Month: August 2016

  • படக்கவிதைப் போட்டியின் முடிவுகள் – 75

    13867107_1059936447393887_1383995798_n

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    இந்த வாரப் படக் கவிதைக்கான புகைப்படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு முபாரக் அலி. இதனை நம் வல்லமை ப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த வாரப் புகைப்படத்தில் நம் கருத்திற்கு விருந்தாக துணையோடு கொஞ்சும் புறாக்கள் இடம் பெற்றுள்ளன. இப் புகைப்படத்திற்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    காடுகள், மரங்கள் அழிக்கப்படுவதால், மழையின்றி நீர்நிலைகள் அற்று, மண் வளம் பாதிக்கப்படுவதை புறாக்கள் வழி எடுத்துக் காட்டியுள்ள ராதா விஸ்வநாதனுக்குப் பாராட்டுகள்.

    அஃறிணை உயிர்களிடத்துக் காணப்படும் பேதமற்ற அன்பைச் சுட்டிக் காட்டி, பிறப்பால் வருவதல்ல அஃறிணை, உயர்திணை வேறுபாடு, அது வாழ்ந்துக் காட்டும் வாழ்க்கையில் தான் இருக்கிறது என்று வாழ்க்கைப் பாடத்தை அறிவுறுத்தியுள்ள  முத்துலட்சுமிக்குப் பாராட்டுகள்.

    மரங்கள் அழிக்கப் படுவதால் மனித இனத்திற்கு வரும் கேட்டினை எடுத்துக் கூறியுள்ளார் செண்பக ஜெகதீசன்.

    இன்றைய சூழலில் காதல் படும் பாடு, காதலர்களின் நிலை, காதல் என்ற பெயரால் நடக்கும் வன்முறை என நிறம் மாறிப்போன காதலையும், நிலை தடுமாறும் இளைய தலைமுறையையும் எடுத்துக் காட்டுகின்றது இக்கவிதை,

    ஆதலால் காதல் செய்வோம்

    கரும்புறா எனை

    வெண்இறகுள் பொத்தி வைத்த பிரியசகியே!

    கலப்பினக் காதலை

    இணைந்தே இசைப்போம்

    இல்லற மேன்மையை

    மரங்கொத்தி வகையினோம்

    மனங்கொத்தியது இல்லை

    மனங்கொத்தி வகையினரோ

    பணங்கொத்திகளாய்

    ஆதாளும் ஏவாளும்

    ஆரமித்த காதல் கதை

    ஆதாரமில்லாமல் அலைபாயும் காலமிது

    “ஆதலால் காதல் செய்வீர்”

    பாவலன் மொழி பாழடைந்து நிற்கிறது

    காதல் விற்பனை

    கல்லூரி சாலைகளில்

    கடைவிரித்து சிரிக்கின்றது,

    காதல்விளையாட்டு

    கடற்கரை ஓரங்களில்

    கரைமீறத் துடிக்கின்றது

    காதல் வன்முறை

    ஒருதலைக் கொள்ளியாய்

    ஆயுதம் ஏந்தி

    ஆயுள் முடிக்கின்றது

    காதல் பரத்தை

    வேசி மகளாய்

    வீதி வழி அலைகிறது,

    காதல் கொசு

    காதுக்குள் இரைச்சலாய்

    ஓங்கியே ஒலித்தலும்

    அடித்தவுடன் விழுந்துவிடும்

    பரிதாபம் அந்தோ!

    காதல் கன்னி

    உண்மைக்காதல் தேடி

    முதிர்கன்னியாய்

    காதல் தொடரோட்டம்

    ஆள்மாறி ஆள்மாறி

    போலிமுகமாய்

    புறாத்தூதுக் காலத்தில்

    புத்துயிர்த்த காதல்

    வாட்ஸ்அப் பேஸ்புக்கால்

    வைரஸ் தொற்றில்

    ஆயுள் முடிக்கின்றது

    களவுகால காதல் சின்னம்

    கற்பறன் பேணிய திறன்

    வருங்கால தலைமுறைக்கு

    சொல்லத் தவறினோமே

    காதல் மெய்

    காதலர்கள் பொய்

    உண்மை மறந்தோமே

    மனந்தொட்டு

    உடல் தொடும் கலாச்சாரத்தினை

    மறந்திட்டு

    மாயும் இனத்திற்கு

    மீண்டும் புரியவைப்போம்

    ஆதலால் காதல் செய்வோம்.

    காதல் குறித்தப் புரிதலை இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டும் என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு சமூக நோக்கோடு கவிதைப் படைத்துள்ள மா. பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்குப் பாராட்டுகள்.

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (11)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை  – 10

    kural-4-1-1

    கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

    தாளை வணங்காத் தலை (09)

     

    எட்டுக் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள், தத்தமக்குரிய செயல்களைச் செய்யாத ஐம்பொறிகளைப் போலப் பயனற்றவையாகும்.

    கோள் இல் = கொள்ளுவது கோள். கிரகங்களுக்கும் பொருந்தும். கிரஹணம் = பற்றுதல். பாணிக் கிரஹணம் = கைத்தலம் பற்றுதல்

    பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் கர்மேந்திரியங்கள். Sensory organ. புலன்கள் ஞானேந்திரியங்கள். பொறிவைத்துப் பிடித்தல்! Senses

     

    இலக்கணம்

    குணத்தான்-குணங்களை உடையவன்.  ஆண்பால் படர்க்கை (third person) பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் இவற்றின் அடியால் வருபெயர்.  இங்கே குணத்தின் அடிப்படையால் வரும் பெயர்.

     

    ண் இருக்கிறது. ஆனால், கண்ணா பார்க்கிறது? இல்லை, கண்வழியே பார்ப்பது நாம்.

    நாமா பார்க்கிறோம்? நம்மைப் பார்க்க வைக்கின்ற மஹாசக்தி ஒன்று உள்ளது அல்லவா?

    ய: சக்‌ஷுஷா ந பச்யதி யேன சக்ஷுகும்ஸதி பச்யதி

    ததேவ ப்ரம்ம த்வம் வித்தி நேதம் யதிதம் உபாஸதே (கேனோபநிடதம்)

     

    எதைக் கண்ணால் பார்க்க முடியாதோ, எது கண்ணைப் பார்க்கச் செய்கிறதோ அதுவே ப்ரம்மம் என்றறி, என்கிறது கேனோபநிடதம். இது, மற்ற எல்லாப் புலன்களுக்கும் பொறிகளுக்கும் அவயவங்களுக்கும் பொருந்தும் என்பதை விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. அந்த மஹாசக்திதான், கண்ணன் சொல்கின்ற `க்ஷேத்ரக்ஞன்.` என் குருநாதர் சொல்கின்ற ‘Truth of the inner fellow.’ ஆக, அவன் இல்லையென்றால், அவன் அருளில்லையென்றால், நாம் எதையும் பார்க்கவோ, கேட்கவோ, முகரவோ, சுவைக்கவோ, தொட்டறியவோ முடியாது. இது இந்தக் குறளின் அடிப்படைப் பொருள்.

    இனி, வள்ளுவர் அடுத்த அடிக்கு இட்டுச் செல்வதைப் பார்ப்போம்.

    சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவை புலன்கள் எனப்படும். இவை senses எனப்படும். மெய், வாய், கண், மூக்கு, செவி இவை பொறிகள் எனப்படும். இவைதான் ஞானேந்திரியங்கள் எனக் குறிக்கப்படுகின்றன. (உபத்ரம், பாணி, பாதம், பாயுரு, வாக்கு என்பவை கன்மேந்திரியங்கள்)

    பொறிகள் கருவிகளே. அவை தன்னிச்சையாக இயங்க முடியாது. புலன்களோடு பொருந்தியிருப்பதால் மட்டுமே அவை தத்தம் அமைப்புக்கேற்பத் தொழிற்படுகின்றன. காது என்கின்ற கருவி, கர்மேந்திரியம், கேட்டல் என்னும் சக்தியோடு பொருந்தியிருக்கும்போதுதான் நம்மால் ஒலியைக் கேட்க முடிகிறது. இல்லையேல் காது கேட்காது. எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது எதிரே நடப்பவர் கண்ணில் படுவதில்லை. ஒருவர் கூப்பிடுவது காதுகளில் விழுவதில்லை. உறக்கத்திலிருந்து நம்மை எழுப்ப, சும்மா தொட்டால் போதுமானதாக இருக்கிறதோ? உலுக்க வேண்டியிருக்கிறதே! கவலையில், நாவுக்குச் சுவை தெரிவதில்லை. உறக்கத்தில் ஏது வாசனை?

    பில் கேட்ஸ், தன் கைப்படத் தயாரித்துப் பரிசளித்த கணினியே என்றாலும், `ப்ளக்`கை மின்சார இணைப்போடு செருகாமல் அது இயங்குமா? கணினிதான் பொறி. (கணிப்பொறி என்று சரியாய்த்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்!) மின்சாரம், புலன். பில் கேட்ஸ் நாம். இறைவன் பில்லுக்குப் பாட்டனுக்கும் பாட்டன். எனவே, புலன்களும் பொறிகளும் இணைந்திருக்கும்போதுதான் இயக்கம் சரிவர நடக்கின்றது. இல்லையெனில், உயிரும் உணர்வும் இருந்தும் அவை இல்லாதது போலவே நாம் ஜடமாக இருக்கும் அவலத்திற்கு வாய்ப்பு இருக்கிறது.

    பொறி என்பது கருவி; அதற்கு அறிவுடைமை, விவேகம், பிரத்யட்சம் என்றெல்லாம் கூடப் பொருள்கள் உண்டு. புலன் என்பது அறிவு. குழம்ப வேண்டாம்! பல இடங்களில் பொறி, புலன் இவை ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டியது இதுதான். புலன் – பொறி, இவை இணைப்போடிருந்தால்தான் அந்தந்தப் பொறிக்கான தொழில் நடைபெறுகிறது. அதாவது, பொறி, புலனோடு பொருந்தியிருக்க வேண்டும்.

    கண், பார்த்தல் என்னும் அறிவுச் சக்தியோடு இணைந்திருக்க வேண்டும். இல்லையெனில், அது குணமற்றதே.

    இந்த இயக்கத்திற்குக் காரணம் பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வாலறிவன். அவனை வணங்கித்தான் நம்மில் எதுவும், நம் மூலம் எதுவும், நம்மாலும் சீராக இயங்க முடியும். புலன்களோடு பொருந்திக் கொள்ளாத பொறிகள் எப்படிப் பயனற்றவையோ, அதுபோலவே எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளை வணங்காத தலை, அதாவது மனித வாழ்க்கை பயனில்லை என்கிறார்.

    நம் பிஞ்சுவிரல், வள்ளுவரின் உள்ளங்கையின் வெதுவெதுப்பை நிலையாக அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமோர் அடியெடுத்து வைக்கலாமே!

    ல்லாப் பொறிகளுமே புறம்நோக்கித்தான் பொருத்தப்பட்டிருக்கின்றன. புலன்களும் பொறிகளும் சேர்ந்து புறப்பொருட்களோடு ஓயாமல் தொடர்புகொண்டபடிதான் இருக்கின்றன. இந்தத் தொடர்புகளே, நம் சித்தத்தில் பாளம் பாளமாகப் பதிந்திருக்கும் பழைய வாசனைகளைக் கிளறி, அவை ஆசைகளாய் எழுந்து, அதன்பின்னே நாம் சென்று விழுகிறோம். காற்று வந்த ஜன்னல் வழியே நாம் கீழே விழுவதுபோல், நமக்கு வந்த தபால்களின் குவியலில் நாமே மூழ்கிப் போவதுபோல், புலன்கள், பொறிகள் இவற்றின் இயற்கையான இயக்கத்தில், நாம் தொலைந்துபோகிறோம். வாழ்க்கை என்பது பிரகிருதி நம்மோடு ஆடும் ஆட்டமே. நாம் இன்பம், துன்பம் என்று சொல்வதெல்லாம், நாம் பிரகிருதியில் காணும் அனுபவங்களே. இதை உணர்ந்தவன் இன்பத்தில் ஆடுவதுமில்லை; துன்பத்தில் வீழ்வதுமில்லை. இவையிரண்டுமே இந்திரியங்களின் விளையாட்டு; அவற்றின் பின்னே இருக்கும் மனத்தின் ஓயாத சஞ்சலம்; இவையெதுவும் மேலானவை அல்ல, உண்மையல்ல, நிரந்தரமல்ல; எனவே இவை நானல்ல என்றும் உணர்ந்து, தனது இதயக் கமலத்தில் இடைவிடாது பேரொளியாய் வீற்றிருக்கும் இறைவனைச் சரணெய்துகிறான். அங்கே, ஆசாமி, சாமியாகிறான்!

    வள்ளுவர் நம்மை அழைத்துச் செல்லும் தொலைவு, அளக்க முடியாதது!

    சொல்லுக்குச் சொல் பொருள்கண்டு சுவைப்போம்.

     

    (1) கோள்

    ஒப்புரவினால் வரும் கேடெனெனின் அஃதொருவன்

    விற்றுக்கோள் தக்க துடைத்து (22 ஒப்புரவு 220)

    பரோபகாரத்தால் நமக்குக் கேடு வருமாயின், அந்தக் கேடு, நம்மையே விற்றுப் பெறத்தக்கது.

    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

    இரந்துகோள் தக்க துடைத்து (78 படைச்செருக்கு 78)

    தன்னை ஆதரித்த மன்னனின் கண்முன்னே, அவன் விழிநீர் சொரிய, போர்க்களத்தில் மாய்வது என்பது, கெஞ்சியேனும் பெறத்தக்கது.

    ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

    மேவார் இலாஅக் கடை (106 இரவு 1059)

    பிச்சை கேட்டுப் பொருள்கொள்வோர் இல்லாத போது கொடுப்பவருக்குப் புகழ் ஏது?

    இந்த மூன்று குறள்களிலும், கோள் என்றால் கொள்ளுதல் என்று பொருள் வருகிறது.

     

    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

    செய்யாமை மாசற்றார் கோள் (32 இன்னா செய்யாமை 311)

    சிற்ப்பைத்தரும் செல்வம் பெறுவதாயிருந்தாலும் இன்னொருவருக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதே குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

    கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

    செய்யாமை மாசற்றார் கோள் (32. இன்னா செய்யாமை 312)

    ஒருவன் தம் மீது பகைகொண்டு துன்பம் புரிந்தாலும், திரும்ப அவனுக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதே குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

    வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

    மாட்சியின் மாசற்றார் கோள் (65 சொல்வன்மை 646)

    தான், பிறர் விரும்பும்படி சொல்லி, பிறர் சொல்லும்போது அதன் பயனை ஆராய்தல் குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

    ஊறொரால், உற்றபின் ஒல்காமை, இவ்விரண்டின்

    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் (67 வினைத்திட்பம் 662)

    இந்த மூன்று குறள்களிலும் கோள் என்பது கொள்கை என்னும் பொருளில் வந்தது. கொள்கை என்பது துணிபு (முடிவு) என்றும் சொல்லப்படும்.

     

    (2) பொறி

     

    பொறிவாயில் என்றபோதும் பொறியில் என்னும்போதும் பொறி என்பது ஐம்பொறி என்னும் பொருளில் வருகிறது.

    பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து

    ஆள்வினை இன்மை பழி (62 ஆள்வினை உடைமை 618)

    அனுபவிக்கும் ஊழ் இல்லாது போதல் பழியாகாது. ஆனால், அறிவோடு முயற்சி எடுக்காதிருப்பதே பழி.

    இந்தக் குறளில் பொறி என்பது விதி அல்லது ஊழ் என்னும் பொருளில் வருகிறது.

     

    கோளில் பொறியில். பொறியில் = பொறியின் = பொறிபோல என்று பொருள் புரிந்துகொள்ள வேண்டும்.

    (3) தாள்

     

    கடவுள் வாழ்த்தில் காணப்படும் தாள் என்னும் சொல் அடி என்னும் பொருளில்தான் வருகிறது. அஃதல்லாமல்,

    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

    வேளாண்மை செய்தற் பொருட்டு (22 ஒப்புரவறிதல் 212)

    உழைத்துச் சம்பாதிப்பது உரியவர்க்கு உதவுதற்கே.

    மடியுளாள் மாமுகடி என்ப, மடியிலான்

    தாளுளாள் தாமரையினாள் (62 ஆள்வினையுடைமை 617)

    மூதேவி சோம்பலிலும், திருமகள் முயற்சியிலும் வாழ்கிறாள்.

    தெண்ணீர் அடுபுற்கை யாயினும், தாள்தந்தது

    உண்ணலி னூங்கியது இல் (107 இரவச்சம் 1065)

    நீர்த்த கஞ்சியானாலும், அது தான் உழைத்துச் சமைத்ததானால், அதைவிட உயர்ந்தது இல்லை.

    இந்த மூன்று குறள்களில் தாள் என்பது முயற்சி என்னும் பொருளில் வருகிறது. மேலும்,

    தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

    வேளாண்மை என்னும் செருக்கு (62 ஆள்வினையுடைமை 613)

    பிறருக்கு உதவும் மேலான நிலைமை, முயற்சி என்னும் பண்பில்தான் உள்ளது

    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை

    வாளாண்மை போலக் கெடும் (ஆள்வினையுடைமை 614)

    முயற்சி இல்லாதவன் செய்யும் உதவி, பேடியின் கையில் வாளைப் போல.

    இவ்விரண்டு குறள்களிலும் தாள், தாளாண்மையாகி, முயற்சி என்னும் பண்பு என்று பொருள் படுகிறது.

     

    (4) தலை

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

    பசும்புல் தலைகாண் பரிது. (02 வான்சிறப்பு 16)

    மழையில்லை என்றால் புல்கூடத் தலைகாட்ட முடியாது.

    செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

    காணின் கிழக்காம் தலை (49 காலம் அறிதல் 488)

    பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும். அவர் காலம் முடியும்போது அவர் தலை கீழே விழும்

    இங்கே தலை என்பது முடி என்னும் பொருளில்தான் வருகிறது.

     

    ஐம்புலத்தார் ஓம்பல் தலை (5:இல்வாழ்க்கை:43) முயல்வாருள் எல்லாம் தலை (5:இல்வாழ்க்கை:47)  மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (6:வாழ்க்கைத் துணைநலம்:57) இகழ்வார்ப் பொறுத்தல் தலை (16:பொறையுடைமை:151) என்பன போன்ற (இன்னும் நிறைய உண்டு) குறள்களில் தலை என்பது முதன்மை, சிறப்பு என்னும் பொருளில் வருகிறது.

     

    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

    உட்கோட்டம் இன்மை பெறின் (12:நடுவுநிலைமை:119)

    இங்கே, தலை என்பது உறுதி என்று பொருள்படும்.

     

    `தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்,` என்னும் பாரதியின் அமர வாசகம் இங்கே ஓரத் தக்கது.

     

    ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (36:மெய்யுணர்தல்:357)

    இங்கே தலை என்பது தெளிவு என்று பொருள்படும்.

    தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்ளாத பொறிகளால் பயனில்லை. அதுபோலத்தான் எட்டு குணங்களை உடைய இறைவனின் தாளை வணங்காத தலை. தலை என்பது இங்கே உடம்பையல்ல, மனிதனின் வாழ்வையே சுட்டுகிறது.

    ஆக,

    கொள்ள வேண்டியது அவன் தாள்களை

    கொள்கை என்பது அவன் தாள்களைப் பற்றிக்கொள்வதே

    பொறிகள் நமக்கு வாய்த்திருப்பது அவன் தாள்களில் பொருத்திக்கொள்ளவே

    ழ் என்பது உயிரான அவன் தாள்களைச் சரணெய்தியே தீரும். `ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்` என்று இளங்கோ அடிகள் பேசும்போது அங்கே தீவினை குறிக்கப்படுகிறது. திருவள்ளுவரின் ஊழ் என்பது நல்வினை, தீவினை இரண்டும் சேர்ந்தது. பிறப்பும் இறப்பும் இல்லாத பெருநிலை எய்துதற்கு நல்வினையும் ஒரு தடையே ஆதலின் `இருள்சேர் இருவினை` என்றார். எனவே, இறைவனின் தாள்களைச் சரணெய்தினால், விளைவுகளுக்குக் காரணமான ஊழ் தீரும், ஒருமை நேரும் என்று புரிந்துகொள்கிறோம். வினை என்றால் செயல். செயல் நேர்ந்தால் விளைவு என்னும் பயன் எழுந்தே தீரும். அது வினையாற்றியவனைப் பற்றத்தான் செய்யும். நமது வினைகளின் ஒட்டுமொத்தமான விளைவுகளின் தொகுதி, அவை விளையும் ரீதி, விதம், இவற்றுக்கே விதி என்று பெயர். அது, விதிக்கு உட்படாத, எந்த விதிக்கும் மூலமான இறைவனின் திருவடிகளைப் பற்றித்தான் தீரும் என்பதே வள்ளுவர் நமக்குக் கற்பிக்கும் பாடம்.

    தாள் பணிவதே நம் முயற்சி என்னும் கடன்

    தாளைப் பணிவதே முயற்சி என்னும் பண்புக்கு முத்திரை

    தாள்களே தலைக்கான இடம்.

    தாள் பணிவதே முதன்மைக் கடன்

    தாள் பணிந்து வாழ்வதே தலையாய சிறப்பு

    தாள்களில் உறுதியாக நிற்கவே தலை

    தாள்பணிந்து வருவதே தெளிவு.

    (5) எண்

     

    எண் என்றால் கணக்கு, தருக்கம்

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

    கண்ணென்ப வாழும் உயிர்க்கு (40:கல்வி:392)

    எண் என்று சொல்லப்படும் அறிவியலும் (Science) எழுத்து என்று சொல்லப்படும் கலை இயலும் (Arts) உண்மையாக வாழ்கின்றவர்கட்குக் கண்கள் என்று சொல்லுவார்கள்.

    எண் என்றால் எண்ணம்

    எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு, எஞ்ஞான்றும்

    பெண்சேர்ந்தாம் பேதைமை இல் (91: பெண்வழிச் சேறல்:910)

    சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

    எண் என்றால் எளிமை

    எண்பொரு ளாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

    நுண்பொருள் காண்ப தறிவு (43:அறிவுடைமை:424)

    எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

    தண்பதத்தான் தானே கெடும் (55:செங்கோன்மை:548)

    ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

    ஏனை இரண்டும் ஒருங்கு (76:பொருள்செயல்வகை:760)

    எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

    பண்புடைமை என்னும் வழக்கு (100:பண்புடைமை:991)

    ஆக,

    கணக்கு, தருக்கம் எல்லாம் கடவுளின் பாதத்தில் முடிகின்றன. நெஞ்சுறுதி என்பது இறைவனின் தாள்களில் நிலைத்து நிற்பதே.

    இறைவனே நெருங்குதற்கு எளியன். அவன்தாள் பணிந்தால் எதுவுமே எளிமையாகிவிடும்.

    இனி

    எண்குணத்தான் தாள் என்னும்போது குணம், வடிவம் உடைய கடவுளை மக்கள் வழிபடுவது வள்ளுவருக்கு ஏற்புடையதுதான் என்று தோன்றுகிறது.

    இப்போது எண்குணத்தான் என்றாரே, அந்த எட்டுக் குணங்கள் என்னவென்று பார்ப்போம்:

    சுயேச்சையானவன், தூய்மையே உடம்பானவன், இயற்கை உணர்வினன், அனைத்தும் அறிந்தவன், இயல்பாகவே பற்று நீங்கியவன், பேரருள் கொண்டவன், எல்லையில்லா ஆற்றல் உடையவன், அளவற்ற இன்பமுடையவன் என்று சைவாகமம் கூறும்.

    அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் அட்டமா சித்திகளே இறைவனின் எண்குணம் என்றொரு கூற்றுண்டு.

    அநந்த ஞானம், அநந்த வீரியம், அநந்த குணம், அநந்த தரிசனம், பெயரில்லான், கோத்திரமில்லான், அவாவில்லான், அழியா இயல்புடையான் என்று இன்னொரு வரிசை கூறும்.

    இன்னும் சிறப்பான பொருளும் இதற்குண்டு….

