Month: October 2018

  • தொல்தமிழர் கொடையும் மடமும்

    முனைவர் ம. தமிழ்வாணன்,முதுநிலை ஆய்வு வல்லுநர்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,தரமணி, சென்னை – 113

    செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும்.

    கொடை விளக்கம்

    கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், புறத்துறை, திருவிழா, வசவு, அடி என்றும் ஈகைக்கு – கொடை, பொன், கற்பகம் என்றும் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி. (பக்.236 ) பொருள் தருகின்றது.

    தமிழ்-தமிழ் அகரமுதலி கொடை என்ற சொல்லிற்கு ஈகம், தியாகம், கொடை, கைக்கொண்ட ஆநிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் (புறத்துறை), ஊர்த்தேவதைக்கு மூன்று நாள் செய்யும் திருவிழா, வசவு, அடி(ப.- 387) என்று பொருள் சுட்டுவதைக் காணலாம்.

    செவ்வியல் காலத்தில் அரசர்கள் நற்கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வருகின்ற புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமையைச் செவ்விலக்கியங்களால் உணர முடிகிறது. பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். பாரி முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர். ஆற்றுப்படை இலக்கியங்கள் மன்னர்களின் கொடைத் தன்மையைக் கூறுவனவாக இருத்தலைக் காண்கிறோம். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமும் மன்னர்களின் கொடைத்தன்மைகளைக் காணலாம். கொடை குறித்து வள்ளுவர்,

    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

    வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 222)

    என்று குறிப்பிடுவது நாம் ஈட்டும் செல்வம் மற்றவருக்கும் கொடுப்பதற்கே என்கிறார். கொடை குறித்து புறநானூற்றுப் பாடல் கூற்று.

    கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று. (புறம். 204:4)

    இதோ வாங்கிக்கொள் என்று நாமே மனமுவந்து கொடுப்பது மிகச் சிறந்தது என்கிறது.

    தமிழ்க் கொடை வள்ளல்கள்

    முதலேழு வள்ளல்கள் : சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்

    இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன், சந்தன்

    கடையேழு வள்ளல்கள்: பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன்.

    கடையேழு வள்ளல்கள்

    பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள சிறுபாணாற்றுப்படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்துள்ளன. இவ் வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் சுட்டுகின்றன.

    கடையேழு வள்ளல்களும் புறநானூற்றுப் பாடல் எண்களும்

    1. அதியமான் நெடுமான் அஞ்சி – 100, 101, 103, 104, 206, 208, 231, 232, 236, 315, 390, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104,
    2. ஆய்வேள் ஆய் அண்டிரன் – 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375,
    3. ஓரிவல்வில் ஓரி – 152, 153, 204,
    4. காரிமலையமான் திருமுடிக்காரி – 121, 122, 123, 124, 125, 126,
    5. நள்ளிகண்டீரக் கோப்பெருநள்ளி – 148, 149, 150,
    6. பாரி – 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 115, 116, 117, 118, 119, 120, 236, 105, 106, 107, 108, 109, 110, 111, 112,
    7. பேகன் – வையாவிக் கோப்பெரும்பேகன் – 141, 142, 143, 144, 145, 146, 147,

    சிறுபாணாற்றுப்படையில் (84 – 114) ஓய்மானாட்டு நல்லியக்கோடனும் வள்ளல் குமணனும் (புறம்.158) மேற்குறிப்பிட்ட கடையேழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்களாக அறியப்படுகின்றனர்.

    பிற வள்ளல்களும் புறப்பாடலும்

    புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர் பெருமக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரசாண்ட பிற வள்ளல்களையும் பாட்டில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு, அம்பர் கிழான் அருவந்தை – 385, அவியன் – 383, ஆதனுங்கன் – 175, 389, எவ்வி – வேள் எவ்வி – 233, 234, எழினி – அதியமான் எழினி – 230 \ எழினி – அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி – 96 \ எழினி – அதியமான் மகன் பொகுட்டெழினி – 392 \ எழினி – அதியான் மகன் பொகுட்டெழினி – 102, எழினியாதன் – வாட்டாற்று எழினியாதன் – 396,  ஓய்மானாட்டு நல்லியக்கோடன் – புறம் 176, & சிறுபாணாற்றுப்படை, ஓய்மான் நல்லியாதன் – 376, ஓய்மான் வில்லியாதன் – 379, கரும்பனூர் கிழான் – 381, 384, காரியாதி – மல்லி கிழான் காரியாதி – 177, குமணன் – 158, 159, 160, 161, 162, 163, 164, 165, கொண்கானங்கிழான் – 154, 155, 156, சாத்தன் – ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – 242, 243, சாத்தன் – சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – 395, தருமபுத்திரன் – 366, திருக்கண்ணன் – மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் – 174, திருக்கிள்ளி – ஏனாதி திருக்கிள்ளி – 167, தொண்டைமான் இளந்திரையன் – பெரும்பாணாற்றுப்படை, தோன்றிக்கோன் – தாமான் தோன்றிக்கோன் – 399, நன்னன் – செங்கண்மாத்து வேள் நன்னன்சேய்நன்னன் – மலைபடுகடாம், நாகன் – நாலை கிழவன் நாகன் – 179, பண்ணன் – சிறுகுடி கிழான் பண்ணன் – 173, 388,  பண்ணன் – வல்லார் கிழான் பண்ணன் – 181, பாரிமகளிர் – 113, 114, பிட்டங்கொற்றன் – 168, 169, 170, 171, 172, பொறையாற்று கிழான் – 391, மாறன் – ஈந்தூர் கிழான் தோயன் மாறன் – 180, மாறன் – தந்துமாறன் – 360, வள்ளுவன் – நாஞ்சில் வள்ளுவன் – 137, 138, 139, 140, 380, விண்ணத்தாயன் – சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன் – 166, வெளிமான் – 238.

    புறநானூற்றிலேயே போலி வள்ளல்களாகத் திகழ்ந்த மன்னர்கள் பற்றியக் குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அவர்களின் பெயர்களும் வருமாறு, இளவெளிமான் – பரிசில் சிறிது – 207, 237, கடியநெடுவேட்டுவன் – பரிசில் நீட்டித்தவன் – 205, குமணன் தம்பி இளங்குமணன் – 165, மூவன் – பரிசில் நீட்டித்தவன் – 209

    இனி தொல்தமிழ் நிலத்துக் கடையேழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி எனும் அந்த ஏழு வள்ளல்களின் சிறப்பினைக் காண்போம்.

    1. வள்ளல் பேகன்

    தொன்மைக்காலத்தில் பழனிமலையைப் பொதினி என்று அழைத்தனர். ஊருக்கு ஆவிநன்குடி என்று பெயர் வழங்கியது. பொதினி என்பதே பிற்காலத்தில் பழனி என்று மாறிவிட்டது. ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் பெயர். அவர்கள் அரசாண்ட இடம் ஆதலால் ஆவிநன்குடி என்று ஊருக்குப் பெயர் வந்தது. ஆவி, வையாவி என்று இரு வகையிலும் ஆவியர் குல மன்னர்களை வழங்குவதுண்டு. ஆதலால் வையாவிபுரி என்றும் அழைத்தனர். அதுவே நாளடைவில் வையாபுரி என்று மாறியது. அந்த ஆவியர் குலத்தில் வந்தவன் பேகன் என்னும் குறுநில மன்னன். பாரியைப்போல அவனும் ஒரு வேள். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று குறிப்பிடுவர். வையாவி ஊரில் உள்ள அரசனாகிய பெரிய பேகன் என்பது இதன் பொருளாகும்.

    வள்ளல் பேகன் ஓர் சிறந்த கொடையாளியாவார். புலவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல். யாழை வாசித்துப் பாடும் பாணர்கள் வருவார்கள். அவன் அரண்மனையில் பல நாள் தங்குவார்கள். அவர்களுடைய இசையின்பத்தை நுகர்ந்து களிப்பான் பேகன். பிறகு பலவகைப் பரிசில்களை அளிப்பான். பொன்னாலாகிய தாமரைப் பூவை அவர்கள் அணியும்படியாகத் தருவான். அந்தக் காலத்தில் பாணர்களுக்குப் பொற்றாமரை அளிப்பது வழக்கம். பாணர்களுடைய மனைவிமார்கள் ஆடுவார்கள்; பாடுவார்கள். அவர்களுடைய ஆடல் பாடல்களையும் கண்டு மகிழ்வான். அவர்களுக்குப் பல்வகையான அணிகலன்களைப் பரிசளிப்பான். சில சமயங்களில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் தேரையும் அளித்து மகிழ்வான். பொதினி எனப்படும் பழனி மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தான். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயலைச் செய்தார். இவ்வாறு செய்தமையே ‘கொடைமடம்’ என்று போற்றுகின்றார்கள்.

    வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்

    கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

    அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

    பெருங்கல் நாடன் பேகனும்   (சிறுபாண்.84-87)

    புறநானூற்ற்றின் 142ஆம் பாடலைப் பாடிய பரணர், “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழை போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தை அமைத்து பாடியிருக்கிறார். பேகனின் கொடைச்சிறப்பைக் கபிலர், பரணர், அடிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் போன்றோர் பதிவிட்டுள்ளனர்.

    எத்துணை ஆயினும் ஈதல் நன்று என

    மறுமை நோக்கின்றோ அன்றே

    பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே (புறம்.141:13-15)

    என்று புலவர் பரணர் நயம்படச் சுட்டுகிறார்.

    கொடைமடம் படுதல் அல்லது

    படைமடம் படாண் பிறர் படைமயக் குறினே (புறம்.142:5-6)

    இப்பரணரின் பாடல் இரந்து நிற்பவர் எத்தகுதியைப் பெற்றிருந்தாலும் வரையறை இன்றி கொடுக்கும் வண்மனம் படைத்தவன் பேகன் என்பதை அறிவிக்கிறது. கபிலர் பாட்டில்  கைவள் ஈகைக் கடுமான் பேக! (புறம்.143:6) என்றும் சுட்டுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. பேகனின் கொடைத் தன்மையால் அவனின் மனைவி நலிந்தவளாகி கூந்தலிலே நறும்புகையூட்டி தண்மலர் சூடிட வழி இல்லாமல் இருப்பதாக, கொடைக்குப் பிந்தைய நிலையை எடுத்துரைக்கிறார் புலவர் அரிசில்கிழார்.

    ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்

    தண்கமழ் கோதை புனைய (புறம்.146:9-10)

    1. வள்ளல் பாரி

    பறம்பு மலையைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் வேள்பாரி ஆவார். இவர் கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைத்தனர். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது ‘பிரான்மலை’ என்று அழைக்கப்படுகிறது. அப்போதைய பாண்டிய அரசின் எல்லையின் அருகில் வரும். இதற்கு இன்னொரு பெயர் ‘கொடுங்குன்றம்’ என்பதாகும். இம்மலை மேருமலையின் ஒரு பகுதி என்னும் புராணக்கதையும் உண்டு. பிரான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே எனலாம். கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பது அவனது தனிச்சிறப்பாக இருந்தது.

    புலவர் கபிலர் பாரியின் நண்பராக அறியப்படுகிறார். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; ‘பொய்யாநாவிற்கபிலர்’ என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர். மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு அரசர் வேள்பாரியின் புகழ் தென்னகம் முழுவதும் பரவி இருந்தது. பாரி மூவேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்டார். வேள்பாரிக்கு இருமகளிர் உண்டு. அங்கவை, சங்கவை ஆகியோர் இவரது மகள்கள் ஆவர். ஆதரவின்றி இருந்த பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணி ஔவையார் முயன்றபோது அதனைத் தடுக்க மூவேந்தர்கள் முயன்றனர். ஆனால் ஔவையார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கரபுரநாதர் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது சேலத்தில் உத்தமசோழபுரம் (சோழன் இருந்த இடம்) என்ற பகுதியில் உள்ளது. மேலும் அருகில் வீரபாண்டி (பாண்டியன் இருந்த இடம்), சேலம் (சேரநிலம்-சேரன் இருந்த இடம்) உள்ளது. பாரியை ஒளவையும் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.

    வள்ளல் வேள்பாரியின் கொடைப்பண்பைப் பற்றிக் கபிலர் மழையைப் போல கைமாறு ஏதும் கருதாது கொடையை வழங்குபவன் என்று கூறிப் புகழின் உச்சிக்கே கொண்டு செல்வதைக் காணலாம்.

    ……………சுரும்பு உண

    நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்

    சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

    பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்

    பறம்பின் கோமான் பாரியும்;   (சிறுபாண்.87 – 91)

    பாரி பாரி என்று பல ஏத்தி

    ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்

    பாரி ஒருவனும் அல்லன்

    மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே (புறம்-107)

    பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு

    பாரியும் பரிசிலர் இரப்பின் (புறம்.108:4-5)

    1. வள்ளல் காரி

    அதியமான் காலத்து வரலாற்றிலே வந்த காரியும் ஏழு வள்ளல்களில் ஒருவன். அவன் முழுப்பெயர் மலையமான் திருமுடிக் காரி ஆகும். மலையமான் என்பது அவன் குடிப்பெயர். திருக்கோவலூரே அவனுடைய தலைநகர். அதை நடுவிலே பெற்ற நாட்டைப் பல காலமாக ஆண்டு வந்தவர்கள் மலையமான்கள் என்னும் வீரக் குடியினர். அவர்கள் ஆண்ட நாடாதலின் அதற்கு மலையமான் நாடு என்ற பெயர் விளங்கிற்று. அது நாளடைவில் மாறி மலாடு என்று அழைக்கப்பட்டது.

    வள்ளல் காரி ஈகையிற் சிறந்தவனாகவும் வீரத்தில் இணையற்றவனாகவும் விளங்கியிருக்கிறான். அவனது பெரும்படையில் தெரிந்தெடுத்த அடலேறு போன்ற வீரர்கள் இருந்தனர். அந்தப் படைப் பலத்தினால் அவனைக் கண்டால் யாரும் அஞ்சி நடுங்குவார்கள். இரு பெரு மன்னர்களுக்குள் போர் மூண்டால் அவரில் ஒரு மன்னன் மலையமான் திருமுடிக் காரியை அணுகுவான். தனக்குத் துணையாக வரவேண்டுமென்று சொல்வான். காரி தன் படையுடன் சென்று போரிலே ஈடுபடுவான். பிறகு வெற்றி யாருக்கு என்பதைப் பற்றி ஐயமே இல்லை. அவனிடம் கரிய நிறம் பொருந்திய குதிரை ஒன்று இருந்தது; காரியென்பதே அதற்கும் பெயர். அது மலையமானுடைய உள்ளம் போலப் பாயும் இயல்புடையது. சோழனுக்கோ, பாண்டியனுக்கோ, சேரனுக்கோ துணையாகச் சென்று போரிடுவான் காரி. போர் முடிவில் வென்ற மன்னன் அவனுக்குப் பற்பல பரிசில்களைத் தருவான். பொன்னும் மணியும் அளிப்பான், ஊர் அளிப்பான்; நாடு அளிப்பான். வண்டி வண்டியாகத் தான் பெற்ற பண்டங்களை ஏற்றிக்கொண்டு வருவான் காரி. யானைகளும் குதிரைகளும் தேர்களும் அவனுக்குப் பரிசிலாக கிடைக்கும்.

    ஒருசில நாட்களில் அப்பொருட்கள் அனைத்தையும் காரி வாரி வீசுவான். தமிழ்ப் புலவர்களைக் கண்டால் அவன் பேரன்பு கொள்வான். அவர்களுக்குக் காதிற் கடுக்கன் போட்டுப் பார்ப்பான். தேரைக் கொடுத்து ஏறச் செய்து கண் குளிரக்கண்டு பெருமகிழ்ச்சி அடைவான். இதனால் அவனுக்குத் தேர் வழங்கும் பெரு வள்ளல் என்ற பெயர் வந்துவிட்டது. ‘’தேர்வண் மலையன்” என்று புலவர்கள் பாடிப்புகழ்ந்தனர்.

    ………………………  கறங்குமணி

    வால்உளைப் புரவியொடு வையகம் மருள

    ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த

    அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்

    கழல்தொடித் தடக்கை காரியும்    (சிறுபாண்.91-95)

    இப்பாட்டில் மன்னன் மலையமான் திருமுடிக்காரியின் கொடைகொடுக்கும் அளவு பற்றிச் சுட்டக்காணலாம். (புறம்.121) எனும் பாட்டில், தன்னை தேடி வருகின்ற புலவர்க்கு பரிசில் வழங்கும் முன், அவர் தம் தகுதியை நன்கறிந்து அதற்கு ஏற்ப பரிசு வழங்குக என்று கபிலர் அறிவுரை கூறும் விதமாக அமைந்திருப்பதன் மூலம் பரிசில் பெறவேண்டி வந்த இரவலர்க்குப் பரிசு வழங்கியதை வெளிக்காட்டுகிறது. (புறம்.123) என்ற பாடலில், தன்னை நாடி வருகின்ற இரவலர்க்குப் பரிசாக தேரையும் கொடுத்தான் என்பதால் திருமுடிக்காரியின் கொடைச்சிறப்பு தெள்ளென விளங்கும்.

    புலவர்கள் பாடி பரிசில் வாங்கச் செல்லும் முன் நாள் கிழமையும் சரியல்ல என்றும், தீமை தரும் என உணர்த்தும் சகுணங்களைப் பார்த்தும், அன்றைக்கு மலையமான் காரியின் அவைக்குச் சென்றாலும் திறன் சொல்லால் பாடினாலும் அவன் பரிசில் தருவான் என்று கூறுவதன் மூலம் புலவர்கள் பரிசில் பெறுவதற்கு நாள் கிழமையைப் பார்த்தனர் என்பதும் வெளிக்கொணரும் செய்தியாகிறது.

    நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்

    புதன்று புக்குத் திறனன்று மொழியினும்

    வறிது பெயர்குநர் இரங்கும் அருவிப்

    பீடுகெழு மலையற் பாடி யோரே (புறம்-124)

    4. வள்ளல் ஆய் அண்டிரன்

    நறுமணம் கொண்ட பொதிகைமலை தமிழ்நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் சிறப்பைத் தருகிறது. இம்மலையைச் சார்ந்து திருக்குற்றாலம், பாவநாசம் என்னும் அழகிய இடங்கள் இருக்கின்றன. அங்கே ஆய் குடி என்பது ஓரூர். அதை ஆய்க்குடி என்று இப்போது சொல்கிறார்கள். ஆய் என்ற வள்ளல் வாழ்ந்திருந்த இடம் அது. ஆய் அண்டிரன் என்றும் அவனைப் புலவர்கள் புகழ்ந்துரைக்கின்றனர். இவனுடைய ஆட்சிக்குட்பட்டது பொதிய மலை. அக்காலத்தில் அம்மலையில் யானைகள் மிகுதியாக இருந்தன. ஆதலின் ஆய் பல யானைகளைப் பிடித்து வந்து பழக்கினான். ஆண் யானைகளைப் போருக்கு ஏற்றபடியும், பெண் யானைகளை வாகனமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் பழக்கச் செய்தான். அவனுடைய ஆனைப் பந்தியில் நூறு யானைகளுக்குக் குறைவாக என்றும் இருந்ததில்லை என்பர். இவனிடம் அடிக்கடி பாணர்களும் புலவர்களும் வருவார்கள். அவர்களுக்கு மற்றவர்கள் கொடுப்பது போலப் பொன்னும் மணியும் கொடுப்பான்; அவற்றோடு யானையையும் பரிசிலாக வழங்குவான். யானைப் பரிசில் தருபவன் என்று போற்றப்படுகிறான்.

    ஆய் மன்னன் மோசியாரை ஒருநாள் தன் தேரில் அழைத்துச் சென்றான். அந்தத் தேர் காட்டு வழியே சென்றது. அங்கே பழக்கப்பட்ட பல யானைகள் இருந்தன. அவற்றைப் பார்த்த புலவர் ஒரு பாட்டைப் பாடினார். “இந்தக் காட்டில் இத்தனை களிறுகள் இருக்கின்றனவே! இந்தக் காடு, மேகக் கூட்டங்கள் தங்கும் மலையையும் சுரபுன்னை மலரால் தொடுத்த கண்ணியையும் உடைய ஆய் அண்டிரனுடைய குன்றத்தைப் பாடிற்றே?” என்று பாடினார். அவனுடைய யானைக் கொடையையே அப்பாடலில் சிறப்பித்தார்.

    …………… நிழல்திகழ்

    நீலநாகம் நல்கிய கலிங்கம்

    ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

    சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்

    ஆர்வ நன்மொழி ஆயும்    (சிறுபாண்.95-99)

    வள்ளல் ஆய்அண்டிரனின் கொடைச்சிறப்பினைப் பற்றி உரையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுகிறார்.

    ஈகை அரிய இழையணி மகளிரொடு

    சாயின்று என்ப ஆஅய் கோயில் (புறம்.127:5-6)

    இப்பாடலால் கொடைக்குக் கொடுத்தற்கு அரிய என “இழையணி” என்று குறிக்கப்படுவது தாலி தான் என்று ம.பொ.சி. தம் நூலான “மங்கல அணி” என்னும் நூலில் சுட்டுகின்றார். இதனை தாலி அல்ல என்றும் திரு.அ.தட்சிணாமூர்த்தி தம் நூலான தமிழர் நாகரீகமும் பண்பாடும்(1999) என்ற நூலில் “இழை” என்பதற்கு “அணி” என்ற பொதுப்பொருள் உண்டு என்றும் குறிப்பிடுகின்றார். திரு.கே.கே. பிள்ளை அவர்களும் ம.பொ.சியின் கருத்தை ஆதரிப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இருப்பினும் தனது மனைவி அணிந்துள்ள மங்கல அணியைத் தவிர எல்லாவற்றையும் வழங்கினார் என்று புலவர் சுட்டுவதைக் காணமுடிகிறது.

    ஆய்அண்டிரன் இரவலராக வந்தவருக்கு யானைகளையும் பரிசாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

    ஆஅய் அண்டிரன், அடுபோர் அண்ணல்;     

    இரவலர்க்கு ஈத்த யானையின், (புறம்.129:5-6)

    விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு

    இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ? (புறம்.130:1-2)

    மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்,

    வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்

    குன்றம் பாடின கொல்லோ;

    களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? (புறம்.131)

    என்ற பாடலில் புலவர் முடமோசியார் ஆய்அண்டிரனின் நாட்டில் கொடையாகக் கொடுக்க அளவில்லாத யானையைப் பெற்றுள்ளான் என்பதை வெளிக்காட்டுகிறார். பரிசில் பெறவேண்டி யான் வரவில்லை ஆயினும் அதை ஏற்காது பரிசில் வழங்கியதையும் பாடல் எடுத்துரைக்கிறது.

    இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

    அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் (புறம்-134)

    என்பதன் மூலம் சுயநலம் கருதாது கொடையறம் செய்பவன் அண்டிரன் என புகழப்படுகிறார். வள்ளல் ஆய் அண்டிரனின் கொடைச்சிறப்புப் பற்றி ஒளவையார் சிறப்பாகப் பாடியதைக் காணமுடிகிறது.

    இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன ஓர்

    பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்

    தேற்றா ஈகையும் உளதுகொல்? (புறம்-140:7-9)

    1. வள்ளல் அதியமான்

    அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்கக் காலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஒளவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலிமை பொருந்தியவன் என்றும் சேரன், சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன், இவனது அரண்மனையில் இல்லையென்று வருவோருக்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும் அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையுடையது. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையாருக்குக் கொடுத்தான். இச்செயலே அதியமானின் கொடையின் திறனை வெளிக்காட்டுகிறது.

    அந்தக் காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாக சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும் பாண்டிய மன்னனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர். எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான்.  இப்போரினை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பதாகும். இப்போது இந்நூல் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை.

    இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகின்றது. “சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி” என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது.

    ……………………….. மால்வரைக்

    கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி

    அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த

    உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்

    அரவக்கடல் தானை அதிகனும்   (சிறுபாண்.99-103)

    புறப்பாடல், (புறம்.94)  ’பெரும! நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் போலக் கொடுமையானவன்’ என்கிறது. கீழ்க்காணும் பாடல் அதியமான் நெடுமானஞ்சயின் கொடைச் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது.

    ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;

    பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்

    தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ; (புறம்-101:1-3)

    இப்பாடலால் அதியமான் அரசவைக்கு பரிசில் பெறவேண்டிவரும் புலவர்க்கு ஒருநாளும் முந்தைய நாள் கொடையை விட அதிகமாகவே தரப்பட்டுள்ளதைச் சிறப்பித்துக் கூறும் அரிய பாடலாக காணப்படுகிறது.

    6. வள்ளல் நள்ளி

    குறிஞ்சி(மலை) வளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும் கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும் பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தன்னை நாடி வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும் வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினை உடையவர்.

    ………………………….கரவாது,        

    நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம்  

    முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை,      105

    துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு

    நளி மலை நாடன், நள்ளியும்;    (சிறுபாண்.103-107)

    கண்டீரக் கோப்பெருநள்ளியின் கொடை பற்றி வன்பரணர் என்ற புலவர் சிறப்பித்துப்  பாடியிருக்கிறார்.

    நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்

    மாலை மருதம் பண்ணிக் காலைக்

    கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,

    வரவுஎமர் மறந்தனர்; அது நீ

    புரவுக்கடன் பூண்ட வண்மை யானே  (புறம்.149)

    என்ற பாட்டினால், பாணர்களுக்குப் பரிசில் வேண்டி மன்னரிடத்தில் மீண்டும் செல்ல தேவையில்லை என்று எண்ணி மாலைநேரமும் காலைநேரத்திலும் பண்பாடுவதை மறந்தனர் என்று புலவர் கூறிமை சுட்டத்தக்கது.

    1. வள்ளல் வல்வில் ஓரி

    ஒரு நாள் வல்வில் ஓரி தற்போது இராசிபுரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராஜபுரம் என்னும் பகுதியில் வேட்டையாட சென்ற போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்குப் பன்றிக்குப் பதிலாக ஒரு சிவலிங்கமும் அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும் அந்த அம்புப்பட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோதித்ததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவபெருமானுக்கு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான். இதனைக் குறிக்கும் வகையில் அந்த அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானைக் குறிக்கும் வகையில் முட்புதரின் முன் பன்றி வடிவமும் வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

    இவ்வோரி கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரி எனபவனோடு போரிட்டு மாண்டான் என நற்றிணை 320 இல் கபிலர் குறிப்பிடுகிறார். நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான் என்று பரணர் பாடினார். அகநாணுற்றுப் பாடலும் இதனை உறுதி செய்கிறது.

    முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி

    செல்லா நல் இசை நிறுத்த வல் வில்

    ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த

    செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, (அகம்.209:12-15)

    மேலும் வல்வில் ஓரி நற்றிணையின் 6, 265 ஆம் பாடல்களில் சிறப்பாகப் பேசப்படுகிறான். புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடியதைப் புறம்: 152, 153, 204 ஆம் பாடல்கள் குறிப்பிடக்காணலாம்.

    ஓம்பா ஈகை விறல்வெய் யோனே (புறம்.152:32)

    மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்

    இழையணி யானை இரப்போர்க்கு ஈயும் (புறம்.153:1-2)

    புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை        

    உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்

    புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்

    கருவி வானம் போல

    வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. (புறம்.204:10-14

    …………………….. நளிசினை

    நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து

    குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த

    காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

    ஓரிக்குதிரை ஓரியும்    (சிறுபாண்.107-111)

    மேற்கண்ட செய்திகளின் வழி, தொல்தமிழ் மக்களின் பண்பட்ட வாழ்வில் கொடைத்தன்மைகள், கொடைச்சிறப்புகள், மன்னர்களின் ஆளுமைச் சிறப்புகள், கடையேழு வள்ளல்களின் கொடைமடச் செய்திகள் போன்றவை வெளிப்பட்டு நிற்கின்றன. கொடை வள்ளல் என்ற பட்டம் வெறும் செயலுக்கான பட்டம் மட்டும் அல்ல அந்த செயல், உயர்ந்த மனநிலையில் எந்த ஒரு சிறு ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் உள்ளத்தால் செய்யப்பட்டதாகும். இது அவன் தன்மைக்குக்  கொடுக்கப்பட்ட பட்டமாகும். பண்டைய தமிழர்கள் அறத்தைக் கூட அது செய்யப்பட்ட மனநிலையைக்  கொண்டு அறத்தில் சிறந்த அறம் போற்றி வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்பதற்கு இவை நற்சான்றாக விளங்குகிறது. மிகத் தொன்மைக் காலத்திலேயே கொடையைப் போற்றி வளர்த்தப் பெருமை தமிழருக்கே உரியது என மார்தட்டிக்கொள்வோம்.

    கருவிநூற்பட்டியல்

    1. திருக்குறள், வ.உ.சிதம்பரனார் உரை, இரா.குமரவேலன் பதிப்பு, பாரிநிலையம் சென்னை 2008
    2. தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008
    3. உ. வே. சாமிநாதையர், பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும் 1889
    4. தொல்காப்பியம், பொருளதிகாரம், சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்பு 1885
    5. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு 1940,
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181003 – goverdhanadhari watercolour 24×32 cms lr

    அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
    உழைக்கவரு வானவர் ஓடி -மழைக்குக்
    குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
    இடையன் இணைப்பில் இரு….!

    ஆவுக்காய் குன்றேந்தி பாவ்லாவைக் காட்டினாலும்
    காவுக்கோ இந்திர கர்வபங்கம் -தேவு
    அவதாரமாய் வந்த அரிமாலர் என்று
    சிவதாரம் காளியின் சொல்’’…!

    ”குன்றுகோ வர்த்தனமும் கண்ணன்!, மழைகாக்கும்
    சுண்டு விரல்கண்ணன் கண்ணனே!, -இந்திர
    கர்வமும் கண்ணனே! கர்வபங்கம் கண்ணனே!
    மர்மமே கண்ணனாய் மால்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    031231 Krishna philharmonic wcol-lr

    “நேற்றைய கண்ணர்க்கும், நாளைய கண்ணர்க்கும்
    வேற்றுமை கேசவ் வரைவதிலே -தோற்றம்
    மறைவிலா மாலனோ மானஸசஞ் சாரன்
    நிரைநேர் தளைசீர் நமக்கு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180919 Gajendra -wcol A4 300 dpi lr

    ஆரத் தழுவுகின்றார் ஆவைப்போல் ஆனைக்கும்
    சீராயர் வாத்ஸல்யம், பாரபட்ஷம் -பாரா
    புஜேந்திரர் மல்லில், நிஜேந்திரர் சொல்லில்,
    கஜேந்திரரைக் காத்த கரி(கண்ணனும் கருப்பு,யானைக்கு வேறு பெயர் ‘கரி’)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181001-Raghuveera gadyam 79 wcol A4 600dpi-wm

    பரசுராமர் கர்வத்தைப் போக்க அயோத்தி
    அரசுராமர் விஷ்ணு அவ்தார்(மோனைக்காக அவதாரம் அவ்தார் ஆச்சு) -வரவுதான்
    விஷ்ணுவே வந்து விளக்கினாலும் ,கர்வமோ(EGO)
    புஸ்ஸெனப் பாம்பின் பொந்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180930-Vanvihari wcol graphite A4 100dpi lr

    மத்தினால் மாதாவால் மொத்துண்ட மைந்தனை
    பத்திலோர் பாகவதப் பிள்ளையை -ஒத்தனாய்
    மண்ணினைக் காக்க மகாபா ரதம்செய்த
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • அகல்யா

     

    கல்லகலிகைக்கு காலடி மோக்‌ஷம்
    புள்ளகன்(ஜடாயு) ஏகிட புல்லிட்டு(தர்ப்பை) மோக்‌ஷம்
    அல்லகல் வித்திடும் ஆதித்ய ரூபம்
    வில்லகல் மார்பில் வேய்ந்திடும் ராமம்….!(எழுதித் தந்தேன் ‘’கிரிதரிடம்’’….அதற்கு இசையமைத்து எனது எழுத்துக்கு ஊட்டம் கொடுத்தவர் பாடினார் ‘’கிரிதர்’’…..!)

    ”கல்ராம் அகலிகைக்கு, இல்ராம்வை தேஹிக்கு,
    கொள்ராம் விபீஷணன் காப்புக்கு, -தொல்ராம்
    அவதார விஷ்ணு, அனுமான் தனக்கு
    சிவராம க்ருஷ்ணா சரண்’’….கிரேசி மோகன்…!

    . விசாரிக்காமல் சபித்து விட்டீரே என்ற அகலிகையின் வார்த்தை கவுதம முனியை சாபமாக வாட்ட….அதற்கு விமோசனமாக தில்லை சென்று ”சிவதாண்டவ தரிசனம்” செய்தாராம்….!பசவான் ஸ்ரீ ரமண வசனாம்ருதம்…..!

    ”ஆண்டவன் ஈசன் அழகுமை யாளோடு,
    தாண்டவக் கோலம் தரிசிக்க, -வேண்டிவந்தார்,
    கல்ல கலிகைக் கணவர் கவுதமர்,
    தில்லைக்குப் போய்சாபத் தீர்வு”….கிரேசி மோகன்.

    Share
  • Crazy Quotes From Crazy கிழிஞ்ச Coat….!

     

    தூக்கக் கலக்கத்தில் தோன்றியது….CrazY Quotes From Crazy Coat….

    ”ஆறாவது அறிவுடன் நிறுத்திக் கொள்வ்பவன் அடிமுட்டாள்
    ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து டிகிரி வாங்குபவனே புத்திசாலி’’….(1)

    ‘’இளமையில் கல்….முதுமையில் சிலை….நடுவயதில் வாழ்வின் நாராசமான உளியின் ஓசை’’….(2)

    ‘’பாவம் செய்தவன் நரகம் செல்கிறான்
    புண்ணியம் செய்தவன் சொர்கம் செல்கிறான்
    எதுவும் செய்யாதவன் பூமியில் பிறக்கிறான்’’….(3)

    ’’கெட்ட பழக்கத்தை நாம விடலாம்….பாழாய்ப்போன
    நல்ல பழக்கமோ நம்மை விட்டால்தான் உண்டு’’….(4)

    ‘’அளவுக்கு மீறிய பசியில் நஞ்சும் அமிர்தமாகும்’’….(5)

    ‘’சொறிவதற்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’’….(6)

    ‘’ஐந்தில் வளையாத முதுகு ஐம்பதில் வளையும்’’….(7)

    ‘’நான் ஆடாவிட்டாலும் KNEE ஆடும்’’….(8)

    ‘’கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு
    கல்லாதவனுக்கோ செல்ல வேண்டிய அவசியம்
    இல்லாததால் இருக்கும் இடத்திலேயே சிறப்பாக இருப்பான்’’….(9)

    ’’தானாய் வருவது வெற்றி
    முயன்று பெறுவது தோல்வி’’….(10)

    ‘’முக்கால்வாசி வெற்றி
    மயிரிழையில் தோல்வியிடமிருந்து
    தப்புவதுதான்’’….(11)

    ’’பசி தாளாமல் பொய் சொன்ன வாய்க்கு போஜனம் உண்டு’’….(12)

    ’’5 பெண்ணைப் பெத்தவன் ஆண்டியாகலாம்
    5 பிள்ளை பெத்தவன் அந்த ஆண்டிக்கு சம்பந்தி ஆனால்
    ஆண்டியாகலாம்’’….(13)

    ‘’தைரிய சாலிக்கு வீர மரணம்
    கோழைக்கோ இருமி இருமி சளி மாரடைத்து
    ஈர மரணம்’’….(14)

    ‘’சுலபமான யோகம் வினியோகம்’’….(15)

    ‘’மெளனம் சங்கடத்துக்கும் அடையாளம்’’….(16)

    ‘’அனாவசியமாக அடிக்கடி கசக்கி கட்ட முடியாத அளவுக்குக்
    கந்தையாக்காதே’’….(17)

    ‘’பாம்பு, பூரான்,பூச்சிக்கு பயப்படாதவர்கள்
    தாராளமாக இயற்கையோடு ஒன்றி வாழலாம்’’….(18)

    ‘’சுறுசுறுப்பாக இருக்க உடலில் உறுதி வேண்டும்
    சோம்பேறியாக சுகமாக வாழ மனதில் உறுதி இருந்தால் போதும்’’….(19)

    ‘’இடுக்கண் வருங்கால் நகருக’’….(20)

    ‘’அளவுக்கு அதிகமாக ஆப்பிளை சாப்பிட்டதால்
    ஆதாம் ஏவாளுக்கு வந்த அஜீர்ணமே காதல்’’….(21)

    ’’ஞானப் பசி வந்தால் பற்றும் பறந்து போம்’’….(22)

    ‘’பகைச்சுவை இல்லாத எதுவுமே நகைச்சுவைதான்’’….(23)

    ‘’பயம்தான் சாவு….செத்தால் கொள்ளி….
    பயந்தால் கொள்ளிதான் பயந்தாங்கொள்ளியாச்சோ!’’….(24)
    ————————————————————————————————————————-

    Share
  • என்றும் நிலையாய் இரு

    ஆசை உருவாகும் அச்சம் நமைச்சாய்க்கும்
    பாசம் தொடந்து பரிகசிக்கும் – வாசமெனுங்
    குன்றுவந்து முன்னே குழைந்தாலும் என்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    பொன்னாடை மாறும் புகழ்மாலை தாம்மாறும்
    சொன்மாலை மாறும் சுகம்மாறும் – என்றைக்கும்
    ஒன்று நிலையாம் ஒழுக்கமாம் நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    கூட்டம் தொடர்ந்திருக்கும் கூப்பிட்டால் தான்தெரியும்
    ஈட்டம் எவரால் எனும்செய்தி – வாட்டத்தில்
    குன்றும் மனமிகவும் குற்றமடா நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    காலைச் சிவப்பொளிபோல் காட்சி அழகெல்லாம்
    காலம் கனிந்தால் கரைந்துவிடும் – காலமே
    நன்றும் நலிவும் நமக்கியற்றும் நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    வேதாந்த தத்துவம் வேகப் புரட்சிகள்
    சேதார மில்லாச் செழுங்காதல் – தோதாக
    நின்றாலும் சென்றாலும் நீமட்டும் நன்னெஞ்சே
    என்றும் நிலையாய் இரு!

    -விவேக்பாரதி
    29.09.2018

    Share
  • என் கவிதை

    #.இல.நடராசன்

    “பரபரப்பற்ற சாந்தமான
    ஞாயிறின் அதிகாலையில்
    எழுந்து,
    திங்களோடு வெள்ளி
    இருக்கும் நீல வானின்
    மையை எடுத்து
    அந்நாளுக்கான என்
    கவிதையை எழுத
    கவிதையைத் தேடினேன்.

    எங்கெங்கோ தேடியும் என்
    கவிதை அகப்படவில்லை.

    என் கவிதை குட்டைப் பாவாடை
    அணிந்திருந்ததால்
    ஆடையின் கவர்ச்சியால்
    இழுக்கப்பட்டு,
    மாறி மாறி பதினெட்டு
    பேரால் வன்புணர்ச்சி
    செய்யப்பட்டு,
    உயிரோடு எரிக்கப்பட்டதாக
    நாளிதழில் பின்பு படித்தேன்.
    என்ன! என் கவிதைக்கு
    அப்போது ஐந்து வயது இருக்கும்.

    மீண்டும் மறுபிறவியிலும்
    என் கவிதை பெண்ணாக
    பிறந்து,
    பேதை, பெதும்பை, மங்கை
    கடந்து,
    மடந்தையில் மடம் செல்லும்போது
    குருக்கள் மற்றும் சீடர்களால்
    Sexual harassment
    செய்யப்பட்டது.

    பின்னர் அதிலிருந்து மீண்டு
    ஆண்டுகள் கழித்து
    என் கவிதை பூப்பெய்ததும்,
    காதலன் படுக்கைக்கு அழைக்க
    அதை என் கவிதை
    மறுக்க,
    அவன் ஆசிட் வீசிவிட்டான்.
    நல்லவேளை அது நீர்த்துப் போன
    அமிலமாக இருக்கப் பெருத்த சேதமின்றி
    என் கவிதையின் முகம்
    தப்பித்தது பிடிக்காமல், கோபத்தில்
    என் கவிதையின் முகத்தை
    நீலப்படங்களாக்கி அவன்
    Morphing செய்து இணையத்தில்

    உலவவிட்டு விட்டான்.

    திருமணமான பின் என் கவிதை
    கணவனது இச்சைகளின் இம்சை
    தாங்காது,
    தொடைகளில் அவன் கொடுத்த
    Cigarette bud தழும்புகளோடு,
    அவனை வாழா வெட்டியாக்கி
    தனிமை அடைந்தது.

    தனிமையிலே வாழ்ந்து
    எப்படியோ மத்திமவயதைக்
    கடந்து,
    என் கவிதை கிழவியான
    பின், மீண்டும்
    புணர்ச்சி பசியெடுத்த
    49வது மிருகத்தால்,
    50வது முறையாகக்
    கற்பழிக்கப்பட்டு,
    தன் அடுத்தப் பிறவியிலாவது
    பாதுகாப்பான நாட்டில் பெண்ணாக
    பிறக்க வேண்டுமென்ற
    எண்ணத்துடன் உயிர்விட்டது.”

    18-09-2018
    15.15 மணி
    …………………………………………………………………

    இதோ இந்த ‘என் கவிதையை’
    நான் எழுதிய வேளையில் கூட,
    என் இன்னொரு கவிதையை
    யாரேனும் எங்கேனும்
    வன்புணர்ச்சி
    செய்துக்கொண்டு இருக்கலாம்.

     

    Share
  • ஹைக்கூக் கவிதைகள்

    கவிஞா் பூராம்
    (முனைவா் ம.இராமச்சந்திரன்)

    1.பிழை.

    மழழை பேசும்
    வாா்த்தைகள் அனைத்தும்
    கவிதை

    2. பணமுதலை.

    உழைத்து உழைத்து
    அனாதையானது நடுத்தரவா்க்கம்
    உழைத்து உழைத்து
    வறுமையானது ஏழைவா்க்கம்

    3. குறட்டை.

    நோக்கிக் கொண்டே
    இருக்கத் தூண்டும் முகம்
    பேசிக் கொண்டே
    இருக்கத் தூண்டும் குரல்
    இரவெல்லாம் கண்விழித்த
    அசதியில் அவன்

    Share
  • குமரேசன் என்னும் கூத்தாடி

    முனைவர் பா. ஜெய்கணேஷ

    துறைத்தலைவர்,

    தமிழ் அறிவியல் மற்றும் கலையியல் புலம்

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

    காட்டாங்குளத்தூர் – 603203

     

    “பொம்பள வேஷம் போட்டுடலாம். ஆனா ஒரு பொம்பளையா நடிக்கிறதுதான் கஷ்டம். ஏன்னா பொம்பளைக்கு இருக்குற நெளிவு சுளிவு வரலனா கல்லுவிட்டு எறிவானுங்க. கேவலமா திட்டுவானுங்க. ஆனா எனக்கு அந்தப் பிரச்சன இருந்தது இல்ல. என்னைக்கு நான் பொம்பள வேஷம் போட்டு நடிக்கணும்னு ஆரம்பிச்சனோ அன்னையில இருந்தே ஒரு பொம்பளைக்கு இருக்கக்கூடிய எல்லா உடல்அசைவும் எனக்கு வந்திருச்சு” அப்பிடின்னு தான் பையன் கிட்ட கூத்தாடி குமரேசன் சொல்லிக்கிட்டு இருந்தான்.

    ”அப்பா எனக்கு உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்”

    ”கேளுடா மகனே… ஊருல அவன் அவன் கேக்காததையா நீ கேட்டுறப் போற”

    ”இல்லப்பா கூத்துல ராமன், பீமன், அருச்சுனன், இராவணன்னு இப்படி எத்தனையோ கதாப்பாத்திரம் இருக்க நீ மட்டும் ஏன்ம்பா பாஞ்சாலி, சீதைன்னு பொம்பளைங்களா நடிக்கணும்னு விருப்பப்பட்ட”.

                “சின்ன வயசுல கூத்துப் பாக்க எங்க அம்மா கூட போவண்டா. அம்மாவே தூங்கிரும். ஆனா நான் மட்டும் தூங்கவே மாட்டன். எவ்வளவு பெரிய ஆம்பள நடிகருங்க வந்தாலும் அங்க பெருசா கைத்தட்டல் இருக்காது. இப்ப நீ சொன்னியே பொம்பளைங்க அவங்க மாதிரி வேஷம் போட்டு ஆம்பளைங்க வந்து நிக்கறப்ப அந்த இடமே அதிரும்டா.

    காசு கொண்டு போய் குடுப்பாங்க நிறைய அவங்களுக்குதான். எல்லாரும் பாராட்டுவாங்க அவங்கள. இத பல ஊருக்காரங்க கூத்துலயும் பாத்துக்கிட்டே இருந்த நான் மெது மெதுவா என்னையும் மாத்திக்க ஆரம்பிச்சன். நான் பேசறது சாதாரணமாவே பொம்பள மாதிரிதான் இருக்கும். அதுவும் சேர்ந்து ஊருல போறவன் வரவன்லாம் உசுப்பேத்த எனக்கும் கூத்துல பொம்பளையா நடிக்கணும்னு ஆச வந்துருச்சுடா”.

    ”அதுக்கு என்ன பண்ண? எப்படி நடிக்க வந்த”?

    “எனக்கு பதினைஞ்சு வயசு இருக்கறப்ப அம்மா கிட்ட சொன்னன். அம்மா முதல்ல சொன்ன வார்த்தையே அடி செருப்பாலன்னுதான். ஆம்பள பையன சிங்கம் மாதிரி பெத்து வச்சிருக்கன்னு ஊருலலாம் சொல்லிட்டு திரியுறன் நானு. நீ என்னடான்னா பொம்பளையா வேஷம் போட்டு நடிக்கப்போறன்னு வந்து நிக்கிற அப்படின்னு” திட்டோட அடியும் சேர்ந்துதான் விழுந்துச்சு.

    ரெண்டுநாள் நான் கொலப்பட்டினி. அன்னைக்கு இரவு தூங்கறப்ப அம்மா தலமாட்டாண்ட வந்து உக்காந்து “டேய் பொம்பளயா நடிக்கிறதுல இருக்கற சிக்கல்லாம் உனக்கு தெரியாதுடா. சொன்னா புரிஞ்சிக்கோடான்னு” எவ்வளவோ சொல்லிப் பாத்துச்சு. நான் அப்பயும் அழுது அடம்பிடிச்சேன். அப்புறம் சமாதானமா “என்னமோ பண்ணுடான்னு” சொல்லிட்டுப் போயிருச்சு.

    அம்மா சொன்னதுல இருந்து முதல்ல நீளமா முடி வளக்க ஆரம்பிச்சன். மீசை, தாடி கொஞ்சம் வளந்தாக்கூட வழிச்சு விட்டுருவன். நான் கொஞ்சம் மாநிறம் வேறயா. அதனால எப்பவும் பாக்க அழகா இருக்கணும்னு மேக்கப் போட்டுக்கிட்டே இருப்பன்.

    ”ஏன்ம்பா பொம்பளைங்க யாரும் நடிக்காம ஆம்பளைங்க அவங்க வேஷம் போட்டு நடிச்சாங்க”…

    “அடேய் இந்தக் காலத்துலயே பல வீட்டுங்கள்ல பொம்பளைங்க நடிக்கறதுன்னா அவ்ளோதான். அந்தக் காலம்னா சொல்லவா வேணும். பொம்பளைங்க வீதியில இறங்கி நடிச்சாங்கன்னா வீட்டோட மானமே காத்துல பறந்த மாதிரி. அதனால நடிக்கவே விடமாட்டாங்க. அதுக்காகத்தான் என்ன மாதிரி பொம்பள வேஷம் போடத் தயாரா இருக்க ஆம்பளைங்கள நடிக்க வச்சாங்க”.

    ”சரி சரி நீ உன் கதைய சொல்லு”…

    “டேய் கதைகேட்டது போதும் உங்க அப்பா ராஜா தேசிங்கு கதைய… எந்திரிச்சி வந்து கஞ்சி குடிக்கற வழி பாருடா. அடுத்த வேள கஞ்சிக்கே வழி இல்லையாம். கதயப் பாரு கதய”…

    ”அம்மா இரும்மா… வரன். நானும் ரொம்பநாளா கேக்கனும்னு நினைச்ச கதை. கேட்டுட்டு வந்து கஞ்சி குடிக்கறன் இரு”.

    ”உங்க ஆத்தா அப்படித்தாண்டா. அவளுக்கு எப்பவுமே என்ன கண்டா எலக்காரம் தான்”

    ”அதவிடுப்பா நீ வா கதைக்கு…”

    ”பக்கத்து ஊருல இருக்கற ராவணன் கூத்துக் குழுவுக்கு நடிச்சு வந்த பொம்பள ஆளு கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைக்காம தற்கொலை பண்ணி செத்துருச்சாம். அந்த சமயத்துல ஆள் தேடிக்கிட்டு இருந்தாங்க. அப்பதான் நான் போய் பாத்தன். முன்னடி இருந்தவ நல்லா சிவப்பா இருப்பாளாம். நான் மாநிறம்ல. ரொம்ப யோசிச்சாங்க. ஒருவாரம் கழிச்சு வரச் சொன்னாங்க. ஒரு வாரம் வரைக்கும் வேற ஆள் கிடைக்கல. என்னையே சேத்துக்கிட்டாங்க.

    மூனுமாசம் பயிற்சி. எனக்கு இயல்பாவே உடல்மொழியும் குரலும் இருந்ததால என் குருவுக்கு சிக்கல் இல்லாம போயிருச்சு. நல்லாவே கத்துக்கிட்டன் எல்லாத்தையும்”…

    ”அப்புறம் முதல்நாள் முதல் கூத்து எங்க நடந்துச்சு. உனக்கு அந்தநாள் நினைவு இருக்காப்பா”

    ”அது மறக்கக்கூடிய நாள் இல்லடா? என் வாழ்க்கையவே புரட்டிப்போட்ட நாள் அது.  என்னோட வாழ்நாள் கனவு ஈடேறப்போற நாள்னு மேக்கப்லாம் போட்டுகிட்டு மேடையில போய் நின்னன். மேக்கப் போடறப்பவே விடல பசங்க என்ன டிரஸ் மாத்தவிடாம தொல்ல பண்ணிக்கிட்டே இருந்தாங்க. நான் மேடைக்கு வரதுக்குள்ளயே அங்கங்க சீண்டிக்கிட்டே இருந்தாங்க. இது என்னடா இம்சன்னு மேடைக்கு போய் நின்னப்ப ஊரே ஒரே கைத்தட்டல். பெருமையா இருந்துச்சு.”

    ”அப்புறம் என்ன? உனக்கு”…

    ”டேய் நடிக்கறப்ப காசுகுடுக்கறன்ற பேர்ல நான் ஆம்பள வேஷம் போட்ட பொம்பளன்னு தெரிஞ்சி கூட கண்ட இடத்துலயும் வந்து தொட்டானுங்க. வாய்க்கு வந்ததலாம் பேசினானுங்க. நான் நடிச்சு முடிக்கிறதுக்குள்ளயே ஒருவழி ஆயிட்டன்”.

    ”ஆனா அதல்லாம் பொறுத்துக்கிட்டுதாண்டா நடிச்சன் அதுக்கப்பறமும்”.

    ”சரி ஊருல உன்ன எல்லாரும் எப்படி பாத்தாங்க”…

    ”எல்லாரும் என்ன ஒன்பது, அலி, உஸ்ன்னே கூப்பிட ஆரம்பிச்சாட்டானுங்க. நான் எவ்ளோ சொல்லிப்பாத்தன். ஆம்பளையா இருந்து பொம்பளையா நடிக்க வந்த என்னையே இப்படி விரட்டறாங்கன்னா, உண்மையாவே பொம்பளையா மாறவங்க கதி என்னன்னு யோசிச்சன். அதுல இருந்து இன்னைக்கி வரைக்கும் அவங்கள கையெடுத்து கும்பிட ஆரம்பிச்சிட்டண்டா”…

    ”எனக்கு எங்க ஊருல ஒரு பொண்ண ரொம்ப பிடிக்கும். அழகா இருப்பா அவ. அவ பின்னடியே திரிஞ்சன்… அவளும் சிரிப்பா, ஆனா பேச மாட்டா. ஒருநாள் அவ பின்னடியே போய் நின்னனா”…

    ”என்ன நின்னனா, சொல்லு சீக்கிரம்”

    அவ திரும்பன சமயம் பாத்து உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன கல்யாணம் கட்டிக்கிறிங்களான்னு கேட்டன். அவ்ளோதான். அவ விழுந்தடிச்சு சிரிச்சா என்ன பாத்து. ”என்னது காதலிக்கிறிங்களா, கல்யாணம் பண்ணிக்கணுமான்னு கேட்டா”

    ”ஆமாம்னு சொன்னன். அடுத்து அவ கேட்டா பாரு”.

