Month: November 2016

  • கவிதை

    விஜயகுமார் வேல்முருகன்

    அடித்துக்கொள்ளும்
    இதயத்தோடும்
    துடித்துக்கொள்ளும்
    இமைகளோடும்
    காத்திருக்கின்றேன் வாசலில்.!

    பிரசவ பார்க்கும் அறையது
    பிரசவிக்கும் அவள்
    உடலில் மட்டும் வலியோடும்
    மனதில் மிகுந்த வலிமையோடும்
    பிரசவிக்க காத்திருக்கிறாள்.!

    பிரசவம் அறையின் வாசலில்
    அவளின் நிலையில் நானும்
    உடலில் மட்டும் வலிமையோடும்
    மனதில் மிகுந்த வலியோடும்
    பிரசவத்திற்காக காத்திருக்கிறேன்.!”

    நொடிகள் கரைந்து நிமிடங்களாக
    நிமிடங்கள் கரைந்து மணிகளாக
    வேதனையின் முடிவின் அழுகை
    பிரசவித்துவிட்டாள் குழந்தையை
    நானும் எனது கவிதையை.!

    Share
  • கிரேசி குழுவினரின் நகைச்சுவைத் தூது

    பவள சங்கரி

    கூகிளில் கடோத்கஜன் – புத்தம் புதிய நாடக ஆக்கம்!
    crazy

     

    crazy4

    crazy5

    பொதுவாக நல்லிணக்கத் தூதுக்குழுவினர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று மக்களுடன் கலந்துறவாடி அந்தந்த நாட்டினருடன் ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தையை வளர்க்கும் விதமாக நல்ல இணக்கத்தை ஏற்படுத்தி வருவர். இதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல வெளிநாடுகள் சென்று நமது பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் வெளிநாட்டு மக்களும் அறியும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தி வரும் கலை, இலக்கிய, இசைக்குழுவினர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்களுடைய பயணம் வியாபார நோக்கம் மட்டுமே பிரதானமாகக்கொண்டது என்ற குறுகிய வட்டத்தில் ஒதுக்கவும் இயலாது. இதனை உணர்த்தும் விதமாக கிரேசி குழுவினரின் நீண்ட அமெரிக்கப்பயணம் நிரூபித்துள்ளது.

    crazy7

    கிரேசி நாடகக்குழுவினர் சமீபத்தில் அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து திரும்பியுள்ளனர். ஐந்தாவது முறையான இந்த அமெரிக்கப் பயணம், சென்ற நான்கு முறைகளைக்காட்டிலும் குறிப்பிடும் அளவிற்கு, அரங்கு நிறைந்த காட்சிகளாகவும், இரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்றும் வெற்றிகரமான பயணமாக அமைந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. திரு கிரேசி மோகன் மற்றும் திரு மாது பாலாஜி அவர்களின் தலைமையில் இயங்கும் இந்நாடகக்குழுவினரின் கடின உழைப்பும், அயராத முயற்சியும் இவர்களை இம்மாபெரும் சாதனைக்கு வழி கோலியுள்ளது. ஆயிரக்கணக்கான அன்பு இரசிக உள்ளங்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்று திரும்பியுள்ள மகிழ்ச்சியில் சகோதரர் திரு கிரேசி மோகன் அவர்கள் உளம் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டுள்ளார். மீண்டும் விரைவில் அமெரிக்க இரசிகர்களுடன் கலந்துறவாட வாய்ப்புகள் வாசல் விரிந்து காத்திருப்பதையும் உணர முடிகின்றது. நாடக உலகிற்கு இவர்களின் அரிய சேவை பாராட்டிற்குரியது. திரை உலகின் முன்னோடியான நாடக உலகம், திரு கிரேசி மோகன், திரு ஒய்.ஜி.மகேந்திரன், திரு எஸ்.வி.சேகர் போன்ற மிகக் குறிப்பிட்ட சில கலைஞர்களால் மட்டுமே உயிர் பெற்று நடமாடிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. பிற்காலத்தில் மேடை நாடக உலகின் நிலை என்னவாகும் என்ற கவலையும் ஏற்படத்தான் செய்கிறது. இவர்களைப்போன்றோர் இதற்கான ஏற்பாடை செய்து, தங்களுக்கான வாரிசுகளை உருவாக்கி மேடை நாடக உலகம் தொடர்ந்து திரையுலகிற்கு ஈடாக வலம் வர வேண்டும் என்று வேண்டுகிறோம்.

    crazy1

    அமெரிக்காவின், மேரிலாண்ட் ஆளுநர் தமது மாநிலக் காரியதரிசி மூலமாக வாசிங்டன் நகரில் 31.10.16 அன்று, தங்களுடைய ‘கூகிள் கடோத்கஜன்’ என்ற புத்தம் புதிய நாடகம் நடைபெறும் அரங்கில் அளித்துள்ள, ‘Professional excellence award ‘ மட்டுமே இதற்கு பெரும் சாட்சி.

    crazy6

    crazy2

    அமெரிக்காவின், வாசிங்டன், கலிஃபோர்னியா, பிலடெல்பியா, சிகாகோ, சேன் டிய்கோ, சேன்ஜோஸ், கனெக்டிகட், அரிசோனா, டல்லாஸ், ஹூஸ்டன், தம்ப்பா, அட்லாண்டா, நியூயார்க், நியூஜெர்சி போன்ற பலப்பல இடங்களிலும் 1000ற்கும் மேற்பட்ட இரசிகர்களின் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக நாடகம் நடத்தி முடித்து வந்துள்ள கிரேசி குழிவினரின் முதுகெலும்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் திரு கிரேசி மோகன், அவர் சகோதரர் திரு மாது பாலாஜி மற்றும் உடன் பிறப்புகள் என்று திரு கிரேசி மோகன் அவர்கள் குறிப்பிடும் ஏனைய கலைஞர்கள் அனைவரையும் வல்லமை மனமார வாழ்த்தி வரவேற்கிறது. இந்த சாதனை பல்லாண்டு காலம் தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம்.

    crazy8

    ஓரிரு திரைப்படங்களில் தலையை காட்டி விட்டாலே தலைகனம் வந்து மக்களை சந்திப்பதை விரும்பாத பல கலைஞர்களுக்கிடையே, நடிப்பு, வசனம், நாடக மேடை, கதை, இலக்கியம், வெண்பா, ஆன்மீகம் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் திரு கிரேசி மோகன் அவர்களின் எளிமை பாராட்டுதலுக்குரியது. அனைவரிடமும் பாரபட்சமின்றி இவர் பழகும் தன்மை ஒரு எடுத்துக்காட்டாகும். நம் வல்லமை இதழில் தொடர்ந்து பல ஆக்கங்களை படைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்தம் ஆக்கங்கள் அனைத்தும் திருமால் திருப்புகழ்  என்ற இந்தப் பகுதியில் காணலாம். அந்த வகையில் இவர் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை உலகம் முழுவதும் பெற்றிருப்பதில் எந்த ஐயமும் இல்லை. தனக்கான எந்த விதமான தனிப்பட்ட பெருமையையோ, கவனிப்பையோ எதிர்பார்ப்பதில்லை இந்த பிரபலம் என்பதே இவரை பன்மடங்கு உயர்த்திக்காட்டுகிறது. சென்ற ஆண்டு என் மகனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி சென்னையில் வைத்திருந்தபோது, மற்ற நண்பர்களை அழைத்ததுபோல் இவரிடமும் யதார்த்தமாக தொலைபேசியில் அழைத்து விசயத்தைக் கூறியவுடன், மிகவும் மகிழ்ச்சியாக கட்டாயம் கலந்து கொள்வதாகக் கூறியபோதுகூட நான் அந்த நேரத்தில் ஏதோ சமாதானமாகப் பேசுகிறார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் நிகழ்ச்சி நடக்கும் நாளை நினைவில் குறித்து வைத்து அந்த நாளில் மறக்காமல் நேரில் வந்து எங்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்கி, அனைத்து உறவினர்களுடனும் அன்பாகவும், வழமையான அவருடைய நகைச்சுவை பாணியில் பேசி சில மணித் துளிகள் அந்த நிகழ்ச்சியைக் களைகட்ட வைத்துவிட்டார். இந்த எளிமையும், இரசிகர்கள் அனைவரையும் தம் அன்பான உறவுகளாக மதிக்கும் இவர்தம் பெருந்தன்மையுமே இவரை மக்கள் மனதில் நீங்காதொரு இடத்தைப் பிடிக்க வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல! திரு கிரேசி மோகன் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள், நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமுமாக, மென்மேலும் பலப்பல சாதனைகள் புரிந்தவாறு மக்கள் மனதில் நிறைந்திருக்கவேண்டும் என்று உளமார வாழ்த்துகிறோம்.

    crazy3

    “எனக்கு சாம்பார்ல காய்கறிய முழுசு முழுசா போட்டா பிடிக்கும்னு சொன்னதென்னவோ வாஸ்தவந்தான்.. அதுக்காக அதே பிரின்ஸிபில நீங்க எல்லா காய்கறிக்கும் அப்ளை பண்ணப்டாது. அன்னிக்கு லஞ்ச்டைம்ல கேண்டின்ல டிபன் பாக்ஸ ஓபன் பண்ணி பாக்கறேன். புடலங்கா சாம்பார். எடுத்தா த்ரெளபதி வஸ்திராபரணம் மாதிரி வந்துண்டேயிருக்கு. எங்க ஆஃபீஸ்ல லஞ்ச் டைமே ஆஃப் அன் அவர் தான். இதுல புடலங்காயை எடுக்கறதுக்கே கால் மணி ஆச்சுன்னா எப்படி?”

    “மொளச்சு மூணு இலை விடலை../ நீ இன்னும் மொளைக்கவே இல்லியே/””

    “பீமாராவ். நீர் பயில்வான் தான். அதுக்காக உம்ம பேனா கூடவா இப்படி இருக்கணும். ஆறு ஓட்டை போட்டா புல்லாங்குழலா யூஸ் பண்ணலாம் போல இருக்கே!”

    இப்படி பல்லாயிரம் நகைச்சுவை சரவெடிகளை
    அய்யா அம்மா அம்மம்மா, க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் போன்ற நாடகங்களில் வெடிக்கத் தொடங்கி இன்று வரை நம்மையெல்லாம் தீபாவளிக் கொண்டாட்டத்தில் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர். நாடகமேடை, வெள்ளித்திரை இரண்டிலும் வெற்றி வாகை சூடிய இந்த சாக்லேட் கிருஷணர் வெண்ணை மாதிரி அத்தனை பேர் மனதையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடக்கூடிய கூகிள் கடோத்கஜரும் ஆவார். மேலும் வெண்பா எழுதும் புலவரும் கூட.

    இவற்றையெல்லாம் தாண்டி எனக்கு இவரிடம் பிடித்த விஷயம்.. எனக்குப் பிடித்த ஓவியக்கலையில் இவரும் ஒரு விற்பன்னர் என்பது தான்!

    பின் குறிப்பு: இந்தப் பின்னூட்டங்கள் திரு கிரேசி மோகன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இந்த வசனங்களை நினைவு கூர்ந்து வெளியிட்டுள்ள வடக்குப்பட்டி ராமசாமி, கலா வெங்கட், அனன்யா, பாபு பிகே.. கணேச குமாரன் ஆகியோருக்கு நன்றி .

    Share
  • ஆயிரம் உண்டிங்கு ஜாதி!

    -தமிழ்த்தேனீ

    ஆவடியிலே இருக்கும் ஒரு கிறிஸ்துவ (RCM) பள்ளியில் என்னைப் பேச அழைத்தார்கள், எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு “இந்து மதம்.“  அங்கே சென்று பார்த்தபோது   மேடையிலே ஒரு கிறிஸ்துவப் பெரியார், ஒரு இஸ்லாமியப் பெரியார் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பள்ளியின் தாளாளர்  அவர்கள் இருவரும் அவர்கள் மத்தைப் பற்றிப் பேசப் போகிறார்கள்  என்றார். பகீரென்றது! ஜாதிக் கலவரத்தையும்  இனக் கலவரத்தையும் மதக் கலவரத்தையும்  ஏற்படுத்துமோ tamiltheneeஇந்த நிகழ்வு என்று பயம் வந்தது. நான் மனதுக்குள்ளே தீர்மானம் எடுத்தேன் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதைவிட அதிகமாக இந்து மனத்தைப் பற்றிப் பேசுவதென்று. ஆகவே முதன் முதலாக  எனக்கு அளிக்கப்பட்ட வாய்பைப் பயன்படுத்திக்கொண்டு  அங்கே எதிரே அமர்ந்திருந்த பள்ளிப் பிள்ளைகள், அவர்களின் பெற்றோர்கள் என்று கிட்டத்தட்ட 600  பேர்களுக்கு முன்னால்  என்பேச்சைத் தொடங்கினேன். இங்கே கூடியிருக்கும் இந்துக்களே  இஸ்லாமியர்களே கிறிஸ்துவர்களே  நான் இந்து மத்தைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன்.  ஆனால் இந்து மனத்தைப் பற்றிப் பேசப் போகிறேன்  என்று ஒரு அறிவிப்பு அளித்தேன். ஒரு வினாடி  சபையே மௌனம் காத்துவிட்டு  நிமிர்ந்து உட்கார்ந்து என் பேச்சைக் கேட்கத் தயாரானது.

    tamil3எதிரே நின்றிருந்த  அந்தப் பள்ளியின் கிறிஸ்துவ மத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையை ஏறிட்டு  உங்கள் தெருவிலே ஒரு பெரியவர் கீழே விழுந்து விடுகிறார் உங்கள் கண் முன்னால்  நீங்கள் என்ன செய்வீர்கள் என்றேன். அதற்கு  அவர்கள்  அங்கிருந்தபடியே பதில் சொன்னார்கள். அவரை மேடைக்கு அழைத்தேன்  கையிலே ஒலிப்பெருக்கியைக் கொடுத்து  இப்போது சொல்லுங்கள் என்றேன். அந்த ஆசிரியை என் ஒருத்தியால் அவரைத் தூக்க முடியாது; ஆகவே உள்ளே இருக்கும் என் கணவரை  உதவிக்கு அழைப்பேன் என்றார்.  நான் கேட்டேன்… உங்கள் கணவரிடம்  என்ன சொல்லி அழைப்பீர்கள் என்று.  அதற்கு அவர்கள் கூறிய பதில்   ஏங்க  ஒரு பெரியவர் கீழே விழுந்துவிட்டார்  சீக்கிரம் வாங்க உதவலாம் என்பேன் என்றார்.   நான் அந்த  ஆசிரியையிடம்  நீங்கள் உங்கள் கணவரை அழைக்கும் போது   ஒரு இந்துப் பெரியவர் கீழே விழுந்துவிட்டார் , அல்லது ஒரு இஸ்லாமியப் பெரியவர் கீழே விழுந்துவிட்டார், அல்லது ஒரு கிறித்துவப் பெரியவர்  கீழே விழுந்துவிட்டார்   என்றெல்லாம் சொல்லவில்லை  ஒரு பெரியவர் கீழே விழுந்துவிட்டார் என்றுதானே  கூறினீர்கள்  என்றேன்.   மீண்டும் சபையிலே மௌனமான ஒரு கணம், அடுத்து  அந்த  ஆசிரியர்  இல்லை ஒரு பெரியவர் கீழே விழுந்துவிட்டார் என்றுதான்  அழைப்பேன்  என்றார்.

    tamil4அவருக்கு நன்றி கூறிவிட்டு  அவரை அனுப்பிவிட்டு  என் பேச்சைத் தொடர்ந்தேன், இப்போது நன்றாக நினைத்துப் பாருங்கள்.  ஒரு பெரியவருக்கு  ஆபத்து என்றதும் இந்த ஆசிரியை மனதிலே அவரைக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியதே தவிர  அவர்  எந்த  ஜாதியைச் சார்ந்தவர், எந்த மத்தைச் சார்ந்தவர் எந்த மொழியைச் சார்ந்தவர், எந்த  இனத்தைச் சார்ந்தவர் என்கிற சிந்தனைகள் வந்ததா என்று ஒலிப்பெருக்கியிலே  ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு  ஒரு சிலவினாடிகள்  அமைதியாய் இருந்தேன்.  சில நொடிகளுக்கு பிறகு சபையிலிருந்து ஏகோபித்த குரலில் இல்லை… இல்லவே இல்லை!  பெரியவருக்கு ஆபத்து  என்பதைத் தவிர மற்றெதுவும் நினைவுக்கு வராது என்கிற இந்துக்களின் மனம் ஒலித்தது.   இப்போது ஒன்று புரிகிறதா  நம் மனதிலே  ஜாதியில்லை;  மதம் இல்லை; மொழி இல்லை; பேதம் இல்லை; மனிதம் மட்டுமே  இருக்கிறது. ஆனால்  அரசியல்வாதிகள், சந்தர்ப்பவாதிகள் நம் மனதைத் தீய வழிகளிலே ஆக்ரமித்து  அதிலே ஜாதி மதம் இனம் மொழி போன்ற வேறுபாடுகளை விதைக்கிறார்கள். அவர்களின் சுய லாபத்துக்காக  வாக்கு வங்கிக்காக, அவர்கள் பெரும்பணம் ஈட்டுவதற்காக.  ஆகவே  நாம் அனைவருமே எந்த  மதமானாலும் எந்த  மொழியானாலும்  எந்த  ஜாதியானாலும் எந்த  இனமானாலும்   இந்தியர்கள் என்னும் ஒரு குடையின் கீழே  வாழுகிறோம். ஆகவே  நமக்குள் இந்து மதம்  இஸ்லாமிய மதம்  கிறிஸ்துவ மதம் என்றெல்லாம் பேதமில்லை.   என்பதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்; அது மட்டுமல்ல அப்படித்தான் இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.  ஆகவே இதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.  இதுதான் இந்தியர்களாக இருப்போம், இதிலே இந்து மதத்தைப் பற்றிப் பேசவோ இஸ்லாமிய மதத்தைப் பற்றிப் பேசவோ கிறிஸ்துவ மதத்தைப் பற்றிப் பேசவோ ஒன்றுமில்லை.

