அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள் அன்பு வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும். உலகம் விஞ்ஞான உலகின் விளிம்பைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் அனுகூலத்தினை அளவிலா ஆனந்தத்துடன் அனுபவிப்போர் பலர், அவ்வசதிகளை அனுபவிக்க முடியவில்லையே எனும் ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்போர் பலர்.

sakthi1அவ்வசதிகளில் திளைத்துக் கொண்டும் அவற்றினை அனுபவிக்கத் தெரியாமல் வாழ்வோர் பலர், அனுபவிக்க முடியாமல் திண்டாடுவோர் பலர். விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் உலகின் மூலைமுடுக்குகளில் வாழும் வறுமைக்கோட்டின் எல்லைக்குக்கீழ் வாழும் மக்களின் வாழ்வை உயர்த்த முயற்சிப்போர் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்களே!

இத்தகைய வசதியான வாழ்வின் அடிப்படையாக மேலைத்தேச நாடுகள் இருக்கின்றன என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்த வசதியான வாழ்வினைத் தமக்குத் தக்க வைத்துக் கொள்வதையே பிரதானமாகக் கொண்டு வாழ்வோரே அதிகமாகக் காணப்படுகின்றனர். அதைத் தவறு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இத்தகைய சுயநலத்தினை முற்படுத்தி வாழ்வோர் என எண்ணப்படுவோர் மத்தியிலிருந்துதான் மற்றவர் வாழ்க்கையைத் தமது வாழ்க்கையிலும் முதன்மைப்படுத்தும் தன்னலமற்ற தியாகிகளும் தோன்றுகிறார்கள் என்பதுவே உண்மையாகிறது.

தமது நாட்டின் பெரும்பான்மை மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு எதிரானதாக இருந்தாலும் மனிதாபிமானம் மதிக்கப்பட வேண்டியது, உலகில் பிறந்த அனைவரும் ஒருதாய் மக்களே எனும் கொள்கையில் வாழ்வோர் பலர் இம்மேலைத்தேச சமுதாய முன்றிலில் மலர்கிறார்கள் என்பது உண்மை. அவர்களது வாழ்வின் நோக்கம் வாழ்வின் அடிமட்டத்தில் அல்லாடுபவர்களின் வாழ்வை உயர்த்துவதை முதன்மைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

sakthi2நாமனைவரும் உலகில் எங்கே பிறக்கிறோம் என்பது எமது தெரிவில் நடப்பது இல்லை. நாம் பிறக்கும் தேசம் வசதியுடையதா? நாம் பிறந்த குடும்பம் வாழ்வின் மேல்மட்டத்திலிருக்கிறதா அன்றிக் கீழ் மட்டத்திலிருக்கிறதா? என்பது கூட எமது தெரிவிலில்லை. எங்கே பிறக்கிறோமோ அங்கே எமது வாழ்க்கையை எம்மால், எமது திறமைக்கும் வசதிக்கும் உட்பட்ட விதத்தில் மேன்மைப்படுத்திக் கொள்வது மட்டும் எமது கைகளிலுள்ளது. ஆனால் சிலவேளைகளில் நாட்டில் அரசியல்வாதிகளும், நாட்டின் தலைவர்கள் எனப்படுவோரும் எடுக்கும் முடிவுகள் எமது வாழ்வின் போக்கினையே மாற்றி விடுகிறது. 

விரும்பியோ, விரும்பாமலோ நாட்டின் தலைவிதியோடு  நமது தலைவிதியும் பின்னிப் பிணைந்து ஒரு சுழலில் அகப்பட்ட சருகினைப் போல இழுத்துச் செல்லப் படுகிறோம். அதிர்ஷ்டவசமாக ஓரளவு ஜனநாயகம் எனக்கருதப்படும் அரசியலமைப்பைக் கொண்ட நாடுகள் தம்மைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வதினால் அவை போர் எனும் கொடிய நிகழ்வினுள் தள்ளப்படுவதில்லை. சர்வாதிகார அமைப்பினைக் கொண்ட நாட்டின் தலைவர்கள் எனப்படுவோர் தமது பதவிவெறிக்காகத் தமது மக்களின் நலனைச் சூதாடமுனைகிறார்கள். விளைவு? நாம் இன்று உலகின் பலபகுதிகளிலும் காணப்படும் “அகதிகள்”எனும் விசேடத் தகைமை பெற்ற பரிதாபத்துக்குரியவர்கள்.

எதற்காக இந்த அலசல் எனும் ஒரு கேள்வி உங்களுக்குள் எழுந்தால் தவறில்லை.

இங்கிலாந்தில் ஒரு பரபரப்பை உருவாக்கிய ஒரு உன்னதப் பெண்மணியைப் பற்றிக் கூறுவதற்காகவே இந்த ஆரம்பம். 1974ஆம் ஆண்டு இங்கிலாந்தின் “யோர்க்‌ஷையர்” எனும் இடத்திலுள்ள “பட்லி” எனும் நகரில் பற்பசைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவருக்கும், அவ்வூரில் பள்ளிக் காரியதரிசியாக இருந்த பெண்ணுக்கும் மகளாகப் பிறந்தவர் தான் “ஜோ கொக்ஸ் (Jo Cox ) என்பவர். இவர் தனது கல்விப் பட்டதாரிப் பட்டத்தைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெற்றார். ஆரம்பகாலத்தில் இளம் பட்டதாரியாக லேபர் கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியைத் தொடங்கிய இவர் மனிதாபிமானத்தில் மிதமிஞ்சியவர். இக்காரணத்தினால் ஒக்ஸ் பாம் எனும் தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார். இந்நிறுவனத்திற்காக பெல்ஜியம், மற்றும் ஜக்கிய அமெரிக்கா நாடுகளில் பணியாற்றிய இவர் பல அகதிகளைக் காக்கும் பணிகளிலும் ஈடுபட்டு மத்தியகிழக்கு நாடுகளில் பணியாற்றினார்.

முந்தைய லேபர் கட்சியின் தலைவரான நீல் கினக், அவரது மனைவி ஜரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கிளினஸ், கோர்டன் பிரவுன் அவர்களின் மனைவி சாரா ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் ஆக்ஸ்பாம் நிறுவனத்தில் பணியாற்றும்போது இவரது கணவரான பிராண்டன் கொக்ஸ் அவர்களைச் சந்தித்து திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. 2015 பொதுத்தேர்தலில் பட்லி அன்ட் ஸ்பென் எனும் நகருக்கு லேபர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 40 வயதே நிறைந்த துடிதுடிப்பான இளம் அரசியல்வாதியான இவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில் தன்னுடைய நகரின் பல்வேறு இனக் கலாசாரத்தின் மேன்மையைப் பற்றி பெருமையாகப் பேசினார். பாலஸ்தீன மக்களின் மீதான தடையை இஸ்ரேலிய அரசாங்கம் நீக்க வேண்டும் எனும் கோரிக்கைக்கும் மிகவும் ஆதரவாகப் பிரசாரம் செய்து வந்தார். தன்னுடைய தொகுதி மக்களுக்கான சேவைக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வந்த இவரும், இவரின் குடும்பமும் தேம்ஸ் நதியில் உள்ள ஒரு படகு வீட்டிலேயே வசித்து வந்தார்கள். வசதி மிகுந்த இந்த மேலைநாட்டில் தன்னுடைய வசதியைகளைப் பெருக்கிக் கொள்ளும் சுயநல வாழ்வினை இவரும், இவரது கணவரும் கொண்டிருக்கவில்லை.

இத்தகைய சூழலில்தான் 2016ஆம் ஆண்டு ஜீன் மாதம் 27ஆம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்தில் தொடரும் பிரதிநிதித்துவத்தைப் பற்றிய பொதுக்கருத்துக் கணிப்பென அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரசாரத்தில் பல அரசியல் தலைவர்கள் தமது ஜரோப்பிய ஒன்றியத்திற்கெதிரான பிரசாரத்தில் இமிகிரேஷன் என்பதை முக்கிய காரணியாக்கினார்கள். இது தெரிந்தோ, தெரியாமலோ மக்களின் மனதில் பொதுவாக வெள்ளை இனத்தவர் மத்தியில் ஒருவகையான இனத்துவேஷத்தைத் தூண்விட்டிருக்கிறது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வினத்துவேஷம் சில இனவெறியர்கள் உள்ளத்தில் ஒரு வெறியைத் தூண்டி விட்டது. ஜரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவாகவும்,இமிகிரேஷன் என்பது இங்கிலாந்தின் பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமில்லை என்றும் ஜோ கொஸ் அவர்கள் மிகவும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்தார்கள்.

இவ்வருடம் ஜூன் மாதம் 16ஆம் திகதி சரியாக ஜரோப்பிய ஒன்றியத்தின் பொதுஜன வாக்கெடுப்புக்குச் சரியாக ஒருவாரத்திற்கு முன்பாக இவரது தொகுதியைச் சேர்ந்த தொமஸ் மேயர் எனும் இனவெறியனின் கைகளினால் இந்த இளம் துடிதுடிப்பான பாராளுமன்ற உறுப்பினர் இவரது தொகுதி காரியாலத்திற்கு அருகில் தெருவில் வைத்துப் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். உலகின் அநாதரவான மக்களுக்காகப் பிரகாசமாக எரிந்த ஒரு விளக்கு அணைக்கப்பட்டது. மனிதாபிமானத்தின் முக்கிய விலாசம் ஒன்று பலாத்காரமாக அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் மீது விழுந்த அனுதாப அலை இங்கிலாந்து இன்னமும் சகிப்புத்தன்மை கொண்ட, மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களையே பெரும்பான்மையாகக் கொண்ட நாடு என்பதனை உலகுக்கு நிரூபித்தது.

இவரது கொலைகாரன் ஒரு தீவிர வெறித்தனமிக்க இனவெறியர் என்று நிரூபிக்கப்பட்டது. அவருக்கு நேற்று நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை அதாவது சாகும்வரையில் சிறைத்தண்டனை எனும் கடும் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அறிக்கையளித்த அவரது கணவன் அக்கொலைகாரன் மீது நான் பரிதாபப்படுகிறேன். அவன் மனித இனத்துக்கு எதிரான ஒரு பயங்கரவாதி. என்னுடைய மனைவியின் இலட்சியக் கனவுகளை முன்னெடுப்பதற்காகவும் எனது குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காகவும் எனது வாழ்நாளைச் செலவிடுவேன் என்றும் குரோதத்தை வெளிப்படுத்த அக்கொலைகாரன் எடுத்த நடவடிக்கை நாட்டிலும், உலகத்திலும் மனிதநேயமிக்க மக்களின் அன்பு அலைகளையே வெளிப்படுத்த உதவியிருக்கிறது என்று அனைவரின் நெஞ்சையும் நெகிழவைக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் பிறந்த அனைவரும் இயற்கையின் குழந்தைகளே! உலகில் அமைதியாகவும் மகிழ்வுடனும் வாழும் உரிமை அனைவருக்கும் சமமாகவே உள்ளது என்பதனையே இது போன்ற உன்னதத் தியாகிகள் நிரூபித்து மறைகின்றனர்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *