Month: June 2018

  • நித்திரை தொடராமல் கனவில்லை

    தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
    கோவை.

    நித்திரை தொடராமல் கனவில்லை

    ஒரு வடிவம் உருவகப்படுகிறது. நீட்டிப்பிடித்த கைத்தலங்களின் இரயில். ஓவர் பிரிட்ஜிற்கு நேராக தெற்கிலிருந்து வருகின்ற இரயில். மரணம், ஃபாஸ்பென்டர் கூறியதுபோல தண்மையானதா? என்று இப்போது தெரியும். ’ஆக்ஷன்!’ கைகள் அசைந்தது. கைவரிசை கடக்கத்தான் வேண்டியிருந்தது. கொஞ்சம் கூட ஈடுபாடில்லை. பாதி தூரத்தை அடையும் முன்பு ஷோர்ட் ஃப்ரீஸ் செய்து கடைசி டைட்டில் அதன் மேல் ‘தி என்ட்’. மனதிற்குள் ஒரு மின்வெட்டு பாய்ந்தது.

    எ ஃபிலிம் ஈஸ்…………, எ ஃபிலிம் ஈஸ்………….. எ ஃபிலிம்…………….

    நினைவுகள் அவ்வளவும் அடங்கியது. கண்களை இறுக மூடினான்.மறுபடியும் அதை திறப்பதற்குள் எலக்ட்ரிக் ட்ரெயின் சென்று விட்டிருந்தது. ஏதோ ஒரு பெண் நெருக்கமாகப் பின்னால் நிற்கிறாள். தோள்வரை நீண்ட முடி. கண்ணாடி. நீல நிற ஜீன்ஸும், பிங்க் நிற டாப்பும். மாநிறம். தோளில் பை. கையில் ஆந்த்ரே ஆர்கோவ்ஸ் கியின் நூல். லான்ட்மார்க்கிலிருந்து வாங்கியிருப்பாள் புதியதாக இருந்தது.

    ‘இங்கேயே பாத்தது என்னோட அதிர்ஷ்டம். நான் வீட்டுக்கு வருவதாக இருந்தேன்’ அவள் கூறினாள்.

    “எதுக்கு?” கேட்காமலிருக்க முடியவில்லை. நினைத்திருந்தால் கொஞ்சம்

    மென்மையாக மயமாகக் கேட்டிருக்கலாம். சத்தத்தின் உச்சத்தை அவள் கவனிக்கவில்லை.

    “அறிமுகப்படுத்ததா என் பேரு சோஃபி”. அவள் கைநீட்டினாள். இளமை அவளது விரல் நுனிவரை நிறைந்து நின்றது. அதன் வீர்யம் தெரிய வந்தது.

    “முழுப்பெயர் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ்”, என்று கையை விடுவிக்கும் முன்பு கூறினாள்.

    நல்ல பெயர் என்று கூடக் கூறவில்லை. அவள் பாலத்தின் கைச்சுவரில் சாய்ந்து நின்றாள். காற்று வீசியது. முடியைக்கட்டி வைத்திருக்கவில்லை. அவள் முடியொதுக்காமல் எதையோ சாதித்த நினைப்பில், நோர்த் உஸ்மான் ரோட்டில் உள்ள அசோசியேஷன் ஆபீஸிலிருந்து முகவரிதேடி அடைந்ததைப் பற்றி விளக்குவதற்குள், பாலத்தின் வழியாக மூன்று வண்டிகள் கடந்துபோயின. ஓவர் பிரிட்ஜில் எப்போதும் வழக்கம்போல உள்ள கூட்டம்தான். இரயில்வே டிராக்கின் இருபுறத்திலும் வாழ்க்கையின் இரம்பல் ஓசை. நகரச்சுற்றுவட்டாரத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன ப்ளெக்ஸ் போர்டுகள். பல காட்சிகள். மங்கிய வெயில், வறண்ட காற்று. இரும்புப் பாதையின் வழிகள் மறுபடியும் நிறைந்தது.

    “சரி……”அறிமுகப்படுத்துவதை அப்படியே முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அவள் அதற்கு ஒத்துவரவில்லை. அவளிடம் ஒரு சி.டி. இருந்தது. என்ன சி.டி.? அவளே தயாரித்தக் குறும்பட சி.டி. ஓ………. விஷ்வல் கம்யூனிகேஷனில் டிப்ளமோ படித்திருக்கிறாள் நல்லதுதான். அவள் தோள் பைக்குள் கையிட்டு சி.டி.யை வெளியே எடுக்க முயற்சித்தபோது அவசரமாக விலக்கினேன்.

    “வேண்டா, பாக்க நேரமிருக்காது”.

    “இன்னக்கே பாக்கணும்னு இல்ல சார்”

    “நா … கொஞ்சம் பிசி”

    “தெரியும் சார்”. அவள் அதற்குள் சி.டி.யை வெளியிலெடுத்திருந்தாள்.

    “நா எதுக்கு இத பாக்கணும். ஏதாவது ஷோர்ட் ஃபிலிம் பெஸ்டிவெலுக்கு அனுப்ப வேண்டியதுதானே”.

    “அதில்ல சார்”

    “அப்புறம்”

    “அதிகமா யாரிடமும் நா இத காமிக்கல. சாரோட கருத்து என்னான்னு தெரியணும் அதுதா”…

    “என்னோட கருத்திலொண்ணும் பெரிய காரியமில்ல…… போம்மா…”

    மீண்டும் காட்சியில் இரயில் வண்டிகளும், தற்கொலைக்கு முயற்சிப்பவர்களும், காத்துக் கிடக்கும் இரயில் பாலங்களும் வந்தன. அங்கே தூரத்தில் ஏதோ சேரிக்கி அருகில் புகைச்சுருளுகள் உயர்ந்தது. சிதையிலிருந்து வந்ததாக இருக்காது. அப்படி இருந்தாலும் சொல்வதற்கில்லை.

    “சார்………”

    திரும்பிப் பார்த்தேன். சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ் போகவில்லை. முகத்தில் ஒரு விண்ணப்ப பாவம்.

    “ஒரு ரிக்வஸ்ட் இருக்கு சார். சாவகாசமாக சி.டி.யை பாத்தபின்னர்,

    “நான் அதுக்குத் தகுதியுடையவள்னா மட்டும் போதும்”.

    “புரியல”

    “எனக்கு சாரோட அசிஸ்டென்ட் ஆனா பரவால்லேன்னு இருக்கு. என்னோட பெரிய ஆச சார் அது”

    சத்தமாக சிரித்துவிட்டேன், அப்படி சிரிக்க முடியுமென்று எதிர்பார்க்கவில்லை. அது கட்டுப்பாட்டை மீறி வந்தது. ஒரு திருடன் பயணியின் முன்பு குதித்தது போன்ற சிரிப்பு. அப்பெண்ணின் முகத்தில் ஆச்சர்யம் படர்ந்திருந்தது. கண்களின் பார்வை கூர்மையானது.

    “நா ஒரு படம் எடுத்து வருஷம் ஏழாச்சு, ஒனக்கு அது தெரியாது இல்லயாம்மா…”

    மறுபடியும் சிரிப்பு அடக்க முடியவில்லை. இப்படி சிரிச்சு ரொம்ப காலமாச்சு. நல்ல ஜோக்குகள் சமீபமாக கேட்பதேயில்லை. கொஞ்சம் சிரிப்பதற்காக தொலைக்காட்சி சேனல்களைத் தேடிப்பார்த்தால் அதுவும் எல்லா துக்கமாத்தான் இருக்கும். சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ். சிரிக்க வைக்கக் கூடிய பெரிய திறனாளி.

    ஒத்துக்காமல் முடியல

    “லுக். ஐ ஆம் சீரியஸ். ஜோக்குக்காக சொல்லல”.அவளின் முகபாவம் மாறியது.

    ”வேறு யாருடனும் வேலைசெய்யவிருப்பமில்லை. காத்திருக்கத் தயார்.”

    “எவ்வளவு நாள்?”

    “எவ்வளவு நாள் வேணும்னாலும். டு பி ப்ராங்க். ஐ ஹேவ் எ டெரிபிள் பேஷன் ஃபோர் யு. சாரோட எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.

    “அதெல்லாமே முழுக்க தோல்வியடைந்தவை. அதெல்லா தெரியாது இல்லையா?”

    “தியேட்டர்களில வேண்டிய அளவு ஓடலேங்கறதுக்காக, அதெ அப்படி மதிக்கலாமா?”.

    “என்னமோ……. நா இப்போ அதோட பேருகூட நினைக்கறதில்ல”

    அவற்றில் ஒன்றுகூட மறுபடியும் கண்டெடுக்க முடியாது உயிரற்றவை. இல்லை அதிசயமொன்றும் சம்பவிக்காது.