    இதோ மேடையில்  அமர்ந்திருக்கும் இந்த இஸ்லாமியப் பெரியவரைப் பார்த்தால் என் பெரியப்பாவுக்கு  இஸ்லாமியர் வேடம் போட்டதுபோல் உள்ளது,   இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் இந்தக் கிறிஸ்துவப் பெரியவரைப் பார்த்தால் என் சிற்றப்பனுக்கு  கிறிஸ்துவர் வேடம் போட்டது போல் இருக்கிறது. ஆகவே நம் மனதிலே இருக்கும் வேறுபாடுகளைக் களைவோம். நாம் அனைவருமே உபயோகிக்கும்  வாகனம் வேண்டுமானால்  இருசக்கர  வாகனமாகவோ , நான்கு சக்கர வாகனமாகவோ  அல்லது வானிலே பறக்கும் ஊர்தியாகவோ இருக்கலாம். ஆனால் நாம் எந்த இடத்துக்கு இறுதியாகப் போகப் போகிறோம் என்பதுதான் என் கேள்வி.   அந்த  இடத்தை நாங்கள் வைகுண்டம் என்கிறோம்;  இவர் சொர்க்கம் என்கிறார்; இன்னொருவர் பரலோகம் என்கிறார். ஆகவே  நாம் சென்று அடையும்  இடம் ஒன்றுதான்.  அதற்கு  வாகனமாகத்தான்  மதம் இனம் ஜாதி மொழி ஆகியவைகளை உபயோகிக்கிறோம். வாகனங்கள்  மாறலாம் அவரவர் வசதிப்படி.  ஆனால் செல்லும் இடத்தின் இலக்கு மாறக்கூடாது. ஆகவே நாம் எப்போதும் இந்து மனதைப் பற்றிப் பேசுவோம் இந்தியர்களாக வாழ்வோம் என்று கூறி என் சிற்றுரையை முடித்துவிட்டு  வந்து அமர்ந்தேன். அடுத்து பேசஎழுந்த இஸ்லாமியப் பெரியவரும்,  கிறிஸ்துவப் பெரியவரும்  நாங்கள் சொல்லவந்த எல்லாக் கருத்தையுமே  இந்தத் தமிழ்த்தேனீ அவர்கள் கூறிவிட்டதால் அவர் கூறிய அனைத்தையும் அப்படியே ஏற்கிறோம்  என்று கூறிவிட்டு அமர்ந்தனர். நானும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் நிமிர்ந்தேன்.

    இறைவன் படைப்பிலே  இந்த மண்ணிலே பலவகைப்பட்ட ஜாதி  களிமண் கரிசல் மண் பாலை மண் செம்மண் என்றெல்லாம்;  மரத்திலே  கனிகொடுக்கும்  ஜாதி; இலைமட்டும் கொடுக்கும் ஜாதி; காய்மட்டும் கொடுக்கும் ஜாதி  போன்ற பல ஜாதிகள்;  இலையில்  போட்டுக்கொண்டு உண்ண வசதியாக  வாழையிலை, அதிலே போட்டு உண்ணக் கூடிய   கருவேப்பிலை, கீரை வகைகள்,  கிழங்கு வகைகள், காய்கனி வகைகள் எல்லாவற்றிலுமே  ஜாதிகள் உள்ளன. அதற்காக நாம் அவைகளை வெறுக்கிறோமா?   பூவிலே  ஜாதிமல்லி, ஜாதிமுல்லை, ரோஜா வகைகளிலே  பல ஜாதிகள்;  கனியிலே  மாம்பழம் என்று எடுத்துக் கொன்டாலே  அதிலே  பங்கனபள்ளி, ருமானி, நீலம் அல்போன்ஸா போன்ற பலவகை ஜாதிகள்.

    பருப்பு வகைகளிலே   உளுத்தம்பருப்பு,  கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு,  முந்திரிப் பருப்பு போன்ற  ஜாதிகள்.   எதிலே இல்லை ஜாதி?  நாம் எல்லா ஜாதிகளையுமே  உபயோகிக்கிறோம்.  ஆனால்  எல்லாமே ஒரு  கட்டுக்குள் அடங்கிய  நீதிதான், இறைவன் வகைப்படுத்தினான்.  ஆனால் எதையுமே நீக்கவில்லை,  ஒதுக்கவில்லை, எல்லாமே ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான்  என்று நமக்கு உணர்த்தவே இத்தனை ஜாதிகளையும் மதங்களையும் வகைகளையும் எல்லாவற்றையும் பேதம் பார்க்காமல் சமமாகப் பாவித்து  ஏற்கவேண்டும்  என்றுதானே  இறைவன் எல்லாவற்றையும் அதனதன்  இயல்புக்காய்ப் படைத்து எல்லாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்னும் தத்துவத்தை உணர்த்தினான். அதைமறந்து நான் இந்து,  நான் இஸ்லாமியன், நான் கிறிஸ்தவன் நான் பௌத்தன், நான் சைனன்  என்றெல்லாம் பேதப்படுத்திக் கொண்டு நாம்தாம் நம் மனதைக் கெடுத்துக் கொள்கிறோம். எல்லாமே ஒன்றுதான் என்பதை உணர்ந்தால் பேதமே மறைந்து மனிதம் மிளிரும்.  மனிதர்கள் சுயநலம் மிகுந்து  பிரிவினையை ஏற்படுத்தி  மனித சமுதாயத்துக்கே  வினையை  ஏற்படுத்திவிட்டார்கள். வினை விதைத்தால் வினைதான் விளையும் ஒற்றுமை என்னும் தினை விதைப்போம்.    அனைத்து  ஜாதிக்காரர்களும் , மதத்துக்காரர்களும்  அவரவர் தேவையை ஒட்டி  எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்கிறார்கள். மனிதர்கள் அவர்களுக்கு  தேவையானால்  எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்கிறார்கள்.

    காலம் காலமாகப் பார்த்து வருகிறோம், எந்த ஜாதிக் குழந்தையானாலும் கையில் நிற்காமல் அழுது கொண்டே இருந்தால்  தோஷம் தாக்கி இருக்கிறது   என்று சொல்வார்கள். அப்போது அனைத்து மதத்தினரும்  காலையில்  இஸ்லாமியர்கள்  தொழும் மசூதிக்குச் சென்று  இஸ்லாமியர் தொழுதுவிட்டு வந்தவுடன்   அவர்கள் வாயால் ஊதினால்  குழந்தையின் தோஷம் போய்விடும் எனும் நம்பிக்கையால்  மசூதியின்  வாயிலில் காத்திருப்பதையும்  அப்படி  இஸ்லாமியர் வாயால் அந்தக் குழந்தைக்கு  ஊதுவதையும், அவர் ஊதியவுடன் கப்பென்று குழந்தை  அழுகையை நிறுத்திச் சரியாகிவிடுவதையும் பார்த்திருக்கிறேன்.

    அதேபோல்  பெண்ணிற்குத் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருந்த  காரணத்தினால் மனம் வருந்திய கிறித்துவ நண்பரொருவர்    என்னிடம் வருத்தப் பட்டுக்கொண்டார். நான் எனக்குத் தெரிந்த செய்தியை நான் கடைப்பிடிப்பதை  நான் நம்புவதை  அவரிடம் சொன்னேன்.     திருவிடந்தை  எனும் ஊரில்  மஹாலக்‌ஷ்மியை   மடியில் இருத்தி  வைத்துக்கொண்டு பக்தர்களுக்கு   அனுக்ரஹிக்கும்  லக்‌ஷ்மி நாராயணன் கோயிலில் அளித்த மாலையை நாங்கள் பெண்ணின் கழுத்தில் போடுவோம், அதேபோல் சிங்கப்பெருமாள் கோயிலுக்கு ஏழுவாரங்கள் சுத்தபத்தமாகத் தூய மனதோடு சென்று  வேண்டிக்கொண்டால் திருமணம் ஆகிவிடும் என்றேன்.

    ஆனால் என் மனதிலே  இவர் கிறிஸ்தவர்   இவருக்கு  நம் இந்து மதக் கலாசாரத்தை பரப்பவேண்டும், இவர் மனதிலே இந்து மத்தை விதைக்க வேண்டும்   என்னும் கபடம் இல்லாமல் அவர் பெண்ணுக்குத் திருமணமாகி அந்த  நண்பரின் கவலையும் தீரவேண்டும் என்னும்  நல்ல எண்ணத்தோடுடன் சொன்னேன், நான் அந்தக் கிறிஸ்துவ நண்பரை  அந்தக் கோயிலுக்கெல்லாம் சென்று வாருங்கள் என்று கூறவில்லை, ஆகவே  நான் உங்கள் பெண்ணுக்காக  வேண்டிக்கொண்டு  அந்தக் கோயில்களுக்கு  சென்று வருகிறேன்  என்று கூறி  அவருக்காக வேண்டிக்கொன்டேன், சரியாக  மூன்றே மாதத்தில்  மனமும் முகமும் மலர  அவர் பெண்ணிற்குக் கல்யாணம் என்று  என்கையில் திருமணப் பத்திரிகையைக் கொடுத்துவிட்டு  கண்ணில் நீர்வழிய  உங்கள் நல்ல எண்ணத்தினால்தான்  என் பெண்ணிற்கு  இப்படி நல்லவிதமாக திருமணம் நடக்கிறது என்றார்.  மனம் நிறைவாக  இருந்தது.  

    நவீன விஞ்ஞான யுகத்திலும்    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விஞ்ஞான பூர்வமாக அனைத்து  பரிசோதனைகளையும்  செய்து பார்த்துவிட்டு கடைசியாக   மன்னார்குடி  ராஜகோபாலன்  சன்னிதிக்கு சென்று   அங்கே கர்ப்பக் கிருகத்தில் உள்ள  சந்தான கிருஷ்ணன் விக்ரகத்தை  வாங்கி மடியில் வைத்துக் கொண்டு  வருவதை பார்த்திருக்கிறேன். ஆகவே  மனிதர்களின் நம்பிக்கையே அவர்களை வாழவைக்கிறது,  எதிரே இருப்பது  ஏசுவா  அல்லாவா  நாராயணனா  என்பது  முக்கியமே இல்லை. நம்மிடம் நல்ல மனதும்   தூய்மையும் நம் மனதுக்குள்ளே தெய்வ சிந்தனையும் இருந்தாலன்றி மதமும் ஜாதியும் என்ன செய்ய முடியும்?

    ஆக மொத்தம் மனிதன்  ரத்தத்திலே  திமிர் இருக்கும் வரையில் ஆடுகிறான்.  கடவுள் பொய், ஜோதிடம் பொய், மந்திரம் பொய், மாந்த்ரீகம் பொய், பக்தி பொய்  என்றெல்லாம் உளறித்திரிகிறான்.  பார்ப்பனர், செட்டியார், இஸ்லாமியர், கிறித்துவர்   என்று எக்காளம் பேசுகிறான். பிரச்சனை வரும்போது உயிர்காக்க  ரத்ததானம் செய்ய வரும் மனிதரிடம் உள்ள  ரத்தவகையை மட்டும் பார்த்து அது மட்டும்  அவருக்கு பொருந்துகிறதா  என்று பார்க்கிறான். விபத்து நடந்தால் கைதூக்கி உதவி செய்யும் கரம் பிராமணன் கரமா  இஸ்லாமியன்  கரமா  கிறிஸ்துவன் கரமா  என்று பேதம் பார்க்கிறானா, எந்தக் கரமாயிருந்தாலும்  உதவியை  ஏற்றுக் கொள்கிறான். அப்போது  மதம் ஜாதி இனம் மொழி எல்லாமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக ஆகிவிடுகிறது.

    ரத்தம் சுண்டினால், அல்லது  அவனால் இயலாமல் போனால்  அப்போது  எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிறான், எதையும் செய்யத் தயாராய்  இருக்கிறான்.  பிரச்சனை தீர்ந்தால் சரி   எந்தத் தெய்வமாய் இருந்தாலென்ன  என்று  தலைவணங்குகிறான் .  அவரவர்  ஆலயங்களில்  அவரவர் வழக்கம்;  அதைக் கண்டிக்க யாருக்கும் உரிமை கிடையாது. அவரவர் தாய் அவரவருக்கு தாய், அடுத்தவன் வந்து என் தாயைத்தான் நீ அம்மா என்று அழைக்க வேண்டும் என்று வற்புறுத்த  முடியுமா? அல்லது உன் தாயை தூக்கி எறிந்துவிட்டு வா!  உனக்கு வேண்டிய  பொன் பொருள் வாழ்க்கை வசதிகள் எல்லாம் தருகிறேன்  என்று அழைக்கிறானே  என்பதற்காக நம் தாயைத் தூக்கி  எறிந்துவிடமுடியுமா? அப்படியே தூக்கி எறிந்தாலும் வேறொருவர்  நம் தாயாய் ஆக முடியுமா?  அயல்நாடுகளிலே  இருக்கும் பல பெரிய மசூதிகளுக்கும்   தேவாலயங்களுக்கும் சென்று பார்வையிட்டேன். அங்கே கூட  அவர்களுக்கென்று விதி முறைகள், புனிதமான பைபிள், புனிதமான குரான், எல்லாவற்றையும் அவரவர் புனிதம் கெடாமலே பாதுகாக்கிறார்கள். அவரவர் கலாசாரப்படி கட்டிடங்கள் அமைத்துக் கொள்கிறார்கள், கர்ப்பக் கிருஹம் அமைத்துக் கொள்கிறார்கள். அவற்றை மதித்து  அவரவர் கலாசார விதிகளை அனுசரித்தே  நடந்து கொள்கிறர்கள். சில இடங்களில் அன்னியர் பிரவேசம் இல்லையென்று சட்டம் அவர்களால் போடப்பட்டிருந்தால் உறுதியாக அன்னியர்களை  அனுமதிக்காமல்  புனிதம் காக்கிறார்கள்.

    கிறித்துவ ஆலயங்களில்  கிறித்துவருக்கு அளிக்கப்படும்   மரியாதை மற்ற மதத்தினருக்கு அளிக்கப்படுவதில்லை.   இஸ்லாமிய  ஆலயங்களில்  மற்ற மதத்தினருக்கு முதன்மை கிடையாது  ஒரு தர்காவிற்கு    காலிலே செருப்போடு போக முடியுமா?   புனித நீரையும்  அப்பத்தையும் மற்ற  மத்தவருக்கு அளிப்பார்களா கிறிஸ்தவர்கள்? அல்லது  இஸ்லாமிய மத குருமார்கள் தொழுகை நடத்தும் இடத்திலே மற்ற  மதத்தவரை அனுமதிப்பார்களா?  மற்ற  மதத்தவர்  அவர்களுடைய மதத்துக்கு மாறாதவரை அவர்களுக்கு ஞானஸ்நானம் அளிப்பார்களா?  ஒரு பாதிரியார் நிற்கும் தேவாலயத்தில் மற்ற  மதத்தவர்  யாரேனும் நின்று ஒரு கிறிஸ்துவப் பெண்ணுக்கு  திருமணம் செய்விக்க  முடியுமா? அனுமதிப்பார்களா?  ஏற்றுக் கொள்வார்களா?  பேரலாயப் பாதிரிமார்கள்  இருக்கும்  இடங்களில்   அந்தப் பேராயப் பாதிரிமாரைத் தவிர   யார் வேண்டுமானாலும்  அந்த   முக்கியமான  பிரதான இடத்தில் அனுமதிப்பார்களா? 

    அதைவிட   நகைச்சுவை என்னவென்றால்   பல விளையாட்டு   நடத்தும் கிளப்களில்   வேட்டி அணியத் தடை விதித்திருக்கிறார்கள். உணவகங்களில்     வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுகளுக்கு அனுமதி கிடையாது என்கிறார்கள். மலேசியாவில்  ஒரு மசூதிக்கு  சென்றோம்;   அங்கே  அந்தக் கருப்பு  அங்கிகளை அணிந்தால்தான் உள்ளே அனுமதிப்போம் என்று சட்டமே உள்ளது. அதனால் அவர்கள்  அளிக்கும் கருப்பு அங்கிகளை  அணிந்தவருக்கே அனுமதி.  அதையும்  தவிரக்  கருப்பு அங்கி அணிந்தால் கூட    மற்ற மதத்தினருக்கு  ஆங்கே   நம் கோயிலைப் போல   கர்ப்பக் கிருஹம் என்று சொல்லக் கூடிய  மையமான இடத்தைப் பார்க்கக்   கூட அனுமதி கிடைக்கவில்லை.   அவரவர்  புனிதத்தை அவரவர் காக்கிறார்.  சுகாதாரம் கருதி  சில விதிகளைப்  பொது மக்கள் வரும் ஆலயங்களில்  கடைப்பிடிக்க   சில விதிகள் நிர்ணயித்தால் அவற்றைக் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும்.

