திவாகர்

 

அவள் அன்று நடந்த சம்பவத்தை விவரித்தாள்.

இதே வீடு  ஒரு கட்டிலில் அந்தச் சின்னப் பெண் விஜயா படுத்திருக்க அவள் பக்கத்தில் சுமதியின் அம்மா உட்கார்ந்திருக்க கந்தசாமி அங்குள்ள நிலைமையைப் பார்க்கிறார்.

 

சுமதிக்குப் புரிந்தது. வந்தது கந்தசாமிதான்.

 

கந்தசாமி அவள் அம்மாவிடம் போனார்.

 

“நீ எப்போ இங்கே சென்னைக்கு வந்தே?”

 

“எதுக்காக எங்கம்மாவைத் தொந்தரவு பண்றே? நீ யாரு முதல்ல எங்களை வந்து பார்க்க..?”

 

“நான் உங்க அப்பா.. உன் பேரு சுமதின்னு ஆஸ்பத்திரில விலாசம் கொடுக்கும்போது சொன்னாங்க.. சுமதி.. இதோ பாரு.. நான் இங்கே வந்தது உன்னையோ உன் அம்மாவையோ கூட்டிட்டுப் போகறதுக்கு இல்லே.. அதோ அந்த பொண்ணு எங்க ஆசிரமத்திலேர்ந்து ஓடி வந்திடுச்சு. அவளோட வளர்ப்புக்கு நான் பொறுப்பு.. அதான் கூப்பிட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்.”

 

“அப்படித்தான்யா ஒரு ஆள் எங்கம்மாவை ஏமாத்திட்டு ஒரு நாள் ஓடிப் போயிட்டான். அவனைக் கூப்பிட்டுப் போகறதுக்காக எங்கம்மா ஒரு காலத்திலே அவன் வீட்டுக்குப் போனாங்க.. அவன் அடிச்சுத் துரத்திட்டான். இதோ பார். அதே நிலைமை உனக்கும் வர வேணாம். இங்கேயிருந்து போயிடு.”

 

“அன்னிக்கு அப்படி நடந்தது வாஸ்தவம்தான்.. ஆனா அந்தக் கதை முடிஞ்சுபோன கதை.. நீ இப்போ அதுக்காக என்ன கேக்கறியோ அதைக் கொடுக்கறேன். ஆனா சொந்தம்னு என்னால கொண்டாடமுடியாது.”.

 

கந்தசாமி சுமதி பக்கத்தில் உட்கார்ந்தார். ஆதரவாக அவளைத் தலையைத் தொட்டுப் பேச வந்தார்,. சட்டென அவன் கையை உதறித் தள்ளினாள்.

 

“அடச்சீ.. உன் பாவக் கையை என் மேல வெக்காத.. நீயெல்லாம் ஒரு மனுஷன்னு உங்கிட்டே வந்து சொந்தம் கொண்டாடணுமா.. மனசால கூட நீ நினைச்சுப் பாக்காதே.. ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னோட ஒரு கனெக்ஷனும் வெச்சுக்க மாட்டோம். க்ரூயல்.. கொடூரம்னு வாழற ஒரு அப்பா எனக்கு வேணுமா?.. அதுவும் வெறி பிடிச்ச நாய் என்னோட அப்பான்னு சொல்லிக்கறதுக்குக் கூட யோக்கியதை இல்லாதவன் நீ போய்யா.. போ..”

 

கந்தசாமி சாந்தமானார். ~இதோ பாரு சுமதி.. என்ன சொன்னாலும் எப்படி திட்டினாலும் நான் உன்னோட அப்பா.. போகட்டும்.. எங்கிட்டே வரவேணாம். ஆனா நான் உங்களுக்கு மாசா மாசம் பணம் அனுப்பறேன்..”

 

“யோவ்.. உன்னோட உறவே வேணாம்னு இங்க வந்தேன்.”

