வாழ்ந்து பார்க்கலாமே 25
க. பாலசுப்பிரமணியன்
மாற்றங்களை எப்படி சமாளிப்பது?
மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் நாம் மாற்றங்களைச் சந்திக்க நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அது எப்படி முடியும்?
- மாற்றங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
- மாற்றங்களை எதிர் கொள்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
- மாற்றங்களின் வேகத்திற்கு நம்மை அடிமையாக்கிக் கொள்ளாமல் அவைகளை இடம் மற்றும் காலங்களுக்குத் தகுந்தவாறு ஏற்றுக்கொள்ள அறிந்துகொள்ள வேண்டும்.
- மாற்றங்கள் நமக்குத் தேவைதானா என்பதை அறிந்து அதை ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றார்களே என்பதற்காக கண்மூடித்தனமாக அவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
- மாற்றங்கள் நம்முடைய சமுதாயப் பண்புகள், கலாச்சாரங்கள், மனித நேயம், வாழ்க்கை வளமை மற்றும் நேர்மை, பேராண்மை இவற்றுக்கு அதிக அளவில் தாக்கங்கள் ஏற்படுத்தாதவாறு அவற்றை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.
மாற்றங்களைக் கண்மூடித்தனமாக நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுதும், அவைகள் நமக்குத் தேவையற்ற நிலையிலும் அவைகளைத் தவறாக நாம் பயன்படுத்தும் பொழுதும் துயரங்களையும் விரும்பாத தகாத சூழ்நிலைகளையும் அமைதியின்மையையும் நாம் சந்திக்க வேண்டி இருக்கும். உதாரணமாக, தற்போதைய தொழில் மற்றும் கணினி சார் வளர்ச்சியின் தாக்கங்கள் நம்முடைய வாழ்க்கைப் போக்குகளையும் வாழ்க்கை பற்றிய காலந்தொட்டு வளர்ந்துவந்த கோட்பாடுகளையும் அடியோடு சாய்த்து விட்டன. இதனால் தற்போதைய சமூகத்தில் பலர் தேவையற்ற துனபங்களுக்குத் தம்மை அடிமைகளாக்கிக் கொண்டு வருகின்றனர்.
காலந்தொட்டு நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒரு அறிவுரை.” சிறுகக் கட்டிப் பெருக வாழ்.” நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டும் வைத்துக்கொண்டு அமைதியுடன் வாழ்தலே உடலுக்கும் மனதிற்கும் நல்லது., இருக்கிறது என்பதற்காக அளவின்றி உணவை உண்ணும் பொழுது அது நமக்கு பல நோய்களுக்கு வித்தாக அமைகின்றது. அதேபோல் நம்முடைய தேவைகளை அதிகரித்துக்கொள்ளும் பொழுது அதனைச் சார்ந்த பலவித மகிழ்வுகளோடு துயரங்களும் நமக்குக் கிடைக்கின்றன.
ஒரு காலத்தில் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குவது இழுக்காகக் கருதப்பட்டது. “கடன் வாங்கினார் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற வார்த்தைகளை முன்னுதாரணமாகக் காட்டி அதன் உணர்வுபூர்வ தாக்கங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஒருவனின் வளர்ச்சிக்கும் சில முக்கிய தேவைகளுக்கும் கடன் கொடுப்பதும் கடன் வாங்கிச் செலவு செய்வது பொறுப்பான செயல்களாகக் கருதப்பட்டன. குழந்தைகளின் படிப்பு, மகளின் திருமணம், குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகள் போன்ற பலவற்றிற்காக கடன் பெறுதலும் அவைகளை அடைத்தாலும் ஒரு பொறுப்புள்ள மனிதனுக்கு அடையாளமாகக் காட்டப்பட்டன. காலப்போக்கில் கடன் வாங்குவதைச் சார்ந்த பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பதற்காக வங்கிகள் மூலமாக பலருக்கும் இலவசத் தவணைமுறைகளில் கடன்கள் வழங்கப்பட்டன. காலப்போக்கில் கடன் வாங்குதலும், தேவையற்ற நிகழ்வுகளுக்கு கடன்களை அதிகரித்துக்கொள்ளுவதும், அவைகளைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதும் வழக்கமாகி விட்டன. மேலும் ஒரு கடனைத் திருப்பித்தர முடியாமல் அதற்காக இன்னொரு கடன் வாங்கி அதை சமாளிப்பதும் வழக்கத்தில் உள்ளன. இதற்காக மக்களின் மனங்களில் மாயைகளை ஏற்படுத்தும் பலவிதமான காணொளிக் காட்சிகள் ஏராளமாக நடைமுறையில் உள்ளன. “எனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது ” என்று சொல்லி பெருமைப்படும் பலரையும் பார்த்திருக்கின்றோம்.
தன் கையில் சல்லிக்காசு இல்லாமல் வாங்கிக்கடன்கள் மூலமாக தொழிலதிபர்களாகி அந்தக் கடன்களைக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. தங்களுடைய பணத்திற்கான வட்டி சீக்கிரத்தில் குட்டி போடவேண்டுமென்று தங்கள் சேமிப்புக்களைத் தகாதவர்கள் கைகளில் கொடுத்து தங்கள் வாழ்வின் சேமிப்புக்களை இழந்தவர்களைக் கண்கூடாக நாம் காண்கின்றோம்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?
நாம் நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகளையும் அடிப்படைகளையும் மறந்து மற்றவர்களுடைய வாழ்க்கை முறைகளை பின்பற்றத் துடித்துக்கொண்டிருப்பதே !’
நாம் மற்றவர்களுக்காக நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுவது மட்டுமின்றி இல்லாத ஒரு மாயைக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றோம். நமக்கும் வளர்ச்சி தேவைதான். ஆனால் அது ஆரோக்கியமான அமைதியைக் கெடுக்காத வளர்ச்சியாக இருக்க வேண்டும்.
சமீபத்தில் நான் கண்ட இரண்டு நிகழ்வுகள். ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணி தன்னிடம் வைத்திருந்த எட்டு வங்கிகளின் கடன் அட்டைகள் (Credit Cards) மூலமாக அதிக அளவில் செலவு செய்து விட்டு அந்த எட்டு வங்கிகளிடமும் பணம் செலுத்த முடியாமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தார். உண்மையில் அவருக்கு வாழ்க்கைச் சுமைகள் அதிகம் இல்லாமலும் இருப்பதற்கு அழகான ஒரு வீடு இருந்தாலும் தேவைற்ற பல பொருள்களைத் தன்னுடைய வளத்திற்கு மேல்பூச்சுப் பூசுவதற்க்காக வாங்கி வைத்ததே காரணம். பல நண்பர்கள் தங்களுக்குத் தேவையில்லாத பொருட்களையும் சமுதாயத்திலும் நண்பர்களிடமும் உறவுகளிடமும் தங்களுடைய போலி வளமையைக் காட்டிக்கொள்வதற்காக கடன் முறையில் வாங்கி அவதிப்படுவதைப் பார்த்தேன் ;பலபேர் இந்தமாதிரி போலி வாழ்க்கைக்குத் தங்களை அடிமையாக்கி கொள்கின்றார்கள். இது ஒரு சிந்திக்க வேண்டிய கருத்து.
இதே போன்று ஒரு இளம் தம்பதியர் தங்களுக்காக ஒரு பன்மாடிக் கட்டிடத்தில் தவணை முறையில் வீடு வாங்கி அமைதியாக வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களிடையே மனக்குமுறல்களும் அமைதியின்மையும் வந்தன. காரணம்? வங்கிக் கடன் மூலமாக இரண்டாவது வீடு ஒன்று வாங்கி இரண்டு வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய தவணைகளைச் சரியான முறையில் கொடுக்க முடியாமல் துன்புற்றதே. அது மட்டுமின்றி, அந்த நேரத்தில் அந்த நண்பரின் அலுவலகத்தில் ஆட்குறைப்பு ஏற்பட துயரத்தின் எல்லைகள் வளர்ந்தன. பலரும் தங்களுக்கு தேவைகள் நிறைவேறிவிட்டாலும் ஆசைகளுக்கு இடம் கொடுத்து துயரங்களைச் சமாளிக்கும் நிலைகளைக் காண்கிறோம்.
எல்லோருக்கும் கடன் அட்டை நிச்சயம் தேவை. மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் இது ஒரு ஆரோக்கியமான சிந்தனையே. ஆனால் அதை நாம் எவ்வாறு எதற்கு எப்போது பயன் படுத்த வேண்டும்?
மாற்றங்கள் மகிழ்வுக்குத் தென்றலாக வேண்டும். அவைகளே வாழ்க்கையின் அமைதியைக் கெடுக்கும் புயலாக மாறிவிடக்கூடாது.
கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப் படும் மாற்றங்களும் தேவையின்றி நாம் ஏற்றுக்கொள்ளும் மாற்றங்களும் நமக்குத் தேவைதானா என்பதை சற்றே சிந்திக்க வேண்டும்.
புதுமையான வாழ்வை ஏற்றுக்கொள்ளும் பொழுது நாம் அமைதியை இழந்துவிடக்கூடாது. சரிதானே ?
வாழ்க்கையை இன்னும் சற்று தெளிவோடு வாழ்ந்து பார்க்கலாமே !
தொடரும்..