    அதை விடுத்து    சுத்தமாகவோ,  சுகாதாரமாகவோ இல்லாமல்   சைவ, வைணவக் கோயில்களில்  நான்  அறுத்த கோழியுடன் வருவேன்  என்னை அனுமதிக்க வேண்டும்   என்று பிடிவாதம்  பிடித்தாலோ  அவர்களைக் குறை கூறினாலோ  அது நியாயமே அல்ல.  அவரவர்  நியாயம் அவரவருக்கு. அதில் தலையிட  அடுத்தவருக்கு அனுமதி கிடையாது.  சக்தி ஸ்தலங்களில்  பலியிடுதல் தொன்று தொட்டு வரும் வழக்கம்   நேபால் செல்லும் போது  மானகாம்னா தேவி ஆலயம் என்னும் ஒரு ஆலயத்துக்கு  சென்றோம். அங்கே வரிசையில் நிற்கும் பக்தர்கள்  கையில்  ஒரு கோழியோடுதான் நிற்கிறார்கள். அது அவர்கள் வழக்கம்! நாம் அதிலே தலையிடாமல் மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்துவிட்டு வந்தோம். அவர்களிடத்திலே போய் ஆடுகள் கோழிகள் ஆகியவறை பலி கொடுக்கக் கூடாது என்று உபதேசம் செய்தால் அவர்கள் கேட்பார்களா?

    அல்லது  இந்தியாவிலிருந்து  வந்திருக்கும் பிராமணன் நான்  ஆகவே   கர்ப்பக் கிருஹத்திலே இருக்கும் பூசாரியை  விரட்டுங்கள்;  என்னை அங்கே அனுமதியுங்கள்  நான் செய்கிறேன் பூஜை என்றால் அனுமதிப்பார்களா?  அப்படிச் சொல்பவர்களை  அம்மனுக்கு பலி போட்டுவிடுவார்கள். அதேபோல்   இந்துக் கோயில்களில் அது வைணவமோ சைவமோ சாக்தமோ  அந்தந்த  ஆலையங்களில்  அந்தந்த  முறையான ஆகமங்களைக் கடைப்பிடிப்பது  அவர்கள் வழக்கம். அவர்கள்    அர்ச்சகர்கள் என்று யாரை நியமிக்கிறார்களோ  அவரைத் தவிர   மற்றவரை   அவர்கள் மட்டும் ஏன் அனுமதிக்க வெண்டும்  அவர்கள்  யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக்கவேண்டும்  என்று ஏன் எதிர்பார்க்கிறீகள்? ஆகவே இனியாவது பார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் என்று   எழுதிக் கொண்டிருப்பதை   நிறுத்துங்கள். இந்தியராக இந்தியாவிலே உள்ள அனைத்து  மதத்தவரையும் மதிக்கும் ஒரு புனித  இந்தியராக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

    “ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
    அன்னியர் வந்து புகல் என்ன நீதி? – ஓர்
    தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்
    சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?“
     

    என்று  மஹாகவி பாரதியார் எழுதினார். உண்மைதான்  ஜாதி இல்லையென்று அவர் சொல்லவில்லை. ஜாதிகள் உண்டு அவைகளை மதியுங்கள். அவரவர் மதத்தைக் கடைப்பிடிக்க  அவரவரை  அனுமதியுங்கள்;  மனிதம் ஓங்கட்டும் என்றுதான் சொன்னார்.  ஒற்றுமையைக் கடைப்பிடியுங்கள். நாமெல்லோரும் சகோதர்கள் என்றார். ஆகவே  மனிதம் காக்கப்படவேண்டுமானால் பேதங்கள் களையப்படவேண்டும், இரக்கம் மனிதாபிமானம் உதவும் குணம் ஓங்க வேண்டும். ஒன்று படுவோமா? 

    “அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
    அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?“  — தமிழ்த்தேனீ

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 219 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள் அன்பு வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும். உலகம் விஞ்ஞான உலகின் விளிம்பைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் அனுகூலத்தினை அளவிலா ஆனந்தத்துடன் அனுபவிப்போர் பலர், அவ்வசதிகளை அனுபவிக்க முடியவில்லையே எனும் ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்போர் பலர்.

    sakthi1அவ்வசதிகளில் திளைத்துக் கொண்டும் அவற்றினை அனுபவிக்கத் தெரியாமல் வாழ்வோர் பலர், அனுபவிக்க முடியாமல் திண்டாடுவோர் பலர். விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் உலகின் மூலைமுடுக்குகளில் வாழும் வறுமைக்கோட்டின் எல்லைக்குக்கீழ் வாழும் மக்களின் வாழ்வை உயர்த்த முயற்சிப்போர் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்களே!

    இத்தகைய வசதியான வாழ்வின் அடிப்படையாக மேலைத்தேச நாடுகள் இருக்கின்றன என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்த வசதியான வாழ்வினைத் தமக்குத் தக்க வைத்துக் கொள்வதையே பிரதானமாகக் கொண்டு வாழ்வோரே அதிகமாகக் காணப்படுகின்றனர். அதைத் தவறு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இத்தகைய சுயநலத்தினை முற்படுத்தி வாழ்வோர் என எண்ணப்படுவோர் மத்தியிலிருந்துதான் மற்றவர் வாழ்க்கையைத் தமது வாழ்க்கையிலும் முதன்மைப்படுத்தும் தன்னலமற்ற தியாகிகளும் தோன்றுகிறார்கள் என்பதுவே உண்மையாகிறது.

    தமது நாட்டின் பெரும்பான்மை மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு எதிரானதாக இருந்தாலும் மனிதாபிமானம் மதிக்கப்பட வேண்டியது, உலகில் பிறந்த அனைவரும் ஒருதாய் மக்களே எனும் கொள்கையில் வாழ்வோர் பலர் இம்மேலைத்தேச சமுதாய முன்றிலில் மலர்கிறார்கள் என்பது உண்மை. அவர்களது வாழ்வின் நோக்கம் வாழ்வின் அடிமட்டத்தில் அல்லாடுபவர்களின் வாழ்வை உயர்த்துவதை முதன்மைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    sakthi2நாமனைவரும் உலகில் எங்கே பிறக்கிறோம் என்பது எமது தெரிவில் நடப்பது இல்லை. நாம் பிறக்கும் தேசம் வசதியுடையதா? நாம் பிறந்த குடும்பம் வாழ்வின் மேல்மட்டத்திலிருக்கிறதா அன்றிக் கீழ் மட்டத்திலிருக்கிறதா? என்பது கூட எமது தெரிவிலில்லை. எங்கே பிறக்கிறோமோ அங்கே எமது வாழ்க்கையை எம்மால், எமது திறமைக்கும் வசதிக்கும் உட்பட்ட விதத்தில் மேன்மைப்படுத்திக் கொள்வது மட்டும் எமது கைகளிலுள்ளது. ஆனால் சிலவேளைகளில் நாட்டில் அரசியல்வாதிகளும், நாட்டின் தலைவர்கள் எனப்படுவோரும் எடுக்கும் முடிவுகள் எமது வாழ்வின் போக்கினையே மாற்றி விடுகிறது. 

    விரும்பியோ, விரும்பாமலோ நாட்டின் தலைவிதியோடு  நமது தலைவிதியும் பின்னிப் பிணைந்து ஒரு சுழலில் அகப்பட்ட சருகினைப் போல இழுத்துச் செல்லப் படுகிறோம். அதிர்ஷ்டவசமாக ஓரளவு ஜனநாயகம் எனக்கருதப்படும் அரசியலமைப்பைக் கொண்ட நாடுகள் தம்மைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வதினால் அவை போர் எனும் கொடிய நிகழ்வினுள் தள்ளப்படுவதில்லை. சர்வாதிகார அமைப்பினைக் கொண்ட நாட்டின் தலைவர்கள் எனப்படுவோர் தமது பதவிவெறிக்காகத் தமது மக்களின் நலனைச் சூதாடமுனைகிறார்கள். விளைவு? நாம் இன்று உலகின் பலபகுதிகளிலும் காணப்படும் “அகதிகள்”எனும் விசேடத் தகைமை பெற்ற பரிதாபத்துக்குரியவர்கள்.

    எதற்காக இந்த அலசல் எனும் ஒரு கேள்வி உங்களுக்குள் எழுந்தால் தவறில்லை.

    இங்கிலாந்தில் ஒரு பரபரப்பை உருவாக்கிய ஒரு உன்னதப் பெண்மணியைப் பற்றிக் கூறுவதற்காகவே இந்த ஆரம்பம். 1974ஆம் ஆண்டு இங்கிலாந்தின் “யோர்க்‌ஷையர்” எனும் இடத்திலுள்ள “பட்லி” எனும் நகரில் பற்பசைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவருக்கும், அவ்வூரில் பள்ளிக் காரியதரிசியாக இருந்த பெண்ணுக்கும் மகளாகப் பிறந்தவர் தான் “ஜோ கொக்ஸ் (Jo Cox ) என்பவர். இவர் தனது கல்விப் பட்டதாரிப் பட்டத்தைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெற்றார். ஆரம்பகாலத்தில் இளம் பட்டதாரியாக லேபர் கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியைத் தொடங்கிய இவர் மனிதாபிமானத்தில் மிதமிஞ்சியவர். இக்காரணத்தினால் ஒக்ஸ் பாம் எனும் தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார். இந்நிறுவனத்திற்காக பெல்ஜியம், மற்றும் ஜக்கிய அமெரிக்கா நாடுகளில் பணியாற்றிய இவர் பல அகதிகளைக் காக்கும் பணிகளிலும் ஈடுபட்டு மத்தியகிழக்கு நாடுகளில் பணியாற்றினார்.

    முந்தைய லேபர் கட்சியின் தலைவரான நீல் கினக், அவரது மனைவி ஜரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கிளினஸ், கோர்டன் பிரவுன் அவர்களின் மனைவி சாரா ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் ஆக்ஸ்பாம் நிறுவனத்தில் பணியாற்றும்போது இவரது கணவரான பிராண்டன் கொக்ஸ் அவர்களைச் சந்தித்து திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. 2015 பொதுத்தேர்தலில் பட்லி அன்ட் ஸ்பென் எனும் நகருக்கு லேபர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 40 வயதே நிறைந்த துடிதுடிப்பான இளம் அரசியல்வாதியான இவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில் தன்னுடைய நகரின் பல்வேறு இனக் கலாசாரத்தின் மேன்மையைப் பற்றி பெருமையாகப் பேசினார். பாலஸ்தீன மக்களின் மீதான தடையை இஸ்ரேலிய அரசாங்கம் நீக்க வேண்டும் எனும் கோரிக்கைக்கும் மிகவும் ஆதரவாகப் பிரசாரம் செய்து வந்தார். தன்னுடைய தொகுதி மக்களுக்கான சேவைக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வந்த இவரும், இவரின் குடும்பமும் தேம்ஸ் நதியில் உள்ள ஒரு படகு வீட்டிலேயே வசித்து வந்தார்கள். வசதி மிகுந்த இந்த மேலைநாட்டில் தன்னுடைய வசதியைகளைப் பெருக்கிக் கொள்ளும் சுயநல வாழ்வினை இவரும், இவரது கணவரும் கொண்டிருக்கவில்லை.

    இத்தகைய சூழலில்தான் 2016ஆம் ஆண்டு ஜீன் மாதம் 27ஆம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்தில் தொடரும் பிரதிநிதித்துவத்தைப் பற்றிய பொதுக்கருத்துக் கணிப்பென அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரசாரத்தில் பல அரசியல் தலைவர்கள் தமது ஜரோப்பிய ஒன்றியத்திற்கெதிரான பிரசாரத்தில் இமிகிரேஷன் என்பதை முக்கிய காரணியாக்கினார்கள். இது தெரிந்தோ, தெரியாமலோ மக்களின் மனதில் பொதுவாக வெள்ளை இனத்தவர் மத்தியில் ஒருவகையான இனத்துவேஷத்தைத் தூண்விட்டிருக்கிறது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வினத்துவேஷம் சில இனவெறியர்கள் உள்ளத்தில் ஒரு வெறியைத் தூண்டி விட்டது. ஜரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவாகவும்,இமிகிரேஷன் என்பது இங்கிலாந்தின் பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமில்லை என்றும் ஜோ கொஸ் அவர்கள் மிகவும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்தார்கள்.

    இவ்வருடம் ஜூன் மாதம் 16ஆம் திகதி சரியாக ஜரோப்பிய ஒன்றியத்தின் பொதுஜன வாக்கெடுப்புக்குச் சரியாக ஒருவாரத்திற்கு முன்பாக இவரது தொகுதியைச் சேர்ந்த தொமஸ் மேயர் எனும் இனவெறியனின் கைகளினால் இந்த இளம் துடிதுடிப்பான பாராளுமன்ற உறுப்பினர் இவரது தொகுதி காரியாலத்திற்கு அருகில் தெருவில் வைத்துப் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். உலகின் அநாதரவான மக்களுக்காகப் பிரகாசமாக எரிந்த ஒரு விளக்கு அணைக்கப்பட்டது. மனிதாபிமானத்தின் முக்கிய விலாசம் ஒன்று பலாத்காரமாக அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் மீது விழுந்த அனுதாப அலை இங்கிலாந்து இன்னமும் சகிப்புத்தன்மை கொண்ட, மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களையே பெரும்பான்மையாகக் கொண்ட நாடு என்பதனை உலகுக்கு நிரூபித்தது.

    இவரது கொலைகாரன் ஒரு தீவிர வெறித்தனமிக்க இனவெறியர் என்று நிரூபிக்கப்பட்டது. அவருக்கு நேற்று நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை அதாவது சாகும்வரையில் சிறைத்தண்டனை எனும் கடும் தண்டனை விதிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அறிக்கையளித்த அவரது கணவன் அக்கொலைகாரன் மீது நான் பரிதாபப்படுகிறேன். அவன் மனித இனத்துக்கு எதிரான ஒரு பயங்கரவாதி. என்னுடைய மனைவியின் இலட்சியக் கனவுகளை முன்னெடுப்பதற்காகவும் எனது குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காகவும் எனது வாழ்நாளைச் செலவிடுவேன் என்றும் குரோதத்தை வெளிப்படுத்த அக்கொலைகாரன் எடுத்த நடவடிக்கை நாட்டிலும், உலகத்திலும் மனிதநேயமிக்க மக்களின் அன்பு அலைகளையே வெளிப்படுத்த உதவியிருக்கிறது என்று அனைவரின் நெஞ்சையும் நெகிழவைக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

    உலகில் பிறந்த அனைவரும் இயற்கையின் குழந்தைகளே! உலகில் அமைதியாகவும் மகிழ்வுடனும் வாழும் உரிமை அனைவருக்கும் சமமாகவே உள்ளது என்பதனையே இது போன்ற உன்னதத் தியாகிகள் நிரூபித்து மறைகின்றனர்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • 24 – நவம்பர் பகவான் அரவிந்தர் சித்தி நாள்….!

    aurobindo-gosh
    ——————————————————————————-

    ”சித்திநாள் இன்றுகாண், சீலர் அரவிந்தர்
    முத்தி அடைந்த மதர்மகான் -பக்தியில்
    ஊன்றித் திளைப்பீர்காள் ஊன்றிடும் கோலவர்தான்
    தோன்றி தவசிங்கத் தூண்”….கிரேசி மோகன்….!

    Share
  • எந்தக் கண்ணன் அழைத்தானோ….

    அஞ்சலி: டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா

    எஸ் வி வேணுகோபாலன்

    bala

    எட்டு வயதில் விஜயவாடாவில் தமது முதல் கச்சேரியை நிகழ்த்திய சிறுவன் முரளி கிருஷ்ணாவின் அசாத்திய இசை நுட்பத்தில் திளைத்த ஹரிகதா பாகவதர் எம் சூரியநாராயண மூர்த்தி அவர்கள், அவரை பாலமுரளி கிருஷ்ணா ஆக்கினார். அதன் பிறகு தொடர்ந்து தமது திறமையை வளர்த்தெடுத்து வந்த அற்புத இசை மேதை டாக்டர் எம் பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு, கர்நாடக இசை உலக வரலாற்றின் முக்கிய பாகம் ஒன்றின் நிறைவைக் குறிப்பதாகும்.

    முதுமையிலும் கூட ஒரு குழந்தையின் புன்னகை வற்றாதிருக்கும் முகம். செக்கச் சிவந்த உதடுகள். குரலோ, மிகவும் தனித்துவமிக்க நாண்களிலிருந்து புறப்பட்டு வந்தது போன்ற சிறப்பொலியைப் பெற்றிருந்தது. உடல்மொழியில் தமது திறமையின் ஒளிக்கமாட்டாத கம்பீரமும், இசை ஞானத்தின் ஒளியழகும், கற்பனையின் சாரலும், சவாலுக்கு அழைக்கும் பார்வைப் பொறிகளும் மின்னிக்கொண்டிருக்கும் எப்போதும்.

    balamவாய்ப்பாட்டு மட்டுமின்றி இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றுக் கொண்ட அவரது தேடல் சில புதிய ராகங்களையும், தாள லயங்களையும் உருவாக்கிப் பெருமை சூட வைத்தது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளையும் எழுப்பியது. வீணை எஸ் பாலசந்தர், எஸ் ராமனாதன் போன்ற கலைஞர்கள் புதிதாக எதையும் உருவாக்கவில்லை, ஏற்கெனவே இருந்த ராகங்களே அவை என்று வாதிட்டனர். பாலசந்தருக்கும், பாலமுரளிக்கும் இடையிலான மோதலை ஒரு தொடராகவே மாற்றி .வெளியிட்டு வந்தது ஒரு வார இதழ். ஆயினும், சமகால இசை விற்பன்னர்கள் நடுவே அவரது இடம் முக்கியமானதாயிருந்தது. கச்சேரிக்கு நடுவே சிறிய இடைவேளை விடுவதென்ற அவரது செயல்பாடு அக்காலத்தில் புரட்சிகரமாகக் கருதப்பட்டதாம்.

    தியாகய்யரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளாகட்டும், என்றும் வாடாத புகழ்மிக்க நகுமோமு ஆகட்டும் பாலமுரளி அவர்களது குரலினிமை கொடி கட்டிப் பறக்கும்.

    திரை இசை ரசிக உலகத்திலும் பாலமுரளிக்கு என்றும் அழியாத ஓர் இடமுண்டு. பாலையா வேறு பால முரளி வேறு என்று பிரித்துவிட இயலாதபடிக்கு திருவிளையாடலின் சிறப்பம்சங்களாகத் திகழும் ஒரு நாள் போதுமா பாடலுக்கு நிகர் எது? கண்ணதாசனின் அருமையான அந்தப் பாடலை கே வி மகாதேவன் ஓர் இசைச் சிற்பமாகவே செதுக்கி இருந்தார். போதையூறி மெல்லப் பரவும் ஆலாபனையிலிருந்து, அதன் பல்லவியில் கூடிக் கொண்டே செல்லும் ஒவ்வொரு சொல்லும் கிளர்ச்சியுற வைக்கும். சரணங்களில் பாடகரைத் தொட நீளும் ரசிகரின் கையைப் பிடித்து உடனிருத்தி ரசிகரையும் குழைந்து, அதிர்ந்து, மிதந்து, முழங்கி நிமிர வைக்கும் குரல் அது. எந்தெந்த ராகங்களின் பெயர் இடம்பெறுகிறதோ அந்த இடங்கள் அதே ராகத்திலேயே அமைக்கப்பட்ட இசையில், கானடா என்று பாலமுரளி உருக்கி உருக்கி வார்க்கும் வீச்சு அநாயசமாக வெளிப்படும். என் பாட்டு தேனடா என்று அனுபவித்து நகரும் அடுத்த வரியின் எல்லையில், இசைத் தெய்வம் நானடா என்ற அசத்தல் இடத்தில் அந்தப் பாட்டுத் தேர் நிலைக்கு வந்து நிற்பது கண்ணீர் சொரியவைப்பது.

    பி சுசீலாவுடன் அவர் பாடிய ‘தங்க ரதம் வந்தது'(கலைக்கோயில்) பாடல், சிருங்கார ரசனையில் தொடுக்கப்பட்டிருந்த மதுவின் கோப்பை. நூல் வேலி படத்தின் சிக்கலான மனநிலையின் எதிரொலியாக இடம்பெற்ற கண்ணதாசனின் ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ‘, எஸ் எஸ் வியின் நளினமிக்க மெல்லிசையில் இரவு நேரத்தில் கேட்கக் கேட்க வேறெங்கோ அழைத்துச் செல்லும். பாலமுரளி கிருஷ்ணாவின் நுட்பமிக்க குழைவுகளும், அழகியல் கற்பனையும் மெருகூட்டிக் கொடுக்க, நமக்கு மிகவும் நெருக்கமான மனிதர் ஒருவர் இதமாக நம்மை அரவணைத்து அறிவுறுத்தும் பதத்தில் அமைந்திருக்கும்.

    கவிக்குயில் படத்திற்கான அவரது, “சின்னக் கண்ணன் அழைக்கிறான்..”, காற்றுடன் அவர் நடந்த வேக நடையின் உரையாடல் பரிமாற்றம். அதில் சரணத்தில், கண்கள் சொல்கின்ற கவிதை இளவயதில் எத்தனை கோடி என்ற இடம் கொண்டாட்டக் களம். அதே பாடலைத் தாமும் தனியே பாடி இருந்த எஸ் ஜானகி, பாலமுரளி பாடியிருந்தது தெரிந்திருந்தால் நான் பாடி இருக்கவே மாட்டேன் என்று சொன்னாராம். இளையராஜாவின் மறக்க முடியாத வரிசையில் முக்கிய இடமொன்றில் இருப்பது இந்தப் பாடல்.

    தி இந்து ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் குழுவில் இருக்கும் கரிமெல்லா சுப்பிரமணியம் அவர்கள், பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவர்களில் ஒருவர். பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி இதழுக்காக கரிமெல்லா அவர்களை நேர்காணல் செய்கையில், தமது குருநாதரைப் பற்றிய பெருமை அந்தப் பார்வையற்றவரின் விழிகளில் சுடர்ந்ததை விவரிக்க முடியாது. சொந்த சாகித்தியங்கள் பல இயற்றி இருந்த பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் ஒருமுறை சோவியத் ரஷ்யாவுக்குப் பயணம் சென்றுவிட்டு வந்ததும், கன்னுல பண்டுல ரஷ்யா என்று தொடங்கும் தெலுங்குப் பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். விசால பாவாலு, சுவிசால பவந்துலு என்று செல்லும் அந்தப் பாடல், விசாலப் பார்வையால் மக்களை ஆட்கொண்டு முன்னெழுந்த சோவியத் உலகின் உன்னத நாகரிகத்தை வியந்து எழுதப் பட்டிருந்தது என்றார் கரிமெல்லா.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளிலும் திரை இசையில் பாடிய பாலமுரளி அவர்கள் தாமே இசை அமைக்கவும் செய்தவர். ஏ பி நாகராஜன் இயக்கிய நவரத்தினம் படத்தில், எம் ஜி ஆருக்கும் குரல் கொடுத்தவர் (குருவிக்காரன் பொஞ்சாதி மட்டுமல்ல ஆங்கில இசைப்பாடல் ஒன்றைப் பாடி அதற்கு ஏற்ற கீர்த்தனை ஒன்றையும் பாடி இருப்பார் ஒரு காட்சிக்காக).

    புதிய கலைஞர்களைப் பாராட்டுவதில், பொது மேடையில் நிகழ்வுகளில் பங்கேற்பதில் முதுமையிலும் அவருக்கிருந்த ஆர்வத்தை, வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இசைக்கலைஞர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் சில ஆண்டுகளுக்குமுன் பார்க்க முடிந்தது. திறமையின் மேலாதிக்க உணர்வு அவருக்கு நிரம்பி வழிவதாக விமர்சகர்கள் சிலர் கசப்போடு எழுதி இருந்தாலும், கூடவே அவரது அபார இசையை ரசனை சொட்டச் சொட்ட எழுதியவர்கள்.

    ஒரு நாள் போதுமா பாடல் காட்சியில் நடிக்குமுன், நடிகர் பாலையா அந்தப் பாடல் ஒலிப்பதிவையும், பொதுவாக பாலமுரளி கிருஷ்ணா பாடும் விதத்தையும் கவனித்து விட்டு வந்ததாகச் சொல்வார்கள். திரை நிரம்பிய ஒரு பேரவை. இரண்டு பக்கங்களிலும் வண்ண வண்ண உடைகள் அணிந்தபடி விதவிதமான வாத்தியக்காரர்கள். பின்னே விசிறிக் கொண்டிருந்தபடி முக அசைவில் அசத்திக் கொண்டிருக்கும் உசிலைமணி முதலானவர்களுக்கு நடுவே நாயகமாகக் கம்பீர வடிவில் மீசையை அடிக்கடி நீவி விட்டுக்கொண்டே ஒரு நாள் போதுமா என்று பாடுவதாக நடித்தது பாலையா தான் என்றாலும், இசைத் தெய்வம் நானடா என்ற இடத்தில் சாட்சாத் பாலமுரளி கிருஷ்ணா அங்கே தோன்றிவிடுவதாகப் படும்.

    அந்தத் தன்னுணர்வும், துணிவுமிக்க ஞானச் செருக்கும் பெருகி வெளிப்படும் ஒரு காந்தாரக் குரலை ஒரு குழந்தையின் புன்னகை நழுவியோட இசைத்துக் கொண்டே இருந்த மகத்தான மனிதரே இப்போது மறைந்துவிட்டிருக்கிறார், தமது இசை மேதைமைக்கு சாகா வரமளித்துவிட்டு!

    &&&&&&&&&&&&&&&&&&&
    ஓவியம்: ஓவியர் தேவநாதன் (தேவா)
    devan srinivas <deva_1202@yahoo.co.in

    https://youtu.be/D0wLIArAayY

     

    https://youtu.be/J_5kf_9O9Ik

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”பராக்பராக் கண்ணன் பரந்தாமன் மன்னன்
    பராக்பராக் கேசவ் பிரஷ்ஷில் -பராக்கெங்கும்
    இன்னாரென்று பாராதே எங்கும் இருக்கின்றான்
    மன்னார் குடிமைனர் மால்”….கிரேசி மோகன்….!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 78

    மகாத்மா காந்தி அருங்காட்சியகம்- நினைவு இல்லம், (ஃபீனிக்ஸ்) டர்பன், தென் ஆப்பிரிக்கா

    முனைவர்.சுபாஷிணி

    மகாத்மா காந்தி என பெருமையுடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 1869ஆம் ஆண்டில் இந்தியாவின் போர்பந்தர் என்ற பகுதியில் பிறந்தார். இளம் பிராயத்தில் உள்ளூரில் கல்வி கற்று திருமணமும் முடித்து பின்னர் 1888ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்குச் சென்று அங்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இந்திய கம்பெனிக்குச் சட்டத்துறை உதவிகள் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்டு 1893ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார். 1914ஆம் ஆண்டுவரை, அதாவது 20 ஆண்டுகள் தன் குடும்பத்துடன் மகாத்மா காந்தியவர்கள் தென்னாப்பிரிக்காவின் டர்பன் புறநகர் பகுதியான ஃபீனிக்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இல்லம் சீரமைக்கப்பட்டு ஒரு அருங்காட்சியகமாகவும் நினைவாலயமாகவும் இருக்கின்றது. அருகிலேயே மகாத்மா காந்தியவர்கள் தொடங்கிய அச்சகமும் இன்னமும் அதன் சிறப்பு குறையாது அமைந்திருக்கின்றது.

    as1

    டர்பன் நகரிலிருந்து வடக்கு நோக்கிய பயணமாக N2 சாலையில் 177 எக்ஸிட் எடுத்து Kwamashu H’way (M25) Inanda R102 சாலையில் வந்து இடது பக்கம் தொடர்ந்து பயணிக்கும் போது சாலையின் இருபக்கமும் மகாத்மா காந்தி நினைவு இல்லம் பற்றிய விளம்பர அட்டைகள் விளக்குக் கம்பங்களில் இணைத்திருப்பதைக் காணலாம். வழிகாட்டிப் பலகையைப் பார்த்தே உள்ளே நுழைந்தால் அங்கே சுலபமாக இந்த இடத்தை நாம் அடைந்து விடலாம். ஃபீனிக்ஸ் மக்கள் குடியிறுப்புப் பகுதி என இப்பகுதி அழைக்கப்படுகின்றது.

    ​2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்து நாட்கள் பயணமாக டர்பனுக்குச் சென்றிருந்தேன். இங்கு செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காந்தியின் சத்தியசோதனை நூலை நான் வாசித்திருப்பதால் அவர் ஆப்பிரிக்காவில் சில காலங்கள் வாழ்ந்தார் என்பது நினைவில் இருந்தது. இந்தப் பயணம் அமைந்தபோது கண்டிப்பாகச் சென்று பார்த்து வரவேண்டிய ஒரு இடம் இது என என் பயணக் குறிப்புப் பட்டியலில் இணைத்துக் கொண்டேன்.

    as2

    காந்தி நினைவு இல்லம் காணச் செல்கின்றோம். இந்திய வம்சாவளியினர் நிறைந்த ஒரு இடமாக இது இருக்கும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் சுற்றிலும் எளிமையான, ஆப்பிரிக்க இனமக்களின் கிராமமாகக் காட்சியளித்தது ஃபீனிக்ஸ். நான் சென்றிருந்த வேளையில் ஆப்பிரிக்க சூலு இன மக்கள் சாலையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் என இருந்தனர்.

    as3

    உள்ளே செல்லும் போது முதலில் நம்மை வரவேற்பது மகாத்மா காந்தி ஆரம்பித்த அச்சகத்தின் கட்டிடம். இது ஒரு சர்வதேச பத்திரிக்கை அச்சகம் என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்குதான் காந்தி தனது Indian Opinion என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். பின்னர் இந்தப் பத்திரிக்கை Opinion எனப் பெயர் மாற்றம் கண்டது. 1903 முதல் இந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1961ஆம் ஆண்டு இப்பத்திரிக்கை வெளியீடு நின்று போனது.

    இங்கு காந்தி வாழ்ந்த இல்லத்திற்கு சர்வோதயா என்ற பெயர் அமைந்திருக்கின்றது. இந்த இல்லம் இருக்கும் இடத்தில் முதலில் காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் அமைக்கப்பட்ட இல்லமானது 1985ஆம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்த இனாண்டா கலவரத்தில் தீயில் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அதே இடத்தில் அதே வகையில் புதிய இல்லம் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் தரைப்பகுதிகள் தீயில் சேதமடையாததால் வீட்டின் மேல் பகுதியை மட்டும் புதுப்பித்து நினைவில்லமாக எழுப்பியிருக்கின்றனர். இந்த இல்லத்தின் உள்ளே மிக எளிமையான வகையில் காந்தியை நினைவூட்டும் பல வரலாற்று நிகழ்வுகளின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    as4

    ​வீட்டின் முன் புறத்தில் சிறிய பூங்காவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவனத்தின் ஒரு பகுதியில் மிக அழகான சிறிய குடில் ஒன்று அமைக்கப்பட்டு அதில் உள்ளே காந்தியின் சிலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஒரு சமூக மையம் போன்ற ஒரு கட்டிடம் உள்ளது. இங்கே காந்தியின் பெரிய உருவப் படங்கள் குறிப்புகளுடன் உள்ளன.

    ​மீண்டும் முன் பகுதிக்கு வந்தால் அச்சகத்தை வந்தடைவோம். அச்சகத்தின் உள்ளே உள்ள அறையில் காந்தி வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இவை வரலாற்றை நினைவூட்டும் ஆவணங்கள். இங்கே விரும்புவோர் காந்தி தொடர்பான நினைவுச் சின்னங்களை வாங்கிச் செல்லலாம். இங்கே வருவோருக்கு இலவசமாக இந்த நினைவு இல்லம் பற்றிய ஒரு சிறு குறிப்பு அட்டையை வழங்குகின்றனர்.

    as5

    இங்கு, இந்த அச்சகத்தில் தான் காந்தி தனது முதல் நூலான Indian Home Rule நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலில் அவர் இந்தியாவிற்கான தனது அரசியல் சிந்தனைகளையும் பல மதங்களுக்கிடையிலான மத நல்லிணக்கத்தின் தேவை பற்றியும் எழுதியுள்ளார். அண்ணல் காந்தி மதத்தீவிரவாதக் கொள்கை கொண்டோரால் கொல்லப்பட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது சிலைக்கு மரியாதை செய்கின்றோம். ஆனால் நாம் அவரது கொள்கைகளான அகிம்சையைப் போற்றுவதும் இல்லை, அவரது கொள்கையான மத நல்லிணக்கத்தை மதிப்பதும் இல்லை என்ற சூழலே பெருகி வருகின்றது.