    இது ஒன்பதாவது குறள். இதற்கு முன் சென்ற எட்டுக் குறள்களிலும் இறைவனது எட்டுக் குணங்கள் கூறப்பட்டுள்ளன:

    1. ஆதிபகவன் = இறை இறைவன். ஐஸ்வரியம், வீரியம், புகழ், ஞானம், திரு, வைராக்கியம் இவை பகம் என்னும் சொல்லுக்குப் பொருளாகும். உலகத்துக்கு அவனே முதல்
    2. வாலறிவன் = தூய அறிவே வடிவானவன் pure, effulgent intelligence
    3. மலர்மிசை ஏகினான் = இதய மலரில் உறைவோன். நினைத்தால் உள்ளே தெரிபவன்
    4. வேண்டுதல் வேண்டாமை இலான் = அனைத்திலும் சமமாயிருப்பவன். விருப்பு வெறுப்பற்றவன்
    5. இருள்சேர் இருவினையும் சேரான் = நன்மை, தீமை பயக்கும் வினைகளுக்கு அப்பாற்பட்டவன். வினையிலான், வினையின் மூலம் எய்த முடியாதவன்
    6. பொறிவாயில் ஐந்தவித்தான் = புலன்கள், பொறிகள் என்னும் வரம்பில்லான். பொறிகளுக்கு மூலமாய் ஆனால் பொறிகளின் தொடர்பின்றியே இருப்பவன்
    7. தனக்குவமை இல்லாதான் = ஒப்பு, உயர்வு, நிகரில்லான். தனக்கு இணையில்லாத பெருமை உடையான்
    8. அறவாழி அந்தணன் = தருமக் கடல், அதில் தெப்பம். அறத்தின் இருப்பிடம், அருளாளன்
    9. எண்குணத்தான் – மேலே குறிப்பிட்ட எட்டு குணங்களுடையான்

     தொடருவோம்

     

    Share
  • அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்

    பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், .சு.பல்கலைக்கழகம்

    நாற்பத்து இரண்டே ஆண்டுகள் வாழ்ந்தாலும் தமிழுக்கும், தமிழ் நாடகவியலுக்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அளித்த கொடை அளப்பரியது. அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியரல்லர். தத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மலையாள மண்ணின் மைந்தனாகப் பிறந்திருந்தாலும், அவரின் தமிழ்ப் பற்றுக்கு நிகர் அவரே. மனோன்மணியம் நூலுக்கு அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், அன்றைய தமிழக அரசின் சார்பாக தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கியவர்கள், சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் இரண்டாம் பத்தியின் அனைத்து வரிகளையும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு கடைசி வரியை மட்டும் வெட்டியெடுத்து, முதல் பத்தியோடு ஒட்ட வைத்துப் புதிய தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கினர். இப்போது அந்த இரு பத்திகளையும் காண்போம்:

    நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

    சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

    எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.

    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

    எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்

    கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்

    உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்

    ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்

    சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

    (தமிழக அரசால் நீக்கப்பட்ட வரிகள் சிவப்புவண்ணத்தில் தரப்பட்டுள்ளன.)

    தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்ட அவ்வரிகள் சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழுணர்வையும், மெய்யுணர்வையும் பறைசாற்றுபவை.

    பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்

    எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்

    என்ற இரண்டு வரிகள் தரும் பொருள்: அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, முடிவில் அவைகளைத் தன்னுள் ஒடுக்கும் ஓர் எல்லையற்ற பரம்பொருளாம் இறைவன் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் எப்போதும் இருந்தபடி நிலைப்பேறாக இருப்பதைப் போல, என் தமிழ்த்தாய் என்றும் மாறாத சீரிய இளைமையோடு நிலைத்திருப்பாள் என்பதாகும்.

    இந்த இரண்டு வரிகள் சொல்லும் செய்திகள் மிகமுக்கியமானவைகள்; ஒன்று, சுந்தரம் பிள்ளையவர்கள் இறைக்கொள்கை உடையவர் என்பது; இரண்டு, தமிழ்மொழியும் இறைவனைப் போல் என்றும் மாறாத இளமையுடன் இருக்கின்றது என்பது.

    தமிழன்னையின் பெருமை சாற்றும் இந்த இரண்டு வரிகளை ஏன் நீக்கவேண்டும்?

    இந்த வரிகளில் உயர்வு நவிற்சியாக தமிழன்னை என்றுமுள்ள பரம்பொருளுக்கு இணையாக உயர்த்திப் புகழப்பட்டாள்; இவை பெருமைக்குரியவை அல்லவா? எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே! பின் ஏன் நீக்கினார்கள்? உங்களுக்குக் குழப்பமாக இருக்கிறதா? குழம்பத் தேவையில்லை! நீக்காவிட்டால், கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழக அரசு, பரம்பொருளாம் ‘இறைவனின்’ இருப்பை ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ?  தமிழக சூழலில் secular என்றால் ‘இறைமறுப்பு’ என்பதாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

    கவியுள்ளத்தைப் புறம்தள்ளி வசதிக்காக வரிகளை நீக்கியது அறமற்ற செயல்

    தமிழ்த்தாய் வாழ்த்து நாம் அரசு விழாக்களில் பாடுவோம் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடவில்லை. அவரின் ஒப்பற்ற காவியத்தில் தமிழைப் போற்றித் தொடங்கவே பாடினார். அவரின் பாடலின் கருத்துப் பிடிக்கவில்லையா? விட்டுவிட வேண்டியதுதானே! அதை விடுத்துக் கவியுள்ளத்துக்குப் புறம்பாக வெட்டி-ஒட்டுவது அறச்செயலுக்கு மாறானது. அக்காலச் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாறு போன்ற உணர்வுகளை உள்ளடக்கிப் பாடியுள்ள கவிஞரின் கருத்துக்கு மாறாக,  போற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பிக் கவிதையைச் சிதைப்பது எவ்விதத்தில் அறமாகும்?

    திராவிடக் கொள்கைகளுக்கு வலுவூட்டும் பின்னுள்ள மூன்று வரிகளை ஏன் நீக்கவேண்டும்?

    திராவிடம் திராவிடம் என்று ஒட்டுமொத்த தமிழர்களுமே திராவிடக் கருத்தியலை தங்கள் பண்பாடு என்று ஏற்கும்படிக்கு மூளைச்சலவை செய்தவர்களுக்கு, “தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே! உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்?” என்னும் பொருள்படும்

    கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும்

    உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்

    என்ற வரிகள் தேனினைப் போல அல்லவா இனித்திருக்க வேண்டும்?  பின் என் நீக்கினார்கள்? தமிழின் பெயராலும், அடுக்கு மொழிச் சொற்களாலும் ஆட்சிக்கட்டிலைப் பிடித்தோர்களில் பெரும்பான்மையினர் தமிழரல்லர் என்பதால் அவர்களுக்கு இவ்வரிகளால் தமிழுக்குப் பெருமை சேர்வதை ஏற்றுக் கொள்ள இயலவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

    ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து

    தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள்?  தமிழரல்லாத அவர்களின் உள்ளீடான ஆரியப்பற்று இவ்வரி சொல்லும் செய்தியின் உண்மையைப் பொறுத்துக் கொள்ள விடவில்லையோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை..

    பேசாப் பொருளைப் பேச . . .

    முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்ற அணி அமைப்புகள், உட்பொருள்கள், நயங்கள், செம்மைகள் அனைவரையும் வியப்படையச் செய்பவை. இதுவரை முழுவதுமாக தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடலை உள்வாங்கிச் சுவைக்க வாய்ப்புக் கிட்டாத தமிழன்பர்களுக்காகவும், தமிழ்த்தாய் வாழ்த்தின்  ‘கண்’ பற்றியும் ‘காது’ பற்றியும் மட்டும் சிந்தித்துவிட்டு, சுந்தரனார் ‘உணர்த்த விழைந்த’ செய்தியைப் பேசாமல் போவது முழுமையான பார்வையாகாது என்பதாலும், தமிழன்னையை வணங்கி இதுவரை யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிகின்றேன்.

    தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், இவ்விரண்டு பத்திகளுக்குப் பின்வருபவை எல்லாம், தமிழ்த்தாயின் பெருமையை, இரண்டு அடிகளில் ஒருபொருள் குறித்து பாடப்பட்ட பன்னிரண்டு பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன.

    கடலும் தமிழ்த்தாய்க்கு ஒப்பாகாது

    கடல் குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்

    தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே!

    “முன்னர் ஒரு காலம் பெருங்கடலையே குடித்துத் தன் வயிற்றில் அடக்கிய குறுமுனி அகத்தியர் தமிழ்மொழியின் கரை காண்பதற்காக இறைவனையே குருவாக நாடினார் என்பதால், என் தாயே! தமிழே!! தொடுகடலை உவமையாகச் சொல்லுவதுவும் உனக்குப் புகழ் ஆகாது!!!” என்று பாடிப் பரவசமடைகின்றார் கவிஞர். என்னே சுந்தரனாரின் தமிழ்ப் பெருமை! வியந்தல்லாவா போகிறோம் நாம்?

    தமிழ் இலக்கணம் எம் இறைவனுக்கே எட்டாதது!

    ஒரு பிழைக்கா அரனார் முன் உரையிழந்து விழிப்பாரேல்

    அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.

    பாண்டிய மன்னனின் ஐயத்தைத் தீர்க்குமாறும், வறுமையில் வாடும் தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தருவதற்காகவும் இறையனாரே பாடல் இயற்றிக் கொடுக்க, அப்பாடலில் ஒரு பொருட்பிழை நேர்ந்தது. அப்பிழையை தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவன் நக்கீரன் சுட்டிக்காட்ட இறைவன் பேச்சற்றுத் விழித்தார் (சிலேடையாக-தன் நெற்றிக்கண்ணை விழித்து  நின்றதாக) என்று கூறப்படும் புராணக் கதையை உயர்வு நவிற்சிகொண்டு உவமித்து, தமிழின் இலக்கணத்தின் அருமை  பெருமையைப் பறைசாற்றுகின்றார் சுந்தரனார்.

    தமிழ்மொழி உலகின்மொழி! தோற்றநாசம் அற்ற முதுமொழி!! 

    சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்

    முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.

    நம் இந்தியத் துணைக் கண்டத்துள் ஆரிய நான்மறை சாற்றும் வடமொழி ஆரியம் நுழைவதற்கு முன்பு வரை தமிழே பேச்சு மொழியாக எங்கும் இருந்தமையால், தொன்மொழியாகிய தமிழைத் ‘தோற்ற-நாசம்’ அற்றது என்று சொல்வது ஒன்றும் வியப்புக்குரியதல்ல என்கின்றார் சுந்தரனார். வடமொழியாம் ஆரியம் இங்கு வந்தேறிய மொழி என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளுறையாக உள்ளது.

    காலத்தை வென்றவள் எம்தமிழன்னை! வைகைநதி வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கடந்த தமிழேடு சொல்லும் செய்தி காலநதியால் தமிழுக்கு ஒரு அழிவும் நேராது என்பதே!!

    வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு

    காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.

    தமிழ்ஞானசம்பந்தப் பெருமானைப் ‘புனல்வாதம்’ என்னும் போருக்கு அழைத்த ‘வடமொழி விற்பன்னர்’களாம் சமணர்களின் “अश्थि नाश्थि – அஸ்தி நாஸ்தி” என்று எழுதப்பட்ட வடமொழி ஓலைச்சுவடி வைகைநதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது;

    அஸ்தி என்றால் உண்டு என்று பொருள். கடவுள் உண்டு என்று சொல்பவர்களை ஆஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது. நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள். கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது.

    இந்த அத்தி நாத்தி எழுதிய ஏட்டைத்தான் சமணர்கள் மதுரையில் சம்பந்தருடன் செய்த புனல் வாதத்தில் வைகை ஆற்றில் விட்டார்கள். சமணர்களின் ‘அத்தி நாத்தி’ ஏடு வைகை ஆற்றின் போக்குடன் அடித்துச் செல்லப்பட்டது.

    சம்பந்தர் ” வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டார். சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றில் எதிரேறி கரையையும் அடைந்தது. இவ்வாறு ஏடு எதிரேறிக் கரையை அடைந்த தலமே சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் ஆகும்.

    சம்பந்தப் பெருமானால் எழுதப்பட்ட இறைவனைப்புகழும் ஏடு – திருஏடு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்திக்கரையேறி அடைந்த அகம் என்ற காரணப்பெயரால் திருவேடகம் எனப்பட்டது. இது மதுரையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    இந்த ” வாழ்க அந்தணர்” என்ற திருப்பாசுரத்துக்கு பல தனிச்சிறப்புகள் உள்ளன.

    1. இது ஒன்றே பன்னிரண்டு பாடல்களை உடையது. மற்றைய பதிகங்கள் எல்லாம் பதினொரு பாடல்கள் கொண்டவை.
    2. இந்தப் பாசுரத்தை சம்பந்தர் தன் கையாலேயே எழுதினார். சம்பந்தரின் மற்றைய பாடல்களை ஏட்டில் எழுதி வந்தவர் அவருடைய தாய்மாமன் சம்பந்த சரணாலயர்.
    3. சைவத்தின் கொள்கை விளக்கம் செய்த பாடலும், சைவ சமயத்தை மெய்ச்சமயம் என்று நிறுவிய பதிகமும் இதுவே.
    4. இவ்வொரு பதிகத்துக்கு மட்டுமே சேக்கிழார் 22 பாடல்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
    5. முதல் ஒன்பது பாடல்களின் யாப்பு வேறு; கடைசி மூன்று பாடல்களின் யாப்பு வேறு.

    அஸ்தி நாஸ்தி அல்லது அத்தி நாத்தி என்பது சமண மதக்கொள்கை. அருகனை முதல்வனாக ஏற்ற சமணரின் ஆருகத மத மந்திரம் ” அத்தி நாத்தி”. ஒரே முடிவு என்றில்லாது பல முடிவாகக் கூறுதல். உண்டாம்-இல்லையாம், உண்டு-இல்லையாம்,  உண்டாம்-ஆயின் சொல்ல இயலாதாம், இல்லை-ஆயின் சொல்ல இயலாதாம்,  உண்டும்-இல்லையுமாம் ஆயின் சொல்ல இயலாதாம் என்பது போன்ற ஏழு பகுதிகள் உள்ளன. அதனால் இதை ஸப்த பங்கி வாதம் என்பர். ஸப்த என்றால் ஏழு.  இது சமற்கிருதமொழி அல்ல; அர்த்த மகத மொழி என்னும் வடமொழி. மகதம் என்பது இன்றைய இந்தியாவின் பீகார் மாநிலம். சமணமும் வடமொழியும் இங்கிருந்துதான் வந்தது. பல திராவிடவாதிகள் சமணம் திராவிட மதம் என்றும், திருவள்ளுவர் சமணர் என்றும், சமணம்தான் தமிழை வளர்த்தது என்று எண்ணியும், எழுதியும், பேசியும் வருவது வேறு கதை.

    மெய்யுணர்வினும் ஓங்கிநிற்கும் தமிழுணர்வு!

    ஆனால், தமிழ்ஞானசம்பந்தப் பெருமானால் தமிழில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி வைகை நதியின் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரை சேர்ந்தது என்பது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தில் வரும் தொன்மம். அத் தொன்மத்தையே சான்று காட்டி, காலமாகிய நதியின் ஓட்டம் தமிழுக்கு ஒருக்காலும் ஊறு விளைவிக்க இயலாது என்பதற்கான அறிகுறியே அந்நிகழ்வு என்கின்றார் சுந்தரனார். இதுவல்லவா மனோன்மணியம் சுந்தரனாரின் மெய்யுணர்வினும் ஓங்கி நிற்கும் தமிழுணர்வு! வார்த்தை வணிகர்களுக்குப் புரியாத நுண்நுண்ணுணர்வு!

    இறைவனே தன் கைப்படத் தமிழன்னையின் திருவாசகத்தின் படி எடுத்து எழுதிவாங்கிக் கொண்டது இறைவனின் கடையூழிக் காலத் தனிமையைக் கழிப்பதற்கே! எம் மொழிக்கும் கிட்டாத மேன்மை! ஆயின், தமிழன்றோ இறைமொழி?

    கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்

    உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே.

    ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது தமிழ்ப் பழமொழி. நம்மை யெல்லாம் உருக்கும் திருவாசகம், அன்புருவாம் இறைவனை உருக்காதிருக்குமா? திருவாசகத்தில் உருகிய இறைவன் அவ் வாசகத்தைத் தன் திருக்கரங்களால் படி-எடுக்க விரும்பினான்; ஒரு வயோதிக அடியவரின் உருவில் தோன்றி, மணிவாசகரிடம் திருவாசகத்தை மீண்டும் சொல்லுமாறு வேண்டித் தன் கைப்படவே படியெடுத்துக் கொண்டான் சிற்றம்பலமுடையான்.

    ‘மாணிக்கவாசகன் சொல்ல, அழகிய சிற்றம்பலம் உடையான் கைப்பட எழுதியது’ என்ற  அழகிய சிற்றம்பலம் உடையானின் திருவாசகப் பிரதியைச் சிற்றம்பலப் படியில் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள், மாணிக்கவாசகரிடம் சென்று, திருவாசகத்தின் பொருள் கூறுமாறு விண்ணப்பித்தனர்; ‘திருவாசகத்தின் பொருள் அம்பலக்கூத்தனே’ என்று கூறிவிட்டு, மணிவாசகர் இறைவனுடன் கலந்தார் என்பது தொன்மம்.

    இங்கும் மெய்யுணர்வினும் ஓங்கியது தமிழுணர்வல்லவா?

    இத்தொன்மத்தின் அடியாகப் பிறந்தது இவ்விரண்டு வாழ்த்து வரிகள்; என்ன அற்புதமான உயர்வு நவிற்சி! கடையூழிக் காலத்தில் அனைத்தும் ஒடுங்க, இறைவன் மட்டுமே தனித்திருப்பான்; அவன் மீளவும் இப் பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்பு, ஒரு சிறிய இடைவேளை, ‘Small Break” வருமல்லவா? அப்போது, எம் தமிழன்னையின் திருவாசகத்தின் துணைகொண்டே அத் தனிமையை இறைவன் போக்கிக் கொள்வான்; அத்துணை பெருமை கொண்டது எம்தமிழ் என்று இறுமாக்கின்றார் சுந்தரனார்; இவ் வுணர்வெல்லாம் மெய்யுணர்வினும் ஓங்கிய தமிழுணர்வல்லவா?

    சங்கப் பலகை தமிழின் உண்மை வரலாற்றுக்குச் சான்று 

    தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை

    மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.

    தகுதியுடைய நூலுக்கே மதுரைச் தமிழ்ச்சங்கப் பலகை விரிந்து இடம் கொடுக்கும் என்பது மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம் என்று தமிழ் மொழியின் மெய்ச் சரிதத்தை வியந்து போற்றுகின்றார் கவிஞர். இங்கு “வியஞ்சனம்” என்ற சொல் “குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்” என்ற பொருளாகும்.

    வடமொழி உயர்வென்றும் தமிழ் மொழி அன்றென்றும் கூறுவோர் மதியிலாரே

    வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்

    கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.

    வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்

    கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.

    கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்

    வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.

     பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

    எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

    ஆரியமொழியே உயர்வென்ற, மனோன்மணியம் சுந்தரனாரின் காலத்திலிருந்த மக்களின் மனநிலையை மேற்கண்ட பாடல்கள் பதிவிட்டிருக்கின்றது. தமிழ்மொழியின் மேன்மை அறியாதவரே நிறைந்திருந்த காலம் என்பதை உணர்த்தும் பாடல்கள் இவை. சுந்தரம் பிள்ளையவர்களின் பின் கா.சு.பிள்ளை, மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் போன்றோரின் அரும்பணிகளால் தமிழன்னையின் பெருமை மீட்டெடுக்கப் பட்டது எனினும், இன்னும் அச்சப்பாடுகள் முற்றிலும் நீங்கிவிடவில்லை.

    பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் ஒருகுலத்துக்கு ஒரு நீதி : குறள் நீதியும் மநுநீதியும்  

    வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

    உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி

    அனைத்து உயிர்களும் பிறப்பினால் ஒருவரே! அவரவர் செய்யும் தொழில் காரணமாகவே சிறப்புகள் வேறு வேராகக் காணப்படுகின்றன என்னும் குறள் கூறும் அறநெறியையும், நீதியையும் உணர்ந்தோர்கள் குலப் பிறப்பின் காரணமாகவே அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் என்று மனிதகுலத்திற்குள் வேற்றுமை பாராட்டும் மநுநீதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நீதியாம் குறள்நீதியின் மேன்மையையும், வடமொழி நீதிநூலாம் மநுநீதியின் மானுடத்திற்குப் புறம்பான தீமையையும் தமிழர்களுக்கு இனம் காட்டுகின்றார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள்.

    திருவாசகத்தில் கரைந்தோர்கள் பிறவொன்றையும் கருதார்

    மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்

    கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

    ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று பழமொழி கண்டவர் தமிழர்.  மனித மனங்களைக் கரைத்து, மனமாசுகளை நீக்கும் திருவாசகத்தில் கரைந்துபோனவர்கள் வேறு எந்த மந்திர உருவேற்றும் கண்மூடிக் கதறும் வழிபாடுகளை இயற்றமாட்டார்கள் என்று உறுதிபடக் கூறுகின்றார். திருவாசகத்தில் கரைந்துபோன அனுபவத்தையல்லவோ மேலை ஆரியரும் உணரும் வண்ணம் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உணர்த்துகின்றது. தமிழ்த் திருவாசகம் போலன்றி, ஆரியமொழி ஆரவார மந்திரங்கள் சடங்குகளே அன்றி உள்ளம் ஒன்றி வழிபாடியற்ற துணைபுரியா என்பது இங்கு தமிழின் மேன்மை குறித்து வலியுறுத்தப் பெறுகின்றது.

    இறுதியாக,

    மலையாள மண்ணில் ஆலப்புழை என்ற ஊரில் பிறந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ் மொழியையே தாயாகப் பாவித்து வந்தவர்; அவரல்லவோ உண்மையான தமிழர்? இச்செய்தியைப் பறைசாற்றும் அவர்தம் தமிழ்த்தாய் வாழ்த்தின் நிறைவுப் பகுதி இதோ:

    நிற்புகழ்ந்து ஏத்துநின் நெடுந்தகை மைந்தர்

    பற்பலர் நின் பெரும் பழம்பணி புதுக்கியும்

    பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்

    நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்

    அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்

    கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்

    ஆயினும் நீயே தாய் எனும் தன்மையின்

    மேய பேராசை என் மீக்கொள ஓர்வழி

    உழைத்தலே தகுதி என்று இழைத்த இந் நாடகம்

    வெள்ளியது எனினும் விளங்கு நின் கணைக்காற்கு

    ஒள்ளிய சிறு விரல் அணியாக்

    கொள் மதியன்பே குறியெனக் குறித்தே.

    -மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை

    நிறைவாக,

    யாம் பெற்ற இன்பமாம் இவ்வுணர்வரிய தமிழ்த்தாய் வாழ்த்தின்பத்தை தமிழர் அனைவரும் பெற்று, எம் ஊன் பற்றி நின்ற தமிழ் உணர்வது ஓங்கி, அன்பால் அனைவரும் இன்புறப் பணிசெய்து, நிலமிசை தமிழால் இசைபட வாழ்ந்து, மறைத்தமிழ் கொண்டு வான் பற்றி நின்ற மறைப்பொருளோடு இரண்டறக் கலந்து இன்புற்று வாழ்க. (இந்நிறைவுரை, திருமூலதேவ நாயனாரின் திருமந்திரத்தில் உள்ள

    ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

    வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

    ஊன் பற்றி நின்ற உணர்வு மந்திரம்

    தான் பற்றப் பற்றத் தலைப்படும்தானே.’ என்ற ஊன் கலந்த பாடலால் நிறைந்தவை)

    பெறர்க்கரிய இத் தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழராம் யாம் அனைவரும் பெற்றின்பமுறத் தந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நன்றி கூற இவ்வொரு பிறவி போதுமா? நும் தமிழ் நுகர, நும் தமிழ் வாழ்த்த, யாம் பல்லாயிரம் மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே! தமிழ்த்தாய்க்கும், நுமக்கும் யாம் கூறுதும் பல்லாண்டு!!

    தமிழால் இணைவோம்! தமிழாய் வாழ்வோம்!!

    Share
  • வாசிப்பு – ஒரு கலை !