 

“நீ அப்படில்லாம் சொன்னா விஷயம் தெரிஞ்ச நான் விடுவேனா.. என்று சொன்ன கந்தசாமி தன் ஜிப்பா பையிலேர்ந்து ஒரு செக் புக் எடுத்தார். அந்தச் செக்கில் ஏதோ பணம் எழுதினார்.. அப்படி செக் புக்கை எடுக்கும்போது அவர் ஃபோன் கீழே விழுந்துவிட்டதை அவர் கவனிக்க வில்லை….

 

சுமதிக்கு கோபம் ஏராளமாக வந்தது.. “நீ இங்கேயிருந்து உடனே போகலேன்னா உன் வண்டவாளமெல்லாம் சொல்லி போலீசுக்கு கம்ப்ளெயின் கொடுப்பேன்… போகறியா இல்லையா? நான் போலீஸைக் கூப்பிடட்டுமா?”

 

இனியும் இங்கு இருக்கமுடியாது என்பதைத் தெரிந்துகொண்ட கந்த சாமி செக்கை மாத்திரம் அங்கே வைத்துவிட்டு கொஞ்சம் சோகத்துடன் எழுந்து போனார்.

 

அதைத் தூக்கி ஓரத்தில் போட்டாள். அப்போதுதான் தெரிந்தது.. அவர் ஃபோனை அங்கே விட்டு விட்டுச் சென்றது. கந்தசாமிக்கு ஃபோன் செய்யலாமா என்று யோசனை செய்தவள் அவள் அம்மாவிடம் பேசினாள்.

 

“அம்மா.. நான் அவன் ஃபோனை விட்டுட்டுப் போயிட்டான். அவன் வீட்டுக்கு இதுல அவன் நம்பர் நம்பர் இருக்கான்னு பார்த்து ஃபோன் போடறேன்.. நீ பேசி அவன் ஃபோனை எடுத்துட்டுப் போகச் சொல்லு.. நான் இனிமே அவன் கூடப் பேச மாட்டேன்.”

 

என்றவள் அந்த ஆபிள் ஃபோனில் பார்த்தாள்.

‘இதுல காண்டாக்ட் நம்பரே இல்லையேம்மா.”.

 

என்றவள் மேலும் அந்த ஃபோனை நோண்டினாள். அவள் முகம் போகப் போகப் சிவந்தது.

 

“நாசமாப் போகறவன்மா இவன்.. ஐய்யோ எத்தனை படம்? இல்லாம் இதோ இந்த விஜயாவோ படங்கதான்.. இதோ பார்..” என்று அம்மாவிடம் காண்பித்தாள். அதைப் பார்த்து அவள் அம்மா கண்ணை மூடிக்கொண்டாள்.

 

“அப்படியே உடம்பெல்லாம் புழுத்துச் சாகணும்டி அவன்..” அவள் அம்மா அப்போதே சாபமிட்டாள்.

 

அவர்கள் இடிந்து போய் உட்கார்ந்திருந்தனர்.

 

“நான் சொல்லறதை கேளுடி.. பேசாம போலீசுக்கு இவனைப் பத்தி இந்த போனைக் கொடுத்துக் கம்ப்ளெய்ன் சொல்லிடு.. அதுதான் நாம பண்ணமுடியும்.”

 

“அம்மா.. நாம இப்போ கொஞ்சம் நிதானமா இருப்போம். இதைப் பத்திக் கேட்டா நமக்குத் தெரியாதும்போம். இந்த மாதிரி விஷயத்துலெல்லாம் நமக்குக் கொஞ்சம் துணை வேணும். நாம ஏழை மாத்திரம் இல்லே.. ஆம்பிளை துணையில்லாத வீடு. உறவுன்னு சொல்லிக்கறதுக்கோ யாருமே இல்லை.. ஆனா அதுக்காக இந்த நாய்கிட்டே எல்லாம் பயப்படக்கூடாது,, கல்லாலே அடிச்சுக் காயப்படுத்திண்டே இருக்கணும்.. அவன் திரும்பி வந்து கேட்டானா கூட துரத்தி விடறேன்.. முடிஞ்சவரைக்கும் அவன் அவமானப்படணும்.. மனசுக்குள்ளே தவிச்சுச் சாகணும்.. இந்த சமூகம் இவனை மாதிரி ஆளையெல்லாம் நடுரோட்டுல சுட்டுத் தள்ளணும்.. சரி விடு, அவனைப் பத்தி என்ன பேச்சு. இந்த விஜயாப் பொண்ணுக்கு கொஞ்சம் மூளைல ஆபரேஷன் பண்ணனுமாம். இல்லாகாட்டி அவ உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் பல நாளா ஆசிரமத்துல இருக்கறச்சயே சொல்லியிருக்காராம்… இந்தப் பொண்ணை எப்படிக் காப்பாத்தறதுன்னு நாம் யோசிக்கணும்.”