    மகாத்மா காந்தியடிகளின் வாழ்வில் தென் ஆப்பிரிக்க வாசம் என்பது மிக முக்கியமானது. இங்கிருந்த காலத்தில் அவர் நேரில் சந்தித்த ஆப்பிரிக்க மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும் தென் இந்தியாவிலிருந்து சென்றிருந்த இந்திய கரும்புத் தோட்டக் கூலித் தொழிலாளருக்கு எதிரான ஒடுக்குமுறையும் அவரை விடுதலை பற்றி சிந்திக்க வைத்தன. இந்த சிந்தனைக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் தமிழகத்திலிருந்து ஆப்பிரிக்காவிற்குக் கூலியாகக் குடியேறிய பெற்றோருக்குப் பிறந்த தில்லையாடி வள்ளியம்மை என்ற போராளிப் பெண். தம் மக்களுக்கு எதிராக ஆங்கிலேய அரசு மேற்கொண்ட கடும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார். மகாத்மா காந்தியடிகள் ஏற்பாடு செய்து நடத்திய போராட்டத்தில் ஈடுபட்ட அவரை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அங்கு மோசமான நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட சில நாளிலேயே இவர் இறந்தார். இவரது மறைவு காந்தியடிகள் மனதில் விடுதலை உணர்வினை ஆழமாகப் பதிய வைத்தது.

    தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் ஜோன் ரஸ்கின் எழுதிய Unto This Last என்ற நூலின் தாக்கத்தால் டர்பனின் புறநகர்பகுதியான ஃபீனிக்ஸில் ஒரு சமூக நலக்குடியேற்றப்பகுதியை 1904ம் ஆண்டில் இவர் வடிவமைத்தார். இப்பகுதியில் ஒரு அச்சகம், ஒரு மருத்துவமணை, பள்ளிக்கூடம், வீடுகள் என அனைத்தும் இந்த குடியேற்றப்பகுதியிலேயே இருப்பது போல அமைத்தார். கூலிகளாக இருக்கும் மக்களும் எல்லா நலன்களையும் பெற வேண்டும் என்பது அவரது மைய நோக்கமாக இருந்தது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்தக் குடியிறுப்பு பகுதியை அவர் வடிவமைத்து செயல்படுத்தியும் காட்டினார். இன்றும் தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கும் குறியீடாக மகாத்மா காந்தியடிகளின் இந்த சர்வோதய நினைவில்லம் திகழ்கின்றது.

    Share
  • ஏங்கிநின்று அழுகுதையா !

     

    எம். ஜெயராமசர்மா…. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    unnamed-2

    கந்தர்வக் குரலோனே காலனுனைக் கவர்ந்தானோ
    சிந்தையிலாக் காலனவன் நொந்துவிடச் செய்துவிட்டான்
    உந்தனது இசைகேட்க உலகமே துடிக்குதையா
    உனைக்கவர்ந்த காலனுக்கு உள்ளமே இல்லையையா !

    இசையுலகம் அழுகிறது
    எழுகடலும் அழுகிறது
    இசைச்சுரமும் அழுகிறது
    எல்லோரும் அழுகின்றோம்
    அசையாமல் இசையுலகில்
    அரசாட்சி புரிந்தவரே
    ஆர்வருவார் உனைப்போல
    அருமையிசை தருவதற்கு !

    இளவயதில் இசைக்குள்ளே
    எப்படித்தான் இணைந்தாயோ
    வசையில்லா இசைபாடி
    வைரமென ஜொலித்தாயே
    புதுராகம் புதுத்தாளம்
    புறப்பட்டு வரச்செய்தாய்
    புன்சிரிப்பு முகம்காணா
    புலம்புகிறோம் நாங்களெல்லாம் !

    பொட்டிட்ட உந்தன்முகம் புன்சிரிப்பு பூத்தமுகம்
    அர்த்தமுடன் பலமொழியில் ஆற்றல்நிறை பெற்றவுளம்
    சொர்கமதை வரவழைக்கும் சுந்தரமாம் காந்தக்குரல்
    அத்தனையும் இனிநாங்கள் ஆரிடத்துக் காண்போமோ !

    இசையால் வசமாக்கி எமையெல்லாம் இசையாக்கி
    இசைகேட்க எழுந்தோடி வருகவென எமையழைத்து
    ஏழிசையாய் இசைப்பயனாய் என்னாளும் வாழ்ந்திருந்த
    இசையரசே இசைவழங்க இனிநீயும் வருவாயா!

    பாராட்டுப் பலபெற்றாய் பரிசெல்லாம் குவித்துவைத்தாய்
    பண்புடனே நீயிருந்து பாடிநின்றாய் பலகாலம்
    தாலாட்டும் உன்னிசையால் தவிப்பெல்லாம் மறந்திருந்தோம்
    தவித்தழுது நிற்கின்றோம் தாலாட்டை யார்தருவார் !

    இந்தியத் திருநாட்டின் இணையில்லா இசையரசே
    இசையாலே எல்லோரின் இதயத்துள் அமர்ந்துவிட்டாய்
    இசையுலகில் நீயில்லை எனும்சேதி கேட்டவுடன்
    இசையுலக இதயமெல்லாம் ஏங்கிநின்று அழுகுதையா !

    Share
  • “ அட ! யாருங்க இவரு? “

    தமிழ்த்தேனீ

    அப்பா உங்ககிட்ட ஒரு ஐஞ்சு நிமிஷம் பேசணும்   என்ற  அவருடைய  மகன் ராஜேஷை பார்த்து   ஒரு ஐஞ்சு நிமிஷம்  குடுப்பா  இவரு  என்கிட்டே முக்கியமா  ஏதோ பேசிகிட்டு இருக்காரு  என்றார்  சபேசன்.  சரிப்பா நீங்க  பேசி முடிச்சிட்டு கூப்புடுங்க  நான் இங்கே இருக்கறது அவ்வளவா நல்லா  இருக்காது  என்றான் ராஜேஷ், அதெல்லாம் ஒண்ணுமில்லே  அவரு சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டாரு  நானும்  ஒரு ரெண்டு நிமிஷத்துக்குள்ளே  அவருக்கு வேண்டியதை சொல்லிடுவேன்  நீ உக்காருப்பா இங்கேயே  என்றார் , சரிப்பா  என்று உட்கார்ந்தான் ராஜேஷ்.

    இதோ பாருங்க மனுஷனாப் பொறந்துட்டா  எல்லாருமே  “அட! யாருங்க இவரு”  அப்பிடீன்னு பல பேரைக் கேக்கவெச்சிட்டாலே  அவங்க  வாழ்நாள் சாதனையாளர்தான் , ஆனா  எது செஞ்சாலும் புகழடையலாம் , மக்கள் எதிர்பார்க்காத  கொடூரச் செயலைச் செய்யலாம், அல்லது சாகசங்கள் ஏதேனும்  செய்யலாம், அல்லது மற்றவர்களால் முடியாத ஏதேனும் ஒன்றைச் செய்யலாம், அல்லது  நல்லவனாகவே  நடந்து  நன்மையே  செஞ்சு  கூடப் பேருவாங்கிடலாம், ஆனா ஒண்ணு அதுவும் நமக்கு எது வருமோ அதைச்செய்யணும்,  நம்மோட இயல்பிலேயே  இல்லாத,  ஒன்றை யாரோ சொல்லிக் குடுத்ததை மனசிலே வாங்கி குழம்பிட்டு  சரி  செஞ்சு பாக்கலாம்ன்னு  ஆரம்பிக்கறவங்களாலே  அந்தக் குணத்தைக் கடைப்பிடிக்கவே முடியாது அதுனாலே  திட்டம் தோல்வி அடைஞ்சிரும்,     அதுனாலேதான் சொல்றேன்  நீங்க  இயல்பாவே நல்லவங்க  யாரோ சொல்றாங்கன்னு  அதிலே தலையிட்டு உங்க இயல்புக்கு மாறா  நீங்க எதையாவது  செஞ்சிட்டு அப்புறம் நீங்களே  ஜெயிச்சாக் கூட  உங்க  மனசாட்சி உறுத்தல்லேருந்து  தப்பிக்க  முடியாமே  மனசு குமைஞ்சிகிட்டே  இருக்கறதைவிட  உங்க  பரம்பரை  பெரியவங்க  எப்பிடி வாழ்ந்தாங்கன்னு  நெனைச்சுப் பாருங்க  அதுமாதிரியே நேர்மையா  செயலபடுங்க அதுதான்  நல்லது   , இல்லே  உங்க பரம்பரையிலே  ஏற்கெனவே வாழ்ந்தவங்க  எல்லாருமே  இப்பிடித்தான்  தப்பு செஞ்சுதான் முன்னுக்கு வந்தவங்கன்னு  நீங்க தீர்மானம் செஞ்சிட்டீங்கன்னா  நீங்க எது வேணா செய்யுங்க பொய் சொல்றதுக்கும்  தப்பு செய்யறதுக்கும்  ரொம்ப  நியாபக சக்தியும் மூளையும் வேணும்  ஆனா  உண்மையைச் சொல்றதுக்கு  இதெல்லாம் தேவையே இல்லே  ஏன்னா எப்போ கேட்டாலும் தைரியமா அதையே  சொல்லாம். ஏதோ என்னைக் கேட்டதாலே சொல்றேன் அப்புறம் உங்க இஷ்டம் என்றார்  சபேசன்

    எனக்கும் நீங்க சொல்றதுதான் சரின்னு படுது   நான் எது நியாயமோ  அதையே செஞ்சிட்டு நிம்மதியா இருக்கேன் அப்போ நான் வரேங்க என்றபடி  வெளியேறினார்  அவர்.    ராஜேஷ்பக்கம் திரும்பி   சொல்லுப்பா ஏதோ முக்கியமா  பேசணும்னு சொன்னியே   என்றார்  சபேசன்,   ராஜேஷின் மனக்கண்ணில் ஒரு காட்சி  திரைப்படம் போல் ஓடியது . மாமியார் வீட்டில் அன்று நடந்த  உரையாடல்  “  ஏன் மாப்பிள்ளே நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க  நான் உங்க  அப்பா அம்மாவை விட்டுடுங்கன்னா சொல்றேன், இல்லையே  நல்ல பணக்கார  ஏரியாவிலே இருக்கற  வீட்டிலே உங்க  அப்பா அம்மாவை  வெச்சிருக்கீங்களே  அவங்க பாவம்  காய்கறி பூந்தோட்டம்னு   அழகா  இயற்கையா  வாழறவங்க  அவங்களை  கிராமத்திலே இருக்கற  உங்க அப்பாவோட வீட்டிலே குடிவெச்சிட்டா  அவங்களும் மகிழ்ச்சியா  இருப்பாங்க, இங்கே  இந்த  வீட்டுலே  வேற யாரையாவது குடி வெச்சா  வாடகையே  அதிகமா  வருமேன்னுதான் சொல்றேன். என்றாள் மாமியார் கனகா.

    ஏங்க  அம்மா சொல்றதுலேயும் தப்பில்லே  நமக்கும் கொஞ்சம் காசு வந்தாத்தானே நாமளும்  நம்ம குழந்தையை கிண்டர்கார்டன் பள்ளியிலே  சேக்க  முடியும் , இப்பல்லாம் கிண்டர்கார்டன் பள்ளியிலே சேக்கவே  ஒரு லக்ஷ ரூபா டொனேஷன் கேக்கறாங்க தெரியுமா  என்றாள் அவன் மனைவி ரேணுகா.      மாப்பிள்ளை  எப்பவுமே என் பொண்டாட்டி கெட்டிக்காரி  , பொண்டாட்டி  நிர்வாகத்திலே திறமைசாலியா இருந்தா  அவங்க கிட்டே  ஆட்சியை ஒப்படைக்கிறதிலே தப்பில்லேன்னு நெனைக்கறவன் நானு. அவ சொன்னா சரியாத்தான் இருக்கும்  யோசிச்சுப் பாருங்க  என்றார்  மாமனார்  சுப்புரத்தினம்.  மொத்தத்தையும்  காதிலே வாங்கின ராஜேஷுக்கும்  அது சரியாகப் படவே  அப்பாவிடம் பேசிப்பாக்கலாம்   என்றுதானே அவன் இங்கே  வந்தான்   .  இப்போ அப்பா  அவரோட  நண்பருக்கு  சொன்னதெல்லாம் கேட்டா மறுபடியும் குழப்பம் வருதே  அப்பா சொல்றது சரியா  இல்லே  மாமனார் மாமியார்  பொண்டாட்டி  சொன்னது  சரியா ?  என்னடா இது  இதை இப்ப  எப்பிடி அப்பாகிட்டே சொல்றதுன்னு யோசனை  . சற்றே சும்மா இருந்தான் ராஜேஷ் என்னப்பா ஏதோ பேசணும்னு வந்தியே  என்னா விஷயம்  சொல்லுப்பா  என்றார்  சபேசன்

    அது என்னவோ தெரியவில்லை சபேசனுக்கு. ஒரு முறை அவருடைய கிராமத்து வீட்டுக்கு  வந்திருந்த  ராஜேஷின் மாமனாரும் மாமியாரும் அந்த  வீட்டைப் பார்த்துவிட்டு நல்லா இருக்கு இது மாதிரி ஒரு வீடு கிராமத்திலே இருக்கறது  நல்லதுதான் எல்லாருக்கும் கிடைக்கறதில்லே  இது மாதிரி  என்று சொன்னது நினைவுக்கு வந்தது.  சுதாரித்துக்கொண்டு சொல்லுப்பா என்றார்

    ஒண்ணுமில்லேப்பா  ஏதோ கேக்க வந்தேன்  இப்போ எனக்கே புரிஞ்சி போச்சு அதான்  வேற ஒண்ணுமில்லேப்பா  நான் போயிட்டு  வரேன்  இங்கே உங்களுக்கு ஏதாச்சும் பணம் வேணுமா  என்றான்  இல்லேப்பா  எங்களுக்கென்ன செலவு ஒண்னுமில்லேப்பா என்றார் சபேசன்.  சரிப்பா ஏதாவது  வேணும்னா போன் பண்ணுங்க நான் போயிட்டு வரேன் என்றபடி  கிளம்பினான் ராஜேஷ்

    வீட்டுக்குள்ளே நுழைந்த  ராஜேஷை   ஏங்க  உங்க அப்பா அம்மாகிட்டே சொல்லிட்டீங்களா என்றாள் ரேணுகா  . இல்லே ரேணு  நான் இதை அப்பாகிட்டே  சொன்னா அவரு தப்பா நெனைப்பாரே அப்பிடீன்னு  சொல்லாமலே வந்துட்டேன் என்றான் ராஜேஷ். அதானே பாத்தேன்   சிலபேரை  எவ்ளோ சொல்லிக் குடுத்தாலும் மாத்த  முடியாதுன்னு  நான் எங்க அம்மாகிட்டே  சொல்லிட்டேன்  எனக்குத் தெரியாதா  உங்களைப் பத்தி என்றாள் ரேணுகா    தொலைபேசி அழைத்தது  எடுத்துப் பேசினார்  சுப்புரத்தினம், என்ன சம்பந்தி  நல்லா இருக்கீங்களா  என்றார்  சபேசன்  நல்லா இருக்கோம்  நீங்க நல்லா இருக்கீங்களா  சம்பந்தி மாப்பிள்ளை அங்கே வந்தாரா  உங்க  செலவுக்கு  பணம் குடுத்தாரா  இல்லேன்னா சொல்லுங்க  நான் கொண்டாந்து தரேன் என்றார் சுப்புரத்தினம்.

    அதெல்லாம் வேணாம் சம்பந்தி  உங்க  நல்ல  மனசு எனக்குத் தெரியாதா    ராஜேஷே பணம் வேணுமான்னு  கேட்டான்  இப்ப ஒண்ணும் செலவு இல்லே அதுனாலே வேணாம்னுட்டேன் . ராஜேஷைக் கூப்பிடுங்களேன் என்றார் சபேசன். மாப்பிள்ளை உங்க  அப்பா உங்ககிட்டே பேசணுமாம் என்றார்  சுப்புரத்தினம்.  ராஜேஷ்  வந்து அப்பா  சொல்லுங்கப்பா  என்னா விஷயம் என்றான்.

    உங்கிட்டே  நேரா பேச  ஒரு மாதிரியா இருந்துது அதான்  ,   உன் அம்மா  சொல்றா   கிராமத்திலே  இருந்தா   தோட்டம் செடி கொடின்னு  நாம பாட்டுக்கு  இருக்கலாம் இங்கே எனக்கு பொழுதே  போகமாட்டேங்குது , அப்பிடீன்னு  அதுனாலே  நீ ஒண்ணும் தப்பா  நெனைச்சுக்காதே  நானும் அம்மாவும் கிராமத்து வீட்டுக்கே  போயிடலாம்னு முடிவெடுத்திருக்கோம். அங்கதாம்பா  காத்துலேருந்து  மனுஷங்க மனசு வரைக்கும்  சுத்தமா இருக்கு.  என்றார்.   அப்பா  எதுக்குப்பா இந்த திடீர் முடிவு என்றான் ராஜேஷ்    திடீர் முடிவில்லேப்பா அப்பப்போ சொல்லிகிட்டே  இருக்கா அவளுக்கு இங்கே பொழுது போகலே அதான் என்றார்  சபேசன் . அங்கே உங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லையே  என்றான் ராஜேஷ்  ஒண்ணும் இல்லேப்பா எல்லாம் கிடைக்குது ,வேணும்னா  பஸ்சிலே ஏறி டவுனுக்கு  வந்தா போவுது ஒரு கஷ்டமும் இல்லே  என்றார்  சபேசன் .  சரிப்பா  நான் நாளைக்கு  நீங்க அங்க போறதுக்கு  ஏற்பாடு  செய்யறேன்  என்றான் ராஜேஷ்,

    ரிசிவரை வைத்துவிட்டு  வந்த  சபேசனைப் பாத்து  ஏங்க நான் அப்பிடியெல்லாம் சொல்லவே இல்லையே  எதுக்கு  இப்பிடி சொல்றீங்க, அவன் அந்த மாதிரி ஏதாவது சொன்னானா  பாவம் ராஜேஷ் தப்பா நெனைச்சுக்க போறான்  என்றாள் அவர் மனைவி  காமாட்சி.  இல்லேம்மா  அவன் சொல்லலை ! அவனாலே  சொல்ல முடியலே , அதுனலேதான் நான் முடிவெடுத்தேன்  .ஏம்மா  நான் ஏதாவது செஞ்சா அது சரியாத்தானே  இருக்கும்  பாவம்மா  ராஜேஷ் எடுப்பார் கைப்பிள்ள  அவன். அவன் குழம்பாமே இருக்கட்டும்னுதான்  இப்பிடி ஒரு முடிவெடுத்தேன் என்றார்  , சரிங்க  நாம கிராமத்துக்கே போயிடலாம் என்றாள் காமாட்சி.

                                                 சுபம்

    Share
  • உள்ளமும் உடையும் !

    எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Ed,SLEAS,

    கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர்

    மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    தலையங்கத்தைப் பார்த்ததும் சிறுகதையா அல்லது நாவலா என்றுதான் எண்ணத் தோன்றும். இது சிறுகதையோ நாவலோ அல்ல. மனித வாழ்விலே உடைகள் இடம்பெற்ற வரலாற்றை ஒரு பார்வையாய்ப் பார்ப்பதாகவே இக்கட்டுரை அமையப்போகிறது. உடையைப் பற்றிய சிந்தனை ஏன் , எதற்கு இப்பொழுது வந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதற்குக் காரணம் உடையருமை உணராமல் இருகின்ற நிலைமையேயாகும். உடையில்லா வாழ்ந்த மனிதன் ஒன்றையும் பற்றிச் சிந்திக்காமல் கிடைத்ததை எல்லாம் உண்டு – கிடைத்த இடத்திலே உறங்கி – இருந்தான். ஆனால் காலகதியில் அவனது வாழ்க்கை முறையே மாறுபட்டது. வேறுபட்டது.

    உடையில்லா வாழ்ந்தவனிடத்து ஏற்பட்ட உளமாற்றம் அவனை மரவுரி தரிக்கச் செய்தது. விலங்குகளின் தோலினை அணியச் செய்தது. இந்த வளர்ச்சி படிப்படியாக மாறி பலவித உடைகளை அணிந்து நாகரிக வாழ்விலே வாழுவதற்கு இட்டுச் சென்றது எனலாம்.

    “ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்னும் பழமொழி தோன்று வதற்கும் உடையானது மனித வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. விலங்குகளுடன் காட்டில் தானு மொருவகை விலங்காகவே மனித வாழ்வு அமைந்திருந்தது. பரிணாம வளர்ச்சியில்-  சிந்தனை என்பது மனிதனிடம் ஊன்றத் தொடங்கியதால் வெட்கம் பற்றியும், மான மென்னும் உணர்வு பற்றி யும் உணரத் தொடங்கினான். அப்பொழுது தான் மானத்தைக் காக்க உடையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு ஆளாகினான் என்பது வரலாறு.

    காலகதியில் இந்த உடையானது மனிதனது நாகரிகத்தின் உச்ச வெளிப் பாடாக ஓங்கி நிற்கிறது. உணவு, உடை , உறையுள் என்பன மனிதனது அடிப்படைத் தேவைகள் என்பது யாவருக்கும் தெரியும் விபரமாகும். இதில் உணவுக்கு அடுத்து உடை வருவதை நாம் கவனித்தல் வேண்டும். இதிலேயே பரிணாம வளர்ச்சி காட்டப் படுகிறது. ஆதி மனிதனுக்கு ஆரம்பத்தில் உணவு தான் முக்கியமாகப் பட்டது. உயிர்வாழ உணவுதானே அவசியம். அதனால் உணவு கிடைத்தால் போதும் என்னும் நிலை அப்பொழுது காணப்பட்டது. அதன் பின்தான் உடைக்கே மனிதன் வருகிறான். இந்த உடையைப் பற்றிய சிந்தனை வந்த பின்னர்தான் மனிதனது வளர்ச்சி சிறப்பான பாதையை நோக்கிச் செல்லத் தொடங்குகிறது எனலாம்.

    “இரக்கப் போனாலும் சிறக்கப்போ” – “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” “உண்பது நாழி உடுப்பது இரண்டு முளம்” – “உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே” என்றெல்லாம் எடுத்துக்காட்டுகள் வருவதுவே – உடையின் வருகையும் அதன் முக்கியத்துவத்தினாலுமே என்பது தெரிகிறதல்லவா? பண்பாடு , கலை, கலாசாரம், யாவற்றையும் பிரதிபலிக்கும் வகையிலே உடையின் பங்களிப்பு இன்றியமையாததாக  இருக்கிறதல்லவா? உடுத்தும் உடைகளைக் கொண்டே மக்களை இனம்கண்டு கொள்ளலாம். பல்லின கலாசாரத் தொட்டிலாக இன்று உலகம் விளங்குகிறது. அதில் உள்ள மக்களும் பலவித உடைகளில் பவனி வருவதனையும் இன்று காண்கிறோம் அல்லவா? அவரவர் கலாசாரத்துக்கு ஏற்ப வருகின்ற கொண்டாட்டங்கள், விழாக்கள் பண்டிகைகள், இவைகளுக் கெல்லாம் விதவிதமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதனை எங்குமே காணலாம்.

    இன்ப நிகழ்வுகளுக்கு உடுத்தும் உடைகளும் நிறங்களும் வேறுபட்டவை. அதேவேளை துன்பத்தைத் தரும் நிகவுகளுக்கான உடைகளும் அவற்றின் வண்ணங்களும் வேறு விதமானவை. வண்ணவண்ண உடைகளும் அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மங்கலத்திற்கு மஞ்சள் உடையைத் தெரிவு செய்கிறார்கள். அதேவேளை வெள்ளையைத் தேர்வு செய்வாரும் இருக்கிறார்கள். கறுப்பு வண்ண உடையைத் துக்கமாக நினைப்பாருமுண்டு. அதேநேரம் எதற்குமே கறுப்புடையைச் சாதாரணமாக அணிவாரும் காணப்படுகிறார்கள்.

    உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் உடையிலும் பிரதிபலிப்பதைப் பெரும்பாலும் காணக் கூடியதாகவே இருக்கிறது. உலகிலே பலவிதமான ஆட்சிமுறைகள் இருக்கின்றன. அங்கெல்லாம் அரசாட்சியில் உள்ளவர்களுக்கு என்று – வண்ணமும் உடையும் வடிவமைக்கப் பட்டிருக்கும். அந்த உடைகளும், வண்ணமுமே அவர்களது நாட்டின் அந்தஸ்த்தை காட்டுவதாகவும் கூட  அமைந்துவிடும்.

    அரசாட்சியில் நம்பிக்கை வைத்து நடக்கும் நாடுகளில் அரச பட்டமளிப்பு விழாக்களிலும், ஆட்சியாளர்களின் உடைகளிலும் பலவண்ணங்களும் பல வடிவங்களும் இடம்பெறுவதை இன்றும் காண்கின்றோம்.

    புதுவருடப் பிறப்பு, பொங்கல் பண்டிகை, தீபத்திருநாள், நத்தார்விழா, இஸ்லாமிய விழாக்கள், என்று இன்னோரன்ன நிகழ்வுகளுக்கெல்லாம் பலவித உடைகளை மக்கள் தேர்ந்தெடுத்து அணிந்து மகிழ்ச்சியடைவார்கள். எல்லா நாட்டிலும் எல்லா மக்களும் தங்களின் திருமண விழாக்களில் அணியும் உடைகள் மிகவும் நேர்த்தியானதாகவும் உயர்ரகமாகவும் கண்ணையும்,கருத்தையும் கவருவதாய் அமைந்திருக்கும்.

    உள்ளத்துக்கும் உடைகளுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றால் நிச்சயம் உண்டு என்றுதான் சொல்லவேண்டும். இதனைக் கருத்தில் கொணடேதான் ” சீருடை ” என்பதை நாடுகள் தோறும் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. நாடுகள் தோறும் இருக்கும் முப்படைகளுக்கும் தனித்தனியாகச் சீருடைகள் இருக்கின்றன. அந்தச் சீருடைகளை அவர்கள் அணிந்ததுமே அவர்களது உள்ள மதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். முப்படைகளில் உள்ளவர்களின் தரத்தினுக்கு ஏற்பவும் அவர்களின் உடைகளின் வடிவமைப்பும் அமைந்திருக்கும்.

    விமான ஓட்டிகள், கப்பல் மாலுமிகள் அவர்களுக்கான சீருடையினை அணியும் பொழுது அவர்கள் தங்கள் வேலைகளை உற்சாகமாகச் செய்யும் நிலை ஏற்படுகிறது. சத்திர சிகிச்சைக் கூடத்துக்குள் கடமையாற்றுவோர்க்கு என்று தனிச்சீருடைகள் இருக்கின்றன. அவற்றை அணிந்தததும் அவர்களை அறியாமலேயே தங்கள் பணிகளைச் சிரத்தையுடன் ஆற்ற விளைந்துவிடுகிறார்கள். எல்லா நாடுகளிலும் உள்ள பாடசாலைகள் தங்களின் மாணவர்களுக்கு எனத்தனியான சீருடைகளைத் தெரிவு செய்து வைத்திருக்கின்றன. மாணவர்கள் சீருடைகளை அணிந்தவுடன் அவர்களது உள்ளத்தில் நல்ல சிந்தனைகள் அதாவது கற்றல் பற்றியும் அதன்வழி நிற்றல் பற்றியுமான எண்ணங்கள் உருவாவதற்கு வழிவகுப்பதை அனுபவித்தால் உணர்ந்து கொள்ளமுடியும்.

    மதங்களை அடையாளப் படுத்தவும் உடைகள் உதவுகின்றன. பலவித சீருடைகளை பல மதத்தைச் சேர்ந்த மதகுருமாரும் அணிகிறார்கள். ஒவ்வொரு மதகுருமாரும் தமக்கென உடைகளையும் வண்ணங்களையும் தேர்ந்தெடுத்து அதனையே அணிகின்றார்கள். இந்துமதத துறவிகளும், பெளத்தமதத் துறவிகளும் காவி வண்ணத்தை உடையாக்கி இருக்கிறார்கள். ஏனைய மதகுருமார் கறுப்பு, வெள்ளை வண்ணங்கொண்ட உடைகளையும் தமதாக்கிக் கொண்டுள்ளார்கள். சீருடைகள் என்பது சிறப்பானது. சீர்மையினை உடையது. சீருடைக்கு உலகு எங்கும் கெளரவமும் மரியாதையும் எக்காலத்தும் வழங்கப்பட்டே வருகிறது. சீருடை அணிந்தால் சிந்தனை வளரவேண்டும். நல்ல சிந்தனையை விதைப்பதற்கே சீருடை என்று பெயரிட்டு, தனியான உடையினைத் தெரிவு செய்திருக்கிறது உலக சமுதாயம். ஆனால் இன்று சீருடை உடுத்திய பலர் சீரழிவு செய்யும் செயல்களை மேற்கொள்வதால் சீருடை என்பதற்கே அர்த்தமற்ற நிலையே ஏற்படுவதை காண முடிகின்றது.

    மாணவர் சீருடையில் செய்யக் கூடாதவற்றைச் செய்கிறார்கள். மதகுருமார் மதத்தின் உச்சத்தில் ஏறி வெறிகொண்டு நெறி அழித்து விலங்கெனவே ஆகி நிற்கிறார்கள். காவல் துறையினர் சீருடையுடனேயே காட்டுமிராண்டிகளாகி நிற்கின்றார்கள். இராணுவச் சீருடையை அணிந்து இழிவான பலவற்றை ஆற்றி இரணியர்களாக மாறி நிற்பதையும் காண்கின்றோம்.

    மதகுருமார் சீருடையை அணிந்து விட்டால் மனத்தில் சாந்தம் வரவேண்டும். அமைதியின் இருப்பிடமாக மாறவேண்டும். அன்பு, கருணை, பாசம், நேசம் நட்பு, அனைத்தும் அவர்களின் உள்ளத்தில் அமர்ந்து விடவேண்டும். ஆண்டவனின் பிரதிநிதியாக அனைவரும் மதகுருமாரை மதிக்கின்றார்கள். அப்படியானவர்கள் அஹிம்சைதனை ஒழித்து அரக்கத்தனமும், ஆவேசமும் கொண்டவராய் அராஜகத்தினைத் தூண்டிவிடும் பாங்கில் செயல்பட்டால் சீருடைக்கே அர்த்தம் இல்லாமல்தானே போய்விடும் !இப்படியானவர்க்குச் சீருடை என்பது எப்படிப் பொருந்தி வரும்? சீருடையினைச் சீரழிக்கும் கீழ்மைக் குணமுடையோரால் சீருடையின் சிந்தனையே சிதறடிக்கப்படுகிறது.

    உடையும் உள்ளம்  – உடைகளால் வரக்கூடாது. உடை உள்ளத்தை மாற்ற வேண்டும். வண்ணங்கள் யாவுமே மனித எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன என்று உளவியலாளர்கள் சொல்லுகிறார்கள். அதனால் தான் யாவரும் வெளிச்சத்தை விரும்புகின்றார்கள். இருட்டை எவரும் இணைத்துக் கொள்ள விரும்புவதில்லை. மனம்கூட வெள்ளையாகவே இருக்க வேண்டும். மனமிருண்டால் அங்கு வாழ்வே சூனியமாகிவிடும். கோவிலுக்குச் செல்லுவதற்கும், குதிரைப் பந்தயத்துக்குச் செல்வதற்கும் கடற்கரைக்குச் செல்வதற்கும், படக்காட்சிக்குச் செல்வதற்கும், விழாக்களுக்குச் செல்வதற்கும், ஒரேவகையான உடைகளை நாம் அணிவதில்லை. எங்கே போகிறுமோ அதற்குத் தகுந்த மாதிரி உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதனை அவசியமாக்கி இருக்கிறோம்.

    “ஆள்பாதி ஆடைபாதி” என்னும் மொழிகள் வருவதற்கும் உடையின் வருகை தான் காரணமாகியிருக்கிறது. உடுத்தும் உடையைக் கொண்டு ஒருவரை மதிப்பிடுகிறோம். சில உடைகளில் வரும்பொழுது எம்மை அறியாமலேயே வணங்குகிறோம். சில உடைகளில் வரும் பொழுது மகிழ்ச்சியுடன் கைகொடுத்து வரவேற்கின்றோம். சில உடைகளை அணிந்து வரும்வேளை சிரித்துக் கிண்டல் செய்கிறோம். சில உடைகள் அணிவதால் சினம்கொண்டு பார்க்கிறோம். இங்கே வருபவர் ஒருவராக இருந்தாலும் – அவரின் உடையின் தன்மையினால் அவருக்கு ஏற்படும் மரியாதை, வரவேற்பு , அனைத்தும் மாறுபடுவதை சாதாரணமாக நடைமுறையில் காணமுடிகிறது.

    பாடசாலையில் மாணவர்களுக்குச் சீருடை இருப்பதுபோல ஆசிரியர்களுக்கு என தனியான சீருடைகள் இல்லாவிடினும் – அநேகமான ஆசிரியர்கள் வெள்ளை நிற உடையில் நேர்த்தியாகப் பாடம் நடத்தவரும் பொழுது – மாணவர்கள் மத்தியில் அவருக்கென்று தனியான ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தே வந்திருக்கிறது. ஆனால் இன்றைய நடைமுறையில் அதிலும் மாற்றங்கள் வந்தபடியால் ஆசிரியர் நிலையும் சற்று சிந்திக்கும்படி ஆகியிருக்கிறது என்பதையும் கவலையுடன் சொல்லி ஆகவே வேண்டி இருக்கிறது. உடையைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை? மானத்தை மறைக்க வந்ததுதானே உடை! அதை மனம் விரும்பும்படி அணிவதில் என்ன தவறு இருக்கிறது. எல்லா வண்ணங்களும் அழகுதானே! இதில் என்ன வேற்றுமையைக் காண்பது. கிடைக்கும் உடைகளை உடுத்தி, கிடைக்கும் வாழ்வை வாழ்வதை விட்டுவிட்டு இதில் போய் தத்துவம் எல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமேதும் இருக்கிறதா? என்றெல்லாம் நெஞ்சினிலே பல வினாக்கள் எளக்கூடும்!

