமே

    உபநிடதம் விளக்கமெல்லாம் ஒழுக்காக விளக்கிநிற்பார்

    அவர்மீது எம்மதிப்பு அதிகரித்தே வருகிறது !

     

    வெள்ளைவேட்டி சால்வையுடன் வெளியிலவர் போய்வருவார்

    உள்ளமதில் கள்ளமதை உதறியே எறிந்துநிற்பார்

    பள்ளமதில் வெள்ளம்போல் பாய்ந்துவரும் கருணையினால்

    பலபேரின் துயர்துடைக்கப் பாடுபட்டார் எங்களப்பா !

     

    குங்குமப் பொட்டுடனே குதூகலிக்கும் அவர்முகத்தில்

    மங்காத காந்தசக்தி மலர்ந்தபடி அமைந்திருக்கும்

    பொங்கிவரும் பக்திதனை இங்கிதமாய் உரைத்துநிற்கும்

    எங்களது அப்பாவை என்னாளும் வியந்துநிற்போம் !

     

    கோவில்சென்று கும்பிடுவார் குறைசொல்லல் தவிர்த்திடுவார்

    யார்மனமும் நோகாமல் நல்லதெல்லாம் எடுத்துரைப்பார்

    கூர்மைநிறை கருத்தையெல்லாம் கொண்டுவந்து அளித்திடுவார்

    வாய்மைதனை வாழ்வியலாய் வாழ்ந்துநின்ற எங்களப்பா !

     

    கடவுளில்லை என்பார்க்கு கவனமாய் பதிலுரைப்பார்

    கடவுளினைக் காணுதற்கு கண்ணியமே தேவையென்பார்

    கண்ணியத்தை உணராதார் கடவுள்பற்றி உணரார்கள்

    கண்ணியத்தை வளர்த்துவிட்டு கடவுளையே தேடுஎன்பார் !

     

    சித்தரது தத்துவத்தை சிரசின்மேல் வைத்திடுவார்

    அத்தனையும் தமிழினத்தின் சொத்தெனவே சொல்லிநிற்பார்

    நாத்திகம் முழங்கிடுவார் நம்சித்தர் வழிபார்க்கின்

    ஆத்தீகம் எனும்வழியே அவர்க்கு நட்பாகுமென்பார் !

     

    வள்ளுவத்தை வாழ்வாக்கி வாழ்ந்துபார் எனச்சொல்வார்

    தெள்ளுதமிழ் நூல்களுள்ளே திருக்குறளே சிறந்ததென்பார்

    உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே மேன்மையென்பார்

    ஒருதீங்கும் நினைக்காதே என்றுரைப்பார் எங்களப்பா !

     

    எங்களப்பா எண்ணம்போல் எல்லோர்க்கும் இருந்துவிடின்

    சங்கடங்கள் சண்டைகள் தமைமறந்தே ஓடிவிடும்

    இங்கிதமாய் வாழுஎன்று எங்களப்பா எடுத்துரைப்பார்

    இதயமதில் எங்களப்பா இறைவனாய் வாழுகின்றார் !

    Share
  • வெள்ளைப் பனி மலை

    ரா.பார்த்தசாரதி

    Mt Rainer

    பனிபடர்ந்த மலையின் மேலே

    அழகினை கண்டு நின்றேன் சிலைபோலே ,

    பச்சை வண்ணப்போர்வை மலைமகளை சுற்றிட,

    நடுவே சுற்றி, நெளிந்து வாகனங்கள் சென்றிட !

    பச்சைவண்ண என்றும் கண்களுக்கு குளிர்ச்சி 

    அதுவே மனிதனின் மனதிற்கு தரும் புத்துணர்ச்சி !

    இயற்கை அன்னையின் அழகினை ரசித்தோமே  

    மனமகிழ்ச்சி கொண்டு மனதினில் பூரிப்படைதோமே!

    மலைமேல் கதிரவன் ஒளி பட்டாலே 

    வெண்ணிற பனிமலை தன் வெண்ணிறாடை நீக்காமலே !

    ஒளிர்ந்து தென்றல் காற்று வீசியதே 

    அருவியும், சிற்றோடையும் நடனமாடி வந்ததே !

    இயற்க்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமே 

    எனது உனது என்பதெல்லாம்  இடையில் மாறும்  எண்ணமே ! 