    “சார் வாக்கிங் வந்தது தானே”?

    “உம்”

    “கொஞ்சநேரம் நானும் கூடவரட்டுமா?”

    ஒரு ஹெலிகாப்டரின் இரம்பல் சத்தம் கேட்டு முகமுயர்த்திய போது ‘லாடோள்ஸ்’ விற்ற ஞாபகம் வந்தது. ஹெலிகாப்டரில் தொங்கிநின்று நகர்வலம் வருகின்ற கிறிஸ்து உருவம் ஃபெல்லினியாவின் மேஜிக். அடுத்த நிமிடத்தில் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ் சி.டி. கைமாறினாள். அதுவும் மேஜிக். வானம் இருண்டது. கையில் சிடியுடன் நிற்கும்போதே பச்சைநிற பஸ்ஸில் சோஃபி குதித்து ஏறினாள். பின்னால் திரும்பி கொஞ்சமாக கைஆட்ட மறக்கவில்லை.

    பா…ய்…

    வீட்டின் தனிமைக்குத் திரும்பி வருவோமென்று நினைக்கவில்லை. சாவியெடுத்துக் கதவைத் திறந்தான். மக்கள் ஓடி வந்து கட்டிப்பிடிப்பதற்கோ, அவர்களின் அம்மா காபியும் கொண்டு சமையலறையிலிருந்து வெளியில் வருவதோ எதிர்பார்ப்பதற்கில்லை. குளிர்ந்த வரவேற்பறை, செய்தித்தாள்களும் புத்தகங்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்திருந்தது. அவற்றின் காவல்காரன் என்பதுபோல சுவரில் சாப்ளினுடைய சல்யூட் மறுபடியும் பார்க்க முடிந்ததில் சந்தோஷம். கொஞ்சம் பிராண்டி குடிப்பது ஒருவேளை உறங்குவதற்கு உதவும். சியர்ஸ். இனி செய்ய வேண்டிய ஒரு செயல் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸின் குறும்படம் பார்ப்பது. ’காஸ்பர் தோமஸ் என்ற வயதானவரின் கதை எழுபத்தி நான்கு வயதான அவர் பஸ்ஸை விட்டிறங்கி ஒரு பேகையும் பிடித்துக்கொண்டு கிராமத்தின் மிகப்பழமையான ஆலயத்தை நோக்கி நடந்தார். நிறைய கற்படிகள் ஏறினால்தான் ஆலய முற்றத்தை அடையமுடியும். அவர் தளர்ச்சியுடன் ஒவ்வொரு படியும் ஏறினார். அவர் முகத்தைப் பார்த்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரத்தைத் தன் முதுகில் சுமக்கிறார் எனத்தோன்றும். கடந்தகால வாழ்க்கை வேதனை நிறைந்ததாக இருந்தது என்பதை அவருடைய அங்கங்கள் வெளிப்படுத்தின. தேவாலயக் கட்டடிடத்தின் வெள்ளை நிற முகப்போடு சேர்ந்து மின்னுகின்ற சிலுவை வானம் வரை உயர்ந்து நின்றது. காஸ்பர் தோமஸ், ஃபாதர் ஜோனின் முன்னால் வந்தார்.

    “யாரது? தெரியலையே……………” ஃபாதர் சொன்னார். ஃபாதருக்கு அம்பது வயதுக்கு மேலிருக்கும் மேசைமேல் உள்ள கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்.

    “என் பேரு காஸ்பர் தோமஸ்”. அவர் தன்னை அறிமுகப்படுத்தினார். ஃபாதர் இதற்கு முன்பு அவரைப் பார்த்ததில்லை. இருவரும் முற்றிலும் பழக்கமில்லாதவர்கள்.

    “நான் உட்காரட்டுமா?” அவர் கேட்டார்

    “ஐ ஆம் ஸோரி. நான் அதெ சொல்ல மறந்திட்டேன்” என்று திடுக்கத்தில் கூறினார் ஃபாதர். அவர் சந்தோஷப்பட்டார்.

    “நான் கொஞ்சகாலம் வெளியிலிருந்தேன். இதே ஊர்க்காரன் தான் நானும். திருமுழுக்கும், கல்யாணமும் இங்கதான் நடந்துச்சு”.

    “பார்க்க முடிந்ததில மனம் நிறைந்த மகிழ்ச்சி. நா இங்க சார்ஜெடுத்து ரொம்பக் காலமாகல” ஃபாதர் ஜோன் கூறினார்.

    “இங்கிருந்து போகும்போது ஜோஸஃப் கிழக்கன் காலேலச்சனாயிருந்தார்.” காஸ்பர் தோமஸ் கூறினார்.

    “அது ரொம்பக்காலமாச்சே” ஃபாதர் கேட்டார்.

    “ஆமா” அவர் கூறினார். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜன்னலுக்கு வெளியில் ஜாதி மரத்தின் இலைகள் காற்றில் ஆடின. மரத்திற்கு அப்புறம் பலப்பல செடிகள் கடும்பச்சை நிறத்தில் தளிர்த்திருந்தன.

    “இந்த வரவிற்குக் காரணம் ஏதாவது!…………”

    “உண்டு” அவர் அதைக்கூற கொஞ்ச நேரம் தயங்கினார். சுலபமாக மனம் திறக்கவில்லை.

    நாற்பது ஆண்டுகளாக அவர் சென்னை நகரத்தின் ஒரு மூலையில் பிஸினஸ் செய்து கொண்டிருந்தார். பிஸினஸிலும் வாழ்க்கையிலும் துணையானஹில்டா சில மாதங்களுக்கு முன்பு இறைவனடடி சேர்ந்துவிட்டாள். பிறகு அவருக்குத் தனிமைதான். ஒரு மகள் ஜெர்மனியில் மகன் அமெரிக்காவில் இரண்டாவது மகள் நெதர்லான்டில். அவங்க யாரும் போனதுகப்பறம் வரவேயில்லை. ஹில்டா இறந்தபோது அவர் அவர்களை மிகவும் எதிர்பார்த்தார் ஆனால் அவர்களின் துர்பாக்யம் வரமுடியல ஃபாதர் ஜோன் தனக்குத் அறிமுகமில்லாத ஹில்டாவின் ஆத்மாவிற்கு நித்ய சாந்தி வேண்டினார். காஸ்பர் தோமஸ் கவலையுடன் இருந்தார். சௌன்ட் ட்ராக்கில் கவலையில் ஸ்ருதி அது அப்படியே தொடர்ந்தது.

    கொஞ்சம் கூட பிராண்டி அதற்கிடையிலும் ஸ்க்ரீனிலிருந்து கண்ணெடுக்கவில்லை. காஸ்பர் தோமஸ் தனக்கு வேண்டி ஒரு கல்லறை செய்யச் சொல்லியிருந்தார். கோன்ட்ராக்ட் காரன் நதானியலும் ரெண்டு வேலக்காரர்களும், பார்வையாளராக ஃபாதர் ஜோனும். கல்லறைக் கட்டி முடித்து காஸ்பர் தோமஸ் மரணம் வரும் வரை காத்து மீதி நாட்களை இடவகயில் கழிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார். ஃபாதர் அவரின் தீர்க்கமான முடிவிற்குக் கீழ்படிந்தார். கல்லறை வேலை தீர்ப்பதற்கும், தொடர்ந்துள்ள வாழ்க்கைக்குமான பணம் போக மீதமிருக்கும் தனது வருவாய் அனைத்தையும் பள்ளிக்கு என வாக்குமூலம் கொடுத்தார். யாரோ மயானம் வழியாக வந்தார். அவர் உற்சாகமாக இருந்தார்.

    “என்னா அதிசயமிது? குஞ்ஞாச்சியா……….. நான் கொச்சும்மன்”

    காஸ்பர் தோமஸ் விழித்தார். குஞ்ஞாச்சி என்பதும் காஸ்பர் தோமஸின் பேர்தான். ஆனால் பல ஆண்டுகளாக அப்பெயரில் யாரும் அவரை அழைத்ததில்லை.

    “கொச்சும்மன்!” அவர் அற்புதப்பட்டார்.

    “ஆமாண்டா உங்கூட ஆத்திலயும் காயல்லயும் மீன்பிடிக்க வர்ற அதே நண்பந்தா. நாம நெறய வராலும், வற்றயும் கரிமீனுமெல்லா புடிச்சத மறந்திட்டியா?.