    மனிதன் ஒவ்வொருநாளும் வளர்கிறான். அவன் உடம்பு மட்டுமல்ல – உள்ளத்தாலும் என்பதை யாவரும் அறிவோம். அந்த வளர்ச்சியில் உடைமட்டும் என்ன விதிவிலக்கா?    ஆதிமனிதன் அல்ல இப்போது வாழ்கின்றவன்! அந்தமனிதன் அறிவின் உச்சியைத் தொடும் மனிதனாக இப்பொழுது வளர்ந்து விட்டான். எனவே அவனது வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகி இணைந்து நிற்கும் உடையிலே கவனம் செலுத்துவதும் முக்கியமான தொன்று என்பதை மறந்துவிடுதல் கூடாது. உடையென்பதைச் சாதாரணமாக எடுத்துவிடக்கூடாது. இன்று உடை தயாரிப்பு பற்றி பல உயர் பட்டப்படிப்புகளும், உடைதயாரிப்பு நிலையங்களும், உடைவிற்கும் பலவித வியாபார நிலையங்களும் உலகம் முழுவதும் நாளும் பொழுது பல்கிப் பெருகியே வருகின்றன. ஏனென்றால் மனித வாழ்விலிருந்து உடையப் பிரிக்கவே முடியாது, உடை மனித வாழ்வுடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.

    உடைபற்றிய சிந்தனை வந்ததற்கே காரணம் உடையால் பல உள்ளங்கள் உடைக்கப் படுகின்றன. உடையால் பல உயிர்களே பறிக்கப்படுகின்றன. உடையால் பல அசிங்கங்கள் அரங்கேற்றப் படுகின்றன. அந்த உடைகளின் மதிப்பு அதை உடுத்தி நிற்பார் கெடுக்கின்றார். இதனால் உடைகளே உடைந்து நொருங்கி அர்த்தமில்லாது போய்விடும் அவலத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியாத மன நிலையில்தான் இக்கருத்துகள் இங்கே கட்டுரையாகி உங்கள் முன்வந்திருக்கிறது.

    Share
  • மனிதனுக்கு ஒரு தினம்

     

     ரா.பார்த்தசாரதி

     

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் சுப தினம்

    தினந்தோறும் சிறப்பு தினங்கள் நமக்கு  உண்டு

    அன்னையை முதியோர் இல்லத்தில் விட்டு வைத்தோம்

    அன்னையர் தினம் என்று கொண்டாடுகின்றோம்

     

    நண்பர்களுக்கு மோசம் செய்து வேடிக்கை பார்க்கின்றோம்

    நண்பர்கள் தினத்தை  வெட்கமின்றி கொண்டாடுகின்றோம்

    ஒருதலை காதலால் காதலியை கொன்றுவிடுகின்றோம்

    காதலர் தினத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றோம்

     

    பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறார்கள்

    மகளிர் தினத்தையும் மறக்காமல் கொண்டாடுகிறார்கள்

    விவசாய நிலங்களை மனைகளாக்கி விற்றுவிடுகின்றோம்

    விவசாய தினத்தையும்  மனசாட்சியின்றி கொண்டாடுகின்றோம்!

     

    குடிநீரையும், நதிநீரையும், கழிவு நீரால் மாசுபடுத்துகின்றோம்

    மாசுக்கட்டுப்பாடு தினத்தையும் ஒப்புக்காக கொண்டாடுகின்றோம்

    புகை நமக்கு பகை என தெரிந்தும் அதனை  கட்டுப்படுத்தமுடியவில்லை

    சுற்றுப்புற சூழ்நிலை தினத்தையும் நாம் கொண்டாடுகின்றோம்

     

    போராட்டம் என்றால் பேருந்துகளை  எரிக்கின்றோம்

    பேருந்து  தினத்தையும் வெட்கமின்றி கொண்டாடுகின்றோம்

    வஞ்சகமாய் உணவு பொருளை மறைப்பவர்கள் வணிகர்களே

    வணிகர் தினம்  என்று  பெருமையுடன் கொண்டாடுகிறார்களே !

     

    இன்னும் எத்தனையோ தினங்கள்  நமக்கு உண்டு

    மனிதனே தன்னலத்துடனே இருக்கின்றது உனது தொண்டு

    சற்றே  பொதுநலனை கருத்தில் கொண்டு செயலாற்று

    மனித நேயம் கொண்டு, மனித தினம் கொண்டாடலாமா ?

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – (87)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    15151592_1154333511287513_635348949_n

    129265103n08_rஅருண் வீரப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 26.11.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • கலைவாணன் கண்ணதாசன் நினைவுகள்(1)

    அப்துல் கையூம்

    என் இளமைக் காலத்தில் கண்ணதாசன் என்ற மாபெரும் ஆளுமை பொருந்திய மனிதனோடு ஓரிரண்டு முறை பேசிப் பழக வாய்ப்பு கிட்டியதையும், அவரது தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பங்குகொண்டு நான் கவிதை வாசித்ததையும், அவரிடம் “சபாஷ்” வாங்கியதையும் இன்றளவும் பெருமையோடு எண்ணிப் பார்க்கிறேன்.

    “வசிட்டர் வாயால் பிரம்மரிஷி” பட்டம் பெற்றதைப் போல என்று சொல்வார்களே அந்த முதுமொழியை அன்று நான் முழுவதுமாக உணர்ந்தேன்.

    எனது பள்ளிப் பருவத்தின்போது, வண்டலூர் பிறைப்பள்ளியில் (Crescent Residential School) என்னோடு படித்த சகமாணவர்களுக்கும் அவரைச் சந்தித்து உரையாடுகின்ற அரிய வாய்ப்பு கிடைத்தது,. அப்படிப்பட்ட ஓர் அதிர்ஷ்டம் எங்களுக்கு வாய்த்தமைக்கு வலுவான காரணம் ஒன்று உண்டு.

    அதற்கான காரணம் என் நண்பன் கலைவாணன் கண்ணதாசன்.

    கலைவாணன் என்னைவிட வயதிலும், வகுப்பிலும் ‘ஜூனியர். அவனது தந்தையின் தமிழாற்றலுக்கு மனதைப் பறிகொடுத்த நான், கலைவாணனுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தேன். அவனுக்குள்ளும் தன் தந்தைபோலவே கதை, கட்டுரை, கவிதை, நடிப்பு என அனைத்துக் கலைகளிலும் ஆர்வம் குடிகொண்டிருந்தது

    எங்களோடு ஹாஸ்டலில் தங்கி ஒன்றாக பழகிய சகமாணவன் அவன். சென்னை மாநகரத்திலேயேதான் கண்ணதாசன் வீடும் இருந்தது. இருந்தபோதிலும் ஹாஸ்டலில் பிறமாணவர்களுடன் தங்கி படிக்கும்போது, அவனது வாழ்க்கையில் உலக அனுபவங்கள் இன்னும் கூடுதலாக கிடைக்கும், எல்லோருடனும் சேர்ந்து பழகும் சந்தர்ப்பம் உண்டாகும் என்ற எதிர்ப்பார்ப்பில் அவனை வண்டலூர் கிரெசெண்ட் பள்ளியில் கவியரசர் சேர்த்திருந்தார்.

    தன் மகனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைக்கும் எல்லா தகப்பன்மார்களைப் போலவே கண்ணதாசனும் ஆசைப்பட்டார். என்னைப் பொறுத்தவரை கண்ணதாசன் ஒரு சிறந்த கவிஞனாக மட்டுமல்ல. சிறந்த தகப்பனாகவும் திகழ்ந்தார் என்பது என் கருத்து.

    kannadasan

    மூன்று பெண்மணிகளை அவர் மணம் முடித்தார், அவருக்கு 14 குழந்தைகள் இருந்தன என்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி சிலர், அவர் சிறந்த குடும்பத் தலைவனாக இருக்கவில்லை என்று குறை கூறுவதை ஒருநாளும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

    கண்ணதாசனின் முதல் மனைவி பொன்னழகி என்கின்ற பொன்னம்மா வயிற்றில் உதித்தவன் என் நண்பன் கலைவாணன். அம்மையாருக்கு நான்கு மகன்கள்: கண்மணி சுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம். மூன்று மகள்கள்; அலமேலு, தேனம்மை, விசாலாட்சி.

    கண்ணதாசன் அமெரிக்காவிலுள்ள தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளச் சென்று அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சிகாகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரோடு உடனிருந்து கவனித்துக்கொள்ள இங்கிருந்துச் சென்ற அவரது குடும்பத்தினர் மூன்று பேர்கள்.

    அவருடைய மனைவிகள் பார்வதி, வள்ளியம்மை, மற்றும் அவருடைய அன்புக்கு பாத்திரமான செல்ல மகன் கலைவாணன். கவிஞரின் உயிர் பிரிந்து அங்கிருந்து அவருடைய பூதவுடல் விமானத்தில் தாயகம் வந்தபோது இவர்களும் விமானத்தில் கூடவே வந்தார்கள்.

    மற்ற குழந்தைகளைக் காட்டிலும் கலைவாணன் மீது சற்று கூடுதலாகவே பற்றும் பாசமும் கவிஞர் வைத்திருந்தார் என்பது என் எண்ணம். எனது இந்தக் கருத்தில் அவரது மற்ற குழந்தைகளுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதனால்தான் இது எனது சொந்தக் கணிப்பு என்பதை இங்கே கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

    யாசீன் காக்காவும் கண்ணதாசனும்

    கலைவாணன் கண்ணதாசனை எங்கள் பள்ளியில் சேர்க்க கவிஞர் பெருமகனாருக்கு ஆலோசனை வழங்கியது கீழக்கரையைச் சேர்ந்த யாசீன் காக்கா அவர்கள்தான்.

    வளநாடு சினி ரிலீஸ், கிரஸெண்ட் மூவீஸ், வச்சிர நாடு பிலிம்ஸ் , செம்பி பிலிம்ஸ், சேது பிலிம்ஸ் போன்ற சினிமா சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தவர் அந்த பிரபலம். நடிகர் பாலாஜி போன்ற படத்தயாரிப்பாளர்கள் யாசீன் காக்காவுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள்.
    1970 – 1980 கால கட்டங்களில் தமிழகத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் இவர்களின் தொடர்பு இல்லாமல் வெளிவந்ததில்லை.

    திரைப்படத்துறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் கவியரசர் கண்ணதாசனுக்கு யாசீன் காக்கா மிகவும் வேண்டப்பட்ட நபராக இருந்தார். கவிஞர், உயிருக்கு உயிராக நேசித்த நண்பர்களின் பட்டியலில் யாசீன் காக்காவுக்கும் இன்றிமையாத ஓர் ஒரு இடமுண்டு. கண்ணதாசனுக்கு சினிமாத் துறையில் பொருளாதார ரீதியாக நிறைய உதவிகள் அவர் புரிந்திருக்கிறார்.

    அக்கால கட்டத்தில் ‘குமுதம்’ இதழில் “என் எனிய நண்பர்கள்” என்ற தலைப்பில் தன் நெஞ்சில் நீங்காது இடம்பெற்றிருந்த நண்பர்களைப் பற்றி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கண்ணதாசன் கவிதை எழுதிவந்தார்.

    வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் மாதவன், யாசீன் காக்கா போன்றோர் கண்ணதாசனின் இதயத்தில் தனியொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்கள். மற்றவர்களின் பெயர்கள் எனக்கு நினைவுக்கு வரவில்லை.

    அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அழகுற தமிழில் அட்டகாசமாக கவிதைகள் வடித்தார். ஒவ்வொரு வாரமும் அடுத்ததாக யாரைப் பற்றி எழுதப் போகிறார் என்ற ஆர்வத்தில் குமுதம் இதழுக்காக நான் காத்திருப்பேன்.

    [யாசீன் காக்காவுக்கும் முன்னாள் திமுக அமைச்சர் மாதவனுக்குமிடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வந்தது. அது ஒரு தனி ட்ராக். மாதவனை ஒருமையில் “அவன்”, “இவன்” என்று அழைக்குமளவுக்கு இருவருக்குமிடையே நெருக்கம் நிலவி வந்தது]

    தனது நண்பர் யாசீன் காக்கா அவர்களைப்பற்றி கண்ணதாசன் “குமுதம்” இதழில் எழுதியிருந்த ஒரு சில வரிகள் பசுமரத்தாணியாய் என் மனதில் இன்னும் பதிந்துள்ளது; ஆழமாய் பொதிந்துள்ளது.

    எப்போதும் புன்சிரிப்பு
    எவரிடத்தும் பேசும்போதும்
    தப்பாக ஒருவார்த்தை
    தவறியேனும் சொல்வதில்லை
    தழுவவரும் நண்பருக்கு
    தங்கக்கட்டி
    முப்பாலில் வள்ளுவனார்
    வாழ்க்கை எல்லாம்
    முன்பாக காணவரும்
    எளிய வாழ்க்கை
    அப்பழுக்கில்லா(த) எங்கள் சேதுநாட்டு
    யாசீன்பாய் எனதுஇனிய நண்பராவார்

    [மேற்கண்ட கவிதையில் ஒன்றிரண்டு சொற்கள் விடுபட்டிக்கலாம், காரணம் இது முறையான மரபுக்கவிதை வடிவில் இருந்தது. நினைவில் இருந்ததை மட்டும் இங்கே வடித்திருக்கிறேன்.]

    தன் மனதுக்கு உகந்த நண்பருக்கு இதைவிட ஒரு சிறந்த சன்மானம் என்ன கொடுக்க முடியும்? அதுதான் கண்ணதாசன்.

    கண்ணதாசனைக் காணச் சென்ற நான்

    ஒருமுறை கண்ணதாசனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு கலைவாணனுடன் காணச் சென்ற அந்த நிகழ்வு மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. நினைத்தாலே அது இனிக்கும்.

    சென்னை தியாகராய நகரில், நடேசன் பூங்காவுக்கு பின்புறம் இருந்தது அவர் வீடு. எழுதுவதற்கு பெரும்பாலும் தனிமையை விரும்பி கவிதா ஓட்டலில் தங்கியிருப்பது கவிஞரின் வழக்கம். அன்று அவர் தி.நகர் வெங்கட நாராயணா சாலையிலுள்ள வீட்டில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அங்குச் சென்றோம். அம்பாஸிடர் கார் ஒன்று வெளியில் நின்றிருந்தது. மேல்வயிற்றுக்கு மேலே உயர்த்திக் கட்டிய வேட்டியோடு வீட்டின் வெளியே அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தார் அந்த கவிப்பேரரசர்.

    அருகில் சென்று அவரைப் பார்த்த நான், என்னை நானே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். நான் காண்பது கனவா அல்லது நனவா என்று புரியாமல் திகைத்தேன்.

    ஆஜானுபாகுவான உடல்வாகு. கம்பீரமானத் தோற்றம். உருண்டையான முகம். கள்ளம் கபடமற்ற வெளிப்படையான பேச்சு.

    கலைவாணனுக்கும் கண்ணதாசனுக்கும் தோற்றத்தில் நிறைய ஒற்றுமை இருந்தது. ‘ஜெராக்ஸ்’ காப்பி எனலாம்.

    “ரத்தத் திலகம்” படத்தில் கோட்டு சூட்டு அணிந்துக்கொண்டு “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்று பாடி நடித்த கலைஞனா இவன் என்ற பிரமிப்பு என்னை ஆட்கொண்டு என்னை ‘மெளனி’யாக்கியது.

    நாடோறும் சிலோன் வானொலியில் கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது போன்றோர் அனுதினமும் சுவைத்து பாராட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரன் முன் நான் நிற்கின்றேன் என்ற உணர்வு, ‘ஹை-ஹீல்ஸ்’ அணியாமலேயே என்னை உயர்த்திக் காண்பித்தது.

    அவரது தீவிர ரசிகன் என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். எத்தனையோ கேள்விகள் அவரிடம் கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டுச் சென்றேன். ஊஹீம்…. எதுவுமே கேட்கத் தோன்றவில்லை. எனக்கு பேச்சே எழவில்லை. “பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல” அவரையே பார்த்துக்கொண்டு பிரமித்துப் போய் நின்றேன். அப்பொழுது ஒன்பது அல்லது பத்தாவது வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன்.

    சிறுகூடல்பட்டி சிந்தனைவாதி பேசப்பேச நான் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பாசமலர் படத்தில் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்ற அவரது பாடலுக்கு சிவாஜி கணேசன் ” உம்…உம்.. உம்..உம்,” , என்று ‘உம்’ கொட்டிக்கொண்டிருப்பார். அதுபோல நான் ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தேன்.

    எங்கள் பள்ளிக்கூட வாழ்க்கைப் பற்றி விசாரித்துவிட்டு, அவரது அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்தார். எங்களுக்கு புத்திமதியும் வழங்கினார்..

    அவரைச் சந்தித்துவிட்டு திரும்பி வருகையில் என்னாலேயே நம்ப முடியவில்லை; நான் பார்த்து பேசிவிட்டு வந்தது தமிழகத்தையே தன் எளிமையான சொற்களால் கட்டுண்டு அடிமைப்படுத்திய அந்த கவிராஜனைத்தானா என்று……

    எங்களுடன் ஒன்றாகத் தங்கி படித்துக் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசனின் செல்வப் புதல்வன் கலைவாணனுக்கு ஏனோ இந்த ஹாஸ்டல் வாழ்க்கை அறவே பிடிக்கவில்லை. இதனால் படிப்பிலும் அவனால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.

