குறளின் கதிர்களாய்…(132)

செண்பக ஜெகதீசன்

 

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்          

மேற்சென் றிடித்தற் பொருட்டு.   

       –திருக்குறள் –784(நட்பு)

 

புதுக் கவிதையில்…

சிரித்து விளையாடுவதல்ல

சிறந்த நட்பு,

தவறான வழிசெல்லும் நண்பனைத்

திருத்திட

தட்டிக்கேட்டு சரிசெய்வதே…!

 

குறும்பாவில்…

சிரிப்பதற்கல்ல நட்பு

சீராக்கிட,

தவறும் நண்பனைத் தட்டிக்கேட்டு…!

 

மரபுக் கவிதையில்…

என்றும் நல்ல நட்பென்பது

     எதற்கும் சிரித்து விளையாடும்

ஒன்றும் உதவா உறவல்ல

   ஓசைச் சிரிப்பில் பயனில்லை,

சென்றிடும் நட்புப் பாதையிலே

  செயலில் தவறிடும் நண்பனைத்தான்

அன்புடன் இடித்துத் திருத்துவதே

  ஆக்க மான நட்பாமே…!

 

லிமரைக்கூ…

நட்பல்ல வீணாய்ச் சிரிப்பது

தவறும் நண்பர் திருந்திட இடித்துரைப்பதே

நட்பெனும் பெயரைத் தரிப்பது…!

 

கிராமிய பாணியில்…

நல்லதில்ல நல்லதில்ல

நட்பதுதான் நல்லதில்ல,

சிரிச்சிப்பேசி நேரம்போக்கும்

நட்பதுதான் நல்லதில்ல..

 

நட்பிதுதான் நட்பிதுதான்

நம்பிக்கையான நட்பிதுதான்,

கெட்டவழில நண்பன்போனா

கேட்டுத் திருத்துற

நட்பிதுதான் நட்பிதுதான்

நம்பிக்கையான நட்பிதுதான்,

உண்மயான நட்பிதுதான்…!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *