படக்கவிதைப் போட்டியின் முடிவுகள் – 75
இந்த வாரப் படக் கவிதைக்கான புகைப்படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு முபாரக் அலி. இதனை நம் வல்லமை ப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த வாரப் புகைப்படத்தில் நம் கருத்திற்கு விருந்தாக துணையோடு கொஞ்சும் புறாக்கள் இடம் பெற்றுள்ளன. இப் புகைப்படத்திற்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,
காடுகள், மரங்கள் அழிக்கப்படுவதால், மழையின்றி நீர்நிலைகள் அற்று, மண் வளம் பாதிக்கப்படுவதை புறாக்கள் வழி எடுத்துக் காட்டியுள்ள ராதா விஸ்வநாதனுக்குப் பாராட்டுகள்.
அஃறிணை உயிர்களிடத்துக் காணப்படும் பேதமற்ற அன்பைச் சுட்டிக் காட்டி, பிறப்பால் வருவதல்ல அஃறிணை, உயர்திணை வேறுபாடு, அது வாழ்ந்துக் காட்டும் வாழ்க்கையில் தான் இருக்கிறது என்று வாழ்க்கைப் பாடத்தை அறிவுறுத்தியுள்ள முத்துலட்சுமிக்குப் பாராட்டுகள்.
மரங்கள் அழிக்கப் படுவதால் மனித இனத்திற்கு வரும் கேட்டினை எடுத்துக் கூறியுள்ளார் செண்பக ஜெகதீசன்.
இன்றைய சூழலில் காதல் படும் பாடு, காதலர்களின் நிலை, காதல் என்ற பெயரால் நடக்கும் வன்முறை என நிறம் மாறிப்போன காதலையும், நிலை தடுமாறும் இளைய தலைமுறையையும் எடுத்துக் காட்டுகின்றது இக்கவிதை,
ஆதலால் காதல் செய்வோம்
கரும்புறா எனை
வெண்இறகுள் பொத்தி வைத்த பிரியசகியே!
கலப்பினக் காதலை
இணைந்தே இசைப்போம்
இல்லற மேன்மையை
மரங்கொத்தி வகையினோம்
மனங்கொத்தியது இல்லை
மனங்கொத்தி வகையினரோ
பணங்கொத்திகளாய்
ஆதாளும் ஏவாளும்
ஆரமித்த காதல் கதை
ஆதாரமில்லாமல் அலைபாயும் காலமிது
“ஆதலால் காதல் செய்வீர்”
பாவலன் மொழி பாழடைந்து நிற்கிறது
காதல் விற்பனை
கல்லூரி சாலைகளில்
கடைவிரித்து சிரிக்கின்றது,
காதல்விளையாட்டு
கடற்கரை ஓரங்களில்
கரைமீறத் துடிக்கின்றது
காதல் வன்முறை
ஒருதலைக் கொள்ளியாய்
ஆயுதம் ஏந்தி
ஆயுள் முடிக்கின்றது
காதல் பரத்தை
வேசி மகளாய்
வீதி வழி அலைகிறது,
காதல் கொசு
காதுக்குள் இரைச்சலாய்
ஓங்கியே ஒலித்தலும்
அடித்தவுடன் விழுந்துவிடும்
பரிதாபம் அந்தோ!
காதல் கன்னி
உண்மைக்காதல் தேடி
முதிர்கன்னியாய்
காதல் தொடரோட்டம்
ஆள்மாறி ஆள்மாறி
போலிமுகமாய்
புறாத்தூதுக் காலத்தில்
புத்துயிர்த்த காதல்
வாட்ஸ்அப் பேஸ்புக்கால்
வைரஸ் தொற்றில்
ஆயுள் முடிக்கின்றது
களவுகால காதல் சின்னம்
கற்பறன் பேணிய திறன்
வருங்கால தலைமுறைக்கு
சொல்லத் தவறினோமே
காதல் மெய்
காதலர்கள் பொய்
உண்மை மறந்தோமே
மனந்தொட்டு
உடல் தொடும் கலாச்சாரத்தினை
மறந்திட்டு
மாயும் இனத்திற்கு
மீண்டும் புரியவைப்போம்
ஆதலால் காதல் செய்வோம்.
காதல் குறித்தப் புரிதலை இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டும் என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு சமூக நோக்கோடு கவிதைப் படைத்துள்ள மா. பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்குப் பாராட்டுகள்.