 

என்று சொல்லிக் கொண்டே அவள் கைப்பைக்குள் ஃபோனைப் போடுகிறாள். எதிர்பார்த்தது போல கந்தசாமி வருகிறார்.

 

“இங்கே ஃபோனைக் கீழே போட்டுட்டேன்.. அந்த ஃபோனைக் கொடு.. அதுக்குதான் வந்தேன்.”

 

“இதோ பார்.. எதையாவது சாக்கு போக்கு சொல்லிட்டு இங்கே வந்தேன்னா உனக்கு செருப்படிதான் விழும். முதல்ல வீட்டை விட்டு வெளியே போ.. இல்லே கூச்சல் போட்டு கூட்டம் கூட்டி போலிஸையும் கூப்பிட்டு உன்னை ஜெயில்லே போடுவேன்.”

 

கந்தசாமி கத்துகிறார். “ஏய்.. நானும் போனாப் போகுதுன்னு ஏதோ என்னாலே ஒரு தப்பு எப்பவோ நடந்துபோச்சேன்னு அதுக்கு ஏதாவது நல்லது பண்ணலாமேன்னு பாக்கறேன்.. அதுக்காக என்ன ஓரேயடியா என்னை பயமுறுத்தறே.. ஜாக்கிரதை.. சொந்தப் பெண்ணே ஆனாலும் என் வழிலே குறுக்கே வந்தன்னா கொன்னுடுவேன் கொன்னு.. ஜாக்கிரதை.. முதல்ல வீட்டுல தேடு.. அந்த மொபைல் எங்கேயாவது கிடைச்சா ஆஸ்பத்திரியில என் நம்பர் இருக்கு.. சொல்லி அனுப்பு..”

 

அவர் கத்தி விட்டு வெளியேறுகிறார்.

 

மறுபடியும் தற்கால நிலைக்கு வருகிறாள் சுமதி

 

“இதுதான்மா நடந்த விஷயம். அடுத்த மூணாவது நாள் நான் எதேச்சையா உங்க க்லினிக்ல வெளியே வந்ததை அந்தாளு பார்த்துதான் அந்த கலாட்டா நம்ம கிலினிக்ல நடந்தது. நான் எப்பவுமே என் கைப்பைக்குள்ளேயே அந்த மொபைல்லை வெச்சிருந்தேன்.. வீட்ல வெச்சா இவன் எப்படியும் வந்து எடுத்துடுவான்னு தெரியும்.. அந்த ஆளுக்கு என் ஹேண்ட்பேக்லே அது தட்டுப்பட்டிருக்குது.. உடனே அதை எடுத்துண்டு என்னை விட்டுட்டான். அதுக்கப்பறம் உங்களுக்கு எதிர்வீடுதான் அந்தாளோட வீடுன்னதும் என்னாலும் வேலையை கண்டினியூ பண்ணமுடியலே. அதனாலதான் அன்னிக்கு உங்கள்ட்ட அப்படிச் சொன்னது.. என்னத்தையம்மா அப்போ சொல்லமுடியும்? இப்படிப்பட்டவனைப் பத்தி பெருமையா சொல்லறதுக்கோ எங்கப்பன்னு சொல்லறதுக்கோ என்ன இருக்கு. உங்க வீதிலேயே அந்த வெறி நாய் இருக்கறதுனாலே வீதியில இருக்கற அத்தனை பெண்களையும் கடித்துக் குதறி வெக்கக் கூடாதேன்னுதான் நீங்க ஜாக்கிரதையா இருங்கம்மான்னு உங்களுக்கு எச்சரிக்கை பண்ண முடிஞ்சது.”