    எம்.ரிஷான் ஷெரீப்

    ‘வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்’ என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கும். அது ‘வாசிக்கும் கலை’ எனப்படுகிறது.

    வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R (எஸ்.க்யூ.த்ரீ.ஆர்) முறை பிரபலமான ஒரு முறை. இங்கு SQ3R முறையின் கீழ் புத்தகமொன்றை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

    S – Survey ( தேடிப் பார்த்தல்)

    Q – Question ( கேள்வி எழுப்புதல்)

    R – Read (வாசித்தல்)

    R – Retrive ( மீளவும் பார்த்தல்)

    R – Review (விமர்சித்தல்)

    இங்கு முதல் படிமுறை S – Survey ( தேடிப் பார்த்தல்) ஆகும். தேடிப்பார்ப்பதில் நூலின் பெயர், நூலாசிரியர், பிரசுரிக்கப்பட்டுள்ள ஆண்டு, முன்னுரை மற்றும் அறிமுகம், பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமாகும். நூல் குறித்த கேள்விகளை எழுப்புவது இரண்டாவது படிமுறையாகும்.

    இந்த நூலை வாசிப்பதால் எனக்குப் பயனிருக்குமா?’

    இதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் என்னென்ன?’

    போன்ற கேள்விகளை எழுப்பி விடை கண்டுகொள்வது அவசியமாகும். அவ்வாறு விடைகளைக் கண்டுகொண்ட பிற்பாடு, அந் நூலை வாசிக்க ஆரம்பிப்பது மூன்றாவது படிமுறை. மிகுந்த அவதானத்தோடு புத்தகங்களை வாசிப்பது மிக முக்கியமானது. அவ்வாறு அவதானத்துடன் வாசிப்பதோடு, வாசித்த விடயங்களை மீளவும் மனதிற்குள் மீட்டிப் பார்ப்பது நான்காவது படிமுறை. இவ்வாறு செய்யும்போது நீங்களே அந் நூல் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். அடுத்ததாக இங்கு ஐந்தாவது படிமுறையானது, முழுமையாக நூலை வாசித்து முடித்த பிற்பாடு, அந் நூல் குறித்து விமர்சிப்பதாகும்.

    இந்த வழிமுறையில் புத்தகமொன்றை வாசித்து முடித்த பின்பு, உங்கள் அறிவு விருத்தியாகியிருப்பதோடு, மனதும் மகிழ்வுடன் இருக்கும். இதனால் வாசிக்கும் ஆர்வமும் அதிகரித்து, நேரமும் பயனுள்ள முறையில் கழியும்.

    மாணவர்கள் பரீட்சைகள் எழுதிவிட்டு, பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலகட்டமானது தரமான புத்தகங்களை  வாசிப்பதற்கென உகந்த காலம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களது நேரத்தைப் பயனுள்ளதாக்குவதோடு, நல்லதொரு வழிகாட்டியையும் அவர்களுடனேயே இருக்க வைப்பது போலாகும்.

    சிந்திப்போம் !

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 67

    பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா

    முனைவர்.சுபாஷிணி

    மேலை நாடுகளில் தங்கள் நாட்டு அரும்பொருட்களைச் சேகரித்து வைப்பது போல அல்லது அதற்கும் சற்று கூடுதலான ஆர்வத்துடன் ஆசிய, ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளின் அரும்பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வம் இருப்பது, இந்த நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் போது உணர முடியும். ஆசிய நாடுகளுக்கே உரித்தான இறைவடிவங்கள், எழுத்து முறை வளர்ச்சி தொடர்பானவை, நூல்கள், இலக்கியங்கள் என்பனவோடு விலை உயர்ந்த கற்கள், பொன், வைடூரிய ஆபரணங்கள் என்ற வகையிலும் தங்கள் சேகரிப்புக்களை இத்தகைய அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் எகிப்திய பண்டைய நாகரிகத்தின் சின்னங்களும், இந்திய உபகண்டத்தின் சமயச்சின்னங்களும், சீன தேசத்தின் மன்னர்களின் உடமைப் பொருட்களும், ஆப்பிரிக்க தேசத்தின் ஆதிவாசிகளின் நம்பிக்கைக்கு உரிய பொருட்களும் இவ்வகை சேகரிப்புக்களில் முக்கியமானைவையாக இடம்பெறுகின்றன. ஐரோப்பிய நாடுகளின் பெரும் நகரங்களில் உள்ள ஏறக்குறைய அனைத்து அருங்காட்சியகங்களிலும் இத்தகைய சேகரிப்புக்களைப் பார்த்திருக்கின்றேன்.

    as1
    அண்மையில் வட அமெரிக்கா சென்றிருந்தபோது நான் சென்று வந்த சில அருங்காட்சியகங்களில் இத்தகைய அரும்பொருட் சேகரிப்புக்களைப் பார்த்தேன். அத்தகைய அருங்காட்சியகங்களில் ஒன்றுதான் பிலடெல்ஃபியா அருங்காட்சியகம்.

    திரு.நரசய்யா அவர்கள் எழுதி வெளியிட்ட ஆலவாய் நூலை வாசித்த போது மதுரையிலிருந்த ஒரு கோயிலின் சில பகுதிகள் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டதை அவர் குறிப்பிட்டிருந்தது என் நினைவில் இருந்தது. அதனை நேரில் சென்று பார்ப்பதுடன் இங்குள்ள ஏனைய அரும்பொருட்களையும் காணும் ஆவலுடன் இங்கு சென்றிருந்தேன்.

    as2

    இந்த அருங்காட்சியகத்தின் மூன்றாம் மாடியில் சில கோயில்களின் மண்டபங்களும் கருவறைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட கோயிலில் ஒரு பகுதியானது ஸ்ரீ மதனகோபாலசுவாமி கோயில் மண்டபம். மதுரையிலிருந்து இந்த கோயில் மண்டபத்தை அமெரிக்காவிற்கு கொண்டு வந்திருக்கின்றனர். 1912ம் ஆண்டில் திருமதி அடலீன் பெப்பர் என்பவர் இதனை மதுரையில் காசு கொடுத்து வாங்கியிருக்கின்றார். பின்னர் அவரது மகள் சூசன் பெப்பர் இந்த மண்டபத்தை பிலடெல்ஃபிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்.

    as3

    இன்று தான் கோயில் கலைப்பொருட்கள் ஒரு சில சமூக விரோதிகளால் கொள்ளயடிக்கப்பட்டு திருடப்படுகின்றன என்றால் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிப்படையாக காசு கொடுத்து ஒரு அம்மையார் கோயில் மண்டபத்தையே வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது திகைக்க வைக்கின்றது தானே. இந்தக் கோயில் நாயக்கர் காலத்தில் அதாவது கிபி 1550ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட கோயிலென இங்குள்ள குறிப்பில் காணலாம்.

    நான் சென்றிருந்த நேரத்தில் இப்பகுதியை சீரமைப்பு செய்து கொண்டிருந்தமையால் என்னால் சரியாகப் புகைப்படம் எடுக்க இயலவில்லை. இருட்டாக ஒளி வெளிச்சம் குறைந்த நிலையில் இருந்ததால் புகைப்படம் சரியாக எடுக்க இயலவில்லை. இவை கருங்கற்களால் ஆன தூண்கள். நாயக்கர் கால அமைப்புடன் கூடியவை. கோயில்களில் நாம் காணும் கற்தூண்களில் பொறுத்திய சிற்பங்கள் என வரிசையாக இவை இங்கே உள்ளன. அருங்காட்சியகத்திற்குள் நம் கண்கள் பழகிய ஒரு கோயிலைக் காண வியப்பாகத்தான் இருந்தது. 1940ம் ஆண்டு தொடங்கி இந்த மண்டபம் பொது மக்கள் பார்வைக்காக இங்கே இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் வருவோரின் கண்களுக்கு இது விருந்து.

    பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம் திங்கள் தவிர ஏனைய நாட்களில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அருங்காட்சியகத்தின் முகவரி, 2600 Benjamin Franklin Parkway, Philadelphia, PA 19130.

    as4

    ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பழமையானது இந்த அருங்காட்சியகம். 1876ம் ஆண்டில் தொடங்கப்பட்டு பின்னர் இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்கள் படிப்படியாக விரிவாக்கம் கண்டன. இங்குள்ள மேலும் சில அரும்பொருட்கள் பற்றி அடுத்த பதிவில் தொடர்கின்றேன்.

    தொடரும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(132)

    செண்பக ஜெகதீசன்

     

    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்          

    மேற்சென் றிடித்தற் பொருட்டு.   

           –திருக்குறள் –784(நட்பு)

     

    புதுக் கவிதையில்…

    சிரித்து விளையாடுவதல்ல

    சிறந்த நட்பு,

    தவறான வழிசெல்லும் நண்பனைத்

    திருத்திட

    தட்டிக்கேட்டு சரிசெய்வதே…!

     

    குறும்பாவில்…

    சிரிப்பதற்கல்ல நட்பு

    சீராக்கிட,

    தவறும் நண்பனைத் தட்டிக்கேட்டு…!

     

    மரபுக் கவிதையில்…

    என்றும் நல்ல நட்பென்பது

         எதற்கும் சிரித்து விளையாடும்

    ஒன்றும் உதவா உறவல்ல

       ஓசைச் சிரிப்பில் பயனில்லை,

    சென்றிடும் நட்புப் பாதையிலே

      செயலில் தவறிடும் நண்பனைத்தான்

    அன்புடன் இடித்துத் திருத்துவதே

      ஆக்க மான நட்பாமே…!

     

    லிமரைக்கூ…

    நட்பல்ல வீணாய்ச் சிரிப்பது

    தவறும் நண்பர் திருந்திட இடித்துரைப்பதே

    நட்பெனும் பெயரைத் தரிப்பது…!

     

    கிராமிய பாணியில்…

    நல்லதில்ல நல்லதில்ல

    நட்பதுதான் நல்லதில்ல,

    சிரிச்சிப்பேசி நேரம்போக்கும்

    நட்பதுதான் நல்லதில்ல..

     

    நட்பிதுதான் நட்பிதுதான்

    நம்பிக்கையான நட்பிதுதான்,

    கெட்டவழில நண்பன்போனா

    கேட்டுத் திருத்துற

    நட்பிதுதான் நட்பிதுதான்

    நம்பிக்கையான நட்பிதுதான்,

    உண்மயான நட்பிதுதான்…!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 218

    –மலர் சபா

    மதுரைக் காண்டம் 11: வஞ்சின மாலை

    வேறு ஒருவன் தன்னைத் தவறாகப் பார்ப்பது கண்டு,
    “நிறைமதி போன்ற முகத்தைக்
    குரங்கு முகம் ஆக்குக” என்று கூற,
    அவ்வாறே அந்த முகத்தில் இருந்து,   paththini
    வெளியூர் போன கணவன் வீடு திரும்பியதும்
    குரங்குமுகம் நீக்கி இயல்பான முகம்கொண்ட
    சிவப்பு மணிகள் பொருந்திய மேகலை அணிந்த
    அல்குலை உடைய
    அவளும் ஒரு பத்தினிப் பெண்.

    மகளிர் அறிவு என்பது அறியாமை உடையது என
    மேலோர் கூறிய வார்த்தையின் அர்த்தம் உணராது
    பின்வருவது பற்றி ஆராயாது,
    தன் சிறுவயதுத் தோழியுடன் வண்டலாடும்போது,
    “ஒள்ளிய தொடியுடையாய்!
    நான் ஒரு மகளும் நீ ஒரு மகனும் பெற்றால்
    உன் மகனே என் மகளுக்குக் கணவன் ஆவான்” என்றேன்.

    இன்று மணப்பருவம் என் மகள் எய்திய வேளையில்
    என் தோழி ஆண் மகவைப் பெற்றிருக்கிறாள்.
    என் உறுதிமொழியை நினைவுபடுத்தி
    அவள் பெண் கேட்கிறாள்.
    அச்செய்தியை நான் கேட்டதால் 
    மிகவும் துயரம் அடைகிறேன் எனத்
    தன் தந்தையிடம் தாய் கூறியதை மகள் கேட்டாள்.

    தாயின் மொழியை நிறைவேற்றுவதற்காகத்
    தானாகவே முன்வந்து புத்தாடை உடுத்திக்
    கூந்தல் சீவி மணப்பெண்ணாய் உருவெடுத்து,
    தன் தாய் கூறிய அந்த ஆண்மகவைக் கணவனாய்க் கொண்டு
    அவன் கைபிடித்துத் தன் தலையில் சுமந்து வந்தாள்.
    திருமகள் போன்ற சிறப்பான
    அவளும் ஒரு பத்தினிப் பெண்.