    “உங்களால புள்ள பெத்து தரமுடியுமான்னு. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்ககூட நடந்து வந்தா நீங்க நடக்கற நடய பாத்து இந்த ஊரு என்ன சொல்லும். ஐயா சாமி நான் உங்கள பாத்து சிரிச்சது எல்லாம் உங்க நடையையும் குரலையும் கேலி பண்ணிதான். மூதேவிக்கு பாரு ஆசய கல்யாணம் கட்டிக்கணுமா நானு. போய் வேலயபாருன்னு” சொல்லி அனுப்பிட்டா…

    ”அப்பறம் எப்படி அம்மா மட்டும் உன்ன கல்யாணம் பண்ணிக்கிச்சு. அத நீ சொல்லவே இல்ல”…

    “காதல் ஆச காணாம போனதுல இருந்து கல்யாண ஆச வந்துச்சு. உங்க ஆயா எந்தெந்த ஊருலயோ போய் பொண்ணு பாத்துச்சு. அப்பன் ஆத்தாங்க ஒத்துக்கிட்டாலும் பொண்ணுங்க ஒத்துக்கல. வயசும் ஆயிருச்சு. ஒருத்தி கூட என்னக் கட்டிக்கில. வரவ எல்லாமும் என்னயும் சேத்து கிண்டல் பண்ணிட்டுதான் போனாளுங்க.

    ”அப்பறம் அம்மா மட்டும் எப்படிப்பா”

    “உங்க அம்மாவோட அப்பா ஒரு பெண் வேஷம் போடற கூத்தாடி. அந்த ஆளும் இறந்துபோயிட்டான். அநாதையா இருந்த உங்க அம்மா கிட்ட எங்க அம்மா பேச உங்க அம்மாவும் ஒத்துகிட்டா. அதனால இன்னைக்கு என்கூட அவ. எங்களுக்கு நீ.

    ”சரி அம்மா கூட உன்கூட எங்க போனாலும் கூடவே நடக்க மாட்டுது. உன்ன முன்ன போவவிட்டுட்டுப் பின்னதான் நடந்து வருது. அவங்க அப்பாவும் அப்படித்தான. அப்பறம் என்ன?”

    “நானும் அததாண்டா நினைச்சன். ஆனா இவ சொன்னா பாரு… ”பொம்பள வேஷம் போடற கூத்தாடிக்கு மட்டும் வாக்கப்பட்டுற கூடாதுன்னு என் வாழ்நாள்ல நினைச்சன். ஆனா என் விதி எங்க அப்பன் செத்து இவன கொண்டு வந்து விட்டுருச்சுன்னு இன்னைக்கும் திட்டிக்கிட்டு இருப்பாடா”. உனக்கு இதல்லாம் சொன்னா புரியாதுடா. சரி பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகலயா. நீ கிளம்பு முன்னடி போ. நான் பின்னடியே வந்து உங்க வாத்தியாரப் பாக்கணும்.

    ”அப்பா ஒன்னு சொல்லவா”?

    ”என்னடா”?

    ”நீ பள்ளிக்கூடம் பக்கம் மட்டும் வந்துராத. அம்மாவ நான் வரச்சொல்லிட்டன். பசங்கலாம் என்ன வெறுப்பேத்துறாங்க.. ஒன்பது பையன் ஒன்பது பையன்னு…

    Share
  • ஈ.வே.ரா. “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் ’பிக்பாஸ்’

    -கே. சுரேஷ் குருபாய்

    தமிழகத்தின் ஈரோடு வேங்கட ராமசாமி என்ற பகுத்தறிவாதியை, பிரெஞ்ச் தத்துவ அறிஞர் லக்காகானுடன் இணைத்து ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளேன்.  இதற்கான, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும்  “பிக்பாஸ்” நிகழ்ச்சியை  ஓர் தளமாகக் கொண்டுள்ளேன்.

    *ஆய்வுக் கட்டுரையை படிப்பதற்கு முன் கீழே கொடுக்கப்பட்ட கேள்வி பதில்களை படிக்கவும். இதன் மூலம், ஆய்வுக்கான ஆதாரக் கூறுகளை புரிந்துகொள்ள முடியும்.

    1)ஈ.வே.ரா. அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் ஏன், எதற்காக முக்கியம்?

    ஈ.வே.ரா. அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் முக்கியமானது என கருதுகிறேன். ஏனெனில், பேச்சு வழக்கில் இருக்கும் தமிழ்ச் சமூகம் எதனைப் பேச வேண்டும் என்பதை விட, எதையாவது பேச வேண்டும்  என்பதே பிரதானமாக உள்ளது. பேச்சு இல்லை என்றால், தனது சுயத்தை இழந்ததாக கருதும் நிலைக்கு ஆளாகும். இதற்கு தமிழக பழமொழிகள், சொல்லாடல்கள் முன்னுதாரணமாக உள்ளது. அதனால், தமிழ்ச் சமூகத்தில் பேச்சு பிரதானமாக உள்ளது.

    இதனை அடிப்படையாகக் கொண்டு, தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்கள் சம  காலத்தில் பேசுகின்றதே தவிர, எதனை முன்னிறுத்த அனைத்து தொலைக்காட்சிகளும் பேசுகின்றது என்பது புதிராகவே உள்ளது. இந்த நிலையில், வெங்காயம் கருத்தாக்கம் இங்கு பயன்படும். அதாவது, வெங்காயம் உரிக்க,  உரிக்க ஒன்றும் இருக்காது என்ற தனித்துவத்தை அடிப்படையாக கொண்டு ஈ.வே.ரா பேசினார். அதன் அடிப்படையில், நெடுந்தொடர்கள் எதனைப் பேசுகின்றது என ஆராய்ந்தால், நெடுந்தொடர்கள் பேசியவற்றையே,  பேசுகின்றன, தொடர்ந்து பேசுகின்றன. மக்கள் இதனையே தொடர்ந்து பார்க்கின்றனர். ஆனால், பார்த்தவற்றையே பார்க்கின்றனர் என்பது புலப்படும். இதன் மூலம், நெடுந்தொடரில் தேடி, தேடி பார்த்தாலும் பேச்சைத் தவிர  தனித்துவம் ஒன்றும் இருக்காது என்பது வெங்காயம் உரிக்க, உரிக்க வெங்காயத்தை தவிர ஒன்றும் இருக்காது என அறியலாம். இதற்காகவே, இந்த கருத்தாக்கம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

     2) ஈ.வே.ரா. “வெங்காயம்” கருத்தாக்கம் அவரது பேச்சில் / எழுத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொல். அப்படி இருக்க, கருத்தாக்க/கோட்பாடு அளவில் எவ்வாறு அணுக முடியும் ?

    பிரெஞ்ச் தத்துவ அறிஞர் துளுஸ் உருளைகிழங்கு (Rhizome) கோட்பாட்டை ஆரம்பம், முடிவு இல்லாத, ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லாத நிலையை வரையறுத்து கூறியுள்ளார். அதுபோல, தமிழகப் பகுத்தறிவாளர் ஈரோடு ராமசாமி வெங்காயம் (Onion) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், உரிக்க, உரிக்க ஒன்றும் இல்லை, தேடி, தேடி பார்த்தாலும் ஒன்றும் இல்லை என்ற வரையறையைப் பல மேடைப் பேச்சுக்களில், அன்றாட பேச்சு வழிகளில் பெரும்பாலும் முன்னிறுத்தியவர். இதன் காரணமாக, ஈரோடு,  ராமசாமியின் சொல், எழுத்து வடிவிலான கருத்தாக்கத்தையும் ஆய்வு கருத்தாக்கமாக அணுக முடியும். உதாரணமாக, சங்ககால புலவர் கணியன்  பூங்குன்றன், புறநானூறு  192வது பாடலில் “தீதும் நன்றும் பிறர்தர வாரா ” என்றார். அதாவது, “நமக்குக் கிட்டும் நன்மையும், தீமையும் நம்மில் இருந்தே தொடங்குகிறது” என்பது. இதேபோல், பிரெஞ்ச் உளவியல் பகுப்பாய்வாளர் லக்கான் “மற்றமையே நம்மை கட்டமைக்கிறது ” என்கிறார். அதாவது, நமது  பேச்சைக் கேட்கும் இடம் எதுவோ, அதுதான் நம்மை அங்கீகரிக்கும் இடம். எனவே, மற்றமையானது பேசுபவனுக்கு வெளியே மொழியின் இடமாக இருக்கிறது, அதேசமயம் பேசுபவனுக்கு அகத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது  என்கிறார். இதன் மூலம், இருவரும் ஒரே விசயத்திற்கு வேறு, வேறு சிந்தாந்தங்களை கொண்டிருந்தாலும், இரண்டும் ஒரு தனி கருத்தாக்கத்தை உண்டு செய்கிறது. சங்ககாலத்தில் புலவர் என்ற பெயரும், சமகாலத்தில் ஆய்வாளர் என்ற பெயரும் குறிக்கிறதே  தவிர இருவரும் கருத்தாக்கத்தையே முன்னிறுத்துகின்றனர். அதனால், பகுத்தறிவாளர் ஈரோடு, ராமசாமியின் பேச்சில், எழுத்தில் பயன்படுத்தும் சொல்லும், அவரது மனதில் வெங்காயம் என்பதற்கான  பெயரும் அதன்  கருத்துருவில் ஓர் கருதாக்கத்தையே கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலே, வெங்காயம் என்பதை கருத்தாக்கமாகவே இங்கு அணுகியுள்ளேன்.

    3) “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் வணிகத் தன்மையில், யதார்த்த உலகின் எச்சங்களை, அந்த மாந்தர்களின் வார்த்தைகளிலும், செயல்களிலும் பார்ப்பது எந்த அளவில் சரியாக இருக்கும்?

    பிக்பாஸ் நிகழ்ச்சி வணிகத் தன்மை அடிப்படையில் உண்டாக்கப்படுகிறது என்பது உண்மை. அதே அளவில், ரியாலிட்டி நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி நடைபெறுவதால், யதார்த்த உலகில் மக்கள் பேசும் பேச்சுகளே அங்கேயும் பேசுகின்றனர். யதார்த்த உலகில் இருவேறு சமூக மக்கள் ஒருவர் பேசுவதை, அவர்கள் வாழ்வியல் சார்ந்து, எவ்வாறு புரிந்துகொள்ளப்படவில்லையோ, ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் புரிந்து கொள்ளப்படுகிறதோ, அதனைப் போன்றே, இந்நிகழ்ச்சியிலும் இருவேறு சமூக மக்கள் மற்றவர்களுடனான பேச்சுகளை அவர்களின் வாழ்வியல் சார்ந்து புரிந்து கொள்ளவில்லை. ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்களைக் கொள்கின்றனர். இதன் அடிப்படையிலேயே, விஜய் தொலைக்காட்சியின் “பிக் பாஸ்” ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பதாலே, அதனை ஆய்வுத் தளமாக கொண்டேன். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில போட்டிகள் வைக்கப்படும், அதில் அவர்கள் அவர்களாகவே அதனை அணுக வேண்டும். அதன் அடிப்படையிலேயே இவர்களை யதார்த்த உலகின் மனிதர்களாகக் கொண்டேன்.

    குறிச்சொல் : ஈ.வே.ரா, லக்கான், வெங்காயம், பிக்பாஸ், சொல்

    *இப்போது ஆய்வுக் கட்டுரையை படிக்கலாம்…

    ஈ.வே.ரா.  “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் பிக்பாஸ்

    தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுவரும் உண்மை ஒத்த நிகழ்ச்சிகளில் (ரியாலிட்டி ஷோ) தற்போது பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், பன்வகைப்பட்ட மக்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, நடிகர்கள் பொன்னம்பலம், சென்ராயன், பாலாஜி, டேனியல் ஆகியோரும், நடிகைகள் ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா, யாசிகா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். பல்வகைபட்ட பண்பாட்டு வாழ்வியல் சூழல் சார் மக்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளதால், ஒருவரின் அன்றாட செயல்பாடுகள் மற்றவருக்கு புதுமாதிரியாகவும், ஒப்புக்கொள்ள ஏற்றதாக அமையாமலும் இருக்கும் சூழல் இருந்து வருகிறது. ( முதல் இரண்டு மாதம் உரையாடல்கள் இக்கட்டுரையின் மாதிரிகளாகக் கொள்ளப்பட்டுள்ளது). இதனை அடிப்படையாக கொண்டே, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டது.

    மனிதன் பிறந்தது முதல் தனது தேவையை நிறைவேற்ற அழத்தொடங்கினான், அதனைத் தொடர்ந்து, கோரிக்கையை நிறைவேற்ற பேசத் தொடங்கினான்,  கோரிக்கை நிறைவேறாமல் மங்கிய நிலையில் ஆசை உருவாகும் (உளவியல் பகுப்பாய்வாளர், லக்கான்). அதனால், மனிதன் தேவையை, கோரிக்கையை, ஆசையை நிறைவேற்ற பேச்சுடன், செயல்படத் தொடங்கினான். அதன் வரையறைபடி, ஒருவர் மற்றொருவருடன் தங்களின் எண்ண ஓட்டங்களை, உணர்ச்சிகளை, உணர்வுகளை வெளிப்படுத்தப் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் உள்ளனர் எனில், அவர்கள் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே மாதிரியான பேச்சின், ஒரே மாதிரியான ஒலி எழுப்பும் விதம் கொண்டு, அனைவரது வாழ்வியல் ஒரே மாதிரியாக இருந்தால், அவர்கள் பேசும் பேச்சின் ஒலியும், அதன் அர்த்தமும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஒரே இடத்தில், பன்வகைப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில், ஒருவர் மற்றவர்களிடம் தங்களின் தேவை, கோரிக்கை, ஆசை நிறைவேற்றப் பேச்சு வழக்காற்றில் சிக்கல்கள் எழும்.

