படக்கவிதைப் போட்டி – (87)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
அருண் வீரப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 26.11.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
வாழ்த்துவோம்
துறவின் தொடக்கம்-இந்த
துள்ளித் திரியும் பருவத்தில்
உலகில் கால் பதிக்கும் முன்னே அதனை
உதறித் தள்ளிய ஒரு விடி வெள்ளியின் வெற்றிச் சிரிப்பு
பொய்மையைப் பெருக்கி
பொழுதினைச் சுருக்காமல் புறப்பட்ட பிஞ்சுகள்
புத்தனின் அறவழிச் சாலையில்
பூத்துக் குலுங்க நடப்படும் நாற்றுகள்
புறவழ்வில் காண இயலாத உண்மையை
அகத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப் போகும் ஞான குஞ்சுகள்
தவத்திற்கே தவம் செய்ய வேண்டும் இவ் வேள்வியில்
தானாகத் தன்னை தாரை வார்க்கும் ஆஹூதிகள்
பார்வையாளரே நாம் இங்கு தவிர-இப்
பாலகரை வாழ்த்த தவற வேண்டாம்
அனுப்புனர்
ராதா விஸ்வநாதன்
துறவென்பது…
உறவின் நிலையறிந்து,
வாழ்வின்
உண்மைப் பொருள் தெரிந்து
துறவு துளிர்க்கவேண்டும்,
அது
தூயதாய் இருக்கவேண்டும்..
அறியாத சிறுவயதில்
பிள்ளைகள் தலையில்,
அறியாமையால் ஏற்றும்
துறவுச் சுமை
தருவதில்லை பயனெதுவுமே..
அது
அவர்களுக்கு ஒரு
வேடிக்கை விளையாட்டே…!
-செண்பக ஜெகதீசன்…
ஊனோடு உயிர் ஒளி பெற்றிட
உயர்ந்தோர் சொன்ன மந்திரம்
துன்பம் அறுத்து பேரின்பம் பெற
துறவறம் பூணுதலே
சிறந்த அறமாகக்கொண்டு
எண்ணித்துணிந்தார் சிறுவர்கள்
மனதை அடக்குவது கடினம் அந்த
மாண்பான செயலை செய்ய பயிற்சி எடுக்கிறார்
சிறுவயதிலேயே
ஐம்பொறி புலன்களை
நெறிப்படுத்த ஐந்து வயதிலேயே வளைக்கிறார்கள்
அறத்தின் மிக்க உறுதியில்லை
துறவறத்தை மிக்க வேறு இல்லை