 

“நீ இங்கே இன்ஸ்பெக்டரைப் பாக்கறச்சே விஜயா ட்ரீட்மெண்ட்க்காக கந்தசாமிகிட்டே யாரோ ஒரு குடும்பம் மூலம் கேட்டதாகவும் கந்தசாமி வந்து உன்னை இந்த வீட்ல அரைமணி நேரம் பார்த்ததாகவும் சொன்னியாமா.. அது உண்மையா சுமதி?”

 

“ஆமாம்மா.. அது கூட உண்மைதான். விஜயாவுக்காக நான் பண உதவிக்காக ஏஜன்ஸி மூலம் கேட்டது உண்மைதான். ஆனா இந்த ஆள்தான் அந்த உதவி செய்யறவன்னு தெரிஞ்சதும் வேண்டாம்னு சொல்லிட்டேன்மா.. இன்ஸ்பெக்டர்கிட்டே இந்த உண்மையைதான் சொன்னேன். ஆனா அவர் நம்பலே..”

 

“ரொம்ப வேதனையா இருக்கு சுமதி. ஆனா கல்யாண் உனக்கு நிச்சயம் நியாயம் செய்வார். அதை நீ ஒப்புக்கறதும் நல்லது. சரி, அதுக்கப்பறம் நான் கேட்டேனே எனக்கு இன்னும் ஸ்ட்ராங்கா உங்கப்பாதான் இவருன்னு எனக்கு ஒரு எவிடென்ஸ் வேணும்.”

 

“எவிடென்ஸ்னு பார்க்க டி என் ஏ டெஸ்ட்டா இப்போ எடுக்க முடியும்? விடுங்கம்மா.. அந்தாளை நான் பொறந்ததிலேர்ந்தே நம்பலே.. தேவையும் இல்லே.. கடவுள் எங்களுக்கு ஒரு பெரிய நன்மை செஞ்சிருக்கார்மா.. இந்த ஆள் இப்படிப்பட்ட அயோக்கியன்.. குருரமனசும் கொடூரமும் உள்ள ஆளு.. இந்த ஆளோட சம்பந்தமே எங்களுக்கு வேண்டாம்னு நான் பொறந்தவுடனே கடவுள் தீர்மானிச்சுட்டாரும்மா.. கடவுள் எங்களை இப்போ வரைக்கும் காப்பாத்தி வந்திருக்கார்.. பாருங்க இப்போ அவனே போயாச்சு. இனிமே அவனைப் பத்தி ஒரு நினைப்பு கூட வராது எங்களுக்கு.”

 

கல்யாண் குறுக்கிட்டான். “கோம்டி! எதுக்கு இப்போ அந்த ப்ரூஃப் கேட்கறே.. நான் இருக்கேன்ல. நான் இனிமே இவங்களைப் பாத்துக்கறேன். என்னோட கடமை கூட..!”

 

சுமதி கல்யாணை அன்போடு பார்த்தாள். கோம்டியிடம் திரும்பிப் பேசினாள்.