    தேன்நிறை கூந்தலையுடைய
    பத்தினிப் பெண்கள்
    இத்தகைய சிறப்புப் பொருந்தியவர்கள்
    பலரும் பிறந்த புகார் நகரில் தான் நானும் பிறந்தேன்.

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (16)

    நிர்மலா ராகவன்

    காதல் வந்துவிட்டதே!

    நலம்-1-2

    பல ஆண்கள் என்மீது ஒருதலைப் பட்சமாக காதல் கொண்டிருந்தார்கள். எனக்கு அதனால் பெருமையோ, படபடப்போ எழவில்லை. மாறாக, சிரிப்புதான் வந்தது — அவர்கள் நான் பெற்ற குழந்தைகளைவிட இளையவர்கள் என்பதால்.
    ஆம், என்னிடம் படித்த மாணவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

    `டீச்சர்! ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?’ என்ற சீன இளைஞரை ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒன்றில் சந்தித்தேன்.

    `எங்கள் பள்ளியில் நான் கவுன்சிலர். நான் மாணவிகளுக்கு அறிவுரையோ, நல்லதொரு வழிகாட்டலோ வழங்கினால், உடனே காதல் கடிதம் எழுதிவிடுகிறார்கள். என்ன செய்வது?’

    `இது தவிர்க்க முடியாதது!’ என்றேன், பதிலுக்கு.

    எந்த ஆணை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். பதினான்கு வயதில் ஏதாவது ஒரு ஆசிரியைமீது காதல் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்தக் காதல் வித்தியாசமானது. இதில் காமக்கலப்பு கிடையாது. `இந்தமாதிரி ஒரு பெண்ணைத்தான் நான் மணக்க வேண்டும்!’ என்ற ஆசைதான் தோன்றுமாம். (நான் சில ஆண்களைக்கேட்டு அறிந்த ஞானம்!). அவர்கள் குடும்பத்திலுள்ள அம்மா, அக்கா முதலிய பெண்களிலிருந்து ஏதோ ஒரு விதத்தில் இந்த ஆசிரியை வேறுபட்டிருப்பார்.

    மார்க் என்ற பையன் விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்தில் எதைச் செய்யவும் அஞ்சுவான். `ஐயே! உடம்புதான் பெரிசு! பயந்தாங்கொள்ளி!’ என்று வகுப்பில் பெருவாரியாக இருந்த மலாய் மாணவர்கள் அந்த இந்தியப் பையனைக் கேலி செய்வார்கள்.

    ஏன் அப்படி இருக்கிறான் என்று அவனைத் தனியாக அழைத்து விசாரித்தேன். அவனுடைய தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்றும், அம்மா ஒரே மகனான அவனைப் பொத்திப் பாதுகாக்கிறார்கள் என்றும் அவன் கூறியதிலிருந்து புலப்பட்டது.
    அடுத்த முறை, `நீ இந்தப் பரிசோதனையைப் பண்ணு. நான் பக்கத்திலேயே நிற்கிறேன். ஒன்றும் ஆகாது!’ என்று தைரியம் அளித்துப்பார்த்தேன்.

    `உயிருக்கு ஒன்றும் ஆகாதே?’ என்று சந்தேகப்பட்டான்.

    `அப்படி ஆனால், நான்தான் போலீஸில் மாட்டிக்கொள்வேன்!’ என்று நான் சிரிப்புடன் கூற, சற்றுத் துணிந்தான். நாளடைவில், அவனுடைய தைரியம் பெருகியது. சற்று அபாயகரமாகவே நடக்க முனைய, நான் கண்டித்தேன். ஆனால், அவன் நல்லவிதமாக மாறிவிட்டான் என்ற பெருமிதமும் எழாமலில்லை.

    தானும் பிறரைப்போல தைரியசாலிதான் என்ற நம்பிக்கையும், அதனால் மகிழ்ச்சியும் எழ, அந்தக் குணம் வெளிப்படக் காரணமாக இருந்த ஆசிரியைமேல் ஈர்ப்பு வந்தது அந்தப் பையனுக்கு.

    ஒரு நாளைக்குப் பலமுறை என்னைத் தற்செயலாகப் பார்ப்பதுபோல் சந்தித்து, `இன்று உங்களுக்கு ஐந்து முறை குட்மார்னிங் சொல்லிவிட்டேன்!’ என்று பெருமிதப்படுவான். `எங்கள் வகுப்புக்கு வாங்களேன்!’ என்று, நான் இன்னொரு வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்து கெஞ்சுவான்.

    ஒரு நாள் பள்ளி ஆரம்பிக்குமுன் என் அறைக்கு வந்து, `டீச்சர்! உங்கள் கணவர் எங்கு உத்தியோகம் பார்க்கிறார்?’ என்று விசாரிக்க, நான் சற்று கோபத்துடன், `நான் என் குடும்ப விவகாரங்களை மாணவர்களுடன் விவாதிப்பதில்லை,’ என்றேன்.

    மார்க் மனந்தளராது, `எங்கம்மாவுக்கு அவரைத் தெரியுமாம்,’ என்றான். நாங்கள் இருவரும் ஏதோ விதத்தில் நெருங்கிவிட்டதைப்போல ஒரு பூரிப்பு அவனிடம்.

    அந்த ஆண்டின் இறுதியில் மார்க்கின் போக்கில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. பிறரும் அவனை முன்போல் கேலி செய்யாமல் ஏற்றுக்கொண்டார்கள்.

    அதற்கடுத்த வருடம் நான் அவன் வகுப்பில் பாடம் நடத்தவில்லை. ஆனால், என் வருகைக்காகக் காத்திருப்பவன்போல் பள்ளிக்கூட வாசலில் இருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். முகம் வேறு பக்கம் திரும்பியிருக்கும். உடலில் படபடப்பு தெரியும். கைகள் இறுகியிருக்கும். ஒருவழியாக, `குட்மார்னிங், டீச்சர்!’ என்று திக்கித் திணறிச் சொல்வான். சற்று வளர்ந்திருந்ததால், தன் போக்கில் அவனுக்கு வெட்கம் உண்டாகியிருந்தது.

    நான் வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்றிப் போனபின், ஒரு நாள் மார்க்கை ஒரு பேரங்காடியில் பார்த்தேன். பெரியவனாக வளர்ந்திருந்தான். `ஹலோ, மிஸஸ். ராகவன்,’ என்றபடி, முகத்தைச் சட்டென திருப்பிக்கொண்டு, உடலை விறைத்தபடி நகர்ந்தான். அவன் பின்னாலேயே வந்துகொண்டிருந்த அம்மாவும், அக்காளும் பெரிதாகச் சிரித்தபோதுதான் எனக்கு விஷயம் விளங்கியது. என்னைப்பற்றி எப்போதும் வீட்டில் பேசிக்கொண்டிருப்பான் போலும்! வேறு சிலரும் இப்படி இருந்தார்கள்.

    அந்தந்த வயதில் ஏற்படும் உணர்வுகள் ஒருவருக்கு உண்மையாகத்தான் இருக்கும். அதைக் கேலி செய்யாது ஏற்கவேண்டும். ஒரு குழந்தை இடியோசை கேட்டு அஞ்சுவதுபோல்தான் இதுவும்.

    இதையெல்லாம் சீன நண்பரிடம் கூறினேன்.

    அவர் சமாதானம் அடையாமல், `இதை எப்படித் தவிர்ப்பது?’ என்று துளைத்தார்.

    எனக்கு வேறொரு நிகழ்ச்சி நினைவில் எழுந்தது. நீச்சல் குளத்தில் வேலையாக இருந்த ஜூல்கிஃப்லி என்ற ஒரு மலாய் இளைஞன் வேறு மாநிலத்திலிருந்து வந்திருந்தான். கோலாலம்பூரில் எல்லாமே அவனைப் பயப்படுத்தியது. நான் `குட்மார்னிங்¸ ஜூல்!’ என்று கூற, உற்சாகமாக என்னிடம் பேச்சுக்கொடுப்பான்.

    பிற பெண்கள் ஜூல்கிஃப்லியை வேலைக்காரன்போல் நடத்தியதைப்போல் இல்லாது, ஒரு நண்பனிடம் பழகுவதுபோல் அவனிடம் பேசினேன்.

    அவன் வயதில் மகள், மாப்பிள்ளை எல்லாரும் வீட்டில் இருக்கிறாள், ஆனால் நான் அதிகாலையில் நீஞ்ச வந்துவிடுவேன் என்று கேட்டு அவனுக்கு ஒரே ஆச்சரியம்: `எல்லாரும் காலை உணவுக்கு என்ன செய்வார்கள்?’

    `அது அவர்கள் பாடு!’ என்றேன், அலட்சியமாக.

    அவன் அதிர்ந்து போனான்.

    திடீரென்று ஒருநாள் உடலை நெளித்துக்கொண்டு, `எனக்கு எப்போது ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுக்கப்போகிறீர்கள்?’ என்று கொஞ்சலாகக் கேட்டானே, பார்க்க வேண்டும்! இப்போது நான்தான் அதிர்ந்தேன். திசை தெரியாது தவித்த ஒருவனுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று நினைத்து நான் பேசப்போக, இப்படி ஒரு திருப்பமா!
    அவன் முதுகில் பளாரென்று அறைவிட்டு, `ரொம்பப் பேசாதே! போய் வேலையைக் கவனி!’ என்று மிரட்டினேன்.

    அதன்பின் ஜூல்கிஃப்லி என்னிடம் வாலாட்டவில்லை. `

    சே! இவளும் நம் அம்மாபோல் இருக்கிறாளே!’ என்ற கசப்பான உண்மை புரிந்திருக்கும்.

    சீன நண்பரிடம் கூறினேன், `மாணவிகளை நீங்கள் அடிக்க முடியாது. ஆனால், நீங்கள் சிடுசிடுத்தாலே போதுமே! உங்கள்மீதுள்ள மோகம் போய்விடும்!’

    அவர் பெருமூச்சு விட்டார். `பிரச்னை’ என்று தன்னை நாடி வருகிறவர்களின் மனதை மேலும் நோகடிக்க வேண்டுமா என்ற குழப்பம் அதில் தெரிந்தது.

    தொடருவோம்

    Share
  • புதுக்கவிதையின் நோக்கும், போக்கும்

    –க.தமிழ் அழகன்

    Thamizhazhaganஆதி இலக்கியங்கள் கவிதை வடிவின. தொல்காப்பியம் கூறும் செய்யுளியல் இலக்கணம் அவர்காலத்திற்கு முன்னர் எழுந்த இலக்கியங்களின் வடிவங்களை விளக்கும். காரிகை கற்று எவரும் கவிதை இயற்றுவதில்லை. ‘யாப்பருங்கலக்காரிகை’ எனும் யாப்பிலக்கணநூல் தொல்காப்பியத்திற்குப் பின்னர்த் தோன்றியது.

    வடிவம் மட்டும் கவிதையாகிவிடாது. தேமா, புளிமா சேர்க்கையோடு எதுகை, மோனையுடன் கருத்துணர்வு நிலையும் சேர்ந்தால்தான் கவிதை உயிர்பெறுகிறது. தற்காலத்தில் கவிஞர்கள் பலர் முற்றிலும், வடிவிலும், பொருளிலும் மாறுபட்டுப் புதிய பிறவியாகக் காட்சியளிக்கும் புதுக்கவிதைகளை இயற்றிவருகின்றனர். அத்தகைய புதுக்கவிதைகளின் நோக்கும் போக்கும் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    நோக்கம்

    அக்காலக் கவிதைகளில் அகமும், புறமும் பாடுபொருளாயின. இன்று மனிதசமுதாயத்தின் பல்வேறு படிநிலைகள் பாடுபொருளாக்கப்படுகின்றன. நிற்கவே நேரமில்லாத இயந்திர உலகத்தில் விரைந்து படிக்கவேண்டும். எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகக் கவிஞர்கள் தத்தம் அனுபவக் கருத்துக்கள் விரைவில் மக்களைச் சென்றடைய வேண்டும் எனக் கருதுகின்றனர்.