    “குறிப்பானுக்கும், குறியீடுக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் உண்டு. ஆனால், குறிப்பானின் மொழிக்கும் (ஒலிக்கும்), அதற்கான பொருளுக்கும் (அர்த்தத்திற்கும்) சம்பந்தம் இல்லை” என்ற ஆய்வாளர் சசூர் (தொடர்பியல் அறிஞர்) கருத்தாக்கத்தின்படி, ஒருவர் பேசும் பேச்சு அவர் நினைக்கும் அர்த்தத்தையே, அந்தப் பேச்சை கேட்கும் நபரும் புரிந்து கொள்வார் எனச் சொல்ல முடியாது. பேச்சைக் கேட்பவர் வேறு அர்த்தத்தைக் கூடப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் கற்பிக்கப்படலாம் என்கிறார். இதன் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சியில், சென்ராயன், டேனியல் பேசும் பேச்சு மும்தாஜ், ஐஸ்வர்யா போன்றவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனுடன், சென்ராயன் பேசும்போது, உரத்த குரலில் பேசுவதை மும்தாஜ், ஐஸ்வர்யா குற்றமாக கருதி, இதனை சென்ராயன் மாற்றிக் கொள்ள வேண்டும், இது, சரியான பழக்கம் இல்லை என்கிறார்கள். ஆனால், நான் இயல்பாகத்தான் பேசுகிறேன். எனது பேச்சே அப்படித்தான் என சென்ராயன் பதில் அளிக்கிறார். இதன் மூலம், ஒருவர் பேசும் பேச்சின் அர்த்தம், அதன் ஒலியின் மாறுபாடு போன்றவை வித்தியாசப்பட்டு இருந்தாலும், அவர்கள், தமது மனதில் ஒன்று நினைத்து, அதனையே சொல்லி இருக்கலாம், ஆனால், அதனைக் கேட்பவர்கள் புரிந்து கொண்டது வேறு விதமாக இருக்கும். இதற்குக் காரணம், குறிப்பான் கொண்டிருக்கும் பேச்சின் மொழிக்கும் (ஒலி),  குறியீடு கொண்டிருக்கும் பொருளுக்கும் (அர்த்தத்திற்கும்) பல்வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது என்பதை சரூரின் கருத்தாக்கம் உணர்த்துகிறது.

    இதில், சென்ராயன் தனது பேச்சை மாற்ற வேண்டும் என மும்தாஜ், ஐஸ்வர்யா சொல்வது ஆய்வாளர் லக்கான் பார்வையின்படி ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில், “ஒருவரின் மொழியும் (ஒலி, பேச்சு), அவர்களின் வார்த்தையில் இருக்கும் பொருளின் அர்த்தமும் அவர்களின் வரலாறு, வாழ்க்கை முறை, சமூகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் ஏற்க வேண்டும் (லக்கான்)” என்கிறார். அதனால், தமது வரலாறு, வாழ்க்கை முறை, சமூகம் ஆகியவற்றை கொண்டு மற்றவர்களது இயல்புகளை அளவீடு செய்ய முடியாது என்கிறார். இதன் அடிப்படையில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரும், தாய்மொழி தமிழ் அற்றவருமான மும்தாஜ், பெங்காலி மொழியை அடிப்படையாகவும், வடநாட்டை வாழ்விடமாக கொண்ட  ஐஸ்வர்யா ஆகியோர்,  சென்ராயன் போன்ற பிற மொழி (தமிழ்) பேசுபவர்களின் இயல்புகளை அளவீடு செய்வதே முடியாது என்பதுடன், அதனை மாற்ற வேண்டும் என்று கூறியதும் தவறு என்பது லக்கான் கருத்தாக்கத்தின்படி அறியப்படுகிறது.

    மனிதனில், தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றைக் கொண்டே பேச்சு இருக்கிறது என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதன் போட்டியாளர்களின் பேச்சு தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றை சுற்றி, சுற்றி வருகிறதே தவிர, இதில் புதியதாக கண்டறிவதற்கு ஏதும் இருக்காது என்பது அறிய முடிகிறது. இது, ஈ.வே.ரா என்ற பகுத்தறிவாதி அடிக்கடி சொல்லும் “வெங்காயம்” என்ற வார்த்தைக் கோட்பாடு இதற்கு ஒத்துப்போகிறது. அதாவது, “வெங்காயம் உரிக்க, உரிக்க ஒன்றும் இருக்காது” அதுபோலவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உணவுக்கான தேவைக்குப் பிரச்சனை நிகழும்போது, தனது தேவை நிறைவேறாத நிலையில் கோரிக்கையாக மாறும். அப்போது கோரிக்கை நிறைவேறாத நிலையில் பிரச்சனையாக மாறும். பின்னர், கோரிக்கை நிறைவேறாமல் மங்கிப் போன நிலையில் ஆசையாக மாறும். ஆசை தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பிரச்சனை எழும். இதற்கான உந்துதலுக்கு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளப் பேச்சு ஊடகமாக மொழி இருக்கும். அதில், ஒரு வார்த்தை மற்றவருக்கு ஒரே அர்த்தத்தை கொடுக்க இயலாத காரணத்தால், சசூரின் கருத்தாக்கம்படி, பிரச்சனை நிகழும். இவர்களின் உரையாடல் இதனையே சுற்றி, சுற்றி வரும். வேறு புதிய பரிணாமம் உருவாகாத நிலையில் தொடர்பு முறைகள் வெங்காயம் போன்று இருக்கும்.

    ஓர் இடத்தில் பன்வகைப்பட்ட மக்கள் இருக்கும் நிலையில், அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வதே இயல்பாக இருக்க முடியும். ஒருவர் தங்களது வாழ்வியலை படிமமாக கொண்டு, அதனை வெளிப்படுத்தும் குறிப்பானாக இருந்து குறியீடு மூலம் உணர்த்தப்படும் அர்த்தம், வேறு வாழ்வியலின் படிமம் அடங்கிய குறிப்பானுக்கு அர்த்தம் புரியாது. அதேபோல், வேறு ஓர் இயல்பான வாழ்வியலுடன் கொண்ட படிமம் கொண்டு, அதனை வெளிப்படுத்தும் குறிப்பானாக இருந்து, குறியீடு மூலம் உணர்த்தப்படுவது ஒரே மாதிரியான அர்த்தம் என்றும் உருவாகாது. ஒரு குறியீட்டுக்குப் பல அர்த்தம் உண்டு (குறியீட்டியல் அறிஞர், தெரிதா) என்ற கருத்தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு, மற்றவர்களை பார்க்க வேண்டும்.

    இந்தியா பல்வேறு பண்பாடு கொண்ட ஒரு நாடு இதனை ஒரே நாடு என்ற வார்த்தையில் எப்போதும் அடக்க இயலாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி, ஓர் உணவு, ஒரு பண்பாடு, ஒரு வாழ்வியல் உள்ளது. இதனை ஒரு மாநிலத்துடன், மற்ற மாநிலத்தை எந்த வகையிலும் ஒப்பீடு செய்ய இயலாது. அந்தந்த மாநிலத்தின் பழக்க வழக்கத்தை அந்த, அந்த மாநிலத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே காண வேண்டும். நமது படிமத்துடன் மற்ற மாநிலத்தை படிமத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், ஈ.வே.ராமசாமியின் வெங்காயம் கோட்பாடுபடி, பார்வையின் முடிவில் ஒரு சரியான நிலைக்கு வர முடியாமல் போகலாம். அதனால் தொடர்ந்து பிரச்சனை எழுந்தே தீரும். இதனை வேறு வழியில் ஆராய்ந்தால், தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதன், நிறைவாக “வெங்காயம்” என்ற கோட்பாட்டின் காலம், நேரம் கடந்த ஒரு செயலாக மட்டும் இருக்குமே தவிர, ஒரு விசயமும் புலப்படாமல் இருக்கும்.

    அதுபோல, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இருக்கும் தமிழ் மொழி வழக்கு வித்தியாசப்பட்டு இருக்கும். இதனை அந்தந்த வட்டாரத்திற்கு ஏற்ப, அந்த வார்த்தையை உச்சரிக்கும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்து அதனைப் பொருள்கொள்ள வேண்டும். மாறாக, தமது படிமத்தின் அடிப்படையில் குறியீடாகக் கொண்டு, அர்த்தம் கொள்வதாயின் பிரச்சனைகள் உருவாகும். அதாவது சரியான புரிதல் உண்டாகாது. உதாரணத்திற்கு, (எதுக்கு, ஏனுங், ஏன்லே, ஏய்ன், என்னயா, ஏன்பா). இதில், ஒரு சில வார்த்தைகள் ஒருவருக்கு இயல்பாகவும், மற்றவருக்கு இயல்பு மாறியும் இருக்கலாம். இதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது என்பது, ஈவேராவின் வெங்காயத்தை மீண்டும் ஞாபகப்படுத்தும்.

    சென்னையைப் பொறுத்தவரையில், வட சென்னை வட்டாரச் சொல் பழக்கம் அப்பகுதி மக்களுக்கு இயல்பாக இருக்கும். ஆனால், தென் சென்னை வட்டாரச் சொல் பழக்கம் வேறுமாதிரியாக இருக்கும். இதனால், ஒருவரின் சொல்லிற்கான அர்த்தம் வேறாக புரிந்துகொள்ளப்படும். இது, சசூரின் கருத்தாக்கத்தை வெளிப்படுத்தும், ஆனால், லக்கானின் கருத்தாக்கத்தை புரிந்துக் கொண்டால், ஒருவரை ஒருவர் பழிப்பது வெகுவாகக் குறையும் எனலாம். நிறைவாக, படிமத்தால் ஆன, குறிப்பான்கள் நாம். வாழ்வியல் சார் குறியீடு மாறி இருப்பதற்கு ஒருவரை ஒருவர் மாற்ற நினைப்பதே தவறு என்பதை உணர்ந்து, அவர்களது வாழ்வியலை அடிப்படையாக கொண்டு, பேச்சின், அர்த்தங்களை உணர முயன்று அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு.

    இதன்படியே, விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களின் படிமத்தால் ஏற்பட்ட மாறுபாடுகளால், ஒருவரது பேச்சை மற்றவர் புரிந்துக் கொள்ள இயலாமல், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றை வெளிப்படுத்தும் தொடர்பியல் குறியீடுகள், வாழ்வியல் படிமக் குறியீடுகளின் வேறுபாடுகளால், ஒரே மாதிரியான அர்த்தத்தை அறிய முடியாமல் போவதே, மனங்களின் ஒருமித்த அர்த்தங்கள் உருவாகாமல் இருப்பதற்கு அடிப்படையாக உள்ளது. ஆகவே, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும், ஒரு பிரச்சனையுடன் நகர்ந்து வருவதற்கான காரணத்தின் அடிப்படையாக உள்ளது.  இது, 100 வாரங்கள் அல்ல, 1000 வாரங்கள் கடந்தாலும் ஒருமித்த புரிதல் எட்டப்படாமலே இருக்கும். இறுதியில், ஈ.வே.ராவின் வெங்காயம் கோட்பாட்டின், சாரம்சம் மட்டுமே தெரியவரும். இதற்கு, சசூர், லக்கான், தெரிதா போன்ற ஆய்வாளர்களின் கருத்தாக்கங்கள் உறுதுணையாக இருக்கும்.

    *****

    ஆய்வு நூல்:

    சுரேஷ் எம்.ஜி. பின் நவீன சிந்தனையாளர் வரிசை 3 : லக்கான், 2007.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வு மாணவர்
    இதழியல் மற்றும் தொடர்பியல் துறை
    சென்னைப் பல்கலைக்கழகம்
    எண் : 9003091162
    மின் அஞ்சல் : sureshguruboy@gmail.com

     

    Share
  • முருகன் ஆலயங்களும் முருகன் அடியார்களும்

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா- மெல்பேண், அவுஸ்திரேலியா

    ” கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே” ,” கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்” என்று முருகன் அடியார்கள் தினமும் எண்ணி எண்ணியே முருகனை மனதார வழிபட்டு வருகிறார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று அடியார்கள் கொண்டாடிப்போற்றுகின்றார்கள்.” வேலை வணங்குவதே வேலை என்பதுதான் முருகன் அடியார்களின்மனக்கிடக்கையாக இருக்கிறது எனலாம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக முருகனே விளங்குகிறார் என்று முருகன் அடியார்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ” வைதாரையும் வாழவைப்பான் முருகன் ” என்பது அவர்களது உறுதியான எண்ணமாகவும் இருக்கிறது.

    இந்தியாவில் பல இடங்களிலும் முருகனுக்கு அடியார்கள் ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். வடக்கிலும் தெற்கிலும் பல ஆலயங்கள் முருகனுக்கு என்றே இருக்கின்றன. அறுபடைவீடு என்னும் வகையில் – திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மிகவும் சிறப்பான ஆலயங்களாக யாவராலும் போற்றப்பட்டு வருகின்றன. இவற்றைவிடச் சென்னையில் பல இடங்களில் முருகன் கோவில்கள்அடியார்களினால் அமைக்கப்பட்டும் இருக்கிறது. சென்னையிலும் அறுபடை வீடும், வடபழனி முருகன் கோவிலும் பிரசித்தமாக இருக்கின்றன.