    கொச்சும்மன் அவசரமாகக் கூறினான். இருவரும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டனர். விதும்பினர் ஃபாதர் ஜோனும், நதானியலும், வேலைக்காரர்களும் செயலற்று நின்றனர். அவர் சிறு ஆறுகளில் விளையாடும் உயிர்களைப் பற்றியும், சேற்றில் பறந்து இறங்கும் பறவைகளைப் பற்றியும், வாத்தின் சிறகுகளைக் குறித்தும் கூறிக்கொண்டிருந்தனர். காஸ்பர் தோமஸ் என்ற குஞ்ஞாச்சியும், கொச்சும்மனும் இளமை நினைவில் துள்ளிக் கொண்டிருந்தனர். ஆற்றின் ஓரத்தில் நீர்ப்பறவைகள் சத்தமிட்டன. எங்கிருந்தோ ஒரு குக்கூ சத்தம்; மறு குக்கூ சத்தமும் கேட்டது. சேற்று வயலிலிருந்து பறவைகள் பறந்தன. ஆரவாரம் கேட்டு வாத்தின் கால்கள் நகர்ந்தன.

    “குஞ்ஞாச்சி எனக்கு என்னோட மனைவியையும் மக்களயும் பார்க்க வேண்டாமா?”

    “நானும் அதத்தா சொல்ல வந்தே” காஸ்பர் தோமஸ் கூறினார். அவர்கள் கைகள் கோர்த்தனர்.

    “நாங்க போறோம்” கொச்சும்மன் ஃபாதர் ஜோனைப் பார்த்து சொன்னான்.

    ஃபாதர் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தார். அவருடைய காட்சியில் கொச்சும்மனும் காஸ்பர் தோமஸும் சிறுவர்களைப்போல நடந்து அகன்றனர். கொச்சும்மன் சத்தமாகக் கூப்பிடும்போது வீட்டிற்குப் பின்னால் உள்ள கோழிக்கூட்டிற்கருகில் ரஜீனாம்மா மீன் கழுவிக் கொண்டிருந்தாள். கோழிகள் நாலைந்து ரஜீனாம்மாவைச் சுற்றி நின்று கொண்டிருந்தன.

    “இங்க கொஞ்சம் வா என்னோட ரஜீனாம்மா…….” கொச்சம்மன் கத்தினான்.

    ரஜீனாம்மா கத்தியும் மண்சட்டியுமாக எழுந்தாள், சட்டியில் சின்னச்சின்ன மீன்கள்.

    “ரஜீனாம்மா … இது என்னோட சின்ன வயது நண்பன் குஞ்ஞாச்சி. நா சொல்லிருக்கேல்ல உங்கிட்ட ரொம்ப காலத்துக்கப்பறம் நாங்க ரெண்டு பேரும் பாக்கறோம். நா இதக் கொண்டாடுவே. நம்மோட சேவல் வாத்து எங்கே?”.

    கொச்சம்மன் நான்கு புறமும் பார்த்துக்கொண்டு இரைபிடிக்கத் தக்க நேரம் பார்த்து உற்சாகத்தோடு காத்துக் கொண்டிருக்கும் காட்டு விலங்கைப் போல தேடி மறைந்தார்.

    “இங்க உட்காரலாமே. அவர் இப்ப வருவாரு” ரஜீனாம்மா காஸ்பர் தோமஸிடம் கூறினாள்.

    எங்கிருந்தோ வாத்தின் அலறல் கேட்டது. கொச்சம்மனின் வெற்றியும் அதில் கலந்திருந்தது. நீரில் உயிரினங்கள் துடித்தது. கொச்சமனும் காஸ்பர் தோமஸும் ஒரு துணியின் இரண்டு முனையையும் பிடித்து குனிந்து நின்றனர். மீன்குட்டிகள் நிறைய துணியில் வந்தது. சில மீன்கள் ஈரத்தோடு குதித்தன. கொச்சமனும் அவன் நண்பனும் அவற்றை மீண்டும் தண்ணீரிலேயே விடுகின்றனர். இருவரும் ஆழமில்லாத நீர்ப்பரப்பில் தண்ணீரை கைகளால் சிதறிக் கொண்டு ஓடுகின்றனர். அடுத்தக் காட்சி பள்ளியில் வைத்து கொச்சமாவின் மகள் மெட்டீல்டாவின் திருமணச் சடங்கு. காஸ்பர் தோமஸ் மகிழ்ச்சியோடு நிற்கின்ற கொச்சமாவின் தோளில் கை வைத்தார். கொச்சமன் உணர்வுப்பூர்வமாக தனது கையை அக்கைகள் மீது வைத்து அமர்த்தினான். ‘எபனீசர்’ சவப்பெட்டிகளுக்கு நடுவில் காஸ்பர் தோமஸைக் காத்துக்கிடந்தார். சவப்பெட்டிகளிலொன்று சித்திரவேலைகள் முடிந்து ஜொலித்துக் கொண்டிருந்தது. அது காஸ்பர் தோமஸின் அவசியத்திற்கிணங்க எபனீசர் செய்து முடித்த வேலை. நதானியல் வேகவேகமாக நடந்து வந்தான்.

    ‘எடா நீ அந்த வெளிநாட்டுக்காரன எங்கயாவது பாத்தயா?”. அவன் எபனீசரிடம் கேட்டான்.

    “யார அந்த காஸ்பரையா?”

    “அவரையேதா”

    “அது சரி நானினி அவரத் தேடாத இடமில்ல. ஒன்னு பாத்தாலோ மின்னல் போல மறஞ்சிடறாரு………..

    “பிணம் எறக்கி வைக்குமளவுக்கு கல்லறயோட வேல முடிஞ்சு எவ்வளவு நாளாச்சுன்னு தெரியுமா?. கொச்சும்மனைப் பாத்தபின்ன அந்தப் பக்கமே வறல”.

    “அதோ அங்க பாரு” எபனீசர் கை நீட்டினான்.

    நதானியல் அங்கே பார்த்தான். பாதையருகில் ஒரு சைக்கிள் வந்து கொண்டிருந்தது. காஸ்பர் தோமஸ் அதன் பின்சீட்டில் ஒரு பாகமாகத் திரும்பி உட்கார்ந்திருந்தார். கொச்சம்மன் அழுத்தி ஓட்டிக் கொண்டிருந்தார். காஸ்பர் தோமஸின் கையில் கறுப்புநிற கரிமீன்கள் அவை வெயிலேற்று மின்னின.

    “கொஞ்சம் நில்லுங்க” நதானியலும் எபனீசரும் ஒரே குரலில் கூறினர். கொச்சம்மன் சைக்கிளின் வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கவில்லை.

    “நாங்க கொஞ்சம் வேலயா இருக்கோம்……..” காஸ்பர் தோமஸ் கூறினார். எபனீசர் ஏற்கனவே சொன்னதேதான் நடந்தது. ஒரு மின்னல் போல அவர்கள் மறைந்தனர். மெதுவாக ஸ்கிரீன் இமேஜுகள் இல்லாமல் ஆனது. அதில் ஒரு பெயர் தெளிந்தது.

    “சோஃபி எஸ்தர் ஆன்ட்ரூஸ்”.

    ஃபோனின் மறுமுனையில் அவள்……… நான் உறங்கவில்லையென்றும் நேரம் தவறி தான் அழைத்து தொந்தரவு செய்யவில்லை என்றும் உறுதிப்படுத்திக் கொண்டாள்.

    “படம் பாத்தீங்களான்னு தெரிவதற்காகத்தான்”.

    “ஆமாம் பாத்து இப்பத்தா முடிச்சேன். நல்லா இருக்கு”

    “ரியலி!………….”

    “உம்”

    அவள் குதூகலமடைந்தாள். பெரியநகரத்தின் இரவில் அலையின் அசைவுகள்.

    “நாளைக்கு பார்க்க முடியுமா?………..” சோஃபி கேட்கிறாள்,.

    ” ஏ முடியாது? பார்க்கலாமே”

    “குட் நைட்.”

    “குட் நைட்.”

    பிறகு உறங்க சென்றபோது சோஃபியின் கதாபாத்திரத்தின் முகம் தானாக நினைவுக்கு வந்தது. படத்தில் இல்லாத ஒரு க்ளோஸ்அப். …. ’காஸ்பர் தோமஸ்!’……………. ஏதோ கனவு கண்டு உறக்கத்தில் சிரிக்கிறார்.

    காட்சி மாய்வதில்லை
    ஒரு நிமிடம்
    இரண்டு நிமிடம்
    அவரின் உறக்கம் தொடர்ந்தது
    மூன்று ……
    நாலு ……
    அஞ்சு ……

    Share
  • யார் இட்ட சாபம்.!