    ‘சொல் புதிது, பொருள் புதிது’ என்று பாரதி கூறியிருப்பதும் மரபிலிருந்து மாற்றம் தேவை என்பதையே குறிக்கிறது. அதனால்தான் மானிடவர்க்கத்தின் பாடுகளையும், பட்டினிக்கோலங்களையும், பெண்களின் நிலைகளையும் கருத்துப்பொருளாகக் கொண்டு படைப்புகளைப் படைக்கின்றனர்.

    புதுக்கவிதை பிரெஞ்சுப்புரட்சியின் விளைவாகப் பிரான்சு நாட்டில் தோன்றியதாகும். ஆங்கிலக் கவிஞர் ‘வால்ட் விட்மன்’, ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதையைப் படைத்தார். தொடக்க காலத்தில் ஆங்கிலம் படித்த கவிஞர்கள் மட்டுமே பிறநாட்டுக் கவிஞர்களின் புதுக்கவிதைகளைப் படித்துத் தமிழ்மொழியில் புதுக்கவிதைகளை எழுதினர். எனினும் கவிதை வடிவங்களில் காலந்தோறும் புதுமைகள் நிகழ்ந்துள்ளன. நாட்டுப்புறப் பாடல்களிலும் புதுக்கவிதைகளின் வடிவங்களைக் காணலாம். ஜப்பான் நாட்டு ’ஹைகூ’ கவிதைகள் தமிழில் ’குறும்பாக்கள்’ தோன்றக் காரணமாயின. இருப்பினும், தமிழ் விடுகதைப்பாடல்களை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

    எருக்கிலைப் பழுப்பதேன்?
    எறுமைக்கன்று சாவதேன்?”
    ”பாலின்மையால்

    இவ்விடுகதைப் பாடல் ஜப்பானிய ‘ஹைகூ’ பாடலின் வடிவம் கொண்டதுதான் என்றாலும், ஒலிநயச் சேர்க்கை இருப்பதாலும், எதுகை மோனை அமைவதாலும், இதனை மரபுக்கவிதையில் அடக்கிவிடுகின்றனர். கருத்து வடிவத்தை நோக்கின் இது ஹைகூ வடிவமேயாகும்.

    மரபுக்கவிஞர்கள் உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி போன்ற உத்திகளைப் பயன்படுத்தி யாப்பிற்கு உட்பட்டு கவிதைகளை யாத்தனர். அவற்றைப் புரிந்துகொள்ள விளக்கவுரை, பொழிப்புரை, கருத்துரை என உரையாசிரியர்களின் உரைவிளக்கங்கள் தேவைப்பட்டன. புதுக்கவிதைப் படைப்பாளர்கள், உருவம், உள்ளடக்கம், படிமம், குறியீடு, அங்கதம், முரண் என்பன போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தி யாப்பின்றி கவிதைகளை எழுதுகின்றனர். மரபு மீறலிலும் புதுமைகள் பொலிகின்றன. புதிய வகையான உவமைகளைப் பயன்படுத்தி யதார்த்தப்போக்கில் கருத்துக்களைக் கவிதையாக்குகின்றனர். நமக்குப் பரிச்சயமான உவமைகளைக் கையாளும்போது கவிதை சிறக்கின்றது.

    சிலர் பிற கவிஞர்களின் படைப்புகளைப் படித்துவிட்டு அதைப்போல எழுத முயல்கின்றனர். சிலர், தங்கள் விருப்பத்தை நிறைவுசெய்யும் பொருட்டு முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திக் கவிதைகளைக் குறைப்பிரசவ மாக்கிவிடுவதால் தரமற்ற கவிதைகள் தோன்றுகின்றன. அவை நீர்க்குமிழிபோல மறைந்து விடுகின்றன.

    புதிய பாடுபொருள்

    கடவுளர்களையும், அரசர்களையும் பாடிவந்த காலம்மாறி சமுதாய அவலங்களை விளக்கப் பாட்டாளிகள், பாமரர்கள், சமூக விரோதிகள், அரசியல்வாதிகள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், விபச்சாரிகள் போன்றவர்களையும் வேலையில்லாத் திண்டாட்டம், வரதட்சணைக் கொடுமை, வறுமை, லஞ்சம், பெண்ணியம், தலித்தியம் என்பன போன்ற அன்றாட நடப்புகளையும் புதுக்கவிதையின் பாடுபொருளாக்குகின்றனர்.

    படிமம்

    பொருளையும், அனுபவத்தையும், உணர்ச்சிகளையும் படிப்பவர் மனத்தில் எழுப்பிக் காட்டுவதையே ‘படிமம்’ என்கின்றோம். இன்றைய புதுக்கவிதைகள் நிலைத்து நிற்பதற்கும், இலக்கியத்தகுதி பெறுவதற்கும் படிமம், குறியீடு, அங்கதம், முரண் போன்ற கருத்துச்செறிவுகள் அவசியமாகின்றன.

    புதிதாகக் கவிதை எழுத நினைப்பவர்கள் எடுத்த எடுப்பில் காதலைப் பற்றி எழுதுகின்றனர். ஆகையால், புதுக்கவிதைகளில் காதல் கவிதைகள் பெருகிவருகின்றன.

    இனியவளே
    ஈரக்கூந்தலை இறுக்கி
    முடியாதே
    எனக்கு இதயம் வலிக்கிறது”    (த. பன்னீர்செல்வம்)

    புரியாத புதிர்

    சிலர், தம்விருப்பம்போல சொற்களைப் பயன்படுத்திப் புலனுக்கோ, புத்திக்கோ புரியாத வண்ணம் புதுக்கவிதை படைக்கின்றனர்.

    நிஜம் நிஜத்தை நிஜமாக
    நிஜமாக நிஜம் நிஜத்தை
    நிஜத்தை நிஜமாக நிஜம்
    நிஜமும் நிஜமும் நிஜமாக
    நிஜமோ நிஜமே நிஜம்
    நிஜம் நிஜம் நிஜம்”   (ஆத்மாநாம் கவிதைகள், ப. 120)

    இக்கவிதை நிஜமாகவே புரியாத புதிராகும். இவ்வகைக் கவிதைகள் படைப்பாளருக்கும், வாசகருக்கும் உள்ள தூரத்தை அதிகரிக்கின்றது.

    அரசியல்வாதி

    சமூக அக்கறையுள்ள கவிஞன் சில சமூகச்சீர்கேடுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றான். கவிஞர் ஈரோடு தமிழன்பன்,

    சலுகைகள்
    சீர்திருத்தங்கள்
    வாக்குறுதிகள்
    புரட்சித் தவத்தைக் கலைக்க
    ஆதிக்க
    புரியிலிருந்து புறப்பட்டுவரும்
    மேனகை ரம்பை
    திலோத்தமை ஊர்வசியாய்

    என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசும் அரசியல்வாதிகள் மக்களின் உள்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றார்.

    வேலையில்லாத் திண்டாட்டம்

    கவிஞர் அறிவுமதி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நிலையை,

    எம்ப்ளாய்மெண்ட்
    எக்ஸ்சேஞ்சுக்குப்
    புறப்பட்டுப்போன
    மகனிடம் கேட்டுக்கொண்டார்
    தந்தை
    என்னுடையதையும்
    ரெனிவல் செய்துகொண்டு
    வந்துவிடப்பா

    என்று பாடியுள்ளார். இக்கவிதையில் ஆங்கிலச் சொற்கள் தமிழ் ஒலிக்கேற்ப பயின்று வந்துள்ளன. இது பிறமொழிச்சொற்கள் சரளமாகக் கையாளப்பட்டுள்ள போக்கினைக் காட்டுகிறது.

    பெண்ணியக் கருத்துக்கள்

    பெண்ணிய எழுத்தாளர்கள் பலர் தங்கள் கவிதைகளில் பெண்ணியக் கருத்துக்களைக் கையாண்டுள்ளனர். கவிஞர் மு. மேத்தா பெண்சிசுக் கொலையை,

    பெண்கள் கிளிகளாம்
    உவமை சரி
    நெல்மணி

    எனும் கவிதை வரிகளில் பாடியுள்ளார். வரதட்சணைக் கொடுமையால் மணமாகாத முதிர்கன்னியான நிலையை,

    விழிகள்
    நட்சத்திரங்களை வருடினாலும்
    விரல்கள் என்னவோ
    ஜன்னல் கம்பிகளோடுதான்

    என்று கண்ணில் கனவுகளையும், நெஞ்சில் காதலையும் சுமந்துகொண்டு வாழும் பெண்களின் அவலநிலையை இக்கவிதை விளக்குகிறது.

    கவிதை என்ற சொல் மரபுக்கவிதையைக் குறித்தமையால் வடிவாலும், பொருளாலும் புதுமையாக விளங்கும் கவிதைகளைப் புதுக் கவிதைகள் என்று அழைக்கின்றனர். யாப்பு மீறல் மட்டுமே புதுக்கவிதைப் பண்பாகாது. யதார்த்தப் பாடுபொருளாலும் உணர்வு நிலையாலும், சொல்லாடல்களாலும் புதுமைபெற்று விளங்குவதால் புதுக்கவிதை நிலைத்து நிற்கிறது. ஆண் கவிஞர்களும், பெண் கவிஞர்களும் தங்கள் அனுபவங்களையும், சமூகச் சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டிக் குறைந்த அடிகளில் எளிய சொற்களைப் பயன்படுத்துவதால் புதுக்கவிதைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சிறந்த கவிதைகள் நிலைத்தும், தரமற்ற கவிதைகள் அழிந்தும் போவதை அறிய முடிகிறது.

    ***

    க.தமிழ் அழகன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    அரசு கலைக்கல்லூரி, அரியலூர்

     

    Share
  • அவன் என்னவன்!

    –கிருத்திகா

    அவன் இரண்டு நாட்களுக்குமுன்தான் எதிர் வீட்டுக்கு, அதாவது சோமுத் தாத்தாவின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்தான். யாரையும் கவரும் அழகு. இன்னும் என் கண்ணில் நிழலாடுகிறது அவனது கம்பீரமான நடையும், பார்வையும்…. அப்பப்பா!!

    இனி அவன் இங்குதான் தங்கப்போகிறான் என்பதையும் தெரிந்து கொண்டாயிற்று…  உடனே சோமுத் தாத்தாவின் வீட்டுக்கு ஓட்டம் எடுக்க மனம் துடித்தது. முடியவில்லையே….!

    என் வீட்டில் இருந்த நேரத்தைவிட அவர் வீட்டில் இருந்த நேரம்தான் அதிகம்… ஆனால் இந்த அம்மாவுக்கு என்னாயிற்று?? இதுவரை நான் அங்குச் செல்ல எந்தத் தடையும் சொல்லாதவர் அவன் வந்ததிலிருந்து அந்தப்பக்கம் பார்க்கக் கூட விடவில்லை…

    என் வீட்டு ஜன்னலில் இருந்தே எத்தனை நாள் அவனைப் பார்ப்பது..? அவனது ஒவ்வொரு கண்சிமிட்டலும் ஆயிரம் கதைகள் சொல்கின்றதே… என் நண்பர்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை, முன்பைவிட அதிகநேரம் அங்கு தான் இருக்கிறார்கள்.

    இதற்கு முடிவுகட்டியே ஆக வேண்டும்… என்ன செய்யலாம்??

    இதுதான் சரியான திட்டம்… “அம்மா… நாளைக்கு எனக்கு பரீட்சை இருக்கு… இங்க இருந்தா எனக்கு டிவி பார்க்கத் தோணும்… நான் போய் மொட்டை மாடில உட்கார்ந்து படிக்கறேன்….”

    “என்னடா தங்கம்.. இங்க வா.. உனக்கு உடம்பு சரியில்லையா..? படிக்கறன்னு சொல்ற… அதுகூடப் பரவாயில்லை… டிவி பார்க்காம படிக்கப் போறேன்னு சொல்றயே… அதுதான் நம்ப முடியல…    சரிடா தங்கம்.. நீ போய் நல்லாப் படி”

    “நான் இனிமே நல்லாப் படிக்கணும்னு இருக்கேன்மா… அதான்…   சரிம்மா நான்போய்ப் படிக்கறேன்..” மனதுக்குள் ‘ப்ளான் சக்சஸ், இனிமே தினமும் நானும் அவன்கூடப் பேசலாம்….பழகலாம்..’