    வேலூர்பகுதியில் இரத்தினகிரியில் தனிப்பட்ட ஒரு அடியவரின்
    தளராத முயற்சியினால் குன்றினிலே இரத்தினகிரி முருகன் ஆலயம் கம்பீரமாக அருளாட்சியினை வழங்கிக் கொண்டிருக்கிறது. முருகனது அடியார்கள் மொழியினைக் கடந்து நாடுகளைக் கடந்து உலகெங்கும் பரந்து காணப்படுகிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், ஜேர்மனி, சுவிச்சர்லாந்து, லண்டன், அவுஸ்திரேலியா, ஆகிய நாடுகளிலும், ஈழத்திருநாட்டினிலும், காணப்படுகிறார்கள். மொழி வேறுபட்டாலும் கலாசாரம் வேறுபட்டாலும், கொள்கைகள் வேறுபட்டாலும், அரசியலால் வேறுபட்டாலும்,அவர்கள் யாவரும் முருகனது அடியார்கள் என்ற வகையில் ஒத்த மனத்தினராய் முருகன்மீது அபார பக்தி உடையவர்களாகவே காணப்படுகிறார்கள் என்பதுதான் முக்கியமாகும்.

    முருக ஆலயங்கள் முருக அடியார்கள் பற்றிச் சிந்திக்கும்பொழுது முருகனைப் பற்றியும் முருகனது சமயவரலாறு பற்றியும் அறிவதும் அவசியமாகும். முருகனது நிலைபற்றி உரைப்பது கெளமாரமாகும். இந்துசமயத்துள் இது அடங்கினாலும் இது முருகன் பற்றியே சொல்லுகிறது என்பதே முக்கியமாகும். கெளமாரம் என்பது ஒரு சமயமாகும். இச்சமயத்துக்கு உரிய தெய்வமாக முருகனே விளங்குகின்றார். முருகனைக் குமாரன் என்றும் அழைப்பர். குமாரன் என்றால் அஞ்ஞானத்தை ஒழிப்பவர் என்பது கருத்தாகும். குமாரன் அறுவகைச் சமயங்களையும் இணைத்தே நிற்கிறார். அவரின் திருமுகங்கள் ஆறாகும். அவரே முழுமுதற் பொருள் என்கிறது கெளமாரம்.

    ” அறுசமய சாத்திரப்பொருளே” என்று அருணகிரிசுவாமிகள் திருப்புகழில் காட்டுவது நோக்கத்தக்கது.

    ” அருவமும் உருவுமாகி அநாதியாய் பலவா யொன்றாய்
    பிரமமாய் நின்ற சோதிப் பிளம்பதோர் மேனியாகிக்
    கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகமுய்ய “ என்று முருகனது தோற்றம் காட்டப்படுகிறது கந்தபுராணத்தில். உலகைப் படைக்கும் பிரமாவாய், உலகைக் காக்கும் விஷ்ணுவாய், உலகினை அழிக்கும் உருத்திரனாய், கோலமாய், காலமாய், குணமாய், ஞாலமாய்,அனாதியாய் அமைந்த சோதிப்பிழம்புதான் முருகன் என்பது அவரது அடியார்களின் அசையாத நம்பிக்கை எனலாம்.

    முருகனைப் பற்றி வடமொழிநூல்களும் சொல்லுகின்றன. தமிழ் மொழி நூல்களும் சொல்லுகின்றன. வேதங்களிலுல் சுப்ரமண்யோம் என்று வருகிறது.வேதகாலத்தில் முனிவர்கள் தங்களின் யாகங்களை நிறைவு செய்யும்வேளை சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம்என்று மூன்றுமுறை கூறியதாக ‘தைத்திரீயாரண்யகம்’ சுட்டுகிறது.

    காளிதாசரின் குமாரசம்பவம் முருகனைப் பற்றிக் கூறும் காவியமாகும். இது வடமொழியிலே அமைந்திருக்கிறது. பாணினியும் முருகனைக் காங்கேயன், குகன், சண்முகன், விசாகன், கார்த்திகேயன் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

    சிவ ஆகமங்களான காமிகம், காரணம், சுப்பிரபேதம் யாவும் முருகனது வரலாறு பற்றிக் குறிப்புகளைக் கூறி நிற்கின்றன.

    குமாரதந்திரம் என்பது முருகப்பெருமானது வரலாற்றையும் முருகனது விழாக்கள், பூஜைகள், விரதம், பிரதிஷ்டை செய்யும் விதம் இவற்றையெல்லாம் விரிவாய் எடுத்து விளக்கி நிற்கிறது எனலாம்.

    இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் இவையும் முருகனைப் பற்றிச் சொல்லிநிற்கின்றன. தமிழ் இலக்கியக்கியங்களும் முருகனைப் பற்றி சொல்லுகின்றன என்பதும் முக்கியமாகும். தொல்காப்பியத்தில் சொல்லப்படுவது மிகவும் முக்கியம் எனக் கருதலாம்,”சேயோன் மேய மைவரை உலகம்” இவ்வாறு தொல்காப்பியம் செப்புகிறது.

    புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை மூலமாகவும் முருகனைப் பற்றிய செய்திகளை அறிய முடிவதனால் முருக வணக்கமும் முருகனது அடியார்களும் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறார்கள் என்பதை அறிகிறோம் அல்லவா!

    திருமுருகாற்றுப்படை என்பது முருகன் அடியார்களை முருகன் அருள்பெற ஆற்றுப்படுத்தும் நூலாகவே அமைகிறது. முருகனது அறுபடை வீடுகள் அதாவது முருகன் அருளாட்சி புரிய எழுந்தருளியிருக்கும் இடங்களின் பெருமைகளைப் விவரிப்பதாகவும் இருக்கிறது. அப்படிஎன்றால் இதனைப் பாடிய நக்கீரர் என்னும் அடியார்  அப்பொழுதே முருகன் ஆலயங்கள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டாரோ என்றேதான் எண்ணத் தோன்றுகிறதல்லவா?

    ஆதிக்க நல்லூர் என்னும் இடத்தில் நடந்த தொல்பொருள் ஆய்வின்படி கி.மு ஆயிரத்து இருநூறு ஆண்டளவில் முருகவழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. பல்லவ மன்னர் காலமும், சோழப்பெருமன்னர் காலமும் முருக வழிபாட்டைப் பொறுத்தவரைத் தமிழ்நட்டிலே  இருண்டகாலமாய்த்தான் கொள்ளமுடிகிறது. பக்திப்பாடல்கள் பல பெருக்கெடுத்த பல்லவர்காலத்திலே முருகனுக்குச் சிவன் தந்தை என்னும் குறிப்பு மிகச் சில தேவாரங்களில்மட்டுமே காணப்படுகிறது.

    திருச்செந்தூர் கல்வெட்டு மூலமாகவேதான் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுணபாண்டியன் திருச்செந்தூர் முருகன் பூஜைக்குப் பெருந்தொகை பணம் உதவினான் என அறியமுடிகிறது. முருகவழிபாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதென்றால் அதனை கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டென்றே எடுத்துக் கொள்ளலாம்.

    பதினான்காம் நூற்றாண்டின் இறுதி அல்லது பதினைந்தாம் நூற்றாண்டின்தொடக்கமே அருணகிரிநாதர் காலமாகும். மூவேந்தர்களும் தமிழ்நாட்டைஆண்டவேளை முருகவழிபாடு ஓங்கவில்லை. அவர்களின் பின்னர்தான் ஓங்கியது ஏன் என்பதை வரலாற்று சமய ஆய்வாளர்கள்தான் ஆராய்தல் வேண்டும்!

    அருணகிரியாரால் முருகவழிபாடு செழித்தோங்கியது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. ஏனைய கடவுளர்களையும் அவர் போற்றிப் பாடிய பொழுதும் – முருகன்மீது அவரது தனிவிருப்பம் பல்லாயிரம் திருப்புகழாக எமக்குக் கிடைத்திருக்கிறது. முருகன்மீது பல பிரபந்தங்களையும் பாடி அளித்துள்ளார். கந்தரலங்காராம், கந்தரனுபூதி அருணகிரியாரின் தத்துவமுத்துக்களாய் திகழ்கின்றன. ஈழத்து முருகன் தலங்களையும் அருணகிரியார் பாடியுள்ளார். முருகனது அடியவராயிருந்து முருகவழிபாடி சிறக்கபெருந்தொண்டாற்றினார் அருணகிரியார் என்பது முருகனது அடியவர்க்கெல்லாம் சிறந்ததொரு முன்மாதிரி எனலாம்.

    முருகனது மிகச்சிறந்த அடியார் அகத்தியராவார். தமிழ் மூதாட்டி ஒளவை முருகனால் ஆட்கொள்ளப்பட்ட அடியவராகிறார். ஆதிசங்கரர் தனக்கேற்பட்ட காசநோய் தீர முருகனைத் துதித்து சுப்ரமண்யப் புஜங்கம் பாடினார். வள்ளலாருக்கு அவரின் வீட்டுக் கண்ணாடியில் தோன்றி முருகன் ஆட்கொண்டார். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதரின் வாயில் கற்கண்டைப் போட்டு ” ஸ்ரீநாதாதி குருகுஹே ” என்னும் கீர்த்தனையைப் பாடவைத்தார். ஊமையாய் பிறந்த குமரகுருபரருக்கு திருச்செந்தூர் முருகன் உலகமே புகழும்வண்ணம் கவிபாடவைத்தார்.

    சிதம்பர சுவாமிகள் பனைமரத்தில் முருகனை சுயம்புவாகப் பிரதிஷ்டைசெய்து அருள் பெற்றார். வள்ளிமலைச் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாம்பன் சுவாமிகள், பன்றிமலைச் சுவாமிகள், இவர்களெல்லாம் முருகனது காதலால் கட்டுண்ட அடியவர்களாவர். முருகன் பற்றிய சகலவற்றையும் உணர்த்திடும் கந்தபுராணம் தந்தவர் கச்சியப்பர். அவருக்கு அடியெடுத்துக் கொடுத்து அருள் புரிந்தார் முருகன். அதனால் அற்புதமாய் தெய்வீகமாய் ஒளிர்ந்தது கந்தபுராணம்.

    வீடுதோறும் முருகன் அடியவர்களால் ஓதிநிற்கும் பேறுபெற்ற கந்த சஷ்டி கவசத்தை முருகன் அடியவர் பாலதேவராயன் எமக்களித்துச் சென்றுள்ளார். எமக்கு முன்னால் இருந்து தனது பாட்டாலும் பேச்சாலும் எழுத்தாலும் முருகன் பெருமையினை உலகம் முழுவது கொண்டுசேர்த்த முருகன் அடியவர்தான் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள். ஊர்கள்தோறும் ,நாடுகள் தோறும் சென்று முருகன்புகழைக் கதாப் பிரசங்கம் மூலம் எடுத்துச் சொல்லி அதில் கிடைத்த பொருளையெல்லாம் வயலூரில் முருகனுக்காகப் பேராலயம் அமைத்து பெரும்பேறு பெற்றார்.

    இந்தியாவில் முருகன் அடியார்கள் ஆலயங்களுடன் எப்படித் தம்மை பிணைத்துக் கொண்டார்களோ அதேபோல் ஈழத்திலும் அடியார்கள் முருகனுடனும் அவரது ஆலயத்துடனும் தங்களை இணைத்துக் கொண்டனர். ஈழத்திலே பல பிரசித்தியும் அருளும் கொண்ட முருகன் ஆலயங்கள் இருக்கின்றன. பாடல்பெற்ற முருகனது ஆலயமாக கதிர்காமம் திருகோணமலை ஆகியன விளங்குகின்றன.

    ஈழத்தில் தமிழ் அடியார்களும் சிங்களபெளத்த அடியார்களும் முருகனின்பக்தர்களாக விளங்குகிறார்கள். அவர்கள் முருகனை ” கதரகம தெய்யோ “என்று அழைக்கின்றனர். அவர்களது. கதிர்காமம் ஈழத்தில் முருகனின்பொக்கிஷமாய் இருக்கிறது என்பது முருகன் அடியார்களுக்கே பெருமைஎனலாம். தமிழர்கள் செறிந்துவாழும் வட மாகாணம், கிழக்கு மாகாணம் பகுதிகளில் நிறைந்த முருகன் அடியார்கள் இருக்கிறார்கள். இவர்களின் ஆதரவினால் பல முருகன் ஆலயங்கள் அங்கு எழுந்துநின்று அருளாட்சியினை வழங்கி நிற்கின்றன எனலாம். யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ இளவரசியின் வரலாற்றுடன் தொடர்புபட்ட மிகவும் புராதன ஆலயமாக விளங்குகிறது. யாழ்நகர் மத்தியிலே விளங்கும் நல்லூர் கந்தசுவாமிகோவில் உலகம் அறிந்த முருகனது கோவிலாக இருக்கிறது. அருள் உள்ளம் கொண்ட மாப்பாண முதலியார் என்னும் முருகன் அடியவரால் அமைக்கப்பட்ட இந்த ஆலயம் பலரது வாழ்வுக்கும் வெளிச்சமாய் இர்க்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கோள்ளுவார்கள்.