    போர்வீரர்களின் மனைவி தான் பாஞ்சாலி
    =====பொதுச்சபையில் பட்ட துன்பம் தெரியாதா..?
    கூர்மதி கொண்டவர் பாண்டவர்! அவர்கள்
    =====கொண்ட துன்பத்திற் கேதேனும் அளவுண்டா.?
    சூர்யகுல அரசன் அரிச்சந்திரன் தன்வாழ்வில்
    =====சுடலையில் பிணமெரித்த நிலை எதனால்..?
    யார் இட்டசாபம் இதற்கெல்லாம் காரணம்?
    =====ஏனிந்தக் கஷ்டம் ? புரிவது மிகக்கடினமே..!

    மார்க் கண்டேயனுக்கு பதினாறில் மரணம்
    =====மரணமில்லாச் சிரஞ்சீவி யானது எதனால்..?
    நேர்வாரிசு இல்லாமல் நானூறு வருடமும்
    =====நகர்ந்ததே மைசூர்மஹா ராஜவம்சம் எப்படி..?
    நீர்மீதில் வாழ்நாளைப் போக்கும் மீனவர்
    =====நித்தம் சோதனையில் நீந்திக்கழிக்கிறார் ஏன்?
    யார் இட்டசாபம் இதற்கெல்லாம் காரணம்?
    =====எவரும் எளிதில் அறியமுடியாத ரகசியமோ..?

    பார்மீதில் மாந்தராய்ப் பிறந்தாலே ஏதோ
    =====பெரியதொரு துன்பத்தி லுழல்வது சகஜமே..!
    ஆர்வலரென தனைச் சொல்லிக் கொள்வார்
    =====ஆதாய மிலாதெதையும் செய்ய நினையார்..!
    ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்
    =====ஊரையே கொள்ளை யடிக்க நினைப்பார்..!
    நேர்மையாக வாழமுடியா நிலை தானின்று
    ======நீரறிவீரோ?ஈதெலாம் யாரிட்ட சாபமென்று..!
    ======================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::21-05-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • எல்லாப் புகழும் இறைவனுக்கே !


    ம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

    எல்லாப் புகழும் இறைவனுக்கே
    இயன்றவரை உதவிடுவோம் யாவர்க்குமே
    நல்லவற்றை நினைத்திடுவோம் நாளெல்லாம்
    அல்லவற்றை அகற்றிடுவோம் அனைவருமே
    சொல்லுவதை சுவையாகச் சொல்லிடுவோம்
    சோர்வின்றி நாளெல்லாம் உழைத்திடுவோம்
    கொல்லுகின்ற கொலைவெறியை மறந்திடுவோம்
    குணமதனைச் சொத்தாக்கி உயர்ந்திடுவோம் !

    எல்லையில்லா ஆனந்தம் ஈந்தளிக்கும்
    எல்லையில்லா இறையினைநாம் ஏற்றுநிற்போம்
    வல்லமையின் வடிவான இறையினைநாம்
    வணங்காமல் இருந்துவிடல் முறையேயன்று
    சொல்லளித்துச் சுவையளிக்கும் தூயசக்தி
    துதிப்பார்க்கு காட்சிதரும் பெரியசக்தி
    எல்லையில்லா உலகினையே படைத்தசக்தி
    இறையொன்றே என்றுநாம் நினைப்போமென்றும் !

    நினைப்பார்க்கு இறையாகக் காட்சிதந்து
    வெறுப்பார்க்கு நம்பிக்கை ஊட்டிநின்று
    பொறுப்புடனே வாழ்வதற்கு வழியாய்நிற்கும்
    போற்றுகின்ற பொருளே இறைவடிவமாகும்
    கருத்துடனே நினைவார்க்கு கருணையாகி
    கவலையுடன் இருப்பார்க்கு கையுமாகி
    இருக்கின்ற சக்திதான் இறையென்றெண்ணி
    இருக்கின்றார் இவ்வுலகில் பலருமின்று !

    இறைபற்றிக் கருத்துப்பல இருந்திட்டாலும்
    எல்லோரும் இறைபற்றி எண்ணுகின்றார்
    எதிர்வாதம் இவ்வுலகில் எழுந்திட்டாலும்
    இறைபக்தி அற்றநிலை எங்குமில்லை
    இறையிருக்கு இறையிருக்கு எனும்நினைப்பை
    எவர்வந்து தடுத்தாலும் பலனேயில்லை
    இறையிருந்து நல்லவழி காட்டிநிற்பார்
    இறைதொழுது எல்லோரும் இருப்போம்நாளும் !

    Share
  • வாழ்க்கை!

    -டாக்டர். திரிவேணி சுப்ரமணியம்

    காலத்தின் பேரழைப்பில்
    கட்டுண்டு நிற்கிறேன் நான்
    சுயநம்பிக்கையின்
    சுவடுகள் கூட இல்லாமல்
    எல்லாம் முடிந்தும்
    ஏதோ ஒரு மாய ஈர்ப்பு
    தொக்கி நிற்கிறது
    வாழ்க்கை குறித்த
    ஆர்வத்தையும் நோக்கத்தையும்
    இடைவிடாமல் தந்துகொண்டிருக்கும்
    இந்த வாழ்க்கை எதைத்தான்
    எதிர்பார்க்கிறது என்னிடம்?

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (166)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(217)

     

     

     

    ஏதம் பெருஞ்செல்வந் தான்துவ்வான் தக்கார்க்கொன்   

    றீத லியல்பிலா தான்.                                                

           -திருக்குறள் -1006(நன்றியில் செல்வம்)

     

    புதுக் கவிதையில்…

     

    சேர்த்த செல்வத்தைத்

    தனக்காகச்

    செலவு செய்யாமலும்,

    தகுந்தவர்களுக்குக் கொடுத்து

    உதவாமலும் இருப்பவன்,

    அச்செல்வத்திற்கே

    ஆவான் ஒரு நோயாய்…!

     

    குறும்பாவில்…

     

    தானும் அனுபவிக்காமல்

    தகுந்தவர்க்குக் கொடுத்து உதவாதவன்,       

    அச்செல்வத்துக்கொரு நோயாவான்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    செல்வம் சேர்த்துத் தனக்குமதைச்

         செலவென ஏதும் செய்யாமல்

    இல்லை யெனவரும் தக்கவர்க்கே

         ஈகை ஏதும் செய்யாதவன்,

    தொல்லை தந்தே வாட்டிவிடும்

         தீராக் கொடிய நோயாவான்,

    அல்லும் பகலும் பாடுபட்டே

         அலைந்தவன் சேர்த்த செல்வத்திற்கே…!

     

    லிமரைக்கூ..

     

    சம்பாதித்தான் அலைந்து பேயாய்,   

    செல்வமதை நுகராதே தக்கோர்க்கும் ஈயாதவன்           

    ஆவான் அச்செல்வத்திற்கே நோயாய்…!

     

    கிராமிய பாணியில்…

     

    சேக்கணும் சேக்கணும்

    செல்வம் சேக்கணும்,

    சேத்த செல்வத்த

    செலவுபண்ணணும்

    நல்ல மொறயில..

     

    சேத்த செல்வத்தத்

    தனக்கும்

    செலவு பண்ணாம,

    தேவப்பட்டவங்களுக்கும்

    குடுத்து ஒதவாதவன்

    அந்த

    செல்வத்துக்கே ஒரு நோயாவான்..

     

    அதால

    சேக்கணும் சேக்கணும்

    செல்வம் சேக்கணும்,

    சேத்த செல்வத்த

    செலவுபண்ணணும்

    நல்ல மொறயில…!

     

    -செண்பக ஜெகதீசன்…

     

     

     

     

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் 112

    நிர்மலா ராகவன்

     

    பொறுப்பே கிடையாது

    இரண்டே வயதான குழந்தை வாசலிலிருந்த மண்ணைத் தன் தலையில் வாரிப் போட்டுக்கொண்டாள்.

    “அம்மா திட்டமாட்டா?” என்று தன்னைவிடச் சற்றே பெரியவளாக இருந்த அக்காளிடம் முன்னெச்சரிக்கையாகக் கேட்டுக்கொண்டாள்.

    “திட்டினா, திட்டட்டுமே!” என்று தைரியம் வழங்கப்பட்டது.

    உள்ளே ஏதோ வேலையாக இருந்த தாய் ஓடோடி வந்தாள். அதற்குள் காரியம் கெட்டுவிட்டது.

    “இவதான் சொல்லிக் குடுத்தா!” என்று அக்காளின் பக்கம் கையை நீட்டினாள் குழந்தை. தான் செய்யப்போகும் காரியம் தப்பு என்று தெரிந்தே செய்துவிட்டு, பழியை இன்னொருவர்மேல் சுமத்தினால், தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று சிறுபிராயத்திலிருந்தே தெரிந்துவிடுகிறது.

    விவரமறியாத அந்தச் சிறு குழந்தையை அடிக்கவோ, திட்டவோ பெற்றவளுக்கு மனம் வரவில்லை. பெரியவளைக் கண்டித்தாள்.

    “நான் ஒண்ணுமே பண்ணலே!” என்று அவளும் வாதாடினாள், இடுப்பை ஆட்டி ஆட்டிக்கொண்டு, மனோரமா ஸ்டைலில். “என்னைப்போய் திட்டறியே!”

    சகோதரிகள் ஒற்றுமையாக இருந்து, எனக்கு எதிராகச் செயல்பட்டதை இப்போது நினைவுகூர்ந்தால் சிரிக்கிறார்கள்.

    இன்னொரு முறையும் அப்படி ஏதோ `செய்யக்கூடாத’ விஷமம் செய்த சிறியவளைக் கண்டித்தபோது, அதே சாக்குதான். அக்காளின் பக்கம் கையை நீட்டினாள்.

    “அவ சொல்லிக்குடுத்தா, நீ ஏன் கத்துக்கறே?” என்று, சிரிப்பை அடக்கியபடி நான் கேட்டதற்குப் பதில் இல்லை. விழித்தாள்.

    நான்கு வயதில் அச்சிறுமியிடம் கொஞ்சம் காசைக் கொடுத்து, “எதிர்க்கடையில் பிஸ்கோத்து வாங்குக்கோ. சாக்லேட் கூடாது. பல் கெட்டுப்போயிடும்,” என்று சொல்லி அனுப்பினேன்.

    சிறிது நேரத்தில் கையில் சாக்லேட்டுடன் வந்தாள், முகத்தைக் கோணிக்கொண்டு. “நான் பிஸ்கேட்தான் .கேட்டேன். அவன் என்னமோ சாக்லேட் குடுத்துட்டான்,” என்ற சாக்கு வேறு!

    (பொய் சொல்வது தவறு என்று அவளுக்குத் தெரியும். அதனால்தான் முகம் மாறியிருந்தது).

    “பொய் சொல்லாதேடி, கழுதை!” என்று திட்டினேன்.

    அந்த வயதில் கண்டிக்காது விட்டுவிட்டால், அதே நடத்தை பிற்காலத்திலும் தொடரும்.

    ஆசிரியரிடம், `என் வீட்டுப்பாடத்தை எங்கள் வீட்டு நாய் கடித்துவிட்டது!’ `அலாரம் அடிக்கவில்லை. அதனால் நெடுநேரம் தூங்கிவிட்டேன்,’ என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்வது இதனால்தான்.

    அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சாதித்தால் தண்டனை அவ்வளவு கடுமையாக இருக்காது என்று பலரும் நம்புகிறார்கள். நண்பர்களுடன் கும்மாளமடித்துவிட்டு, `நேத்திக்கு ஆபீசில ஒரே வேலை! அந்த மானேஜர் மீட்டிங் வேற வெச்சுட்டான்!’ என்று மனைவியை (அடிக்கடி) நம்பவைக்கும் கணவன்மார்களும் இதில் சேர்த்தி.

    தம்பதிகளும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க ஒருவரையொருவரைப் பயன்படுத்திக்கொள்வதுண்டு.

    “அப்பா ஆபீசிலிருந்து வரட்டும். ஒனக்கு இருக்கு!” என்று குழந்தையை மிரட்டுவாள் தாய்.

    மகனின் நடத்தையில் திருப்தி இல்லாத தந்தையோ, “நீ ஒன் மகனை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பார்!” என்றுவிடுவார், தனக்கு அவன் விஷயத்தில் சம்பந்தமே இல்லாததுபோல்!

    அரசியல்வாதிகளும் பொறுப்பும்

    பதவிக்கு, அதனால் கிடைக்கும் அதிகாரத்திற்கு, பலரும் ஆசைப்படுகிறார்கள். என்னென்னவோ முயற்சிகள் எடுத்துக்கொள்கிறார்கள்.

    தேர்தலில் தங்கள் கட்சி தோற்றபின், அதற்குமுன் எதிர்க்கட்சியாக இருந்த ஆளுங்கட்சி இவர்கள் செய்த அட்டூழியத்தைத் தட்டிக்கேட்கும்போது, `எனக்கு மேலே இருந்தவர்களின் ஆணைப்படிதான் நடந்துகொண்டேன்!’ என்று அரசியல்வாதிகள் சாதிப்பார்கள்.

    நடப்பது சட்ட விரோதம் என்று புரிந்தும், அதை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தவர்களும் இதையே சொல்லி, தம்மேல் எந்தக் குற்றமும் கிடையாது என்பார்கள்.

    `நான் செய்தது தவறு,’ என்று ஒத்துக்கொள்ள எத்தனை பேருக்குத் தைரியம் இருக்கிறது? தாம் செய்த செயலுக்குப் பிறர்மேல் பழியைச் சுமத்துகிறவர்கள் இவர்கள். `பொறுப்பு’ என்ற வார்த்தையின் அர்த்தமே புரியாதவர்கள்.

    அண்மையில் மலேசியாவில் தேர்தல் நடந்து முடிந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 1957-ல் சுதந்திரம் அடைந்திருந்திருந்த நாடு இது.

    `அரசியல்வாதிகள் ஏதோ செய்துவிட்டுப் போகட்டும். நமக்குத்தான் வசதிகள் தாராளமாக இருக்கிறதே!’ என்று ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குமேலும் விட்டேற்றியாக இருந்தனர் குடிமக்கள். விலைவாசி கண்டபடி எகிறியபோதுதான் விழித்துக்கொண்டார்கள். தம் பொறுப்பு என்னவென்று அவர்களுக்குப் பிடிபட்டது.

    ஆளுங்கட்சியில் லஞ்சம், இன்னும் என்னென்னவோ ஊழல் என்று இணையத்தில் விரிவாக வந்தது. ஆளுங்கட்சியினரின் அளப்பரிய சொத்து (உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்), பங்களா எல்லாம் நம் பணம் என்று எல்லாரும் கொதித்தெழ, அக்கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அது மலாய், சீனர், இந்தியர் ஆகிய மூவினத்தோரையும் இணைத்த கட்சி. இப்போது அனேகமாக அனைவரும் இணைந்து அதை எதிர்த்தார்கள்.

    பிரதம மந்திரியின் மனைவி ஐந்நூறு கைப்பைகள் வைத்திருந்தாள்; ஒவ்வொன்றின் விலையும் பல லட்சம் (தங்கம், வைரம் பதித்தது), அவைகளுக்குள் பல கோடி உள்நாட்டு, அயல்நாட்டு நாணயம் இருந்தன என்றெல்லாம் தினசரிகள் அம்பலப்படுத்தியபோது, `நல்லவேளை, நாம் இப்போதாவது விழித்துக்கொண்டோமே!’ என்ற நிறைவு மக்களுக்கு எழுந்தது.

    `புதிய மலேசியா’ என்று இப்போது வர்ணிக்கப்படும் நாடு ஒரு தேர்தலால் மாறியது விந்தையல்ல. இதுவரை ஓட்டிச்சாவடி பக்கமே போகாதவர்கள்கூட தம் பொறுப்பை உணர்ந்து நடந்துகொண்டதன் நல்விளைவு இது.

    நாட்டுத் தலைவர்கள் மட்டுமின்றி, வீட்டுத் தலைவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அவசியம் தேவை.

    `பெரியவர்கள் சொல்வதை அப்படியே இம்மிபிசகாமல் கடைப்பிடிக்கவேண்டும்!’ என்பதுபோல் நடக்கும் பெற்றோர்கள் பிள்ளைகளின் சுய சிந்தனையைப் பறிக்கிறார்கள்.

    `நாம்தான் வாழ்க்கையில் பல தவறுகள் செய்துவிட்டோம். நம் குழந்தைகளும் அப்படி நடக்காது பாதுகாக்கிறோம்!’ என்று அவர்கள் எண்ணமிடலாம். ஆனால், இம்மாதிரி வளர்க்கப்பட்டவர்கள் சிறிது சுதந்திரம் கிடைத்தாலும் தம் மனம்போனபடி நடப்பார்கள். தம் செயல்களுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.

    கதை

    பல தீய பழக்கங்கள் கொண்ட ஒரு பெரியவர் என்னிடம் சிரித்தபடி கூறினார், “எங்கம்மா செல்லம் குடுத்து என்னைக் கெடுத்துட்டா! எட்டு வயசுவரைக்கும் என்னை இடுப்பிலே தூக்கி வெச்சுப்போ! அப்பா என்னைத் திட்டவே விடலே!’

    பிற்காலத்தில் அவரது குடும்பம் நிர்க்கதியாகப் போயிற்று. அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. குற்ற உணர்ச்சியும் கிடையாது. ஏனெனில் தன் சுகமே பெரிது என்று நினைக்கும்படி வளர்க்கப்பட்டிருந்தார். அவர் பெற்ற தண்டனை: அவர் மரணத்தைத் தழுவியபோது, உண்மையாகத் துக்கப்பட்டவர்கள் எவருமில்லை.