    Share
  • குயிலி, உன்றன் திருநடம் கண்டிடப் பெற்றேன்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    யாழ் மகள் அழுதாள், விடுதலை பெறுவாள் என்ற வரிகளை வண்ணமாக்கியவர் குயிலி. வரிகளை எழுதியவர் அருள்மொழி. ஈழத் துயரத்தைக் காட்ட அழுதேன், விடிவு வரும் எனக் கண்டும் கேட்டும் மகிழ்நீர் சொரிந்தேன்.

    191a0bdf-08ee-4272-985b-801fad48393c

    பெண் எனும் பேராற்றல் எனும் எண்ணம் தந்தவர் அருள் மொழி, வண்ணம் தந்தவர் நர்த்தகி நடராசர், நடனம் தந்தவர் குயிலி.

    சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்திய பவன் அரங்கம். 2047 ஆடி 2 (17.07.2016) காலை 10 மணி தொடக்கம் கண்களை விரித்துக் கருத்தினை ஒடுக்கி, உள்ளத்தை ஒரே நெறிக்குள் அழைத்துச் சென்றவர்கள் நர்த்தகி நடராசரும் அவர் மாணவி குயிலியும்.

    1d562d43-56a9-47d9-8147-0f072d7ec409

    தோல்வியில் துவளாதீர், துயரில் மாளாதீர், விழிமின், எழுமின் என அழைக்கும் வரிகளைத் தந்தவர் அருள்மொழி. பெண்கள் பேராற்றலார் என 2000 ஆண்டுகளுக்கு ஊடாகத் தமிழர் வரலாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் சென்றார். சங்கப் பெண்ணில் தொடங்கி, யாழ் மகள் வரை அழைத்துச் சென்றார். அந்த வரிகளுக்கு வடிவம் கொடுத்தவர் நர்த்தகி. நடனமாடியவர் குயிலி.

    எண், எழுத்து, பண், பதம் என மாதவி கற்ற நாட்டிய நன்னூல் பயிற்சியின் இலக்கணமாய்க் குயிலி. மாதவி ஏந்திய மலர்களோ குயிலி ஏந்துபவை? பகுதாரிப் பண், திசுர தாளம், தக்கதிமி தா எனச் சொற்கட்டுகள். வசுந்தாவின் குரலோ குயிலுக்குக் கருத்தியல் எடுப்பு. நாராயணனின் முழவோ குயிலியின் காலடி நடப்பு. சீனிவாசனின் நரம்பிசையோ குயிலின் பதங்களின் வனப்பு. தேவராசரின் குழலிசையோ குயிலின் கண்களில் மிதப்பு. சிவநாராயணனின் யாழிசையோ அரங்கத்தின் காதுகளின் குவிப்பு. நிகழ்ச்சித் தொடக்கக் களைகட்டலில்.

    ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின் கோடை அவ்வளி குழலிசை ஆக…” எனத் தொடங்கி மலைவளம் காட்டிய கபிலரின் வரிகள், குயிலிக்குக் கற்பனை வளம், நர்த்தகிக்கு கருத்தூறும் குளம். பண்களைத் தாளமாக்கி, கண்களை மீன்களாக்கி, கழுத்தினைத் தஞ்சாவூராக்கி, கால்களை அளந்து வைத்து, உடலே நடனமாகிய,  அடவுகளைப் பொருத்தினார் விருத்தத்தில்.

    அரும்பு விரிந்தன்ன, மொட்டு மலர்ந்தன்ன, முகம் சிவந்தன்ன, தாமரையாய்க் குயிலி அலர்ந்தார். முழவுக்குச் சந்தங்கள் விரல்களாக, குரலுக்கு ஓசைகள் நாண்களாக, நட்டுவத்துக்கு நாதம் சல்லாரியாக, திருப்புகழுக்கு முருகன் பொலிந்தான் அலாரிப்பில்.

    உயிரும் உடலும் சேர்வதில் உவகை, இயற்கையின் பேராற்றலில் வியப்பு, தீயன பழிப்பதில் இழிப்பு, அடக்க முயல்வோர்மீது வெகுளி, அடங்கா நிலையின் மென்னகை, பெண்மைப் புதுமையில் மறம், இயல்பு தருமோ அச்சம், யாழ்மகளின் வெம்பலில் அவலம், வையகம் பெண்ணால் உய்வதே அறம் என ஒன்பது சுவைகளும் பல்பண்மாலைக்குள் ஆதி தாளத்துள் அருள்மொழியின் எண்ணமாய் வந்த வண்ணத்தில்.

    பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனான்டி” எனத் தொடங்கும் பாரதிதாசன் வரிகளில் ஊடலுக்கு ஆடல். நர்த்தகியார் அறிமுகித்த அமிழ்தமாய் மராட்டியச் சாவளியில்.

    மழையைக் கண்ட மாமயில் தோகை விரித்த விதம், பாரதியின் “திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட‌….” எனத் தொடங்கும் பாடலுக்குக் குயிலியின் பதம். வசுதாவின் குரலோ, நாராயணனின் முழவோ, சீனிவாசனின் நரம்போ, தேவராசரின் குழலோ, சிவநாராயணனின் யாழோ விஞ்சியது எதுவெனின், நர்த்தகியின் தாளக் கட்டை மீறக் கெஞ்சின, தம்முள் இசைந்து கொஞ்சின, கொடுத்தன கொள்ளை இன்பம் பதத்தில்.

    58e152df-d29e-4d9e-b1f2-27334f8dc347

    அரங்கு குறியில் சிலிர்த்தது, அவை மெய்யில் சிலிர்த்தது, அழகு பொய்யில் சிலிர்த்தது, குறத்தியின் சிந்துள் திளைத்தது, பள்ளுள் அலமந்தது, தாலாட்டில் மயங்கித் தூங்கிற்று, முகக் குறியில் மனவோட்டம் பொலிந்தது, “கூடை முறம் கட்டுவோம் குறி சொல்லுவோம்….” எனத் தொடங்கும் பழம் பாடலுக்கான குறவஞ்சி நடனத்தில்.

    ஈரோடு செல்லாமல் அ(திருவ)ண்ணாமலைக்கா? அண்ணாமலையாரின் பெண்ணாகிய பெருமகள் அருள்மொழியிடம் புராணங்கள் இருந்தாலன்றோ கொளுத்தலாம். திரிபுரமும் எரித்த கதை சொன்ன வேகத்தில் பகுத்தறிவுப் பகலவனாகி முடித்தார் குயிலி தில்லானாவில்.

    செப்பமாகப் பண்ணினால் ஒப்பனையை, குயிலியின் அணிகலன்கள் இடையிடையே சிதறியிரா. கூரில் குயிலியின் காலடி குற்றுமோ, குருதி கொட்டுமோ என அவையோர் நெஞ்சமும் பதறியிரா. அய்யலுவும் அருள்மொழியும் நர்த்தகியும் குயிலியை ஆரவாரமற்ற அடக்கமான எழில் கொஞ்சும் ஆடை வடிவுள்ள நடனியாக்கினர்.

    பேச்சரவம் கேட்கவில்லை, பேச்சு மழையாகப் பொழிந்தனர், பேச்சுகளுக்கு மேடை வேறு. குயிலியின் ஆடலை மட்டும் காட்டும் மேடைக்கு மீண்டும் மீண்டும் வருவேன். நர்த்தகியின் நட்டுவாங்கம் பார்க்கக் கண்களைக் கூர்மையாக்குவேன்.

    என் அருமை நண்பர், ஈழத்தமிழரின் தமிழகக் குரல், வழக்குரைஞர் அருள்மொழியின் பெண் எனும் பேராற்றல், அவர் மகள் வழக்குரைஞர் குயிலியே. முன்பு திருமுறை மாநாட்டில் குயிலியின் நட்டுவாங்கத்துக்கு நர்த்தகியார் ஆடப் பார்த்தேன். இங்கு இடம் மாறிப் பார்த்தேன், மகிழ்ச்சி.

    தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்

    திருநடங் கும்பிடப் பெற்று

    மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு

    வாலிதாம் இன்பமாம் என்று

    கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக்

    கைம்மல ருச்சிமேற் குவித்துப்

    பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்

    பாடினார் பரவினார் பணிந்தார்.

    (சேக்கிழார், திருமுறை 12005253)  

    Share