    கதிகாமம் போன்று பூஜைகள் நடைபெறும் ஆலயமாக இருப்பது செல்வச்சன்னதி முருகன் ஆலயமாகும். கிழக்கு மாகாணத்தில் வெருகலில் முருகன் ஆலயம் தொடங்கி திருக்கோவில் முருகனது ஆலயம்வரை அடியவர்களின் உந்தலினால் உருவாக்கப்பட்டனவே என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் முருகன் அடியார்களின் சிந்தனையினால் முருகனது ஆலயங்கள் அருளாட்சி புரிந்து வருகின்றன. மலேசிய மண் என்றதும் யாவருக்கும் முன்னே வந்து நிற்பது பத்துமலை முருகன் ஆலயமே ஆகும். மலேசியாவையே அடையாளப்படுத்தும் வகையில் இம்முருகன் ஆலயம் விளங்குகிறது என்பது உலகில்இருக்கும் முருகன் அடியவர்களுக்கெல்லாம் பெருமை என்றே சொல்லலாம். இம்முருகன் ஆலயம் இங்குள்ள அடியவரின் இருதயமாகவேதான் இருக்கிறது என்பது வெள்ளிடைமலையாகும். இங்குள்ள முருகன்அடியார்கள் தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையினையும் பத்துமலை முருகன் பார்த்துக்கொள்ளுவான் என்றே எண்ணி வாழ்கிறார்கள் எனலாம். சிங்கபூரிலும் முருகன் அடியார்கள் முருகன் ஆலயத்துடன் தம்மை இணைத்து பக்திசிரத்தையுடன் தமது நடவிடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் எனலாம்.

    நான் தற்பொழுது வாழுகின்ற அவுஸ்திரேலியாவிலே முருகன் வணக்கமும் முருகன் ஆலயங்களும் செறிந்து காணப்படுகின்றன. விக்டோரியா மாநிலத்தில் சண்சைன் என்னுமிடத்திலும்,றொக்பேங் என்னும் இடத்திலும் முருகனுக்கு ஆலயம் அமைந்திருக்கிறது. சிட்னியில் மிகவும் பெரிய முருகன் ஆலயம் இருக்கிறது. பேர்த்தில் ஒரு முருகன் ஆலயம் இருக்கிறது..அவுஸ்திரேலிய தலைநகரான கன்பராவில் அறுபடைகுருகன் ஆல்யம் அமைந்திருக்கிறது. இங்கு அமைக்கப்பட்ட முருகன் ஆலயங்கள் யாவும் புலம்பெயர்ந்து வந்த அடியவர்களின் ஆதரவினால் அமைக்கப்பட்டன.

    முருகன் என்றாலே கலியுகத் தெய்வம் என்னும் எண்ணமே அனைத்து அடியவர்கள் மனத்திலும் ஊன்றியிருக்கிறது எனலாம். கூப்பிட்ட குரலுக்குஓடிவரும் தெய்வமாகவே முருகனை அடியவர்கள் கருதுகிறார்கள். ஆலயம் அமைக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தவுடன் முருகனுக்கே ஆலயம் அமைப்போம் என்பதே அனைத்து அடியார்களின் மனக்கருத்தாய் வெளிவருகிறது. பொதுவாக நோக்கும்பொழுது உலகெங்கணும் முருகன் ஆலயங்கள் இன்று ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் வகையிலேதான் அமையப்பெற்றிருக்கின்றன. யாவருடைய மனத்திலும் ” முருகா ” என்னும் நாமம் வல்லமைபொருந்திய மந்திரமாக உறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

    முருகன் ஆலயங்களை அடியார்கள் அமைக்குப்பொழுது முருகனது கையிலுள்ள வேலினையும் வழிபடுமுகமாகவும் ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞ்ஞான ஒளியை முருகனது வேல் நல்குவதாக அடியார் நம்புவதால் வேலினுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களில் வேல் வழிபாடும் முக்கியமாகிறது. ஈழத்தில் கதிர்காமம் செல்வச்சன்னிதி ஆலயங்களில் வேல்தான் அடியவர்களால் வணங்கிப்போற்றப்படுகிறது. கணனி யுகத்தில் கந்தப்பெருமான் துணையே எமக்குப் பெருந்துணையாகும். முருகனை அல்லும் பகலும் அனைவரதமும் துதிக்கும் அடியவர்களும் அவர்களின் அன்பினால் விளைந்த ஆலயங்களும் அகிலத்துக்கும் ஆன்மீக நெறியினை உணர்த்துவதற்கு உறுதுணையாகவே இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

    ” விழிக்குத்துணை நின்திரு மென்மலர்ப்பாதங்கள் மெய்மை குன்றாமொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்ததனி
    வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே “

    ”  மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் “

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 180-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. வெனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்தை  வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார் திருமதி சாந்தி மாரியப்பன். நன்றி நவில்கின்றேன் இவ்விருவருக்கும்!

    உறவுகளுக்காக உணவைத் தலைமேல் சுமந்துசெல்லும் அன்னையே! உம்மைப் போன்றோரின் தன்னலமிலா அன்பினால் அல்லவோ நில்லாது சுழல்கின்றது இவ்வையம்!

    உண்டிகொடுத்து மாந்தர்க்கு உயிர்கொடுக்கும் உயர்பணியைச் செய்யும் மாதரசியைப் போற்றுவோம்!

    இப்படத்துக்கு ஏற்றவகையில் பாப்புனையக் கவிஞர்களை அழைக்கிறேன்!

    *****

    பாருளோர் பசிப்பிணி தீரப் படியளக்கும் செயல்வீரனான தன் சாமி பசியென்று வாடாதிருக்கச் சோறுகொண்டு போகும் பெண்ணரசியைப் போற்றுகின்றார் திரு. எஸ். கிரிதரன்.

    தள்ளாத வயதினிலும்
    தளராது வாஞ்சையுடன்
    செந்நெல் கழனிதனில்
    சேற்றுழவு தான்செய்யும் – நாட்டின்
    பஞ்சம் பசி போக்கி
    பார் போற்ற வாழவைக்கும்
    செயல் வீரன் என்சாமி
    விவசாயி
    என் படியளக்கும் சாமி
    பசி என்று சோராமல் -அவர்
    பாத்திருந்து பசியாற்ற
    போகின்றேன், என் பசி மறந்து.

    *****

    ”இவர்போன்ற கிராமத்துக் கண்ணம்மாக்கள் இருக்கும்வரை நம் கலாசாரமும் அழியாது காலூன்றி நிற்கும்” என்ற நம்பிக்கையைத் தன் கவிதையில் விதைக்கின்றார் திருமதி. இராதா.

    மாற்றங்கள் தேவையே நமக்கது
    முன்னேற்றமாக அமையும் போது
    கடந்தவிட்ட கற்காலம் இனி இல்லை
    நெஞ்சம் அஞ்சும் நெகிழியின் காலம்

    அத்தனை மாற்றத்தையும் ஏற்றும்
    தொலையவில்லை நம் தொன்மங்கள்
    எத்தனையோ ‘லஞ்ச் பாக்ஸ்’ வந்தாலும்
    தூக்குச் சட்டியை அழிக்க இயலாது

    வேண்டியதில்லை விவாதங்கள்
    வேண்டியதில்லை பட்டி மன்றம்.-
    கலாசாரம் காலூன்றி நிற்பது நிச்சியம்
    காணாமல் போகாது நம் கிராமமும்
    கண்ணம்மாக்கள் இருக்கும் வரை

    *****

    ”தள்ளாத வயதிலும் உனக்காகச் சோறேந்திவரும் என்னைத் தள்ளாதே முதியோர் இல்லத்தில்!” என மனங்குமுறும் முதுமகளைக் காண்கிறோம் திரு. இளவல் ஹரிஹரனின் கவிதையில்.

    என்ன செய்ய
    இந்த வயதிலும்
    உயிர் கொடுப்பவளாய்
    உண்டி கொடுப்பவள் நானே
    தள்ளாத வயதில்
    தாயான என்னை மறந்தும்
    சேர்த்துவிடாதே
    முதியோர் இல்லத்தில்
    நசுங்கிப் போனாலும்
    பாத்திரம் பத்திரமாய்த்தான்
    இருக்கிறது……ஆனால்
    இந்த மனிதர்கள்
    முதுமைஅடைந்தால் மட்டும்
    தாயையும் தந்தையையும்
    தம் இல்லத்தில் இடமின்றி
    தள்ளலாமோ முதியோர் இல்லத்தில்
    தாங்காதடா மகனே…..
    இந்த வெயிலிலும்
    தலைச்சுமையோடு
    தட்டேந்தி உனக்காக
    இந்த வெயிலில் வருகிறேன் நானே.

    *****

    ”பாங்கான கிராம வாழ்வைவிட்டுப் பகட்டான பட்டண வாழ்வைத் தேடிப் போனதால் வாழ்வில் குழப்பம் வந்தது; நிம்மதி போனது” என்று எதார்த்தம் பேசுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    குழப்பமே…

    கழனியில் உழுதிடும் கணவனுக்கே
    கஞ்சி கொண்டு செல்கின்றாள்,
    அழகிய கிராம வாழ்வினிலே
    அங்க மான அழகிதுவே,
    பழகிய பண்புள வாழ்வைவிட்டு
    பட்டணம் தேடிப் போனதாலே
    குழப்பம் மட்டும் நிலவிடுதே
    காணீர் குடும்ப வாழ்வினிலே…!

    *****

    பசி தீர்க்கும் உணவோடு ஒய்யாரமாய் வரும் பெண்மணியைப் பார்த்து, ”வாய்க்காலில் தண்ணி இருக்க வாட்டர்கேனு நமக்கெதுக்கு?” என்று கேள்வியெழுப்புகின்றார் திரு. ராமச்சந்திரன்.

    ஊருக்கே படியளக்கும் உழவனுக்கு
    பசி தீர்க்க ஒய்யாரமா வந்தவளே
    நீ நடக்கும் நடையக் கண்டு என்
    மனசு தவிக்குதடி திருவிழா கரகத்துக்கு
    தினந்தோறும் ஒத்திகையா மேல்நாட்டு
    மோகமுந்தான் உன்மேல வந்து
    ஒட்டிகிச்சா வாய்க்காலில் தண்ணி
    இருக்க வாட்டர்கேனு நமக்கெதுக்கு
    கரிசக்காட்டு பூமியெல்லாம் களையெடுக்க
    ஏங்குதடி கஞ்சியத்தான் சீக்கிரமா
    கரைச்சுத் தாடி களஞ்சியமே…

    *****

    ”உழைப்பே உயர்வென வாழும் உன்னத அன்னையிவள்! அளவிலா அன்பை உறவுகளுக்கு அள்ளி வழங்கும் அருட்தெய்வமிவள்! இவள் அடிதொழுது பணிவீர்!” என்று அன்னையின் உயர்வை நன்மொழிகளில் நவின்றிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உழைக்கும் தெய்வம்..!

    சொந்தமாய் உழைக்கும் அம்மா
    ……….சுகமெனத் தன்னில் கண்டாள்..!
    பந்தமும் வேண்டும் என்றால்
    ……….பற்றுடன் உறவு கொள்வாள்..!
    எந்தவொ ருசுகமும் இல்லா
    ……….எளிமையாய் வாழ்வு கொண்டு..!
    வந்ததை எதிர்கொள் என்றே
    ……….வழிசொலும் வல்ல வள்தான்..!

    உழைப்புதான் உயர்வு என்ற
    ……….உன்னதக் கொள்கை கொண்டு..!
    பிழைப்பையே பெரிதாய் வைத்து
    ……….பிரியமுடன் கொடுப்பாள் அன்பை..!
    பிழையிலா வாழ்வு கொண்டு
    ……….பிறர்க்குத விசெய்து வாழ்வாள்..!
    மழைத்துளி போலே சிந்தும்
    ……….மனதிலே அவள்நல் எண்ணம்..!

    அன்னையும் தெய்வம் என்றே
    ……….அனைவரும் உணர வேண்டும்..!
    தன்னையே அளித்துக் காத்து
    ……….தன்பிள்ளை வளரக் காண்பாள்..!
    என்றும் மாற்று இல்லை
    ……….எப்பவும் அவளே அன்னை..!
    அன்னையின் பாதம் தொட்டு
    ……….அடிதொழ எண்ணம் கொள்வீர்..!

    *****

    உணவுகொண்டு செல்லும் மாதரசியைப் போற்றிக் கனிவான மொழிகளால் கவிதை சமைத்திருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    மண் தாங்கும் உடம்போடு
    மனம் தாங்கும் உயிரோடு
    மானம் காத்த மண்ணுக்கும்
    உள்ளம் கவா்ந்த மனிதனுக்கும்
    அன்பெனும் உயிா் கலந்து
    பண்பெனும் பாசம் கலந்து
    தலைமேல் பக்குவமாய்ச்
    செய்துவைத்த உணவு
    பாிமாற ஆளுண்டு
    பசியாற மனமுண்டு
    உழைத்து வாழ மண்ணுண்டு
    உலகம் அமையும்
    உழுதுண்டு!

    தன் உள்ளம் கவர் மனிதனுக்கு அன்பெனும் உயிர்கலந்து பண்பெனும் பாசங்கலந்து உணவு பரிமாறச் செல்லும் பெண்ணரசியை நயமாய்க் காட்சிப்படுத்தி, ”உழைத்து வாழ மண்ணுண்டு, உலகம்  அமையும் உழுதுண்டு!” எனும் நற்சிந்தனையால் உழைப்பையும் உழவையும் வந்தனை செய்திருக்கும் முனைவர் ம. இராமச்சந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

     

     

    Share