    தான் செய்தது தவறாக இருந்தாலும், அதற்குப் பொறுப்பேற்க ஒரு தலைவன் தயாராக இருக்கவேண்டும். அப்போதுதான் நினைத்ததைச் சாதிக்க இயலும். பிறரும் அவனை நம்புவர்.

    உன் வெற்றி-தோல்விக்கு நீயே பொறுப்பு

    `தோல்வி என்றால் அவமானம்!’ என்று பயந்து, எதுவுமே செய்யாதிருப்பதைவிட தவறு செய்து அதிலிருந்து கற்பது மேல்.

    வெற்றியை நோக்கி நடக்கும்பொது, அவர்களை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்த பிறரை எதிர்பாராது, தம் செயலுக்குத் தாமே பொறுப்பேற்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். அப்படியே தவறு நேர்ந்தாலும், அதை ஒப்புக்கொள்ளும் தைரியமும் பொறுப்புணர்ச்சியும் ஏற்படும்.

    கடுமையாக உழைத்தாலும், தான்தோன்றித்தனமாக நடப்பது சராசரி மனிதனின் குணம். ஆடம்பரமாக நடந்து, பார்ப்பவரை பிரமிக்க வைக்கவேண்டும் என்று நினைப்பவருக்கு மகிழ்ச்சி நிலைக்காது.

    கதை

    ஒரு தனியார் நிறுவனத்தின் மேலதிகாரியாக இருந்த நடராஜன், `இதுவரை ஏழ்மையில் உழன்றது போதும்,’ என்று நினைத்தவர்போல், ஆடம்பரச் செலவுகள் செய்தார். மனைவியுடன் அடிக்கடி சொந்தக் காரில் சுற்றுலா செல்வது அவருக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. `மாதம் பிறந்தால், சம்பளம் வந்துவிட்டுப்போகிறது!’ என்று மெத்தனமாக இருந்ததில், சேமிப்பு அறவே கிடையாது.

    நாற்பது வயதுக்குள் அவர் மரணம் எய்த, குடும்பம் நிர்க்கதியாக ஆனது. மனைவிக்கோ அதிகக் கல்வி கிடையாது. மூன்று குழந்தைகளும் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. எதிர்பாராத தாக்கத்தால் எல்லாருக்குமே மன உளைச்சல் ஏற்பட்டது. உளவியல் சிகிச்சையும் தேவைப்பட்டது.

    `குடும்பத் தலைவர்’ என்ற பொறுப்புடன் நடராஜன் நடந்துகொண்டிருந்து, `நாளை நடப்பதை யாரறிவார்!’ என்று சிறிதாவது சேமித்திருந்தால், அவருக்குப்பின் அவரது குடும்பம் திண்டாடி இருக்குமா?

    “வாழ்க்கைக்கு அன்பும் உழைப்பும் மட்டும் போதாது. பொறுப்பும் அவசியம் இருக்கவேண்டும்”. (உளவியல் நிபுணர் ஃபிராய்ட் (FREUD))

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 25

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களை எப்படி சமாளிப்பது?

    மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் நாம் மாற்றங்களைச் சந்திக்க நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அது எப்படி முடியும்?

    1. மாற்றங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
    2. மாற்றங்களை எதிர் கொள்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
    3. மாற்றங்களின் வேகத்திற்கு நம்மை அடிமையாக்கிக் கொள்ளாமல் அவைகளை இடம் மற்றும் காலங்களுக்குத் தகுந்தவாறு ஏற்றுக்கொள்ள அறிந்துகொள்ள வேண்டும்.
    4. மாற்றங்கள் நமக்குத் தேவைதானா என்பதை அறிந்து அதை ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றார்களே என்பதற்காக கண்மூடித்தனமாக அவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
    5. மாற்றங்கள் நம்முடைய சமுதாயப் பண்புகள், கலாச்சாரங்கள், மனித நேயம், வாழ்க்கை வளமை மற்றும் நேர்மை, பேராண்மை இவற்றுக்கு அதிக அளவில் தாக்கங்கள் ஏற்படுத்தாதவாறு அவற்றை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

    மாற்றங்களைக் கண்மூடித்தனமாக நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுதும், அவைகள் நமக்குத் தேவையற்ற நிலையிலும் அவைகளைத் தவறாக நாம் பயன்படுத்தும் பொழுதும் துயரங்களையும் விரும்பாத தகாத சூழ்நிலைகளையும் அமைதியின்மையையும் நாம் சந்திக்க வேண்டி இருக்கும். உதாரணமாக, தற்போதைய தொழில் மற்றும் கணினி சார் வளர்ச்சியின் தாக்கங்கள் நம்முடைய வாழ்க்கைப் போக்குகளையும் வாழ்க்கை பற்றிய காலந்தொட்டு வளர்ந்துவந்த கோட்பாடுகளையும் அடியோடு சாய்த்து விட்டன. இதனால் தற்போதைய சமூகத்தில் பலர் தேவையற்ற துனபங்களுக்குத் தம்மை அடிமைகளாக்கிக் கொண்டு வருகின்றனர்.

    காலந்தொட்டு நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒரு அறிவுரை.” சிறுகக் கட்டிப் பெருக வாழ்.”  நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டும் வைத்துக்கொண்டு அமைதியுடன் வாழ்தலே உடலுக்கும் மனதிற்கும் நல்லது., இருக்கிறது என்பதற்காக அளவின்றி உணவை உண்ணும் பொழுது அது நமக்கு பல நோய்களுக்கு வித்தாக அமைகின்றது. அதேபோல் நம்முடைய தேவைகளை அதிகரித்துக்கொள்ளும் பொழுது அதனைச் சார்ந்த பலவித மகிழ்வுகளோடு துயரங்களும் நமக்குக் கிடைக்கின்றன.

    ஒரு காலத்தில் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குவது இழுக்காகக் கருதப்பட்டது. “கடன் வாங்கினார் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற வார்த்தைகளை முன்னுதாரணமாகக் காட்டி அதன் உணர்வுபூர்வ தாக்கங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஒருவனின் வளர்ச்சிக்கும் சில முக்கிய தேவைகளுக்கும் கடன் கொடுப்பதும் கடன் வாங்கிச் செலவு செய்வது பொறுப்பான செயல்களாகக் கருதப்பட்டன. குழந்தைகளின் படிப்பு, மகளின் திருமணம், குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகள் போன்ற பலவற்றிற்காக கடன் பெறுதலும் அவைகளை அடைத்தாலும் ஒரு பொறுப்புள்ள மனிதனுக்கு அடையாளமாகக் காட்டப்பட்டன. காலப்போக்கில் கடன் வாங்குவதைச் சார்ந்த பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பதற்காக வங்கிகள் மூலமாக பலருக்கும் இலவசத் தவணைமுறைகளில் கடன்கள் வழங்கப்பட்டன. காலப்போக்கில் கடன் வாங்குதலும், தேவையற்ற நிகழ்வுகளுக்கு கடன்களை அதிகரித்துக்கொள்ளுவதும், அவைகளைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதும் வழக்கமாகி விட்டன. மேலும் ஒரு கடனைத் திருப்பித்தர முடியாமல் அதற்காக இன்னொரு கடன் வாங்கி அதை சமாளிப்பதும் வழக்கத்தில் உள்ளன. இதற்காக மக்களின் மனங்களில் மாயைகளை ஏற்படுத்தும் பலவிதமான காணொளிக்  காட்சிகள் ஏராளமாக நடைமுறையில் உள்ளன. “எனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது ” என்று சொல்லி பெருமைப்படும் பலரையும் பார்த்திருக்கின்றோம்.

    தன் கையில் சல்லிக்காசு இல்லாமல் வாங்கிக்கடன்கள் மூலமாக தொழிலதிபர்களாகி அந்தக் கடன்களைக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. தங்களுடைய பணத்திற்கான வட்டி சீக்கிரத்தில் குட்டி போடவேண்டுமென்று தங்கள் சேமிப்புக்களைத் தகாதவர்கள் கைகளில் கொடுத்து தங்கள் வாழ்வின் சேமிப்புக்களை இழந்தவர்களைக் கண்கூடாக நாம் காண்கின்றோம்.

    இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

    நாம் நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகளையும் அடிப்படைகளையும் மறந்து மற்றவர்களுடைய வாழ்க்கை முறைகளை பின்பற்றத் துடித்துக்கொண்டிருப்பதே !’