“ஆனா அந்த மொபைல் பத்தி அந்தாளுக்கு சந்தேகம் இருந்திச்சு. அந்தாளு அதுக்கப்பறம் பத்து தடவைக்கு மேலே எங்க வீட்டுக்கு வந்திருக்கான்.. ஒவ்வொரு தடவையும் விஜயா பத்தி கேட்பான். என்னைப் பத்திக் கேட்பான்.. ஏன்.. நான் இல்லாத சமயம் பாத்து வருவான்.. ஏதாவது உதவி வேணுமா கேப்பான். நாங்க ஒவ்வொரு தடவையும் துரத்தி அனுப்புவோம். அந்தாள் செத்துப்போகர்றதுக்கு  மூணு நாள் முன்னாடி ஒருதடவை எங்கம்மாகிட்டே வந்து பேசினான். அவங்க அப்போ கொஞ்சம் மயக்கமா ரொம்ப வீக்கா இருந்தாங்க. நல்ல வேளையா விஜயாவை என்னோடு ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போயிருந்தேன். அப்போ அம்மா கையிலே ஒரு டாகுமெண்ட் கொடுத்தான். அதுல அவனோட பேங்க் அக்கவுண்டல இருக்கற பணத்துக்கு அவனுக்கப்பறம் நாமினியா தன் பொண் சுமதி பேரைக் கொடுத்து. அந்தப் பணம் சுமதிக்குதான் சேரணும்னு நோடரி பதிவு பண்ணி ஒரு டாக்குமெண்ட் கொடுத்துட்டுப் போயிட்டான். நான் வந்ததும். எனக்குக் கொண்டு வந்து அம்மா காமிச்சாங்க. எதுக்கும்மா இதை வாங்கினே? அம்மா சொன்னாங்க.. நான் வாங்கலேம்மா.. அவன் போட்டுட்டுப் போயிட்டான்.. நமக்குப் பாவச் சொத்து எதுக்கம்மா.. யாருக்கு சேரணுமோ அவங்களுக்குக் கொடுத்துடலாம்‘னு சொன்னாங்க.. அதை எடுத்து வெச்சிருக்கேன். இனிமேதான் கல்யாண் அண்ணாவுக்குக் கொடுக்கணும். ஏன்னா எங்களுக்கு அந்தாள் கொடூரமான பாவம் செஞ்சு சம்பாதிச்ச சம்பாத்தியம் வேண்டவே வேண்டாம்.. கொஞ்சம் இருங்க.. அந்த டாகுமெண்ட் எங்கப்பா இவருதான் ப்ரூவ் பண்றதுக்கு சட்டபூர்வமா உதவும் இல்லையா.. நீங்க கேட்டீங்களே..”

 

அவள் போய் பீரோவைத் திறந்து அந்தப் பத்திரத்தை கோம்டியிடம்  கொடுத்தாள். அவள் ஏற்கனவே சொன்னபடி பத்து ரூபாய் பதிவுத் தாளில் எழுதப்பட்ட பத்திரத்தில் இருந்ததைப் பார்த்தவள் மகிழ்ச்சியடைந்தாள்.

 

“கல்யாண்.. எனக்கு நிறைய விஷயங்கள் புரியறது.. நிறைய விஷயங்கள் இன்னும் செய்ய வேண்டியது பாக்கி இருக்கு. ஆனால் இப்போ நீங்க உங்க கார்ல நம்மோட இவங்க ரெண்டு பேரும் வரணும். உங்க வீட்ல உங்க தங்கையை வலது கால் வெச்சு உள்ளே அழைச்சுண்டு போங்க” என்று சொன்ன கோம்டி சுமதியிடம் வந்தாள்.

 

“இன்னிக்கு அங்கதான் வரணும் சுமதி. நீ கவலைப்படாதே.. எல்லாம் உன் நன்மைக்கேன்னு வெச்சுக்கோ. நீ யார் வீட்டுக்கு வர்றே? உங்கண்ணா கல்யாண்கிட்டே வர்றேன்னு வெச்சுக்கோ. என் கூட நீங்க ரெண்டு பேரும் வாங்க.. கிளம்பலாமா கல்யாண்..!”

 

கல்யாண் தலையசைத்தான்.  “நீங்க சொல்றது சரிதான் கோம்டி.. அந்த வீடு எங்க தாத்தா பாட்டி சொத்தை வித்துட்டுதான் பெரியப்பா என் பேர்லதான் வாங்கினாரு. அது என் வீடுதான்.. எனக்கு என்ன உரிமை அங்கே இருக்கோ அதே உரிமை அந்த தாத்தா பாட்டியோட பேத்தியா சுமதிக்கும் இருக்கு.” சுமதியைப் பாசத்தோடு கை கொடுத்து ஆதரித்தான். பெரியம்மாவையும் ஒரு கை கொடுத்து அழைத்துக் கொண்டான்.

 

அனைவரும் கிளம்பினர்.

 

கோம்டியின் வீடு கிலினிக். கோம்டி அங்கு இறங்கியதும் கடகடவென உள்ளே வந்து தன் கிலினிக்கின் கதவை உள்பக்கம் சாத்திக்கொண்டு சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஃபோனில் சாந்தியிடம் பேசுகிறாள்.