    எப்படியோ, மாடிக்கு வந்தாயிற்று…. இனி அவனுடன் பழகுவதற்கு யாரும் தடை இல்லை… தினமும் அவனுடன் சைகையில் உரையாடினேன்…. அவன்தான் என்னைக் கண்டுகொள்ளவில்லை…

    ஒருநாள் அம்மா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, சோமுத் தாத்தா வீட்டிற்கு அவனைப் பார்க்கச் சென்றேன்… முதலில் என்னைப் பார்த்தாலே கோபப்பட்டான்… இப்போதெல்லாம் அப்படி இல்லை…

    இருவரும் அப்படி இணைபிரியாதவர்களாக ஆகிவிட்டோம். தினமும் அம்மாவிற்குத் தெரியாமல் போய்ப் பார்ப்பேன்…. அம்மா இல்லாத சமயத்தில் அவனை என்வீட்டிற்கு ஒரு முறை அழைத்து வந்தேன்…. அப்பாவும் தடை போடவில்லை….  நான் அப்பாவின் செல்லமாயிற்றே!!  அவர் என் மகிழ்ச்சிக்குத் தடைவிதிக்க மாட்டார்…

    அவனோடு நான் பழகுவது அம்மாவுக்குத் தெரியாமல் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன்… இருந்தும், இன்று அங்கிருந்து வரும்போது பார்த்துவிட்டார்…

    “அந்த நாய்கிட்ட போய் என்ன செய்ற..?  அந்த வீட்டுக்கு போகக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்…. இப்பதான் நீ மொட்ட மாடில போய்ப் படிச்ச அழகு புரியுது… நீ ஒண்ணும் குழந்தை இல்ல, ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக் குடுக்க…. ”

    முதுகிலும் பலமாக ரெண்டு வாங்கிக் கொண்டேன். அழுவதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்…?

    அம்மாவுக்கு நாய்களைக் கண்டால் பிடிக்காது… அதனால்தான் எங்கள் வீட்டில் நாய்க்குட்டி இல்லை… அதற்காக எதிர்வீட்டு நாயைக் கொஞ்சக்கூட அனுமதி இல்லை….

    நான் எட்டாம் வகுப்பில் படிக்கும் சின்னப் பையன் பாலுதான்… ஆனால் எனக்கும் குட்டிக்குட்டி ஆசைகள் உண்டு….!!!

    அந்த எதிர்வீட்டு சோமுத் தாத்தாவின் டாமி… என்னவன்…!   அவன் எனக்கு வேண்டும்… அவனை விட்டுப் பிரியமாட்டேன்!

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 39

    க. பாலசுப்பிரமணியம்

    மூளைநரம்பின் வலைத்தளங்களும் கற்றலும் (Neural Networks and Learning)

    education-1-1-1

    “நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் எந்த முறையில் கற்றல் நடந்தாலும் ஒரு மாணவனால் ஒரு அளவுக்குத்தான் படிக்க முடியுமே தவிர, படிப்புச் சுமை அதிகமாக இருந்தால் படிப்பின் மேலே அவனுக்கு வெறுப்பு வந்துவிடாதா” என்று நண்பர் ஒருவர் வினவினார். அந்தப் படிப்புச் சுமை என்பது எவ்வளவு? ஒரு தனி மனிதனின் கற்றல் வயதுக்குத் தகுந்தவாறு மாறுபடுமா ? எந்த அளவுக்கு மேல் படிப்புச் சுமை கற்றலுக்கு எதிரான பலன்களைத் தருகிறது? இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் பல நாடுகளில் பல கோணங்களில் நடைபெற்று வந்திருக்கின்றன. கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. காலத்தோலோ நேரத்தாலோ கற்றல் தடைப்படுவதோ அல்லது பாதிக்கப்படுவதோ இல்லை. அதன் பரிமாணங்கள் சூழ்நிலைகளுக்கும் மனநிலைகளுக்கும் தகுந்தவாறு மாறுபட்டுக்கொண்டிருக்கும்.

    எரிக் காண்டல் (Eric. R. Kandel) என்ற ஒரு ஆராய்ச்சியாளர் கற்றலின் பொது மூளை நரம்பின் வலைத்தளங்களில் ஏற்படும் மாற்றங்களை பற்றிச் செய்த ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு 2000ம் ஆண்டு வழங்கப்பட்டது. அவருடைய ஆராய்ச்சியின் படி மூளையிலுள்ள கற்றல் சம்பந்தப்பட்ட வலைத்தளங்கள் (Neural Networks) ஒவ்வொரு வினாடியும் உடலின் ஒவ்வொரு அசைவுகளுக்குத் தகுந்தமாதிரியும் கற்றலுக்குத் தகுந்த மாதிரியும் மாறிக்கொண்டிருக்கின்றன. ஆகவே ஒரு வகுப்பறையில் காலையில் நுழைகின்றபோது இருக்கும் அந்த வலைத்தளங்கள் (Neural networks) மாலையில் அதே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு ஆசிரியர் ஒரு நாள் நடத்தும் பாடங்கள் அந்த நேரத்தில் எந்த உணர்வுப் பாங்கோடு கற்றுக்கொள்ளப் படுகின்றனவோ அதே மனநிலையம் உணர்வுப் பாங்குகளும் ஒரு வாரம் கழித்து அதே பாடத்தில் ஆசிரியர் தேர்வு வைக்கும்பொழுது இருப்பதில்லை. அதனால்தான் பல நாடுகளில் கற்றலும் தேர்வும் உடனுக்குடன் நடக்கின்றன.

    ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தனி மாணவனின் கவனம், கற்றல் திறன், கற்றலின் ஆழம், புரிதல் திறன்கள், கற்ற கருத்துக்களை கையாளும் திறன்கள் ஆகியவை பரிசீலிக்கப் படுகின்றன. ஒரு வகுப்பறையில் எல்லா மாணவர்களையும் எல்லா நேரங்களிலும் பரிசீலிப்பதற்கு அவசியம் இல்லை. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களின் திறன்களையும் துல்லியமாக கணிக்க வாய்ப்புக்கள் உள்ளன. அனால் இதை நடத்துவதற்கான ஆற்றல்களும், திறன்களும், ஆர்வமும், புத்திக்கூர்மையும் ஆசிரியர்களுக்கு இருத்தல் அவசியம். இதைத் தொடர் பயிற்சி மூலமாக அவர்கள் கற்றுக்கொள்ள அநேக வாய்ப்புக்கள் உள்ளன.

    ஹெர்மான் எப்பின்காஸ் என்ற ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் கற்றலையும் நினைவுத்திறன்களையும் பற்றிய ஆராய்ச்சியில் கண்டறிந்ததாவது :

    1. கற்கப்பட்ட எந்த கருத்தும் கற்றலிருந்து முப்பது நாட்களில் 90 விழுக்காடு பலவீனமடைந்து மறந்து விடுகின்றது.
    2. கற்றல் நடைபெற்ற ஒரு நாளுக்குள் இதில் அதிகமான விழுக்காடு நினைவிலுருந்து நழுவி விடுகிறது.
    3. கற்றலை சீர்படுத்த/நிலைப்படுத்த கருத்துக்களை மீண்டும் மீண்டும் நினைவில் வைத்தல் அவசியம்.
    4. கற்றல் எத்தனை முறை நினைவுகூறப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது நிலைபெற்ற நினைவாகிறது.

    இந்தக்கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் “நரம்பின் நெகிழ்வின்மை ” (Neuro-Plasticity) பற்றிய பல் வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலமாக கற்றலின் தன்மையைப் பற்றிய பல வித புதிய கருத்துக்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

    கலிபோர்னியாவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் மைகேல் மெர்செனிச் என்பவர் தன்னுடைய ஆராய்ச்சியின் மையக்கருத்தாகக் கூறுவது :

    “மூளை நரம்புகளின் தொடர்ந்து மாறுகின்ற திறனின் (changing structure of the brain) காரணத்தால் கற்றலின் நோக்கங்களையும், முறைகளையும், ஆற்றல்களையும் மாற்றி அமைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. இதன் மூலமாக மூளையின் வளர்ச்சியை மேம்படுத்தவும் மேன்மைப்படுத்தவும் முடியும்.

    இது ஒரு மனிதனின் வாழ்வில் எந்த நேரமும் ஏற்படலாம். ஆகவே கற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்கொள்ளோ, ஒரு தனிப்பட்ட விஷயத்தைச் சார்ந்தோ இருப்பதில்லை. இந்தச் செயல் தொடரும் பொழுது மூளையில் உள்ள பெருமூளை புறணி (Cerebral Cortex) கற்றலை மட்டும் பேணுவது அல்லாமல் எப்படி கற்கவேண்டும் (Learning to Learn) என்ற திறனையும் பெற்றுவிடுகிறது.”

    எனவே, மூளை வெறும் கணினியைப் போல் பதிவு செய்ததை மட்டும் பாராட்டாமல் அறிவுவளர்ச்சியின் மையமாகச் செயல்படுகின்றது.

    தொடருவோம்

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (76)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13874994_1059936904060508_1239459592_n

    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.08.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    75fe4bff-c7c0-42c0-aa6d-4735d257012d

    ’’ஒன்றே சதமென்று ஒருஓரம் உட்கார்ந்து
    மென்று முழுங்கிட மாம்பழம்(கண்ணனின் கன்னம்-மாம்பழ வாயன்….) -கன்றெபோல்-,
    நித்தம் இதுபழக, நம்பீச மைத்துனனால்
    சித்தம்மாப் பிள்ளை சிவம்’’….கிரேசி மோகன்….

    Share
  • ’’பெருமாள் த்வாதஸ நாமத் துதி

    கிரேசி மோகன்

     

    ’’பெருமாள் த்வாதஸ நாமத் துதி….இன்றைய மூன்று ‘’வாமனாய, ஸ்ரீதராய, ரிஷிகேசாய’’….!

    “சிறைவசு தேவகி கருவச மாகிட
    இரவினில் ஏகினன் கோகுலமே
    கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன்
    தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
    மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும்
    குடுமியின் உச்சமும் பூமணமாய்
    குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற
    களபலி சேய்வளர் வாமனனே ….(7)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    “இலைமரு தாணியின் மணமுறை மேனியள்
    திருமகள் பூணிடும் சீதரனே
    அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி
    மலைசிவ சங்கரி சோதரனே
    அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும்
    சிலைபரு தண்டமும் கண்டவுடன்
    விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும்
    விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
    “அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
    அழியச ராசரம் வந்தவனை
    தசவித வேஷனை முனிமன வாசனை
    தவரிஷி கேசனை வந்தனம்செய்
    தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
    ரகுபதி ராகவ ரூபமெடு
    தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
    தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

    Share
  • அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! [ஹிரோஷிமா நாகசாக்கி நினைவு நாள்]

    அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

    anuyu

    (ஏப்ரல் 26, 1986)

    சி. ஜெயபாரதன், கனடா

    பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து விழுதற்றுப் போக,
    விதையும் பழுதாக
    ஹிரோஷிமா
    எழில் நகரம் அழித்து
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு !
    நாகசாகியும் அணுப் பேரிடியால்
    நாசமாகி
    மட்டமாக்கப் பட்டது!
    திட்ட மின்றி
    தென்னாலி ராமர்
    சந்ததி
    மூடர்கள் அணு உலையைச்
    சூடாக்கி
    வெடிப்புச் சோதனை
    அரங்கேற்றி
    நிர்வாண மானது,
    செர்நோபில் அணு உலை !
    சமாதி யானது
    மரணித்த மனிதரோடு !

    மாய்ந்தனர் மக்கள்,
    மடிகிறார் !
    மேலும் மரிப்பார் ! மரிப்பார் !
    நாடு நகரம்
    வீடு வயல்கள் எங்கும்
    மூடின வெங்கதிர் வீச்சுகள்!
    கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
    கடத்தப் பட்டார்,
    கைப்பையுடன்
    கதிர்மழைப் பொழிவால்!
    புற்று நோயும், இரத்த நோயும்
    பற்றின பாலரை !
    படுகிறார் வேதனை !
    மன்னிக்க முடியாத,
    மாபெரும்
    மனிதத் தவறால் நேர்ந்த
    முதல்
    அணுயுகப் பிரளய
    அரங்கேற்றம் !

    ​+++++++++++​

    the-boy-1

    ++++++++++++

    [செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்
    பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது]

    Share