    நாம் மற்றவர்களுக்காக நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுவது மட்டுமின்றி இல்லாத ஒரு மாயைக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றோம். நமக்கும் வளர்ச்சி தேவைதான். ஆனால் அது ஆரோக்கியமான அமைதியைக் கெடுக்காத வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

    சமீபத்தில் நான் கண்ட இரண்டு நிகழ்வுகள். ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணி தன்னிடம் வைத்திருந்த எட்டு வங்கிகளின் கடன் அட்டைகள் (Credit Cards) மூலமாக அதிக அளவில் செலவு செய்து விட்டு அந்த எட்டு வங்கிகளிடமும் பணம் செலுத்த முடியாமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தார். உண்மையில் அவருக்கு வாழ்க்கைச் சுமைகள் அதிகம் இல்லாமலும் இருப்பதற்கு அழகான ஒரு வீடு இருந்தாலும் தேவைற்ற பல பொருள்களைத் தன்னுடைய வளத்திற்கு மேல்பூச்சுப் பூசுவதற்க்காக வாங்கி வைத்ததே காரணம். பல நண்பர்கள் தங்களுக்குத் தேவையில்லாத பொருட்களையும் சமுதாயத்திலும் நண்பர்களிடமும் உறவுகளிடமும் தங்களுடைய போலி வளமையைக் காட்டிக்கொள்வதற்காக கடன் முறையில் வாங்கி அவதிப்படுவதைப் பார்த்தேன் ;பலபேர் இந்தமாதிரி போலி வாழ்க்கைக்குத் தங்களை அடிமையாக்கி கொள்கின்றார்கள்.   இது ஒரு சிந்திக்க வேண்டிய கருத்து.

    இதே போன்று ஒரு இளம் தம்பதியர் தங்களுக்காக ஒரு பன்மாடிக் கட்டிடத்தில் தவணை முறையில் வீடு வாங்கி அமைதியாக வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களிடையே மனக்குமுறல்களும்   அமைதியின்மையும் வந்தன. காரணம்? வங்கிக் கடன் மூலமாக இரண்டாவது வீடு ஒன்று வாங்கி இரண்டு வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய தவணைகளைச் சரியான முறையில் கொடுக்க முடியாமல் துன்புற்றதே. அது மட்டுமின்றி, அந்த நேரத்தில் அந்த நண்பரின் அலுவலகத்தில் ஆட்குறைப்பு ஏற்பட துயரத்தின் எல்லைகள் வளர்ந்தன. பலரும் தங்களுக்கு தேவைகள் நிறைவேறிவிட்டாலும் ஆசைகளுக்கு இடம் கொடுத்து துயரங்களைச் சமாளிக்கும் நிலைகளைக் காண்கிறோம்.

    எல்லோருக்கும் கடன் அட்டை நிச்சயம் தேவை. மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் இது ஒரு ஆரோக்கியமான சிந்தனையே. ஆனால் அதை நாம் எவ்வாறு எதற்கு எப்போது பயன் படுத்த வேண்டும்?

    மாற்றங்கள் மகிழ்வுக்குத் தென்றலாக வேண்டும். அவைகளே வாழ்க்கையின் அமைதியைக் கெடுக்கும் புயலாக மாறிவிடக்கூடாது.

    கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப் படும் மாற்றங்களும் தேவையின்றி நாம் ஏற்றுக்கொள்ளும் மாற்றங்களும் நமக்குத் தேவைதானா என்பதை சற்றே சிந்திக்க வேண்டும்.

    புதுமையான வாழ்வை ஏற்றுக்கொள்ளும் பொழுது நாம் அமைதியை இழந்துவிடக்கூடாது. சரிதானே ?

    வாழ்க்கையை இன்னும் சற்று தெளிவோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்..

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180616 -Balanarasimha and Prahlada lr

    வாமனனாய் வந்தார், வடிவில் சிறுத்(து)அரி,
    பூமன(பிரகலாத ஸ்வாமி) பக்திக்(குட்)உட் பட்டதால்: -கோமண
    சோணை ரமணமுனி சொன்னது பக்திமனத்
    தூணில் ஒளியும் துரும்பு(அங்குஷ்டாப்யாம்)….!

    ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
    சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
    திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
    களைத்தல் கதையின் கருத்து….!

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்(து)அப்போ -உச்சி
    குளிர்ந்தவன் மேனியைக் கட்டிடும், சிங்கம்
    மெலிந்துகர் ஜிக்க மியாவ்….கிரேசி மோகன்….!

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 6

    -மேகலா இராமமூர்த்தி 

    மனித யாக்கையும் செல்வமும் நிலையில்லா இயல்புடையவை என்பதை நாலடியார் பாடல்கள் பலவும் திரும்பத் திரும்ப நினைவுறுத்தி மனிதர்களை மனப்பக்குவமும் புலனடக்கமும் கொண்டவர்களாய் வாழ வலியுறுத்துகின்றன.

    வாழ்க்கை நிலையில்லாத் தன்மையுடையதே எனினும், உயிரோடு வாழும்வரை மனிதர்கள் செல்வத்தைத் தேடித் தொகுக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றார்கள். அப்போதுதான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பமுடியும். எனினும், வாணாள் முடியும்வரை பொருளைத் துரத்திக்கொண்டே இருப்பதில் பொருளுண்டோ? 

    முன்னரே சாநாள் முனிதக்க மூப்புள
    பின்னரும் பீடழிக்கும் நோயுள – கொன்னே
    பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங்
    கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. 
    ( நாலடி 92 )

    மனிதர்கள் தம்மை வரவேற்கக் காத்திருக்கும் கிழப்பருவத்தையோ மரணத்தையோ தள்ளிப்போட முடியாது. அதுபோதாதென்று, உடல்நலத்தைக் குலைக்கும் பிணிகளுக்கும் வாழ்வில் பஞ்சமில்லை. இத்துணைத் துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வாழ்வில் அணிவகுத்து நிற்பதால், செல்வம் உள்ள ஒருவன், மேலும் செல்வத்தைத் தேடி அலைவதிலோ, இருக்கும் செல்வத்தைத் தனக்குமட்டுமே பயன்படவேண்டும் என்று ஒளித்து வைப்பதிலோ, வாழ்வைக் கொன்னே கழியாது, பகுத்துண்ண வேண்டும் என்பது நாலடியார் வழங்கும் அறிவுரை.

    ஈதல், இசைபட வாழ்தலே உயிர்களுக்கு உண்மையான ஊதியமாகும்.

    ஈகை, வாழ்வில் அனைவரும் கைக்கொள்ளவேண்டிய நல்லறம் என்பதில் ஐயமில்லை. எனினும், நாம் யார்க்குக் கொடுக்கிறோம் எதற்குக் கொடுக்கிறோம் என்பதன் அடிப்படையும் ஆராயவேண்டிய ஒன்றாகும். ”இன்று இவருக்கு நான் நூறு ரூபாய் ஈந்தால் நாளை இவரிடமிருந்து இருநூறு ரூபாய் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று மனக்கணக்குப் போட்டுச் செய்யும் உதவியெல்லாம் அறமென்றோ ஈகையென்றோ கொள்ளத்தக்கவை அல்ல. அவை பயனை எதிர்பார்த்துச் செய்யும் வணிகம் போன்றவையே.

    இதனைப் பின்வரும் நாலடியார் பாடல் சிறப்பாக விளக்குகின்றது. 

    ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா
    தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் – ஆற்றின்
    மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
    பொலிகடன் என்னும் பெயர்த்து
    .  (நாலடி – 98)

    வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த கரையை உடையவனே, ஒருவர்க்கு ஒன்று உதவுவதானால், இரந்த கையை மாற்றாமல் (மறுக்காமல்) இயன்றது எதையேனும் வேறுபாடின்றி, கைம்மாறு செய்ய இயலாத வறிஞர்க்கு உதவுவதே ஓர் ஆண்மகனின் கடமையாகும். எதிருதவி செய்வார்க்கு ஒன்று உதவுதல் ’விளக்கமான கடன்’ என்னும் பெயருடையது; அஃது ஈகையில் சேராது!

    இதே கருத்தையே வள்ளுவரும்,

    வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து”
    என்றார்.  (ஈகை – 221)

    புறநானூற்றுப் பாடலொன்றும் இதே கருத்தை ஒரு மன்னனின் செயலோடு தொடர்புபடுத்திச் சுவைப்படச் செப்புகின்றது.

    ”இம்மையில் ஒருவருக்கு உதவுவது இம்மைப் புகழுக்கும், மறுமையில் கிட்டும் துறக்கவின்பம் கருதியுமே என்பது உலகத்தார் பலரின் எண்ணம். ஆனால் எம் மன்னனாகிய ஆய் அண்டிரனோ இம்மைச் செய்தது மறுமைக்காகும் என்றெண்ணி அறத்துக்கு விலைகூறும் வணிகன் அல்லன். இல்லாதோர்க்குக் கொடுத்துதவ வேண்டியது இருப்போரின் கடன் எனும் சான்றோர் நெறிபற்றி அமைந்ததே அவன் கொடைப்பண்பு” என்று ஆய் அண்டிரனைப் பாராட்டுகின்றார் ஏணிச்சேரி முடமோசியார்.

    இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
    அறவிலை வணிக னாயலன் பிறரும்
    சான்றோர் சென்ற நெறியென
    ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே.
      (புறம் – 134)
     

    கையிலுள்ள பொருளைப் பிறர்க்கு ஈந்துவிட்டால் நாளை நம் நிலைமை என்னவாகும்? என்று அஞ்சும் குணம்படைத்த பணம்படைத்தோரையும் குவலயத்தில் குறைவின்றிக் காணலாம். அவர்கட்கும் ஏற்றதொரு பதிலைச் எடுத்துரைக்கின்றது நாலடியார்.

    நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்
    கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
    இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
    விடுக்கும் வினையுலந்தக் கால். 
    (நாலடி – 93)
     

    பிறருக்குப் கொடுத்துத் தான் துய்ப்பினும், பொருள்சேரும் காலமென்றால் சேரும்; அதுவே நல்வினைப்பயன் முடிந்துபோய்விட்டதென்றால், சேர்த்த செல்வத்தை எவ்வளவுதான் நாம் இறுக்கிப்பிடித்தாலும் அது நில்லாது போய்விடும். இவ்வுண்மையை அறியாதோரே வறுமை வந்துவிடுமோ என்று நடுக்குற்றுத் தம்மைச் சேர்ந்தோரின் வாட்டத்தைப் போக்காது தம் செல்வத்தைப் பூட்டிவைப்பர். 

    ”பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம.
    ” (ஊழ் – 376) என்று நம் உளங்கொளும் வகையில் வள்ளுவமும் இதே கருத்தை விளம்பியிருப்பதை ஈண்டு நாம் எண்ணிப் பார்க்கலாம்.

    மனிதர்கள் வாழ்வில் நற்பலன்கள் பெறுவதற்கும் கெடுபலன்கள் அடைவதற்கும் அவர்தம் முன்வினைப்பயனே காரணம் என்கின்றனர் நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள்.

    பண்டை வினைகள் தக்க காலத்தில் தம் பலனைத் தராமல் போவதில்லை என்பதை அறிந்துகொள்ளச் சிலப்பதிகாரத்தினும் சிறந்த சான்றில்லை. ”ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்பதைக் காப்பிய உண்மைகளில் ஒன்றாகவே படைத்தளித்தவர் அல்லரோ அடிகள்!

    பல பசுக்களின் இடையில் விடப்பட்டாலும் இளைய ஆன்கன்றானது தன் தாயினைத் தேடித் தெரிந்தடைதலைப்போலத் தொன்று தொட்டுவரும் பழவினைகளும் தன்னைச் செய்த உரிமையாளனைத் தப்பாமல் தேடி அடையும் தன்மையுடையவை என்கிறது நாலடியார்.

    பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
    வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
    பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
    கிழவனை நாடிக் கொளற்கு. 
    (நாலடி – 101)
     

    உலக வாழ்க்கையில் நாம் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள் பலவுண்டு. அவற்றில் ஒன்று…”நல்லறிஞர்களெல்லாம் விரைவில் வீழ்வதும் (மாள்வதும்), பயனற்ற வீணர்கள் புவியில் நெடுநாள் வாழ்வதும் ஏன்?” என்பது. அதற்குத் தக்கதோர் விடையிறுத்து நம்மைத் தெருட்டுகின்றது நாலடியார்.

    பலவகைப்பட்ட பரந்த நூற்கேள்விகளின் பயனை அறிந்தொழுகுங் கற்றோர் உலகில் விரைவில் இறக்கவும், கல்லாதார் நீடுவாழ்வது எங்ஙனமென்று கருதுவீராயின், அதற்குக் காரணம் அறிவென்னும் அப்பிழிவு வீணர்களிடம் இன்மையால் அவர்களை வெறுங்கோது (சக்கை) என்று கருதிக் கழித்துவிடுகின்றான் கூற்றுவன்.

    பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
    கல்லாதார் வாழ்வ தறிதிரேல் – கல்லாதார்
    சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
    கோதென்று கொள்ளாதாம் கூற்று. 
    (நாலடி – 106)
     

    கற்றார் அறிவுச்சாறு பெற்றுக் கனிந்துவிட்டவராதலின் பிறவிப்பயனை அவர்கள் அடைந்துவிட்டமை கருதி அதனினும் மேனிலையுறும் பொருட்டு அவர்தம் ஊனுடல் விரைவில் கழற்றப்பட்டதெனவும், கல்லாதார் இன்னும் அத்தகுதி பெறாமையால் இவ்விடமே கழித்து விடப்பட்டனரெனவுந் தெரிவித்து, அதன்வாயிலாக, விரைவில் நல்வினை செய்து நன்னிலையுறுகவென அறிவுறுத்துகின்றது இச்செய்யுள்.

    ”…இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
    உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
    செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
    மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்.” 
    ( சிலம்பு – வரந்தரு காதை: 199-202)  
    என்ற வரந்தரு காதை அடிகள் மூலம் இளங்கோ அடிகள் நமக்கு வலியுறுத்துவதும் இதைத்தானே?

    [தொடரும்]

     

     

     

    Share
  • முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…

    —————————————————————————————————————————–

    ஈரோடு மாவட்டப் பள்ளி ஆசிரியர்கள் – மாணவர்கள் புத்தகத்திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…

    —————————————————————————————————————————–

    ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் , பயிலும் மாணவர்களும் , ஈரோடு புத்தகத் திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலரிடத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை வேண்டுகோள் வைத்தது.

    புத்தகத் திருவிழா நடைபெறுவதையொட்டி பள்ளிகளில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டங்கள் மற்றும் வகுப்பறைகளில் பாடப் புத்தகங்களுடன் பொதுப் புத்தகங்களையும் வாசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்றும் , பள்ளி மாணவர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் நல்ல புத்தகங்களை வாங்கி அவரவர் இல்லங்களில் சிறு நூலகங்கள் அமைக்க ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்றும் பேரவையின் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இதற்கான வேண்டுகோள் கடிதத்தை பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். பாலமுரளி அவர்களிடம் வழங்கினார்.

    பேரவையின் பணிக்குழு உறுப்பினர்களாக விளங்கும் முன்னாள் தலைமையாசிரியர்கள் கவுந்தப்பாடி எஸ். சண்முகம் , தளவாய்பேட்டை   பி.ஆர். செல்வராஜ் , சிவகிரி சி.ஆறுமுகம் , ஈரோடு டி. கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Share
  • டி.கே.வி.தேசிகாச்சாரியார்

    த்யாகச் செம்மலே ,தேசிகாச்சார் தெய்வமே,
    யோகப் பிதா(க்ருஷ்ணமாச்சார்)அன்று யோஜித்த -சாகஸத்தை,
    லோகஷேம லவ்(LOVE)சிவமே,(அன்பே சிவம்) லீலா தரங்கரே,
    சாகா வரம்பெற்ற சாது(மகான் -பிதாமகர் அல்ல பிதாமகான்)

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

     

    180614 – Yogacharya Krishnamacharya – bw A4 – graphite

    ”பதஞ்சலி பின்வந்த பிதாமகரே, ஆன்ம
    பதஅஞ்சலி ஏற்றிடுவீர், பாதம் -பதிந்தோம்உம்
    ஆஸிபல கூறிடும் ,ஆச்சார்ய க்ருஷ்ணமாச்சார்
    தேசிகரே யோகத் தெளிவு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180611 New Forever – 26×36 cms (10×14”) Arches -cold pressed – lr

    ஆண்டவா, பழுப்புவண்ணம் பூண்டவா, நீள்விசும்பில்
    நீண்டவா, பாரதப் பாண்டவராய் -வேண்டவா?,
    தூண்டவா பக்தியால் ?, தீண்டவா பாரதியாய் ?
    கீண்டவா தீங்கைக் கிழித்து….கிரேசி மோகன்….!

    நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
    போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
    இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
    இடப்பயல் தாளே இருப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180525 Gopala nandan -gov pattabhishekam A4 lr

    கிள்ளை(கிளி) மணிமுடிமேல், பிள்ளை மணிவண்ணன்,
    வெள்ளைப் பசுவேந்தும் வாத்ஸல்யம், -கொள்ளை
    அழகுதான் கேசவ், குழந்தையும், கன்றும்
    பழகச் சுரந்திடும் பால்….கிரேசி மோகன்….!

    Share