 

“சாந்தி.. இன்னிக்கு ராத்திரிக்குள்ள என் கேஸ் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி எனக்கு ரெண்டு மூணு விஷயங்க நீ உடனே செய்யணும். செஞ்சவுடனே எனக்கு வாட்சாப்ல மெஸேஜ் அனுப்பிடு. நீ என்னென்ன செய்யணும்னு சொல்லறேன்.. நல்லா கேட்டுக்கோ.”

 

சொல்கிறாள்..

 

அடுத்தநாள் காலை கல்யாண் வீடு

 

வீட்டின் டின்னர் மேஜையை சுற்றி நாற்காலிகளை வைத்திருந்தார்கள்.

 

எல்லோரும் உட்கார அந்த பெரியம்மா மட்டும் ஹால் கூட்டத்தில் இல்லை. சுமதி வந்திருந்தது முரளிக்கும் சுந்தருக்கும் மட்டும் வித்தியாசமாக இருந்தது.  இன்ஸ்பெக்டர் ஆரம்பித்தார். முரளியையும் சுந்தரையும் பற்றியும் அவர்கள் பெரியப்பாவுடன் சண்டை போட்ட விதமும் சொன்னார்.

 

“மிஸ்டர் கந்தசாமியோட இறப்புல இங்கே உள்ள எல்லோருக்கும் ஏதாவது ஒரு கனெக்ஷன் இருக்கத்தான் செய்யறது.. முதல்ல கந்தசாமியோட எப்பவுமே பிரியாம இருந்த முரளி.. அவர் விஷயம் சுந்தருக்கும் சுமதிக்கும் தெரியாது.. ஆனா இங்க இருக்கற. அவரோட மனைவி பிரியாவை முரளியின் இஷ்டத்துக்கு விரோதமா கல்யாணம் பண்ணி வெச்சதிலேர்ந்து பிரியாவை எப்படியாவது தன் வசப்படுத்தவேண்டும்னு கந்தசாமி செஞ்ச முயற்சியை முரளியும் பிரியாவும் அதைத் தடுத்துண்டே இருந்ததையும் கந்தசாமி கோபமா முரளியைத் திட்டுனதையும் அதுக்குப் பதிலா இவரும் திரும்ப திட்டினதையும் முரளியே சொன்னதை கோம்டி எனக்கு விவரமா சொல்லியிருக்காங்க.. ஆனா சம்பவம் நடந்த நாள்ல அந்த நேரத்துல அதாவது மாலை அஞ்சு மணிலேர்ந்து அஞ்சறை வரைக்கும் அவர் ஆஃபீஸ்ல இருந்ததுக்கான சாட்சிகளை  முரளி கொடுத்துருக்கார்ங்கற ஒரு காரணம் மட்டுமே அவரைக் கொலையாளி பட்டியல்லேர்ந்து நீக்கினாலும் அவர் ஆளை வெச்சுக் கொலை பண்ணியிருக்கலாம்ங்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு.”

 

முரளி எழுந்தான்..

“இன்ஸ்பெக்டர்.. இது ரொம்ப அநியாயம்.. என்னோட தகவல் பூரா நான் கொடுக்கணும்னு அவசியமே இல்லேன்னாலும் நான் உண்மையை பரிபூர்ணமா சொல்லியிருக்கேன். நான் அவரோட இறப்புல சம்பந்தப்படலே.. ஆனா சுமதியைப் பார்த்தப்பறம் அவர் ஏன் கோபமா வரணும்னு ஏற்கனவே போலீஸ்ல கம்ப்ளெயின் பண்ணினேன்.. இதோ சுமதியும் இங்க இருக்கறதால சுமதி சொல்லட்டுமே.. அவர் எதுக்காக அத்தனை கோபத்தோடு சுமதி வீட்லேர்ந்து வெளியே வந்தார்னு.. என் மேல மாத்திரம்தான் சந்தேகப்படறீங்களே.. என்ன நியாயம் இது?”

தொடரும்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.