    காரணம், சுதந்திரப் பறவையாக தன் வீட்டில் சுற்றித் திரிந்து வாழ்க்கையை தன் குடும்பத்தாருடனும், உடன்பிறந்தாருடனும் ‘ஜாலியாக’ அனுபவித்து வந்த அவன் இந்த ஹாஸ்டல் வாழ்க்கையை சிறைவாழ்க்கையாக எண்ணி கலக்குமுற்றான்.

    ஒருநாள் காலை வேளையில், ஏற்கனவே அவன் திட்டமிட்டிருந்தபடி சுவரேறிக் குதித்து பள்ளி வளாகத்திலிருந்து வெளியே ஓடிவிட்டான். “தோள் கொடுப்பான் தோழன்” என்பார்கள். அதுபோல முதுகைக் கொடுத்து அதன் மீது ஏறி அவனை தப்பிக்க துணை புரிந்தவன் நானல்ல; என் இன்னொரு நண்பன்.

    அச்சமயத்தில் அண்ணா உயிரியல் பூங்காவெல்லாம் வண்டலூரில் கிடையாது. ஓட்டேரி நாற்சந்தியில் ஒரே ஒரு கீற்றுக் கொட்டகை டீக்கடை மாத்திரம் இருக்கும். தாம்பரம் செல்வதற்கு ஏகப்பட்ட மண் லாரிகள் அவ்வழியே போய்க்கொண்டிருக்கும். அதில் ஏறி எப்படியோ வீட்டுக்குச் சென்றுவிட்டான் கலைவாணன்.

    அன்று இந்த சம்பவம் எங்களுக்குள் பரபரப்பாக பேசப்பட்டது. மறுபடியும் எப்படியும் கலைவாணனை அவனது பெற்றோர்கள் அழைத்துக் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள் என்று எங்களுக்கு நன்றாகவேத் தெரியும். பள்ளி முதல்வர் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறாரோ என்று பயந்துக் கொண்டிருந்தோம்.

    principalஅப்போது எங்கள் பள்ளியின் முதல்வராக இருந்தவர் இறையருட்கவிமணி என்று போற்றப்படும் பேராசிரியர் கா.அப்துல் கபூர்.

    “செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்று கூறுவதைப்போன்று “அழகுத்தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று எங்கள் பள்ளி முதல்வருக்கு புகழ்மாலைச் சூடுவார்கள் தமிழறிந்த சான்றோர்கள்.

    எதிர்பார்த்தபடியே கலைவாணனின் குடும்பத்தார் மீண்டும் அவனை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துவிட்டு போனார்கள். “போன மச்சான் திரும்பி வந்தான்” என்று பாட்டுப்பாடி நாங்கள் குதூகலித்தோம்.

    கலைவாணனை அழைத்து எங்கள் பள்ளி முதல்வர் அவன் ஓடிப்போனதற்கான காரணத்தை வினவுகிறார்.

    “உனக்கு இங்கிருப்பது பிடிக்கவில்லையா?” என்று பரிவோடு விசாரிக்கிறார்.

    பள்ளி வளாகத்திலிருந்து சுவரேறிக் குதித்து ஓடிப் போனதற்கு கலைவாணன் சொன்ன காரணத்தைக் கேட்டால் நீங்களே சிரித்து விடுவீர்கள்.

    அதற்குமுன் எங்கள் பள்ளி வளாகத்தைப் பற்றிய இச்சிறு குறிப்பை படிப்பது அவசியம்.

    வண்டலூரில் எங்கள் பிறைப்பள்ளி (Crescent Residential School) நிறுவப்பட்டது ஒரு மாங்காய் தோப்பினில்தான். கட்டிடங்கள் யாவும் எழும்பிய பின்னரும் வளாகத்தினுள் எங்கு பார்த்தாலும் மாமரங்களில் மாங்காய் காய்த்துத் தொங்கும். வேண்டுமளவு மரத்திலேறி மாங்காய் பறித்துத் தின்பது எங்களது ‘வீரதீர’ பொழுதுபோக்காக இருந்தது.

    “இங்கிருப்பது உனக்கு பிடிக்கவில்லையா….? ஏன் இங்கிருந்து சுவரேறிக் குதித்து ஓடினாய்..?” என்ற பள்ளி முதல்வரின் கேள்விக்கு கலைவாணன் சொன்ன பதில் இதுதான்.

    “நான் மாந்தோப்பில் மாங்காய் பறித்து தின்பதற்காக சுற்றி வந்தேன். அப்போது ஒரு மாங்காயைப் பறித்து நான் உண்டேன், அது மிகவும் சுவையாக இருந்தது. அது சாப்பிட்டபின் அப்படியே தூங்கி விட்டேன் அப்புறமா கண்முழிச்சு பாத்தபோது நான் மவுண்ட் ரோடுலே நின்னுக்கிட்டு இருந்தேன். எனக்கு எப்படி ஸ்கூலுக்கு போறதுன்னு வழியே தெரியலே. அதனாலே அப்படியே நான் வீட்டுக்குப் போயிட்டேன்”

    இதை கலைவாணன் சொன்னபோது ஒரு சில ஆசிரியர்களும் கூடவே இருந்தார்கள். முதல்வாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆசிரியர்களாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    கலைவாணனின் ‘சால்ஜாப்பு’ பதிலை பொறுமையாக காதுகொடுத்து கேட் ட எங்கள் பள்ளி முதல்வர் கூறிய பதில் என்ன தெரியுமா?

    “அடேங்கப்பா….! கலைவாணா! நீ கதை சொல்வதிலும், கற்பனையிலும் உன் தகப்பனையே மிஞ்சிட்டே,,!” என்றார்.

    கலைவாணன் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவன். பிசிறில்லாமல் சீராக பாடக் கூடியவன். கதை, கவிதை எழுதுவதிலும் அவனுக்கு ஆர்வம் அதிகம். ஒரு முறை கண்ணதாசன் எங்கள் பள்ளிக்கு வந்தபோது “அடி என்னடி ராக்கம்மா கண்டாங்கி நெனப்பு” என்ற பாடலை தாளம் பிசகாமல் எங்கள் எல்லோர் முன்னிலையிலும் இனிமையாக பாடிக் காட்டினான் அந்த நினைவலைகள் இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.

    நானும், பிரான்சு நாட்டில் இருக்கும் என் பள்ளி நண்பன் காரைக்கால் திப்பு சுல்தானும் சந்தித்து உரையாடும்போதெல்லாம் கலைவாணன் பற்றிய பேச்சு எப்படியாவது வந்துவிடும். பள்ளிப் பருவத்திற்கு மீண்டும் சென்று விடுவோம்.

    ஒருநாள் காலை வேளையில் என் நண்பர் அஹ்மது தெளஃபீக்கிடமிருந்து ஓர் அதிர்ச்சியான செய்தி வந்தது.

    காக்கா சேதி கேள்விப் பட்டியலா..?

    என்ன செய்தி தெளஃபீக்..?

    நம்ம கலைவாணன் இறந்து போயிட்டான் காக்கா. இப்பத்தான் நான் கேள்விப்பட்டேன்

    என் தலையில் பேரிடி விழுந்தது போலிருந்தது. எந்த கலைவாணன் என்றெல்லாம் நான் கேட்கவில்லை. காரணம் எங்களுக்குத் தெரிந்த ஒரே கலைவாணன் அவன்தான். துடிதுடித்துப் போனேன். என் உதிரம் சற்று நேரம் உறைந்து போனது போலிருந்தது

    பாலு மகேந்திராவின்“அழியாத கோலங்கள்” படத்தில் அந்த குண்டு பையன் இறந்தபோது அவனது நண்பர்களுக்கு ஏற்பட்ட அதே மனபாதிப்பு எங்களுக்கும் ஏற்பட்டது. கலைவாணனின் திடீர் மறைவு எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

    கலைவாணர் என்.எஸ்.கே.யின் நினைவாகவே கண்ணதாசன் தன் மகனுக்கு கலைவாணன் என்ற பெயரைச் சூட்டினார் . தனக்கு பிடித்தமானவர்களின் பெயர்களை தன் பிள்ளைகளுக்குச் சூட்டி அழகு பார்ப்பதில் கவியரசருக்கு அலாதிப் பிரியம்.

    அறிஞர் அண்ணாவின் நினைவாக அண்ணாத்துரை; பாரதிதாசனின் நினைவாக கண்மணி சுப்பு (சுப்பு ரத்தின தாசன்).

    தங்குவதற்கு இடமின்றி. தனது 14-வது வயதில் பிழைப்புத் தேடி சென்னையில் சுற்றித் திரிந்த கண்ணதாசனுக்கு எந்த மெரினாவிலுள்ள காந்தி சிலை வழியே திக்குத் தெரியாமல் சுற்றித் திரிந்தாரோ; அவருக்கு பிடித்த அதே காந்தி மகானின் நினைவாக இன்னொரு மகனுக்கு காந்தி என்ற பெயர்.
    கலைவாணனுக்கு தன் தந்தையைப் போலவே குழந்தை மனசு. கண்ணதாசனுக்கும் அவன்மேல் அலாதிப் பிரியம். கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் பாலு மகேந்திராவின் “மூன்றாம் பிறை” படத்தில் இடம்பெற்ற “கண்ணே கலைமானே” என்ற பாடல். (அவர் கடைசியாக எழுதிய பாடல் இடம் பெற்ற படம் “உன்னை நான் சந்தித்தேன் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு)

    “கண்ணே கலைமானே!” என்ற பாடல் தன் தந்தை தன்னை நினைவில் வைத்துதான் எழுதினார் என்று கலைவாணன் பிற்காலத்தில் அவனுக்கு நெருங்கியவர்களிடம் பலமுறை கூறி மகிழ்ந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    தன் சகோதரன் கலைவாணனின் நினைவுகளை கண்ணதாசனின் இன்னொரு தாரத்தின் (புலவர் வள்ளியம்மை) செல்வப் புதல்வியான விசாலி கண்ணதாசன் கூறுவதைக் கேளுங்கள்:

    “அவன் சாகக்கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒன்னும் போச்சு. கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்”

    தன்மீது அளவில்லாத அன்பைப் பொழிந்த அன்புச் சகோதரனை இழந்தபோது இந்தச் சகோதரியின் மனம் எந்தளவுக்கு பாடுபட்டிருக்கும் என்பதை நம்மால் உணர முடிகின்றது.

    தகப்பனின் அன்பை முழுமையாக அனுபவிக்க கொடுத்து வைக்காதவர் விசாலி என்றுதான் சொல்ல வேண்டும். கவிஞர் மரணிக்கையில் விசாலிக்கு கருத்து தெரியாத பருவம். அப்போது அவருக்கு வெறும் நான்கு வயதுதான்.

    ‘அப்பாவோட மற்ற பதினான்கு பிள்ளைகளில் கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என்கூட ஒட்டல” என்கிறார் விசாலி கண்ணதாசன்.

    “கண்ணே கலை மானே” பாட்டில் “கலை” என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்று கலைவாணன் ஒருமுறை தன் சகோதரிகளிடம் வாதம் புரிய, அவர்கள் அதை “இல்லை” என்று மறுக்க அதை உறுதிப்படுத்த நேராகவே சென்று தன் தந்தையிடம் சந்தேகம் கேட்டிருக்கிறான்.

    இன்னொருமுறை கலைவாணன் தன் தந்தையிடம் ஓடிச்சென்று அவரைக் கட்டிப்பிடித்து

    “அப்பா.. நீங்க எல்லாரைப் பத்தியும் பாட்டு எழுதுறீங்க. என்னைப் பத்தியும் பாட்டு எழுதுங்கப்பா”

    என்று செல்லமாக கேட்டிருக்கிறான். கவியரசரின் நகைச்சுவை உணர்வுக்கும், சமயோசித புத்திக்கும் அளவே கிடையாது. உடனே குறும்புத்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.

    “உன்னைப் பத்தி ஏற்கனவே எழுத்திட்டேனடா…” என்று கவிஞர் சொல்ல கலைவாணனுக்கு ஒரே ஆச்சரியம். “சொல்லுங்கப்பா..” என்று மீண்டும் அவர் தோளைப் பிடித்து உலுக்க

    “ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ? பாட்டை உனக்காகத்தானே எழுதினேன்” என்றாராம் அந்த கவிராஜன் சிரித்துக் கொண்டே..

    இந்த பதிலைக்கேட்ட மற்ற குழந்தைகளும் முண்டியடித்து அவர் மடிமேல் தவழ்ந்து

    “அப்ப எங்களைப் பத்தியெல்லாம் ஒண்ணும் எழுதலையா..?” என்று சிணுங்கி இருக்கிறார்கள்.

    கவிச்சக்கரவர்த்திக்கு பேச சொல்லியா கொடுக்க வேண்டும்?

    “அதுவும் எழுதி விட்டேனே..…!” என்றாராம். “அது என்ன பாட்டு?” என்று பிள்ளைகள் ஆர்வத்துடன் வினவ..

    ஒரே ஒரு ஊரிலே
    ஒரே ஒரு ராஜா
    ஒரே ஒரு ராஜாவுக்கு
    ஒரே ஒரு ராணி
    ஒரே ஒரு ராணி பெற்றால்
    ஒன்பது பிள்ளை அந்த
    ஒன்பதிலே ஒன்றுகூட
    உருப்படியில்லை..
    உருப்படியில்லை “

    என்று பாடி முடித்துவிட்டு, “இதையெல்லாம் உங்களை மனசுலே வச்சுத்தான் எழுதினேன்” என்று பிள்ளைகளை கலாய்த்தாராம்.

    பாவம் பிள்ளைகள். இந்த பதிலை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. மறுபடியும் செல்லமாக சிணுங்கிக் கொண்டு ஓடி விட்டன. .

    கண்ணதாசனுக்குள்ளே கவிஞர்களுக்கே உரித்தான குசும்பு சற்று அதிகமாகவே குடிகொண்டிருந்தது

    எங்க ஊரில் ஒரு பழமொழி வட்டார வழக்கில் கூறுவார்கள். “இருந்தா நவாப்சா, இல்லேன்னா பக்கீர்சா”. கண்ணதாசனைப் போல் லட்சக்கணக்கில் சம்பாதித்தவரும் இல்லை. அதுபோல செலவழித்தவர்களும் இல்லை. அப்போது லட்சங்கள் கோடிகளுக்குச் சமம்.

    பெருமளவு சம்பாதித்துக் கொண்டிருந்த வேளையிலும் கடனில் மூழ்கி கண்ணதாசன் தன் குழந்தைகளுக்கு தீபாவளியன்று புதுத்துணிமணி, பாட்டாசுகள் வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் கண்ணீர்கூட வடித்திருக்கிறாராம்.

    கண்ணதாசன் சில சமயம் இரவில் தாமதமாக வீடு திரும்புவார். பிள்ளைகள் முழித்துக்கொண்டு அவருக்காக காத்திருப்பார்கள். ஜாலியான மூடு வந்துவிட்டால் தனது அம்பாஸிடர் காரை எடுத்துக் கொண்டு மவுண்ட்ரோடிலுள்ள புகாரி அல்லது பிலால் ஓட்டலிலிருந்து வகைவகையான அசைவ உணவு பார்சல் கொண்டுவந்து வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.

    கண்ணதாசனுக்கு செட்டி நாடு சமையலில் காரமாக சமைக்கப்பட்ட நாட்டுக்கோழி வறுவல், நண்டு, முயல்கறி, மான்கறி எல்லாமே விரும்பிச் சாப்பிடுவார்.

    “பறப்பதில் ஏரோப்பிளேனும், ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று நகைச்சுவையாகச் சொன்னதை ஒரு பத்திரிக்கை பேட்டியின்போது காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

    “குழந்தைகளுக்கு இடையே வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்” என்று தன் தந்தை பற்றிய சுவையான நினைவுகளைப் பகிர்கிறார் காந்தி கண்ணதாசன்.

    – —- இன்னும் தொடரும்

    Share
  • காதோடு ஒரு கவிதை

     
    மீ. விசுவநாதன்

     
    காகிதம் மேலே பறக்கிறது – பணக்
    காகிதம் போலே தெரிகிறது
    போகியாய்ப் போன மனிதனுக்கு – உள்
    புத்தியில் சூடு வலிக்கிறது (காகிதம் …..)

    இருட்டிலே கொட்ட மடிக்கிறது – ஒளி
    இருப்பதைப் பொய்மை மறைக்கிறது
    திருட்டிலே காலம் கடந்தவர்க்கு – இன்று
    திக்கெலாம் அச்சம் அடைக்கிறது (காகிதம் …..)

    பதுக்கிய செல்வம் கவலையென – தெருப்
    பாடகன் பாட்டு ஒலிக்கிறது
    செதுக்கிய சிற்பம் சிரிப்பதுபோல் – என்
    சிந்தனைத் தூய்மை இருக்கிறது (காகிதம் …..)

    ஆயிரம் செல்வ மிருந்தாலும் – அது
    அமைதியை என்றும் தருவதில்லை
    வாயிலும் உள்ளும் ஒளியிருந்தால் – எந்த
    வழியிலும் செல்ல பயமுமில்லை (காகிதம் …..)
    (21.11.2016 06.30 am)

    Share